Thursday, September 1, 2011

சுட்டபழம்

அரசு விடுமுறைகளின்போது, குறிப்பாக பண்டிகைகளின்போது அலுவலகத்துக்கு வரச்சொல்லுகிற அழிச்சாட்டியம் எரிச்சலூட்டுகிறது. அனேகமாக, ஒரு டீ குடிக்கவும் மதியத்தில் மண்ணடியில் கடையிருக்காது என்பதை அனுபவரீதியாக அறிந்திருக்கிறேன். மதிய உணவுக்காக மாங்கு மாங்கென்று செகண்ட் லைன் பீச்சுக்கோ அல்லது பாரிமுனைக்கோ தான் போய்த் தீர வேண்டும். இருந்தாலும், ’வர முடியாது,’ என்று சொல்லுகிற துணிவோ திமிரோ இல்லாததால், சிவாஜியைப் போல கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது. இந்த நடிப்புத்திறன் தான் இத்தனை வருடமாக வயிற்றை நிரப்புகிறது; கூரையைப் பிய்த்துக்கொண்டு தெய்வம் எப்போதாவது, எதையாவது கொடுக்கிறவரைக்கும், இந்த நடிப்பைக் கைகழுவி விட முடியாது. தெய்வம் கைவிடுவதை நிறுத்தும்வரையில் எந்தப் பாசாங்கையும் அனாவசியம் என்று அலட்சியப்படுத்துவதற்கில்லை; தெய்வம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையையும் எந்த சோப்பும் கழுவி விடுவதில்லை. அநிச்சயமான வாழ்க்கையின் அக, புற ஈடுபாடுகளுக்கு மத்தியில், தினசரி பணிக்குச் செல்வது மட்டுமே அழிக்க முடியாத சத்தியமாகவோ கட்டாயமாகவோ இருக்கிறது. இதுதான் கர்மயோகம் என்று யாராவது சொன்னால், ’பிழைத்துப்போ,’ என்று நெற்றிக்கண்ணைத் திறக்காமல் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

கர்மண்யே வாதிகாரஸ்யே மா பலேஷு கதாசன......!

மற்ற நாட்களில் குறுகிய தெருக்களை மறைத்தும் மறித்தும் காணப்படுகிற வாகனங்களின்றி, மண்ணடியே ரமலான் பண்டிகையில் நேற்று மூழ்கியிருந்தது. கல்யாண் பிரியாணியிலிருந்து வண்டி வண்டியாக அண்டாக்களில் பிரியாணி புறப்பட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, கதவு மூடப்பட்ட பிஸ்மில்லா பிரியாணி ஸ்டாலைப் பார்க்க நேரிட்டது. இருமருங்கிலும் பிறநாட்களில் பரபரப்பாய்க் காணப்படும் கடைகள் மூடப்பட்டிருக்க, அவ்வப்போது புத்தாடையும், புன்னகையும் அணிந்தவாறு பரிச்சயப்பட்டவர்கள் எதிர்ப்பட்டனர். நான்கு ஆண்டுகளாய் எங்கள் அலுவலகத்துக்கு இனிப்பும், பிரியாணியும் அனுப்புகிற ரெஹ்மத்பாயின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. ’ஈத் முபாரக் ஹோ’ என்று ஆரத்தழுவி வாழ்த்துத் தெரிவித்தபோது, விடுமுறையன்று அலுவலகத்துக்கு வர நேர்ந்த அலுப்பு சற்றே காணாமல் போனது.

தம்புசெட்டி தெரு களையிழந்திருந்தது. காளிகாம்பாள் கோவிலும், எதிரே இஷ்டசித்தி விநாயகர் கோவிலும் அடுத்த நாளுக்காய்ச் சிங்காரித்திருந்தது. ’ஹேப்பி பர்த்டே அண்ணாத்த...!" என்று விநாயகருக்குப் போகிறபோக்கில்தான் நாளை சொல்ல முடியும்.

நாளைக்குக் கோவிலுக்குப் போனால், பூசாரியின் பரிச்சயமான புன்னகை கிடைக்க வாய்ப்பில்லை. எவரெவரது தோள்களோடோ உரசி, எவரெவரது கால்களாலோ மிதிபட்டு, அலங்கரித்து அமர்ந்திருக்கும் விநாயகருக்கு அவசரமாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, செருப்பு பத்திரமாய் இருக்கிறதா என்று கவலைப்பட்டுப் புறமுதுகு வாங்கி பிழைப்பை நோக்கி ஓட வேண்டும். உதைபடும்போதெல்லாம் ஓடிப்போய் விழுந்து புலம்புகிற பக்தியும், தவறு செய்கிறபோதெல்லாம் தவிர்க்கிற குழந்தைத்தனமும், ஒவ்வொரு தோல்வியின் போதும் பீறிட்டுக் கிளம்பும் சினமும், முன்னதைவிட பெரியதாய் சோதனை வருகையில் அபயக்குரல் எழுப்பும் அசட்டுத்தனமும் ’தேவை’ என்ற இரண்டெழுத்து வார்த்தைக்கு முன்னர் தேறாமல் தோற்று விடுகின்றன.

பச்சையாய்ச் சொன்னால் மனிதனுக்குப் பசியை விடவும் பெரிய தெய்வமோ பூஜையோ இல்லை. அது விசுவரூபம் எடுக்கையில் எல்லா வழிபாடுகளும் முனகல்களாகவும், எல்லாத் தெய்வங்களும் கால்தடுக்கும் கற்களாகவுமே புலப்படுகின்றன.

ஆனால், கடவுளிடம் புலம்புவதில் ஒரு சவுகரியம் இருக்கிறது; மனிதர்களைப் போல அவைகள் நமது கதைகளைக் கேட்டு, நமது குற்றங்களை மட்டும் கண்டுபிடித்து, நமக்கு மட்டுமே குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. ஒரு விதத்தில் அவை கல்லாயிருப்பதே மனிதனுக்கும் நல்லது. ஜம்பமாய்ப் பேசினாலும், உள்ளுக்குள் அகழ்ந்து தம்குற்றத்தைத் தூர்வாரும் பெருந்தன்மை, பல்லைக்கடித்து வாழ்க்கை நடத்துகிறவருக்கு வாய்ப்பதில்லை; சத்தியமாய் எனக்கில்லை.

ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையே ஊசலாடுகிற வித்தைக்கு, கழைக்கூத்தாடிகளின் திறனைக் காட்டிலும் அனுபவம் தேவைப்படுகிறது. ’உன் மூஞ்சியிலே முழிக்க மாட்டேன்,’ என்று வாசலிலிருந்து காளிகாம்பாளைக் கடிந்துவிட்டுப் போக முடிகிறது. திரும்பிப் போகையில் ’ஏன் வந்தாய்?’ என்ற கேள்வி எழாது என்ற உத்திரவாதம் இருக்கிறது. அம்மாவின் புன்னகைக்கு, எனக்குப் பிடித்த பொருளைக் கற்பித்துக் கொள்ளுகிற சவுகரியம் இருக்கிறது. மனிதர்களைப் போலவே கடவுளும் நம்மைப் பற்றி எதையோ கணித்து ஏதோ ஒரு முடிவுக்கு வரட்டுமே என்ற அலட்சியம் ஏற்படுகிறது. எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்ற பயத்தால் குறையும் தவறுகளைக் காட்டிலும், ’முடிந்தால் என்னைத் தடுத்தாட்கொள்ளேன்," என்ற எகத்தாளமே சாமானியனின் அடையாளமாய் இருக்கிறது.

ஆகவே, பெரும்பாலானோர் விடுமுறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, பாவப்பட்டவனாய் பணிக்குப் போய்க்கொண்டிருந்தபோது சலிப்புடன் கோபமும் கொப்பளித்தது. வழக்கம்போல காளிகாம்பாள் கோவிலுக்கும், இஷ்டசித்தி விநாயகருக்கும் நடுவே நின்று, காலணியை அவிழ்த்து, கணநேரம் கண்மூடிக் கைகூப்ப விருப்பமில்லாமல், ’கோ டு ஹெல்,’ என்று விரைந்து கொண்டிருந்தேன். இப்படிக் கோபித்துக் கொண்டு போவது எத்தனையாவது முறை என்ற எண்ணிக்கை ஞாபகத்துக்கு வரவில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் இந்தக் கோபம் நீடிக்க வேண்டும் என்று எனக்கு நானே கொம்புசீவிக்கொள்வதுண்டு. "என்னத்தைக் கண்டேன் கும்பிட்டு?" என்று இதுவரை கும்பிட்டு விரயமான நேரங்களை கணக்கெடுக்கத் தோன்றுகிறது.

இந்தக் கோபம் தற்காலிகமானது என்பது எனக்கு மதியத்தில் பசிக்கும் என்பதுபோலவே புரிந்திருக்கிறது. யாரையோ, எதையோ பார்த்தோ, கேட்டோ எல்லா இறுக்கத்தையும் ஒரு வெடிச்சிரிப்பில் மறந்துவிட்டு, ’போனால் போகிறது,’ என்று வலுக்கட்டாயமாக வாழ்க்கையில் சுவாரசியத்தைத் தாளித்துக்கொள்கிற வாடிக்கை தலைசீவிக்கொள்வதுபோலப் பழகிவிட்டது. இன்றும் அப்படி ஏதேனும் ஏற்படலாம் என்று எண்ணியபடி சென்று கொண்டிருந்தபோதுதான், ஒரு வாக்குவாதம் என்னை நிதானிக்க வைத்தது.

"இன்னாத்துக்கு இப்புடிக் கத்தறே நீ?"

"உன் கண்ணு ரெண்டும் அவிஞ்சா போச்சு? நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தி; ஒவ்வொருத்தரும் அருகம்புல்லும், செவ்வந்திப்பூவுமா கொண்டு வந்திட்டிருக்காங்க! நீ என்னடான்னா, கோவில் சுவத்துலே காலை வச்சிக்கிட்டு பீடி குடிச்சிட்டிருக்கியே?"

"இன்னாத்துக்கு பேஜார் பண்ணறே? கோவில் முன்னாடியா பீடி குடிச்சேன்? ஒதுக்குப்புறமா நின்னுதானே குடிக்கிறேன்? அதுக்கு இன்னாத்துக்கு இப்படி ராவடிக்கிறே?"

"ஏண்டா, பன்னிரெண்டு கையையும் விரிச்சுக்கிட்டு சுவத்துலே பிள்ளையார் படமா நிக்குறாரே? பார்க்கலியா நீ? அவரு மடியிலே காலை வச்சிட்டு பீடி குடிச்சுப்புட்டு பேச்சு வேறயா பேசறே?"

கைவண்டியில் மணல் கொண்டுவந்திருந்தவனுக்கும், சற்றுத்தள்ளி அதிகம் கவனிக்கப்படாமலிருக்கும் இன்னொரு பிள்ளையார் கோவில் பூசாரிக்கும் இடையே உக்கிரமாக வாக்குவாதம்....!

"இப்போ இன்னாண்றே?"

"பீடியை அணைச்சுப்போடு! இல்லாட்டித் தள்ளிப்போயி குடி!"

"எங்கே போறது? புள்ளியார் இல்லாத இடம் எங்கய்யா இருக்கு?"

ஏறக்குறைய அவர்களைக் கடந்து முத்தியால்பேட்டை பள்ளிவரைக்கும் சென்றவன், சட்டென்று திரும்பி அந்த வண்டிக்காரனைப் பார்த்தேன்.

பிள்ளையார் இல்லாத இடம் எங்கய்யா இருக்கு?

"வெதண்டாவாதம் பண்ணாதே! தள்ளிப்போயி பீடி குடின்னு சொன்னா, உடனே புள்ளையார் இல்லாத இடம் எங்கேயிருக்குன்னு கேட்கிறியா?"

"ஆமாம் சாமி, பதில் சொல்லு! புள்ளையாரு இல்லாத இடம் எது சொல்லு. நான் அங்கே போயி பீடி குடிக்கிறேன்."

எதிரும் புதிருமாய்க் கடந்த சிலர் அந்த வண்டிக்காரனின் வாதத்தைக் கேட்டு சிரித்தவாறே போக, அவனது கேள்வி எனக்குள் ஆணியாக அடித்து இறங்குவது போலிருந்தது. அப்போதும் சரி, அங்கிருந்து அலுவலகம் செல்லும்வரை வழிநெடுக அங்கங்கே கண்ணில் தென்பட்ட பிள்ளையார் படங்களைப் பார்க்கும்போது சரி, எனக்கு சிரிப்பு வரவில்லை. அந்த வண்டிக்காரனின் கேள்வி என் கழுத்தில் கட்டப்பட்ட ஒரு கல்லாய்க் கனத்துக்கிடந்தது.

அந்த வண்டிக்காரனுக்கும் என்னைப் போலவே கடவுள் குறித்த ஒரு அலட்சியம் கலந்த ஈடுபாடு இருக்கிறது. அவனுக்கு கடவுள் எங்கும் இருப்பார் என்பதும், அவருக்குத் தெரியாமல் புண்ணியமோ பாவமோ செய்வதற்கு வழியில்லை என்பதும் புரிந்திருக்கிறது. அதை விடவும், அவனது நம்பிக்கையை, அவனை விட நம்பிக்கையிருப்பதாய் பாசாங்கு செய்பவர்களிடம் வெளிப்படுத்துகிற துணிச்சலும் இருக்கிறது. ஒரு வேளை, அவன் திருவண்ணாமலையில் இருந்திருந்தால், அவனை ஒரு சித்தனாக எவரேனும் ஒரு பலவீனப்பொழுதில் அங்கீகரித்திருக்கக்கூடும்.

ஒருவழியாக அலுவலகக்கட்டிடத்தை அடைந்து படியேறியபோது, சுவற்றில் கண்திருஷ்டி விநாயகர் சிரித்துக்கொண்டிருந்தார்.

"ஹேப்பி பர்த்டே அண்ணாத்த....!"

34 comments:

கும்மாச்சி said...

"ஒரு வேளை, அவன் திருவண்ணாமலையில் இருந்திருந்தால், அவனை ஒரு சித்தனாக எவரேனும் ஒரு பலவீனப்பொழுதில் அங்கீகரித்திருக்கக்கூடும்".

இன்னா வாதியாரே இப்படி போட்டு உண்மையை உடைக்கிறே. அப்பாலே மொதோ பின்னூட்டம் நம்மொடதுதான். இன்னாத்த சொல்ல.

Yoga.s.FR said...

பிள்ளையார் இல்லாத இடம் எங்கய்யா இருக்கு?

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் சகோதரம்,
இருங்க படிச்சிட்டு வாரேன்.

www.eraaedwin.com said...

அழகு அழகு அழகு தோழர்

Prabu Krishna said...

கோபம், அன்பு எல்லாவற்றையும் காட்டினாலும் எதற்கும் ஒரே முகம் கடவுளுக்குதானே... (ஆனால் எனக்கு கடவுள் வழிபாடு மீது நம்பிக்கை இல்லை)

ஆமா விநாயகர்க்கு நாள் முடியும் போது வாழ்த்தா ...

Anonymous said...

Thank You for the wishes ---from "Lord Ganesh" thru ரெவெரி -:)

Philosophy Prabhakaran said...

யப்பா... என்னமா எழுதியிருக்கீங்க... சூப்பர்...

Philosophy Prabhakaran said...

வண்டிக்காரன் சொன்ன தத்துவம் அடடே...

Unknown said...

மாப்ள தங்களைப்போலவே நானும்...இங்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் பொங்கலுக்கு தீபாவளிக்கோ பிள்ளையார் பிறந்த நாளுக்கோ விடுமுறை அற்ற நெடும் பயணத்தில் இருக்கிறேன்.....என்ன செய்வது நண்பா நமக்கு என்று கிடைத்ததை செவ்வனே செய்வதையே இறைவன் விரும்புகிறான் என்பேன்....நடப்பது நல்லதற்கே...பகிர்வுக்கு நன்றி!

"பிள்ளையார் இல்லாத இடம் எங்க இருக்கு?"

rajamelaiyur said...

தமிழ்மணம் 7

rajamelaiyur said...

அருமை

சிவானந்தம் said...

எழுத்து உங்களுக்கு மிக இயல்பாய் அதுவும் வேகமாய் வருகிறது. வாழ்த்துக்கள். பத்திரிக்கைத் துறை அனுபவம் இருக்கிறதா என்ன?

கடம்பவன குயில் said...

// கடவுள் எங்கும் இருப்பார் என்பதும், அவருக்குத் தெரியாமல் புண்ணியமோ பாவமோ செய்வதற்கு வழியில்லை என்பதும் புரிந்திருக்கிறது. அதை விடவும், அவனது நம்பிக்கையை, அவனை விட நம்பிக்கையிருப்பதாய் பாசாங்கு செய்பவர்களிடம் வெளிப்படுத்துகிற துணிச்சலும் இருக்கிறது. //

நாம் வெளிப்படுத்தினால் நம்மைச்சுற்றியுள்ளவர்களால் நாம் பைத்தியக்காரப் பட்டம் சூட்டப்படுவோம் நண்பரே.

அத்வைதத்தை ஒரே வார்ததையில் சொல்லிட்டுப்போயிட்டானே.

வெட்டிப்பேச்சு said...

//’வர முடியாது,’ என்று சொல்லுகிற துணிவோ திமிரோ இல்லாததால், சிவாஜியைப் போல கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது. இந்த நடிப்புத்திறன் தான் இத்தனை வருடமாக வயிற்றை நிரப்புகிறது; கூரையைப் பிய்த்துக்கொண்டு தெய்வம் எப்போதாவது, எதையாவது கொடுக்கிறவரைக்கும், இந்த நடிப்பைக் கைகழுவி விட முடியாது. தெய்வம் கைவிடுவதை நிறுத்தும்வரையில் எந்தப் பாசாங்கையும் அனாவசியம் என்று அலட்சியப்படுத்துவதற்கில்லை; தெய்வம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையையும் எந்த சோப்பும் கழுவி விடுவதில்லை.//

அடாடாடா..... ரசித்தேன்.

//ஒரு வேளை, அவன் திருவண்ணாமலையில் இருந்திருந்தால், அவனை ஒரு சித்தனாக எவரேனும் ஒரு பலவீனப்பொழுதில் அங்கீகரித்திருக்கக்கூடும். //

இதுதான் உண்மை..

சாவகாசமாக வெளிப்படுகிறதே.. இதுதான் உண்மை..

வாழ்த்துக்கள்.

God Bless You.

வெட்டிப்பேச்சு said...

நிச்சயமாய் நீங்கள் பத்திரிக்கைத்துறையில் ஜொலிக்க வேண்டியவர்.

Unknown said...

என்னமா எழுதியிருக்கீங்க பாஸ்! சூப்பர்!

நிரூபன் said...

சகோதரம்,
நைட் தூங்கிட்டேன்,
இப்போ மறுபடியும் வந்திட்டேனில்ல.

சேலம் தேவா said...

//பச்சையாய்ச் சொன்னால் மனிதனுக்குப் பசியை விடவும் பெரிய தெய்வமோ பூஜையோ இல்லை//

எவ்வளவு பெரிய தத்துவத்தை அநாயாசமாக சொல்லி விட்டீர்கள்..!!
அருமையான பதிவு..!!

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. நீங்க ஆத்திகவாதியா> நாத்திகவாதியா>

சார்வாகன் said...

கலக்கல் ஓட்டும் போட்டுட்டோம்லே!!!!!!!!!!!!!

settaikkaran said...

//கும்மாச்சி said...

இன்னா வாதியாரே இப்படி போட்டு உண்மையை உடைக்கிறே. அப்பாலே மொதோ பின்னூட்டம் நம்மொடதுதான். இன்னாத்த சொல்ல.//

ஆன்மீகத்தை பட்டென்று உடைத்து எளிமையாக்குபவர்கள் சித்தர்கள் தானே? :-) முதல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!

//Yoga.s.FR said...

பிள்ளையார் இல்லாத இடம் எங்கய்யா இருக்கு?//

அதே! எங்கே இருக்கு? :-)
மிக்க நன்றி! (ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க!)

settaikkaran said...

//நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் சகோதரம், இருங்க படிச்சிட்டு வாரேன்.//

வாங்க வாங்க சகோ! இனிய இரவு வணக்கம்!

//சகோதரம், நைட் தூங்கிட்டேன், இப்போ மறுபடியும் வந்திட்டேனில்ல.//

படிச்சிட்டு வாரேன்னு தூங்கிட்டீங்களா சகோ? அப்படியா எழுதியிருக்கிறேன் இந்த இடுகையை...? :-))) எனிவே, மிக்க நன்றி சகோ!

//இரா.எட்வின் said...

அழகு அழகு அழகு தோழர்//

இந்தப் பாராட்டு ஒரு தோழரிடமிருந்து வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Prabu Krishna (பலே பிரபு) said...

கோபம், அன்பு எல்லாவற்றையும் காட்டினாலும் எதற்கும் ஒரே முகம் கடவுளுக்குதானே... (ஆனால் எனக்கு கடவுள் வழிபாடு மீது நம்பிக்கை இல்லை)//

எல்லா உணர்ச்சிகளையும் கடவுளிடம்தான் காட்ட முடிகிறது; அவர் கண்டுகொள்வதில்லை என்பதால்....! :-))))

//ஆமா விநாயகர்க்கு நாள் முடியும் போது வாழ்த்தா ...//

ஆஹா, இன்னும் ஒன்பது நாட்கள் விழா இருக்கிறதே! :-)

மிக்க நன்றி! :-)

//ரெவெரி said...

Thank You for the wishes ---from "Lord Ganesh" thru ரெவெரி -:)//

ஆஹா! ’அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை உணர்த்துகிறீர்கள்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

யப்பா... என்னமா எழுதியிருக்கீங்க... சூப்பர்...//

கொஞ்சம் வெறுத்த நிலையில் எழுதினதுதான் நண்பரே! :-)

//வண்டிக்காரன் சொன்ன தத்துவம் அடடே...//

உண்மையில்...! நான் அன்று மாலை வரையிலும் அதைப் பற்றியே யோசித்திருந்தேன். மிக்க நன்றி!

//விக்கியுலகம் said...

மாப்ள தங்களைப்போலவே நானும்...இங்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் பொங்கலுக்கு தீபாவளிக்கோ பிள்ளையார் பிறந்த நாளுக்கோ விடுமுறை அற்ற நெடும் பயணத்தில் இருக்கிறேன்.....என்ன செய்வது நண்பா நமக்கு என்று கிடைத்ததை செவ்வனே செய்வதையே இறைவன் விரும்புகிறான் என்பேன்....நடப்பது நல்லதற்கே...பகிர்வுக்கு நன்றி!//

நாங்களாவது பிற நாட்களில் ஏதாவது கோவிலுக்குப் போய் சாமியை தாஜா செய்ய முடிகிறது. நாடுவிட்டு நாடு செல்பவர்கள் பலருக்கு, இது சாத்தியப்படுவதில்லை எனும்போது, என் நிலை எவ்வளவோ மேல் என்று எண்ணத்தோன்றுகிறது. உண்மையில், கிடைத்ததைச் செவ்வனே செய்வதே சரி! 100% எதார்த்தமும் கூட!

//"பிள்ளையார் இல்லாத இடம் எங்க இருக்கு?"//

அதே! அதே!! மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

தமிழ்மணம் 7//

ஓ! மிக்க நன்றி! :-)

//அருமை//

இன்னொரு தபா மிக்க நன்றி! :-)

//சிவானந்தம் said...

எழுத்து உங்களுக்கு மிக இயல்பாய் அதுவும் வேகமாய் வருகிறது. வாழ்த்துக்கள். பத்திரிக்கைத் துறை அனுபவம் இருக்கிறதா என்ன?//

பத்திரிகைத்துறை அனுபவமெதுவும் இல்லை. ஆனால், நன்கு பதிவுகள் எழுதும் பலரை அவதானிப்பதுடன் அவர்களில் சிலருடன் அளவளாவும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கடம்பவன குயில் said...

நாம் வெளிப்படுத்தினால் நம்மைச்சுற்றியுள்ளவர்களால் நாம் பைத்தியக்காரப் பட்டம் சூட்டப்படுவோம் நண்பரே.//

உண்மை! சிலவற்றை சொல்ல பலர் தயங்குவார்கள்; சிலர் தயங்குவதில்லை.

//அத்வைதத்தை ஒரே வார்ததையில் சொல்லிட்டுப்போயிட்டானே.//

இது தான் அத்வைதமா? பாருங்களேன், இது எனக்குப் புதிய தகவல்! மிக்க நன்றி! :-)

//வெட்டிப்பேச்சு said...

அடாடாடா..... ரசித்தேன்.//

மிக்க மகிழ்ச்சி!

//இதுதான் உண்மை..சாவகாசமாக வெளிப்படுகிறதே.. இதுதான் உண்மை..
வாழ்த்துக்கள். God Bless You.//

அபாரம்! உண்மை சாவகாசமாக வெளிப்படும் என்பதை நினைவூட்டியிருக்கிறீர்கள்!

//நிச்சயமாய் நீங்கள் பத்திரிக்கைத்துறையில் ஜொலிக்க வேண்டியவர்.//

நாளை நடப்பதை யாரறிவார்? தீதும் நன்றும் பிறர் தர வாரா! பார்க்கலாம். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ஜீ... said...

என்னமா எழுதியிருக்கீங்க பாஸ்! சூப்பர்!//

மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

//சேலம் தேவா said...

எவ்வளவு பெரிய தத்துவத்தை அநாயாசமாக சொல்லி விட்டீர்கள்..!! அருமையான பதிவு..!!//

மிக்க நன்றி நண்பரே! அது தத்துவமா அன்றி எதார்த்தமா தெரியாது. ஆனால், எழுதிய அக்கணத்தில் அப்படித் தோன்றியது; அவ்வளவே! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. நீங்க ஆத்திகவாதியா> நாத்திகவாதியா>//

மதில் மேல் ஆத்திகன்! :-)
கடவுளுக்கும் எனக்கும் ஒரு love & hate relationship இருக்கிறது தல...! மிக்க நன்றி!

//சார்வாகன் said...

கலக்கல் ஓட்டும் போட்டுட்டோம்லே!!!!!!!!!!!!!//

மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் சகோதரம்,
மீண்டும் வந்திருக்கிறேன்.
நீங்கள் தூங்கும் படியாக ஒன்றும் எழுதலை,
வலையில் கும்மியடித்த அசதி, வேலை பிஸி,
இவற்றால் தூங்கி விட்டேன்..

நிரூபன் said...

பீச்சுக்கோ அல்லது பாரிமுனைக்கோ தான் போய்த் தீர வேண்டும். இருந்தாலும், ’வர முடியாது,’ என்று சொல்லுகிற துணிவோ திமிரோ இல்லாததால், சிவாஜியைப் போல கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது//

அவ்...பிழைக்கத் தெரிந்த மனிதர் நீங்க...

ஹா...ஹா...

நிரூபன் said...

தம்புசெட்டி தெரு களையிழந்திருந்தது. காளிகாம்பாள் கோவிலும், எதிரே இஷ்டசித்தி விநாயகர் கோவிலும் அடுத்த நாளுக்காய்ச் சிங்காரித்திருந்தது. ’ஹேப்பி பர்த்டே அண்ணாத்த...!" என்று விநாயகருக்குப் போகிறபோக்கில்தான் நாளை சொல்ல முடியும். //

ஹா...ஹா..
அம்புட்டு பிசியாகிட்டீங்களா பாஸ்.

நிரூபன் said...

மதங்களைத் தரிசிக்கும் அல்லது கடைப்பிடிக்கும் உணர்வு மனித மனங்களின் புரிதலின் அடிப்படையில் தான் காத்திருக்கிறது என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

உருவ வழிப்பாட்டினை நாம் எத்தகைய முறையில் அங்கீகரிக்கிறோம் என்பதனை அருமையாக விளக்கியுள்ளதோடு, திருவண்ணமாலையில் பிள்ளையார் இருந்தால் சித்தராக காட்சி தருவார் எனும் வரிகள் மனித மனங்களின் அடிப்படையில் மதங்களைப் பற்றிய பார்வை வேறுபட்டுக் கொள்கின்றது என்பதனை நன்றாகப் புரிய வைத்துள்ளது உங்கள் இடுகை.

middleclassmadhavi said...

விடுமுறை நாளில் இப்படி ஒரு அனுபவமும் பதிவும் ஏற்படணும்னு பிள்ளையார் நினைச்சா என்ன செய்ய முடியும்?! :-))

காலை இந்தப் பக்கமா நீட்டாதே, சுவாமி படம் இருக்குன்னு என் பிள்ளைகிட்ட சொன்னால் அவன் சொல்லும் பதிலும் இதே தான் - சுவாமி இல்லாத பக்கம் சொல்லு!!