Sunday, December 8, 2013

போனால் போகட்டும் போடா




போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

வைப்பது சிலைகள் நோவது தலைகள்
லாபம் எவர்க்கும் கிடையாது
வைகிற பேரின் வாய்க்கு அவல்-இந்த
வாதம் எதற்கோ புரியாது
ஊரில் ஆயிரம் கோளாறு-அதை
உடனே தீர்க்கும் ஆள்யாரு?-வெறும்
உருவச்சிலைக்கா தகராறு?

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

இறந்தும் நெஞ்சினில் வாழ்கின்றான்-சிலை
இல்லையென்றே அவன் அழுதானா?
இருக்கும் சிலைகள் படுகிறபாட்டை
க்கும் கேட்டே தொழுதானா?
காக்கைகளாலே நாள்தோறும்-சிலை
கழிவினில் ஊறி தினம்நாறும்-மழை
கடும்வெயில் தாங்கி நிறம்மாறும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

நடிகர்கள் வருவார் நடிகர்கள் போவார்
இவன்போல் ஒருவன் வருவானா?
நரம்பும் சதையும் உள்ளமும் இணைத்தே
திலகம் எனும்பேர் பெறுவானா?
இதற்கும் மேலே சிலையெதற்கு?-இங்கு
இன்றும் அவனின் கலையிருக்கு-எங்கள்
சிங்கத்தை நாளும் நினைப்பதற்கு

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

Sunday, November 24, 2013

காலத்தை வென்றவன் நீ!




சச்சினின் இறுதி டெஸ்ட் போட்டியை நேரலையில் காணுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அன்றுமுதல் இன்றளவிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடர்ந்து அந்த நெகிழ்ச்சியான தருணங்களைத் தொடர்ந்து பலமுறை காண நேரிடுகிறது. சச்சின் குறித்த எனது சில விமர்சனங்கள் இந்த உருக்கத்தில் காணாமல் போய் விடவில்லை என்றாலும் அவற்றை மீண்டும் குரூரமாக நினைவுபடுத்திப் பார்க்க இது பொருத்தமான நேரமல்ல. நமது அபிமானத்துக்குரியவர்களின் சிற்சில சறுக்கல்களை பல சமயங்களில் மறந்துவிட்டதுபோல ஒரு பாசாங்காவது செய்து, புன்னகையுடன் அவர்களுடன் கைகுலுக்குவதுபோல, இருபத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியக் கிரிக்கெட்டுடன் இரண்டறக்கலந்து நாம் கொண்டாடி மகிழ பல குதூகலமான தருணங்களை அளித்த சச்சினுக்கு நன்றிகளையும், அவரது எதிர்காலம் அமைதியுடன், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளையும் தெரிவிக்க வேண்டிய கடமை, கிரிக்கெட் அபிமானிகள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது; எனக்கும் இருக்கிறது.

      பெரும்பான்மை இந்தியர்களின் இளமையில் பொதுவான சில அம்சங்கள் இருப்பது வழக்கம். இவரோடு ஒருமுறை கைகுலுக்க வேண்டும் என்று அண்ணாந்து பார்க்கிற ஒரு அரசியல் தலைவர்; இவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏங்க வைக்கிற  ஒரு திரைப்பட நடிகர்; இவரை ஒரு முறையாவது தொட்டுப்பார்க்க வேண்டும் என்று பெருமூச்சு விடவைக்கிற ஒரு கனவுக்கன்னி நடிகை; இவரைப் போல நாமும் விளையாட வேண்டும் என்று பேராசைப்பட வைக்கிற ஒரு கிரிக்கெட் வீரர். கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த அற்ப ஆசைகள் அனைத்துக்கும் ஒவ்வொருவரின் இளமையிலும் ஒரு முக்கியமான இடம் உண்டு. அத்தகைய சின்னப்புள்ளைத்தனங்கள் எல்லாரையும் போலவே எனக்கும் இருந்ததுண்டு; அவற்றில் சில இன்றளவிலும் இருக்கிறது என்பதும் உண்மையே! வயது, வளர்ப்புமுறை, குடும்பப்பின்புலம், கல்வி, வாழ்ந்த இடம் என்று பல மாறுபட்ட காரணங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலானோரிடம் பொதுவாகக் காணப்படுகிற இந்த ஒரு சில அம்சங்கள் பல நட்புக்களுக்கும் கூட வித்திடுவதுண்டு.

      அட, நீங்களும் சச்சின் விசிறியா? கைகொடுங்க!

      மும்பையில் குப்பைகொட்டிய காலத்தில் சச்சின் மீது ஏற்பட்ட அபிமானம், தென்னிந்தியர்கள் என்றால் சற்றே அசூயையுடன் பார்க்கிற பல மராட்டியர்களுடன் எனக்கிருந்த தொடர்பை நட்பாகப் பரிமளிக்கச் செய்தது. கிரிக்கெட் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது என்று சிலர் சொல்வதை முழுக்க முழுக்க பிதற்றல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது என்றுதான் அந்த அனுபவங்கள் உணர்த்தின.

      ஒரு விதத்தில் சச்சினின் வருகை, கபில்தேவ்-காவஸ்கர் என்று பிளவுபட்டுக் கிடந்த கிரிக்கெட் ரசிகர்களை, பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் ஒருமைப்படுத்தியது என்றுகூட சொல்லலாம். (மீதமுள்ள காலம்பற்றி இப்போது பேச வேண்டாம்!)

      இந்தியாவில் வெற்றியின் உச்சத்துக்குச் செல்பவர்களை முன்மாதிரியாகக் கொள்வதென்பதெல்லாம் வர்ணனையாளர்களின் பேராசை மட்டுமே என்றுதான் கருதுகிறேன். பெரும்பாலானவர்களுக்கு, அவர்கள் சினிமா ரசிகர்களாக இருந்தாலும் சரி; கிரிக்கெட் ரசிகர்களாக இருந்தாலும் சரி கொண்டாடுவதற்கு ஒரு வானளாவிய தனிமனிதன் தேவைப்படுகிறான். அப்படி நேர்கிறபோது அவனது நெடிய நிழலில் இருப்பதில் அற்பசுகம் காணுவதும் இளமைக்காலங்களின் இன்னோர் தவிர்க்க முடியாத அம்சமாகி விடுகிறது. ராஜேஷ் கன்னாவின் காரில் லிப்ஸ்டிக் பதித்த பெண்களாகட்டும்; சந்தீப் பாட்டீலின் அறையை முற்றுகையிட பெண்களாகட்டும்; அல்லது குஷ்புவுக்குக் கோவில் கட்டிய ரசிகர்களாகட்டும்; இன்றளவிலும் பெரிய நடிகர்களின் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்கிறவர்களாகட்டும். அனைவருமே தங்களுக்குப் பிடித்தமானவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, அவர்களது வாழ்க்கையிலிருந்து பாடம்பெற்று, அதை முன்னெடுத்துச் சென்று அதே வெற்றியை நாமும் அடைய வேண்டும் என்றெல்லாம் எண்ணியவர்கள் அல்லர். அவர்களுக்கு தங்களது நாயகர்கள் அல்லது நாயகியரின் வெற்றியும் புகழும் ஒரு வினோதமான மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அளித்தது. விதிவிலக்காக, ‘இவரைப் போல நாமும் ஆக வேண்டும்என்று இளைஞர்களை உந்துவித்த, பேராசைப்பட வைத்த, டாக்டர் அப்துல் கலாம் போன்ற சில பிரபலங்கள் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சச்சின் தெண்டுல்கர்.

      கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் நான் ஒரு பழமைவாதி. வானொலியில் பாதி ஆங்கிலத்திலும், பாதி (அப்போது புரியாத)  இந்தியிலும் வர்ணனை கேட்டு வளர்ந்தவன். அதன்பிறகு, தூரதர்ஷனின் அழிச்சாட்டியத்தில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளை முக்கால்வாசி மட்டுமே காணமுடிந்த ஒரு காலத்தில், ஒரு 14 அங்குல டெக்ஸ்லா கருப்பு-வெள்ளை டிவியில் கண்டு பிறவிப்பயனை எய்த தலைமுறையைச் சேர்ந்தவன். 20-20 போன்ற மசாலாக்கள் எல்லாம் கிரிக்கெட்டை ஃபாஸ்ட்-ஃபுட் போலக் கொன்றுவிடும் என்று நம்புகிறவன். ஒவ்வொரு கட்டத்திலும் கிரிக்கெட் கண்ட மாற்றங்களுக்கெல்லாம் சாட்சிகளாக இருந்ததில், இருப்பதில் பெருமையடைகிற ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன். அந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் நிச்சயமாக காலத்தை வென்றவன் தான்!

      சற்றே உணர்ச்சிவசப்பட்டு, அளவுக்கதிகமாகப் புகழப்படுவதிலிருக்கும் மிகைகளை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், சச்சின் தெண்டுல்கருடன் நாமும் பயணித்ததுபோல, அவரது வெற்றிகளை, தோல்விகளை, உச்சங்களை, கண்ணீரை அருகாமையிலிருந்து பார்த்ததுபோன்ற ஒரு அன்னியோன்னியம் இருப்பதாக உணர முடிகிறது. தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, இங்கிலாந்து திரும்பி, உலகக்கோப்பை ஆட்டத்தில் சதமடித்து, விண்ணை அண்ணாந்து நோக்கி சச்சின் கண்கலங்கியபோது, எனது சொந்தங்களில் ஒருவருக்கு ஏற்பட்ட துயரில் பங்கேற்பதுபோல எனக்கும் கண்கள் நீர்த்தன. மேற்கு இந்தியத் தீவில் நடந்த உலகக்கோப்பையில் படுமோசமாக ஆடிய இந்திய அணியின் தோல்வியைப் பார்த்து, பெவிலியனில் இருந்தவாறு சச்சின் கண்ணீர் சிந்தியபோது, அது எனது கண்ணீர் என்று தோன்றியது. இறுதியாக இந்தியாவுக்காக ஆடிவிட்டு, வான்கெடே மைதானத்திலிருந்து சச்சின் கண்ணீர்மல்க கிளம்பியபோது ‘வி வில் மிஸ் யூ சச்சின்!என்று தன்னையறியாமல் வாய் முணுமுணுத்தது.

      இந்தியக்கிரிக்கெட்டைப் புரட்டிப்போட்ட இரண்டு தருணங்கள் என்று சொல்ல வேண்டிவந்தால், 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதையடுத்து, சச்சின் தெண்டுல்கரின் வருகையென்று நிச்சயமாகக் கூறுவேன். இந்த இரண்டு நிகழ்வுகளுமே கிரிக்கெட்டில் ஏற்படத் தொடங்கியிருந்த சில தலைமுறை மாற்றங்களின் அடையாளக்குறிகள்! இவை இரண்டுமே இந்தியாவைக் கிரிக்கெட்டின் வல்லரசாக மாற்றிய அற்புதத்தை நிகழ்வித்த திருப்புமுனை சம்பவங்கள்.

      இந்தியாவும் பாகிஸ்தானும் அவரவர் மாமியார்களை அனுப்ப வேண்டிய நாடுகள்என்று இயன் போத்தம் இன்னோரன்னார் இகழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்த நிலையை மாற்றி, ஜெஃப்ரி பாய்காட், ஜாஹீர் அப்பாஸ், பில் லாவ்ரி, ரிச்சர்ட் ஹாட்லீ, டோனி கோஸியர் போன்ற நிரந்தர இந்திய துவேஷிகளுக்கு சில்லறை ஆசை ஏற்படுத்தி, அவரவர் கைகளில் ஒரு மைக்கைக் கொடுத்து கொச்சிக்கும், கட்டாக்குக்கும் அலைய வைத்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்த நிகழ்வுகள்! இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்களில் விரல்விட்டு ஆட்டுகிற அடாவடித்தனத்தை இந்தியா செய்ய முடிவதற்கு 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றியும், தெண்டுல்கர் என்ற இளம்புயலின் வரவும் உதவியதுபோல வேறெதுவும் உதவவில்லை. லார்ட்ஸ் மைதானத்தின் ஒரு குளிரூட்டப்பட்ட அறையிலிருந்துகொண்டு, கிரிக்கெட் உலகைக் குற்றேவல் செய்துகொண்டிருந்த இங்கிலாந்தை ஒப்புக்குச் சப்பாணியாக்கி ஓரங்கட்டிய பெருமையை இந்தியத் துணைக்கண்டத்துக்கு அளித்ததில், சச்சின் ரமேஷ் தெண்டுல்கரின் வருகையும், வெற்றியும் ஒரு முக்கிய திருப்புமுனை என்று அடித்துச் சொல்லலாம்.

      சுனில் காவஸ்கர் சிறந்த பேட்ஸ்மேன்; ஆனால், ஜாஹீர் அப்பாஸும் கிரேக் சேப்பலும் அவரைவிட சிறந்தவர்கள். கபில்தேவ் சிறந்த பந்துவீச்சாளர்தான்; ஆனால், அவரை விட ரிச்சர்ட் ஹாட்லியும் இம்ரான் கானும் சிறந்தவர்கள். சையத் கிர்மானி சிறந்த விக்கெட் கீப்பர்தான்; ஆனால், ஜெஃப் டூஜானும் ரோட்னி மார்ஷும் அவரைவிட சிறந்தவர்கள் இப்படியெல்லாம் இந்தியாவின் திறமையான வீரர்கள் பெரும்பாலும் மட்டம்தட்டப் பட்டு வந்த காலத்தில்தான், பழையன கழிந்து புதியன புகுந்த தொண்ணூறுகள் இந்தியக் கிரிக்கெட்டில் தனது வியத்தகு மாற்றங்களை வெளிப்படுத்தின. தொடர்ந்து முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த முகமது அஜாருதீன் போன்றவர்கள், பழம்தின்று கொட்டைபோட்ட காவஸ்கர், விஸ்வநாத், மதன்லால், அமர்நாத், கீர்த்தி ஆசாத் போன்ற தலைமுறையினரின் தோள்களுடன் உராய்ந்தபடி கிரிக்கெட் ஆடத் தொடங்கினர். கிரிக்கெட்டுக்கு ரசிகைகளையும் பெருக்கிய ரவி சாஸ்திரி போன்ற சாக்லெட் பையன்கள் புகுந்தனர். 83 உலகக்கோப்பை வெற்றியும் ஆசிய விளையாட்டுப்போட்டியின் புண்ணியத்தால் தேசம் முழுவதும் அத்தியாவசியப் பொருளாக மாறிப்போன தொலைக்காட்சிப் பெட்டிகளுமாகச் சேர்ந்து, செய்தித்தாள்களில் கருப்பு வெள்ளைப்படங்களாகக் காட்சியளித்து வந்த கிரிக்கெட் வீரர்களை, கந்தர்வபுருஷர்களாக வீட்டின் வரவேற்பறையில் உலவ விட்டன. தூரதர்ஷனின் கொட்டம் அடங்கி, தனியார் தொலைக்காட்சிகள் துளிர்விட ஆரம்பித்ததும், சினிமாவுக்கு நிகராக இருந்த கிரிக்கெட் மோகம் சினிமாவையும் மிஞ்சியது. யுகம் மாற மாற, இந்தியக் கிரிக்கெட்டின் தரமும் மெல்ல மெல்ல மாறியது. பிஷன்சிங் பேடி, எம்.எல்.ஜெய்சிம்ஹா,  நவாப் பட்டோடி, டாக்டர் நரோத்தம் பூரி ஆகியோரின் கொட்டாவி வர்ணனைகளுக்குப் பதிலாக ஹென்றி ப்ளோஃபெல்ட், டானி க்ரேக், இயன் சேப்பல், ஹர்ஷா போகலே போன்ற தேர்ந்த வர்ணனையாளர்கள் கிரிக்கெட் வர்ணனையின் இலக்கணங்களைக் கிழித்துப்போட்டு, புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தனர். ஆட்டத்தை மட்டுமே படம்பிடித்துக் கொண்டிருந்த கேமிராக்கள், பார்வையாளர்களின் உற்சாகத்தையும், ரசிகைகளின் காதணிகளையும், பால்கனியில் அமர்ந்திருந்த பாலிவுட் நட்சத்திரங்களையும், நிழலுலக தாதாக்களையும் படம்பிடித்துக் காட்டின. கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமின்றி, கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் சில ஜிகினா வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. தென் ஆப்பிரிக்காவில் உலகக்கோப்பைப் போட்டி நடைபெற்றபோது ஆட்டத்தைக் காண்பதற்கு இருந்த அதே ஆர்வம், மந்திரா பேதியைப் பார்ப்பதற்கும் ஏற்பட்டது அல்லது ஏற்படுத்தப்பட்டது. BTW, where is she?

      ப்ரையன் லாராவின் வரவினால் மேற்கு இந்தியத் தீவுகளிலோ, இன்ஜமாம் உல்-ஹக்கினால் பாகிஸ்தானிலோ, ரிக்கி பாண்டிங்கினால் ஆஸ்திரேலியாவிலோ நிகழாத மாற்றம், சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் என்ற பொடியனால் இந்தியாவில் ஏற்பட்டது என்றால் அதை அவரது கொடூரமான விமர்சகர்களாலும் மறுக்க முடியாது. இன்றைய நிலையில், சச்சின் என்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ஓய்வுபெற்ற நிலையில், அவரது ஆட்டம் குறித்த புள்ளி விபரங்கள், அவரது பலவீனங்கள் என்று கருதப்படுகிற சில அலட்சியப்படுத்த முடியாத சறுக்கல்கள், ஒப்பீடுகள் என அனைத்தையும் தாண்டி, மற்ற எவரும் ஏற்படுத்த முடியாத ஒரு வெற்றிடத்தை சச்சின் ஏற்படுத்திச் சென்றிருப்பது புலப்படுகிறது. ஒருவிதத்தில், இன்னொரு சச்சின் தேவையில்லை என்று அடுத்த தலைமுறையினர் அந்தப் பிம்பத்துக்குள் கூடுவிட்டுக் கூடுபாய முனையாமல், தங்களது தனித்தன்மையை மட்டுமே நம்பி முயற்சி செய்தால் அது அவர்களுக்கும், இந்தியக் கிரிக்கெட்டுக்கும் நன்மை பயக்கும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, சச்சின் விட்டுச் சென்ற சிம்மாசனம் அப்படியே இருக்கட்டும்! அடுத்த தலைமுறை நிர்மாணிக்க வேண்டிய புதிய சாம்ராஜ்யங்களும், கம்பீரமாக அமர்வதற்குப் புதிய சிம்மாசனங்களும், முற்றுகை இடுவதற்கான புதிய இலக்குகளும் இயல்பாகத் தோன்றி சவால்களாக அமையப்போவது உறுதி. எனவே, பிடிவாதமாக சச்சினுடன் ஒப்பிடுகிற மூர்க்கத்தை அலட்சியம் செய்துவிட்டு, அடுத்து வரப்போகிறவர்கள் தங்களுக்கென்று புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதே நல்லது. இதற்கான பாடம் சச்சினின் பயணத்திலேயே இருக்கிறது.

      சச்சின் ஆடத்தொடங்கிய காலத்தில் சுனில் காவஸ்கருடன் அவரை ஒப்பிட்டு அவர்மீது அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தியதுண்டு. அதிலிருந்து அவர் மீண்டதும், காவஸ்கரின் பல சாதனைகளை அவர் கடந்ததும் வரலாறு. சாதனைகள், புள்ளி விபரங்கள், வெற்றி தோல்வி குறித்த விவாதங்கள் எல்லாவற்றையும் விட, சச்சின் பிற வீரர்களிடமிருந்து விலகி, வித்தியாசமாகக் காணப்படுவதற்கு, கிரிக்கெட் தவிரவும் அவர் தனிப்பட்ட முறையில் தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட விதமும், சில விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர்த்து பெரும்பாலும் அவர் வெளிப்படுத்திய அடக்கமும், கண்ணியமும் முக்கியமான காரணங்கள். சாரதாஸ்ரமம் பள்ளியிலிருந்து அவருடன் பயணித்து இந்திய அணிக்குள் வந்த வினோத் காம்ப்ளி, ப்ரவீண் ஆம்ரே ஆகியோர் திறமையிருந்தும் ஏன் சச்சின் அளவுக்கு உயரத்தை எட்டவில்லை என்ற கேள்வியின் விடைதான், சச்சினின் வெற்றியின் ரகசியம்.

      இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வெற்றியும், பெருகிவரும் ரசிகைகளின் எண்ணிக்கையும் சச்சினின் உடம்புக்கு நல்லதில்லைஎன்று குமுதம் இதழில் சுஜாதா எழுதியிருந்தார். எதுவும் சச்சினை பாதிக்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் வெளிப்படுத்திய அதே பதவிசும், கண்ணியமும் சச்சினின் நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்தது. இன்றைக்கு மைதானத்தில் ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொண்டு அசிங்கப்படுகிறவர்களும், பாலிவுட் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுகிறவர்களும், மலிவான விளம்பரத்துக்காக தொலைக்காட்சிகளில் வந்து புளுகுகிறவர்களும் சச்சினின் வாழ்க்கையை அவர் செதுக்கிக் கொண்ட விதத்திலிருந்து கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் ஒன்றல்ல; ஓராயிரம் இருக்கின்றன.

       நான் எவ்வளவுக்கு எவ்வளவு சிவாஜியின் ரசிகனோ, அவ்வளவுக்களவு சச்சினின் விசிறியும் கூட! சிவாஜி 200+ படங்களில் நடித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியோ, அதே அளவு மகிழ்ச்சி சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டிருப்பதும் அளிக்கிறது. சிவாஜி ஜெயமாலினியுடன் ‘குத்தால அருவி குடிசையிலிருக்குஎன்று குத்தாட்டம் போட்டபோது எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டதோ, அதே எரிச்சல் சச்சின் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஓரிரு ஆண்டுகளாக ஏற்படத்தான் செய்தது. ஆனால், இன்றும் ‘கர்ணன்படமோ, ‘வசந்த மாளிகைபடமோ வெளியானால், பார்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று கிளம்புவதுபோல, சச்சின் மீதான எனது அபிமானமும் அசைக்க முடியாத அளவுக்கு இருக்கத்தான் செய்கிறது; இனியும் இருக்கும். சச்சினைப் பற்றிய எனது முந்தைய விமர்சனங்களுக்கு இது ஒரு சால்ஜாப்பு போலத் தோன்றினாலும் அதில் வெட்கப்பட எதுவுமில்லை. நான் முன்பே எழுதியிருப்பதுபோல, சச்சின் மீதான எனது விமர்சனங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், கண்மூடித்தனமாக சச்சினை ஆராதிக்கிறவர்கள்களின் கட்சியில் நான் இல்லை. You are entitled to your opinion and I am entitled to mine!

                ஆனால், சச்சின் தெண்டுல்கர் எனக்குப் பிடித்த பத்து இந்தியர்களில் முதல் ஐந்தில் வருவார் என்பதிலோ, எனக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் இருப்பார் என்பதிலோ எந்த மாற்றமும் நேரப்போவதுமில்லை!

      இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற எனது கனவு பலித்து விட்டது,என்று, சுருள் சுருளாகத் தலைமயிருடன், கூச்சத்துடன் தூரதர்ஷனில் மராட்டியில் பேட்டியளித்த அந்தப் பதினேழு வயதுப் பையன், தனது பயணத்தில் பல மைல்கல்களைக் கடந்தபோது, ‘உடம்பு சரியில்லைஎன்று பொய்சொல்லி வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தது இன்றளவிலும் எனக்குப் பித்துக்குளித்தனமாகத் தெரியவில்லை. சச்சின் முஷ்டாக் அஹமதையும், அப்துல் காதரையும் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்ததை நான் வானொலியில் கேட்டேன்என்று சொல்வதில் எனக்கு இன்னும் பெருமையாக இருக்கிறது. உறக்கத்தில் சச்சின் கனவில் வந்து என்னை பயமுறுத்தப் போகிறார்என்று ஷேன் வார்ன் சொல்லுமளவுக்கு அவரது பந்துவீச்சை துவம்சம் செய்த சச்சினின் ஆட்டத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்; ‘We were beaten by a great player’ என்று ஷார்ஜாவில் மணல்புயலுக்கு மத்தியில் சச்சின் ஆடிய ருத்ரதாண்டவத்துக்குப் பிறகு ஸ்டீவ் வாவ் சொன்னது எனது காதுகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

      எல்லாவற்றையும் விட, வடிகட்டிய இந்திய துவேஷியான ஜாவேத் மியான்தாத், சச்சின் ஆடிய முதல் தொடரின்போது, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இன்னும் என் கண்களுக்கு முன் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

“BEWARE! SACHIN TENDULKAR IS AROUND”

அது 24 ஆண்டுகளுக்கு முன்பு! எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வருவதுபோல, சச்சினின் ஆட்டமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், சச்சின் அளித்த குதூகலமூட்டும் ஞாபகங்கள் பொக்கிஷம்போல எனது அடிமனதில் மிகவும் பாதுகாப்பாக, பெருமையளிப்பதாக இருக்கின்றன.

சச்சின்! உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்!    

Sunday, November 10, 2013

நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...!




மு.கு: காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் மாற்றாக ‘மூன்றாவது அணிநடத்திய கூட்டம் முடிந்து பல நாட்களாகி விட்டாலும், தாமதாகவே இது குறித்து எழுத முடிந்திருக்கிறது. பரவாயில்லை! இந்தப் பத்து நாட்களாவது இவர்கள் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பாராட்டுக்குரிய விஷயம்!


நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...!


நாங்க புதுசா...
நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

ஆ! புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!
ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!


முன்னாடி சிலமுறை கூட்டுவைச்சோம்-சண்டை
முத்திப்போயி எங்களுக்கே வேட்டுவைச்சோம்
ஒத்துமைன்னா என்னான்னு தெரிஞ்சுக்காமே-வெறும்
ஓட்டுக்காக கையைக்கோர்த்து படம்பிடிச்சோம்
எப்போதும் கெடுப்பது எங்க வாயிதான் சும்மா
எம்பியெம்பிக் குதிப்பது லுல்லுலாயிதான்
ஆளாளும் உள்ளுக்குள்ளே திட்டம்போட்டு-எங்க
ஆளுக்கேதான் ஆப்புவைப்போம் கட்டம்போட்டு

நாங்க புதுசா...
நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

கூடுவிட்டு கூடுதாவும் கில்லாடிங்க நாங்க
கொள்கையைத்தான் கேட்டுப்புட்டாத் தாங்கமாட்டோம்
நல்லாத்தான் மத்தவரைக் கடுப்பேத்துவோம்- நாங்க
நாட்டுக்கென்று வேறொண்ணும் பண்ணமாட்டோம்
அடிக்கடி போராட்டம் தர்ணா செய்வோம்- நாங்க
அதைத்தாண்டி மக்கள்பக்கம் போகமாட்டோம்
கூச்சலிட்டு காட்டமாக வைவோமுங்க-அவர்
கூட்டணிக்கு வந்துப்புட்டா பேசமாட்டோம்

நாங்க புதுசா...
நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க


பலசரக்குப் போட்டிருக்கும் பாயாசம்தான் - இதைப்
பார்த்தாலே மக்களுக்கு ஆயாசம்தான்!
அவரவர்க்கு பேராசை தாசில்பண்ண-சிலர்
அதுக்குன்னே வருவாங்க காசுபண்ண
இப்போது போடுவது நாடகம்தான்- இது
இங்கிருக்கும் ஆளைப்பார்த்தா பூடகம்தான்
சர்க்காரு வந்தாலே கழண்டுக்குவார்- இவர்
சரக்கு என்னன்னு மக்கள் புரிஞ்சுக்குவார்


நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

ஆ! புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!
ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!

Sunday, October 20, 2013

மதுரைக்கு வந்த சோதனை!



இதனால் சகலருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்,

      வருகிற 22-10-2013 முதல் அடியேன் சில பல நாட்கள், ஏன், ஒரு சில மாதங்கள் கூட கூடல்நகரில் வசிக்க வேண்டியிருப்பதால், மதுரைவாசிகள் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

      மதுரை மாநகரில் இருந்தவாறு இடுகைகளை எழுதுகிற வசதியோ வாய்ப்போ கிடைக்குமா கிடைக்காதா என்று தற்போது தெரியாததால் (அட, இதுக்கெல்லாமா கை தட்டுவாங்க?), அவ்வப்போது சென்னைக்கு வரும்போதெல்லாம் கிடைக்கிற நேரத்தில் எதையேனும் எழுதி, எனது புஜபலபராக்கிரமத்தை நிலைநாட்டுவேன் என்று எனது ஆரவல்லியின் மீது (எனது புராதன கணினி!) ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்.

நன்றி!

அட, அதுக்குள்ளே சென்னைவாசிகள் பட்டாசு வாங்கக் கிளம்பிட்டாங்களா?

Saturday, October 12, 2013

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

முற்குறிப்பு:  வலைத்திரட்டி ஓட்டுப்பட்டைகளை நீக்க, கணினி அஞ்ஞானியான அடியேன் எதையோ செய்யப்போக, எனது வலைப்பக்கத்தையே காக்காய் கொத்திக் கொண்டு போய்விட்டது. உங்களது துரதிருஷ்டம், இன்று ஒருவழியாய் மீட்டுவிட்டேன். இரண்டு நாட்களாகத் தப்பித்த பாக்கியசாலிகளுக்கு எனது பாராட்டுக்கள்!


சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

மிக்ஸி கிரைண்டரும் தையல் மிஷின்களும்
விலையின்றித் தருவார்- பஸ்
நிற்கும் இடத்தில் பாத்ரூம்போக
நிதமும் காசுகள் பெறுவார்
ரோட்டோரத்தில் நிற்குது கூட்டம்
பார்த்தால் முகம் சுளிக்கும்-நாம்
இதற்கும்கூட லஞ்சம் தரணுமா?
கேட்டால் ஊர்சிரிக்கும்

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

பயணம்கூட நம்தமிழ்நாட்டில்
பாவம்தானடா- செய்யும்
பாவம்தானடா
விடுதியென்ற பேரினில் எங்கும்
கூவம்தானடா- நாறும்
கூவம்தானடா
நடத்துனர்க்கும் ஓட்டுனருக்கும்
ஓசிதானடா-எல்லாம்
ஓசிதானடா
நம்மை மட்டும் இம்சை செய்வது
ஈசிதானடா-ரொம்ப
ஈசிதானடா

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

கொண்டையிலே பிச்சிப்பூவாம்
உள்ளேபார் ஈறும்பேனும்
ஓடுதுபார் பாலும்தேனும் என்று சொல்வாங்க- நம்
ஓட்டுக்காய் இலவசத்தைத் தந்து வெல்வாங்க
துட்டுக்கேட்கும் கழிப்பறையும் தூய்மையற்ற மோட்டல்களும்
தட்டித்தான் கேட்போரின்றி எங்கும் இருக்கு-வீண்
தம்பட்டத்தில் விழுந்தேமகிழும் ஆட்சியிருக்கு!

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

வேண்டுகோள்: தயவுசெய்து யாரும் திரட்டிகளில் சேர்க்கவோ, ஓட்டு அளிக்கவோ வேண்டாம். விரைவில் அந்த நிரலிகளை அகற்றப்போகிறேன். நன்றி!

Saturday, October 5, 2013

16 வயதினிலே- என்றும் இனிக்கும்!




கன்னியாகுமரி கடற்கரையில் சிப்பிகள் விற்கிற (கோழை) கதாநாயகனும் கதாநாயகியும்; நாயகியை மோப்பம் பிடித்துத் துரத்துகிற பீடி குடிக்கிற வில்லன். ஆரம்பத்தில் நாயகனை வெறுத்து ஒதுக்கி, பின்னர் அவனை விரும்புகிற நாயகி ஒரு கட்டத்தில் திருமணத்துக்குச் சம்மதிக்க, இதையறிந்த வில்லன் நாயகியை பலாத்காரமாக அடைய முயல, அங்கு வருகிற கோழை கதாநாயகன், காதலியின் கற்பைக் காப்பாற்றுவதற்காக, அருகிலிருக்கும் ஒரு பெரிய கல்லை எடுத்து வில்லனின் தலையில் போட்டுக் கொலைசெய்கிறான். பிறகு, ஜெயிலுக்குப் போன நாயகன் திரும்பி வருவதற்காக, கன்னியாகுமரி கடற்கரையில் சிப்பிகளை விற்பனை செய்தவாறு நாயகி காத்திருக்கிறாள். இதுதான் கதை!

      ஹலோ! 16 வயதினிலேஎன்று தலைப்புப்போட்டுவிட்டு, கன்னியாகுமரி, கடற்கரை, சிப்பி வியாபாரம் என்று மூடிதிருகிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்கிறீர்களா? என்ன செய்ய, கே.எஸ்.சேதுமாதவன் இயக்கி, கமல்ஹாசன் மற்றும் ரீடா பாதுரி நடித்து வெளியான ‘கன்னியாகுமரிஎன்ற மலையாளப்படத்தின் கதையைச் சொன்னேன் சாமி! (1974-ம் ஆண்டில் ஏதோ ஒரு ‘பிலிமாலயாமாத இதழில் படங்களுடன் கதையும் போட்டிருந்தார்கள்!) இந்தப் படம் வெளியானது 1974-ல்; 16 வயதினிலேவெளியானது 1977-ல்! அனேகமாக கன்னியாகுமரிபடம் மலையாளத்தில் பணால் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆகையால், அதிகம் மெனக்கெடாமல் கதையை நைஸாக லவட்டிக்கொண்டு வந்து சிக்கனமாக இட்லி உப்புமாவாகக் கிண்டி விட்டார்கள். சினிமாவில் இதெல்லாம் சகஜம் அண்ணே!

      பரவாயில்லை! இந்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி அசடுவழிந்ததும், அமிதாப் பச்சன், “ரஜினிகாந்த், கோவிந்தா நடித்ததும், முகுல் ஆனந்த் இயக்கத்தில் உருவானதுமான ‘ஹம்படத்தின் கதையை உட்டாலக்கிடி செய்து ‘பாட்ஷாஎன்று எடுத்து வெளியிட்டு சில்லறை பார்க்கவில்லையா? அப்புறம், ‘சந்திரமுகிபடத்தின் கதைக்காக நடந்த குடுமிப்பிடி சண்டையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா? மற்ற விஷயத்தில் எப்படியோ, இதில் உலக நாயகனுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறதுங்கோ! நல்ல விஷயம்!

      சரத் சந்திரரின் ‘தேவதாஸ்தெலுங்கிலும், தமிழிலும் வரவில்லையா? அதே சாயலில் எத்தனை கதைகள் வெளிவந்திருக்கின்றன? கன்னியாகுமரியும், ஹம் படமும் சாதிக்க முடியாததை, 16 வயதினிலேயும் பாட்ஷாவும் சாதித்தது என்றால், அதில் இருந்த முனைப்புகளைப் பாராட்டியே தீர வேண்டும்.
      ’16 வயதினிலே சினிமா நூற்றாண்டில் தமிழின் சிறந்த பத்துப்படங்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், எனது பட்டியலில் அவசியம் இடம்பெறும். காரணம், தமிழ் சினிமாவை அந்தப் படம் புரட்டிப்போட்டதுபோல வேறெந்தப் படமும் செய்ததில்லை. நடிப்பு, இசை, ஓளிப்பதிவு, இயக்கம், வசனம் என்று எந்த அம்சத்தை அளவுகோலாக வைத்துப் பார்த்தாலும் அது ஒரு மைல்கல்லாக அமைந்த படம்.

      பெல்பாட்டமும், தொங்குமீசையுமாக டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த ‘காதல் இளவரசன்கமலை, கோவணத்தோடு வருகிற சப்பாணியாகக் காட்டுவதெல்லாம் சாமானியமான இயக்குனர்களால் ஆகாத காரியம். இதையும் செய்து பார்த்துவிடுவோம்என்று இமேஜ் பற்றியெல்லாம் யோசிக்காமல், அப்படி நடித்துக் காட்டிய கமல் ஒருவிதத்தில் தமிழ் சினிமாவில் நாயகன் என்பவனுக்கு வரையறுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளையெல்லாம் தகர்த்து எறிந்திருந்தார். இவனை எங்கோ பார்த்ததுபோலிருக்கிறதே என்று இன்றைய படங்களில் சில ஹீரோக்களைப் பார்க்கும்போது நமக்குத் தென்படுகிற அந்தப் பரிச்சயத்தின் முதல் புள்ளி 16 வயதினிலேபடத்தில்தான் வைக்கப்பட்டது.

      1975-ல் வெளியாகி இந்தியாவை ஒரு கலக்குக் கலக்கிய ‘ஷோலேபடம் எப்படி, இந்தித் திரைப்படங்களின் உருவாக்கத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அத்தகைய தாக்கத்தை 16 வயதினிலேதமிழில் ஏற்படுத்தியது என்று உறுதியாகச் சொல்லலாம். ஆகவே, குறைகள் அதிகமில்லாத தமிழ்ப்படங்களுக்கு ஒரு முன்னோடியாக 16 வயதினிலேஇருந்தது என்பதையும், அதிநாயகர்களை ஆராதித்துக் கொண்டிருந்த திரையுலகத்தில் சாமானியர்களும் தங்கள் வரவை அறிவிக்க வழிவகுத்தது என்பதையும் இன்றைய சினிமாவின் அபிமானிகள் நன்றியோடு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

      இப்போதெல்லாம் வருகிற பெரும்பாலான சினிமாக்களில் நம்மால் அவசியம் காணமுடிகிற ஒரு சொதப்பல் அம்சம் பாத்திரப்படைப்பு! விஜய், அஜித், சூர்யா போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்களில் கூட காணக்கிடைக்கிற இந்தக் குறைபாடுக்கு ஒரு உதாரணம்; நாயகன் அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து எத்தனைபேர் வந்தாலும் அடித்துத் துவைத்து விடுவான்; ஆனால், பரிதாபத்துக்குரிய காமெடியனை மட்டும் எப்போதும் அடியாட்களிடம் மாட்டிவைத்துவிட்டு செமத்தியாக மொத்து வாங்க விட்டு விடுவான். ஒரு கதாபாத்திரம் என்பது, இயல்பான முரண்பாடுகள் தவிர்த்து, கதையில் எப்போதும் ஒரே மாதிரியான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்-என்ற அடிப்படையிலேயே கோட்டை விடுவதை நாம் பல படங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 16 வயதினிலேபடத்தைப் பற்றி யோசித்தால், சட்டென்று முதலில் நினைவுக்கு வருவது அதன் துல்லியமான பாத்திரப்படைப்புகள் தான்!

       நாயகன், நாயகி, வில்லன், நாயகியின் அம்மா, அந்த டாக்டர் என்று ஒவ்வொரு பாத்திரமும் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை முதலிலேயே படுலாவகமாகக் காட்டியதோடு, படம் முழுக்க அவரவர் அந்தந்த இயல்புகளுடனேயே இருப்பதாகவே சித்தரித்திருப்பார்கள். அதற்கு முன்பெல்லாம் சில வித்தியாசமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது, ஒரு ஃப்ரேமை ஃபீரீஸ் செய்து, வாய்ஸ் ஓவரில் கதாகாலட்சேபம் நடத்துவார்கள். விஷுவலாக பார்வையாளர்களை ஒவ்வொரு பாத்திரம் குறித்தும் உஷார்ப்படுத்துகிற உத்தி நிச்சயம் 16 வயதினிலேபடத்தில்தான் குறிப்பிடத்தக்க விதத்தில் கையாளப்பட்டது. கிராமத்துக்கு வருகிற டாக்டர் பாராட்டுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நாயகியைப் பார்த்துத் தடுமாறுகிற காட்சி ஒரு சின்ன உதாரணம்.

      தமிழ் சினிமாவில் பாத்திரங்களின் பெயர்களை வைத்தே அவர்களது குணாதிசயங்களைக் கணிக்க முடிந்த காலமும் ஒன்றிருந்தது. நாகலிங்கம் என்று பெயர் வைத்திருந்தால், அவர் பெரும்பாலும் மீசைவைத்துக் கொண்டு, அடியாட்களை வைத்து கிராமத்துப் பெண்களைக் கடத்திச் சென்று துகிலுரிபவராக இருப்பார். அதுவே தர்மலிங்கமாக இருந்தால் பரோபகாரியாக, ஊருக்காக பனியன், அண்டிராயரைக் கூட தியாகம் செய்யத் தயாரானவராக இருப்பார். கலைஞர் வசனம் எழுதிய படங்களில், வில்லனுக்கு அவர் வைக்கிற பெயர்களைக் கேட்டாலே மலேரியா வந்துவிடும். இதையெல்லாம் தகர்த்துக்காட்டிய படம் 16 வயதினிலே’. சப்பாணி, பரட்டை, மயிலு, குருவம்மா என்று டைட்டிலிலேயே போட்டுக்காட்டி ‘ரொம்ப ஓவரா எதிர்பார்க்காதீங்க கண்ணுகளாஎன்று உஷார்ப்படுத்திய படம். ‘இனிமே உன்னை யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறைஞ்சிடுஎன்று மயிலு சொன்னாலும், படம் பார்த்து இத்தனை வருடங்களாகியும், நம் மனதில் கோபாலகிருஷ்ணன் பதியவில்லை என்பதும், சப்பாணிதான் உலாத்துகிறார் என்பதும்தான் பாரதிராஜாவின் வெற்றி அல்லது பா.ராஜா & கமலின் வெற்றி!

      காலாபத்தர்’, ‘மேரே அப்னேபோன்ற படங்களில் சத்ருகன் சின்ஹா அறிமுகமாகும்போது அரங்கம் அதிரும் கரவொலியைக் கேட்டு அதிசயித்ததுண்டு. தமிழிலும் ‘ஆயிரத்தில் ஒருவன்நம்பியாரும், ‘ரிக்‌ஷாக்காரன்அசோகனும், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்வீரப்பாவும் அறிமுகமாகும் காட்சியிலேயே அப்ளாஸை அள்ளுவார்கள். ஆனால், ஒரு படத்தின் நட்சத்திர அந்தஸ்தை அதிகரித்த வில்லன் என்றால், என்னைப் பொறுத்தவரையில், தமிழில் ரஜினி அடைந்த வெற்றிதான் குறிப்பிடத்தக்கது! அதன்பிறகு, சத்யராஜ் கொஞ்சம் கிட்டத்தில் வந்தார் என்றாலும், ரஜினியின் வில்லத்தனம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் என்பது, மறுக்க முரண்டு பிடித்தாலும், மறுக்க முடியாத உண்மை.

      ஸ்ரீதேவியைப் பற்றி என்ன சொல்ல? ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு பெருமூச்சுகளாக இடுகை போட்டாயிற்று! ’16 வயதினிலேபடத்துக்குப் பிறகு, எந்தப் படத்தில் யார் மஞ்சள் தாவணி கட்டிக்கொண்டு வந்தாலும், ‘ஹை மயிலுஎன்று சொல்லுமளவுக்கு அந்தப் பாத்திரத்தை உயிர்ப்பித்தவர்! கமல், ரஜினி இருவர் இருக்கிற படத்தில், ஒரு கதாநாயகி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார் என்பதே போதுமே! சிவாஜியைப் போலவே, ஸ்ரீதேவியும் பாத்திரத்தின் தன்மை சற்று மாறும்போது, குரலைச் சற்றே மாற்றுவதில் கெட்டிக்காரர்! ’16 வயதினிலேபடத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் இந்த வித்தியாசத்தை கவனிக்க முடியும். ஆரம்பக்காட்சிகளில், கமலை அவர் கலாய்க்கும்போதெல்லாம் நமக்கு ஏற்படுகிற எரிச்சலையும் மீறி, மயிலுவைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும். இடைவேளைக்குப் பிறகு, பாவாடை தாவணியிலிருந்து கண்டாங்கிக்கு அவர் மாறும்போது, திடீரென்று அந்தப் பாத்திரத்துக்கு சற்று கண்ணியம் கூடியதுபோல இருக்கும். மலைக்கோவில் படிக்கட்டில், ‘தாலி வாங்கிட்டு வாஎன்று சொல்லும்போது, சப்பாணிக்கு ஏற்படுகிற அதே மகிழ்ச்சி நமக்கும் ஏற்படும். ’16 வயதினிலேபடத்தின் ஆணிவேர் என்றால், மயிலுதான்; ஸ்ரீதேவிதான்! Pivotal character என்பதற்கு அந்தக் கதாபாத்திரம் ஒரு சிறப்பான உதாரணம். (இந்தக் கதாபாத்திரத்தில் ஒரு நெருடலும் உண்டு; அது பின்னால்!)

      ஆத்தா!வாக வந்த காந்திமதி! இந்த எளவெடுத்த கோழி எங்கடா இருந்திச்சு?என்று பதைபதைப்போடு கேட்கிற காட்சியிலும் ‘பக்கென்று சிரிக்க வைத்தார். ‘நீ வாடா என் ஆசை மருமகனே!என்று கமலின் முதுகில் ஓங்கி அறைகிற காட்சியாக இருக்கட்டும்; ‘எங்க இருந்து பார்த்தாலும் ஆடறபடம்தான் ஆடும்என்று ஸ்ரீதேவியிடம் எகத்தாளமாகச் சொல்கிற காட்சியாக இருக்கட்டும்; அப்படியே ஒரு கிராமத்து ஆத்தாவைக் கண்முன்பு கொண்டுவந்து நிறுத்தினார். இந்தப் பெண்மணியை இதற்கு முன்பு ஏன் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டு விட்டார்கள்?என்று கேட்க வைத்த படம் 16 வயதினிலே’.

      அந்த டாக்டரை எனக்கு ஏனோ பிடிக்கவில்லை! கொஞ்சம் பார்க்கபிளாகவும், சஹிக்கபிளாகவும் ஒரு நடிகர் கிடைக்காமல் போய்விட்டாரா என்ற ஆதங்கம் எனக்கு இன்றளவிலும் இருக்கிறது. அதுவும் மயிலுவுக்கே கண்டதும் காதல் வருகிற அளவுக்கு அந்த டாக்டரிடம் கண்ணாடியைத் தவிர்த்துப்பார்த்தால், பெரிதாக எந்த பர்சனாலிட்டியும் கிடையாது. இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படம் என்பதால், அந்த வயிற்றெரிச்சல் கடைசியில் காணாமல் போய்விட்டது.

      வசனத்திலும் 16 வயதினிலேஒரு முன்னோடிதான்! ‘ஆத்தா ஆடு வளர்த்தா; கோழி வளர்த்தா; நாய் வளர்க்கலேஒரு சோறுபதம்! பரட்டையும் அவரது அடிபொளிகளும் அவ்வப்போது அடிக்கிற சில்லறைக் காமெடிகள் (கவுண்டமணியாக்கும்!) அப்படியே கிராமத்து வாசனையடிக்கிற சங்கதிகள்!

      வைத்தியராக ஓரிரு காட்சிகளில் டைரக்டர் கே.பாக்யராஜ். இப்போது 16 வயதினிலேபடத்தைப் பார்த்தால், ஒரு நட்சத்திர இரவு பார்க்கிற அனுபவம் கிடைத்தாலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

      ’16 வயதினிலேபடம் வெளியாகி, ஒரு காய்ச்சல்போல அது குறித்த செய்திகள் பரவி, மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால், 16 வயதினிலேபடத்தை, முதல் நாள், முதல் காட்சியே பார்க்கத் தூண்டியது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான்! ‘அன்னக்கிளியில் தான் அடைந்த வெற்றி வெறும் ஃப்ளூக் அல்ல என்று இளையராஜா நிரூபித்திருக்கிறார்என்று ஆனந்த விகடன் விமர்சனத்திலேயே பாராட்டுமளவுக்கு!

      கொஞ்சம் சலங்கைபடத்தின் ‘சிங்காரவேலனே தேவாபாடலுக்குப் பிறகு, பாடகி எஸ்.ஜானகிக்கு தமிழில் விருதுகளைக் குவித்த ‘செந்தூரப்பூவேபாடல் ஒன்றுபோதும்! சோளம் வெதக்கையிலே...தான் இளையராஜா முதன்முதலாக சொந்தக்குரலில் பாடிய பாடல். ரீரிகார்டிங்கில் இன்றைய தேதியிலும் ராஜாவை மிஞ்ச ஆளில்லை என்பது எனது கருத்து. 16 வயதினிலே’ படத்தில் அவ்வப்போது பின்னணியில் வயலின் இசையில் ஒலித்த மெட்டையே பின்னாளில் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் ‘வீட்டுக்கொரு மகனைப்போல’ என்ற பாடலுக்கு ராஜா உபயோகப்படுத்தியிருந்தார். (இதே போல ‘பத்ரகாளி’ படத்தின் ரீரிகார்டிங்கையே ‘பெண் ஜென்மம்’ என்ற படத்தில் ‘ஒரு கோவிலில் இரு தீபங்கள்’ என்று பாட்டுக்கு மெட்டாகவும் உபயோகித்திருப்பார். ஜீனியஸ்!)


      மஞ்சக்குளிச்சு அள்ளிமுடிச்சுபாடலும், அதை பாரதிராஜா படமாக்கியிருந்த விதமும் புதுசு கண்ணா புதுசு! அதிலும், இடையில் கமல் தலையில் ஸ்ரீதேவி மஞ்சள் நீரைக் கொட்டுவதுபோல ஒரு குட்டி இடைச்செருகலைக் காட்டி, அதற்கு கமல் தலைசிலுப்புவது போலக் காட்டியிருந்தது அட்டகாசம்! ‘செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்காபாடலைப் பார்க்கும்வரை, க்ரூப் டான்ஸ்கள் என்றால் ஐ.வி.சசியைப் போலப் படமாக்க முடியாது என்று எண்ணியிருந்தேன். பாரதிராஜா அந்தப் பாடலைப் படமாக்கியிருந்த விதம் அபாரம்! ஆனால், 16 வயதினிலேபடத்தைக் குறித்த ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்திய ஒரு பாடல் உண்டென்றால் அது ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டுதான்!

      வொய் திஸ் கொலவெறி,’ ‘எவண்டி உன்னைப் பெத்தான்போன்ற வரிகளுடன் ஒரு பாடல் தொடங்கினால், அது எப்படி கேட்பவர்களின் ஆர்வத்தைக் கிளப்புகிறதோ, அதேபோல ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டுஎன்ற பல்லவியைக் கேட்டதுமே ‘என்னய்யா பாட்டு இது? எந்தப் படம்?என்று கேட்க வைத்து, அந்தப் பாட்டுக்காகவே வேறேந்த எதிர்பார்ப்புமின்றிப் பார்த்த படம் 16 வயதினிலே’. பார்த்தால், அந்தப் படத்தில் ‘ஆட்டுக்குட்டியைத் தவிர ஆச்சரியப்படுத்த பல்வேறு அம்சங்கள் இருந்தன; இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் இருக்கின்றன.

                ’16 வயதினிலேபடத்தின் ஆரம்பக்காட்சி எனக்குப் பிடித்தமான ஒன்றல்ல. ஒரு ரயில் நிலையத்தில், ஒரு பெண் நின்று கொண்டிருந்தாலே, அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்பது பார்வையாளர்களுக்குப் புரியாமலா போய்விடும்? அப்புறம் எதுக்குங்காணும் அந்த ‘யார் வரவையோ ஆவலோடு காத்திருக்கும் கண்கள்...என்று வாய்ஸ் ஓவர் போட்டு, டைரக்டரின் குரலில் ஒரு ரன்னிங் கமெண்டரி? ‘ஒரு பாலசந்தர் போதாதா சாமி?என்ற சலிப்போடுதான் படம் பார்க்கத் தொடங்கினேன். மீதிப்படத்தையும் பார்த்து முடித்ததும் அந்தச் சலிப்பு மாயமானது என்னமோ உண்மைதான்!

      மயிலோட அழகுக்கும் படிப்புக்கும் சீமையிலேருந்து சூட்டுக்கோட்டு போட்ட ஒருத்தன் வருவான்என்று  நாயகி பருவமடைந்ததும் யாரோ சொல்ல, அதைக் கேட்ட மயிலு, கிராமத்துக்கு வந்த டாக்டரைப் பார்த்ததும், இன்ஸ்டண்ட் காதல்வசப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்! (மீண்டும் இந்த இடத்தில் அந்த டாக்டராக நடித்தவர் கொஞ்சம் பர்சனாலிட்டியாக இருந்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது!).

      கமலுக்கு அப்போதெல்லாம் அழுகையே வராது என்பது ஜெகப்பிரசித்தம்! ‘ஏழாம் அறிவுபடத்தில் சுருதிஹாசன் ஒரு காட்சியில் அழுததைப் பார்த்தபோது, 16 வயதினிலேபடத்தின் இறுதிக்காட்சியில் கமல் அழுததையும், தியேட்டரில் பார்வையாளர்கள் ‘ஓவென்று ஊளையிட்டதும் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், ‘சத்யம்’, ‘பட்டாம்பூச்சிபோன்ற படங்களில் தான் அழுது பார்வையாளர்களைச் சிரிக்க வைத்த கமல், இந்தப் படத்தில் கொஞ்சம் அழுகையில் முன்னேற்றம் அடைந்திருந்தார் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். விதிவிலக்காக அமைந்த இந்த ஒரு காட்சி தவிர, சப்பாணியாகக் கலக்கியிருந்தார் கமல் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதே படம் ‘சோல்வா சாவன்என்ற பெயரில் வெளியானபோது, இந்தியின் நிரந்தர இடிச்சபுளி அமோல் பாலேகர் சப்பாணி பாத்திரத்தையே நிர்தாட்சண்யமாகக் கொன்றே போட்டு விட்டார்.

      ’16 வயதினிலேபடத்துக்குப் பிறகு, விளம்பரங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் கூட சப்பாணி, மயிலு உபயோகப்படுத்தப்பட்டார்கள். ‘இந்தக் கடையிலேதான் 100% பட்டுச்சேலை கிடைக்கும்னு மயிலு சொல்லிச்சுஎன்றும் ‘இந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடணும்னு மயிலு சொல்லிச்சுஎன்றும் ஆளாளுக்கு எவ்வளவு வம்புக்கு இழுக்க முடியுமோ வம்புக்கு இழுத்தார்கள்.

      ’16 வயதினிலேபடத்தால் தமிழ் சினிமாவில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, கிராமத்துக்கதை எடுக்கிறேன் பேர்வழி என்று ஆட்டுப்புளுக்கை போல அடுத்தடுத்து கிராமத்துப்பின்னணியில் அறுவைப்படங்களாக எடுத்துத் தள்ளியது. கே.பாலசந்தர் கூட ‘எங்க ஊர் கண்ணகிஎன்ற ஆகச்சிறந்த படத்தை எடுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார். இது போதாதென்று, கிராமத்து ஐதீகம் என்ற பெயரில் பல பேத்தல்களை மையமாக வைத்தும் சில படங்கள் வெளியாகின. ‘பொண்ணு ஊருக்குப் புதுசுஎன்ற ஒரு படத்தில், ஒரு கிராமத்தில் 999 பேர் மட்டும்தான் இருக்க முடியும் என்ற ஐதீகம் இருப்பதாகவெல்லாம் காதிலே பூ சுற்றினார்கள்.

      கிழக்கே போகும் ரயில்படத்தில், நாயகன் பரஞ்சோதியின் தங்கைக்குத் திருமணம் நடைபெறுகிற காட்சியில், மொய் எழுதுபவர்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதில் ‘பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணியோட மொய் பத்து ரூபாய்என்று யாரோ ஒலிபெருக்கியில் சொல்வார்கள். நிச்சயம் சப்பாணி வருவான்; மயிலின் வாழ்வு மலரும்என்று முடித்த பாரதிராஜா, தனது அடுத்த படத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதை உறுதி செய்திருப்பார்.

      மயிலின் வாழ்வு மலர்ந்ததோ இல்லையோ, நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்தது. அதை மலர வைத்தவர் பாரதிராஜா என்பதால் அவர் எத்தனை ‘அன்னக்கொடி’ எடுத்தாலும் மறந்து பாராட்டலாம். (ஒரு ஃபார்மாலிட்டிக்காகச் சொன்னேன் பா.ராஜா சார்!)

***************************