Friday, January 15, 2010

பொங்கல்-உண்ட களைப்பு

பண்ருட்டிமுந்திரிப்பருப்புப்போட்டு
பச்சையேலக்காயும் இடிச்சுப்போட்டு
மண்டவெல்லத்தையும் பொடிச்சுப்போட்டு
மனசுபோல பாலையும் ஊத்தி
வெண்கலப்பானையில் சக்கரைப்பொங்கலை
வெந்தப்புறமா இறக்கிவச்சு
குண்டாநெய்யோட குழைச்சடிச்சா
களச்சுடுச்சு சிங்கமெல்லாம்?

பொறியல்கூட்டு அவியல்வச்சு
பொரிச்ச உளுந்து அப்பளத்தோட
கறிவடாமும் காரக்கொழும்பும்
கறுக்குன்னிருக்கும் மெதுவடையும்
உறியுலொறஞ்ச கெட்டித்தயிரும்
ஊறுகாயும் வெளுத்துக்கட்டி
முறிச்சகரும்புச் சாறுங்குடிச்சா
முடங்கிருச்சு சிங்கமெல்லாம்?

கல்லடக்குறிச்சி வெத்தலையெடுத்து
கச்சிதமாச் சுண்ணாம்புமிட்டு
மெல்லறதுக்குப் பாக்கைப்போட்டு
மேலேஜாதிக்காயையும் போட்டு
பல்லிடுக்கிலே பன்னீர்ப்பொவையிலெ
பக்குவமாத்தான் போட்டுமென்னு
எல்லாருவீட்டிலுமே பாயைவிரிச்சுப்
படுத்திருச்சா சிங்கமெல்லாம்?

No comments: