Tuesday, November 8, 2011

ஆஸ்பத்திரியில் சேட்டை!


ஞாயிறுதோறும் ஓசியில் வருகிற ஆங்கிலப்பேப்பரை, அலட்சியமாக உதறியபோது, வழுவழுப்பான வண்ணக்காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த நோட்டீஸ் கண்ணைக் கவர்ந்தது.

இந்த நோட்டீசைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.950/- பெறுமான முழு உடல் பரிசோதனை ரூ.350/-க்கு செய்து தரப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

நியாயமாகப் பார்த்தால், என் உடம்பை முழுசாகப் பரிசோதிக்க வெறும் ரூ.175/- போதுமென்றாலும்,  ஒரு தபா உடம்பில் எலும்பு நரம்பெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் தவறில்லை என்று தோன்றவே, தொலைபேசியில் முன்பதிவு செய்ய முடிவு செய்து போனில் தொடர்புகொள்ளவும், எதிர்முனையில் சாதனா சர்கம் போலக் குரல் பதிலளித்தது.

“காலையிலே ஏழுமணிக்கெல்லாம் வெறும் வயித்தோட வாங்க சார்.

“வெறும் வயித்தோடவா? அப்போ சட்டை பனியன் போடாமலா வரணும்?

“எண்டே பகவானே! டீ, காப்பி, டிபன் எதுவும் சாப்பிடாம வாங்கன்னு சொன்னேன்.

“ஆல்ரைட்!

அடுத்த நாள், நோட்டீசைத் தூக்கிக் கொண்டு அந்த ஆஸ்பத்திரியை அடைந்தபோது, ரிசப்ஷனில் தூக்கக்கலக்கத்தோடு ஒரு பெண் வரவேற்று, சொளையாக ரூ.350/- வாங்கிக்கொண்டு, ஏறக்குறைய ஐ.ஏ.எஸ் வினாத்தாள் போலிருந்த ஒரு படிவத்தில், எனது பெயர், வயது இன்னபிற விபரங்களைக் குறித்துக் கொள்ளத்தொடங்கினாள்.

“நீங்க எந்த குரூப் சார்?

“ஸாரி, எல்லா குரூப்புலேருந்தும் தொரத்திட்டாங்க! வெறும் பிளாக்-லே மட்டும் தான் எழுதிட்டிருக்கேன்!

“ஐயோ, அதை யாரு சார் கேட்டாங்க, உங்க இரத்தம் என்ன குரூப்?

“ஓ பாசிடிவ்!என்று சொன்னதும் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்த அந்தப் பெண், ‘எடீ சுமா, இவிடே ஒரு செக்-அப் வன்னுட்டுண்டு; விளிச்சோண்டு போ!என்று சொல்லவும் சுமா என்ற பெயரில் ஒரு சுமோ என்னை நோக்கி ஏறக்குறைய உருண்டு வந்தார்.

வாங்க சார்,என்று அழைத்துப்போய் ஒரு நாற்காலியில் உட்காரவைத்து கையைப் பிடித்து நாடி பார்த்தார். பிறகு, இரத்த அழுத்தம் பார்த்தார்.

“எனக்கு பிளட் பிரஷர் கிடையாது!

உங்களுக்கு பிளட் இருக்குதான்னே சந்தேகமாயிருக்கு! சரி, எழுந்திரிச்சு இந்த மெஷின் மேலே நில்லுங்க! வெயிட் பார்க்கலாம்!

நான் ஏறி நின்றதும், என்னை நிமிர்ந்து நிற்கச் சொல்லியவர், குனிந்து பார்த்தார்.

“ஐயையோ, என்னது முள்ளு நகரவேயில்லை?

“ஏன், இல்லாட்டா நகர்ந்து நாயர் கடைக்குப் போயி சாயா குடிக்குமா?

அந்தப் பெண் என்னை முறைத்து விட்டு, செயற்கையாகச் சிரித்தார்.

“அடுத்தது பிளட் செக்-அப் பண்ணுவாங்க; அப்புறம் எக்ஸ்-ரே; அப்புறம் ஈ.சி.ஜி; அப்புறம் டாக்டர் செக்-அப்; அப்புறம் ஸ்கேன்; அப்புறம் சர்ஜன் பார்ப்பாரு! அப்புறம் டயட்டீசியன் பார்ப்பாரு! சரீங்களா?

ஆஹா, வெறும் ரூ.350/-க்கு இத்தனை பரிசோதனைகளா? என்று நான் வாயைப் பிளந்தபடியே சுமோவின் பின்னாலேயே சென்று, இரத்தப் பரிசோதனை செய்யும் அறைக்குள் நுழைந்தேன். அங்கே ‘கலாகௌமுதிவாசித்துக் கொண்டிருந்த பெண் என்னைப் பார்த்ததும் சலிப்புடன் எழுந்தாள்.

“மிஸ்டர் சுமா! பதற்றத்தோடு அழைத்தேன்

“என்னது?

“சாரி, உங்களை மேடம்னு அழைக்கிறதா சிஸ்டர்னு அழைக்கிறதான்னு குழம்பி, மிஸ்டர்னுட்டேன். அதாவது சிஸ்டர் சுமா, என் உடம்புலேருந்து ரொம்ப இரத்தம் எடுத்திராதீங்க! வெயிட் குறைஞ்சிரும்! தப்பிப் போய் அதிகம் எடுத்தா, மிச்சமிருக்கிறதை ஊசிபோட்டாவது திருப்பிக் கொடுத்திரணும்.

அதெல்லாம் எடுக்க மாட்டாங்க! ஜென்சி, சாம்பிள் எடு, நான் போய் சாருக்குத் தண்ணி பாட்டில் கொண்டு வர்றேன்.

“ஊசி போட்டா அழுவீங்களா சார்?அந்த ஜென்சி அக்கறையோடு கேட்டாள்.
“சேச்சே! ஊசியைப் பார்த்தாலே அழுதுருவேன். வலிக்காமப் போடுங்க சிஸ்டர்!

எனது உடம்பில் நரம்பைக் கண்டுபிடிப்பது, ஆற்காட்டு ரோட்டில் பள்ளத்தைக் கண்டு பிடிப்பது போல சுலபமானது என்பதால், அநியாயத்துக்கு  ஒரு அவுன்ஸ் டீ அளவுக்கு இரத்தத்தை ஊசியால் உறிந்து எடுத்தார் ஜென்சி. குத்திய இடத்தில் பஞ்சை வைத்து விட்டு, அப்படியே உட்கார வைத்து விட்டு மீண்டும் கலாகௌமுதியில் மூழ்கினார்.

“வாங்க சார்,என்று ஒரு கையில் தண்ணீர் பாட்டிலும், இன்னொரு கையில் ஒரு அரையடி நீளத் துவாலையுமாகத் திரும்பி வந்தார் சுமா. “எக்ஸ்ரே எடுக்கப்போலாம் வாங்க!

எக்ஸ்ரே அறையிலிருந்தவன் என்னைப் பார்த்ததும் ‘உனக்கெல்லாம் எக்ஸ்ரே எடுப்பது எக்ஸ்ரேவுக்கே அவமானம்,என்பதுபோல கேவலமாகப் பார்த்தார்.

“சட்டை பனியனைக் கழட்டுங்க சார்!

“அண்ணே, லேடீஸ் பக்கத்துலே நிக்குறாங்கண்ணே!நான் கெஞ்சினேன்.

“ஆமா, இவரு பெரிய சல்மான் கான். சிக்ஸ் பேக் வச்சிருக்காரு! நியாயமாப் பார்த்தா உங்க உடம்புக்கு பனியனைக் கழட்டினா, எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. என்ன பண்றது, கழட்டுங்க!

எனது தாவாங்கட்டையை ஒரு தகரச்சட்டத்தின் மீது அழுத்தி வைத்து விட்டு, அவர் கூறினார்.

“மூச்சை இழுத்துப் பிடிங்க! நான் சொல்லுற வரைக்கும் மூச்சு விடக்கூடாது!

“அண்ணே, ஸ்மைல் ப்ளீஸ் சொல்லுவீங்க தானே?

அவர் எரிச்சலோடு பார்க்கவும், வாயைப் பொத்திக்கொண்டு நான் மூச்சைப்பிடித்துக் கொண்டு நிற்கவும், சட்டென்று படம்பிடித்து விட்டு என்னைக் கழுத்தைப்பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்.

“சார், சட்டையைப் போட்டுக்காதீங்க! ஈ.சி.ஜி.எடுக்கணும்!

ஈ.சி.ஜி அறையில் மாறுதலாய் ஒரு பெண் விகடன் வாசித்துக் கொண்டிருக்க, சுமா என்னை அங்கிருந்த உயரமான கட்டிலுக்கருகே அழைத்துச் சென்றார்.

“இதுலே படுத்துக்கோங்க சார்! ஈ.சி.ஜி. எடுத்ததும் இந்த ஒரு பாட்டில் தண்ணியையும் குடிச்சிரணும். அப்பத்தான் ஸ்கேன் பண்ண முடியும்.

“ஒரு பாட்டில் தண்ணியா? மிக்சிங்குக்கு ஏதாவது கிடைக்குமா?

“என்னது?

“சாரி, பழக்கத்தோஷத்துலே கேட்டுட்டேன்.

தண்ணீர் பாட்டிலையும், துண்டையும் வைத்து விட்டு, சுமா வெளியேறியதும், அந்த இன்னொரு பெண், கட்டிலில் படுத்திருந்த என் மீது பற்பசை போன்ற திரவத்தை ஆங்காங்கே ஒட்டி, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேபிளாக ஓட்டத்தொடங்கினார்.

“சிஸ்டர், கேட்குறேனேன்னு தப்பா நினைக்காதீங்க! எதுக்கு என் உடம்புலே இத்தனை கேபிளை சொருகறீங்க? என்னையும் போதிதர்மனாக்கப் போறீங்களா?

“ஷட் அப்!தமிழ்ப்பெண்ணாய் லட்சணமாய் அந்தப் பெண் அதட்டவும், புதிதாய் அமைச்சர் பதவியேற்றது போல, கையது கொண்டு வாயது பொத்தி நான் அமைதியானேன்.

(தொடரும்)

Saturday, November 5, 2011

எல்லோரும் எலுமிச்சை வாங்கிக்கிடணும்!

சமீபத்தில் "Benefits of lemon" என்று ஒரு ஆங்கிலக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஒரு தேசீய நாளேட்டில், எலுமிச்சையின் பயன்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும், உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய இடுகை இது.

எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!

முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே? 

1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷாய் உபயோகிப்பது!

வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு,விதை,தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச்சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)

எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம்பழத்துக்கு).

ஆயுத பூஜையன்று உங்கள் வாகனச்சக்கரங்களில் தலா ஒரு எலுமிச்சம்பழம் வீதம் வைத்து நசுக்கினால், நீங்கள் போகிற வழியில் யாரும் செல்போன் பேசியபடி குறுக்கே வர மாட்டார்கள் என்பதுடன், சுத்துப்பட்ட பதினெட்டுப் பட்டியில் வாகனம் ஓட்டுகிறவர்களும் கவனமாக ஓட்டுவார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சம்பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால் போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.

இது தவிரவும், எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:

வயிற்றுப் பொருமல்

எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர். 

கொசுக்கடி

தமிழகமெங்கும் மழை கொட்டிக்கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசுவளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசு கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.

உறக்கமின்மை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம்பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.

விஷக்கடி

எலுமிச்சம்பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

காய்ச்சல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782  பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம்பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.

வாந்தி

எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம்பழமிருந்தால் துணிந்து மழைக்காலத்திலும் மாம்பலம், அசோக்நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.

அஜீரணம்

கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

தலைவலி

சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.

பித்தம்

இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு இந்த இடுகை நிறைவு செய்யப்படுகிறது. இத்தனை மருத்துவகுணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.