Thursday, January 21, 2010

திரைவிமர்சனம் எழுதுவது எப்படிங்கேன்?

எல்லாரும் தமிழ்ப்படங்களைப் பத்தி விமர்சனம் எழுதி ஒரு பதிவை ஒப்பேத்துற மாதிரி நாமளும் செஞ்சா என்னன்னு தோணுச்சு! முயற்சி பண்ணித்தான் பார்ப்போமேன்னு நான் சமீபத்துலே பார்த்த "குட்டி" படத்துக்கு விமர்சனம் எழுத முயற்சி பண்ணுனா, பாளாப்போன புத்தி ஸ்ரேயாவை விட்டு அங்கிட்டு இங்கிட்டு நகர மாட்டேக்கு! எப்புடித்தான் அலுக்காம சலிக்காம எல்லாப் படத்தைப் பத்தியும் விமர்சனம் எழுதுறாங்களோ? இதுக்கெல்லாம் கோச்சிங் கிளாஸ் இருக்கான்னு விசாரிச்சு, கோடம்பாக்கம் கோந்துசாமி சனி,ஞாயிறுலே சாயங்காலம் ஆறுலேருந்து ஏழுவரைக்கும் எடுக்காருன்னு கேள்விப்பட்டு முன்கூட்டியே அப்பாயின்மென்டெல்லாம் வாங்கிட்டுப்போனேன். அவருக்குத் தெரியாம அவர் வகுப்பு எடுக்கையிலே அதை திருட்டுத்தனமா பதிவு பண்ணிட்டேன். நீங்கள்ளாம் படிக்காண்டாமா?

சே.கா: வணக்கம் அண்ணே! எல்லாரும் சினிமா விமர்சனம் எழுதுறாவிய. எனக்கு மட்டும் வரவே மாட்டேக்கு.

கோ.கோ.சாமி: உன்னை ஒரே நாளுலே பெரிய விமர்சகனாக்கிருவேன் பாரு. இதுக்கு முன்னாடி எந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதினே?

சே.கா: சமீபத்துலே "குட்டி" படம் பார்த்து எழுதினேன்.

கோ.கோ.சாமி: கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. விமர்சனம் எழுதினியான்னு தானே கேட்டேன். படம் பார்த்தியான்னா கேட்டேன்?

சே.கா: அண்ணே....?

கோ.கோ.சாமி: படம் பார்க்குறது வேறே; விமர்சனம் எழுதுறது வேறே. படம் பார்த்திட்டுத் தான் விமர்சனம் எழுதணுமுன்னு ஏதாவது சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருக்கா?

சே.கா: அதெப்படி படம் பார்க்காம விமர்சனம்...?

கோ.கோ.சாமி: நீயோ படம் பார்த்திட்டே தானே? அப்ப விமர்சனம் எழுதறது உனக்காகவா மத்தவங்களுக்காகவா?

சே.கா: மத்தவங்களுக்காகத் தாண்ணே!

கோ.கோ.சாமி: மத்தவங்களுக்காக விமர்சனம் எழுத நீ ஏன் உன் காசை செலவு பண்ணிப் படம் பார்க்கணும்? லூசா நீ?

சே.கா: விமர்சனம் எழுத ஏதாவது தெரிஞ்சுக்க வேண்டாமா?

கோ.கோ.சாமி: அதுக்குத்தான் ஆயிரக்கணக்குலே வலைப்பதிவு இருக்கில்லே? பத்து மணி ஷோ பார்த்திட்டு, பன்னிரெண்டு மணிக்கே வலைப்பதிவுலே விமர்சனம் வருதா இல்லியா? அதுலே நாலஞ்சு விமர்சனத்தைப் படிச்சீன்னா, உனக்கே படம் இப்படித்தானிருக்குமுன்னு குத்து மதிப்பாத் தெரிஞ்சிராது...?

சே.கா: சுமாராத் தெரிஞ்சிருமண்ணே!

கோ.கோ.சாமி: சுமாராத் தெரிஞ்சதை வச்சு சுமாரா விமர்சனம் எழுத வேண்டியது தானே?

சே.கா: அப்போ, இன்னிக்கு இவ்வளவு தான் டியூஷனுங்களா?

கோ.கோ.சாமி: உனக்கு எந்த ஊரு? சுத்த வெவரமில்லாத ஆளாயிருக்கியே? தமிழ் சினிமாவைப் பத்தி விமர்சனம் பண்ணனுமுன்னா அதுக்கு என்னெல்லாம் செய்யணும் தெரியுமா?

சே.கா: என்னண்ணே செய்யணும்?

கோ.கோ.சாமி: உனக்கு அகிரா குரோசாவா தெரியுமா?

சே.கா: எனக்கு காரசேவு தான் தெரியும்.

கோ.கோ.சாமி: ஐயையே! உனக்கு உலக சினிமா பத்தி ஒண்ணுமே தெரியலியே! ஆறுமாச சர்டிபிகேட் கோர்ஸ் படிச்சாத் தான் சரியாகும் போலிருக்குதே!

சே.கா: இல்லேண்ணே! ஏதோ கொஞ்சம் சொல்லுங்கண்ணே போதும். மத்ததை நான் தேத்திக்கிடுவேன்.

கோ.கோ.சாமி: சரி, குறிச்சுக்க! எந்தத் தமிழ்ப்படத்தைப் பத்தி விமர்சனம் பண்ணுனாலும் முதல்லே ஆரம்பிக்கும்போது எடுத்த எடுப்புலேயே அந்தப் படத்தைப் பத்தி எளுதாதே!

சே.கா: சரிண்ணே!

கோ.கோ.சாமி: கும்பிள்டன் கூட்டர்சனின் "வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன்?" படத்தை நம்மால் எளிதில் மறந்திருக்க முடியாதுன்னு ஒரு ’பிட்’டோட ஆரம்பிக்கணும்.

சே.கா: அந்தப் படம் எப்போ வந்ததுண்ணே?

கோ.கோ.சாமி: இருந்தாத் தானே வர்றதுக்கு? சும்மா வாயிலே வந்த ஒரு பெயரை எழுது. ஓஹோ, இப்படியெல்லாம் ஹாலிவுட் படங்க வந்திருக்கு போலிருக்குதுன்னு நினைச்சுக்கிட்டு நிறைய பேரு பேசாம இருந்திருவாங்க!

சே.கா: ஹாலிவுட் படத்தைப் பத்தித் தெரிஞ்சவங்க பார்த்தாங்கன்னா?

கோ.கோ.சாமி: கிறுக்கனா இருக்கியே? நிஜமாவே ஹாலிவுட் படத்தை நிறையப் பார்க்குறவன் தமிழ் சினிமா விமர்சனத்தைப் படிச்சிட்டிருப்பானா?

சே.கா: ஓஹோ! இப்படியொண்ணு இருக்குன்னு தெரியாது எனக்கு.

கோ.கோ.சாமி: நவசினிமா, எதார்த்த சினிமா, குமுகாயம், பின்நவீனத்துவம், அதிநாயகத்துவம், அதீதம் இந்த மாதிரி வார்த்தையெல்லாம் ஒவ்வொரு பத்திக்கும் ஒவ்வொண்ணா சேர்த்துக்கணும். சாப்பாட்டுக்கு உப்பு எப்படியோ அதே மாதிரி இதெல்லாம்.

சே.கா: இதுக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாதுங்களே?

கோ.கோ.சாமி: எழுதுறவன் மட்டும் தெரிஞ்சா எழுதுறான்? எந்த ஒரு பழைய வார்த்தையா இருந்தாலும் சரி, அதுக்கு முன்னாலே ஒரு முன், ஒரு பின் அல்லது ஒரு நவ, இந்த மாதிரி சேர்த்துக்கோ! ரெண்டே ரெண்டு எழுத்து தானே?

சே.கா: இன்னும் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன்!

கோ.கோ.சாமி: உனக்குக் கொஞ்சம் வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டியது தான். உன் வீட்டுக்குப் போனதும் ஒரு நோட்டுலே பின்நாற்காலி, முன்மேஜை,நவகண்ணாடி,அதிவாளி இப்படி ஒரு நாளைக்குப் பத்து வாட்டியாவது எழுது.

சே.கா: சரிங்க!

கோ.கோ.சாமி: அப்புறம் விஜய் நடிச்சா இப்படி, அஜித் நடிச்சா இப்படித் தான் இருக்குமுன்னு உனக்குத் தெரியுமில்லே?

சே.கா: தெரியுமுங்க!

கோ.கோ.சாமி: அத வச்சு ரெண்டு மூணு பிட் போடு

சே.கா: படிக்கிறவங்க கண்டுபிடிக்க மாட்டாங்களா?

கோ.கோ.சாமி: யோவ், படம் பார்க்குறவனுக்கே அதுலே இருக்கிற குறை தெரியாமத் தானே விமர்சனம் படிக்க வறான்?

சே.கா: சரியண்ணே! அடுத்தது....

கோ.கோ.சாமி: அடுத்ததை அடுத்த வகுப்புலே பார்க்கலாம். நான் சொன்ன வீட்டுப்பாடத்தைத் தவறாம எழுதிட்டு வா!

சே.கா: சரிண்ணே! வாறேன்.

எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது மீண்டும் போக?

நடிப்பு, இசை,ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு இப்படி எல்லா விஷயம் குறித்தும் எழுத தமிழில் நிறைய வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுதிப்பழகி விட்டேன். எல்லாவற்றையும் உங்களிடம் சொன்னால், கோடம்பாக்கம் கோந்துசாமியின் பிழைப்பில் மண் விழுந்து விடாதா? அதனால், மற்றவற்றை அவரிடம் போய்க் கற்றுக்கொள்ளவும்; அல்லது, இணைய வரலாற்றில் எனது முதல் விமர்சனத்துக்காகக் காத்திருக்கவும்.

அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது.................! :-))

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்படியே நெல்லை பாஷையில் பேசறா மாதிரி யோசிச்சேன் நல்லா ரசிச்சேன்.. :)

சுடுதண்ணி said...

மிக அருமை :))))

சேக்காளி said...

//இணைய வரலாற்றில் எனது முதல் விமர்சனத்துக்காகக் காத்திருக்கவும்//
சரிண்ணே.