Thursday, January 14, 2010

வல்லான் வகுத்ததே வழி

"ஏய், நீ ரொம்ப அழகாயிருக்கே!"

இயல்பா இருக்கிற ஒரு பெண்ணை உசுப்பேத்தி விட சில சமயம் அடிக்கடி பிரயோகப்படுத்தப்படுகிற இந்தப் புகழ்வீச்சு போதும். ஒவ்வொரு முறை அவள் கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் பரு வந்துவிட்டதா என்று பயப்படுவாளோ என்னமோ? அல்லது ஒரு அதீதமான நப்பாசையில் புருவத்தை வில்லாக்க முயன்று "Nil" ஆக்கியவர்களும் நிச்சயமாக இருப்பார்கள்.

இப்போது நானும் அதே போல ஒரு கண்ணாடியில், பாதரசப்பூச்சின் முதுகில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது போல இருக்கிறது. சும்மானாச்சும் எதையாவது எழுதுவோமே என்று தொடங்க, அதில் எங்கேயோ யாரோ, எண்ணி, எழுதுவதைத் தள்ளிப்போட்ட ஏதோ ஒரு விஷயத்தை நான் தொட்டிருப்பது தான் அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது போலும். பனம்பழம் விழுந்திருக்கிறது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.

எல்லா இரவுகளும் போலவே, இன்றும் மதில்களில் குறிக்கோளற்று ஓலமிட்டுப்போகிற பூனையின் சத்தம் கேட்கிறது. அதன் மீது இரக்கம் வைப்பதா அல்லது அதன் பசிக்கு இரையாகப் போகும் ஜந்துவுக்காகப் பரிதாபப்படுவதா என்று புரிந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.

ஜீவகாருண்யத்தின் நிறத்தையும் எச்சில் தொட்டு அழித்து அவரவர் விரும்புகிறாற்போல மாற்றலாம். பிரியாணியில் "லெக் பீஸ் எங்கே?" என்று கேட்பவனையும், மாமிசக்கடையில் "நல்ல குடலாக அறுத்துக் கொடு," என்று கேட்கிறவனையும் காட்டுமிராண்டி என்று சொல்ல முடியாது. ஒரு பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையின் மீது ஏற்படுகிற பரிதாபம் பூனையின் நகங்களால் அழுத்தப்பட்டிருக்கும் எலியின் மீது ஏற்படாமல் போகிறது.

கல்வெட்டுகளுக்கும், சுவடிகளுக்கும் அடுத்தபடியாக தெருமுனைகள் மனிதநாகரீகத்தின் சில உண்மைகளை உடைத்துப்போட்டுக் காட்டுகின்றன.

தினசரி எங்கள் தெருவுக்கு சைக்கிளின் மணியடித்துக்கொண்டு வருகிற அந்த மீன் வியாபாரி, இரண்டு வருடங்களில் நிச்சயம் அங்கிருந்த மனிதர்களை அடையாளம் கண்டுவைத்திருப்பார். ஆனால், அவனது வருகையின் போதெல்லாம் எனக்கு "எளியோர்-வலியோர்," என்ற இரண்டு வர்க்கத்தின் விபரீதப் போராட்டங்கள் கண்கூடாக நடைமுறையில் புரிந்தன.

அந்தப் பகுதியிலே குடியிருக்கப்போனபோது, அந்த மீன் வியாபாரி வரும்போதெல்லாம் காக்கைகளின் சத்தம் தான் அவனது வரவை குடியிருந்தோருக்கு அறிவிக்கும். முச்சந்தியில் சைக்கிளை நிறுத்தி, அவன் அவரவர் விருப்பம் போல மீன்களை அறுத்தும் நிறுத்தும் கொடுத்துக்கொண்டிருக்கும்போது காக்கைகள் பரபரப்பாய்க் கரைந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். எப்போதாவது ஒரு முறை ஒரு பூனையும் வந்து தனக்கும் இதில் ஒரு பங்கு வேண்டும் என்பது போல வாலை செங்குத்தாக நிறுத்தியபடி அவனது அனுதாபத்தை வேண்டி அலறியபடியே நிற்கும்.

அதன் பிறகு, இன்று கேட்டது போலவே பல இரவுகளில் பூனைகளின் எரிச்சலூட்டும் கத்தல் சத்தங்கள் தொடர்ந்தன. "இதுங்களுக்கு என்ன கொள்ளை?" என்று எரிச்சல்பட்டு ஜன்னல்களை மூடி உறங்கியதுமுண்டு. ஆனால், நாள்பட நாள்பட, மீன் வியாபாரிக்காகக் காத்திருக்கும் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போவதையும், மெல்ல மெல்ல தங்களது சேனையின் பலமிழந்து வருவதை அறிந்த காக்கைகள் ஒதுங்குவதையும் கவனித்திருக்கிறேன். பின்னாளில், மீன் வியாபாரியின் வருகையை எல்லாருக்கும் பூனையின் சத்தங்கள் அறிவிக்கத் தொடங்கின. அவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல்
அதிகரித்தபோது காக்கைகளுக்கு கீழே இறங்குகிற தைரியம் குறைந்து விட்டது போலும்.

மீன் வியாபாரி அறுத்து விற்றது போக மீதமுள்ள துண்டுகளை தெருமூலையில் எறிந்துவிட்டுப்போக பூனைகள் பசியாறும். கிளைகளிலிருந்து காக்கைகள் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றுவது போல உரக்கக் கரைந்து கொண்டிருக்கும். ஒரு வேளை அது அவர்கள் பூனைகளின் அநீதிக்கு எதிராக எழுப்பிய அபயக்குரலா என்று புரியவில்லை.

ஆனால், பூனைகளின் சாம்ராஜ்ஜியம் நீண்டநாள் செல்லுபடியாகவில்லை. தெருவைச் சொந்தம் கொண்டாட சில நாய்கள் வரத்தொடங்கின. பூனைகள் செய்வதறியாது சின்டெக்ஸ் தொட்டியின் மீது பொதுக்குழு கூட்டி அவர்களின் சோகக்கதையைப் பகிர்ந்து கொள்வது போல சத்தமிட்டுக்கொண்டிருக்கும். பூனைகளை நாய் துரத்துவதையும் பார்த்திருக்கிறேன். கடித்துக் குதறி விடக் கூடாதே என்று ஒரு விதமான தயை பிறக்கும்.
இன்று கூட அந்த மீன் வியாபாரி வந்திருந்தான். இப்போதெல்லாம் என் கண்களுக்கு நாய்கள் மட்டுமே தென்படுகின்றன. இரவில் பூனைகளின் கூச்சல்கள் கேட்காமல் இல்லை.ஆனால், பகலில் அவை வாகனங்களுக்குக் கீழே பதுங்கியிருப்பதை மட்டுமே அவ்வப்போது பார்க்க முடிகிறது.

இப்போது காக்கைகளை விடவும், பூனைகளை விடவும் பலமாக, நாய்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வல்லான் வகுத்ததே வழி என்பதை அந்த மீன் வியாபாரியின் சைக்கிள் மணி கேட்கிறபோதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன்.

நீங்களும் பார்த்திருப்பீர்கள்! மீன் வியாபாரியை! அவன் வந்ததும் அவனை மொய்க்கிற காக்கைகளை அல்லது பூனைகளை அல்லது நாய்களை...அல்லது, இன்று நான் பார்த்தது போல ஏதோ ஒரு நாயால் குதறப்பட்டுக் கிடந்த ஒரு சின்னஞ்சிறு பூனைக்குட்டியை....!

1 comment:

manjoorraja said...

எப்படியோ ஆரம்பிச்சி எப்படியோ கொண்டுபோய் கடைசியில் கலங்கடிக்கும் வண்ணம் முடிச்சிருக்கே.

வல்லான் வகுத்ததே வழி என்பது ஆண்டாண்டு காலமாக நடப்பதுதானே.

இதில் மிருகமென்ன, மனிதனென்ன....