Tuesday, February 16, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.02


அப்பாடியோவ்! வலைப்பதிவர்களுக்கு ஜோசியம் சொன்னாலும் சொன்னேன், பன்னிரெண்டு மணிநேரத்துக்குள்ளே தமிலீஷிலே பாப்புலர் ஆயிட்டோமில்லா? எல்லாருக்கும் முதல்லே நன்றிங்க!!

இப்பொழுது, ரிஷப ராசி வலைப்பதிவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாமா?

ரிஷப ராசிக்காரர்களுக்கு கற்பனை எக்கச்சக்கமாக இருக்கும். அவர்கள் மனது வைத்தால் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் சட்டென்று முடிச்சுப்போட்டு சக்கையாக ஒரு பதிவை எழுதும் திறமைபடைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களது சிறப்பம்சம் என்னவென்றால், பதிவைப்போட்டு விட்டு பத்து நிமிடங்களேயானதும் எத்தனை பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன, தமிழ்மணத்தில் நம் பதிவின் பெயரும், நமது பெயரும் முகப்பிலே இருக்கிறதா என்று பதட்டப்பட்டுப் போய்ப் பார்க்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் பதிவுக்கு அவர்களே கூட மதிப்பெண்கள் கொடுக்க மாட்டார்கள். (க்கும்...கொடுத்திட்டாலும்...!)

சிலரிடம் இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்களது பதிவு குறித்துக் கேட்டால், "அப்படியா? என்னுடைய பதிவா? நன்றாக இருந்ததா?" என்று அப்பிராணியாகக் கேட்பார்கள். அசந்து மறந்து யாராவது பின்னூட்டம் போட்டாலும், அதற்கு நன்றி கூறுகிறேன் பேர்வழி என்று உடனடியாக கணினி முன் உட்கார மாட்டார்கள். இவர்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களும், இவர்களைப் போலவே ரிஷப ராசிக்காரர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், "சே, வேலை மெனக்கெட்டு கருத்து எழுதி, மார்க்கும் போட்டா, ஒரு நன்றி கூட போடலியா இந்தாளு?" என்று வாசகர்கள் பிற வலைப்பதிவுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.இதன் காரணமாகவோ என்னவோ இவரது பதிவுகளுக்கு தாய்மார்களின் ஆதரவு பெருமளவு கிடைக்காது.

ஆனால், இந்த ராசிக்காரர்கள் அலுக்காமல் சளைக்காமல் தொடர்ந்து பதிவுகளைப் போட்டு ஓராண்டுகளுக்குள்ளே ஒரு லட்சம் ஹிட்டுக்களைப் பெற்று விடுவார்கள் என்பதே இவர்களின் சிறப்பு. இதற்கு முக்கியமான காரணம், இவர்களின் பதிவுகள், அவை மொக்கையாகவே இருந்தாலும் கூட இவர்களது சுயமான சிந்தனையாக இருக்கும். பெரும்பாலும் இவர்கள் அகிரோ குரோச்சேவாவின் சினிமா குறித்த சிந்தனை பற்றியோ, சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளைப் பற்றியோ எழுதாமல், தானே யோசித்து நிறைய கேள்விக்குறிகளெல்லாம் போட்டு பல புனைவுகளைப் படைக்கவல்லவர்கள் ஆவர்.

இந்த ராசிக்காரர்கள் இனிவரும் நாட்களில் கொஞ்சம் யோசித்தாலும் நிறைய எழுதுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவர்களது வழக்கமான வாசகர்களுக்கு எப்படியோ, இவர்களுக்கு இந்தப் பதினைந்து நாட்கள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கும். தமிழ்மணம், தமிலீஷில் இதுவரை மொத்து வாங்கியவர்கள் கூட பத்து வாங்குகிற வாய்ப்புக்கள் இருக்கின்றன.

"அகப்பட்டவருக்கு அஷ்டமத்துலே சனி; ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு," என்பார்கள். இதை விளக்க வேண்டுமென்றால், சேட்டைக்காரனின் பதிவுகளுக்கு வருபவர்களையும், வராதவர்களையும் முறையே பழமொழியின் முன்பாதியோடும், பின்பாதியோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதில் விளங்கும்.

ஆகவே, ரிஷப ராசி வலைப்பதிவர்களுக்கு இனிவரவிருக்கிற சில நாட்களில் பெரும்புகழ் ஏற்படும். பலருக்கு லீவு போட்டுப் பின்னூட்டங்களுக்கு நன்றி எழுத வேண்டி வரலாம். இதுவரை சுயமாகச் சிந்தித்து சிந்தித்துப் பல பதிவுகளை எழுதிய நீங்கள் இனிமேல் சிந்திக்காமலே பதிவுகளை எழுதப்போகிற பொற்காலம் இதுவாகும். இதுவரை படித்து விட்டு ஒன்றுமே புரியாவிட்டாலும் "அற்புதம்," என்று பின்னூட்டம் போடுபவர்கள், இனிமேல் படிக்காமலே "அற்புதம்...அற்புதம்," என்று இரட்டிப்புப் பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள். இந்தப் பதிவர்களின் ஹிட்-கவுன்ட்டர்களில் இலக்கங்களைப் பார்த்துப் பல பதிவர்களுக்கு கலக்கம் ஏற்படும்.

"இந்த வலைப்பதிவே வேண்டாம்; நான் போறேன்," என்று லூலூலாயீ செய்தவர்களின் பதிவுகளும் ஹார்லிக்ஸ் குழந்தைகள் போல உற்சாகமாக நாளொரு பதிவும், பொழுதொரு பின்னூட்டமாக வலம் வருவர்.

மொத்தத்தில் ரிஷபராசிக்கார வலைப்பதிவாளர்கள் எவரேனும் நண்பராக இருந்தால், அவர்களது வலைப்பதிவுகளுக்கு ஏனைய ராசிக்காரர்கள் சென்று வருதல் அவரவர் ஹிட்-கவுன்டர்களுக்கும் அனுகூலமாயிருக்கும்.

(ரொம்ப பயமுறுத்தாதீங்க! கொஞ்சம் குறைச்சுக்கோங்கன்னு பெருவாரியான வாசகர்கள் (?) கேட்டுக்கொண்டதற்கிணங்க, இயன்றவரை சுருக்கமாகத் தந்திருக்கிறேன்)

16 comments:

Chitra said...

உங்க ராசி என்ன? எல்லோரையும் "கலாய்க்கிற" ராசியா? கலக்குங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

வணக்கம் ஜோசியரே, வளர்க தங்கள் பணி :))

அண்ணாமலையான் said...

கலக்குங்க சேட்ட

gvraj said...

வணக்கம் சார்,
கும்ப ராசிகாரர்களுக்கு எப்ப சீக்கிரம் . . .

settaikkaran said...

//உங்க ராசி என்ன? எல்லோரையும் "கலாய்க்கிற" ராசியா? கலக்குங்க.//

ஹி..ஹி! அது மீதியுள்ள ராசிங்களுக்கும் எழுதி முடிச்சதுக்கப்புறம் தான் தெரியும். நன்றிங்க!

settaikkaran said...

//வணக்கம் ஜோசியரே, வளர்க தங்கள் பணி :))//

வாங்க அண்ணே! கருத்துக்கு மிக்க நன்றிங்கண்ணே!

settaikkaran said...

//கலக்குங்க சேட்ட//

நன்றிங்கண்ணே! :-))

settaikkaran said...

//வணக்கம் சார், கும்ப ராசிகாரர்களுக்கு எப்ப சீக்கிரம் . . .//

கவலையே படாதீங்கண்ணே! விரைவில் வரும். ஒருத்தரையும் விடுறதா இல்லை. :-)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

// இதுவரை படித்து விட்டு ஒன்றுமே புரியாவிட்டாலும் "அற்புதம்," என்று பின்னூட்டம் போடுபவர்கள், இனிமேல் படிக்காமலே "அற்புதம்...அற்புதம்," என்று இரட்டிப்புப் பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள்.//

அற்புதம்...அற்புதம்...அற்புதம்...அற்புதம்
அற்புதம்...அற்புதம்...அற்புதம்
அற்புதம்...அற்புதம்
அற்புதம்
அற்புதம்...அற்புதம்
அற்புதம்...அற்புதம்...அற்புதம்
அற்புதம்...அற்புதம்...அற்புதம்...அற்புதம்

ஆகா.. நிசமாவே பாதி ஜோசியர் ஆயிட்டீர்....
நடத்துங்க..நடத்துங்க..
ஆனா மிதுனம் ராசிக்கு மட்டும் நல்லா எழுதவில்லையென்றால் ,
அப்புறம் நான் அய்யா கட்சியில சேர்ந்துவிடுவேன்.
.( சார். கொஞ்சம் பார்த்து எழுதுங்க சார்.. நம்ம ராசிக்கு.. ஹி..ஹி..ஹி)

நாமக்கல் சிபி said...

:))

Like this Settai!

settaikkaran said...

//ஆகா.. நிசமாவே பாதி ஜோசியர் ஆயிட்டீர்....
நடத்துங்க..நடத்துங்க..
ஆனா மிதுனம் ராசிக்கு மட்டும் நல்லா எழுதவில்லையென்றால் ,
அப்புறம் நான் அய்யா கட்சியில சேர்ந்துவிடுவேன்.
.( சார். கொஞ்சம் பார்த்து எழுதுங்க சார்.. நம்ம ராசிக்கு.. ஹி..ஹி..ஹி)//

அண்ணே! எல்லாம் கிரகம் பண்ணுற வேலைண்ணே! அவங்க இருக்கிற பொசிஷனை வைச்சுத் தானே எழுத முடியும்? மிதுன ராசியா...? :-))))))))))))

நன்றிண்ணே! வருகைக்கும், கருத்துக்கும் உங்க ராசி பற்றிய தகவலுக்கும்...

settaikkaran said...

//))

Like this Settai!//

ஆஹா! நாமக்கல் சிபியண்ணே! தமிழ்மணத்துலே அனேகமா உங்க பெயரைப் பார்க்காத நாளே கிடையாது. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!!

எல் கே said...

pala visayangal sariyairunthalum oru visayam tappa iruku. namma blog pakkam vanthu parunga

settaikkaran said...

//pala visayangal sariyairunthalum oru visayam tappa iruku. namma blog pakkam vanthu parunga//

வாங்க வாங்க! என்னோட கணிப்புலே தவறா? சொற்குற்றமா அல்லது பொருட்குற்றமா...? :-)))))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...! அவசியம் வருவேன். பின்தொடர்வேன். நிறையக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

sathishsangkavi.blogspot.com said...

வர வர சேட்டை களை கட்டுது...

settaikkaran said...

// வர வர சேட்டை களை கட்டுது...//


ஹி..ஹி! எல்லாம் உங்க ஆசியும், என் ராசியும் தாண்ணே!