Thursday, April 22, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.09








தனுசு ராசிக்கார வலைப்பதிவர்களே!

நீங்கள் வெளுத்ததெல்லாம் பால்பாயாசம் என்று நம்புகிற வெள்ளந்தியாக இருப்பீர்கள். தொடர்ந்து பின்னூட்டம் மற்றும் ஓட்டு போடுகிறவர்கள் மின்னரட்டைக்கு அழைத்தால், தயங்காமல் ஒப்புக்கொண்டு கூமுட்டைத்தனமாக மனதிலிருப்பதையெல்லாம் உளறிவைப்பீர்கள். அதை வைத்துக்கொண்டு உங்களை யாராவது ரவுண்டு கட்டி அடித்தாலும் கூட "எல்லாம் இறைவன் செயல்," என்று தத்துவார்த்தமாகப் பேசி மனதை திடப்படுத்திக்கொண்டு, அடுத்த மொக்கைக்கு ஆயத்தம் செய்யத் தொடங்குவீர்கள்.

ஒரு பதிவு போடவேண்டும் என்று முடிவெடுத்தால், பணிப்பளு,மின்வெட்டு, புதுப்படங்கள் வெளியீடு, நண்பர்களோடு ஊர்சுற்றுதல் ஐ.பி.எல் என்று எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்கொண்டு, பதிவை வெற்றிகரமாக போட்டே தீருவீர்கள்!

இன்று காலையில் வலைப்பதிவை ஆரம்பித்தவர்களுக்கும் மிகுந்த மரியாதை அளிப்பீர்கள் என்பதால், சிலர் மனதில் "ஒரு அடிமை கிடைச்சிட்டாண்டா," என்று உங்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் ஏற்படுவது இயல்பே!

"யாம் இட்ட மொக்கை இடுக இவ்வலையகம்," என்ற உயர்ந்த சிந்தனையுள்ளவர் நீங்கள் என்பதால், முப்பது நிமிடத்தில் மொக்கை எழுதுவது எப்படி என்பதை உங்கள் நண்பர்களுக்கு முகம் சுளிக்காமல் சொல்லித் தருவீர்கள்.

தனுசு ராசிக்கார பதிவர்களுக்கு விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு இருக்கும் என்பதால், ஐ.பி.எல் மற்றும் சசி தரூர் குறித்த பதிவுகளை அதிகமாக எழுதுகிற வாய்ப்பிருக்கிறது. இது தவிரவும், பல்லாங்குழி, கேரம்-போர்டு, ரம்மி போன்ற வீரவிளையாட்டுக்களில் இவர்கள் விற்பன்னர்களாயிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்காலத்தைப் பற்றி ஓரளவு துல்லியமாகக் கணிக்கிற திறமை இந்த ராசிக்கார பதிவர்களுக்கு இருக்குமென்பதால், ’சுறா’ எப்போது வெளியாகிறது, T20 உலகக்கோப்பை எப்போது துவங்குகிறது போன்ற அதிசயிக்கத்தக்க தகவல்கள் பற்றி பல பதிவுகள் எழுதுவீர்கள்.

இவ்வளவு நற்குணங்கள் (?!) இருந்தும் ஏதேனும் ஒரு பிரச்சினையில், உங்களுக்கு ஒவ்வாத கருத்துடன் யாராவது பதிவு போட்டால், வரிந்து கட்டிக்கொண்டு வசைமாரி பொழிந்து குறைந்தபட்சம் ஒன்றரைப் பதிவாவது போட்டே தீருவீர்கள். (அரைப்பதிவு என்பது உங்களுக்குப் பிடிக்காத பதிவருக்கு நீங்கள் போட்ட பின்னூட்டம் என்று பொருள் கொள்க!)

நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் அவசியம். இல்லாவிட்டால் "அருமை," என்று பின்னூட்டம் போட்டு விட்டு மைனஸ் ஒட்டுப் போடுகிறவர்களை உங்களால் அடையாளம் காண முடியாமல் போய் விடலாம்.

இந்த ராசிக்காரப்பதிவர்களுக்குப் பொதுவாக அனுபவம் மிகுதியென்பதால், ரயில்வே ஸ்டேஷன் கடையில் பார்த்த புத்தகங்களை, அவற்றின் அட்டையை வைத்தே விமர்சனம் எழுதுகிற வல்லமை படைத்தவர்களாயிருப்பார்கள். இந்தப் பதிவர்களைப் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரண்டு இலக்கத்திலேயே இருந்தாலும் அது குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம், இவர்களின் பதிவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, ஆரம்பத்தில் தொடர்ந்தவர்களின் புகைப்படங்கள் பின்னுக்குத் தள்ளபடும் என்பதால், அவர்கள் மீண்டும் தங்களது புகைப்படத்தை முன்னுக்குக்கொண்டுவருவதற்காக, பின்தொடர்வதை நிறுத்தி விட்டு, மீண்டும் பின்தொடர எண்ணுவார்கள்; ஆனால் திரும்ப இணைய மறந்து விடுகிற சாத்தியக்கூறுகள் அதிகம்.

சுயமாக சிந்தித்து மொக்கை போடுவதே சிறப்பு என்ற தனித்தன்மை உடையவர்கள் என்பதால், இவர்கள் ஆங்கில மின்னஞ்சல்களை உட்டாலக்கிடி செய்யாமல், இருக்கிற மூளையை வைத்து ஏதோ அவர்களால் இயன்ற அளவு சொந்தமாக இடுகை போடுவார்கள். புது இடுகை போட்டாலும், அதன் சுட்டியை ஆன்லைனில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பாமல், அவர்களாக வந்து படித்தால் போதும் என்று தன்னிறைவோடு இருப்பார்கள்.

சகபதிவர்களோடு அடிக்கடி மின்னரட்டையில் சண்டையிடுவது இந்த ராசிக்கார பதிவர்களுக்கு வாடிக்கை என்பதால், அவ்வப்போது செல்போன்களை சுவிட்ச்-ஆஃப் செய்து வைப்பதும் உண்டு. இந்த ஒரு குறை தவிர, எவ்வளவு காட்டமாகப் பின்னூட்டம் போட்டாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இருப்பார்கள் என்பதும் இந்த ராசிக்காரர்களின் தனிக்குணமாகும்.

இந்த ராசிக்காரர்கள் முன்பு எழுதிய இடுகைகளை இப்போது படித்தால் அவர்களாலேயே ஜீரணிக்க முடியாது என்பதால் தினசரி ஜெல்யூஸெல், டைஜீன் போன்ற மாத்திரைகளைத் தற்காப்பாக எப்போதும் வைத்திருப்பார்கள். இது தவிர, இவர்களின் மொக்கைக்கு எதிர்மொக்கை போடுகிறவர்களால் பின்னூட்டங்களில் வருகிற தொல்லை போன்ற சவாலான சூழ்நிலைகளையும் இவர்கள் சந்திக்க நேரிடும்.

இந்த ராசியில் ஒன்பதாமிடத்தில் இருந்த சனி பகவானின் கருணை காரணமாக, "இன்றைக்கு பதிவு போடவில்லை," என்று பதிவு போட்டாலும், அதற்கும் பத்து ஓட்டு விழுந்து கொண்டிருந்தது. சகபதிவர்களின் பின்னூட்டமும் தொடர்ந்து கிடைத்து வந்தன. நிறைய அலைச்சலும் குடைச்சலும் கூடவே இருந்தன. ஆனால் இப்போது சனிபகவான் பத்தாமிடமான பிளாகர் ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி செய்திருப்பதால், மீள்பதிவுகளுக்கும் இருபது ஓட்டுக்கள் விழுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பின்தொடர மறந்தவர்கள் பின்தொடரத்தொடங்குவார்கள். பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதற்காவது நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டி வரும்.

புது ஹிட்-கவுன்ட்டர், புது டெம்ப்ளேட் மற்றும் இன்னபிற கேட்ஜெட்டுகளை உபயோகிக்க இது தக்க தருணமாகும். உங்களது இடுகைகளால் இனிவரும் காலங்களில் உண்மையாகவே சிலருக்கு சிரிப்பு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தொடர்பதிவுகளுக்கான அழைப்புகளும் அதிகமாவதற்கான அறிகுறிகள் தசாபலன்களில் உள்ளன. அதே சமயம், சகமொக்கையாளர்கள் கோஷ்டி சேர்த்துக்கொண்டு, எதிர்மறையான பின்னூட்டங்கள் மற்றும் மைனஸ் ஓட்டுகள் போடுவதற்கான அபாயமும் இருந்தே தீரும் என்பதால் தினமும் ஒரு ரவுண்டு எல்லா பதிவுகளையும் இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்து ஓட்டைக் குத்திவிட்டு வருவது நன்மை பயக்கும்.

நீங்களே எதிர்பாராதவிதமாக, உங்களது சில பதிவுகள் மிகவும் பிரபலமாகக்கூடும் என்பதால் இறைநம்பிக்கை திடீரென்று அதிகரிக்கலாம்.

இருப்பினும், கணினியின் மீது கவனம் செலுத்த வேண்டிவரும். அடிக்கடி கணினிக்கு சில உபாதைகள் ஏற்படலாம் என்பதால், பிரதி செவ்வாய்க்கிழமையன்று காஸ்பர்ஸ்கை கவசம் சொல்வது நல்ல பலனளிக்கும்.

பெரிதாக எந்தக் கெடுதலும் இல்லையென்றாலும், நல்ல பலன்கள் கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் போல மிகவும் தாமதமாகவே வரும். ஆனால், போகப்போக, இதுவே பழகிவிடும் என்பதால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

திருவள்ளூர்-புட்டுலூர் நடுவே அமைந்துள்ள அருள்மிகு நார்ட்டனாலயத்துக்கு சென்று அங்கப்பிரதட்சிணம் செய்வது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது.

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் துலாம் ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் விருச்சிக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

தனுசு ராசி வரைக்கும் வந்திட்டானே என்று மிச்சமிருக்கிற ராசிக்காரர்கள் வயிறு கலங்கிக்கொண்டிருப்பது புரிகிறது. விட்டிருவோமா என்ன?

33 comments:

பனித்துளி சங்கர் said...

ஏலே காசு எதுவும் கொடுக்கணுமால .

பனித்துளி சங்கர் said...

சேட்டை கலக்குறீங்க .ஆமா இந்த பில்லி, சூனியம் இதெல்லாம் இருக்குதானு எப்படி கண்டுபிடிக்கிறது .


மீண்டும் வருவேன் .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இவ்வளவு நற்குணங்கள் (?!) இருந்தும் ஏதேனும் ஒரு பிரச்சினையில், உங்களுக்கு ஒவ்வாத கருத்துடன் யாராவது பதிவு போட்டால், வரிந்து கட்டிக்கொண்டு வசைமாரி பொழிந்து குறைந்தபட்சம் ஒன்றரைப் பதிவாவது போட்டே தீருவீர்கள். (அரைப்பதிவு என்பது உங்களுக்குப் பிடிக்காத பதிவருக்கு நீங்கள் போட்ட பின்னூட்டம் என்று பொருள் கொள்க!)
//

சேட்டை.. நம்ம ராசி மேல கொஞ்சம் டவுட் இருந்துச்சு..
இப்ப கன்பர்ம் பண்ணிட்டேன்.. நமக்கு தனசு...வரட்டுங்களா.....ஹா..ஹா

( மனசு லைட்டா லேசாயிடுச்சு.. பதிவ படிச்சதும்.... டாங்ஸ்..)

ப.கந்தசாமி said...

நம்ம ராசி தனுசுங்க. நம்ம கேரக்டரை அப்படியே புட்டுப்புட்டு வச்சிருக்கீங்களே. ரொம்ப கெட்டிக்காரருதாங்க, இல்ல இல்ல, சேட்டைக்காரருதானுங்கோ

pudugaithendral said...

தனுசு ராசி வரைக்கும் வந்திட்டானே என்று மிச்சமிருக்கிற ராசிக்காரர்கள் வயிறு கலங்கிக்கொண்டிருப்பது புரிகிறது. விட்டிருவோமா என்ன? //

என்னதான் சொல்லப்போறீங்கன்னு பாக்க காத்துக்கினு இருக்கேன். :)))

பிரபாகர் said...

ராசிபலன்லயும் இவ்வளவு பொடி வெச்சி, காமெடியா எழுத முடியுமா?.... வியக்கிறேன்.

யாரும் ராசிபலன் என வரும்போது அவர்களின் பலனைத்தான் படிப்பார்கள். சேட்டையின் ராசிபலனில் என்ன சேட்டை என எல்லோரையும் படிக்கத்தோன்றும்... அதுதான் என் சேட்டை...

கலக்கி, கலங்க வையுங்கள். சிரிச்சி ஆனந்தத்துல கண்ணீர் வருமே அதைச்சொன்னேங்க!

பிரபாகர்...

நஜீபா said...

//பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதற்காவது நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டி வரும்.//

சேட்டை சேட்டை தான்!

அயர்ச்சி தருகிற பொழுதுகளில் மகிழ்ச்சி தரும் அருமருந்தாய் சேட்டைக்காரனின் பதிவுகள். :-))

மங்குனி அமைச்சர் said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... ஏம்பா இந்த சேட்டைக்கு யாராவது நாடி ஜோசியம் பாத்து சொல்லுங்களேன் , உன்னைய எத்தின தடவத்தான் பாராட்றது , பேசாம ஒன்னு செய் , பதிவு போட்ட உடனே நீயே என் பேர போட்டு சூப்பர் , எச்சலன்ட் அப்படின்னு போட்டுக்கோ எனக்கு உன்னைய பாராட்டி பாராட்டி போரடிக்குது

sathishsangkavi.blogspot.com said...

ராசிபலன்னு சொல்லிட்டு இந்த கலக்கு கலக்கறீங்களே சேட்டை.....

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்............

vasu balaji said...

pst. சேட்ட! தொழில் ரகசியம். என்னதான் ராசிபலன் எழுதினாலும், இடுகை மாதிரியே படிக்க பொருமை இருக்காது. ராசியான நாட்கள், ராசியான தேதி, ராசிக்கலர்னு ஒரு ப்ரொபஷனல் டச்ச்ச்ச்ச்சு வேணாமா? போட்டுப்பாருங்க. சும்மா தினத்தந்தில சேட்டை சேலம் வரும் நாட்கள்னு விளம்பரம் போடவேண்டி வரும்:))

Rekha raghavan said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு. டாக்டர்கிட்ட போகலாம்னு பார்த்தா இங்கே ஒரு வாரத்துக்கு முன்பே அப்பாயிண்மெண்ட் வாங்கனுமாம். அடுத்த பதிவையும் படிச்சுட்டே போறேன் சேட்டை.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

ஸ்ரீராம். said...

செம சேட்டைதான்..ஆனால் எனக்குப் பொருத்தமாயில்லையே....!!

அச்சு said...

இனிமே பின்னூட்டம் போடுறதுக்கே யோசிப்போமில்ல.

Chitra said...

உங்களுக்கு சன் டி.வியில் இருந்து விடிய காலையில் ராசி பலன் சொல்ல கூப்பிட்டு அனுப்பி இருக்காங்க. பதிவர்களுக்கு மட்டும் இல்லாமல், அரசியல் "வியாதி"களுக்கும் சொல்லணுமாம்.

மதார் said...

எப்படிங்க இப்படிலாம் ? எண்ண சொல்றது பாதி அப்படியே எனக்கு ஒத்து போகுது.நமக்கும் தனுசுதாங்க .வேலைய விட்டாச்சு அப்படியே நல்ல வேலை எப்போ கிடைக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன் .

சுதாகர் said...

வழக்கம் போல கலக்கீட்டீங்க சேட்டை....
என்றும் அன்புடன்
சுதாகர்.

settaikkaran said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//ஏலே காசு எதுவும் கொடுக்கணுமால.//

இப்போ வேணாம்; கடை ஆரம்பிச்சதும் சொல்லியனுப்புறேன். :-)

//சேட்டை கலக்குறீங்க .ஆமா இந்த பில்லி, சூனியம் இதெல்லாம் இருக்குதானு எப்படி கண்டுபிடிக்கிறது.//

பில்லி,சூனியம் தானே? அதுங்களைப் பத்தியும் ஒரு பதிவு போட்டுட்டாப் போச்சு! :-)

//மீண்டும் வருவேன் .//

வாங்க வாங்க, மிக்க நன்றி!!

settaikkaran said...

//சேட்டை. நம்ம ராசி மேல கொஞ்சம் டவுட் இருந்துச்சு..இப்ப கன்பர்ம் பண்ணிட்டேன்.. நமக்கு தனசு...வரட்டுங்களா.....ஹா..ஹா//

கவலைப்படாதீங்கண்ணே, இப்போ உங்க ராசிக்கு ரொம்ப நல்ல நேரம் தானாம். ( என்னோட பலன் போட்டு முடிச்சிட்டேனில்லா?) :-))


//( மனசு லைட்டா லேசாயிடுச்சு.. பதிவ படிச்சதும்.... டாங்ஸ்..)//

அது தான் வேணும் எனக்கு...!

மிக்க நன்றி!!

settaikkaran said...

Dr.P.Kandaswamy said...

//நம்ம ராசி தனுசுங்க. நம்ம கேரக்டரை அப்படியே புட்டுப்புட்டு வச்சிருக்கீங்களே. ரொம்ப கெட்டிக்காரருதாங்க, இல்ல இல்ல, சேட்டைக்காரருதானுங்கோ//

ஹிஹி! எல்லாம் அப்படியே ஒரு ஃப்ளோவுலே வர்றது தானுங்க! உங்களுக்கு சரியாயிருந்தா ரொம்ப மகிழ்ச்சி!!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

settaikkaran said...

புதுகைத் தென்றல் said...

////தனுசு ராசி வரைக்கும் வந்திட்டானே என்று மிச்சமிருக்கிற ராசிக்காரர்கள் வயிறு கலங்கிக்கொண்டிருப்பது புரிகிறது. விட்டிருவோமா என்ன? ////

//என்னதான் சொல்லப்போறீங்கன்னு பாக்க காத்துக்கினு இருக்கேன். :)))//

ஐயோ சேட்டை, இன்னுமாடா இந்த உலகம் உன்னை நம்பிட்டிருக்கு...? :-)))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

settaikkaran said...

பிரபாகர் said...

//ராசிபலன்லயும் இவ்வளவு பொடி வெச்சி, காமெடியா எழுத முடியுமா?.... வியக்கிறேன்.//

அப்பப்போ சந்துலே சிந்து பாடறது தான். :-)

//யாரும் ராசிபலன் என வரும்போது அவர்களின் பலனைத்தான் படிப்பார்கள். சேட்டையின் ராசிபலனில் என்ன சேட்டை என எல்லோரையும் படிக்கத்தோன்றும்... அதுதான் என் சேட்டை...//

எல்லா ராசிபலனைப் போலவும் ஏன் இருக்கணுமுன்னு உட்கார்ந்து யோசிச்சு எழுதினதாச்சே இது! :-))

//கலக்கி, கலங்க வையுங்கள். சிரிச்சி ஆனந்தத்துல கண்ணீர் வருமே அதைச்சொன்னேங்க!//

புரியுது, புரியுது! :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

settaikkaran said...

நஜீபா said...

//சேட்டை சேட்டை தான்!

அயர்ச்சி தருகிற பொழுதுகளில் மகிழ்ச்சி தரும் அருமருந்தாய் சேட்டைக்காரனின் பதிவுகள். :-))//

வாங்கக்கா, வாங்க! எல்லாம் உங்களைப் போன்றோரின் நல்லாதரவு தான்!

மிக்க நன்றி!!

settaikkaran said...

மங்குனி அமைச்சர் said...

//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... ஏம்பா இந்த சேட்டைக்கு யாராவது நாடி ஜோசியம் பாத்து சொல்லுங்களேன்,//

என்னண்ணே, நாடி ஜோசியமா? இது கூட நல்லாயிருக்கே! கவனிக்கிறேன்.

//உன்னைய எத்தின தடவத்தான் பாராட்றது , பேசாம ஒன்னு செய் , பதிவு போட்ட உடனே நீயே என் பேர போட்டு சூப்பர் , எச்சலன்ட் அப்படின்னு போட்டுக்கோ எனக்கு உன்னைய பாராட்டி பாராட்டி போரடிக்குது//

ஐயையோ, என்னண்ணே இப்படிச்சொல்லிட்டீங்க? அடிக்கடி வந்து பின்னூட்டம் போட்டாத்தானே எனக்கும் தெம்பாயிருக்கும். அதுக்காச்சும் நீங்களே வந்து எழுதுங்க!

மிக்க நன்றி!!

settaikkaran said...

Sangkavi said...

//ராசிபலன்னு சொல்லிட்டு இந்த கலக்கு கலக்கறீங்களே சேட்டை.....

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்............//

வழக்கமான ராசிபலன் எழுதினா போரடிக்குமேன்னு தான் கொஞ்சம் மசாலா,வெங்காயம்,கொத்துமல்லியெல்லாம் தூவி...ஹி..ஹி!! :-)

மிக்க நன்றி!!

settaikkaran said...

வானம்பாடிகள் said...

// pst. சேட்ட! தொழில் ரகசியம். என்னதான் ராசிபலன் எழுதினாலும், இடுகை மாதிரியே படிக்க பொருமை இருக்காது. ராசியான நாட்கள், ராசியான தேதி, ராசிக்கலர்னு ஒரு ப்ரொபஷனல் டச்ச்ச்ச்ச்சு வேணாமா? //

இதுக்குத்தான் அனுபவஸ்தருங்க கிட்டே கேட்டு எதையும் செய்யணும்கிறது. ரொம்ப நன்றி ஐயா, இந்த ரவுண்டை முடிச்சிட்டு அடுத்த ரவுண்டுலே எல்லாத்தையும் கொண்டாந்திடறேன். :-))

//போட்டுப்பாருங்க. சும்மா தினத்தந்தில சேட்டை சேலம் வரும் நாட்கள்னு விளம்பரம் போடவேண்டி வரும்:))//

ஆஹா, கேட்கவே ஆனந்தமாயிருக்கே! கொள்ளுத்தாத்தா,தாத்தா,அப்பா எல்லாரோட போட்டோவும் போட்டு என்னோட போட்டோவும் போட்டு...உஸ்ஸ்ஸ்! நினைச்சாலே சூப்பரா இருக்குது..

மிக்க நன்றி!!

settaikkaran said...

KALYANARAMAN RAGHAVAN said...

//சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு. டாக்டர்கிட்ட போகலாம்னு பார்த்தா இங்கே ஒரு வாரத்துக்கு முன்பே அப்பாயிண்மெண்ட் வாங்கனுமாம். அடுத்த பதிவையும் படிச்சுட்டே போறேன் சேட்டை.//


என்னாங்க, அடுத்த ராசிபலன் பதிவு வர குறைஞ்சது பத்து நாளாவது ஆகுங்களே! எதுக்கும் தினமும் பில்கேட்ஸ் பதிகத்தை தினமும் ஒருவாட்டி சொல்லிருங்க! :-)

மிக்க நன்றி!!

settaikkaran said...

ஸ்ரீராம். said...

//செம சேட்டைதான்..ஆனால் எனக்குப் பொருத்தமாயில்லையே....!!//

அச்சச்சோ! மெய்யாலுமா? எப்படித் தப்பிச்சீங்க தெரியலியே?

இது சும்மா டமாஸுங்க!!

மிக்க நன்றி!!

settaikkaran said...

அச்சு said...

//இனிமே பின்னூட்டம் போடுறதுக்கே யோசிப்போமில்ல.//

ஆஹா, இதை இவ்வளவு சீரியசாவா எடுத்துப்பீங்க? :-))

சும்மா டமாஸ் மேட்டருங்க!

மிக்க நன்றி!!

settaikkaran said...

Chitra said...

//உங்களுக்கு சன் டி.வியில் இருந்து விடிய காலையில் ராசி பலன் சொல்ல கூப்பிட்டு அனுப்பி இருக்காங்க.//

கூப்பிட்டு அனுப்பினது சரிதான். அதுவும் விடியற்காலையிலே வந்து எழுப்பியா கூப்பிடணும்? நான் கண் விழிக்கிறதுக்குள்ளே போயிட்டாங்க!

//பதிவர்களுக்கு மட்டும் இல்லாமல், அரசியல் "வியாதி"களுக்கும் சொல்லணுமாம்.//

ஆஹா, என்ன எல்லாரும் நிறைய புதுப்புது ஐடியாவா கொடுக்கறீங்க? குறிச்சு வைச்சுக்கிறேன்; பின்னாலே யூஸ் ஆகும். :-)

மிக்க நன்றி!!

settaikkaran said...

மதார் said...

//எப்படிங்க இப்படிலாம் ? எண்ண சொல்றது பாதி அப்படியே எனக்கு ஒத்து போகுது.நமக்கும் தனுசுதாங்க .வேலைய விட்டாச்சு அப்படியே நல்ல வேலை எப்போ கிடைக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன் .//

வாங்க வாங்க! முத முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க! அதுனாலே உங்களுக்கு கன்சல்டன்ஸி ஃப்ரீ! அதாவது சனிபகவான் ஒன்பதாவது இடத்திலேருந்து தொழில்ஸ்தானமான பத்தாவது இடத்துக்குப் போயிருக்கிறதுனாலே, கூடிய சீக்கிரமே உங்க ஆசைப்படி ஒரு வேலை கிடைக்கும் பாருங்க!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

சுதாகர் said...

//வழக்கம் போல கலக்கீட்டீங்க சேட்டை....//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)))

பொன் மாலை பொழுது said...

அய்ய......!! நா தான் லேட்டா? இன்னிகிதாம்பாஸ் நேரம் கெடச்சிது.
அது இன்னாபா அப்டியே புட்டு புட்டு வசிகினுகீறியே !! ஆக்காங் ..
நா னும் தனுசு தான் வாஜாரே! டமாசானாலும் சோக்காகீது பா.
நட்து நட்து

prabhadamu said...

சேட்டை சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்............

:)