Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Sunday, November 24, 2013

காலத்தை வென்றவன் நீ!




சச்சினின் இறுதி டெஸ்ட் போட்டியை நேரலையில் காணுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அன்றுமுதல் இன்றளவிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடர்ந்து அந்த நெகிழ்ச்சியான தருணங்களைத் தொடர்ந்து பலமுறை காண நேரிடுகிறது. சச்சின் குறித்த எனது சில விமர்சனங்கள் இந்த உருக்கத்தில் காணாமல் போய் விடவில்லை என்றாலும் அவற்றை மீண்டும் குரூரமாக நினைவுபடுத்திப் பார்க்க இது பொருத்தமான நேரமல்ல. நமது அபிமானத்துக்குரியவர்களின் சிற்சில சறுக்கல்களை பல சமயங்களில் மறந்துவிட்டதுபோல ஒரு பாசாங்காவது செய்து, புன்னகையுடன் அவர்களுடன் கைகுலுக்குவதுபோல, இருபத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியக் கிரிக்கெட்டுடன் இரண்டறக்கலந்து நாம் கொண்டாடி மகிழ பல குதூகலமான தருணங்களை அளித்த சச்சினுக்கு நன்றிகளையும், அவரது எதிர்காலம் அமைதியுடன், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளையும் தெரிவிக்க வேண்டிய கடமை, கிரிக்கெட் அபிமானிகள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது; எனக்கும் இருக்கிறது.

      பெரும்பான்மை இந்தியர்களின் இளமையில் பொதுவான சில அம்சங்கள் இருப்பது வழக்கம். இவரோடு ஒருமுறை கைகுலுக்க வேண்டும் என்று அண்ணாந்து பார்க்கிற ஒரு அரசியல் தலைவர்; இவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏங்க வைக்கிற  ஒரு திரைப்பட நடிகர்; இவரை ஒரு முறையாவது தொட்டுப்பார்க்க வேண்டும் என்று பெருமூச்சு விடவைக்கிற ஒரு கனவுக்கன்னி நடிகை; இவரைப் போல நாமும் விளையாட வேண்டும் என்று பேராசைப்பட வைக்கிற ஒரு கிரிக்கெட் வீரர். கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த அற்ப ஆசைகள் அனைத்துக்கும் ஒவ்வொருவரின் இளமையிலும் ஒரு முக்கியமான இடம் உண்டு. அத்தகைய சின்னப்புள்ளைத்தனங்கள் எல்லாரையும் போலவே எனக்கும் இருந்ததுண்டு; அவற்றில் சில இன்றளவிலும் இருக்கிறது என்பதும் உண்மையே! வயது, வளர்ப்புமுறை, குடும்பப்பின்புலம், கல்வி, வாழ்ந்த இடம் என்று பல மாறுபட்ட காரணங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலானோரிடம் பொதுவாகக் காணப்படுகிற இந்த ஒரு சில அம்சங்கள் பல நட்புக்களுக்கும் கூட வித்திடுவதுண்டு.

      அட, நீங்களும் சச்சின் விசிறியா? கைகொடுங்க!

      மும்பையில் குப்பைகொட்டிய காலத்தில் சச்சின் மீது ஏற்பட்ட அபிமானம், தென்னிந்தியர்கள் என்றால் சற்றே அசூயையுடன் பார்க்கிற பல மராட்டியர்களுடன் எனக்கிருந்த தொடர்பை நட்பாகப் பரிமளிக்கச் செய்தது. கிரிக்கெட் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது என்று சிலர் சொல்வதை முழுக்க முழுக்க பிதற்றல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது என்றுதான் அந்த அனுபவங்கள் உணர்த்தின.

      ஒரு விதத்தில் சச்சினின் வருகை, கபில்தேவ்-காவஸ்கர் என்று பிளவுபட்டுக் கிடந்த கிரிக்கெட் ரசிகர்களை, பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் ஒருமைப்படுத்தியது என்றுகூட சொல்லலாம். (மீதமுள்ள காலம்பற்றி இப்போது பேச வேண்டாம்!)

      இந்தியாவில் வெற்றியின் உச்சத்துக்குச் செல்பவர்களை முன்மாதிரியாகக் கொள்வதென்பதெல்லாம் வர்ணனையாளர்களின் பேராசை மட்டுமே என்றுதான் கருதுகிறேன். பெரும்பாலானவர்களுக்கு, அவர்கள் சினிமா ரசிகர்களாக இருந்தாலும் சரி; கிரிக்கெட் ரசிகர்களாக இருந்தாலும் சரி கொண்டாடுவதற்கு ஒரு வானளாவிய தனிமனிதன் தேவைப்படுகிறான். அப்படி நேர்கிறபோது அவனது நெடிய நிழலில் இருப்பதில் அற்பசுகம் காணுவதும் இளமைக்காலங்களின் இன்னோர் தவிர்க்க முடியாத அம்சமாகி விடுகிறது. ராஜேஷ் கன்னாவின் காரில் லிப்ஸ்டிக் பதித்த பெண்களாகட்டும்; சந்தீப் பாட்டீலின் அறையை முற்றுகையிட பெண்களாகட்டும்; அல்லது குஷ்புவுக்குக் கோவில் கட்டிய ரசிகர்களாகட்டும்; இன்றளவிலும் பெரிய நடிகர்களின் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்கிறவர்களாகட்டும். அனைவருமே தங்களுக்குப் பிடித்தமானவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, அவர்களது வாழ்க்கையிலிருந்து பாடம்பெற்று, அதை முன்னெடுத்துச் சென்று அதே வெற்றியை நாமும் அடைய வேண்டும் என்றெல்லாம் எண்ணியவர்கள் அல்லர். அவர்களுக்கு தங்களது நாயகர்கள் அல்லது நாயகியரின் வெற்றியும் புகழும் ஒரு வினோதமான மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அளித்தது. விதிவிலக்காக, ‘இவரைப் போல நாமும் ஆக வேண்டும்என்று இளைஞர்களை உந்துவித்த, பேராசைப்பட வைத்த, டாக்டர் அப்துல் கலாம் போன்ற சில பிரபலங்கள் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சச்சின் தெண்டுல்கர்.

      கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் நான் ஒரு பழமைவாதி. வானொலியில் பாதி ஆங்கிலத்திலும், பாதி (அப்போது புரியாத)  இந்தியிலும் வர்ணனை கேட்டு வளர்ந்தவன். அதன்பிறகு, தூரதர்ஷனின் அழிச்சாட்டியத்தில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளை முக்கால்வாசி மட்டுமே காணமுடிந்த ஒரு காலத்தில், ஒரு 14 அங்குல டெக்ஸ்லா கருப்பு-வெள்ளை டிவியில் கண்டு பிறவிப்பயனை எய்த தலைமுறையைச் சேர்ந்தவன். 20-20 போன்ற மசாலாக்கள் எல்லாம் கிரிக்கெட்டை ஃபாஸ்ட்-ஃபுட் போலக் கொன்றுவிடும் என்று நம்புகிறவன். ஒவ்வொரு கட்டத்திலும் கிரிக்கெட் கண்ட மாற்றங்களுக்கெல்லாம் சாட்சிகளாக இருந்ததில், இருப்பதில் பெருமையடைகிற ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன். அந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் நிச்சயமாக காலத்தை வென்றவன் தான்!

      சற்றே உணர்ச்சிவசப்பட்டு, அளவுக்கதிகமாகப் புகழப்படுவதிலிருக்கும் மிகைகளை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், சச்சின் தெண்டுல்கருடன் நாமும் பயணித்ததுபோல, அவரது வெற்றிகளை, தோல்விகளை, உச்சங்களை, கண்ணீரை அருகாமையிலிருந்து பார்த்ததுபோன்ற ஒரு அன்னியோன்னியம் இருப்பதாக உணர முடிகிறது. தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, இங்கிலாந்து திரும்பி, உலகக்கோப்பை ஆட்டத்தில் சதமடித்து, விண்ணை அண்ணாந்து நோக்கி சச்சின் கண்கலங்கியபோது, எனது சொந்தங்களில் ஒருவருக்கு ஏற்பட்ட துயரில் பங்கேற்பதுபோல எனக்கும் கண்கள் நீர்த்தன. மேற்கு இந்தியத் தீவில் நடந்த உலகக்கோப்பையில் படுமோசமாக ஆடிய இந்திய அணியின் தோல்வியைப் பார்த்து, பெவிலியனில் இருந்தவாறு சச்சின் கண்ணீர் சிந்தியபோது, அது எனது கண்ணீர் என்று தோன்றியது. இறுதியாக இந்தியாவுக்காக ஆடிவிட்டு, வான்கெடே மைதானத்திலிருந்து சச்சின் கண்ணீர்மல்க கிளம்பியபோது ‘வி வில் மிஸ் யூ சச்சின்!என்று தன்னையறியாமல் வாய் முணுமுணுத்தது.

      இந்தியக்கிரிக்கெட்டைப் புரட்டிப்போட்ட இரண்டு தருணங்கள் என்று சொல்ல வேண்டிவந்தால், 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதையடுத்து, சச்சின் தெண்டுல்கரின் வருகையென்று நிச்சயமாகக் கூறுவேன். இந்த இரண்டு நிகழ்வுகளுமே கிரிக்கெட்டில் ஏற்படத் தொடங்கியிருந்த சில தலைமுறை மாற்றங்களின் அடையாளக்குறிகள்! இவை இரண்டுமே இந்தியாவைக் கிரிக்கெட்டின் வல்லரசாக மாற்றிய அற்புதத்தை நிகழ்வித்த திருப்புமுனை சம்பவங்கள்.

      இந்தியாவும் பாகிஸ்தானும் அவரவர் மாமியார்களை அனுப்ப வேண்டிய நாடுகள்என்று இயன் போத்தம் இன்னோரன்னார் இகழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்த நிலையை மாற்றி, ஜெஃப்ரி பாய்காட், ஜாஹீர் அப்பாஸ், பில் லாவ்ரி, ரிச்சர்ட் ஹாட்லீ, டோனி கோஸியர் போன்ற நிரந்தர இந்திய துவேஷிகளுக்கு சில்லறை ஆசை ஏற்படுத்தி, அவரவர் கைகளில் ஒரு மைக்கைக் கொடுத்து கொச்சிக்கும், கட்டாக்குக்கும் அலைய வைத்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்த நிகழ்வுகள்! இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்களில் விரல்விட்டு ஆட்டுகிற அடாவடித்தனத்தை இந்தியா செய்ய முடிவதற்கு 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றியும், தெண்டுல்கர் என்ற இளம்புயலின் வரவும் உதவியதுபோல வேறெதுவும் உதவவில்லை. லார்ட்ஸ் மைதானத்தின் ஒரு குளிரூட்டப்பட்ட அறையிலிருந்துகொண்டு, கிரிக்கெட் உலகைக் குற்றேவல் செய்துகொண்டிருந்த இங்கிலாந்தை ஒப்புக்குச் சப்பாணியாக்கி ஓரங்கட்டிய பெருமையை இந்தியத் துணைக்கண்டத்துக்கு அளித்ததில், சச்சின் ரமேஷ் தெண்டுல்கரின் வருகையும், வெற்றியும் ஒரு முக்கிய திருப்புமுனை என்று அடித்துச் சொல்லலாம்.

      சுனில் காவஸ்கர் சிறந்த பேட்ஸ்மேன்; ஆனால், ஜாஹீர் அப்பாஸும் கிரேக் சேப்பலும் அவரைவிட சிறந்தவர்கள். கபில்தேவ் சிறந்த பந்துவீச்சாளர்தான்; ஆனால், அவரை விட ரிச்சர்ட் ஹாட்லியும் இம்ரான் கானும் சிறந்தவர்கள். சையத் கிர்மானி சிறந்த விக்கெட் கீப்பர்தான்; ஆனால், ஜெஃப் டூஜானும் ரோட்னி மார்ஷும் அவரைவிட சிறந்தவர்கள் இப்படியெல்லாம் இந்தியாவின் திறமையான வீரர்கள் பெரும்பாலும் மட்டம்தட்டப் பட்டு வந்த காலத்தில்தான், பழையன கழிந்து புதியன புகுந்த தொண்ணூறுகள் இந்தியக் கிரிக்கெட்டில் தனது வியத்தகு மாற்றங்களை வெளிப்படுத்தின. தொடர்ந்து முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த முகமது அஜாருதீன் போன்றவர்கள், பழம்தின்று கொட்டைபோட்ட காவஸ்கர், விஸ்வநாத், மதன்லால், அமர்நாத், கீர்த்தி ஆசாத் போன்ற தலைமுறையினரின் தோள்களுடன் உராய்ந்தபடி கிரிக்கெட் ஆடத் தொடங்கினர். கிரிக்கெட்டுக்கு ரசிகைகளையும் பெருக்கிய ரவி சாஸ்திரி போன்ற சாக்லெட் பையன்கள் புகுந்தனர். 83 உலகக்கோப்பை வெற்றியும் ஆசிய விளையாட்டுப்போட்டியின் புண்ணியத்தால் தேசம் முழுவதும் அத்தியாவசியப் பொருளாக மாறிப்போன தொலைக்காட்சிப் பெட்டிகளுமாகச் சேர்ந்து, செய்தித்தாள்களில் கருப்பு வெள்ளைப்படங்களாகக் காட்சியளித்து வந்த கிரிக்கெட் வீரர்களை, கந்தர்வபுருஷர்களாக வீட்டின் வரவேற்பறையில் உலவ விட்டன. தூரதர்ஷனின் கொட்டம் அடங்கி, தனியார் தொலைக்காட்சிகள் துளிர்விட ஆரம்பித்ததும், சினிமாவுக்கு நிகராக இருந்த கிரிக்கெட் மோகம் சினிமாவையும் மிஞ்சியது. யுகம் மாற மாற, இந்தியக் கிரிக்கெட்டின் தரமும் மெல்ல மெல்ல மாறியது. பிஷன்சிங் பேடி, எம்.எல்.ஜெய்சிம்ஹா,  நவாப் பட்டோடி, டாக்டர் நரோத்தம் பூரி ஆகியோரின் கொட்டாவி வர்ணனைகளுக்குப் பதிலாக ஹென்றி ப்ளோஃபெல்ட், டானி க்ரேக், இயன் சேப்பல், ஹர்ஷா போகலே போன்ற தேர்ந்த வர்ணனையாளர்கள் கிரிக்கெட் வர்ணனையின் இலக்கணங்களைக் கிழித்துப்போட்டு, புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தனர். ஆட்டத்தை மட்டுமே படம்பிடித்துக் கொண்டிருந்த கேமிராக்கள், பார்வையாளர்களின் உற்சாகத்தையும், ரசிகைகளின் காதணிகளையும், பால்கனியில் அமர்ந்திருந்த பாலிவுட் நட்சத்திரங்களையும், நிழலுலக தாதாக்களையும் படம்பிடித்துக் காட்டின. கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமின்றி, கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் சில ஜிகினா வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. தென் ஆப்பிரிக்காவில் உலகக்கோப்பைப் போட்டி நடைபெற்றபோது ஆட்டத்தைக் காண்பதற்கு இருந்த அதே ஆர்வம், மந்திரா பேதியைப் பார்ப்பதற்கும் ஏற்பட்டது அல்லது ஏற்படுத்தப்பட்டது. BTW, where is she?

      ப்ரையன் லாராவின் வரவினால் மேற்கு இந்தியத் தீவுகளிலோ, இன்ஜமாம் உல்-ஹக்கினால் பாகிஸ்தானிலோ, ரிக்கி பாண்டிங்கினால் ஆஸ்திரேலியாவிலோ நிகழாத மாற்றம், சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் என்ற பொடியனால் இந்தியாவில் ஏற்பட்டது என்றால் அதை அவரது கொடூரமான விமர்சகர்களாலும் மறுக்க முடியாது. இன்றைய நிலையில், சச்சின் என்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ஓய்வுபெற்ற நிலையில், அவரது ஆட்டம் குறித்த புள்ளி விபரங்கள், அவரது பலவீனங்கள் என்று கருதப்படுகிற சில அலட்சியப்படுத்த முடியாத சறுக்கல்கள், ஒப்பீடுகள் என அனைத்தையும் தாண்டி, மற்ற எவரும் ஏற்படுத்த முடியாத ஒரு வெற்றிடத்தை சச்சின் ஏற்படுத்திச் சென்றிருப்பது புலப்படுகிறது. ஒருவிதத்தில், இன்னொரு சச்சின் தேவையில்லை என்று அடுத்த தலைமுறையினர் அந்தப் பிம்பத்துக்குள் கூடுவிட்டுக் கூடுபாய முனையாமல், தங்களது தனித்தன்மையை மட்டுமே நம்பி முயற்சி செய்தால் அது அவர்களுக்கும், இந்தியக் கிரிக்கெட்டுக்கும் நன்மை பயக்கும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, சச்சின் விட்டுச் சென்ற சிம்மாசனம் அப்படியே இருக்கட்டும்! அடுத்த தலைமுறை நிர்மாணிக்க வேண்டிய புதிய சாம்ராஜ்யங்களும், கம்பீரமாக அமர்வதற்குப் புதிய சிம்மாசனங்களும், முற்றுகை இடுவதற்கான புதிய இலக்குகளும் இயல்பாகத் தோன்றி சவால்களாக அமையப்போவது உறுதி. எனவே, பிடிவாதமாக சச்சினுடன் ஒப்பிடுகிற மூர்க்கத்தை அலட்சியம் செய்துவிட்டு, அடுத்து வரப்போகிறவர்கள் தங்களுக்கென்று புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதே நல்லது. இதற்கான பாடம் சச்சினின் பயணத்திலேயே இருக்கிறது.

      சச்சின் ஆடத்தொடங்கிய காலத்தில் சுனில் காவஸ்கருடன் அவரை ஒப்பிட்டு அவர்மீது அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தியதுண்டு. அதிலிருந்து அவர் மீண்டதும், காவஸ்கரின் பல சாதனைகளை அவர் கடந்ததும் வரலாறு. சாதனைகள், புள்ளி விபரங்கள், வெற்றி தோல்வி குறித்த விவாதங்கள் எல்லாவற்றையும் விட, சச்சின் பிற வீரர்களிடமிருந்து விலகி, வித்தியாசமாகக் காணப்படுவதற்கு, கிரிக்கெட் தவிரவும் அவர் தனிப்பட்ட முறையில் தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட விதமும், சில விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர்த்து பெரும்பாலும் அவர் வெளிப்படுத்திய அடக்கமும், கண்ணியமும் முக்கியமான காரணங்கள். சாரதாஸ்ரமம் பள்ளியிலிருந்து அவருடன் பயணித்து இந்திய அணிக்குள் வந்த வினோத் காம்ப்ளி, ப்ரவீண் ஆம்ரே ஆகியோர் திறமையிருந்தும் ஏன் சச்சின் அளவுக்கு உயரத்தை எட்டவில்லை என்ற கேள்வியின் விடைதான், சச்சினின் வெற்றியின் ரகசியம்.

      இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வெற்றியும், பெருகிவரும் ரசிகைகளின் எண்ணிக்கையும் சச்சினின் உடம்புக்கு நல்லதில்லைஎன்று குமுதம் இதழில் சுஜாதா எழுதியிருந்தார். எதுவும் சச்சினை பாதிக்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் வெளிப்படுத்திய அதே பதவிசும், கண்ணியமும் சச்சினின் நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்தது. இன்றைக்கு மைதானத்தில் ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொண்டு அசிங்கப்படுகிறவர்களும், பாலிவுட் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுகிறவர்களும், மலிவான விளம்பரத்துக்காக தொலைக்காட்சிகளில் வந்து புளுகுகிறவர்களும் சச்சினின் வாழ்க்கையை அவர் செதுக்கிக் கொண்ட விதத்திலிருந்து கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் ஒன்றல்ல; ஓராயிரம் இருக்கின்றன.

       நான் எவ்வளவுக்கு எவ்வளவு சிவாஜியின் ரசிகனோ, அவ்வளவுக்களவு சச்சினின் விசிறியும் கூட! சிவாஜி 200+ படங்களில் நடித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியோ, அதே அளவு மகிழ்ச்சி சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டிருப்பதும் அளிக்கிறது. சிவாஜி ஜெயமாலினியுடன் ‘குத்தால அருவி குடிசையிலிருக்குஎன்று குத்தாட்டம் போட்டபோது எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டதோ, அதே எரிச்சல் சச்சின் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஓரிரு ஆண்டுகளாக ஏற்படத்தான் செய்தது. ஆனால், இன்றும் ‘கர்ணன்படமோ, ‘வசந்த மாளிகைபடமோ வெளியானால், பார்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று கிளம்புவதுபோல, சச்சின் மீதான எனது அபிமானமும் அசைக்க முடியாத அளவுக்கு இருக்கத்தான் செய்கிறது; இனியும் இருக்கும். சச்சினைப் பற்றிய எனது முந்தைய விமர்சனங்களுக்கு இது ஒரு சால்ஜாப்பு போலத் தோன்றினாலும் அதில் வெட்கப்பட எதுவுமில்லை. நான் முன்பே எழுதியிருப்பதுபோல, சச்சின் மீதான எனது விமர்சனங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், கண்மூடித்தனமாக சச்சினை ஆராதிக்கிறவர்கள்களின் கட்சியில் நான் இல்லை. You are entitled to your opinion and I am entitled to mine!

                ஆனால், சச்சின் தெண்டுல்கர் எனக்குப் பிடித்த பத்து இந்தியர்களில் முதல் ஐந்தில் வருவார் என்பதிலோ, எனக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் இருப்பார் என்பதிலோ எந்த மாற்றமும் நேரப்போவதுமில்லை!

      இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற எனது கனவு பலித்து விட்டது,என்று, சுருள் சுருளாகத் தலைமயிருடன், கூச்சத்துடன் தூரதர்ஷனில் மராட்டியில் பேட்டியளித்த அந்தப் பதினேழு வயதுப் பையன், தனது பயணத்தில் பல மைல்கல்களைக் கடந்தபோது, ‘உடம்பு சரியில்லைஎன்று பொய்சொல்லி வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தது இன்றளவிலும் எனக்குப் பித்துக்குளித்தனமாகத் தெரியவில்லை. சச்சின் முஷ்டாக் அஹமதையும், அப்துல் காதரையும் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்ததை நான் வானொலியில் கேட்டேன்என்று சொல்வதில் எனக்கு இன்னும் பெருமையாக இருக்கிறது. உறக்கத்தில் சச்சின் கனவில் வந்து என்னை பயமுறுத்தப் போகிறார்என்று ஷேன் வார்ன் சொல்லுமளவுக்கு அவரது பந்துவீச்சை துவம்சம் செய்த சச்சினின் ஆட்டத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்; ‘We were beaten by a great player’ என்று ஷார்ஜாவில் மணல்புயலுக்கு மத்தியில் சச்சின் ஆடிய ருத்ரதாண்டவத்துக்குப் பிறகு ஸ்டீவ் வாவ் சொன்னது எனது காதுகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

      எல்லாவற்றையும் விட, வடிகட்டிய இந்திய துவேஷியான ஜாவேத் மியான்தாத், சச்சின் ஆடிய முதல் தொடரின்போது, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இன்னும் என் கண்களுக்கு முன் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

“BEWARE! SACHIN TENDULKAR IS AROUND”

அது 24 ஆண்டுகளுக்கு முன்பு! எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வருவதுபோல, சச்சினின் ஆட்டமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், சச்சின் அளித்த குதூகலமூட்டும் ஞாபகங்கள் பொக்கிஷம்போல எனது அடிமனதில் மிகவும் பாதுகாப்பாக, பெருமையளிப்பதாக இருக்கின்றன.

சச்சின்! உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்!    

Thursday, September 19, 2013

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!








ஆங்கில ஊடகங்களில் அண்மைக்காலமாக, வெங்காய விலையேற்றத்துக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவதுசச்சின் தெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியை எங்கு விளையாடுவார்? மும்பை வான்கெடே மைதானத்திலா, கொல்கத்தாவிலா அல்லது மும்பை சிவாஜி பார்க்கிலா?-என்பது பற்றித்தான். அக்‌ஷய்குமார் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்று கேட்பதைப் போல, மிகவும் அபத்தமாக இருக்கிறது இந்தக் கேள்வி! அவர் எந்தப் படத்தில் ஐயா நடித்திருக்கிறார்? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? மும்பையோ, கொல்கத்தாவோ எந்த மைதானமாக இருந்தாலும், சச்சின் ‘விளையாடினால் போதாதா என்றுதானே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நொந்து நூடுல்ஸாகியிருக்கும் அவரது ரசிகசிகாமணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

      சச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா என்று கிரிக்கெட் ரசிகர்களுடன், பொருளாதார வல்லுனர்களும், ரிசர்வ் வங்கியும் கவலையுடன் காத்திருப்பதை அறியாமல், சச்சினைப் பற்றித் தேவையற்ற சர்ச்சைகள் தேவைதானா?

      இதில் 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என்று சில விஷமிகள் அவதூறு பரப்புவதைக் கேட்டு, விளம்பரக் கம்பெனிகள் எல்லாம் விளக்கெண்ணை குடித்தது போலக் கட்டணக் கழிப்பறைகளுக்குள் காலவரையின்றிப் போராட்டம் நடத்துவதாகக் கேள்வி. இப்படியெல்லாம் அவசரப்பட்டு சச்சினை ஓய்வுபெறச் சொன்னால், அப்புறம் இந்தியாவுக்குள் எப்படி ஐயா அன்னிய நேரடி முதலீடு வரும்? இந்தியப் பொருளாதாரம் தேறவேண்டும் என்று இம்மியளவாவது உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா?

      மற்ற விஷயத்தில் எப்படியோ, சச்சின் ஓய்வு என்று சொன்னவுடன் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் (பாராளுமன்றத்துறை அமைச்சராம்)  ராஜீவ் சுக்லா, தேசப்பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ‘சச்சின் விரும்புகிறவரை அவர் கிரிக்கெட் ஆடலாம். அவர் எப்போது விரும்பினாலும் ஓய்வு பெறலாம்என்று பேட்டியளித்திருப்பதிலிருந்தே, சச்சின் கிரிக்கெட் தொடர்ந்து ஆடுவது, ஐந்து மாநிலங்களில் நடைபெறப்போகிற சட்டசபைத் தேர்தலை விடவும், பெருகுகிற பணவீக்கத்தை விடவும், ஏறுகிற விலைவாசியை விடவும், நிலக்கரி ஊழலில் காணாமல்போன கோப்புகளைவிடவும் முக்கியம் என்றுகூடவா இந்த அறிவிலிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை! வாட் ய ஷேம்...பப்பி ஷேம்!

      இதே கருத்தைத்தான் சவ்ரவ் கங்குலி, சையத் கிர்மானி, அனில் கும்ப்ளே, கார்ஸன் காவ்ரி போன்ற முன்னாள் வீரர்களும் சொல்லியிருக்கிறார்கள். ‘சச்சின் விரும்புகிறவரைக்கும் அவர் கிரிக்கெட் தொடர்ந்து ஆடலாம்.இந்தியக் கிரிக்கெட் அணியில் யார் ஆடுவது, யார் ஆடக்கூடாது என்பதை அந்தந்த வீரர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பதை மிகுந்த தொல்லைநோக்கோடு, மன்னிக்கவும், தொலை நோக்கோடு இவர்களே சொன்னபிறகு, வீணாக சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று விதண்டாவாதம் செய்பவர்களை, இணையமைச்சர் நாராயணசாமியிடம் பிடித்துக் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சச்சின் அவர் விரும்புகிறவரை விளையாடுவார்; மக்கள் விருப்பத்துக்கெல்லாம் அவர் அசரவோ அஞ்சவோ மாட்டார், அதெல்லாம் ரிக்கி பாண்டிங், இன்ஜமாம்-உல்-ஹக், ஸ்டீவ் வாவ் போன்ற கத்துக்குட்டிகள் செய்கிற வேலை   என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.

      அடுத்த ஆண்டு சச்சின் இங்கிலாந்தில் விளையாடுவார்என்று ரவி சாஸ்திரி சொல்லியிருக்கிறார். ‘அதற்கு அடுத்த ஆண்டு அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவார்என்று நாளை சுனில் காவஸ்கர் சொல்லலாம். எனக்குக்கூட சச்சின் போத்ஸ்வானா, உகாண்டா, கஜாகஸ்தான், உஜெபெகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆடி அங்குள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு விக்கெட் தானம் செய்ய வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. இப்படி முன்னாள் வீரர்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களும்  தலா ஒவ்வொரு வருடம் ஆடச்சொன்னாலே, சச்சின் 2234-ம் ஆண்டு வரை விளையாட வேண்டியிருக்கும் என்னும் சின்னக் கணக்குக் கூடவா சச்சினின் விமர்சகர்களுக்குப் புரியவில்லை? இராமானுஜம், சரோஜாதேவி, மன்னிக்கணும், சகுந்தலா தேவி போன்ற கணிதமேதைகள் பிறந்த இந்தியாவில் ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத சச்சினின் விமர்சகர்களை என்னவென்று சொல்வது? எதற்கும் கடந்த மூன்றாண்டுகளில் சச்சின் அடித்த ஸ்கோர்களை வரிசைப்படி மனப்பாடம் செய்தால், அதற்கும் ஒன்றாம் வாய்ப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதையாவது புரிந்து கொள்வார்கள்.

      நான் விரும்புகிறவரைக்கும் விளையாடுவேன்; ஓய்வு பற்றியெல்லாம் நான் யோசிக்கவேயில்லைஎன்று சச்சினும் எத்தனை தடவை சொல்லுவார். அனாவசியமாக இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிற நேரத்தில் அவர் பாட்டுக்கு  காங்கிரஸுக்காகப் பிரசாரமாவது செய்திருக்க மாட்டாரா? லியாண்டர் பயஸ் நாற்பது வயதில் டென்னிஸ் ஆடி ஜெயிக்கலாம்; சச்சின் நாற்பது வயதில் கிரிக்கெட் விளையாடி சொதப்பக்கூடாதா? என்ன நியாயம் உங்கள் நியாயம்?

      இப்படியெல்லாம் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி, சச்சினையும் அவரது ரசிகப்பெருமக்களையும் நோகடிக்காதீர்கள். அவரே பயந்துபோய், ‘அணியில் வீரர்களைத் தேர்வு செய்யும்போது அந்த வீரரின் தொடர்ச்சியான ஆட்டம் (form) பற்றிக் கவலைப்படக் கூடாது. அந்த வீரர் யார் என்பதைப் பார்த்துத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று சொல்ல நேர்ந்து விட்டது. ‘நான் இரண்டரை வருடங்களாகச் சொதப்பினாலும், என்னை செலக்ட் பண்ணாம விட்டிராதீங்கப்பா. என்னையும் ஆட்டத்துலே சேர்த்துக்கோங்கஎன்று அவர் பகீரங்கமாகவா கேட்க முடியும்? ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. Form இல்லாதவங்களை அணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று மகேந்திரசிங் தோனி கூறியிருப்பது எவ்வளவு பெரிய அடாவடி! இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்த கேப்டன் என்றாலும், உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், திறமைக்குத்தான் மதிப்பு, பழைய பெருங்காய டப்பாக்களை வைத்துக்கொண்டு பொழைப்பு நடத்த முடியாது என்று உண்மையைச் சொல்வதற்கு தோனிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டிருக்காரு அந்த ஆளு!

      சரி, சச்சின் சொல்வதுபோலத்தான், அவர் கேப்டனாக இருந்தபோது, திறமையைப் பற்றிக் கவலைப்படாமல் ஏனோதானோவென்று வீரர்களைப் பொறுக்கி ஆடினார்களா?என்று மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டும் வகையில் கேட்கிறவர்களுக்கு இந்த பதில். ஆமாம்! முன்னாள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஜெய்வந்த் லேலே எழுதியிருக்கிற The Memoirs of a Cricket Administrator’ என்ற புத்தகத்தில் அப்படியொரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான். அதாவது நிலேஷ் குல்கர்னி என்ற மும்பை வேகப்பந்து வீச்சாளர், ஒரு ரஞ்சி சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும், அதனால் அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேப்டன் சச்சின் தெண்டுல்கர் கேட்டது உண்மைதான்; அதற்கு தேர்வுக்குழு தலைவர் ‘யப்பா சச்சின், அவரு 25 விக்கெட் எடுத்தது போன வருசம். இந்த வருசம் அவரு மும்பை ரஞ்சி டீமிலேயே இல்லைப்பாஎன்று சொல்ல, சச்சின் அசடு வழிந்ததும் உண்மைதான். அதற்காக, சச்சினுக்கு அவரது மும்பை ரஞ்சி அணியில் யார் விளையாடுகிறார் என்பதுகூடவா தெரிந்திருக்கவில்லை என்று எடக்காகக் கேட்பது பஞ்சமாபாதகம். அவருக்குக் கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் வேலையா? நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை!

      1998-99 ல் மேற்கு இந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, சரியாக ஆடவில்லை என்ற காரணத்தில் அணியிலிருந்து முகமது அசாருதீன் உட்பட சில வீரர்களை சச்சின் நீக்கச் சொல்லியிருந்தாரே, அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சா என்றெல்லாம் கேட்கப்படாது ஆமாம். அவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக்கும். எப்படி காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும்போது ஒரு மாதிரியும், இல்லாதபோது ஒரு மாதிரியும் பேசுமோ, அதே போல கேப்டனாக இருக்கும்போது ஒருமாதிரியும், இல்லாதபோது வேறு மாதிரியும் சச்சினும் பேசக்கூடாதா? இப்படித்தான் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் எழுந்தபோது, சந்திரசூட் கமிஷனில் ஒரு மாதிரியும், சி.பி.ஐ-யின் மாதவன் குழுவின் முன்னால் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்தார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா!

      சாம்பியன்ஸ் லீக் டி-20 கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வென்றால், அது சச்சினுக்குப் புகழாரம் சூட்டுவதுபோலிருக்கும்என்று அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சொல்லியிருக்கிறார். இதே போல ‘ராகுல் காந்தியைப் பிரதமராக்குவது சச்சினுக்குப் புகழாரம்என்று ஒரு காங்கிரஸ் ஆசாமி கிளம்பலாம். சேனைக்கிழங்கில் அல்வாய் செய்வதில் தொடங்கி, சேட்டைக்காரன் உருப்படியாக எழுதுவது வரைக்கும் சச்சினுக்குப் பெருமை சேர்க்க எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? அதெல்லாம் முடிவதற்கு இன்னும் நூறாண்டுகளானாலும், அதுவரை அவர் ஆடிக்கொண்டிருக்கட்டுமே? இவங்க ஏன் இப்படி லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க? வயித்தெரிச்சல்!

      இப்படியே சச்சின் யுகக்கணக்கில் விளையாடிக்கொண்டே போனால், அப்புறம் சேத்தேஷ்வர் பூஜாரா, ரோஹித் ஷர்மா போன்ற இளம்வீரர்கள் எப்படி அணியில் நிரந்தர இடம்பிடிப்பது, எப்படி புதிய ரத்தத்தைப் பாய்ச்சுவது, எப்படி இந்திய அணியின் வருங்காலத்தை வலுப்படுத்துவது என்றெல்லாம் ரூம்போட்டு யோசித்துக் கேள்வி கேட்கிறார்கள் விமர்சகர்கள். அதெல்லாம் சச்சின் ஆடுவதை விடவா முக்கியம்? மொத்தம் பதினோரு வீரர்களில் ஒருவர், அதுவும் இருப்பதிலேயே மிகவும் வயதானவர் சொதப்பினால், ‘ஏதோ வயசானவர், சொதப்பிட்டுப்போறாருஎன்று அனுமதிக்கிற பெருந்தன்மை கூடவா இல்லை நமக்கு? இந்த நாடு எப்படிப்பட்ட நாடு? எவ்வளவு வயோதிகர்களைப் பிரதமர்களாகவும், முதல்வர்களாகவும், ஒன்றுமில்லாவிட்டாலும் கவர்னர்களாகவும் அமரவைத்து அழகுபார்த்த நாடு! இந்தப் பட்டியலில் இன்னுமொருவர் கிரிக்கெட் ஆடினால், அது நமது பாரம்பரீயத்தின் வெளிப்பாடு என்றல்லவா கருத வேண்டும்? எப்பப் பார்த்தாலும், இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம், இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்களே! இவங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?

      முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப் பாய்காட் கூடப் பொருமியிருக்கிறார். “தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் திடீரென்று சுருக்கி, மேற்கு இந்தியத் தீவை இந்தியாவுக்கு வரவழைத்திருப்பது, சச்சினுக்காகவேஎன்று. (டி.ஆர்.எஸ் தொடங்கி, கிரிக்கெட் தேர்தல் சீர்திருத்தம் வரையிலான பல அதிரடி நடவடிக்கைகள் விசயமாக முன்னாள் ஐ.சி.சியின் தலைவரும் இன்னாள் தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஹரூன் லாகாட்டுக்கும் நம்ம இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கும் இருக்கிற குடுமிப்பிடிச் சண்டை இன்னொரு பக்கம் இருந்தாலும்).

      ஆமாம் சாமி! முன்னை மாதிரி சச்சினால் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. அதுவும் தென் ஆப்பிரிக்கா மாதிரிக் கடினமான ஆடுகளத்தில் டெயில் ஸ்டெயின் போன்றவர்களின் பந்தையெல்லாம் அவரால் ஆட முடியாது என்றுதான் இந்தியாவில் உள்ள மொக்கை ஆடுகளங்களில் அவரை ஆடவைத்து, 200-வது டெஸ்டை நடத்தவிருக்கிறோம் என்று உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே? ஏழாம் கிளாஸ் பாஸ் பெரிசா, எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயிலு பெரிசா?

      வரப்போகிற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு, சுழல்பந்து என்றால் சிம்மசொப்பனம் என்பதால் எப்படியும் தொடரை வென்று விடலாம். அப்படியே சச்சின் ஓய்வு என்று அறிவித்தாலும், ‘நான் விளையாடிய இறுதி டெஸ்ட் தொடரையும் வென்றுவிட்டோம் என்று ஏதோ தன்னால் தொடர் வென்றமாதிரி ஒரு அற்ப சந்தோஷத்தை அவர் அடைந்தால் அடைந்து விட்டுப்போகட்டுமே? அப்படித்தானே, 2011- உலகக்கோப்பை வென்றபோதும், 2013 ஐ.பி.எல்லை மும்பை இந்தியன்ஸ் வென்றபோதிலும் பில்ட்-அப் கொடுத்தார்கள். உயிரைக் கொடுத்து ஆடிய இளம் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘மானே தேனேஎன்று தொடர்ந்து சச்சினையே புகழ்ந்துகொண்டே இருப்பவர்களின் நப்பாசையை ஏன் கெடுக்க வேண்டும்?

      இந்த அணியில் இளைஞர்கள் வரவில்லையென்று யார் அழுதார்கள்? ஏதோ, 80களின் இறுதியில் சில அனுபவசாலி வீரர்கள் ‘ஆட்டமெல்லாம் போதும்; வீட்டுக்குக் கிளம்புவோம்என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாக, அணியின் நன்மை கருதி முடிவெடுத்ததால், சச்சின், மஞ்ச்ரேகர், காம்ப்ளி, ஆம்ரே போன்ற இளம்வீரர்கள் வந்தார்கள். அதற்காக, ‘நமக்கு வாய்ப்புக் கிடைத்த மாதிரி மற்ற இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால், நாமும் நமது வயதுகருதி, அணியின் எதிர்காலம் கருதி, தேசநலன் கருதி,  கவுரவமாக ஒதுங்க வேண்டும்,என்று சச்சினும் பெருந்தன்மையோடு யோசிக்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லையே? இருபது வருடங்களாக, தனது ஆட்டத்திறனால், தான் சம்பாதித்த நற்பெயரை, ஒரு மனிதர் தானே சின்னாபின்னப்படுத்த விருப்பப்பட்டால், அதைத் தடுக்க யாரால் முடியுங்காணே?

      இப்போது சச்சினை ‘பாஜி(அப்பா)என்று அழைக்கிற இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், அவரை ‘தாவ்ஜி(தாத்தா) என்று அழைத்தாலும் சரி, அவர் ஆடாவிட்டாலும், இவர்கள் ஆடி ஜெயித்து, அவரைத் தோளின்மீது உட்காரவைத்து மைதானத்தை வலம்வந்தாலும் சரி, ‘இதைவிட கவுரவமாக விடைபெற முடியாதுஎன்பதைப் புரிந்து கொண்டு அவராக அறிவிக்காதவரையில், அவர்பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருக்கட்டும்! இப்படியே எல்லாரும் நாற்பது வயதுவரைக்கும் ஆடுவேன் என்று அடம்பிடித்து அழுதால், இரானி கோப்பையிலும், ரஞ்சியிலும், கங்கா லீகிலும், டைம்ஸ் ஷீல்டுகளிலும் அடித்து ஆடுகிற துடிப்பான இளைஞர்கள் இந்தியாவுக்காக ஆடுகிற கனவை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு பாவ்-பாஜி சாப்பிடட்டும்!

      முன்னாள் டென்னிஸ் வீரர் இவான் லெண்டல் ஒரு முறைகூட விம்பிள்டனில் ஜெயித்ததில்லை. கிரிக்கெட்டிலேகூட, சுனில் காவஸ்கர் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சர்வதேச சதமும் அடித்ததில்லை. எல்லா வீரர்களும், எத்தனையோ சாதனைகள் செய்தும் விட்டகுறை, தொட்டகுறை நிறையவே இருந்து வந்திருக்கின்றன. அப்படியெல்லாம் எதையும் விட்டுவைத்து விடாமல், எல்லா சாதனைகளையும் செய்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சச்சின் எண்ணுவதில் என்ன தப்பு இருக்கிறது? ஒரு தப்புமில்லை. கிரிக்கெட் வாரியம் உங்களது; இந்தியக் கிரிக்கெட் உங்களது தனிச்சொத்து. நீங்களோ கிரிக்கெட்டின் கடவுள்! கடவுளுக்கு ரிட்டயர்மெண்ட், பென்சன், ஈ.எஸ்.ஐ, க்ராஜுவிட்டி, பி.எஃப் எல்லாம் உண்டா என்ன? ஆகவே, மராட்டிய மார்க்கண்டேயரே, விடாதீங்க! நீங்கபாட்டுக்குத் தொடர்ந்து அவுட் ஆகுங்க, அதாவது, ஆடுங்க ராசா! இவனுக இப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பானுங்க! யூ ப்ளீஸ் கண்டின்யூ!

      மற்ற விசயங்களில் என்னவோ மக்கள் விருப்பத்துக்கு எல்லாரும் மதிப்பளிப்பது மாதிரியும், நல்ல முன்னுதாரணங்களைக் கடைபிடிக்கிற மாதிரியும், கிரிக்கெட்டில் மட்டும், அதுவும் சச்சின் விஷயத்தில் மட்டும் அவர் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

       நல்ல வேளை, ‘என்னை எம்.பியாக்கிய காங்கிரஸ் கட்சி 45 ஆண்டுகள் ஆட்சியே செய்திருக்கிறது. நான் 45 ஆண்டுகள் ஆடினால் என்ன குறைந்து போய் விடும்? என்று அவர் கேட்காதவரை, ‘ஆடப்பிறந்தவரே ஆடிவா!என்று அவரை வாழ்த்துவோம்.