Thursday, June 19, 2014

கிட்டாமணியை வெட்டென மற..!



அரோகரா ஆஸ்பத்திரி வாசலில் பத்து வருடங்களாக டயர் மாற்றாத அந்தக் காவல்துறை ஜீப் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு சர்ரென்று பிரேக் போட்டு நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் வாறண்ட் வள்ளிக்கண்ணு துள்ளியிறங்கி உள்ளே நுழைந்தார். வள்ளிக்கண்ணுவைப் பார்த்த டாக்டர் ஊளம்பாறை உலகப்பனின் முகம் தண்ணீர் தெளித்த தக்காளிப்பழம் போலப் பளபளத்தது.

”வாங்க இன்ஸ்பெக்டர்! உங்களைப் பார்த்ததும்தான் எனக்கு ஐ.சி.யூவுக்குப் போன கேஸு வார்டுக்கு வந்த மாதிரியிருக்கு!”

“எதுக்கு அவசரமா வரச்சொன்னீங்க டாக்டர்? அஸால்ட் கேஸா? சூஸைட் கேஸா? டவுரி கேஸா? டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸா?”

“என்ன சார், நரம்புத்தளர்ச்சி நாட்டுமருந்து விளம்பரம் மாதிரி  அடுக்கிட்டே போறீங்க?” டாக்டர் எரிச்சலுடன் கேட்டார். “எங்க ஹாஸ்பிட்டல்லே ஒரு வித்தியாசமான கேஸ் அட்மிட் பண்ணியிருக்கோம்.”

”ஐயோ பாவம்!” என்று வாய்தவறிச் சொன்ன இன்ஸ்பெக்டர் உடனே சுதாரித்துக் கொண்டு, ”சரி, அதுக்கு என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க? அந்த பேஷியண்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணுமா?” என்று கேட்டார்.

“”பேஷியண்ட்டுக்கு வேண்டாம் சார், பேஷியண்டோட புருஷனுக்குத்தான் பாதுகாப்பு வேணும் போலிருக்கு!” டாக்டரின் குரல் பேட்டரி பழுதான பழைய லாம்பி ஸ்கூட்டரின் ஹாரன்போலச் சன்னமாக ஒலித்தது.

”டாக்டர்!’ இன்ஸ்பெக்டர் பொறுமையிழந்து இரைந்தார். “பிரிஸ்கிருப்ஷன் மாதிரிக் குழப்பாம, பில் மாதிரி பளிச்சுன்னு சொல்லுங்க! என்ன மேட்டர்?”

”சொல்றேன் இன்ஸ்பெக்டர்! எனக்கு பாலாமணின்னு ஒரு லேடி பேஷியண்ட் இருக்காங்க. டிவி சீரியல் பார்த்துப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டு அப்பப்போ கவுன்ஸிலிங்குக்காக என்கிட்டே வருவாங்க. அவங்க புருஷன் பேரு கிட்டாமணி!”

”அவரு எப்படி இருக்காரு?” இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்.

“அவர் எப்பவும்போல நார்மலா அரைலூசு மாதிரித்தான் இருக்காரு!” என்ற டாக்டர் தொடர்ந்தார். “ஆனா, திடீர்னு பாலாமணி கிட்டாமணியை புருஷனே இல்லைன்னு சொல்றாங்க. ஒரிஜினல் ;புருஷன் கிட்டாமணியை எங்கேயோ ஒளிச்சு வைச்சிட்டு அவர் மாதிரியே இருக்கிற இன்னொரு ஆளு கிட்டாமணி பேரைச் சொல்லிக்கிட்டு வந்திருக்காருன்னு சொல்றாங்க.”

”ஓ மை காட்!” வள்ளிக்கண்ணுவின் வாய் வள்ளுவர்கோட்டம் வாசல்கதவு போலத் திறந்தது. ”கட்டின மனைவியே சொல்றாங்கன்னா, ஒரு வேளை உண்மையா இருக்குமோ? யாராவது கடத்தியிருப்பாங்களோ?”

“ஐயையே! அந்தக் கிட்டாமணி அவ்வளவு வொர்த் இல்லீங்க! பொடி வாங்கறதுக்கே பொஞ்சாதிகிட்டே பொய்சொல்லி தினமும் பதிமூணு ரூபா வாங்குறவரு! அவரைக் கடத்திட்டுப் போனா மூக்குச் சிந்தின கர்ச்சீப் மட்டும்தான் கிடைக்கும்.”

”அப்புறம் ஏன் பாலாமணி அப்படிச் சொல்லணும்?”

“இது ஒரு மனநிலை பாதிப்பு இன்ஸ்பெக்டர்! இதுக்கு கேப்கிராஸ் டில்யூஷன்னு பேரு! இதனாலே பாதிக்கப்பட்ட புருசனுங்க திடீர்னு பொஞ்சாதியை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க; பொஞ்சாதிங்க புருஷனை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க! இது ஒரு அபூர்வமான மனவியாதி! கோடியிலே ஒருத்தருக்குத்தான் வரும்!”

“அடடா, அப்போ எல்லோருக்கும் வராதா? சே!” இன்ஸ்பெக்டர் அலுத்துக்கொண்டார். “ஹும், அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்.”
   
   ”உங்க சொந்தக்கவலையெல்லாம் அப்புறம் இன்ஸ்பெக்டர்! உடனடியா இந்த டூப்ளிகேட் புருஷனைப் போலீஸ்லே பிடிச்சுக் கொடுத்திட்டு ஒரிஜினல் புருஷனைக் கூட்டிட்டு வரலேன்னா, கிட்டாமணியையும் என்னையும் கொலை பண்ணிடுவேன்னு அந்த பாலாமணி அழும்பு பண்ணிட்டிருக்காங்க!” டாக்டர் உலகப்பன் அழுது விடுவார் போலிருந்தது.

      ”என் சர்வீஸுலே…..!” என்று இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு தொடங்க, “இப்படியொரு கேஸைப் பார்த்ததேயில்லை,” என்று முடித்தார் டாக்டர் உலகப்பன். “போலீஸைப் பார்த்தா கொஞ்சம் பயப்பட்டு ட்ரீட்மெண்ட்டுக்கு ஒத்துழைப்பாங்கன்னு நினைக்கிறேன். தயவு செய்து கூட வாங்க ஸார்.”

      ”அந்தக் கிட்டாமணி எங்கேயிருக்காரு?” வள்ளிக்கண்ணு கம்பீரமாய்க் கேட்டார்.

      ”அதோ, உறிஞ்சி முடிச்ச ஸ்ட்ராவுக்கு உடுப்பு மாட்டி விட்டது மாதிரி உட்கார்ந்திட்டிருக்காரே அவர்தான்!” என்று டாக்டர் உலகப்பன் காட்டிய திசையில், கிட்டாமணி பஞ்சரான காருக்கு ஜாக்கி போட்டதுபோல, முகத்தைக் கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தார்.

      ”மிஸ்டர் கிட்டாமணி!” என்று டாக்டர் அழைத்ததைக் கேட்டு எழுந்த கிட்டாமணியின் முகம் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் பத்து தடவை சலவை செய்யப்பட்ட பிளாட்பார பனியனைப் போலச் சுருங்கியது. மாசக்கடைசியில் கலெக்‌ஷனுக்கு வந்த கேபிள் டிவிக்காரரைப் பார்ப்பதுபோல இன்ஸ்பெக்டரைக் கலவரத்துடன் பார்த்தவாறே நெருங்கினார்.

      ”மிஸ்டர் கிட்டாமணி! இது இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு!”

      ”ஹலோ மிஸ்டர் கிட்டாமணி,” வள்ளிக்கண்ணு கை நீட்டினார். 

“கங்கிராஜுலேஷன்ஸ்… சாரி…..ஐ மீன்… டாக்டர் சொன்னதைக் கேட்டதிலேருந்து எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. கவலைப்படாதீங்க.  நீங்கதான் பாலாமணியோட ஒரிஜினல் புருஷன்னு எப்படி நிரூபிக்கிறேன்னு பாருங்க. வாங்க, மூணு பேரும் போய்ப் பேசுவோம்.”
   
   ”எனக்கு பயமாயிருக்கு இன்ஸ்பெக்டர்!” கிட்டாமணி கிடுகிடுமணியானார். “ஏற்கனவே என் ஜாதகப்படி புதனும் சுக்கிரனும் வீடு மாறிட்டாங்கன்னு சொல்றாங்க.”

      ”கவலைப்படாதீங்க, அவங்களுக்கு ரெப்கோ பேங்குலே லோன் கிடைச்சா அடிக்கடி வீட்டை மாத்தாம, சென்னைக்குப் பக்கத்துலேயே திண்டிவனத்துலே சொந்த வீடு கட்டிக்குவாங்க. இப்ப வாங்க.”

டாக்டரும் இன்ஸ்பெக்டரும் பாலாமணியிருந்த அறைக்குள் நுழைய, அவர்கள் இருவருக்கும் பின்னால் கிட்டாமணி பதுங்கியவாறே சென்றார். இரண்டு கைகளிலும் தலா ஒவ்வொரு ஆப்பிளை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலாமணி, சட்டென்று தலையணைக்கு அடியில் ஒளித்துவைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“மிசஸ் பாலாமணி!” டாக்டர் உலகப்பன் பேசினார். “உங்களைப் பார்க்க உங்க புருஷன் வந்திருக்காரு பாருங்க.”

“ஐயையோ!” பாடி ஃபேக்டரியின் பத்துமணிச் சங்குபோல அலறினாள் பாலாமணி. ”என் புருஷன் போலீஸ்காரர் இல்லை.”

“அட இவர் உங்க புருஷனில்லீங்க,” டாக்டர் இரைந்தார். “இவர்தான் உங்க புருஷனைத் தேடிக் கண்டுபிடிச்சவரு. பேரு இன்ஸ்பெக்டர் கொள்ளிக்கண்ணு… சாரி, இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு.”

“உங்க புருஷன் இதோ இருக்காரு பாருங்க,” என்று வள்ளிக்கண்ணு பதுங்கியிருந்த கிட்டாமணியை இழுத்து முன்னால் நிறுத்த…

“டேய்…. நீ மறுபடியும் வந்திட்டியா…?” என்று பாலாமணி தலையணையை எடுத்து வீசினாள். “என் புருஷனை எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே? மரியாதையா உண்மையைச் சொல்லு.”

“இவர்தாம்மா உங்க புருஷன்!” டாக்டர் உலகப்பன் கூறினார். “நாங்க சொல்றதுலே நம்பிக்கையில்லையா? இவரு ஒரு இன்ஸ்பெக்டர், நான் ஒரு டாக்டர்…”

“அதுனாலதான் நம்பிக்கையில்லையோ என்னமோ!” கிட்டாமணி முனகினார்.

”இவரு என் கிட்டாமணி இல்லை,” அலறினாள் பாலாமணி.”அவரை மாதிரியே இருக்கிற யாரையோ கூட்டிக்கிட்டு வந்து என்னை ஏமாத்தவா பாக்கறீங்க?”

“ஐயோ பாலா…!” கிட்டாமணி உருகினார். “சத்தியமா நான் உன் கிட்டாமணி தான்! என்னை மாதிரி இன்னொருத்தனெல்லாம் இருக்க சான்ஸே இல்லை. கடவுள் ஒரே தப்பை ரெண்டு வாட்டி செய்ய மாட்டாரு.”

“மிசஸ் பாலாமணி!” இன்ஸ்பெக்டர் உறுமினார். “உங்க புருஷனுக்கு மூக்குப்பொடிப் பழக்கம் உண்டுதானே? இவரோட மூக்கைப் பாருங்க. ஏதாவது வித்தியாசம் தெரியுதா? இவர்தான் உங்க கிட்டாமணி. கூட்டிக்கிட்டுப் போய் கண்கலங்காமப் பார்த்துக்குங்க.”

”இல்லை… இல்லை.. இல்லை!” பாலாமணி சீரியல் நாயகியைப் போல முகத்தை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் ஆட்டியபடி மறுத்தாள். “என் கிட்டாமணி இவரில்லை. இது யாரோ ஒரு டுபாக்கூர்!”

“தெரியுதில்லே? அப்புறம் ஏன் சந்தேகப்படறீங்க?” டாக்டர் இடைமறித்தார். “சத்தியமா இவர்தான் அந்த டுபாக்கூர்… இவர்தான் உங்க புருஷன்.”

பாலாமணி மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு…

“சரி, நீங்க சொல்றபடி இவர் என் புருஷன்னா,  நான் கேட்கிற மூணு கேள்விக்குச் சரியாப் பதில் சொல்லணும். சரியா?”

“என்னம்மா இது அநியாயமா இருக்கு?” இன்ஸ்பெக்டர் தலையைச் சொரிந்தார். “எந்தப் புருஷனாவது பொஞ்சாதி கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுவானா? லாஜிக்கே உதைக்குதே!”

”இன்ஸ்பெக்டர் சார், சும்மாயிருங்க,” டாக்டர் உலகப்பன் கையமர்த்தினார். “மிசஸ் பாலாமணி, நீங்க கேளுங்க. மிஸ்டர் பாலாமணி பதில் சொல்றாரா பார்ப்போம்.”

அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வுக்கு வந்ததுபோல கிட்டாமணி கலவரத்துடன் பார்க்க, பாலாமணி தொண்டையைச் செருமிக் கொண்டு முதல் கேள்வியைக் கேட்டாள்.

“என்னோட பிறந்த நாள் எப்ப வரும்னு சொல்லுங்க?”

“என்னது?” கிட்டாமணி அதிர்ந்தார். “எடுத்த எடுப்புலேயே இவ்வளவு கஷ்டமாக் கேட்டா எப்படி? ஏதாவது க்ளூ கிடைக்குமா?”

“இங்கே என்ன சொல்லுங்க வெல்லுங்க புரோகிராமா நடந்திட்டிருக்கு?” சீறினாள் பாலாமணி. “என்னோட பிறந்த நாள் கூடத் தெரியாத இவரு எப்படி என் புருஷனா இருக்க முடியும்? இவரை அரெஸ்ட் பண்ணிட்டுப் போய்த் தூக்குலே போடுங்க.”

“அவசரப்படாதீங்க மிசஸ் பாலாமணி,” டாக்டர் அமைதிப்படுத்த முயன்றார். “வொய்ஃபோட பிறந்த நாள் தெரியாட்டி தூக்குலே போடணும்னா நாங்கல்லாம் என்னத்துக்கு ஆகுறது? புதுசா மூணு கேள்வி கேளுங்க.”

கிட்டாமணியும் பார்வையாலேயே ‘ப்ளீஸ்’ என்று கெஞ்ச, பாலாமணி அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“எங்க கல்யாணம் எந்த ஹால்லே நடந்ததுன்னு சொல்லுங்க!”

“ஹாலா?” தலையைச் சொரிந்தார் கிட்டாமணி. “இத்தனை வருசத்துக்கப்புறம் எப்படி ஞாபகமிருக்கும். ஆஹா, ஞாபகம் வந்திருச்சு. வாணி மஹால்… கரெக்டா?”

“மூஞ்சி!” பாலாமணி பழிப்புக் காட்டினாள். “அது விஜயா சேஷ மஹால்.”

“சரி விடுங்க, அவர் ஒண்ணும் நாயுடு ஹால்னு சொல்லிடலியே?” இன்ஸ்பெக்டர் சமாளிக்க முயன்றார். “அடுத்த கேள்வி…?”

“கல்யாணம் முடிஞ்சதும் நாங்க எங்கே போனோம் ஞாபகமிருக்கா?”

“ஓ!” உற்சாகமாகச் சொன்னார் கிட்டாமணி. “கடைசிப்பந்தியிலே சாப்பிடப்போனோம். என் இலையிலே ஜாங்கிரியே வைக்கலை.”

”தப்பு, சினிமாவுக்குப் போனோம்!” என்ற பாலாமணி, அதிரடியாக அடுத்த கேள்வியை எடுத்து விட்டாள்.

“தலை தீபாவளிக்கு எங்க அம்மா என்ன போட்டாங்க?”

“எங்க அம்மாகூட சண்டை போட்டாங்க!” என்றார் கிட்டாமணி.

“இதுவும் தப்பு! உங்களுக்கு மோதிரம் போட்டாங்க,” என்ற பாலாமணி தனது இறுதி அஸ்திரத்தை விடுத்தாள்.

“நாம ஹனிமூனுக்குப் போனபோது நான் கேட்ட ஒரு விஷயத்தை நீங்க கடைசிவரைக்கும் மறந்துபோய் வாங்கியே தரலே. அது என்ன?”

“அப்பவே மறந்துபோனது இப்போ எப்படி ஞாபகத்துக்கு வரும்?” கிட்டாமணி பரிதாபமாகக் கேட்டார்.

“அவ்வளவுதான்!” கூச்சலிட்டாள் பாலாமணி. “இதுக்குமேலே ஒரு நிமிஷம் இங்கேயிருந்தாலும் கொலையே விழும். முதல்லே இங்கேயிருந்து போங்க!”

நொந்துபோய் வெளியேறிய கிட்டாமணியின் தோளில் சசிகுமார் போல கைபோட்டு ஆதரவாகப் பேசினார் இன்ஸ்பெக்டர்.

“விடுங்க கிட்டாமணி! அவங்களே வேண்டாம்னு சொன்னப்புறம் உங்களுக்கென்ன? கிட்டாதாயின் வெட்டென மற-ன்னு படிச்சதில்லையா?”

“இன்ஸ்பெக்டர்!” டாக்டர் வியந்தார். “உங்களுக்கு நாலடியார் கூடத் தெரியுமா?”

“யோவ் டாக்டர், நான் சொன்னது மூணே மூணு வார்த்தை. அது உங்களுக்கு நாலடியாரா? நல்லவேளை, குற்றாலக்குறவஞ்சியான்னு கேட்காம விட்டீங்களே?”

”மிஸ்டர் கிட்டாமணி,” டாக்டர் யோசனையோடு சொன்னார். “உங்களுக்கும் உங்க மனைவிக்கும் மட்டும் தெரிஞ்ச ஏதாவது ஒரு விசேஷமான சமாச்சாரத்தை ஞாபகப்படுத்திப் பாருங்களேன்.”

“யுரேகா!” கூவினார் கிட்டாமணி. “இன்னும் அரைமணி நேரத்துலே வர்றேன் டாக்டர்.”

கிட்டாமணி தலைதெறிக்க ஓடுவதை டாக்டரும் இன்ஸ்பெக்டரும் வியப்புடன் பார்த்தார்கள். கால்டாக்ஸிபோல காலதாமதம் செய்யாமல் பிட்சாவைப் போலக் குறித்த நேரத்தில் அரைமணி கழித்து வந்து சேர்ந்தார் கிட்டாமணி. அவரது கையில் ஒரு ஃப்ளாஸ்க் இருந்தது.

“மிஸ்டர் கிட்டாமணி, இந்த ஃப்ளாஸ்கிலே என்ன இருக்குது?”

“டாக்டர், இதைக் கொண்டுபோய் என் பாலாமணிக்கு ஊத்திக் கொடுங்க. அவளுக்கு உடனே ஞாபகம் வந்திடும்.”

இன்ஸ்பெக்டர் பேயறைந்தது போல் பார்த்துக் கொண்டிருக்க, டாக்டர் ஃப்ளாஸ்கை எடுத்துக் கொண்டு பாலாமணியின் அறைக்கு ஓடினார். அதுவரை முகத்திலிருந்த கவலையும் குழப்பமும் காணாமல்போய், கிட்டாமணி பெருமிதத்துடனும் பூரிப்புடனும் கைகளைக் கட்டியவாறு கம்பீரமாகப் போஸ் கொடுத்தபடி நின்றார். சில நிமிடங்கள் கழித்து….

“என்னங்க…?” என்று கூவியபடி பாலாமணி கிட்டாமணியைப் பார்த்துக் கைகளை நீட்டியவாறு ஓடிவந்தாள்.

“பாலா….” அன்பே வா படத்து எம்.ஜி.ஆர் மாதிரி கிட்டாமணியும் மனைவியை நோக்கி ஓடினார். இருவரும் கைகளைக் கோர்த்துக் கொள்ள, இருவரது கண்களிலிருந்தும் வாஷர் பழுதான வாட்டர் டாங்கரைப் போல நீர்ப்பெருக்கு ஏற்பட்டு தரையில் கொட்டியது.

“அந்த ஃப்ளாஸ்குலே என்ன டாக்டர் இருந்திச்சு?” இன்ஸ்பெக்டர் ஆர்வத்தை அடக்கமாட்டாமல் கேட்டார்.

“மிஸ்டர் கிட்டாமணி தன் கைப்பட தக்காளிரசம் வைச்சுக் கொண்டு வந்திருந்தாரு!” டாக்டர் நிம்மதிப் பெருமூச்சுடன் கூறினார்.

மனைவிக்கு மீண்டும் ஞாபகம் வந்த மகிழ்ச்சியில், டாக்டர் உலகப்பன் கொடுத்த பில்லை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தப் போனார் கிட்டாமணி. இன்ஸ்பெக்டரும் டாக்டரும் பாலாமணியை நெருங்கினார்கள்.

“மேடம்! ஒரு தக்காளி ரசத்தை வைச்சு அவர்தான் உங்க புருஷன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே? மிஸ்டர் கிட்டாமணியோட தக்காளி ரசம் என்ன அவ்வளவு ஸ்பெஷலா?”

“ஆமாம்!” ஆனந்தக்கண்ணீரைத் துடைத்தபடியே கூறினாள் பாலாமணி. “எப்பவாச்சும் எனக்கு உடம்பு சரியில்லேன்னா, அவர்தான் தக்காளி ரசம் வைச்சுக் கொடுப்பாரு. அப்படியொரு கேவலமான தக்காளி ரசத்தை என் புருஷனைத்தவிர வேறே எந்த ஆம்பிளையாலேயும் வைக்க முடியாது. ஃப்ளாஸ்கைத் திறந்தவுடனேயே இது என் புருஷன் வைச்ச ரசம்னு தெரிஞ்சிடுச்சு!”

”காட் இஸ் க்ரேட்! வாழ்க தக்காளி ரசம்!”

*******************************************************

Sunday, March 9, 2014

மனைவி குமைவதெல்லாம்...!


அன்று காலையிலிருந்தே மனைவி பாலாமணியின் முகம் பல மாதங்களாகத் துடைக்கப்படாத பாத்ரூம் பல்பைப் போல டல்லடித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தார் கிட்டாமணி. ஏற்கனவே தன் ஜாதகத்தில் ஏழரைச்சனி ஏகத்துக்கும் பீடித்திருந்ததால், அனேகமாக ஏ.டி.எம். செல்ல வேண்டிய அபாயமிருப்பதை உணர முடிந்தது. போதாக்குறைக்கு, டிவியில் ராசிபலன் சொன்ன புருடாபுரம் புண்ணியமூர்த்தி வேறு ’மீனராசிக்காரர்களின் வாயை உள்ளேயிருக்கும் சனிபகவான் உப்புமா போலக் கிண்டி வம்புச்சண்டையை வரவழைப்பார்’ என்று சொல்லித் தொலைத்திருந்ததால், மனைவியின் கோபத்துக்கு என்ன காரணம் என்று கேட்கவும் துணிவின்றி, பேப்பர் படிக்கிற சாக்கில் சோபா கண்ட இடமே சொர்க்கம் என்று அமர்ந்திருந்தார். மனைவி கோபப்படுமளவு தான் என்ன தவறைச் செய்து விட்டோம் என்ற சிந்தனையிலிருந்தவருக்கு, தான் வாசித்துக் கொண்டிருப்பது மனைவி மாவு சலிப்பதற்காக எடுத்துவைத்த போன மாதத்துச் செய்தித்தாள் என்ற சொரணையும் (வழக்கம்போல) இல்லாமல் போனது.

      சமையலறைக்குள் பாலாமணி செமகடுப்பில் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

      "ஊரு உலகத்திலே மத்த ஆம்பிளைங்கல்லாம் கீரை ஆய்ஞ்சு கொடுப்பாங்க; காய்கறி நறுக்கிக் கொடுப்பாங்க; சில பேரு வீட்டைக்கூடக் கூட்டிப் பெருக்குவாங்க. இவரும் இருக்காரே, வீட்டுக்கு வந்தாலும் ஆபீஸ் மாதிரியே ஒரு வேலையும் செய்யாம உசிரை வாங்கறாரு!"

      கிட்டாமணியின் வாய்க்குள்ளிருந்து சனிபகவான் கிசுகிசுத்தார்.

      "டேய் கிட்டாமணி! உன் பொஞ்சாதி சொல்றதைக் கேட்டியா? உனக்கு ரோஷம் வர்லே? உன் ரத்தம் கொதிக்கலே? மூளையிலே உறைக்கலே? நரம்பு புடைக்கலே? கண் சிவக்கலே?"

      "சும்மாயிரு பகவானே! திருநள்ளாறுலே பொழுதுபோகாம திருட்டு விசிடியிலே விஷால் படம் பார்த்தியா? புருஷனா லட்சணமா நானே சோபாவோட சோபாவா சும்மாயிருக்கேன். என்னை உசுப்பேத்தாதே! இந்த உடம்புலே கடைசிச்சொட்டு ரத்தமிருக்கிறவரைக்கும் ரோஷம்ங்கிற பேச்சுக்கே இடமில்லை!"

      பொதுவாக ஸைலண்ட் மோடில் வைத்த செல்போன்போல சத்தம்போடாமல் கிணுகிணுக்கும் பாலாமணி, ஸைலன்ஸர் இல்லாத மணல்லாரியைப்போலச் சத்தமாகப் பேசிவிடவே....

      "யாருகூடப் பேசிட்டிருக்கீங்களாம்?" சிலருக்கு பாம்புக்காது; பாலாமணிக்கோ அனக்கோண்டா காது.

      "யாருமில்லை!" என்று பதிலளித்த கிட்டாமணி சனிபகவானைக் கடிந்து கொண்டார். "வாயை மூடிட்டிருக்க மாட்டியா சனியே?"

      "என்னது?" அடுக்களையிலிருந்து பாலாமணி கூவியவாறு வெளிப்பட்டபோது, கிட்டாமணி கிடுகிடுமணியானார்.

      "என்னையா சனியேன்னு சொன்னீங்க?" பாலாமணியின் குரல், பா.ஜ.க.சார்பாக ’புதுப்புது அர்த்தங்கள்-ல் பங்கேற்கவந்த வானதி சீனிவாசனின் குரல்போல வலுத்தது. "உங்களுக்குப் பிடிக்குமேன்னு நான் கோதுமை தோசையும் கொத்துமல்லிச் சட்னியும் ரெடி பண்ணிட்டிருக்கேன். என்னைப் போயி...."

      "ஐயையோ! நீ தப்பா நினைச்சிட்டே!" பதறினார் கிட்டாமணி.

      "என்ன தப்பா நினைச்சேன்? போனவாட்டி கோதுமை தோசை பண்ணினபோது ஒரு டஜன் தோசையையும் கால் கிலோ சட்னியும் உள்ளே தள்ளினீங்களா இல்லையா?"

      "அதைச் சொல்லலை பாலாமணி! உன்னை நான் சனியேன்னு சொல்லலை," புருடாபுரம் புண்ணியமூர்த்தியின் ஜோசியம் பலித்ததை உணர்ந்து கதறினார் கிட்டாமணி. "சனியைச் சனியேன்னுதானே கூப்பிடணும்?"

      "திரும்பத் திரும்பச் சொல்றீங்களே! இதென்ன சனியாயம்...ச்சீ! கோபத்துலே வாய் குளறுது. இதென்ன அநியாயம்?"

      "பாலாமணி! இதுக்கு முன்னாடி உன்னை நான் எப்பவாச்சும் சனியேன்னு திட்டியிருக்கேனா?"

      "ஓஹோ! இப்படியொரு ஆசையை இத்தனை நாளா மனசுலே வச்சிட்டிருந்து அதை இன்னிக்கு நிறைவேத்திக்கிட்டீங்களா?"

      "பாலாமணி! நீ அரைச்ச கொத்துமல்லிச் சட்னி மேலே சத்தியமாகச் சொல்றேன். சத்தியமா உன்னை நான் சனியேன்னு சொல்லலை. இத்தனை வருசம் என்னோட குப்பைகொட்டியுமா உனக்குத் தெரியலே? அவ்வளவு தைரியமெல்லாம் எனக்கு எப்பவாச்சும் இருந்ததுண்டா?"

      கிட்டாமணி சட்டைபோட்ட சரண்யா போல உருக்கமாகப் பேச, பாலாமணிக்கு உண்மையிலேயே தன்னை அவர் சனியே என்று அழைத்திருக்கவில்லை என்று புரிந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தனது குமுறலைக் கொட்டித் தீர்க்க முடிவு செய்தாள்.

      "சரி சரி! வெள்ளிக்கிழமை விசயத்தை நீங்க சொதப்பின கடுப்புலே இருந்தேனா? அதான் என்னைத் திட்டினீங்களோன்னு சந்தேகம் வந்திருச்சு!"

      "வெள்ளிக்கிழமை விசயமா?" கிட்டாமணி குழம்பினார். "என்ன அது? நான் என்ன சொதப்பினேன்?" தன் வாழ்க்கையில் திருமணம் செய்துகொண்டது தொடங்கி பல விஷயங்களில் தான் சொதப்பியிருந்ததால், எந்த சொதப்பலைப் பற்றி பாலாமணி குறிப்பிடுகிறாள் என்பது அவருக்கு விளங்கவில்லை.

      "போன வெள்ளிக்கிழமை என்ன விசேஷம்னு தெரியாதா உங்களுக்கு?"

      "ஏன் தெரியாது? சுவாதி நட்சத்திரம்; சந்திராஷ்டமம்; ஸப்தமி; காலையிலே பத்தரையிலேருந்து பன்னிரெண்டு மணிவரைக்கும் ராகுகாலம்."

      "முக்கியமான விசயத்தை விட்டுட்டீங்களே?"

      "வேறேன்ன முக்கியமான விசயம்? அட ஆமாம்! அன்னிக்கு மேல்நோக்கு நாள்! நான்கூட ஆபீஸ்லே ஒரு வேலையும் பண்ணாம மோட்டையே வெறிச்சுப் பார்த்திட்டிருந்தேன்."

      "க்கும்! மத்த நாள்லே மட்டும் என்னத்தைப் பண்ணுறீங்களாம்? நான் அதைக் கேட்கலை. அன்னிக்கு உலக மகளிர் தினம். தெரியுமா?"

      "தெரியுமே! எங்க ஆபீஸ் அட்டெண்டர்கூட ’ஆண்களே, நீங்க நாசமாப் போவீங்க; உருப்படாமப் போவீங்க; வெளங்காமப் போவீங்க’ன்னு பெண்களுக்கு வாழ்த்துக்கவிதை எழுதி பேஸ்புக்-லே போட்டிருந்தானே?"

      "பார்த்தீங்களா? ஒரு அட்டெண்டருக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சிகூட அக்கவுண்டண்ட் உங்களுக்கு இல்லையே?"

      "பாலாமணி, நான் எழுதற கணக்கே புரியலேன்னு ஆடிட்டர் தலையைப் பிய்ச்சுக்கிறாரு. இதுலே கவிதை வேற எழுதணுமா?"

      "உங்க பால்ய சினேகிதர் பஞ்சாட்சரம் அன்னிக்கு என்ன பண்ணினாரு தெரியுமா?"

      "ஐயோ பாவம்! அவனே எதையோ பார்த்து பயந்திருக்கான்னு தோணுது. அவனை குணசீலத்துக்கோ சோட்டாணிக்கரைக்கோ சீக்கிரமாக் கூட்டிட்டுப் போகணும். இல்லாட்டி அனேகமா அவன் ஆம் ஆத்மி கட்சியிலே சேர்ந்தாலும் சேர்ந்திருவான்."

      "அதில்லீங்க! அவரு வெள்ளிக்கிழமையன்னிக்கு கேஷுவல் லீவு போட்டு வீட்டுலே இருந்து, மூணு வேளையும் தன் கைப்பட சமையல் பண்ணிக் கொடுத்திருக்காரு!"

      "அப்போ சனிக்கிழமையன்னிக்கு சத்தியமா ஸிக்-லீவ் போட்டிருப்பான்!"

      "இப்படியே நக்கல் பண்ணிட்டிருங்க!" பாலாமணி சலித்துக் கொண்டாள். "அவரை விடுங்க. எதிர்வீட்டு சோமயாஜுலு உங்க சினேகிதர்தானே? தன் மனைவிக்கு ஸாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்திருக்காரு தெரியுமா?"

      "போனாவது ஸ்மார்ட்டா இருக்கட்டுமேன்னு வாங்கிக் கொடுத்திருப்பான். விடு!"

      "இந்த மாதிரி நல்ல ஆம்பிளைங்களை டிவி சீரியல்லே கூடப் பார்க்க முடியாது. நீங்களும் இருக்கீங்களே? அன்னிக்கு ஒரு வென்னீராவது போட்டுக் கொடுத்தீங்களா?"

      "எதுக்கு வென்னீர் போடணும்? வழக்கம்போல அன்னிக்கும் நீ ரெண்டு டோஸ் காப்பி குடிச்சியே?"

      "வாயை மூடுங்க! எனக்கு ஸ்மார்ட் போனெல்லாம் வேண்டாம். ஸிம்பிளா ஒரு புது போன் வாங்கித் தந்திருக்கலாமே?"

      "ஏன்? இப்போ இருக்கிற செட் நல்லாத்தானே இருக்கு?"

      "போதுமே! மத்தவங்க பேசறது எனக்குக் கேட்க மாட்டேங்குது. நான் பேசறது மத்தவங்களுக்குக் கேட்க மாட்டேங்குது."

      "அதுனாலேதான் நல்லாயிருக்குன்னு சொன்னேன்."

      "எரிச்சலைக் கிளப்பாதீங்க!" பாலாமணி சீட்டுக் கிடைக்காத உதிரிக்கட்சிப் பிரமுகர்போலப் பொரிந்தாள். "மத்த நாளிலே எப்படியோ, வருசத்துலே ஒரு நாள், வீட்டுலே இருக்கிற பொம்பளைக்கு ஒத்தாசையா இருப்போம்னு தோணிச்சா? ஜெயா டிவியிலே திருவிளையாடல் படம் பார்த்தீங்களே? அதுலே ’ஆணும் பெண்ணும் சமம்’னு சிவன் பார்வதிகிட்டே சொன்னதைக் கவனிச்சீங்களா?"

      "இல்லை; சிவன் பார்வதியைப் பொசுக்கினதைத்தான்  நான் கவனிச்சேன்!"

      "உங்ககூட பேசறதே வேஸ்ட்டு!" பாலாமணி அங்கிருந்து நகர்ந்தாள்.

      கிட்டாமணிக்கு பஞ்சாட்சரம், சோமயாஜுலு இருவர் மீதும் கடுப்பாக இருந்தது. செல்போனை எடுத்து பஞ்சாட்சரத்தின் நம்பரை அழுத்தவும், அவரது சகதர்மிணி மறுமுனையில் பேசினாள்.

      "ஹலோ! பஞ்சு இல்லையா?"

      "இன்னிக்கு சண்டேயில்லையா? குளிச்சிட்டிருக்காரு!"

      "அப்போ சண்டேக்கு சண்டேதான் குளிக்கிறானா?"

      "ஐயையோ! சண்டேங்கிறதுனாலே லேட்டா எழுந்திரிச்சு லேட்டா குளிச்சிட்டிருக்காருன்னு சொல்ல வந்தேன்."

      "சரி, குளிச்சிட்டு வந்ததும் என்கிட்டே பேசச்சொல்லுங்க. ஹலோ, சண்டேங்கிறதுக்காக லேட் பண்ணாம உடனே பேசச் சொல்லுங்க."

      எரிச்சலுடன் சோமயாஜுலுவுக்கு போன் செய்தார் கிட்டாமணி.

      "ஹலோ கிட்டாமணி! சொல்லுடா!"

      "டேய் சோமு! என்னடா சினேகிதன் நீ? விமன்ஸ் டே விஷயம்பத்தி எனக்கு ஒரு போன் பண்ணக்கூடாதாடா?"

      "விமன்ஸ் டே-க்கு உனக்கு ஏண்டா போன் பண்ணனும்? நீ ஏதாவது ஆபரேஷன் பண்ணிக்கிட்டியா?"

      "அடேய், உன் சம்சாரத்துக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தியாமே? அது என் சம்சாரம் காதுக்கு எட்டி அவ என்னைக் கடுப்பேத்திட்டிருக்காடா! எனக்கு ஒரு தகவல் சொல்ல மாட்டியா?"

      "என்ன விளையாடறியா? என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிக் கொடுக்கிறதுக்கு உன்கிட்டே எதுக்குடா பர்மிஷன் வாங்கணும்?"

      "அந்த அர்த்தத்துலே கேட்கலைடா! அந்த ஐடியாவை என்கிட்டேயும் சொல்லியிருக்கலாமில்லே? நானும் எதையாவது பண்ணி என் சம்சாரத்தைக் குஷிப்படுத்தியிருப்பேனே?"

      "டேய், இதையெல்லாம் போனிலே சொல்ல முடியாது. சாப்பிட்டதும் தம்மடிக்க வருவேல்லே. அப்போ பேசலாம். வரும்போது பஞ்சுவையும் கூட்டிட்டு வந்திடறேன். சரியா?"

      மதியம் தெருமுனைக்கடையில் கிட்டாமணி, சோமயாஜுலு, பஞ்சாட்சரம் மூவரும் ஆளுக்கு ஒரு ரெண்டு ரூபாய் சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

      "என்னங்கடா திடீர்னு ரெண்டு பேரும் பொஞ்சாதிக்கு ஒத்தாசையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க? ஒருத்தன் சமையல் பண்ணறான்; இன்னொருத்தான் ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்கிறான். நல்லாத்தானேடா இருந்தீங்க, ஏதாச்சும் காத்து கருப்பு பட்டிருச்சா?" கிட்டாமணி பொரிந்து தள்ளினார்.

      "கிட்டாமணி!" பஞ்சாட்சரம் உறுமினார். "உனக்கு அறிவே கிடையாதா? அன்னிக்கு நான் பண்ணினது ஒரு சூப்பர் ட்ரிக் தெரியுமா? சனி, ஞாயிறு வந்தாலே போதும்; என் சம்சாரம் புலம்ப ஆரம்பிச்சிடுவா. மத்த வீடுகள்லே புருஷனுங்க சமையல்கூடப் பண்ணுறாங்க. நீங்க ஒரு நாளாவது எனக்குக் கூடமாட உதவி பண்ணியிருக்கீங்களான்னு ஒரே நச்சரிப்பு."

      "அதுக்காக, அடுக்களைக்குள்ளே போயி சமையல் பண்ணிடறதா? உனக்கு சமையல் தெரிஞ்சிருக்குன்னுறதுனாலே பண்ணிட்டே! என்னை மாதிரி ஆளுங்க என்ன பண்ணறதாம்?" கிட்டாமணி குமுறக்கேட்டு சோமயாஜுலுவும் ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினார்.

      "எனக்குச் சமைக்கத் தெரியும்னு யாருடா சொன்னா?" சிரித்தார் பஞ்சாட்சரம். "சமையல் பண்ணறேன்னு உள்ளே புகுந்து ரெண்டு மூணு பாட்டிலை உடைச்சேன். எவர்சில்வர் பாத்திரம், இலுப்புச்சட்டியைக் கருக விட்டேன். சாம்பாருலே உப்பை அள்ளிக் கொட்டினேன். கச்சாமுச்சான்னு கண்றாவியா ஒரு சமையலைப் பண்ணினேன். அன்னிக்கு ராத்திரி என் சம்சாரம் ரோஸ்மில்க் மாதிரி ஜெலூஸிலை ஒரு கிளாஸ் முழுக்க ஊத்திக்குடிச்சான்னா பாரேன். கடைசியிலே அவ என்ன சொன்னா தெரியுமா? ’இத பாருங்க, இன்னிக்குப் பண்ணினது போதும். இனிமே அனாவசியமா சமையலறைப் பக்கமே நீங்க வரவேண்டாம். நீங்க படற கஷ்டத்தை என்னாலே பார்க்கவே முடியலே’ன்னு சொல்லிட்டா. இனிமே சமையல் செய்ய ஒத்தாசை பண்ணலேன்னு புலம்புவாளா? நான்பாட்டுக்கு ஹாயா டிவியிலே கிரிக்கெட், நியூஸ் பார்த்துக்கிட்டு ஜாலியா இருப்பேனில்லே?"

      "அடப்பாவி! நீ இவ்வளவு புத்திசாலியா?" கிட்டாமணி அசந்தார்.

      "அதானே, கிட்டாமணியோட பால்யசினேகிதனா இருந்தும் எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்கே பஞ்சு?" என்று கொஞ்சம் ஓவராகவே வியந்தார் சோமயாஜுலு.

      "அடேய் சோமு, அவனாவது சமையல்னு ஒரு கண்றாவியைப் பண்ணி வீட்டுக்காரி வாயை அடைச்சிட்டான். உன்னை யாருடா ஸ்மார்ட் போனெல்லாம் வாங்கிக் கொடுக்கச் சொன்னது? நீயும் இதெல்லாம் சூப்பர் ட்ரிக்னு சொல்லப்போறியா?" எரிந்து விழுந்தார் கிட்டாமணி.

      "இல்லையா பின்னே?" சிரித்தார் சோமயாஜுலு. "வெள்ளிக்கிழமை புது போன் வாங்கிக் கொடுத்தேன். சனிக்கிழமையன்னிக்கு அதைக் காட்டறதுக்காக அம்மா வீடு, அக்கா வீடு, பெரியம்மா வீடுன்னு ஒரு ரவுண்டு போயிட்டு சாயங்காலம்தான் வீட்டுக்குத் திரும்பிவந்தா. நேத்து ஜாலியா ரெண்டு பீர் குடிச்சிட்டு, டிவிடியிலே சன்னி லியோன் படமெல்லாம் போட்டுப் பார்த்துட்டு பொழுதைப் போக்கினேன். நேத்து பீச்- தாம்பரம் லைன்லே சுத்திட்டு வந்தாளா? இன்னிக்கு பீச்-வேளச்சேரி லைன்லே ஒரு ரவுண்டு போகப்போறா. இன்னிக்கு ரெண்டு கொரியன் படத்தோட டிவிடி பார்க்கப்போறேன். வீட்டுலே சம்சாரம் இல்லாம ரெண்டு நாள் கிடைக்கிறதுன்னா சும்மாவாடா?"

      "சே! என்கிட்டே சொல்லியிருந்தா நானும் இந்த மாதிரி எதையாவது பண்ணி, என் சம்சாரத்தைக் குஷிப்படுத்துறா மாதிரி செமயா ஏமாத்தியிருப்பேனேடா!" கிட்டாமணி கூட்டணியில் சீட் கிடைக்காத உதிரிக்கட்சித் தலைவரைப் போல விரக்தியுடன் பேசினார்.

      "கிட்டாமணி! உனக்கெல்லாம் சாமர்த்தியமே போதாதுடா!" என்று பஞ்சாட்சரம் சொல்லிச் சிரிக்க, சோமயாஜுலுவும் சேர்ந்து சிரித்தார்.

      "சிரிக்கறீங்களா?" கிட்டாமணி கிளைமேக்ஸ் காட்சியில் வீறுகொண்டெழும் தெலுங்குப்பட ஹீரோவைப் போலச் சூளுரைத்தார். "அடுத்த மகளிர் தினத்துக்கான பரிசை இன்னிக்கே முடிவு பண்ணி வாங்கிக்கொடுத்து அசத்தறேன் பாருங்கடா!"

     சூளுரைத்த சூட்டோடு வீடு திரும்பிய கிட்டாமணி, டிவியில் மனைவி லயித்திருப்பதைக் கவனித்தவாறே சோபாவில் அமர்ந்தார். இவளுக்கு என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாம்? அவரது யோசனையை பாலாமணியின் குரல் கலைத்தது.

      "ஏங்க, இந்த அமலா பாலுக்கு ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் ரொம்ப நல்லாப் பொருந்துது இல்லே?"

      யுரேகா!

      "பாலாமணி!" கிட்டாமணி திருவாய்மலர்ந்தருளினார். "அடுத்த விமன்ஸ் டே-க்கு உனக்கு நான் என்ன வாங்கித் தரப்போறேன் தெரியுமா?"

      பாலாமணி இன்ப அதிர்ச்சியுடன் திரும்பி கணவனை ஏறிட்டாள்.

      "ஜீன்ஸ் பேண்ட்டும் டி-ஷர்ட்டும்...!"

      சில நொடிகள் கழித்து...

      வீடு திரும்பிக் கொண்டிருந்த பஞ்சாட்சரமும் சோமயாஜுலுவும் கிட்டாமணி வீட்டு வாசலைக் கடந்தபோது சட்டென்று நின்றனர்.

      "டேய் பஞ்சு! என்னடா கிட்டாமணி வீட்டுக்குள்ளேயிருந்து கும்கும்ன்னு ஒரே சத்தமாயிருக்கு?"

*****************