Saturday, January 23, 2010

ஆமைபோல பொறுமைகொள்ளு!

தாடிமீசை வச்சிடாம தவமெதுவும் செய்திடாம
தத்துவமாக் கொட்டுறானே மேதையாட்டமா-அட
ஓடியாடும் வயசுலேயே ஓஞ்சுபோன கெழவனாட்டம்
ஓரத்துலே ஒதுங்குறானே பேதையாட்டமா

கூனுபோட்டு தலகுனிஞ்சு குத்துயிராக் கொலையுயிரா
குறுகிப்போயி வாழ்க்கைசிலரு நடத்துறாங்களே-அட
தானும்நொந்து தனிமையாகி தக்கநண்பர் துணையும்போயி
தளர்ந்துபோயி நாளதெனமும் கடத்துறாங்களே

பாதிதூரம் வந்தபின்னே பயந்துபோயி சுவத்தில்பட்ட
பந்துபோல பறந்து திரும்பி போகலாகுமா?-அட
ஊதினாலே பறந்துபோகும் இலவம்பஞ்சு போலிருந்து
உள்ளுக்குள்ளே தினம்பொசுங்கி சாகலாகுமா?

கண்முழிச்சு ஜன்னலுக்கு வெளியிருக்கும் உலகம்பாரு
காற்றைக் கொஞ்சம் நெஞ்சுக்குள்ளே சேகரிக்கலாம்
எண்ணுவதில் தெளிவிருந்தா எதுவந்தாலும் துணிவிருந்தா
எப்போழுதும் குழந்தைபோல நீ சிரிக்கலாம்

ஆமைபோல பொறுமைகொள்ளு ஆலைப்போல உறுதிகொள்ளு
ஆசைப்படுவ தத்தனையும் ஓடிவந்திடும்-அட
தீமையின்றி மனசிருக்க தினமும்கோவில் சென்றுவந்தா
தெய்வகுணம் அத்தனையும் ஒடிவந்திடும்

No comments: