Friday, January 15, 2010

இந்த ஏழு நாட்கள்

பகவான் ரமண மகரிஷியைத் தரிசிக்க ஒரு இளைஞன் சென்றானாம். ஆன்மீகம் குறித்துப் பலரிடமும் கேட்டு சரியான பொருள் புரியாமல், திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து வசித்து வந்த ரமண மகரிஷியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவராவது தனது சந்தேகங்களுக்கு ஒரு தெளிவான விடையளிப்பாரா என்று அவரை அணுகினானாம்.

"பகவானே! மிகவும் குழம்பியிருக்கிறேன். என்னை நல்வழிப்படுத்துங்கள். நான் செல்ல வேண்டிய வழி எது?" என்று சஞ்சலத்தோடு வினவினானாம்.

பகவான் ரமணர் அவனைப் பார்த்து சிரித்து,"நீ வந்த வழியே போ," என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டாராம். குழம்பிப் போயிருந்த இளைஞன் நெடுநேரமாக அங்கேயே நின்றிருக்க, நீண்ட நேரத்துக்குப்பிறகு ரமணரின் பிரதம சீடர்களில் ஒருவர் வெளிப்பட்டாராம்.

"தம்பி! பகவான் ஒன்றும் விளையாட்டாகச் சொல்லவில்லை. உங்களது கேள்வியென்ன? "நான்" எந்த வழியே போக வேண்டும் என்பது தானே? நான் யார் என்ற சுயபரிசோதனையே பகவான் ரமணமகரிஷியின் உபதேசங்களின் சாரம். இந்த "நான்" எங்கிருந்து வந்தது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அதனால் தான் "நான்" வந்தவழியே போக வேண்டும் என்று பகவான் சொன்னார் என்று விளக்களித்தாராம்.

இந்த ஒரு வாரத்தில், தனிமடல் அனுப்பி நான் வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பியவர்கள் இருக்கிறார்கள். எனது வலைப்பதிவில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியவர்கள் இருக்கிறார்கள். பல வலைப்பதிவுகளின் இழைகளை எனக்கு அனுப்பி அவற்றிலிருப்பதைப் படித்துப் பயன்பெறுவாயாக என்று ஆசிவழங்கியவர்கள் இருக்கிறார்கள். உனக்குப் பெயர் கிடையாதா, அல்லது சொந்தப்பெயரையும் வெளியே சொல்ல இயலாத அளவுக்கு நீ ஒரு கேவலமான பிறவியா என்று என் குடும்பத்தையே இழித்தெழுதிய ஓரிருவரும் (அதில் ஒருவர் பெண்) இருக்கிறார்கள்.

ஆனால், பெரும்பாலானோரது கருத்து: உனது எழுத்து இவரை அல்லது அவரை ஒத்து இருக்கிறது. அல்லது நீ தான் அவர்; வேறு பெயரில் எழுதி யாரையோ குழப்ப முயன்று கொண்டிருக்கிறாய்; அல்லது நீயே குழம்பியிருக்கிறாய். உன் எழுத்து எங்கேயோ, எப்போதோ படித்த எவர் ஒருவருடையதோவான ஒரு படைப்பை நினைவுறுத்துகிறது.

இப்போது ரமணமகரிஷியின் ஆசிரமத்தில் உபதேசம் கேட்டுச்சென்ற அந்த நபரின் நிலையில் நானிருக்கிறேன். இதுவரை எனது எழுத்துக்களில் வேறு எவரது முகமோ அல்லது குரலோ தென்பட்டிருக்கிறது அல்லது ஒலித்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

நான் எந்த வழியே செல்ல வேண்டும்? வந்த வழியே செல்கிறேன். எனது குப்பைகளைக் கிளறிப் புடைத்துக் கழுவி மீண்டும் எனது எழுதுமேஜையின் மீது அலங்காரப்பொருளாய் அடுக்கி வைக்கிறேன்.

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) என்னன்னவோ நடந்திருக்கு போலயே..

settaikkaran said...

//:) என்னன்னவோ நடந்திருக்கு போலயே..//

ஹி..ஹி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! சேட்டையில் பலவகை; அதில் இது ஒரு வகை..