Tuesday, January 19, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.02

காட்சி.02

சோ.சொ.வ: உம்! அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகட்டும்.

த.அ.வாயர்: சோற்றுப்புதூர் பெருங்குடிமக்களே! உங்களுக்கு.....

சோ.சொ.வ:(இடைமறித்து) ஓய் தளபதியாரே! சிறிது நாட்கள் நான் சபைக்கு வரவில்லையென்றால் அரசமரபையே அலங்கோலம் செய்து விடுவீர் போலிருக்கிறதே? எங்கே அரசநர்த்தகி வரலட்சுமி?

த.அ.வாயர்: வேந்தே! இதற்குத் தான் நீங்கள் அடிக்கடி அரசவைக்கு வர வேண்டும் என்று நான் விரும்புவது. மன்னர் பெரும்பாலான நாட்கள் வருவதில்லையென்பதால் வரலட்சுமி வரவர வராதலட்சுமியாகி விட்டாள்.

சோ.சொ.வ:(அதிர்ச்சியுடன்) என்ன?

(ஆஸ்தானப்புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞர் மன்னரை நெருங்கிக் காதோரம் ஏதோ கிசுகிசுக்கிறார்.)

ஆ.அ.கவிஞர்: மன்னா! வரலட்சுமி பிரசவ விடுப்பில் சென்றிருக்கிறார்.

சோ.சொ.வ: என்ன? பிரசவமா? இது எப்போது நிகழ்ந்தது?

ஆ.அ.கவிஞர்: நீங்கள் தற்காலிகமாக நிதியமைச்சர் திருவாழத்தானைத் தலைமை மந்திரியாக நியமித்தீர்களே! அப்போது தான்...

சோ.சொ.வ: அடப்பாவிகளா! அப்படியென்றால் ஒன்றுமே கிடையாதா?நேரடியாக அமைச்சரவைக் கூட்டமா?

ஆ.அ.கவிஞர்: வேந்தே! நான் வேண்டுமானால் உங்கள் மீது நெடிலடி கழலடியில் ஒரு நேரிசை வெண்பா இயற்றிப்பாடட்டுமா?

சோ.சொ.வ: நிறுத்தும்! நீர் நெடிலடியில் பாடியபோதெல்லாம் அது அடிதடியில் தான் முடிந்திருக்கிறது.

த.அ.வாயர்:(சிரித்தபடி) ஹாஹா! சரியாகச் சொன்னீர்கள் மன்னா!

சோ.சொ.வ: ஆஸ்தான புலவராய் லட்சணமாய் அமைதியாய் இரும். இனி நீர் ஒவ்வொரு பொங்கலுக்கு மட்டும் வாயைத் திறந்தாலே போதும்.

த.அ.வாயர்: அதுவும் பொங்கலைத் தின்பதற்கு மட்டும்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லி விடுங்கள் மன்னா! இல்லாவிட்டால் இவர் எழுதுகிற ஆசிரியப்பாக்களைப் படித்து ஊர்சிரிக்கிறது.

சோ.சொ.வ: அப்படியே ஆகட்டும்! தளபதியாரே, வழக்கமாக எனக்கு அங்கவை,சங்கவை என்று இரண்டு பெண்கள் சாமரம் வீசுவார்களே? அவர்களும் பிரசவ விடுப்பில் போயிருக்கிறார்களா?

த.அ.வாயர்: இல்லை மன்னா! சாமரம் பிய்ந்து விட்டது. புதிதாக சாமரம் வாங்குமளவுக்கு நிதிநிலை சரியில்லையென்பதால் அங்கவையையும், சங்கவையையும் இனி தங்கவைத்துப் பயனில்லை என்று விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.

சோ.சொ.வ: ஹூம்! சோற்றுப்புதூர் சாம்ராஜ்யம் நிதிப்பற்றாக்குறையால் சோகப்புதூராக மாறிவிட்டதே ஐயா! மக்கள் என்ன நினைப்பார்கள்?

ஆ.அ.கவிஞர்: மன்னர் மன்னா! மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். பெண்கள் துணிச்சலாக இரவு நேரத்திலும் வெளியிலே வருகிறார்கள். திருட்டு,கொள்ளை,வழிப்பறி அனைத்தும் முற்றிலும் ஒழிந்தே விட்டது.

சோ.சொ.வ: இதில் ஒன்றும் உள்குத்து இல்லையே?

ஆ.அ.கவிஞர்: இல்லவே இல்லை மன்னா! இனி திருடவோ கொள்ளையடிக்கவோ எதுவுமில்லையென்பதால் திருடர்களெல்லாரும் விட்டால்போதுமென்று விதேசம் சென்று விட்டனர். சிறைச்சாலைகளெல்லாம் காலியாகி விட்டன.

சோ.சொ.வ: இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் சரித்திரம் நம்மைத் தூற்றாதா? ஏதாவது செய்ய வேண்டாமா? எனது ராஜபரிபாலனம் என்னாவது?

த.அ.வாயர்: ஆம் மன்னா! வறுமையை ஒழிக்க வேண்டும். சுபிட்சம் நிலவ வேண்டும். பாலும் தேனும் நம் நாட்டில் எங்கணும் ஓட வேண்டும்.

சோ.சொ.வ: வரலட்சுமி ஏன் உம்மைப் போன்ற இளைஞரை விடுத்து திருவாழத்தான் போன்ற அரைக்கிழத்திடம் மயங்கினாள் என்று இப்போதல்லவா புரிகிறது எமக்கு?

த.அ.வாயர்: மன்னிக்க வேண்டும் மகாபிரபு!

சொ.சொ.வ: அமைச்சர் பெருமக்களே! நாளை அரசவை கூடும்போது இங்கு ஒரு ராஜநர்த்தகி இருந்தாக வேண்டும். இல்லையேல், நமது தளபதியாரின் தலை யானையின் காலில் வைத்து மிதிக்கப்படும்.

த.அ.வாயர்: மன்னா!

சோ.சொ.வ: சபை கலையலாம்

(தளபதியாரும் ஆஸ்தான புலவரும் சிந்திக்கிறார்கள்.)

ஆ.அ.கவிஞர்: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இது தான் தளபதியாரே!

த.அ.வாயர்: யோவ் புலவரே! நானே ஏகக்கடுப்பிலே இருக்கிறேன். எம்மை வெறுப்பேற்றினால் உமது மனைவியை ராஜநர்த்தகியாக நியமனம் செய்து நாளை மன்னர் முன்னாலே ஆட வைத்து விடுவேன். ஜாக்கிரதை.

ஆ.அ.கவிஞர்: அதற்கு நீர் யானையின் காலிலே மிதிபடுவதே சாலச் சிறந்தது.

(திரை)

No comments: