Tuesday, October 31, 2017

வாராது வந்த வரதாமணி



வாராது வந்த வரதாமணி

வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சாலச்சிறந்தது. அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை கிட்டாமணி, வரதாமணி இருவருடனும் பேசுவதற்கு அனுப்பினால், சத்தியமாக இருவரும் உறவுதான்  என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார். சொந்தக்காரர்கள் எவர் வீட்டுக்கும் போகாமலிருந்ததால், வரதாமணியை நிறைய பேர் ’வராத மணி’ என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால், திடீரென்று ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன இரண்டு சாத்துக்குடிப்பழங்களுடனும் வாசலில் வந்து நின்ற வரதாமணியைப் பார்த்துப் பூரித்த கிட்டாமணியின் வயிற்றில் புளிகரைந்து கரைந்து உடம்பே ஒரு புளியோதரைப் பார்சலாய் ஆகியதுபோல உணர்ந்தான்.

’கிட்டா! சௌக்யமாடா?’என்று பாய்ந்துவந்து கிட்டாமணியைக் கட்டிப்பிடித்து வரதாமணி குலுக்கிய குலுக்கில், கிட்டாமணியின் வயிற்றிலிருந்த காப்பி பால் வேறு, டிகாஷன் வேறு ஆகியது.

அந்த நேரம் பார்த்து சமையலறையிலிருந்து வெளியேவந்த பாலாமணி, தன் கணவரை, அவரைவிட அசிங்கமான இன்னொருத்தர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.

’இது யாருடா கிட்டா? உன் சம்சாரமா?’ வரதாமணியின் வாய் வசந்தபவன் ஓட்டலின் வாஷ்பேசின் போலானது. “பத்து வருஷத்துக்கு முன்னாலே பார்த்தது. அப்போ புஹாரி ஹோட்டல் டூத்-பிக் மாதிரி இருந்தா; இப்ப புதுசா வாங்கின டூத்-பேஸ்ட் மாதிரி ஆயிட்டாளேடா!”

’சும்மாயிரு வரதா,’கிட்டாமணி முணுமுணுத்தான். ‘அப்புறம் உன் வாயிலேருந்து நுரை நுரையா வரும்.’

பரஸ்பரம் குசலம் விசாரித்து முடிந்ததும் வரதாமணி, தீபாவளிக்குச் செய்த பலகாரமென்று விவகாரமாய் சில அயிட்டங்களை எடுத்து மேஜையில் வைக்க, அடுப்படியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பூனை திடுக்கிட்டு எழுந்து அடுத்த ஊருக்கு அவசரமாய் குடிபெயர்ந்தது. வரதாமணி கொண்டுவந்த பண்டங்களின் வாசனையில் அங்கிங்கெனாதபடி எங்குமிருந்த டெங்குக்கொசுக்களின் டங்குவார்கள் அறுந்துபோய், சுங்குவார் சத்திரத்தை நோக்கிக் கிளம்பின. ஒரு வழியாக, பாலாமணி காப்பியைக் கலந்துகொண்டு வைத்தபிறகுதான் வரதாமணியின் பட்சணவாசனை மறைந்து வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

’டேய் வரதாமணி, நீ ஏண்டா இன்னும் என்னோட வாட்ஸ்-ஆப் க்ரூப்புல சேராம இருக்கே?’ என்று முகத்தில் எள்ளும், கொள்ளும், ஏகப்பட்ட பருப்பு வகைகளும் வெடிக்கக் கேட்டான் கிட்டாமணி. “எவ்வளவு நல்ல நல்ல மெஸேஜ் எல்லாம் ஃபார்வர்ட் பண்ணி விடறேன் தெரியுமா?”

“எனக்குப் பிடிக்கலேடா கிட்டா,” வரதாமணி சுரத்தேயில்லாமல் கூறினார். “Forward வசதிமாதிரியே Rewind-ம் இருந்தாச் சேர்ந்துக்கறேன்.”

“சரிசரி, போய்க் குளிச்சிட்டு வா, டிபன் சாப்பிடலாம்,” என்றான் கிட்டாமணி. பாலாமணி அன்று ஸ்பெஷலாகச் செய்திருந்த கபூர்தலா கத்திரிக்காய் கொத்சைச் சாப்பிட்டால், வரதாமணி காஞ்சீபுரத்துக்குப் பதிலாக காசிக்கே ஓடிவிடுவான் என்று மனதுக்குள் குதூகலித்தான். ஆனால், வரதாமணியோ பொங்கலில் புழல் ஏரியளவுக்குக் குளம்வெட்டி, அதில் மொத்தக் கொத்சையும் கொட்டிக்கொண்டான். இன்னும் கொஞ்சம் கொத்சு மட்டும்  மீதமிருந்திருந்தால் கத்திரிக்காயை எடுக்கக் கட்டுமரத்திலே தான் போகவேண்டி வந்திருக்கும். உண்ட களைப்பில் வரதாமணி கூடத்தில் படுத்துக் குறட்டை விட ஆரம்பிக்கவே, பாலாமணி கிட்டாமணியை இழுத்துக்கொண்டு போனாள்.

”இத பாருங்க, இதுவரைக்கும் நான் எனக்குன்னு ஒரு டயோட்டா இன்னோவாவோ ஃபோர்ட் ஃபியஸ்டாவோ கேட்டதில்லை. உண்மையைச் சொல்லுங்க! ஒரு சட்டிப்பொங்கலையும் ஒரு பானை கொத்சையும் காலிபண்ணிட்டுக் குறட்டைவிடுதே இந்த ஜென்மம். இது யாரு? இவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு?”

”இப்படி திடீர்னு கேட்டா எப்படி?” அமலாக்கத்துறையிடம் அகப்பட்ட அரசியல்வாதிபோலக் கேட்டான் கிட்டாமணி,”அதை விலாவரியா ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வைச்சிருந்தேன். தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லட்டுமா?”

”ஒண்ணும் வேணாம்; முதல்ல இந்தாளைக் கெளப்புங்க! இல்லேன்னா நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்!”

”உங்கப்பா வீடா? அது இடிஞ்சுபோயி இப்ப ஊர்க்காரங்க எருமைமாட்டைக் கட்டியிருக்கிறதாச் சொன்னே?”

“அது கிராமத்து வீடு,” பாலாமணி ஓலமணியாகிக் கூவினாள். “நான் பெங்களூரு வீட்டுக்குப் போறேன். அங்கே எருமையே கிடையாது.”

“அதான் நீ போறியா?”

”இத பாருங்க, ஓண்ணு இந்த வீட்டுல நானிருக்கணும்; இல்லே அந்தக் காண்டாமிருகம் இருக்கணும்.”

“கரெக்ட்! ஒரு வீட்டுல ரெண்டு காண்டாமிருகம் இருந்தாக் கஷ்டம்தான்.”

”நான் அப்பா வீட்டுக்குப் போறேன்னு கொஞ்சம்கூட வருத்தமேயில்லையா?”

“அதுக்கு உங்கப்பாதானே வருத்தப்படணும்? பிருந்தாவன்ல போறியா இல்லை மெயிலா?”

”எனக்கென்ன தலையெழுத்தா? ஸ்பைஸ்ஜெட்ல டிக்கெட் போடுங்க!”

சோகமும் கோபமும் மிகுந்த நிலையில் பாலாமணி இரண்டே மணி நேரத்துக்குள் மேக்-அப் போட்டுக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பினாள். பாலாமணி கிளம்பி சரியாக அரை மணி நேரம் கழித்து வரதாமணி உறக்கத்திலிருந்து கண்விழித்தான்.

“கிட்டா? இந்த வீட்டுல கொசு இருக்கா என்ன?”

“எல்லாம் வெளியே போயிருந்தது. பாலாமணி கிளம்பினதும் தைரியமா ரிட்டர்ன் ஆயிடுச்சு.”

“அடடா, சம்சாரம் கோவிச்சிட்டுப் போயிட்டாளா?”

“ஆமாண்டா வரதா, பாண்டிச்சேரிலேருந்து மான்ஷன் ஹவுஸ் ஒரு பாட்டில் வாங்கி வைச்சிருக்கேன். ஆளுக்கு ஒரு லார்ஜ் போட்டுக்கலாமா?”

“ஒரு மனுஷி ஹவுஸ்ல இல்லேன்னா உடனே மான்ஷன் ஹவுஸா?”

“அப்போ வேண்டாம்கிறியா?”

“எப்போ அப்படிச்சொன்னேன்? எடுத்திட்டு வாடா!”

“டேய் வரதா, இது கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு இல்லை; மான்ஷன் ஹவுஸ் விஸ்கி! இதுக்குக் குளம் வெட்டினே, உன்னையே வெட்டிருவேன்.”

“பொஞ்சாதி கெளம்பிட்டா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசறான்யா”

வரதாமணியும் கிட்டாமணியும் ஆளுக்கு ஒரு லார்ஜ் என்று ஆரம்பித்து, மான்ஷன் ஹவுஸ் பாட்டிலுக்கு சிரஸாசனம் செய்வித்துக் கடைசிச்சொட்டையும் காலிசெய்தனர்.

”உன் பொண்டாட்டி கோவுச்சிட்டுப் போனதை நினைச்சா ரொம்ப வர்த்தமா இருக்குடா!” என்று வரதாமணி வராத கண்ணீரை வரவழைக்க முயன்றார்.

”இப்போ எதுக்குடா சீரியல்லே வர்ற சித்தப்பா மாதிரி எமோஷனல் ஆகுறே? ஏன், உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போனதே இல்லையா?”

“அது இல்லாமலா? போன மாசம்கூட பக்கத்துவீட்டு பேபி ஸ்கூலுக்குப் போயிட்டுருக்கும்போது டாட்டா காட்டினேன். உடனே கோவிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டா!”

“அடாடா, அந்த பேபி எந்த கிளாஸ்ல படிக்குது?”

“படிக்கலேடா, அது டீச்சரா இருக்குது!”

”நியாயமாப் பார்த்தா உன்னைத்தான் துரத்தியிருக்கணும்!”

“அதை விடுடா, ஏதாவது பண்ணி இந்தப் பொம்பளைகளுக்குப் பாடம் கற்பிக்கணும்டா!”

“அதுக்கு முதல்லே நாம படிக்கணுமே! விடுடா, நாம எப்பவும் போல இப்படியே சூடுசொரணை இல்லாமலே கடைசிவரை இருந்திரலாம்.”

“என்னாலே முடியாது,” வரதாமணி கொக்கரித்தான். “பொறுத்தது போதும்; பொங்கி எழு!”

“இன்னொரு பொங்கலா? உன்னையே கத்திரிக்காய் மாதிரி சுட்டு கொத்சு பண்ணிடுவேன்.”

”சும்மாயிரு, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். நான் அரசியல்ல குதிக்கப்போறேன்.”

”அடப்பாவி, பொண்டாட்டி மேலே இருக்கிற கோபத்தை ஏண்டா ஊருமேலே காட்டறே?”

”என்னைப்பத்தி என்ன நினைச்சே? பொங்கலைச் சாப்பிட்டுட்டுத் தூங்குறதுக்கு முன்னாடி நான் ஒரு ட்வீட் போட்டேன்; பார்க்கறியா?”

“எங்கே காட்டு!”

வரதாமணி தனது மொபைல் போனை எடுத்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதுபோல ஆங்காங்கே தடவ, வரதாமணியின் டிவிட்டர் உயிர்பெற்றது.

“கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு!” கிட்டாமணி வாசித்தான். “இதெல்லாம் ஒரு ட்வீட்டுன்னு போட்டிருக்கியே!”

“சரியாப் பாரு! இதை அம்பது பேர் ரீ-ட்வீட் பண்ணியிருக்கான்!”

கிட்டாமணி அரண்டு போனான்.

“அட ஆமாண்டா! இதை எதுக்குடா ரீ-ட்வீட் பண்ணியிருக்கானுங்க? உன்னைவிட லூசா இருப்பானுங்க போலிருக்கே?”

“கீழே கமெண்ட் படிடா!” வரதாமணி சிரித்தான்.

“என்ன கமெண்ட்?” கிட்டாமணி வாசித்தான். “பஞ்சாபில் கத்திரிக்காய் கொத்சு; தமிழ்நாட்டில் பொங்கலுக்கே வழியில்லை!”

“பார்த்தியா? ஒரு கொத்சு மேட்டரை எப்படி அரசியலாக்கி ட்வீட் பண்ணுறான் நம்மாளு!”

”இதுக்குத்தான் ஆளாளும் டிவிட்டருக்குப் போறானுங்களா?”

“இரு!” என்று வரதாமணி புதிதாக ஒரு ட்வீட்டை டைப் அடித்தான்.

“மான்ஷன் ஹவுஸ்!”

“இதென்னடா கண்றாவி?”

“பொறு! இப்ப இதையும் ரீ-ட்வீட் பண்ணி கமெண்ட் போடுவான் பாரு நம்மாளு!”

சில நிமிடங்கள் கழித்து.....

“இதோ பாரு முத கமெண்ட்....!”

கிட்டாமணி வாசித்தான்.

“இப்படியே போனால் தமிழர்களெல்லாம் குடும்பத்தை விட்டுவிட்டு மான்ஷனில்தான் வசிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா தலைவா? பலே!”

வரதாமணி வாய்விட்டுச் சிரித்தான்.

“பார்த்தியா மக்களோட ரியாக்‌ஷனை? இப்ப சொல்லு! நாம அரசியலுக்குப் போயிடலாமா?”

”டேய்! நீ வரதாமணி இல்லேடா; வாராது வந்த மாமணி! என்ன பேத்தினாலும் உடனே ரீ-ட்வீட் பண்ணி கமெண்டும் போட ஒரு கூட்டம் ரெடியா இருக்குது போலிருக்கேடா?”

“அதான் பொட்டிக்கடை ஆரம்பிக்கிறா மாதிரி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு போஸ்டர் ஒட்டறானுங்க. என்ன சொல்றே? அரசியலுக்குப் போலாமா?”

“அதுக்கு முன்னாடி அர்ஜெண்டா பாத்ரூம் போயிட்டு வர்றேன்,” என்று கிளம்பினான் கிட்டாமணி.

வரதாமணி ட்விட்டரில் அடுத்த ட்வீட் போட்டான்.

”நம்பர் ஒன்!”

*****************

Saturday, October 21, 2017

த்ரீ-இன்-ஒன்:04


01. மெர்சலாயிட்டேன்

பிரதமர் மோடியின் ‘ஸ்வச் பாரத் திட்டம்’ பேசப்பட்ட நிலையில், தமிழகத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களையும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்ற படம் ‘ஜோக்கர்’ (எனக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம்). அந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது அளித்தது. காரணம், இன்று இந்தியாவில் அப்படத்தில் சித்தரிக்கப்பட்டதுபோல பல்லாயிரம் கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே, அரசு குறித்த நேரடியானதும் மறைமுகமானதுமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், அந்தப் படத்துக்கு ‘சிறந்த படம்’ என்ற மகுடத்தைச் சூட்டுவதில் யாதொரு தயக்கமும் அரசு காட்டியதாகத் தெரியவில்லை.

மெர்சல்’- சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற சிலர் பரப்புகிற புரளிகளைக் கையாண்டு வசனங்கள் எழுதுவது எவ்வளவு அபத்தமான அணுகுமுறை என்பதை நடைமுறையில் நிரூபித்த ஒரு படமாகத் திகழப்போகிறது. எதையும் சரிபார்க்காமல், மிக அலட்சியமாக வசனம் எழுதுகிற தமிழ்த் திரைப்படவுலகத்தின் சில இயக்குனர்களுக்கும் வசனகர்த்தாக்களுக்கும், இந்தப் படம் எதிர்கொண்ட கண்டனங்களும், இறுதியில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட வேண்டிய அளவுக்கு ஏற்பட்ட சூழல்களும் ஒரு படிப்பினையாகத் திகழும்.

அரசாங்கங்கள் குறித்த விமர்சனங்கள் என்பதுதான் கருத்துச் சுதந்திரமே தவிர, விபரீதமான கருத்துக்களைப் பரப்புவது அல்ல. அந்த விதத்தில் வெறும் கண்டனங்களின் மூலம், படத்தயாரிப்பாளர்களுக்கு தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளித்திருப்பதும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

வலைப்பதிவுகளிலும் சரி, முகநூலிலும் சரி, எதையாவது பிதற்றிவிட்டு, கேள்விகேட்டால் பதிலுமளிக்காமல் பதுங்கிறவர்கள் நிரம்பவே இருக்கிறார்கள். இவர்களின் பொறுப்பின்மையை திரைப்படத்துறையும் பின்பற்றாமல், முக்கியமான பிரச்சினைகள் குறித்து வசனங்களோ காட்சிகளோ அமைக்கும்போது, ஒரு சுய கட்டுப்பாட்டுடன், பாரபட்சமின்றி முயற்சி செய்தால் அது அவர்களது படத்துக்கு நிச்சயம் அதிகப்படியான சிறப்பைச் சேர்க்கும்.

தமிழக பாஜக ‘கருத்துச் சுதந்திரத்தை அடக்குகிறது’ என்று பல அரசியல் கட்சிகள் கூச்சலிடுவது வேடிக்கை. ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்காக, மதுரை தினகரன் அலுவலகத்துக்குள்ளே அத்துமீறிப் புகுந்து, அங்கிருந்த சில ஊழியர்களை அடித்தும் எரித்தும் கொன்ற தி.மு.க; இந்திய ஜனநாயகத்தில் எமர்ஜென்ஸி என்ற அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தி, பத்திரிகை ஆசிரியர்களைச் சிறையில் அடைத்து, பத்திரிகைகளை முடக்கிய காங்கிரஸ்; மே.வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது எண்ணற்ற பத்திரிகையாளர்களைக் கொன்ற கம்யூனிஸ்டுகள் - என கிளம்பியிருக்கிற இவர்களின் கடந்தகாலம் வரலாற்றின் கருப்புப்பக்கங்களாய் இன்னும் நிலைத்திருக்கிறது.

02. பாத்ஷாநாமா

தாஜ்மஹால் இடுகையின் முதல் மூன்று பகுதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு முன்னாள் வரலாற்று ஆசிரியரிடம் கொண்டுபோனேன். வாசித்துவிட்டு சற்றே புருவம் சுருக்கியவர், ’இது ரொம்ப ஸாஃப்ட்! ஷாஜஹானின் நிஜமுகம் தெரிய வேண்டுமென்றால் பாத்ஷா நாமா படிக்கணும். ரத்தம் கொதிக்கும்’ என்று அறிவுரைத்தார். அவரிடமிருந்ததோ உருதுவில் என்பதால் எனக்குப் பயனில்லை. ஒரு வழியாக ஆங்கில மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்து முதல் பத்துப் பக்கங்கள் வாசித்து முடிப்பதற்குள் ஒரு பக்கம் நிறைய குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டொரு நாட்கள் முன்பு அலைபேசி அழைப்பு....

‘இதை ஏன் ப்ளாகில் போடணும்? இதே நடையில் முழுமையாக எழுதியதும் ஒரு புத்தகமாகப் போடலாமே? தமிழில் புது முயற்சியாக இருக்குமே?’ என்றார்.

ஒரு நிமிடம் ‘தந்தன தந்தன தந்தன தந்தன....’ என்று பின்னணி கேட்க, வெள்ளையுடை தேவதைகள் ஆடுவதுபோல ஒரு கனா! ஆனால்....

‘முதலில் பிளாகில் எழுதுகிறேன் சார். அப்புறம் பார்க்கலாமே?”

‘உங்க விருப்பம்!’

ஆகவே, விரைவில் முதல் பகுதியை இங்கு காணலாம்.

ஒரு வேகத்தில் எழுதப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, கூகிள், சில ஆங்கிலப்புத்தகங்கள் ஆகியவற்றை வாசிக்கத்தொடங்கியபோது சில ஆச்சரியமான தகவல்களை அறிய நேர்ந்தது. அதில் ஒரு சில துளிகளை மட்டும் இங்கே பதிவிட விருப்பம்.

சில வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜீப்பை விடவும் ஷா ஹானை கொடுங்கோலன் என்று கருதுகிறார்கள். இது முதல் ஆச்சரியம்.

மஹால் என்பது பொதுவாக அரண்மனையையே குறிக்கும் என்பதால், இது கையகப்படுத்தபட்ட ஒரு அரண்மனையாகவும் இருக்கலாம் என்பது இரண்டாவது ஆச்சரியம்.

இது தேஜோ லிங்கம் எனப்படுகிற சிவன் தலமாக இருந்ததாக சில மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே சில தரவுகளுடன் வாதிடுவது மூன்றாவது ஆச்சரியம்.

மேம்போக்காக, கேட்டறிந்த தகவல்களை சற்றே அகழ்ந்து பார்த்தால், தோண்டத் தோண்ட பல உண்மைகள் வெளிவரும் என்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.

03.  நகைச்சுவை

கிட்டாமணி- பாலாமணி வரிசையில் ‘வாராது வந்த வரதாமணி’ என்ற அடுத்த நகைச்சுவைக் கதை தயாராகிக் கொண்டிருக்கிறது. 

‘இப்போதெல்லாம் நீங்கள் எழுதுகிற பொருளாதாரப் பதிவுகளே மிகவும் நகைச்சுவையாக இருக்கிறதே,’ என்று கலாய்த்தார் நான் சந்தித்த சகபதிவர். :-) 

இந்த வலை எனக்கு அளித்திருக்கிற மிகப்பெரிய வரம், நான் அவர்களிடமிருந்து முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களுடன் இருக்கிறேன்; அதற்காக களத்தில் இறங்கிப் பணியும் ஆற்றுகிறேன் என்று தெரிந்தும் என்னுடன் தொடர்ந்து நட்புடன் பழகுகிற பல நல்ல நண்பர்கள்.

சிலர், பாவம், என்ன செய்வதென்பது என்று தெரியாமல், எனது  ஃபேஸ்புக் பக்கத்தில் வந்து வசைபாடுகிறார்கள்.

அவரவர்க்குத் தெரிந்ததை, முடிந்ததைத்தானே அவரவர்கள் செய்வார்கள்? வாழ்த்துகள்.

Tuesday, October 17, 2017

அவர்கள் புளுகுகள்


அவர்கள் புளுகுகள்

ஒருவர் மீது துவேஷம் வந்துவிட்டால், நாம் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும், அது சரியா, தவறா என்று சரிபார்க்காமல் அதை ஆமோதிக்கவும், சிலாகிக்கவும் ஒரு ஜால்ராக்கூட்டமும் இருந்துவிட்டால், கோயபல்ஸுகளின் கொள்ளுப்பேரர்கள் கூட, அரிச்சந்திரர்களின் அவதாரமாகக் கருதப்படுவார்கள். இதற்கு உதாரணமாக ஒரு பதிவர் இருக்கிறார். அவர்கள் உண்மைகள்!

கசாப்புக்கடைக்கு புத்தர் ஸ்டால் என்று பெயரிடுவதுபோல, பொய்யும் புரட்டுமாக எழுதித்தள்ளுகிற ’மதுரைத்தமிழன்’ என்ற இந்த ஆசாமியின் வலைப்பதிவுக்குப் பெயர் ‘அவர்கள் உண்மைகள்.’

இவரது சமீபத்திய பொய்களின் சில சாம்பிள்களை நான் வாசித்து, அவரது பதிவுகளிலிருந்த சில கருத்துக்களுக்கு எதிராக சில கேள்விகளை வைத்தேன். ஆனால், புளுகர் சாமர்த்தியசாலி; ஒரு விஷயம் குறித்து கேள்வி எழுப்பினால், இன்னொரு விஷயத்தைப் பற்றி நம்மிடமே கேள்வி எழுப்புவார். சரி, அதற்கும் பதில் சொன்னால், இன்னொரு கேள்வி!

இவர்களைப் போன்ற அதிபுத்திசாலிகள் வலையுலகத்தில் மட்டுமல்ல; முகநூலிலும் இருக்கிறார்கள். நக்கலடிப்பது, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியின்றி, உண்மையை எதிர்கொள்ளவோ செரிமானம் செய்யவோ வலுவின்றி, வேண்டுமென்றே எழுதுகிறவனுக்கு எரிச்சலூட்டுவதுபோல எதையாவது எழுதி, மிகவும் புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொள்வதில் படுசமர்த்தர்கள். சரி, இவர்களை உதாசீனப்படுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். செய்யலாம்தான். ஆனால், இவர்களைப் போன்ற பொய்யர்களின் இடுகைகளைப் படித்துவிட்டு, அதை ஆமோதிக்கிற தொனியில் கருத்திடுகிற எனது நட்புகளாவது உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்த இடுகை.

ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். அதைப்போலவே, மதச்சார்பின்மை என்ற பவுடரை மூஞ்சியில் அப்பிக்கொண்டு திரிகிற சில ஆஷாடபூதிகள்தான் தற்போது மோடியைக் குறித்து அதிகம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நம்ம புளுகுமாஸ்டரும் அப்படித்தான். தினமும் மோடியைப் பழித்து, அவரது அபிமானிகளைக் கலாய்த்து ஒரு பதிவாவது எழுதாவிட்டால் ஜன்மம் சாபல்யமாகாததுபோல ஒரு பீதி இவருக்கு.

மோடியைப் பற்றி எழுதினால் உனக்கென்ன?

நீ என்ன ஆர்.எஸ்.எஸ்.ஆசாமியா? பதில்- ‘ஆமாம்’

இந்துத்வா வாதியா? பதில் -’ஆமாம்’

பாஜக-வில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாயா? பதில் -’ஆமாம்’

இவை ஏதும் இல்லையென்றாலும், எனக்கு சரியென்று பட்டால் அதுபற்றி எழுதுவேன். மன்மோகன்சிங் ஆட்சிக்கு ஆட்டம் காண்பித்த அண்ணா ஹஜாரேயையும் நான் விமர்சித்து எழுதியிருக்கிறேன்.  நினைவிருக்கிறதா?

இது மதுரைத்தமிழன் என்ற ஒரு தனி ஆசாமிக்கு எதிரான பதிவு மட்டுமல்ல; அவரைப்போலவே, போகிற போக்கில் புரளி கிளப்பிவிட்டு, தரவுகளைக் கேட்டால் பம்முகிற, விபரங்களைக் கொடுத்தால் விழிபிதுங்குகிற, பரபரப்புக்கென்று பதிவுகளை எழுதிவிட்டு பதிலளிக்கவும் திராணியில்லாத ஆர்வக்கோளாறு அப்புசாமிகளுக்கு எதிரான ஒரு பதிவு.

சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், ‘பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.காரணமாக வளர்ச்சி விகிதம் குறைந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு நிறுத்திவிடாமல், இந்தியா ஒவ்வொரு துறையிலும் எத்தனை வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதைப் புள்ளி விபரங்களுடனும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நமது ’அவர்கள் புளுகுகள்’ அந்த விபரங்களையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, ‘வளர்ச்சி குறைந்தது என்று மோடியே சொல்லிவிட்டார்’ என்று ஒற்றைக்கொம்பைப் பிடித்துக்கொண்டு தன் வலையில் ஒரு பதிவு போட்டு கம்பு சுற்றிக் கொண்டிருந்தார்.

எனது பின்னூட்டங்களில் நான் கேட்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல், ஏதேதோ கேள்விகளைக் கேட்டு திசைதிருப்ப முயன்றார். ‘சரி, மோடி பொய் சொல்கிறார். உண்மை என்னவென்று நீங்களாவது சொல்லுங்களேன். அவர் கொடுத்த புள்ளிவிபரங்களில் ஒன்றிரெண்டையாவது தவறு என்று நிரூபியுங்களேன்,’ என்று ஏறக்குறைய சவாலே விடுத்திருந்தேன். ஊஹும், மனிதர் இன்றளவிலும் அதற்கு பதிலளித்த பாடில்லை. மாறாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் நிறுவனம் குறித்து ‘தி வயர்’ என்ற வலைத்தளத்தில் வெளியான கட்டுரையை எடுத்துப்போட்டு, ‘இதற்கு பதில் சொல்லுங்க,’ என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இறுதியாக அளித்த பதிலுக்கு அவரது எதிர்வினை இல்லை. சோலி முடிஞ்சுது என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

மதுரைத்தமிழன் அவர்களே! உங்களைப் போன்ற ஒரு புளுகரின் முகத்திரையையாவது கிழித்தால்தான், இத்தனை ஆண்டுகள் நானும் பதிவராக இருந்ததற்கு ஒரு பொருள் இருக்குமென்று நினைக்கிறேன்.

அமித்ஷா மகன் குறித்துக் கட்டுரை வெளியிட்ட அந்த வலைத்தளத்தின் மீது 100கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பதும், அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட பல தகவல்கள் தவறானவை என்பதை பல நிதிமேலாளர்களும், நிபுணர்களும் வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதி வருகிறார்கள் என்பதும் அமெரிக்க்க்காவில் இருக்கிற மதுரைத்தமிழனுக்குத் தெரியுமோ தெரியாதோ? அந்தச் சுட்டிகளை இங்கு போடாலாம்தான்; ஆனால், அவை ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பத்திரிகைகள்; அப்படித்தான் போடுவார்கள் என்று சாதிப்பீர்கள். அப்படியானால், இடதுசாரி சார்புடைய ‘தி வயர்’ கட்டுரையை மட்டும் வேதவாக்காக எடுத்துக்கொள்வீர்களா என்று நான் திருப்பிக் கேட்க நேரிடும்.

இப்போதாவது, அமித்ஷா மகன் விஷயத்தில் என்ன ஊழல் நடந்தது என்று விளக்கி ஒரு பதிவு போடத்தயாரா? அதற்கு பதில்போட நான் தயார்! Come on NRI, show some guts.

உண்மையில் மதுரைத்தமிழனுக்கும், அவரைப் போல பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது சேற்றை வாரி இறைக்கிற வேறு சில பதிவர்களுக்கும் பொருளாதாரம், நிதிமேலாண்மை குறித்து நிறையத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதற்கான சான்றுகளை அவர்களது பதிவுகளில் காண முடியவில்லை. எனது அனுமானம் தவறோ?

ஒரு இஸ்திரிக்கடைக்காரர் ரூ.5000/- முதலீடு செய்து தொழிலைத் தொடங்குகிறார். அவரிடம் தினமும் 100 பேர் சட்டையை இஸ்திரி செய்யக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சட்டைக்கும் தலா ரூ.5/- வாங்குகிறார் என்றால் ஒரு நாளைக்கு அவரது Turnover ரூ.500-, ஒரு மாதத்துக்கு ரூ.15000/-, ஒரு வருடத்துக்கு ரூ.1,80,000/-. அவை அனைத்தும் அவருக்குக் கிடைத்த லாபமல்ல. அவருக்கு அவரது தொழில் செய்வதற்கான செலவினங்கள் போக மீதமாவதுதான் லாபம். இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு, அந்தக் கட்டுரையைப் படித்தால், அதை எழுதிய அம்மணி ஒரு அரைக்கிறுக்கு என்பது புரிந்திருக்கும். அதை ஒரு வேதவாக்காக எடுத்துக்கொண்டு, பெரிய சுயம்புபோல பதிவிடுகிறவர்கள் அரையா, முழுசா என்பதை அறிவுள்ளவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

இதுவரை அடுத்தவர்கள் பரப்பிய பொய்யுரைகளைப் பதிவிட்டு வந்தவர், இப்போது புதிதாக ஒரு பொய்யை மிகவும் மெனக்கெட்டுக் கண்டுபிடித்து அதையும் ஒரு பதிவாகப் போட்டிருக்கிறார். அதையும் வாசித்துவிட்டு,  நிறைய நண்பர்கள் வியந்து விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்ன கண்டுபிடிப்பு என்று கேட்கிறீர்களா?

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் ரயில் நிலையமே கட்டப்பட்டது. 1950-ம் ஆண்டுதான் மோடி பிறந்தார். 6-வது வயதில், அதாவது 1956-ல் அவர் அங்கு எப்படி டீ விற்றிருக்க முடியும்?

இதுகுறித்து நான் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி சில மணி நேரங்களாகியும் பிரசுரமாகவில்லை. அதனால்தான், ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். அவனவன் பொய்யை வைத்தே பதிவு போடுகிறபோது, உண்மையை எழுதினால் என்னவாம்?

இவரது புளுகுமூட்டையை அவிழ்ப்போமா?

நான் சீரியஸ் பதிவுகள் எழுதுவதற்கு முன்னர், நிறைய தகவல் சேகரிப்பது வழக்கம். எடுத்தோமோ கவிழ்த்தோமோ என்று கிள்ளிவிட்டுத் துள்ளி ஓடுகிற பழக்கம் எனக்கில்லை.

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் என்ற ரயில் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் அங்கு ரயில் தடமே இல்லையா? அல்லது அப்படியொரு தடமிருந்திருந்தால், அங்கு ரயில் போக்குவரத்தே நடைபெறவில்லையா? அப்படியே நடைபெற்றாலும், அந்த ரயில்கள் வாட்நகரில் நின்றுபோனதா இல்லையா?

மேற்படிக் கேள்விகள் குறித்துக் கொஞ்சம் ஆராய்ச்சி, வேறென்ன, கூகிள் ஸர்ச்சாவது பண்ணிவிட்டுப் பதிவிட்டுத் தொலைத்திருக்கலாம் புளுகு மாஸ்டர்! மோடி மீது உங்களுக்கு இருக்கிற துவேஷம், புளுகுவதில் உங்களுக்கு இருக்கிற அளப்பரிய ஆர்வம், நீங்கள் எது எழுதினாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதற்கென்று நீங்கள் வைத்திருக்கிற ஒரு கூட்டம் - இவையெல்லாம் சேர்ந்து உங்களது அறிவுக்கண்ணை மறைத்து விட்டன.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்நகர் குஜராத் மாநிலத்தின் மெஹ்ஸானா மாவட்டதில் இருக்கிறது. 1887-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அகமதாபாத்- பாலன்பூர் இடையிலான தடத்தில்தான் வாட்நகர் அமைந்திருக்கிறது. இது ராஜ்புடானா ரயில்வே என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. வாட்நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றிருக்கின்றன; பயணிகளை ஏற்றுச் சென்றிருக்கின்றன.

அப்போது பிரிட்டிஷ் அரசு ஆண்டுகொண்டிருந்தது என்பதையாவது புளுகர்கள் அறிந்துவைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வர்த்தகத்துக்காக அவர்கள் சிறிய ஊர்களில் வெறும் நிறுத்தங்களை(Halt) மாத்திரமே வைத்திருந்தார்களே தவிர, கட்டிடம்(Station) எதுவும் எழுப்பவில்லை. முறையான கட்டிடம் 1973-ல் வந்தது என்பது உண்மைதான்.


2005-ல் பிரபல நூல்பதிப்பாளர்களான ‘பென்குயின்’ வெளியிட்டுள்ள, திரு.அச்யுத் யாக்நிக் எழுதியுள்ள ‘Shaping of Modern Gujarat’ என்ற ஆங்கில நூலில் மேற்படித் தகவல்களுக்கான தரவுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட அந்தப் பகுதியின் குறிப்பிட்ட அந்தப் பத்தி உங்களைப் போன்ற புளுகர்களின் பார்வைக்குத் தந்திருக்கிறேன். (பக்கம்.119)

இன்று காழ்ப்புணர்வோடு கரித்துக்கொட்டுகிற ஆங்கில ஊடகங்களில்கூட வாட்நகர் வாசிகள் மோடி தேநீர் விற்றதுகுறித்துப் பேசிய காட்சிகள், அவர் பதவியேற்றபோது ஒளிபரப்பப்பட்டன. இதெல்லாம் அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூசாமல் பொய் பேசுகிற உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இங்கிருக்கிறவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், ‘தொலைஞ்சு போவுது’ என்று இக்கிக்கி என்று இளித்துக்கொண்டு, தங்களையும் மோடிவிரோதிகள் போலக் காட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். பாவம்.

உங்களுக்கு உறுதுணையாக இன்னும் ஓரிரெண்டு பேர் இருக்கிறார்கள். பரிவை.சே.குமார் என்ற இன்னொரு புளுகர். புளுகர் மட்டுமா? தாஜ்மஹாலை தஞ்சை கோவிலுடன் ஒப்பிடுகிறார் இவர். ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் கட்டிய பெரியகோவிலைப் புகழாமல் தாஜ்மஹாலை ‘காதல்சின்னம்’ என்று புகழ்கிறோமாம். புளுகர் நம்பர் டூ-வின் கண்டுபிடிப்பு. தாஜ்மஹாலை உலக வரலாற்று ஆசிரியர்கள் எத்தனைபேர் காறி உமிழ்கிறார்கள் என்பதை விரைவில் எழுதப்போகிறேன். காத்திருங்கள்.

நம் தமிழகத்தின் பெருமையாய் இருக்கிற ஒரு பிரம்மாண்டமான அழகை, அது ஒரு கோவில் என்பதற்காக, ஒரு சமாதியுடனா ஒப்பிடுவது? இதை ஆட்சேபிக்காமல் அங்குபோய் ‘ஆமாம் சாமி’ போட்ட பதிவர்களை நேரில் சந்திக்கும்போது அவசியம் கேட்பேன். ’இது உங்களுக்கே நல்லாயிருக்கா?’ - தயாராக இருங்கள்.

புளுகர்களே! மோடி டீ விற்றதை மணிசங்கர் ஐயர் என்ற மறைகழண்ட காங்கிரஸ்காரன் கிண்டல் செய்ததன் பலன் என்ன தெரியுமா? காங்கிரஸ் மொத்தம் ஜெயித்தது 44 இடங்கள். இன்று மக்களவையில் பெரும்பான்மை; மாநிலங்களவையிலும் பெரிய கட்சி பாஜக தான். இன்று இந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் எத்தனையென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள். இல்லையென்றால், கேட்கிற கேள்விக்குப் பதிலளிக்கிற துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் செய்ய முடியாது என்றால், உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். என்னவென்று?

ஒன்று நீங்கள் புளுகர்கள் அல்லது அடிமுட்டாள்கள்.

Sunday, October 8, 2017

த்ரீ-இன்-ஒன்:03

1. தாஜ்மஹால்



ஒரு செய்தி வந்தால், அதை முழுமையாகப் படிக்காமல், வாயால் வடை சுடுவதில் நம்மில் பலர் சமர்த்தர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு பிரபல பதிவர், தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்களிலிருந்து நீக்கி ஒரு சட்டமே இயற்றி விட்டதுபோல ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டதா, எப்போது என்று விஷயம் தெரிந்தவர்கள் வந்து சுட்டியளித்தால் அவர்களுக்குக் கோடிப்புண்ணியம். மேலோட்டமாக, சமூக வலைத்தளங்களில் வருகிற செய்திகளை வைத்து, இஷ்டத்துக்கு அடித்து ஒரு பதிவு போட வேண்டியது. யாராவது வந்து ‘ஐயா, இது தவறு’ என்று பின்னோட்டம் போடவும் முடியாது. அப்புறம் என்ன, ஆளாளுக்கு பொய்களை அள்ளித் தெளிக்க வேண்டியதுதான்; அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தலையாட்டுகிற ஃபாலோயர்ஸ் வேறு! எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? :-)


உண்மையில், மேம்படுத்தப்பட வேண்டிய சுற்றுலாத்தளங்கள் என்ற பட்டியலில் தாஜ்மஹால் இல்லை. அவ்வளவுதான். இதை அதிகாரபூர்வமாக தெரிவித்ததோடு, தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்புற வளர்ச்சிக்கு ரூ.156 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தாயிற்று. இது ஊடகங்களிலும் வெளியாகி, முதலில் விஷமச்செய்தி பரப்பிய தொலைக்காட்சிகளே பொத்திக்கொண்டாகி விட்டது.  ஆனால், நம் தமிழகத்தில் சில பேருக்கு தாஜ்மஹால் மீது அவ்வளவு பாசம். எவ்வளவு பாசமென்றால், நம் தமிழகத்தில் இருக்கிற மதுரை மீனாட்சி கோவில் ஆகச்சிறந்த சுத்தமான கோவில் என்ற அறிவிப்பைக்கூட உதாசீனம் செய்துவிட்டு, எங்கோ இருக்கிற தாஜ்மஹாலைப் பற்றி இவர்களுக்கு அப்படியொரு அக்கறை! இந்த மாதிரி நாலு பதிவுகள் எழுதி ‘மதச்சார்பின்மை மாணிக்கம்’ என்ற பட்டம் வாங்கிக்கொள்ள அப்படியொரு அரிப்பு இவர்களுக்கு.

தாஜ்மஹால் காதல் சின்னமாம்! மக்கள் வரிப்பணத்தில் ஒரு கொழுப்பெடுத்த மொகலாய மன்னன், தனது எத்தனையோ மனைவிகளில் ஒருவருக்குக் கட்டிய நினைவுச்சின்னம் காதல் சின்னமாம். தாஜ்மஹாலின் நிஜங்களைப் பற்றி சற்றும் அறியாமல், போகிற போக்கில் பொங்கல் வைக்கிற இந்தப் போராளிகளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

கவலை வேண்டாம்! தாஜ்மஹாலைப் பற்றிய உண்மைகளை வெகுவிரைவில் ‘அவமானச் சின்னம்’ என்ற பெயரில் தொடர்கட்டுரையாக எழுதவிருக்கிறேன். மதச்சார்பின்மை பேசுகிற மண்ணாங்கட்டிகள் வந்து, திராணியிருந்தால் நான் முன்வைக்கிற கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்கட்டும்.

2. பொருளாதாரம்....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ப்ப்பா!


டிமானிடைசேஷன் மற்றும் GST காரணமாக ஏப்ரல் தொடங்கி ஜூன் 2017 வரையிலான காலாண்டில் வளர்ச்சி குறைந்திருக்கிறது என்று தனது நீண்ட உரையில் பிரதமர் நரேந்திர மோடி சொன்னாலும் சொன்னார்; பொருள்விளங்காய் உருண்டைகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த பொருளாதார மேதைகள் எல்லாம் விழித்துக் கொண்டுவிட்டார்கள். ‘ஆஹா, மோடியே சொல்லிட்டாரு; நாட்டுல பொருளாதாரம் நாசமாப்போச்சு,’ என்று ஆளாளுக்குக் கிளம்பி விட்டார்கள். அட அரைவேக்காடுகளா, மீதமுள்ள நேரத்தில் மோடி ‘இந்தியாவில் இத்தனை வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறது’ என்று புள்ளிவிபரங்களுடன் அளித்த தகவல்களை எடுத்துப் போட்டு ‘இது தவறு; இதுதான் உண்மையான புள்ளி விபரம்’ என்று பதிவெழுத ஒருத்தரையும் காணோம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?


இப்போதும் ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை. மோடி அந்தக் கூட்டத்தில் தெரிவித்த புள்ளிவிபரங்கள் தவறானவை என்று ‘சரியான(?!)’ புள்ளிவிபரங்களுடன் எழுத யாரேனும் ஒரு புத்திஜீவி பதிவர் வராமலா போய்விடுவார்? காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், ஒருத்தரும் வரப்போவதில்லை. அவர்களுக்கு ஒரு பதிவு எழுதியதும் விஷயம் முடிந்துபோனது. அப்புறம் இருக்கவே இருக்கிறது காதல் கவிதை, கத்திரிக்காய் கவிதை, சமையல் குறிப்புக்குப் போய் பின்னோட்டம் போடுவது, கும்பல் சேர்த்துக்கொண்டு கும்மியடிப்பது...! பொருளாதாரம் பற்றிப் பேசுவதற்கெல்லாம் கொஞ்சம் அடிப்படை அறிவு வேண்டும். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

3. கமல், ரஜினி, சுஹாசினி இன்ன பிறர்....


எனது முந்தைய பதிவொன்றில் எழுதியதுபோல, அரசியலுக்கு வர ரஜினியைவிட கமலுக்கு அருகதை அதிகம். கமல் வந்தால் வெல்வார் என்று பொருளல்ல. ஆனால், ரஜினியை விட கமலுக்கு சமூகப்பொறுப்பு சற்று அதிகம் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கருத்துக்களில் பெரும்பாலானவை எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால், குறைந்தபட்சம் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிற துணிவாவது அவருக்கு இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரை....

தமிழகத்தில் தாமரை மலர வேண்டும்; பாஜக ஆட்சி வர வேண்டும் என்பது விருப்பம். இது உடனடியாக நடைபெறாவிட்டாலும் நாளடைவில் நடந்தே தீரும். அதற்கு ஒத்தாசை செய்வதற்கு வலையுலகத்திலும் வெளியிலும் நிறைய மதச்சார்பின்மை பேசுகிற மண்டூகங்கள் மலிந்து கிடக்கின்றனர். இவர்கள் தினமும் மோடி, மோடியென்று பேசிப்பேசியே, தமிழகத்தில் என் போன்றவர்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வந்தே தீருவார்கள்.

நியாயப்படிப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தொண்டர்களைவிட மோடியை தமிழகத்தில் அதிகம் பிரபலமாக்குகிறவர்கள் இவர்களே!ஆகவே இவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Please continue the good work. :-)











Wednesday, October 4, 2017

த்ரீ-இன்-ஒன்:02


1. மணிமண்டப விவகாரம்:


தனிப்பட்ட முறையில், சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றுக்குப் பணத்தைச் செலவிடுவது அரசாங்கங்களுக்கு வெட்டிவேலை என்பதே என் கருத்து. தமிழகத்தைப் பொறுத்தவரையில், வெட்டிச்செலவு செய்வதையே மக்கள்பணியென்று அடித்துச் சொல்கிற அரசியல்கட்சிகளைத்தான் நாம் பன்னெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு, ஒரு அரசு முன்னெடுக்கிற திட்டங்களை அரசியல் காரணமாக இன்னொரு அரசு நிறுத்தி வைப்பதும் இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை; புதிய தலைமைச்செயலகம்; மெட்ரோ ரயில் என்று பல திட்டங்களில் தலைவர்களின் ஈகோ காரணமாக நமது வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை, கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்தும் மௌனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். அப்போதெல்லாம், இப்போது சிவாஜி மணிமண்டபமா? மக்கள் வரிப்பணம் என்னாவது? என்று பொங்குகிறவர்கள் பவ்யமாகப் பொத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஜெயலலிதா செத்தவுடன் அவனவன் அரசியல் பேசுவதுபோல, இப்போதுதான் பொத்தி வைத்திருந்த பலரது பொறுப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்புகிறது பலருக்கு.


சிவாஜி விஷயத்தில் அவரது ரசிகனாய் எனக்கு ஒரு வருத்தமுண்டு. அவருக்குரிய அங்கீகாரத்தை, அவர் உயிருடன் இருந்தபோது மத்திய மாநில அரசுகள் அளிக்கவேயில்லை என்பதே அது. இறந்தபிறகாவது அந்த உன்னதக்கலைஞனுக்கு உரிய மரியாதை செய்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு அரசு சிலை நிறுவ, அதை அலைக்கழித்து, மூலையில் கழியவிட்டு, அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு எந்த அரசுக்கும் இதுவரை துப்பில்லாமல் போய்விட்டது. ஒரு கோடி ரூபாய்! உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறவே, மன்மோகன் சிங், சோனியா காந்தி வருகிறார்கள் என்பதற்காக, திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணியை அழைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு தற்காலிகமான கூரையை அமைக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம், நாம் கூவினோமா என்றால் இல்லை.


ஆகவே, சிவாஜியை அவமானப்படுத்துகிற பாரம்பரியத்தை அவரது எதிரிகளுடன் சேர்ந்து அறிவுஜீவிகளும், திடீர் சமூகப்பொறுப்பாளிகளும் இனிதே தொடர்கின்றார்கள். அவர்கள் வாழ்க!


2. பொருளாதாரம் குறித்த பதிவுகள்(?)


முன்னெல்லாம் வலைப்பதிவுகளில் திடீர் கவிஞர்கள், திடீர் திரைக்கதை விற்பன்னர்கள், திடீர் இலக்கியவாதிகள் கிளம்புவார்கள். தற்போது ‘திடீர் பொருளாதார நிபுணர்கள்’ சீசன் போலிருக்கிறது. ஒருவர் இந்தியாவை எத்தியோப்பியாவுடன் ஒப்பிட்டே, ‘சோலி முடிஞ்சுது’ என்று மோர் ஊற்றி விட்டார். யாரும் கவலைப்படத் தேவையில்லை; இந்தியப் பொருளாதாரம் கட்டுப்பாடாக, வலுவான அடிப்படைகளின் ஆதாரத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.


டிமானிடைசேஷனுக்குப் பிறகு 2% GDP தான் வருமென்று மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் பூச்சாண்டி காட்டினார்கள். அவர்கள் வாதம் பொய்த்துப் போய்விட்டது. Fiscal Deficit அதாவது பற்றாக்குறை என்பது பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பொருளாதார நிபுணர்களுக்கே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகம் போரடிக்காமல், சில உதாரணங்களை மட்டும் கூறி, சில பொருளாதாரக்குறியீடுகள் இருபுறமும் கூர்வாய்ந்த கத்தி என்பதை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.


ஜூலை 17 மாத இறுதியில் தொடங்கி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருந்து, மிக சமீபத்தில்தான் பலவீனமடைந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு டாலரின் மதிப்பு ரு.63/ ஆக வலுப்பெற்றது. இதனால், யாருக்கு லாபம்? இறக்குமதி செய்பவர்களுக்கு. யாருக்கு நஷ்டம்? ஏற்றுமதி செய்பவர்களுக்கு. விளைவு? Balance of payments என்று சொல்லக்கூடிய நிலுவைத்தொகை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஆனால்,உண்மையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வலுவடைவதுதானே விரும்பத்தக்கது? இதுபோன்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்கு அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


டிமானிடைசேஷன் மூலம் windfall gains வருமென்று யாரும் ஆருடம் கூறவில்லை. பல தொடர்- நடவடிக்கைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால், அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், ஹவாலாப் பணப்புழக்கம், தீவிரவாதத்துக்கு உதவுதல், கள்ள நோட்டுப்புழக்கம், கருப்புச்சந்தைகள் ஆகியவற்றைப் பெருமளவு குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. இன்ஸ்டண்ட் வெற்றியா என்றால் இல்லை; அவ்வளவே!  நேற்றைய செய்தியின் படி கடந்த 15 நாட்களில், சுமார் 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் சட்டப்படி முடக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.


GST! இது வரிவிதிப்பு என்று ஒரு பொய்ப்பிரச்சாரம்! பல அடுக்குகளிலிருந்த பலமுனை வரிகளை எளிமையாக்கி, ஒரே விதிப்பாக்குவதுதான் இதன் நோக்கம். இதை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்களை அழைத்துப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பான்மையானோரின் சம்மதம் கிடைத்தபின்னர், முறைப்படி லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான காலாண்டுக்கான புள்ளி விபரங்களை வைத்து ஜி.எஸ்.டியால் தொழில்துறை முடங்கிவிட்டது என்று பேசுவதெல்லாம் அவசரக்குடுக்கைத்தனம். டிஸம்பர் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.


3. தமிழ்மணம்


தமிழ்மணத்துடன் எனக்கு ஒரு மனக்கசப்பும் இல்லை; அவ்வளவு பெரிய பதிவன் அல்ல நான். ஆனால், ஒவ்வொரு பதிவிலும் ‘த.ம.ஓ. ந;1’ என்று பல பதிவுகளில் பலர் குறிப்பிடுவது, எழுதியவருக்கும் அவர் எழுத்துக்கும் செய்கிற அவமரியாதை என்று நான் கருதுகிறேன். எனது எழுத்து பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்கு ஒரு ஓட்டுப்போட்டால்தான் மரியாதை என்பதும், போடவில்லையென்றால் என் எழுத்துக்கு மரியாதை இல்லை என்று சிலர் புலம்புவதும் சகிக்கவில்லை. இப்படி நான் எழுதுவது ஏற்கனவே என்னுடன் மனக்கசப்பு கொண்டிருக்கிற பலரை இன்னும் விலக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன். If you don't like it, I simply don' care.

Thursday, August 31, 2017

த்ரீ-இன்-ஒன் பதிவு

ஒன்று: கிரிக்கெட்


என்னுடைய மிகச்சிறிய வாசிப்பனுபவத்தில் சுஜாதாவின் சில கட்டுரைகள் ’பசக்’கென்று ஞாபகம் இருக்கின்றன. அதில் ஸ்ரீரங்கம்-தஞ்சாவூர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி, விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்து ஒரு அனாயசாமான கட்டுரை எழுதியிருந்தார். 

அனேகமாக அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த ரங்கு கடை போல ஒரு தூங்குமூஞ்சி கடையில் நாமும் நம் ஊர்களில் எப்போதாவது கடனுக்கு கத்திரி சிகரெட் வாங்கிப் புகைத்திருக்கலாம். அந்த மேலவீதி அம்பிபோல உருப்படியாக ஒரு பேட், பால் கூட இல்லாமல் வெளியூர் டீமையெல்லாம் மாட்ச் ஆடக் கூப்புடுகிற சவடால் சினேகிதர்களும் நமக்கு அவசியம் இருந்திருக்கிறார்கள். சுஜாதா பாணியிலேயே ‘கச்சலாக’ இருந்து, ஆட்டம் பார்க்க அழகாய் இல்லாதபோதும் பந்தைத் ’தேக்கி அடிக்கிற’ சாமர்த்தியமுள்ள நோஞ்சானை நாமும் பார்த்திருப்போம். ’த்ரோ’ மாதிரி பந்து போட்டு ’சாலக்காக’ விக்கெட் எடுப்பவர்களையும் நாம் அறிவோம். 

இவ்வாறாக, ‘தோற்பது நிஜம்’ என்று நெற்றியில் ரெட்-ஆக்ஸைடால் எழுதப்பட்ட அணிகள் சில சமயங்களில் ராட்சச டீம்களை மண்ணைக் கவிழ வைக்கிற மகோன்னதங்களும் நம் அனுபவத்தில் இருக்கத்தான் செய்யும். (அடியேனின் அணி செயிண்ட் ஜோசப் அணியை பாளையங்கோட்டையில் தோற்கடித்துவிட்டு நான்குநேரி வரை பாடிக்கொண்டு வந்து, வள்ளியூர் தாண்டுமுன் தொண்டை வற்றியதும் ஞாபகத்துக்கு வருகிறது. வழக்கம்போல நான் அதிலும் ஒன்றும் கிழிக்கவில்லை.)

இதைப்போலத்தான்! தென் ஆப்பிரிக்காவுக்குத் தண்ணி காட்டிய (வாடிக்கையான) மதர்ப்பில் சற்றே ஓவராக காலரை உயர்த்திய இங்கிலாந்து அணியை, பார்த்தாலேயே பரிதாபம் வரவழைக்கிற ஒரு மேற்கு இந்திய அணி, லீட்ஸ் மைதானத்தில் பதம் பார்த்திருப்பது, சுஜாதாவின் கட்டுரை உட்பட பல சங்கதிகளை ஞாபகப்படுத்தியது. கிரிக்கெட் திமிர் பிடித்தவர்களின் மண்டை வீங்கக் குட்டும் என்பதற்கான சமீபத்திய உதாரணம். இங்கிலாந்து அணி ஒரு தொடர் ஜெயித்தால் பதினோரு பேர்களும் இருபத்தி இரண்டு பேர்களுக்கான வீறாப்பு பேசுவது வழக்கம். பின்னால், சொப்பை அணியிடம் அடிவாங்கி, கேப்டன் பதவி விலகி, போன மாதம் லங்காஷேர் கவுன்டியில் முன்னூறு ரன்கள், முப்பது விக்கெடுகள் ( 45 மாட்சுகளில்) எடுத்தவரை கேப்டனாக்குவதும் பாரம்பரியம் என அறிக.


அப்புறம், நம்ம இந்தியா இலங்கையை அடித்து நொறுக்கியது பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.  பதினோரு பல்குத்தும் குச்சிகளை ஈவு இரக்கமில்லாமல் நொறுக்கியது குறித்துப் பெருமைப்பட்டால், கோலிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என்று பயில்வான் பக்கிரிகள் காத்திருக்கிறார்கள். அம்புட்டுத்தேன்.


2.அரசியல்

கமல்ஹாசன் மீது எனக்கிருக்கிற அபிமானம், ஓ.பி.எஸ் மீது டிடிவி.தினகரனுக்கு இருக்கும் அபிமானத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று இங்கு தொடர்ந்து வருகிறவர்களுக்குத் தெரியும். இருந்தும், தற்போது அவர் ‘ட்விட்டர்’ல் விடுகிற கீச்சுகளுக்கு நான் ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன். கமல் - ரஜினி இருவரில் அரசியலுக்கு வருகிற தகுதி யாருக்கு அதிகம் இருக்கிறது என்று கேட்பதைவிட, அந்தத் தகுதி முதலில் யாருக்கு இருக்கிறது என்று கேட்டால், நிச்சயம் கமல்ஹாசனுக்கே இருக்கிறது. போதாக்குறைக்கு ‘சுயமரியாதை’ வீரர் வேறு! இந்து மதத்தை எள்ளி நகையாடுவதில் சமர்த்தர் என்பது கூடுதல் தகுதியாகும்.  நிச்சயம் மக்கள் கமலுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றே நம்புகிறேன். அட, ஓவியாவுக்குப் போட்டவர்கள், கமலுக்குப் போடாமலா இருப்பார்கள்?

சீரியஸாகவே, கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிக்கலாம். சீரியஸாகவே, அவரது கருத்துக்கள் சிறப்பாகவே இருக்கின்றன. சீரியஸாகவே, அவர் எடுத்திருக்கிற நிலைப்பாடு சரியானது; பொருத்தமானதும் கூட! 

இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாராம்? ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாய்பொத்திக்கொண்டு இருந்தாரே?’


இது சொத்தை வாதம்!

ஜெ. உயிரோடு இருந்தபோது, நம் வலையுலகிலேயே கூட எத்தனைபேர் துணிச்சலாக எழுதினார்கள்? உண்மைத்தமிழன், ஜாக்கி சேகர், புதுகை அப்துல்லா..... அட, இன்னும் ஐந்து விரல் கூட தேறவில்லையே!

ஜெ..உயிரோடு இருந்திருந்தால், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியிருப்பார்களா? சந்தேகம்தான்! ஓ.பி.எஸ்-ஸை ‘மிக்சர்’ என்று நக்கலடித்ததுபோல, ஜெவை யாராவது நக்கலடித்திருப்பார்களா? ஊஹும்!

இதில் கமல் மட்டும் என்ன பாவம் செய்தார்? அவரும் உறுமீன் வருமளவு வாடியிருந்து ட்வீட்டுகிறார். 

தனது படங்களின் படப்பிடிப்புக்களைக் கூட தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களில் வைத்துக்கொள்கிற ரஜினியை விட, கமல் தைரியமானவர் என்றுதான் தோன்றுகிறது. மேலும், தமிழகத்தைப் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? கல்யாண மண்டபத்தில் கூடுகிற விசிலடிச்சான் குஞ்சுகளை தமிழக மக்கள் என்று நினைத்தால் அப்புறம் கதை கந்தலாகி விடும். அம்புட்டுத்தேன்.


3. ஆன்மீகம்


ஹர்யானாவில் குர்மீத் சிங் ராம் ரஹீம் இன்சான் என்ற மதகுரு பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதை வைத்துக் கொண்டு, சில அரைவேக்காடுகள் இந்துமதத்தை மட்டம் தட்டி எழுதிக் கொண்டு வருகின்றன. அவர் பிறப்பால் ஒரு சீக்கியர் என்பது ஞாபகம் இருக்கட்டும். பா.ஜ.க மட்டுமல்ல, காங்கிரஸ் மட்டுமல்ல, முலாயம் சிங் யாதவ் உட்பட பல அரசியல் தலைவர்கள் அவருடன் அனுசரித்துப் போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

”சரி, கேரளாவில் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கிறித்துவப் பாதிரியார்கள் குறித்து நமது செக்யூலர் பதிவர்கள் ஏன் இன்னும் கொதிக்கவில்லை?

ஜாகீர் நாயிக் என்னும் இஸ்லாமிய மதகுரு, மதமாற்றம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததைப் பற்றி ஏன் எழுதவில்லை?”


..................ன்று கேள்விகள் எழலாம். கேட்க வேண்டாம்.


பி.கு:

எழுதாமல் இருந்தால் ‘ஏன் எழுதுவதில்லை?’ என்று கேட்க வேண்டியது. எழுதினால் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியது. ஆனால், பெண் பதிவர்கள் பதிவுகளுக்கு மட்டும் தவறாமல் போய் கருத்தும் எழுதி, த.ம.ஓ.ந-வையும் குறிப்பிட வேண்டியது.

வலையுலகம் மாறவேயில்லை. அட போங்கய்யா!















Sunday, July 9, 2017

பாலாமணியும் பாகு’பல்லி’யும்

பாலாமணியும் பாகு’பல்லி’யும்


பாலாமணி அடுக்களையிலிருந்து விரைந்து வந்த அதிர்வில், கிட்டாமணியின் மூக்குக்கண்ணாடி நழுவி நாக்குக்கண்ணாடியானது.


”வீட்டைப் பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம, ஆதித்யா டிவியைப் பார்த்து கெக்கெபிக்கேன்னு சிரிச்சிட்டிருக்கீங்களே! இது உங்களுக்கே நல்லாயிருக்கா?”


காஸ்ட்யூம் மாற்றிவந்த காஞ்சனா பேய் போல, மூச்சிரைத்தவாறு முழியை உருட்டி நின்ற மனைவியைப் பார்த்த கிட்டாமணி ஒரு கணம் வெலவெலத்தாலும் சுதாரித்துக் கொண்டான்.


”அபாண்டமாப் பேசாதே!” கிட்டாமணி வெடுக்கென்று பதிலளித்தான். “வாய்விட்டுச் சிரிச்சா ஆதித்யா டிவி பார்க்கறேன்னு அர்த்தமா? நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். சரியாப் பாரு!”


”போதும் உங்க தேசவிசாரம்!” பாலாமணி கோபத்துடன் இரைந்தாள். “ஒரு நிமிஷம் அடுக்களைக்கு வந்து பாருங்க அநியாயத்தை!”


”அநியாயமா?” கிட்டாமணி குழம்பினான். “அடுக்களையிலே 25 வருஷமா  நீதானே அநியாயம் பண்ணிட்டிருக்கே?”


”என் சமையலையா கிண்டல் பண்றீங்க?” பாலாமணியின் குரல் பாரதிராஜா குரல்போல கரகரத்தது. ”காராமணி மாதிரி இருந்த உடம்பு கல்யாணத்துக்கு அப்புறம்தான் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி உப்பியிருக்கு. மறந்திடாதீங்க!”


”பார்த்தியா? உன் சமையலைப் பத்திப்பேசினா, நீயே குப்பைத்தொட்டியைப் பத்திப் பேசறே!”


”நீங்களா இப்படி வாயடிக்கிறீங்க?” பாலாமணியின் குரலில் அதிர்ச்சியும் வியப்பும்  சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்கலந்திருந்தது.


“சரிசரி, அடுக்களையிலே என்ன அநியாயம் சொல்லித்தொலை! நான் புதுசா டாண்டெக்ஸ் ஜட்டி வாங்கினதை ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடணும்.”


”ஜட்டி வாங்கினதையெல்லாமா ஃபேஸ்புக்குல ஸ்டேடஸாப் போடுவாங்க?”


”நீ வேற, அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”


”எப்படியோ போங்க! இப்ப கிச்சனுக்கு வாங்க! இப்படியே போச்சுன்னா இனிமே நான் அடுக்களைப்பக்கமே போக மாட்டேன்.”

”அட, இன்னிக்கு நல்ல செய்தி வரும்னு ஹரிகேசவ நல்லூர் வெங்கட்ராமன் இதைத்தான் டிவியிலே சொன்னாரா?”


”முதல்லே அடுக்களைக்கு வந்து பாருங்க! உங்க பேச்சு சுத்தமா நின்னுடும்!”


‘வழக்கமா சாப்பிட்டதுக்கப்புறம்தானே பேச்சு நிக்கும்?’ குழம்பியபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கிட்டாமணி.


”ஜன்னல் கதவு திறந்திருக்கு பார்த்தீங்களா?”


”இதுவா அநியாயம்? இது திறந்திருக்கப்போய்த்தானே பக்கத்துவீட்டுல விஜிடபிள் பிரியாணியா சிக்கன் பிரியாணியான்னு கண்டுபிடிக்க முடியுது?”


”ஏன்? நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?”


“மறக்க முடியுமா?” கிட்டாமணி பெருமூச்சு விட்டான். ”அதுக்கப்புறம்தானே கோழிக்கறியையும் தடைபண்ணுங்கன்னு மோடிக்கு மகஜர் அனுப்பினேன்.”


“அன்னிக்கு விழுந்து விழுந்து சாப்பிட்டீங்க! இது சிக்கன் - 65 இல்லை; சிக்கன் 302ன்னு புகழ்ந்தீங்க!”


“உனக்கு ஐ.பி.ஸி.கோட் தெரியலேன்னா நான் என்ன பண்ணட்டும்?”


”ஜெயலலிதா இல்லேன்னதும் ஆம்பிளைங்க ஓவராப் பேச ஆரம்பிச்சிட்டாங்க!.” பாலாமணி கரித்துக் கொட்டினாள். “முதல்லே இந்த அநியாயத்தைப் பாருங்க!”


”என்ன அநியாயம்?” எரிச்சலில் கூச்சலிட்டான் கிட்டாமணி.”திரும்பத் திரும்ப அநியாயம் அநியாயம்னு டீஸர் ரிலீஸ் பண்றியே தவிர மெயின் பிக்சரை ரிலீஸ் பண்ணவே மாட்டேங்கிறியே?”


”சுவத்துல என்ன இருக்கு பாருங்க!”


”சுவத்துலயா?  ஒட்டடை இருக்கு! வழக்கமா நம்ம வெடிங் ஆனிவர்சரி வரும்போதுதானே ஒட்டடையடிப்பேன்? அப்பப் பார்த்துக்கலாம்.”


”நான் சொல்ல வந்ததே வேறே!” என்று பல்லைக்கடித்தாள் பாலாமணி. “ஆமாம், ஏன் நம்ம கல்யாண நாளன்னிக்கு மட்டும் வீட்டை ஒட்டடை அடிக்கிறீங்க?”


”என் ரேஞ்சுக்கு நான் அதைத்தானே அடிக்க முடியும்.”


”சரிசரி, முதல்ல இந்த அநியாயத்தை….”


”கடுப்பேத்தாதே பாலா!” கிட்டாமணி இடைமறித்து எட்டுக்கட்டையில் கூவினான். “மரியாதையா என்ன மேட்டர்னு சொல்றியா இல்லே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்குக் கூட்டிட்டுப் போட்டுமா?”


”சுவத்துல கருகருன்னு ஒரு பல்லி இருக்கு பாருங்க!”


அப்போதுதான் கவனித்தான். சுவற்றில் கருப்பாக, அசிங்கமாக, டிவி சீரியல் ஹீரோவைவிடக் கண்றாவியாக ஒரு பல்லி இருந்தது.


”ஆமாம்; பல்லி!”


”அப்பாடா! இப்பவாச்சும் பார்த்தீங்களே?”


”நேரடியா அடுக்களையிலே ஒரு பல்லியிருக்குன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு ஏன் ரஜினிகாந்த் மாதிரி சுத்திவளைச்சுப் பேசி கழுத்தை அறுக்கிறே?”


”எனக்குப் பல்லின்னாலே ரொம்ப பயம்,” பாலாமணி கிட்டாமணியிடம் ஒண்டிக்கொண்டாள். “அதுலயும் இந்தப் பல்லியைப் பாருங்க, குண்டுகுண்டா, கொழுக்மொழுக்குன்னு பாகுபலி பிரபாஸ் மாதிரியே இருக்கு.”


”அப்ப அனேகமா அனுஷ்கா பல்லியும் இருந்தாகணுமே!”


”ரொம்ப முக்கியம்! முதல்லே அந்தப் பல்லியைத் துரத்துங்க!”


”ஒரு காப்பி போடேன்!”


”பல்லியைத் துரத்தறதுக்குக் காப்பி குடிக்கணுமா?”


”குடிக்க வேண்டாம். நீ காப்பி போட்டா அந்த வாசனைக்கே அது கூவத்தூருக்குக் குடிபோயிடும்.”


”ஒரு பல்லிக்கு முன்னாலே என்னை அவமானப்படுத்தாதீங்க! இந்தப் பல்லி இருக்கிறவரைக்கும் வீட்டுல அடுப்புப் பத்த வைக்க மாட்டேன். அப்புறம் வெளியிலேதான் சாப்பாடு.”


”எனக்கு அரை டஜன் இட்லிபோதும்; உனக்கென்ன வாங்கிட்டு வரட்டும்?”


”ஒண்ணும் வேண்டாம்! பல்லி போறவரைக்கும் நீங்க சமையல் பண்ணுங்க! ஓ.கேயா?”


”அப்ப போனவாட்டி வாங்கின ஜெலூசில் இன்னும் ஸ்டாக் இருக்கா?”


“இப்பத்தான் புரியுது,” அரசியல்வாதி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிபோலச் சிரித்தாள் பாலாமணி. “உங்களுக்குப் பல்லின்னா பயம். அதான் எதெதையோ சொல்லி ஜகா வாங்கறீங்க.”


”நான் பாம்பையே அடிச்சிருக்கேன் தெரியுமா?” இல்லாத மீசையை இருக்கிற விரலால் முறுக்கினான் கிட்டாமணி.


”போதும் போதும்!” அங்கலாய்த்தாள் பாலாமணி. ”சென்னையிலே தண்ணிப்பஞ்சம் வருது. ஒழுங்காப் பம்பு அடிக்கக் கத்துக்குங்க. பாம்பை அடிக்கிறாராம்.”


கிட்டாமணி கிளர்ந்தெழுந்தான்.


”அனாவசியமா என் வீரத்தைக் கிளப்பிவிடாதே! இன்னும் அரைமணி நேரத்துல இந்தப் பல்லியை வீட்டை விட்டு விரட்டறேன் பாரு! இந்த வீட்டுல ஒண்ணு நான் இருக்கணும்; இல்லை இந்தப் பல்லி இருக்கணும். இரண்டில ஒண்ணு பார்த்திடறேன்.”


ஐந்து நிமிடத்தில் கிட்டாமணி வீட்டை விட்டுக் கிளம்பினான்.


”என்னங்க, வீட்டுல இருக்கிற பிரச்சினைக்கு வெளியே போனா எப்படி? கொஞ்சம் பொறுமையா இருங்க!”


”சும்மாயிரு பாலா, இந்தக் கிட்டாமணி முன்வைச்ச காலைப் பின்வைக்க மாட்டான்.”


”ஐயோ! சொல்றதைக் கேளுங்க,” எரிச்சலுடன் கூறினாள் பாலாமணி. “ நீங்க வேஷ்டின்னு நினைச்சு பெட்ஷீட்டைக் கட்டிக்கிட்டு வெளியே கிளம்பறீங்க!”


கிட்டாமணிக்குத் தனது வரலாற்றுப்பிழை புரிந்தது. மீண்டும் அறைக்குச் சென்று, பெட்ஷீட்டை அவிழ்த்துவிட்டு, வேஷ்டியை எடுத்தவன், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று, பெட்ஷீட் இருந்த இடத்திலிருந்து ஒரு பத்து அடி தள்ளி நின்று கட்டிக்கொண்டு கிளம்பினான்.


”அடுக்களையிலே இருக்கிற பல்லியை விரட்டச்சொன்னா, இவர்பாட்டுக்கு வெளியே கிளம்பிட்டாரே, ஒருவேளை வள்ளூவர்கோட்டம் பக்கத்துல போய் போராட்டம் பண்ணுவாரோ?”


அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்போல குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி. சில நிமிடங்கள் கழித்து, கிட்டாமணி கையில் சில அட்டை டப்பாக்களுடன் வீடு திரும்பினான்.


”என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?”


”சீக்ரட்!” என்று கம்பீரமாகக் கூறியவாறே அடுக்களைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான் கிட்டாமணி. சிறிது நேரத்துக்கு உள்ளேயிருந்து கடமுடா கடமுடாவென்று சத்தம் கேட்டது. பிறகு, வெளியே வந்து கிட்டாமணியைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தான். அவனது முகத்தில், வாஷர் போன குழாயிலிருந்து தண்ணீர் ஒழுகுவதுபோல பெருமை ஒழுகியது.


”இனிமேல் பல்லி மட்டுமில்லை; புழுபூச்சி கூட நம்ம வீட்டுக்குள்ளே வராது.”


பாலாமணிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், சில நிமிடங்கள் கழித்து அடுக்களைக்குள் சென்றபோது, பல்லியைக் காணவில்லை. வழக்கமாக ‘சின்க்’ பக்கம் அணி அணியாய்ப் பிரிந்து ஐ.பி.எல்.விளையாடும் கரப்பான் பூச்சிகள் கூடக் காணாமல் போய்விட்டன.


இரவு வந்தது. பழைய படங்களில் வரும் ஃபர்ஸ்ட் நைட் காட்சிபோல, கையில் பால் டம்ளருடன் கணவரை நெருங்கினாள் பாலாமணி.


“ஆனாலும் நீங்க ரொம்ப கெட்டிக்காரர்தான்,” குக்கரில் வேகவைத்த குதிரைவால் அரிசிபோலக் குழைந்தாள் பாலாமணி. “அரை மணி நேரத்துல பல்லி, பாச்சா எல்லாத்தையும் விரட்டி அடுக்களையைச் சுத்தமாக்கிட்டீங்களே!  உங்களுக்கு உடம்பெல்லாம் ஊளைன்னுதான் இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன்; உடம்பெல்லாம் மூளைன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுது.”


கிட்டாமணி ரொமாண்டிக்காக மனைவியைப் பார்க்க, ஒரு கணம் அவளுக்குக் காணாமல்போன பல்லி ஞாபகம் வந்தாலும், சமாளித்தாள்.


“சொல்லுங்க, என்ன வாங்கிட்டு வந்தீங்க? என்ன பண்ணி பல்லி, கரப்பான் பூச்சியை எல்லாம் விரட்டினீங்க? ப்ளீஸ், சொல்லுங்க!”


“கொஞ்சம் செலவு பண்ணினேன் பாலா,” சிரித்தான் கிட்டாமணி. ”ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போயி ரெண்டு சி.சி.டிவி கேமராவும், மைக்ரோபோனும் வாங்கிக் கொண்டுவந்து சும்மா அடுக்களையிலே மறைவா வைச்சேன். அதைப் பார்த்திட்டு பல்லி பயந்து ஓடிப்போயிடுச்சு.”


“எனக்குப் புரியலியே!” பாலாமணி மீண்டும் குழம்பினாள். “சிசிடிவியும், மைக்கும் வைச்சா பல்லி ஏன் பயப்படணும்?”


“ஏன்னா, கேமிராவையும் மைக்கையும் பார்த்ததும் பல்லிக்கு, நாம அதை வைச்சு ‘பிக்-பாஸ்’ மாதிரி ரியாலிட்டி ஷோ நடத்தறோமோன்னு சந்தேகம் வந்திருச்சு. ஆயிரம் இருந்தாலும் பிராணிகள் இல்லையா? மனுசங்களை மாதிரி சீப்பான பப்ளிசிடிக்காக அதுங்களோட வக்ரத்தையும் பலவீனத்தையும் மத்தவங்க பார்க்கவிடறது அதுங்களுக்கே அசிங்கமா இருக்காதா? இதுக்கப்புறமும் இந்த வீட்டுல இருந்தா, நமக்கும் மனுசங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு தோணியிருக்கும். அதான், பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் டீசண்டா வீட்டைக் காலிபண்ணிட்டுப் போயிருச்சு!”

பி.கு: பிரபாஸ் பல்லி படம் கிடைக்காததால், தமன்னா பல்லி படம் மேலே தரப்பட்டுள்ளது என அறிக.