Monday, October 31, 2011

ஏழாம் அறிவு– எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்!

சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் என்னை விட விற்பன்னர்கள் இருப்பதால், பிரபலங்கள் எல்லாம் எழுதி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். ஓவராகக் காத்திருந்தால் ‘எங்கேயும் எப்போதும்,போல விமர்சனம் டூ லேட் ஆகி முடியாமலே போய் விடுமோ என்ற பயத்தில், என் மனதுக்குப் பட்டதை எழுதப்போகிறேன். எவ்வளவோ வாசிச்சிட்டிங்க, இதை வாசிக்க மாட்டீங்களா?

அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி, பல்லவ இளவரசனாக இருந்த போதிதர்மரை(சூர்யா), ராஜாமாதா ஒரு காரணமும் சொல்லாமல் சீனாவுக்குப் போகச்சொல்கிறார். (யாராவது அந்த ராஜமாதாவின் டி.என்.ஏவை மையமாக வைத்து இன்னொரு படம் எடுக்காம இருக்கணும்). தற்காப்புக்கலை, வைத்தியம், அஷ்டமாசித்தியின் ஒரு பகுதி ஆகிய ஆயகலைகளை அறிந்த போதிதர்மன், காஞ்சீபுரத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு, பாலைவனமெல்லாம் கடந்து (போதிதர்மனுக்கு ஜியாகிரபி தெரியாதுபோலும்) காஸ்ட்யூமெல்லாம் மாற்றிக்கொண்டு, சீனாவுக்குப் போகிறார். சில பல உயிர்களைக் காப்பாற்றி, கைம்மாறாக விஷம் கலந்த உணவை வாங்கிச் சாப்பிட்டு பொசுக்குன்னு போயிடறாரு! அவரை ஒரு அரிசிச்சாக்குலே போர்த்தி புதைச்சிடறாங்க! (சீனாவுக்கெல்லாம் உதவி பண்ணினா இதுதான் கதி-ன்னு சொல்றாங்களோ?)

இப்போ, கதை சமகாலத்துக்கு வருது. தமிழிலே சப்-டைட்டில் வந்தாலும், நம்மூரு மாதிரியே இலக்கணசுத்தமாக இங்கிலிபீசு பேசுற சீனாக்காரங்க, டோங்க் லீ-ன்னு ஒரு வில்லனைக் கூப்பிட்டு, ஆபரேஷன் ரெட்-னு ஒரு திட்டம் சொல்றாங்க. அதன்படி டோங்க்லீ இந்தியாவுக்குப் போயி, மரபணு ஆராய்ச்சி பண்ணுற சுபா(ஷ்ருதி ஹாசன்)வைத் தீர்த்துக்கட்டணும்! ஏன்னா, சுபா போதிதர்மனோட வம்சாவளியிலே  அவரோட டி.என்.ஏ எண்பது சொச்சம் சதவிகிதம் பொருந்துற அர்விந்த் (இன்னொரு சூர்யா) எனப்படுகிற சர்க்கஸ் தொழிலாளியோட டி.என்.ஏவை ஆராய்ச்சி பண்ணப்போறாராம். இந்த டோங்க்லீ இந்தியாவுக்கு வந்து, சென்னைப் போலீசையெல்லாம் நோக்குவர்மம் என்ற கலையாலே (ஹிஹிஹிஹி!) போட்டுத்தள்ளி, நாய்பிடிச்சு ஊசிபோட்டு வைரசைப் பரப்புறாரு! (பயோ வார்னு சொல்லுதாக; பயமாத்தான் இருக்கு.) இதுக்கு நடுவுலே ரொமான்ஸா உடான்ஸான்னு புரியாம ஒரு டூயட், ஒரு சோகப்பாட்டு, கொஞ்சமா சுவாரசியம்னு எதையெதையோ கலந்துகொட்டி ஒப்பேத்துறாங்க! கடைசியிலே ஹீரா உடம்பெல்லாம் கேபிளைச் சகட்டுமேனிக்கு சொருகி, அவரைத் தண்ணியிலே ஊறப்போட்டு (இட்லிக்கா அரைக்கப்போறாய்ங்க?) வில்லனோட சண்டைபோட்டு, தமிழர்களுக்குத் தர்ப்பணம்னு, அதாவது அர்ப்பணமுன்னு முடிக்கிறாய்ங்க!

படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, போதிதர்மனின் வரலாற்றில் (கொஞ்சம் நியூஸ் ரீல் போலிருந்தாலும்), நல்ல படப்பிடிப்பு காரணமாகவும், சூர்யாவினாலும் ஒன்ற முடிகிறது. அதே போல சாலையில் சூர்யா, ஷ்ருதியை யானையில் ஏற்றிச் செல்கிற காட்சி, சூர்யா ஷ்ருதியிடம் கோபப்படுகிற காட்சி என்று பலரகமாய் ஞாபகம் வைக்கத்தக்க காட்சிகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

மொத்தத்துலே சரியான காரம், மணம், குணம் நிறைந்த மசாலாப்படம் என்று டோங்க்லீ மீது சத்தியமாகச் சொல்லலாம். பிரச்சினை என்னான்னா, பாயசத்துலே கடுகு, உளுத்தம்பருப்பு தாளிச்சுக் கொட்டினா மாதிரி, காட்சிக்குப் பொருத்தமில்லாமல், இடைச்செருகல்களாய் வரும் சில வசனங்கள், பாடல்கள், காட்சிகள்! குறிப்பாக, சாவி கொடுத்துத் தமிழுணர்வை உசுப்பேத்த கொஞ்சம் மெனக்கிட்டிருக்காங்க! சுத்தமா ஒட்டலீங்கண்ணா!

சூர்யா ஒருத்தரை நம்பியே படம் எடுத்திருக்காங்கன்னு சொல்லுற அளவுக்கு பெரும்பாலும் அடக்கி ஆனா அழுத்தமா வாசிச்சிருக்காரு! ஷ்ருதிஹாசன் நல்ல அறிமுகம்; கொடுத்த வாய்ப்பை முயன்று பயன்படுத்தியிருக்கிறாரு! தமிழ் பேசறதுலே கவனம் செலுத்தினாப் போதும்! அந்த வில்லன் ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தானிருக்கு; ஃபினிஷிங் சரியில்லையே! ஆ..வூன்னா நோக்குவர்மம்னு பார்த்தே சாவடிக்கிறது ஒரு கட்டத்துலே படத்துலே காமெடியில்லாத குறையைத் தீர்த்திருது.

ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப வித்தியாசமா, அவரது முந்தைய படங்களின் டியூன் சிலவற்றோடு இசைப்புயலின் டாக்ஸி டாக்ஸி மெட்டையும் வெட்டியொட்டியிருக்கிறாரு! அதுவும் அவ்வப்போது யாரோ தேள்கொட்டினது போல கூவுகிற சத்தம் பின்னணியில் வரும்போது, காதுக்குள்ளே கொசு நுழைந்தது போலிருக்கிறது. ரவி கே சந்திரன் பாடல்காட்சிகளிலும், போதிதர்மன் காட்சிகளிலும் முத்திரையைப் பதிச்சிருக்கிறாரு! ஸ்டண்டு மாஸ்டர் பீட்டர் ஹெயின் பெரிய ஏமாற்றம்! குறிப்பாக, சூர்யா வில்லனுடன் போடுகிற இறுதிச்சண்டை கொட்டாவி ரகம்! காவல் நிலையத்தில் போலீசைப் பந்தாடுகிறவனோடு, ஆராய்ச்சிக்கூடத்தில் சாதனமாயிருந்த கதாநாயகன் ஆக்கிரோஷமாகச் சண்டைபோடுவதெல்லாம் காதில் பூ! அதே போல சாலையில் கார்களும், ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் பறந்து பறந்து வருகிற காட்சியில் காட்சியமைப்பு, படு அமெச்சூரான கிராபிக்ஸ் காரணமாக சொதப்பலாய் இருக்கிறது. எடிட்டிங், அப்படியொண்ணு இருக்கா? நோ ஐடியா!

சராசரி தமிழ்ப்படமான இதை, எதிர்பார்ப்புகளின்றிப் பார்த்தால், மோசமென்று சொல்லிவிட முடியாது. ஆனால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல், எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, சந்தடி சாக்கில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் போலியாக மீசைமுறுக்கியதால் தான் இவ்வளவு விமர்சனம் வந்திருக்கிறதென்று தோன்றுகிறது.

திடுதிப்பென்று சர்க்கஸில் வேலைபார்க்கிற சூர்யா, ‘குழந்தை இறந்து பிறந்தாலும் மார்பில் வாளால் கீறுவார்களாம்,என்று புறநானூற்றுப் பாடலின் பொழிப்புரை சொல்வதெல்லாம் பொருத்தமாயில்லை. விட்டால் ‘குழவி இறப்பினும் ஊன்தடிபிறப்பினும் ஆளன்று என்றுவாளின் தப்பார்,என்று செய்யுளையே சொல்ல வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

போதிதர்மனைப் பற்றி தமிழனுக்குத் தெரியவில்லை என்றால், அதைக்  கூகிளில் தேடிக் கண்டுபிடித்த முருகதாசும் ஏளனம் செய்ய என்ன இருக்கிறது? சத்தியமாக கல்வியறிவு குறைந்திருக்கிற ஒரு தேசத்தில் பலருக்கு வரலாறு தெரியாமல் இருப்பது ஒரு குற்றமல்லவே? எதற்காக இந்த ‘யுரேகா?

அதே போல மஞ்சள் சாகுபடி செய்யாதவன், மஞ்சளுக்குப் பேட்டன்ட் கேட்கிறான் என்று ஒரு ஆதங்கம்! கூடத்தில் துளசிமாடம் கூட சயன்ஸ் என்று குமுறுகிறார்கள். இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று பிரச்சாரம் நடத்தி, அதை அவுட்-ஆஃப்-ஃபேஷன் ஆக்கிய தமிழர்களும் இருக்கிறார்களே? ஈழப்பிரச்சினையையும் விடவில்லை. ‘வீரத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள வித்தியாசம்,என்று சொல்கிறார் ஹீரோ! ( நான் ஈழம் குறித்து எழுதுவதேயில்லை; அதை எவ்வளவு குழப்ப வேண்டுமோ அவ்வளவும் செய்ய இருக்கிற ஆளுக்குப் பஞ்சமில்லை)

தமிழ், தமிழ் என்று கூச்சலிடுகிற இயக்குனர், கதாநாயகனையும் கதாநாயகியையும் ஏற்காட்டிலோ, மாமல்லபுரத்திலோ, குற்றாலத்திலோ டூயட் பாட விடுவதற்குப் பதிலாக எதற்கு வெளிநாடு போனாரோ தெரியவில்லை. இவ்வளவு டமில் பற்று உள்ள கதாநாயகன் கதாநாயகியை அம்பா ஸ்கைவாக் மாலுக்குத் தான் வரச்சொல்கிறார். நம்ம வீட்டு வசந்தபவனுக்கு வரச்சொன்னால் என்னவாம்?  இவ்வளவு ஏன், போதிதர்மர் சீனாவுக்குப் போகுமுன்னர், அதே குங்க்ஃபூவையும், அதே வைத்தியத்தையும் ஏன் இன்னொரு தமிழனுக்குக் கற்றுத்தராமல் போய்விட்டார் தெரியவில்லை. ஆக, எதையோ பிடிக்க நினைத்து எதுவாகவோ முடிந்து விட்டது “ஏழாம் அறிவு”.

அப்புறம், இந்த டி.என்.ஏ.குறித்த பூச்சூடல்கள்! ஒரு வாதத்துக்கு போதிதர்மருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவரது வழிவழிவந்தவர்களும் குரங்குப்பெடல் போடாமல் நேரடியாக சைக்கிள் ஓட்டி விடுவார்களா என்ன? ஏதோ ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் படுக்கப்போட்டு, வயர்களைச் சொருகினால், தூக்கத்திலிருந்து எழுவதுபோல எழுந்து குங்க்ஃபூ சண்டைபோடத்தான் முடியுமா? (முடியலே....!) சித்தர்கள் பற்றியெல்லாம் சொல்கிறார்கள். சித்தர்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகே அபூர்வமான சக்திகளைப் பெற்றார்கள். அவர்களது வாரிசுகள் என்று சொல்லி எழும்பூர் கென்னத் சந்தில் லாட்ஜில் தங்கி கைரேகை ஜோசியம் பார்ப்பவர்களெல்லாம் சித்தராகி விட முடியுமா?

ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! ஒரு நாட்டுவைத்தியன் ஒரு குறிப்பிட்ட மருந்தைப்பற்றி தன் சுவடியில் “இருகுரங்கின் கையெடுத்துப் புடம்போடு,என்று எழுதிவைத்து விட்டுச் செத்துப்போனானாம். கொஞ்ச நாள் கழித்து, சொர்க்கத்தில் அவனை சந்தித்த நண்பர், “நீ எழுதிய சுவடியின்படி உன் மகன் கொடுத்த மருந்தால்தான் நான் செத்துப்போய் சொர்க்கத்துக்கு வந்தேன்,என்று சொன்னானாம். நடந்தது என்னவென்றால், இறந்துபோன வைத்தியனின் மகன் ஒரு குரங்கின் இரண்டு கைகளை வெட்டி அதைப் புடம்போட்டு மருந்தாய்க் கொடுத்திருக்கிறான். ஆனால், தமிழில் குரங்குக்கு ‘முசுஎன்று ஒரு பெயருண்டு. வைத்தியன் சொல்ல நினைத்த இருகுரங்கு முசு-முசு-கை அதாவது முசுமுசுகை என்ற மூலிகை! இதைத் தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்று சொல்வார்கள்.

ஏழாம் அறிவு படமும் ஏறக்குறைய அப்படியே!

படம்: தட்ஸ்டமில் (அ) தட்ஸ்தமிழ்

51 comments:

கோவை நேரம் said...

நெத்தியடியான விமர்சனம்.பிரபலங்கள் படிக்கணும் ....

blogpaandi said...

இது தாண்டா விமர்சனம்
-Dr.ராஜசேகர்

அம்பலத்தார் said...

விமர்சனம் என்பதையும் தாண்டி நல்ல பல விடயங்களையும் சொல்லும் சுவாரசியமான பதிவு.

நாய் நக்ஸ் said...

சேட்டை கிட்ட இதை இதை தான்
எதிர்பர்க்குறோம் .....:))

vivek kayamozhi said...

உங்கள் விமர்சனம் சரியே.... ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் இந்த படம். முதலில் வரும் போதி தர்மர் பகுதி ஒ.கே . பிற்பாடு நிகழ் காலத்தில் வரும் காட்சிகள் மட்டமான ராம.நாராயணன் ரகம். நீங்கள் குறிப்பிட்ட பின்னணி கதறல் என் நண்பர்களுக்கு சிரிப்பையே வரவைத்தது. அதிக சத்தமாக இருந்துவிட்டால் அது பிரமாண்டமான இசையோ?
போதி தர்மரை தெரியாதது அவ்வளவு பெரிய குற்றமா? வீரமாமுனிவரை ஜெர்மனியில் யாருக்கும் தெரியாது, ஆனால் இங்கே அவர் ஒரு பிரபலமான மதகுரு, தமிழ் தொண்டு ஆற்றிய கிறிஸ்தவ பாதிரியாராம், அதேபோல் தமிழ் அறிஞர் கால்டுவெல் ஐ அவர்கள் ஊரில் யாருக்கு தெரியும்? பென்னி குக் -குமுளி முதல் ராம்நாடு வரை இருக்கும் விவசாய மக்களுக்கு ஒரு தெய்வம் போல தான், அவர் வாரிசுகளுக்கு இந்த வரலாறு சமீப காலம் வரை தெரியாது. அவ்வளவு ஏன்? மலையாளியான எம்.ஜி ஆர் க்கு கேரளாவில் ஒரு பிரபலமும் இல்லை, இங்கே அவர் சிலை இல்லாத தெரு இல்லை. ஐரோப்பிய ஆன்மிக உலகம் அவதாரமாக பார்க்கும் ரமணரையும்,சிவானந்தரையும் திருச்சுழி காரனுக்கும்,பத்தமடை காரனுக்கும் தெரியுமா? இந்த கதையெல்லாம் எதற்கு? தமிழன் மேல் உண்மையான அக்கறை இருந்தால் வசனத்தில் வரும் பக்கத்து நாடு என்பதற்கு பதில் இலங்கை என்று பேரை சொல்லி இருக்கலாமே? காற்றுக்கென்ன வேலி போல் ஈழ போரை மையமாக வைத்து படம் எடுத்து தமிழர்களுக்கு வீரம் ஊட்ட வேண்டியது தானே? படம் வராது, போட்ட காசும வராது. நீங்கள் சம்பாதிக்க அரசியல் வியாதிகள் போல் தமிழும்,தமிழனும் தான் கிடைத்தானா?

அனுஷ்யா said...

இடுகையில் இருந்த புறநானூற்று வரிகள் இனிமை..கஜினிக்கு கிடைத்த அங்கீகாரம் அழகாகவும் குறும்பாகவும் மெருகேற்றிய காதல் காட்சிகளால்தான் என்ற உணர்வு இல்லாமல் தன்னை ஒரு மாற்று சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டு ஒரு குழப்பமான முயற்சி செய்துவிட்டார் முருகதாஸ்..பேரரசு,இராமநாராயணன்,சுய சிந்தனையாளர் இராஜா போன்றோர்களுக்கு மத்தியில் கொஞ்சம் தமிழ் சினிமாவை முன்னேற்ற துடிக்கும் ஆசை இருக்கும் அவரைக் கொஞ்சம் இந்த பிழைகளுக்காக மன்னிக்கலாம்..மற்றபடி நேர்த்தியான விமர்சனம்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சினிமா...

எந்த அளவுக்கு மக்களை, தம் ஆறாம் ஆறிவைக்கூட உபயோகிக்க விடமால் ஐந்தறிவு ஆட்டுமந்தை கூட்டமாக்குகிறது என்பதற்கு இந்த படமும் அதை எல்லாம் போய் சீரியஸாக விமர்சனம் செய்த உங்கள் பதிவும் நல்ல உதாரணம்.

இந்த படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு தீபாவளி அன்று சுமார் நானூறு தியேட்டரில் வெளியிடப்பட்டுள்ளதாம். அதில் ஒரு ஆங்கில தெலுங்கு "செவன்த் சென்ஸ் மூவி ரிவிவ்" கதை சொல்கிறது...!

நீங்க சொன்ன "தமிழ்ப்பெருமை"... "தமிழன் தன்மானம்" கதைக்கு எல்லாம் உல்டா முரணாக..!

எப்படி..?

/// 7th Sense Movie is based on the theme of time traveling machine.
This time machine is invented by Shruti Hassan as she plays
a scientist's role. Her invention of time machine unveils
the hidden truths of the Telugu culture and its ancient
connection with the Chinese tradition. ///---இது எப்படி இருக்கு..? தெலுங்கில் இப்படி. அடுத்து ஹிந்தி டப்பிங்கில் கதை எப்ப்டின்னு தேடி சொல்றேன்.

இந்த படத்தை எல்லாம் பார்த்து நமக்கு தமிழ் உணர்வு எல்லாம் வர வேண்டாம்...

"மொழிக்கு ஒரு வரலாறு புனைந்து, பெண்களை துகிலுரித்து திரையில் கடைபரப்பி காட்டி, ஏமாந்தவரிடம் காசு பார்த்து கல்லா கட்டும் இந்த போக்கிரி நயவஞ்சக சினிமா கூட்டத்தை செருப்பால் அடித்து விரட்டனும்" என்ற நியாயமான ஆத்திரம் நமக்கு வந்தால் அது போதும்..! மனித சமுதாயம் உருப்படும்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///சந்தடி சாக்கில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் போலியாக மீசைமுறுக்கியதால் தான் இவ்வளவு விமர்சனம் வந்திருக்கிறதென்று தோன்றுகிறது.///---நீங்கள் அண்ணா ஹசாரேவிடம் கோபப்பட்டதில் பத்தில் ஒரு பங்காவது இதில் கோபம் காட்டவே இல்லையே..?

யூ டூ சேட்டை... தி ப்ரூட்டஸ்..?

///போதிதர்மனைப் பற்றி தமிழனுக்குத் தெரியவில்லை என்றால், அதைக் கூகிளில் தேடிக் கண்டுபிடித்த முருகதாசும் ஏளனம் செய்ய என்ன இருக்கிறது? சத்தியமாக கல்வியறிவு குறைந்திருக்கிற ஒரு தேசத்தில் பலருக்கு வரலாறு தெரியாமல் இருப்பது ஒரு குற்றமல்லவே? எதற்காக இந்த ‘யுரேகா’?///---வேற எதுக்கு காசு சேர்க்கத்தான்..!

இந்த மாதிரி புனைவு கதையை 'தமிழன் வரலாறு' என்று பொய் சொல்லி மக்களை எமாத்தில் சம்பாரிப்பதை விட...

அய்யா... தாயே... ன்னு பிச்சை கேட்டால் நான் முந்நூறு ருபாய் முருகாதாசின் முகத்தில் வீசி எரிய தயார்..! இருநூறு ரூபாய் சூர்யாவின் மூஞ்சியில் வீசி எரியவும் தயார்..!

Keddavan said...

Suriyavju murugatjsajum tamil unnarva vachu kashu sampathirkeranga enru kuppadu poddura nee tamiluku enna kalai seyaja seythani...avenga namajum padathida namajum use panni hit vaanfga try panniura..ethku nee pesama pechakarngalda poi pechai edukalam..

மாணவன் said...

விமர்சனம் உங்க ஸ்டைலில் செம்ம கலக்கல் பாஸ்...

பால கணேஷ் said...

தமிழ், தமிழன்கற வார்த்தைய உணர்ச்சிகரமாச் சொல்லி பிசினஸ் ஆக்கறததான் இப்போ பேஷனாப் போச்சே... ஆனா நோக்கு வர்மம் கேலியான விஷயமில்ல சேட்டையண்ணா. அது முறையாப் பயின்றவர்களால செய்யக்கூடிய ஒரு அரிய கலை. கேலிக்கிடமாப் பயன்படுத்தியிருக்காங்களோ என்னமோ... பாத்துட்டு சொல்றேன். எதையும் விட்டுவிடாமல் (உங்கள் பாணியையும்) அழகாக விமர்சித்துள்ளீர்கள்!

வைகை said...

நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லையேன்னு நினைச்சேன்... ஆனா இப்பதான் நல்லவேள பார்க்கலைன்னு தோணுது :)

வெங்கட் நாகராஜ் said...

’இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ வரும்போது பார்த்துக்கலாம்னு சொல்றீங்க! சரி சேட்டை...

நல்ல விமர்சனம்....

Unknown said...

//ஆனால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல், எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, சந்தடி சாக்கில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் போலியாக மீசைமுறுக்கியதால் தான் இவ்வளவு விமர்சனம் வந்திருக்கிறதென்று தோன்றுகிறது//
உண்மை! உண்மை!

என்னா விமர்சனம்!
கொன்னுட்டீங்க பாஸ்!
சேட்டைன்னா சேட்டைதான்! :-)

சத்ரியன் said...

// (இட்லிக்கா அரைக்கப்போறாய்ங்க?)//

அக்மார்க் சேட்டை!

Anonymous said...

Very good justification,using neighbouring country (Eelam) is very bad business trick!!!!

Thank You :)

சக்தி கல்வி மையம் said...

நடுநிலையான விமர்சனம்..

rajamelaiyur said...

உங்களிடம் இருந்து எதிர் பதிவு வரும் என நினைத்தேன் .. போட்டுடிங்க

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

வவ்வால் said...

சேட்டை, நல்ல விமர்சனம், நிறையப்பேர் போதி தர்மன் மேலயே கவனம் வச்சு பதிவுப்போட்டாங்க .சர்க்கஸ்ல இருந்துக்கிட்டு புறநானூறு அகநானூறு லாம் பேசவிட்டா காமெடியாத்தான் இருக்கும்., ஒரு வேளை சூர்யாக்குள்ள ராஜபரம்பரை ஜீன் இருக்குனு சிம்பாலிக்கா இயக்குநர் காட்ட பார்த்திருப்பார் போல!

"மிரட்டல் அடி "னு ஒருசீன டப்பிங் படம் அது இத விட பெட்டராக இருக்கும் ,வில்லன் கிட்ட அடி வாங்கிய ஹீரோவுக்கு பச்சிலைக்கட்டு போட்டதும் குங்குப்பூ தானா வந்திடும் . :-))
சும்மா உணர்ச்சிய தூண்டி குளிர்காயமா ஒரு கமெர்சியல் படமா குடுத்திருக்கலாம்,அறிவு ஜீவி பட்டத்துக்கு ஆசைப்பட்டார் போல.

லாரன்ஸ், நாமநாராயணன் அளவுக்கு முருகதாசுக்கு டேலண்ட் காணாது,அவங்கல்லாம் போதி தர்மர் ஆவி சூர்யாவுக்கு புடிச்சுக்குச்சு சொல்லி சுளுவா முனி பார்ட்-3 எடுத்து கல்லா கட்டி இருப்பாங்க!முருகதாசும் போதி தர்மர் ஆவிய விட்டு கடிக்க வச்சு இருக்கலாம்.,ரெசிடெண்ட் எவில் போலனு சொல்லிக்கலாம்.
//காஞ்சீபுரத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு, பாலைவனமெல்லாம் கடந்து (போதிதர்மனுக்கு ஜியாகிரபி தெரியாதுபோலும்)//

சேட்டை , மங்கோலியா, சீனாவுக்கு பொதுவா கோபி பாலைவனம் இருக்கு.அது வழியா போறதா காட்டி இருக்கலாம்.

r.v.saravanan said...

சுவாரசியமான விமர்சனம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் சேட்டை...... திரும்ப திரும்ப படிச்சுட்டிருக்கேன்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////னு சொல்லுதாக; பயமாத்தான் இருக்கு.) இதுக்கு நடுவுலே ரொமான்ஸா உடான்ஸான்னு புரியாம ஒரு டூயட், ஒரு சோகப்பாட்டு, கொஞ்சமா சுவாரசியம்னு எதையெதையோ கலந்துகொட்டி ஒப்பேத்துறாங்க!////////

நம்மாளுங்களுக்கு இது இல்லேன்னா கடலைமுட்டாய் கூட விக்க முடியாது போல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பாயசத்துலே கடுகு, உளுத்தம்பருப்பு தாளிச்சுக் கொட்டினா மாதிரி, காட்சிக்குப் பொருத்தமில்லாமல், இடைச்செருகல்களாய் வரும் சில வசனங்கள், பாடல்கள், காட்சிகள்! குறிப்பாக, சாவி கொடுத்துத் தமிழுணர்வை உசுப்பேத்த கொஞ்சம் மெனக்கிட்டிருக்காங்க! சுத்தமா ஒட்டலீங்கண்ணா!///////

படத்த எடுத்து முடிச்சிட்டு ஓடுமோ ஓடாதோன்னு பயந்து போயி சேர்த்திருப்பாய்ங்களோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////காவல் நிலையத்தில் போலீசைப் பந்தாடுகிறவனோடு, ஆராய்ச்சிக்கூடத்தில் சாதனமாயிருந்த கதாநாயகன் ஆக்கிரோஷமாகச் சண்டைபோடுவதெல்லாம் காதில் பூ!//////

என்ன அநியாயம் இது? காக்க காக்க படத்துல ஐசி யூனிட்ல படுத்திருந்தவரு கெளம்பி போயி சண்ட போடலையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல், எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, சந்தடி சாக்கில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் போலியாக மீசைமுறுக்கியதால் தான் இவ்வளவு விமர்சனம் வந்திருக்கிறதென்று தோன்றுகிறது.///////

அதேதான்... முருகதாஸ் பேசுன பேச்சுலதான் எல்லாரும் வெறியாகிட்டாங்க போல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ், தமிழ் என்று கூச்சலிடுகிற இயக்குனர், கதாநாயகனையும் கதாநாயகியையும் ஏற்காட்டிலோ, மாமல்லபுரத்திலோ, குற்றாலத்திலோ டூயட் பாட விடுவதற்குப் பதிலாக எதற்கு வெளிநாடு போனாரோ தெரியவில்லை. //////

பின்ன 85 கோடி பட்ஜெட்டுன்னு சொல்லிட்டு அப்புறம் எப்படி செலவு பண்றதாம்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஏதோ ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் படுக்கப்போட்டு, வயர்களைச் சொருகினால், தூக்கத்திலிருந்து எழுவதுபோல எழுந்து குங்க்ஃபூ சண்டைபோடத்தான் முடியுமா? (முடியலே....!)//////

அதானே.... சைன்ஸ் ஃபிக்சன்னு சொல்லி எடுக்கறதுக்கு கான்செப்ட்ல கொஞ்சமாவது அடிப்படை லாஜிக் வேணும்..... இவங்க சாத்தியமே இல்லாத ஒண்ணை அடிப்ப்டையா வெச்சு படத்த எடுத்திருக்காங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருகுரங்கு உதாரணம்... செம....!

வெட்டிப்பேச்சு said...

//பாயசத்துலே கடுகு, உளுத்தம்பருப்பு தாளிச்சுக் கொட்டினா மாதிரி, காட்சிக்குப் பொருத்தமில்லாமல்,//

இது ஒன்னே போதுங்க உங்க எழுத்து ஜாலத்தை பாராட்ட..

வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நிச்சயம் படம் பார்க்கத்தான் போறேன்.. ஆனா உங்க விமர்சனம் செம கிளாஸ்..

middleclassmadhavi said...

நல்ல விமர்சனம்!! DNA கான்செப்ட் assassins' creed என்ற விளையாட்டிலிருந்து வந்திருக்குமோன்னு சந்தேகம்! எனது இந்தப் பதிவை முடிந்தால் பார்க்கவும் - http://middleclassmadhavi.blogspot.com/2011/10/assassins-creed.html

சுபத்ரா said...

அளவான வார்த்தைகளுடன் அருமையாக எழுதப்பட்டிருக்கும் விமர்சனம்! ரொம்ப நல்லாயிருக்கு சேட்டை..

சிவானந்தம் said...

கலக்குங்க சேட்டை. எதை பத்தி எழுதினாலும் அதில் நக்கல் நையாண்டி என கலக்குகிறீர்கள். அதே சமயம் அது ரசிக்கும்படியாகவும் இருகிறது, தரமாகவும் இருக்கிறது. இது ஒரு அபூர்வமான திறமை. வாழ்த்துக்கள்

Anonymous said...

இல்லேங்க. ரொம்பவே தவறான கருத்து. எனக்குத் தெரிஞ்ச ஆஸில இருக்கற மார்ஷல் ஆர்ட் மாணவர்களுக்கு (பெரும்பாலும் சீனர்கள்) சிலம்பாட்டம் தான் உலகின் முதலாவது மார்சல் ஆட், அதில் இருந்து தான் மற்றவை தோன்றிச்சுன்னு நல்லாவே தெரிஞ்சிருக்கு. ஆனால், இலங்கை/இந்திய மாணவர்களுக்கு அது தெரிஞ்சிருக்கல. எனக்குத் தெரிய காரணம், வாசிப்பு என்பது எனக்கு சுவாசம் மாதிரி. மத்தவங்களுக்குத் தெரியாததுக்கு காரணம் நம்ம அலட்சியம் தான்.

பெரியாரோட லூசுத்தனத்தால் நடந்த பிழைகளை திருத்தாமா, அவரு செஞ்சாரு, அவரும் தமிழன் தான்னு நண்டு கதை மாதிரி ஆகக் கூடாது.

இன்னும் கூட சிலம்பாட்டம் தான் எல்லாத்துக்கும் மூலகாரணம்னு படத்திலேயும் சொல்லல. குங்குபூவை தமிழ் நாட்ல கத்துக் கொடுக்கலேன்னு சொல்றது அபத்தம். அவர் கொண்டு போனது நம்ம சிலம்பம். அதிலே இருந்து தோன்றினது தான் மத்த மார்சல் ஆர்ட்.

படத்திலேயும் சரியாகச் சொல்லலே. படிச்சவங்களும் சரியாகப் புரிஞ்சுக்கல.

பாட்டு, நோக்கு வர்ம காட்சி, நிறைய லொஜிக் மீறல்கள் இருந்தாலும் (ரொம்ப கடுப்பு ஈழப்பிரச்சினையை ஊறுகாயாக்கியது) படத்தில சூர்யா போட்ட உழைப்பு, சயன்ஸ் பிக்சனுக்காக பார்க்கலாம்.

படத்தில சூர்யா பேசற இரண்டு காட்சிகளில் இலங்கைனு சொல்லித் தான் இருக்கார். ஸ்ருதி எடுத்து தப்பான சாயிஸ். படத்தில் உழைப்பிருக்கு. சூர்யாவோட ஸ்டான்ஸ் எல்லாம் பக்காவாக (ரொம்ப நீட்) இருந்துச்சு. ஜொனிக்கு ஈடாக காட்சிகளில் நடிச்சது நல்லா இருந்துச்சு.

இந்தியால எப்படி ப்ரோமோட் பண்ணினாங்கனு தெரியாது. அதால கடுப்பாகிட்டு இப்படி மோசமாக சொல்லக் கூடாது. விஜயோட படங்களை ஓட வைக்கறீங்க, ரஜினி படம் ஓட வைக்கறீங்க. சூர்யாவோட உழைப்புக்காக இந்தப் படம் ஓடக்கூடாதா? எந்திரன ஓட வைச்சவங்க, ஏன் இதை ஓட வைக்கமாட்டேன்னு சொல்றீங்க. ரொம்பவே ஹார்ஷான விமர்சனம்.

கமல் செய்யற திருட்டை ரசிக்கறவங்க, அவரோட முயற்சிக்காக அந்த திருட்டையே தமிழர்களுக்கு ஏத்த மாதிரி காட்டி இருக்கார் என்று பூசி மெழுகுறீங்க, விக்ரமோட கடைசி படத்தையும் பாராட்டுறீங்க, ஏன் திருட்டில்லாத முருகதாஸோட முயற்சிக்கு கை கொடுக்கறீங்க இல்லே. கஜினி திருட்டுப் படம், இது திருட்டு படம் கூட இல்லையே. ரொம்பவே ஹார்ஷாக சொல்வது ரொம்ப அதிகம். என்னோட இரண்டு சதங்கள்.

பி,கு: எனக்கு எக்சாம் டைம். தேவை இல்லாத வேலையாக இங்கு பின்னூட்டம் போடறேனு பட்டாலும் போட்டுட்டு போறேன். சண்டை போடறவங்க எல்லாம் ஒரு பத்து நாளுக்கப்புறம் வந்து சண்டை போடுங்க. இந்தப் படத்தைப் பார்த்து தான் தமிழன் பெருமை அடையனும்னு சொல்லல. ஆனால், கொஞ்சமாவது அப்ரிஷியேட் பண்ணவேண்டிய படம்.

settaikkaran said...

//கோவை நேரம் said...

நெத்தியடியான விமர்சனம்.பிரபலங்கள் படிக்கணும் ....//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//blogpaandi said...

இது தாண்டா விமர்சனம்-Dr.ராஜசேகர்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//அம்பலத்தார் said...

விமர்சனம் என்பதையும் தாண்டி நல்ல பல விடயங்களையும் சொல்லும் சுவாரசியமான பதிவு.//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//NAAI-NAKKS said...

சேட்டை கிட்ட இதை இதை தான் எதிர்பர்க்குறோம் .....:))//

ஹாஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//vivek kayamozhi said...

உங்கள் விமர்சனம் சரியே.... ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் இந்த படம். முதலில் வரும் போதி தர்மர் பகுதி ஒ.கே . பிற்பாடு நிகழ் காலத்தில் வரும் காட்சிகள் மட்டமான ராம.நாராயணன் ரகம். நீங்கள் குறிப்பிட்ட பின்னணி கதறல் என் நண்பர்களுக்கு சிரிப்பையே வரவைத்தது. அதிக சத்தமாக இருந்துவிட்டால் அது பிரமாண்டமான இசையோ?//

சினிமாவின் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்தோ, மேற்கத்திய திரைப்படங்கள் குறித்தோ அறிந்திராத சராசரி அடித்தட்டு ரசிகனான எனது கோணத்தில், எனது எதிர்பார்ப்புகள் எதிர்கொண்ட ஏமாற்றங்களினால் உந்தப்பட்டு எழுதிய விமர்சனம் இது. அப்படிப் பலர் இருக்கிறார்கள் போலும். :-)

//போதி தர்மரை தெரியாதது அவ்வளவு பெரிய குற்றமா? வீரமாமுனிவரை ஜெர்மனியில் யாருக்கும் தெரியாது, ஆனால் இங்கே அவர் ஒரு பிரபலமான மதகுரு, தமிழ் தொண்டு ஆற்றிய கிறிஸ்தவ பாதிரியாராம், அதேபோல் தமிழ் அறிஞர் கால்டுவெல் ஐ அவர்கள் ஊரில் யாருக்கு தெரியும்? பென்னி குக் -குமுளி முதல் ராம்நாடு வரை இருக்கும் விவசாய மக்களுக்கு ஒரு தெய்வம் போல தான், அவர் வாரிசுகளுக்கு இந்த வரலாறு சமீப காலம் வரை தெரியாது. அவ்வளவு ஏன்? மலையாளியான எம்.ஜி ஆர் க்கு கேரளாவில் ஒரு பிரபலமும் இல்லை, இங்கே அவர் சிலை இல்லாத தெரு இல்லை. ஐரோப்பிய ஆன்மிக உலகம் அவதாரமாக பார்க்கும் ரமணரையும்,சிவானந்தரையும் திருச்சுழி காரனுக்கும்,பத்தமடை காரனுக்கும் தெரியுமா?//

இன்னும் எம்.ஜி.ஆர். உயிரோடிருப்பதாக நம்புகிறவர்கள் இருக்கிறார்களாம். இந்தியாவின் பிரதமர் யாரென்றால் சொல்லத்தெரியாத பல குக்கிராமங்களும் மலைப்பிரதேசங்களும் இருக்கின்றனவாம்.

//இந்த கதையெல்லாம் எதற்கு? தமிழன் மேல் உண்மையான அக்கறை இருந்தால் வசனத்தில் வரும் பக்கத்து நாடு என்பதற்கு பதில் இலங்கை என்று பேரை சொல்லி இருக்கலாமே? காற்றுக்கென்ன வேலி போல் ஈழ போரை மையமாக வைத்து படம் எடுத்து தமிழர்களுக்கு வீரம் ஊட்ட வேண்டியது தானே? படம் வராது, போட்ட காசும வராது. நீங்கள் சம்பாதிக்க அரசியல் வியாதிகள் போல் தமிழும்,தமிழனும் தான் கிடைத்தானா?//

இது counter-productive ஆகிவிட்டதென்று உறுதியாகச் சொல்லலாம். காரணம், தமிழர்களின் உணர்வுடன் இணைந்துவிட்ட ஒரு பிரச்சினையை இவ்வளவு மேம்போக்காக ஒற்றை வார்த்தையில் சொல்லியது பலருக்கு ஆத்திரத்தையே மூட்டியிருப்பதாக உணர முடிகிறது.

வருகைக்கும் பொறுமையான, விபரமான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! அடிக்கடி வருகை புரிக! :-)

settaikkaran said...

//மயிலன் said...

இடுகையில் இருந்த புறநானூற்று வரிகள் இனிமை//

மிக்க மகிழ்ச்சி!

//கஜினிக்கு கிடைத்த அங்கீகாரம் அழகாகவும் குறும்பாகவும் மெருகேற்றிய காதல் காட்சிகளால்தான் என்ற உணர்வு இல்லாமல் தன்னை ஒரு மாற்று சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டு ஒரு குழப்பமான முயற்சி செய்துவிட்டார் முருகதாஸ்//

கருவைத் தேர்வு செய்வதில் காட்டிய சிரத்தையை, திரைக்கதையை செம்மைப் படுத்துவதில் செய்யத் தவறியிருக்கிறார் என்று சொல்லலாம்.

//பேரரசு,இராமநாராயணன்,சுய சிந்தனையாளர் இராஜா போன்றோர்களுக்கு மத்தியில் கொஞ்சம் தமிழ் சினிமாவை முன்னேற்ற துடிக்கும் ஆசை இருக்கும் அவரைக் கொஞ்சம் இந்த பிழைகளுக்காக மன்னிக்கலாம்..மற்றபடி நேர்த்தியான விமர்சனம்..//

பொழுதுபோக்கான படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புகளை சற்றே வலுக்கட்டாயமாக ஏற்படுத்தியதால், படத்தின் தொய்வு விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

சினிமா...எந்த அளவுக்கு மக்களை, தம் ஆறாம் ஆறிவைக்கூட உபயோகிக்க விடமால் ஐந்தறிவு ஆட்டுமந்தை கூட்டமாக்குகிறது என்பதற்கு இந்த படமும் அதை எல்லாம் போய் சீரியஸாக விமர்சனம் செய்த உங்கள் பதிவும் நல்ல உதாரணம்.//

ஆட்டுமந்தைக் கூட்டத்தில் ஒத்த கருத்து இருக்காது நண்பரே! எனது 315 சொச்ச பதிவுகளில் மிகக் குறைவாக எழுதிய விமர்சனங்கள் குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை. அதே போல, சினிமா விமர்சனம் செய்பவர்களைக் குருட்டாம்போக்கில் விமர்சனம் செய்பவர்கள் குறித்தும் கவலைப்படுவதில்லை. :-)

//இந்த படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு தீபாவளி அன்று சுமார் நானூறு தியேட்டரில் வெளியிடப்பட்டுள்ளதாம். அதில் ஒரு ஆங்கில தெலுங்கு "செவன்த் சென்ஸ் மூவி ரிவிவ்" கதை சொல்கிறது...! நீங்க சொன்ன "தமிழ்ப்பெருமை"... "தமிழன் தன்மானம்" கதைக்கு எல்லாம் உல்டா முரணாக..! எப்படி..? /// 7th Sense Movie is based on the theme of time traveling machine.
This time machine is invented by Shruti Hassan as she plays a scientist's role. Her invention of time machine unveils the hidden truths of the Telugu culture and its ancient connection with the Chinese tradition. ///---இது எப்படி இருக்கு..? தெலுங்கில் இப்படி. அடுத்து ஹிந்தி டப்பிங்கில் கதை எப்ப்டின்னு தேடி சொல்றேன்.//

ஆஹா, என் போன்றவர்களை ஆட்டு மந்தையோடு ஒப்பிட்ட நீங்கள் வேலை மெனக்கெட்டுப் பல தகவல்களைச் சேகரித்திருப்பதோடு, மேலும் தகவல்களைச் சேகரிக்கப்போவதாகச் சொல்கிறீர்களே? வேண்டாம், விட்டு விடுங்கள்! :-))

//இந்த படத்தை எல்லாம் பார்த்து நமக்கு தமிழ் உணர்வு எல்லாம் வர வேண்டாம்..."மொழிக்கு ஒரு வரலாறு புனைந்து, பெண்களை துகிலுரித்து திரையில் கடைபரப்பி காட்டி, ஏமாந்தவரிடம் காசு பார்த்து கல்லா கட்டும் இந்த போக்கிரி நயவஞ்சக சினிமா கூட்டத்தை செருப்பால் அடித்து விரட்டனும்" என்ற நியாயமான ஆத்திரம் நமக்கு வந்தால் அது போதும்..! மனித சமுதாயம் உருப்படும்..!//

சினிமாவைப் பார்த்து மொழியுணர்வோ இன உணர்வோ வருகிற அளவுக்கு சராசரி ரசிகன் பலவீனமானவன் அல்ல. ஒரு சினிமாவை மறக்க அவனுக்கு இன்னொரு சினிமா போதுமானது.

//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

நீங்கள் அண்ணா ஹசாரேவிடம் கோபப்பட்டதில் பத்தில் ஒரு பங்காவது இதில் கோபம் காட்டவே இல்லையே..? யூ டூ சேட்டை... தி ப்ரூட்டஸ்..?//

சகோ! இதென்ன வம்பாயிருக்கிறது? :-))))

அண்ணா ஹஜாரே மேட்டரும் இதுவும் ஒண்ணா? வெறும் இரண்டரை மணி நேரத்தில் முடிகிற ஒரு சினிமாவுக்கு நான் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரணும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? :-)

//இந்த மாதிரி புனைவு கதையை 'தமிழன் வரலாறு' என்று பொய் சொல்லி மக்களை எமாத்தில் சம்பாரிப்பதை விட...அய்யா... தாயே... ன்னு பிச்சை கேட்டால் நான் முந்நூறு ருபாய் முருகாதாசின் முகத்தில் வீசி எரிய தயார்..! இருநூறு ரூபாய் சூர்யாவின் மூஞ்சியில் வீசி எரியவும் தயார்..!//

இதைத் தான் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். புதுப் புது பெயரில், புதுப் புது அடையாளங்களுடன். அதையே சினிமாவில் எவரேனும் செய்வார்கள் தானே? மற்றபடி முருகதாஸ் ஒரு நல்ல இயக்குனர் என்பதிலோ, சூர்யா ஒரு திறமையான கலைஞர் என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்து இல்லை சகோ!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Keddavan said...

Suriyavju murugatjsajum tamil unnarva vachu kashu sampathirkeranga enru kuppadu poddura nee tamiluku enna kalai seyaja seythani//

நான் ஒண்ணும் டிக்கெட் வாங்கிட்டுப் படிக்கச் சொல்லலியே?

//avenga namajum padathida namajum use panni hit vaanfga try panniura//.

ஆமாம். ஹிட்ஸ் வாங்கி வெஸ்ட் மினிஸ்டர் பேலஸ் வாங்கப்போறேன்!

//ethku nee pesama pechakarngalda poi pechai edukalam..//

ங்கொய்யால, நீ அதைத்தான் லண்டனிலே பண்ணிட்டிருக்கியா? :-))

settaikkaran said...

//மாணவன் said...

விமர்சனம் உங்க ஸ்டைலில் செம்ம கலக்கல் பாஸ்...//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கணேஷ் said...

தமிழ், தமிழன்கற வார்த்தைய உணர்ச்சிகரமாச் சொல்லி பிசினஸ் ஆக்கறததான் இப்போ பேஷனாப் போச்சே...//

எக்ஸாக்ட்லீ! அது தான் உறுத்துது! :-(

//ஆனா நோக்கு வர்மம் கேலியான விஷயமில்ல சேட்டையண்ணா. அது முறையாப் பயின்றவர்களால செய்யக்கூடிய ஒரு அரிய கலை.//

தெரியும். எனக்கு வர்மக்கலை ஆசான்களுடன் நேரடிப்பழக்கமே உண்டு கணேஷ்!

//கேலிக்கிடமாப் பயன்படுத்தியிருக்காங்களோ என்னமோ... பாத்துட்டு சொல்றேன். எதையும் விட்டுவிடாமல் (உங்கள் பாணியையும்) அழகாக விமர்சித்துள்ளீர்கள்!//

ஒரு வாட்டி பார்க்கலாம். ஆனா, எதிர்பார்ப்போட போனா ஏமாந்துடுவீங்க! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//வைகை said...

நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லையேன்னு நினைச்சேன்... ஆனா இப்பதான் நல்லவேள பார்க்கலைன்னு தோணுது :)//

ஒரு வாட்டி பார்க்கலாம். ஆனா, எதிர்பார்ப்போட போனா ஏமாந்துடுவீங்க! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

’இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ வரும்போது பார்த்துக்கலாம்னு சொல்றீங்க! சரி சேட்டை...நல்ல விமர்சனம்....//

இல்லை வெங்கட்ஜீ! ஒரு சராசரி சினிமாவைப் பார்ப்பது போல பார்ப்பதினால் ஏமாற்றம் ஏற்படாது. எதிர்பார்ப்பு வேண்டாம். மிக்க நன்றி ஜீ!

//ஜீ... said...

உண்மை! உண்மை! என்னா விமர்சனம்! கொன்னுட்டீங்க பாஸ்!
சேட்டைன்னா சேட்டைதான்! :-)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//சத்ரியன் said...

அக்மார்க் சேட்டை!//

வாங்க! மிக்க நன்றி! :-)

//Ah'ham said...

Very good justification,using neighbouring country (Eelam) is very bad business trick!!!!
Thank You :)//

Not just that; there are several pure commercial tricks all over the film. :-)
Thanks!

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நடுநிலையான விமர்சனம்..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//உங்களிடம் இருந்து எதிர் பதிவு வரும் என நினைத்தேன் .. போட்டுடிங்க//

எதிர்பதிவு என்பதை விட, ஏமாற்றம் அடைந்ததால் எழுதிய பதிவு எனலாம்.

//வவ்வால் said...

சேட்டை, நல்ல விமர்சனம், நிறையப்பேர் போதி தர்மன் மேலயே கவனம் வச்சு பதிவுப்போட்டாங்க .சர்க்கஸ்ல இருந்துக்கிட்டு புறநானூறு அகநானூறு லாம் பேசவிட்டா காமெடியாத்தான் இருக்கும்., ஒரு வேளை சூர்யாக்குள்ள ராஜபரம்பரை ஜீன் இருக்குனு சிம்பாலிக்கா இயக்குநர் காட்ட பார்த்திருப்பார் போல!//

கதாபாத்திரங்களை சிருஷ்டிப்பதில் முருகதாஸ் காட்டுகிற கவனம் இந்தப் படத்தில் இல்லை என்பதே எனது கருத்து. அதனால் தான் எதுவுமே ஒட்டவில்லை.

//"மிரட்டல் அடி "னு ஒருசீன டப்பிங் படம் அது இத விட பெட்டராக இருக்கும் ,வில்லன் கிட்ட அடி வாங்கிய ஹீரோவுக்கு பச்சிலைக்கட்டு போட்டதும் குங்குப்பூ தானா வந்திடும் . :-))//

ஹாஹா! நான் வெளிநாட்டுப் படங்கள் மிக மிக அபூர்வமாய்த்தான் பார்க்கிறவன். தப்பிச்சேன்! :-)

//சும்மா உணர்ச்சிய தூண்டி குளிர்காயமா ஒரு கமெர்சியல் படமா குடுத்திருக்கலாம்,அறிவு ஜீவி பட்டத்துக்கு ஆசைப்பட்டார் போல.//

இரண்டுங்கெட்டான் படமாயிருச்சு முடிவுலே! :-))

//லாரன்ஸ், நாமநாராயணன் அளவுக்கு முருகதாசுக்கு டேலண்ட் காணாது,அவங்கல்லாம் போதி தர்மர் ஆவி சூர்யாவுக்கு புடிச்சுக்குச்சு சொல்லி சுளுவா முனி பார்ட்-3 எடுத்து கல்லா கட்டி இருப்பாங்க!முருகதாசும் போதி தர்மர் ஆவிய விட்டு கடிக்க வச்சு இருக்கலாம்.,ரெசிடெண்ட் எவில் போலனு சொல்லிக்கலாம்.//


என்னென்னமோ சொல்றீங்க! உங்களுக்குள்ளே ஒரு போதிதர்மரே இருப்பாரு போலிருக்கு! :-)

//சேட்டை , மங்கோலியா, சீனாவுக்கு பொதுவா கோபி பாலைவனம் இருக்கு.அது வழியா போறதா காட்டி இருக்கலாம்.//

பாலைவனம் இந்தியாவின் மேற்குப் பக்கத்திலிருக்குது. அப்படிப் போனா, பாகிஸ்தானுக்குத்தானே போக முடியும்? :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//r.v.saravanan said...

சுவாரசியமான விமர்சனம்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் சேட்டை...... திரும்ப திரும்ப படிச்சுட்டிருக்கேன்......!//

வாங்க பானா ராவன்னா! மிக்க மகிழ்ச்சி! :-)

//நம்மாளுங்களுக்கு இது இல்லேன்னா கடலைமுட்டாய் கூட விக்க முடியாது போல.....//

அதே! தாளிப்பு கொஞ்சம் தூக்கலாப் போயி, படத்தோட முக்கியமான டிராக்கை விட்டு ரொம்ப விலகிருச்சு!

//படத்த எடுத்து முடிச்சிட்டு ஓடுமோ ஓடாதோன்னு பயந்து போயி சேர்த்திருப்பாய்ங்களோ?//

வாய்ப்பிருக்கிறது. ஏன்னா, சம்பந்தா சம்பந்தமேயில்லாம இருக்குது! after thought தானோன்னு எனக்கும் தோணிச்சு!

//என்ன அநியாயம் இது? காக்க காக்க படத்துல ஐசி யூனிட்ல படுத்திருந்தவரு கெளம்பி போயி சண்ட போடலையா?//

அது சரிதான். ஆனா, அந்தப் படம் பெரிசா பில்ட்-அப் பண்ணாம, இயல்பாகவே வெற்றியடைந்த படமாச்சே! but your point is well taken! :-)

//அதேதான்... முருகதாஸ் பேசுன பேச்சுலதான் எல்லாரும் வெறியாகிட்டாங்க போல.....//

அவரே அப்படிச் சொல்லுறாருன்னா, கண்டிப்பா அப்படி ஏதாவது இருக்கும்னு எதிர்பார்த்துப் போறது இயற்கை தானே? போய் ஏமாந்தா கடுப்பாத்தானே இருக்கும்? :-(

//பின்ன 85 கோடி பட்ஜெட்டுன்னு சொல்லிட்டு அப்புறம் எப்படி செலவு பண்றதாம்....?//

ஹிஹி! அதுவும் சரிதான்! கூட பத்து நாள் திரைக்கதை குறித்து விவாதித்து இன்னும் மெருகேற்றியிருக்கலாமே-ன்னு ஒரு ஆதங்கம் தான்!

//அதானே.... சைன்ஸ் ஃபிக்சன்னு சொல்லி எடுக்கறதுக்கு கான்செப்ட்ல கொஞ்சமாவது அடிப்படை லாஜிக் வேணும்..... இவங்க சாத்தியமே இல்லாத ஒண்ணை அடிப்ப்டையா வெச்சு படத்த எடுத்திருக்காங்க....!//

அதுலே விசயம் என்னான்னா, சயன்ஸ் ஃபிக்சன்-னு சொன்னா ஆன்னு வாயைப் பொளக்கிற என்னை மாதிரி ஆசாமிங்களுக்கே காதுலே பூ சுத்துறாங்கன்னு தெரிஞ்சு போயிருது! :-)))

//இருகுரங்கு உதாரணம்... செம....!//

மிக்க மகிழ்ச்சி பானா ராவன்னா! மிகவும் ரசித்து லயித்துப் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெட்டிப்பேச்சு said...

இது ஒன்னே போதுங்க உங்க எழுத்து ஜாலத்தை பாராட்ட..வாழ்த்துக்கள்//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

நிச்சயம் படம் பார்க்கத்தான் போறேன்.. ஆனா உங்க விமர்சனம் செம கிளாஸ்..//

அவசியம் பாருங்க, விமர்சனத்தைப் படிச்சிட்டுப் போனா, அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்காது. மிக்க நன்றி! :-)

//middleclassmadhavi said...

நல்ல விமர்சனம்!! DNA கான்செப்ட் assassins' creed என்ற விளையாட்டிலிருந்து வந்திருக்குமோன்னு சந்தேகம்! எனது இந்தப் பதிவை முடிந்தால் பார்க்கவும் - http://middleclassmadhavi.blogspot.com/2011/10/assassins-creed.html//

அது குறித்து பல இடுகைகளில் வாசித்த ஞாபகம் இருக்கிறது. உங்கள் இடுகையையும் வாசிக்கிறேன். பணிப்பளு காரணமாக, இணையம் பக்கம் வர இயலாமல், இப்போது தான் பதிலே எழுத முடிந்திருக்கிறது. மிக்க நன்றி! :-)

//சுபத்ரா said...

அளவான வார்த்தைகளுடன் அருமையாக எழுதப்பட்டிருக்கும் விமர்சனம்! ரொம்ப நல்லாயிருக்கு சேட்டை..//

வாங்க வாங்க, பார்த்து வெகுநாட்களாகி விட்டன. மிக்க நன்றி! :-)

//சிவானந்தம் said...

கலக்குங்க சேட்டை. எதை பத்தி எழுதினாலும் அதில் நக்கல் நையாண்டி என கலக்குகிறீர்கள். அதே சமயம் அது ரசிக்கும்படியாகவும் இருகிறது, தரமாகவும் இருக்கிறது. இது ஒரு அபூர்வமான திறமை. வாழ்த்துக்கள்//

மிக்க மகிழ்ச்சி! அதிகம் வாசிப்பனுபவமோ தொழில்நுட்ப அறிவோ இல்லாததால், எனக்குத் தெரிந்தவரையில் எளிமையாய் எழுத முயல்கிறேன். அவ்வளவே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அனாமிகா துவாரகன் said...

இல்லேங்க. ரொம்பவே தவறான கருத்து.//

முதலில் உங்களது வருகைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பெருந்தன்மை பாராட்டத்தக்கது.

//எனக்குத் தெரிஞ்ச ஆஸில இருக்கற மார்ஷல் ஆர்ட் மாணவர்களுக்கு (பெரும்பாலும் சீனர்கள்) சிலம்பாட்டம் தான் உலகின் முதலாவது மார்சல் ஆட், அதில் இருந்து தான் மற்றவை தோன்றிச்சுன்னு நல்லாவே தெரிஞ்சிருக்கு. ஆனால், இலங்கை/இந்திய மாணவர்களுக்கு அது தெரிஞ்சிருக்கல. எனக்குத் தெரிய காரணம், வாசிப்பு என்பது எனக்கு சுவாசம் மாதிரி. மத்தவங்களுக்குத் தெரியாததுக்கு காரணம் நம்ம அலட்சியம் தான்.//

உண்மை! பல அரிய கலைகள் இங்கிருந்து போயிருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால், அந்தக் கருவை வெளிப்படுத்துகிற பாத்திரங்களின் படைப்பும், திரைக்கதையில் இருக்க வேண்டிய விறுவிறுப்பும் விரும்பிய அளவுக்கு இல்லாததால், இலக்கு தவறியிருக்கிறது என்பதே எனது கருத்து.

//பெரியாரோட லூசுத்தனத்தால் நடந்த பிழைகளை திருத்தாமா, அவரு செஞ்சாரு, அவரும் தமிழன் தான்னு நண்டு கதை மாதிரி ஆகக் கூடாது.//

பெரியாரைக் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமளவு எனக்கு வாசிப்பனுபவம் இல்லை. மாறுபட்ட கருத்துகள் எப்போதுமே இருக்கும்.

settaikkaran said...

//அனாமிகா துவாரகன் said...

இன்னும் கூட சிலம்பாட்டம் தான் எல்லாத்துக்கும் மூலகாரணம்னு படத்திலேயும் சொல்லல. குங்குபூவை தமிழ் நாட்ல கத்துக் கொடுக்கலேன்னு சொல்றது அபத்தம். அவர் கொண்டு போனது நம்ம சிலம்பம். அதிலே இருந்து தோன்றினது தான் மத்த மார்சல் ஆர்ட்.//

இது குறித்து எனக்குத் தெரிந்தவர்களுடன் பேசியபோது, கேரளத்தின் களரி, தொடுவர்மம், படுவர்மம் என்று பலதும் குறித்து விவாதிக்க நேர்ந்தது. அதில் சிலம்பம் குறித்து வெகுநேரம் விவாதித்தோம் என்பதும் உண்மையே!

//படத்திலேயும் சரியாகச் சொல்லலே. படிச்சவங்களும் சரியாகப் புரிஞ்சுக்கல.//

படத்திலே சரியாகச் சொன்னாலே, சில விசயங்கள் பலருக்குப் புரியாது என்பதால், ரசிகர்களைக் குற்றம் சொல்ல முடியாதே! :-)

//பாட்டு, நோக்கு வர்ம காட்சி, நிறைய லொஜிக் மீறல்கள் இருந்தாலும் (ரொம்ப கடுப்பு ஈழப்பிரச்சினையை ஊறுகாயாக்கியது) படத்தில சூர்யா போட்ட உழைப்பு, சயன்ஸ் பிக்சனுக்காக பார்க்கலாம்.//

நானும் குறிப்பிட்டிருக்கிறேனே சூர்யா பற்றி! இது முழுக்க முழுக்க அவரை மட்டுமே நம்பியெடுத்த படம் என்று நம்புகிறேன். :-)

//படத்தில சூர்யா பேசற இரண்டு காட்சிகளில் இலங்கைனு சொல்லித் தான் இருக்கார். ஸ்ருதி எடுத்து தப்பான சாயிஸ். படத்தில் உழைப்பிருக்கு. சூர்யாவோட ஸ்டான்ஸ் எல்லாம் பக்காவாக (ரொம்ப நீட்) இருந்துச்சு. ஜொனிக்கு ஈடாக காட்சிகளில் நடிச்சது நல்லா இருந்துச்சு.//

ஆமாம்! பெரும்பாலும் ஒப்புக்கொள்ளுகிறேன்.

settaikkaran said...

//அனாமிகா துவாரகன் said...

இந்தியால எப்படி ப்ரோமோட் பண்ணினாங்கனு தெரியாது. அதால கடுப்பாகிட்டு இப்படி மோசமாக சொல்லக் கூடாது.//

அது குறித்தெல்லாம் நான் விமர்சனத்தில் குறிப்பிடவேயில்லை. பம்பாய் படம் முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்படவில்லையா? அது ஒரு பொருட்டாய் எனக்குத் தோன்றவில்லை.

//விஜயோட படங்களை ஓட வைக்கறீங்க, ரஜினி படம் ஓட வைக்கறீங்க. சூர்யாவோட உழைப்புக்காக இந்தப் படம் ஓடக்கூடாதா?//

ஒரு படம் ஓடக்கூடாது என்று யாரும் விமர்சனம் எழுதுவதில்லை; கண்டிப்பாக எனது நோக்கம் அதுவல்ல.

//எந்திரன ஓட வைச்சவங்க, ஏன் இதை ஓட வைக்கமாட்டேன்னு சொல்றீங்க. ரொம்பவே ஹார்ஷான விமர்சனம்.//

இது ஒரு மசாலாப் படம். அவ்வளவு தான். அதற்கு மேல் இது குறித்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட விளம்பரம், தூண்டப்பட்ட இன, மொழியுணர்வு எல்லாமே இப்படத்தின் வெற்றிக்கு உதவவில்லை என்பது தான் பார்த்தவர்களின் கருத்து. எனது கருத்தும் அதுவே! If I sound a bit harsh, so it be! :-)

//கமல் செய்யற திருட்டை ரசிக்கறவங்க, அவரோட முயற்சிக்காக அந்த திருட்டையே தமிழர்களுக்கு ஏத்த மாதிரி காட்டி இருக்கார் என்று பூசி மெழுகுறீங்க, விக்ரமோட கடைசி படத்தையும் பாராட்டுறீங்க, ஏன் திருட்டில்லாத முருகதாஸோட முயற்சிக்கு கை கொடுக்கறீங்க இல்லே. கஜினி திருட்டுப் படம், இது திருட்டு படம் கூட இல்லையே. ரொம்பவே ஹார்ஷாக சொல்வது ரொம்ப அதிகம். என்னோட இரண்டு சதங்கள்.//

இந்தப் படத்தைக் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி, அவை ஈடேறாமல் ஏற்பட்ட ஏமாற்றங்களும் அதிகமாயிருப்பதால், அதன் வெளிப்பாடுகள் சற்றுக் கடுமையாக இருக்கின்றன. இது மணிரத்னம் இயக்கிய ’ராவணன்’ படத்துக்கும் ஏற்பட்டது. ஆக, விமர்சனங்கள் படம் தருகிற திருப்தியின் அடிப்படையிலும், ஏற்படுகிற ஆதங்கங்களின் அடிப்படையிலும் அமையும் என்பதே எனது நம்பிக்கை.

// பி,கு: எனக்கு எக்சாம் டைம். தேவை இல்லாத வேலையாக இங்கு பின்னூட்டம் போடறேனு பட்டாலும் போட்டுட்டு போறேன். சண்டை போடறவங்க எல்லாம் ஒரு பத்து நாளுக்கப்புறம் வந்து சண்டை போடுங்க. இந்தப் படத்தைப் பார்த்து தான் தமிழன் பெருமை அடையனும்னு சொல்லல. ஆனால், கொஞ்சமாவது அப்ரிஷியேட் பண்ணவேண்டிய படம்.//

யாரும் சண்டை போடப்போறதில்லை. கண்டிப்பா நான் போட மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த விமர்சனத்தோடு இந்தப் படம் பார்த்த நிகழ்வு கடந்தகாலமாகி விட்டது.

பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துகள். வருகைக்கும், விபரமான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி! :-)

வவ்வால் said...

//பாலைவனம் இந்தியாவின் மேற்குப் பக்கத்திலிருக்குது. அப்படிப் போனா, பாகிஸ்தானுக்குத்தானே போக முடியும்? :-))//

சேட்டை,
நீங்க சொல்றது தார் பாலைவனம் ராஜஸ்தான், நான் சொல்றது கோபி பாலைவனம், சீனாவில இருக்கு, சில்க் ரோட் னு அதை சுத்தி போகும், மார்கோ போலோ அதுல பயணம் செய்தார்.

கோபி பாலைவனம், அப்புறம், "தக்ல மகன்"("Taklamakan Desert") பாலைவனம் அப்படினு ஒன்னு, திபெத்ல இருக்கு, திபெத் வழியா சீனா போன பாலைவனம் வரும் போல. அருணாச்சல பிரதேசம் வழியா நாதுலா பாஸ்ல போனா வராது நினைக்கிறேன்.

வவ்வால் said...

அப்புறம் சேட்டை,

சீனா எந்த பக்கம் இருக்கு,பாகிஸ்தான் எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாம எப்படி 7 ஆம் அறிவுக்கு விமர்சனம் செய்தீங்க? இதை கேட்க வேணாம்னு தான் பார்த்தேன் , ஆனால் ரொம்ப கடுப்பா இருக்கு உங்கள போல மண்டபத்தில எழுதிவாங்கி பதிவு போடுறவங்கள பார்த்தா!

இப்போ எனக்கே டவுட்டா இருக்கு 7 ஆம் அறிவுல சொன்னது உட்டாலக்கடியா இருந்தாலும் ,ஒரு ஃபிக்ஷன் அது உங்க மண்டைக்கு ஏறி இருக்குமானு?

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உணவு உலகம் said...

அசத்தல் விமரிசனம்.

தமிழ்கிழம் said...

நண்பா, தசாவதாரம்-7ஆம் அறிவு,

ஒப்பிட்டு பாருங்கள்........

சி.பி.செந்தில்குமார் said...

நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க