
’
எந்திரன்’ படத்தை
(அதற்குள்) மூன்றாவது முறை பார்த்தபோது எனது மனத்தில் எழுந்த கேள்வி: "
நானும் சிட்டி மாதிரி ஒரு ’ரோபோ’வாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? சே!"
(ஹலோ, அபிஷேக் பச்சன் சார், நீங்க டென்சன் ஆகாதீங்க; நான் அந்த அர்த்தத்துலே சொல்லலே!)11-A,12-B,23-C,47-D போன்ற பேருந்துகளில் எவ்வளவு கூட்டமிருந்தாலும் ஜன்னலோர சீட் கிடைக்கலாம். அடுத்த முறை கொச்சின் துறைமுகம் போகும்போது அங்கிருக்கிற சேட்டன்மார்கள் நக்கலடிக்கும்போது அவர்களோடு மலையாளத்தில் சம்சாரித்து ’
போடா புல்லே!’ என்று பதிலடி கொடுக்கலாம். எவ்வளவு சிக்கலான கப்பல் கணக்குகளையும் எக்ஸெல் துணையின்றி விரல்நுனியில் போட்டு, ஜி.எம்மின் முகத்தில் கரியை அப்பலாம். கும்பாபிஷேகம், நவராத்திரி, தலைவர் பிறந்தநாள் என்று ஏதாவது சாக்குச் சொல்லி அதிகாலையிலிருந்து காது ஜவ்வு கிழிகிற மாதிரி லவுட்-ஸ்பீக்கர் வைத்து உயிரை வாங்குகிற புண்ணியவான்களுக்குப் புத்தி புகட்டலாம். ஹும்!
இதெல்லாம் முடியாவிட்டால் என்ன? சிட்டியாக வரும் ரஜினி போட்டுக்கொண்டு வருகிறாரே,
ஒரு கலக்கல் கருப்புக் கண்ணாடி, அதை வாங்கிப் போட்டுக்கொண்டாலென்ன?
’பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதே! அதனால் சென்ற புதன்கிழமை அலுவலகம் முடிந்ததும், லிங்கிச்செட்டித்தெரு, அரண்மனைக்காரன் தெருவை ஒரு ரவுண்டு அடித்து ஏறக்குறைய ரஜினி போட்டது மாதிரியே ஒரு கண்ணாடியை வாங்கியும் விட்டேன். நேற்று மகாளய அமாவாசை; நிறைந்த நாள்! சுத்தபத்தமாக குளித்து தயாராகி, இரயில் நிலையத்தை நோக்கிக் கிளம்பியதும், மறக்காமல் கூலிங் கிளாஸையும் அணிந்து கொண்டேன். அந்தக் கண்ணாடியால் எனக்கு ஏற்படப்போகிற ஆச்சரியமான அனுபவங்களைப் பற்றி நான் கற்பனை கூட செய்திருக்கவில்லை.
தாம்பரம் நிலையத்தை அடைந்தபிறகுதான், கண்ணாடி வாங்கிய பரபரப்பில் முந்தைய தினம் சீசன் டிக்கெட்டை புதுப்பிக்காமல் விட்டு விட்டது ஞாபகத்துக்கு வந்தது. எனவே, பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷனில் நிற்கும் கூட்ஸ் வண்டி போல நீளமாக இருந்த வரிசையை நெருங்கியபோது அனைவரின் கவனமும் என் பக்கம் திரும்பியது. என் முகத்தையே கூர்ந்து கவனித்தவர்கள், சற்றே பின்வாங்கவும், சிறிது நேரத்துக்கு முன் வரை சுருட்டி வைத்த மசால்தோசை மாதிரி ஒழுங்காக இருந்த வரிசை உதிர்த்துப் போட்ட பரோட்டா மாதிரி உருக்குலைந்து போனது. விளைவு? ஐந்து நிமிடத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு நான் உள்ளே விரைந்து கொண்டிருந்தேன்.
வழிநெடுகவும் போவோர் வருவோரெல்லாம் எனது முகத்தைப் பார்த்து விட்டு, விலகி வழிவிட்டதோடு, தலையையும் குனிந்து கொள்வதை என்னால் காண முடிந்தது. '
ஆஹா, தலைவர் போல கண்ணாடி போட்டதற்கே இவ்வளவு மரியாதையா?' இருந்தாலும் எனது தகுதிக்கு இவ்வளவு மரியாதை கொஞ்சம் ஓவர் தான் என்று எனக்கே தோன்றியது.
இத்தோடு நின்றதா என்றால் அது தான் இல்லை! நான் வழக்கமாக பயணம் செய்யும் பெட்டியை நெருங்கியதும், நான் வருவதை ஜன்னல்வழியாகப் பார்த்தவர்கள் பலர், விசுக்கென்று எழுந்து பெட்டியை விட்டு வெளியேறி வெவ்வெறு பெட்டிகளை நோக்கித் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். அரை நொடியில் அந்தப் பெட்டியே சுத்தமாகக் காலியாகி விட்டதென்றால் பாருங்களேன்! இவர்களுக்கு என்னாயிற்று என்று நான் யோசிப்பதற்குள்ளாகவே விசில் சத்தம் கேட்டு விடவும், நான் வண்டியில் ஏறிக்கொண்டேன்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறிய பயணிகள், என்னைப் பார்த்ததும் அப்படியே விக்கித்துப் போய் ஒரு கணம் சிலைபோல் நின்றுவிட்டு, வந்த வேகத்திலேயே திரும்பி பெட்டியின் எதிர்பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். வேறு வழியே இல்லாமல், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர்களும் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இல்லாமல், சமைந்த பெண் சபையில் உட்காருவது போல தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.
என்னைப் பார்க்க பயப்படுகிறவர்களில் பலர், செய்தித்தாள்களை விரித்துத் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டனர். இதில் ஒருவர் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரின் ராஜஸ்தான் டைம்ஸ் பத்திரிகையைப் பிடுங்கியதையும் நான் கவனித்தேன்.
அனேகமாக, என்னையும் இவர்கள் சிட்டி என்ற ரோபோவாகவே எண்ணிவிட்டார்கள் போலும். அதனால் தான் எங்கே நானும் வில்லனாகி, துவம்சம் பண்ணி விடுவேனோ என்ற பயத்தில் என்னை நேருக்கு நேர் பார்க்கவே பயப்படுகிறார்கள் போலும் என்று மனதுக்குள் எண்ணியபடியே சிரித்துக் கொண்டேன்.
மொத்தத்தில், எல்லாரும் ’
எந்திரன்’ பார்த்திருக்கிறார்கள் என்பதும், அவர்களுக்கும் என்னைப் போலவே எதைப் பார்த்தாலும் ’எந்திரன்’ படமே ஞாபகத்துக்கு வருகிறது என்பது மட்டும் புரிந்தது. என்ன இருந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்!
கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கியபோது, எனக்குப் பரிச்சயமான அந்த டிக்கெட் பரிசோதகர்கள் கூட என்னை வினோதமாகப் பார்த்துவிட்டு ’போனால் போகிறது,’ என்பது போல புன்னகை சிந்தி விட்டு, தங்களது கடமையை கவனிக்கத் தொடங்கினார்கள். அம்ரிதா டீ ஸ்டாலில் என்னைப் பார்த்தவுடன் புன்னகைக்கும் சேட்டன், லாலேட்டன்(மோகன்லால்) கல்லூரி மாணவன் வேடத்தில் வருவதைப் பார்த்தது போல திருதிருவென்று விழித்தார். கல்லாவிலிருந்தவர் பதற்றத்தோடு என்னிடமிருந்து காசு வாங்கியபோது, அது கீழே விழுந்தது.
என்ன ஆயிற்று இவர்களுக்கு? ரஜினி மாதிரி ஒரு கண்ணாடி போட்டுக்கொண்டதற்கே இவ்வளவு பயமா? தீபாவளிக்கு ரஜினி மாதிரியே கழுத்தில் பட்டையாக காலர் வைத்த சட்டையும், கோட்டும் வாங்குவதாக முடிவு செய்திருக்கிறேனே? அதன் பிறகு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
யோசித்துக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, எதிர்ப்பட்ட ஜி.எம். என்னைப் பார்த்ததும், சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
"குட்மார்னிங்க் சார்!"
"குட்மார்னிங் சேட்டை! இத்தோட உன்னை யாரு ஆபீஸுக்கு வரச்சொன்னது? ஊரெல்லாம் இதே பேச்சுத்தான் கொஞ்ச நாளா!"
"இருக்காதா சார்? தலைவர் படம்னா ஊரெல்லாம் பேசத்தான் செய்வாங்க! அதுவும் பெரிய படம்! வழக்கத்தை விட அதிகமா பேசத்தான் செய்வாங்க!"
"மண்ணாங்கட்டி! நான் சொல்லுறது
மெட்ராஸ்-ஐ-யோட உன்னை யாரு ஆபீசுக்கு வரச் சொன்னது? இப்படிக் கண்ணாடி போட்டுக்கிட்டாவது ஆபீஸுக்கு வரலேன்னு யாரு அழுதா? வீட்டுக்குப் போய்யா.....உன்னாலே இது ஆபீஸ் முழுக்கப் பரவிடப்போவுது!"
ஐயையோ! அப்படீன்னா, எனக்கு
மெட்ராஸ்-ஐ வந்திருக்குன்னு நினைச்சுக்கிட்டுத் தான் எல்லாரும் என்னைப் பார்த்து இப்படி மிரண்டாங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்!