Sunday, January 17, 2010

தாம்பரம் டு பீச்

தளயத் தளய பொடவ கட்டி
தலயில் மல்லிப்பூவும் வச்சி
தாம்பரத்துலே ஏறினாளே தங்கமீனா-அவ
தங்கநிறத்தில் தகரம்நானும் ஒட்டுவேனா?

சருகைவேலை சல்வார்போட்டு
சல்லுன்னு வெள்ளிக்கொலுசும்போட்டு
சானடோரியம் டேசனில் வந்தா புஷ்பலதா-நான்
சப்புக்கொட்டியே பாத்துக்கிட்டே நிக்குறதா?

குனிஞ்சதலை நிமிராமலே
குறுகுறுன்னு பார்க்காமலே
குரோம்பேட்டையில் ஏறினாளே குமுதினி-ஒரு
கூட்டம்தினம் அவளைப் பார்க்க வருமினி

கல்லாப்பெட்டி குலுங்குனாப்புலே
கலகலன்னு சிரிச்சுக்கிட்டே
பல்லாவரத்தில் ஏறினாளே பத்மாவதி-அவ
பார்க்குறவரை மனுசுக்குள்ளே பாடாவதி

திமுசுக்கட்டை ஜீன்ஸுமாட்டி
டி-சர்ட்டையும் போட்டதுபோல
திரிசூலத்துலே திவ்யாப்பொண்ணு ஏறுனா-என்
திருட்டுப்பார்வை பாத்து முகம்மாறினா

மீனம்பாக்கம் டேசனில்வந்து
மிதிச்சுப்புட்டா மனசிலேறி
மினுமினுக்கும் கண்ணுக்காரி மைதிலி-பஞ்சு
மிட்டாய்ச்சிரிப்பில் மனசுமாச்சு நரபலி

பழவந்தாங்கல் வந்தாப்போதும்
பசங்களுக்கு வரும்சந்தோஷம்
பரிமளான்னு பொண்ணொருத்தி ஏறுவா-அவ
பக்கத்தில்போனா பூனைபோல சீறுவா

பாந்தமாக நடந்துவந்து
பதவிசாக ஏறுவாளே
பரங்கிமலை கனவுக்கன்னி பூங்கொடி-அவ
படபடன்னு பேசுறப்போ சரவெடி

கீச்சுக்குரலில் பேசுவாளே
கிறுக்கனாக்கிப் போடுவாளே
கிண்டியிலே கீதாப்பொண்ணு தெனசரி-நான்
கிட்டேவந்து பேசுறப்போ அனுசரி

சைதாப்பேட்டை வந்தாப்போதும்
சத்தமெல்லாம் அடங்கிப்போகும்
மைதாமாவு பொம்மைபோல மதுமிதா-என்
மனசுக்குள்ளே விறகடுப்பு எரியுதா

ஆம்பல்போல மொவ்வல்போல
அழகழகா தாவணிபோட்டு
மாம்பலத்துலே மஞ்சுவந்தா புழுக்கந்தான்-மனசு
மடிஞ்சுசுருண்டுபுலம்புறது வழக்கந்தான்

கோணல்சிரிப்பு சிரிச்சுக்கிட்டு
கொழஞ்சு வளைஞ்சு பேசிக்கிட்டு
கோடம்பாக்கம் டேசனிலே காஞ்சனா-நான்
குத்துப்பட்டவன் போலத்தரையில் சாஞ்சேனா?

தங்கம்மான்னு பொண்ணொருத்தி
தலவிரிச்சுப்போட்டுக்கிட்டு
நுங்கம்பாக்கம் டேசனிலே வாராளே-மனசை
நுங்குபோல நோண்டியெடுத்துப்போறாளே

சேலைக்கடை பொம்மையாட்டம்
செவத்தபொண்ணு சங்கீதாவும்
சேத்துப்பட்டிலே ஏறினதப் பார்த்தேனே-நான்
செங்கச்சூளையில் விழுந்தவனா வேர்த்தேனே

எக்மோர்டேசன் வந்ததும்
எறங்கத்தொடங்கும் பொண்ணுங்க
ஏறிப்போகும் மனசில்ரொம்ப பாரந்தான்-அவுங்க
என்னைவிட்டுப் போறாங்க வெகுதூரந்தான்

பார்க்குடேசன் வந்ததும்
பறவையெல்லாம் பறந்திடும்
பரிதவிச்சுப் பார்த்திருப்பேன் சோகமா-இந்தப்
பயணமும்தான் முடியுதுவெகுவேகமா

கோட்டையிலே பொட்டியிலே
கோட்டானைப்போல் நானிருப்பேன்
கூட்டுவண்டிப்பயணம் முடியப்போவுதே-மனம்
குழைஞ்சுபோன சாதம்போல ஆவுதே

வந்திருச்சு பீச்சுதான்
வருதேபெருமூச்சுதான்
வாழ்க்கையிலே பயணமபல பாக்கிதான்-நான்
வாழ்ந்திருப்பேன் காரணம் உருவாக்கிதான்

1 comment:

Ananya Mahadevan said...

ஒரே மெட்டுல எழுதாம வேற வேற மெட்டுல முயற்சி பண்ணுங்க சேட்டை. பாட்டு ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் ஒவ்வொரு பொண்ணா? கொஞ்சம் ஓவராத்தெரீல?