Wednesday, January 27, 2010

தவம்

போகுமிடமெங்கும்
பொறுமையுடன் காத்திருப்பதாய்
நாளும் நடித்தபடி
காதலர்கள் காத்திருக்கிறார்கள்
எப்போதோ நான் இருந்த
வெயில்விரதங்களுக்கு
விளக்கமளித்தபடி...!

நேற்றுப்போலவே இன்றும்
காத்திருந்த கணங்களை கழித்துவிட்டு
கனவில் சந்திப்போமென
காரிருளில் காணாமல் போகிறார்கள்

தனிமையின் இருட்டில்
குமுறும் நெஞ்சத்தினுள்
குச்சியொன்றினைக் கொளுத்தி
கோபத்தில் சில நிமிடங்கள்
குளிர்காய்கிறார்கள்

அவளாய் அழைக்கும்வரை
தீண்டமாட்டேன் உன்னையென
கைபேசியிடம் கடிந்துகொள்கிறார்கள்

ஆனால்...

இந்த
திருநீலகண்டர்களின் திமிர்
அடுத்த நாளின் விடியலில்
அனாதையாகி விடுகிறது

பள்ளிச்சிறுமியின் தலையில்
பளிச்செனச் சிரித்த
ஒற்றை ரோஜாவைப் பார்த்ததும்
சினத்தைத் துறந்த ராஜரிஷிகள்
மேனகைக்கு
கூச்சத்தை விட்டு
குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்

No comments: