Thursday, September 15, 2011

ஒப்பாரிச்சத்தம்

மந்தாரம்பூவிருக்க மகிழம்பூதானிருக்க

மல்லியப்பூ பிச்சியுடன் செம்பருத்திதானிருக்க

செந்தூரப்பொட்டிருக்க செம்புமெட்டி காலிருக்க

சேலையிலே கையகலச் சரிகையுந்தான் நெய்திருக்க

வந்தார்க்குப் பரிமாற வகைவகையாச் சமைத்திருக்க

வாசலிலே நீர்தெளித்துக் கோலமும்தான் போட்டிருக்க

சொந்தமென்று நீயிருக்க சொக்கனிடம் போனதென்ன

சொல்லாமக் கொள்ளாம மாண்டதென்ன மகராசா?

சின்னப்பிராயத்தில் இதுபோலப் பல பாட்டுக்கள், பற்பலமுறை கேட்டுக் கேட்டு மனனமாயிருந்தன. ஒரு நாள் தற்செயலாக, விளையாட்டாக அதை முணுமுணுக்கவும் அம்மா ’நறுக்’கென்று தலையில் குட்டி ’கடன்காரா!’ என்று பல்லைக்கடித்தபடி எரிந்துவிழுந்ததும் ஞாபகத்துக்கு வருகிறது.

அதன் பெயர் ஒப்பாரி; அது பாடப்படுவது மகிழ்ச்சியிழந்த சந்தர்ப்பத்தில்; அதைப் பாடுவதைத் தொழிலாய்க் கொண்டிருந்த முத்தாளுப்பாட்டியின் முகத்தில் விழிப்பது அமங்கலம்; அவள் எதிர்ப்பட்டால் அபசகுனம் என்பதெல்லாம் ’ஏன்’ என்று விளங்காதபோதும், ’அது அப்படித்தான்,’ என்று கற்பிக்கப்பட்ட பருவம் அது. பார்த்தால் பயமும், பார்க்காத தருணங்களில் பரிகாசமும்தான் அந்த ’வெளங்காமூஞ்சி’யின் அடையாளங்களாய் இருந்தன.

கிராமப்புறங்களில் பிள்ளைகள் சாவுநிகழ்ந்த தெருக்களுக்கும் போகக்கூடாது என்று பெற்றோர்கள் அஞ்சுவார்கள். மரணம் என்ற அதிர்ச்சி குறித்துப் புரிந்து கொள்ளத்தக்க அறிவோ, துணிவோ குழந்தைகளுக்கு இல்லை என்பது அவர்களின் புரிதலாய் இருந்திருக்கக் கூடும்.

"செத்துப்போறதுன்னா என்ன?"

இந்தக் கேள்வியை எளிதில் யாரிடமும் கேட்டுவிட முடியாது. வீட்டில் கேட்டால் மொத்துவார்கள் அல்லது ’நல்ல விசயமாப் பேச மாட்டியா?’ என்று கடிந்து கொள்வார்கள். ஆகவே, அவ்வப்போது நிகழும் மரணமும், தெருக்களில் தென்படும் விசனம்சுமந்த முகங்களும், தலைவிரிகோலங்களும், இறுதியாத்திரைக்கான ஆயத்தங்களும், துக்க வீட்டில் வாசல் தெளிக்கப்படும்வரை வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்ட அனுபவங்களுமே குழந்தைப்பருவத்தில் மரணம் குறித்த சிந்தனையின் குறியீடுகளாய் இன்னும் இருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக - மரணத்தைப்போலவே அல்லது மரணத்தைக் காட்டிலும் பயங்கரமாகச் சித்தரிக்கப்பட்ட முத்தாளுப்பாட்டி!

பாதிகருமையும், பாதிநரையுமாய் தோளளவுக்கே இருந்த முடியின் நுனியில் ஒரு கொண்டை; காதிலும் மூக்கிலும் முன்பு எப்போதோ நகைகள் அணிந்திருந்ததன் ஆதாரமாக சிறிய துளைகள்; ஆணியால் அழுத்திக் கோடுபோட்டதுபோல முகமெங்கும் சுருக்கம் விழுந்த சருமம்; எப்போதும் வெற்றிலை குதப்புகிற வாய்; பெரும்பாலும் சுங்கிடிச்சேலை என்று இத்தனை வருடங்களுக்குப் பிறகும் முத்தாளுப்பாட்டியின் உருவத்தை ஓரளவு கண்ணுக்கு முன்பு கொண்டுவந்த நிறுத்த முடிகிறது. ஆனால், அவளைப் பார்த்து பயந்து ஓடியதும், அவள் முகத்தில் விழித்தால் அமங்கலம் என்று நம்பியதும் வாழ்க்கையின் வலுக்கட்டாயமான பல அசட்டுத்தனங்களில் ஒன்றாகத் தெரிகிறது. ஆனாலும், சமரசங்கள் நிரம்பிய வாழ்க்கையில், சராசரி மனிதனாகத் தினமும் தெரிந்தே செய்கிற பல அசட்டுத்தனங்களுக்கு முன்பு, குழந்தைப் பருவத்தின் அறிவின்மை எவ்வளவோ மேல் என்றும் தோன்றாமல் இல்லை.

மங்கலநிகழ்ச்சிகளுக்கு முத்தாளுவை யாரும் அழைத்தது கிடையாது. ஏதேனும் ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால் பெரும்பாலும் யாரும் அழைக்காமலே வந்து விடுவாள். சிலர் அவளை வாசலிலேயே வழிமறித்து, கையில் காசைத்திணித்துத் திருப்பியனுப்பி விடுவார்கள். அப்படியில்லாதபோது, வீட்டுக்குள் விடுவிடுவென்று நுழைந்து, தாழ்வாரம் வரைக்கும் சென்று கால்நீட்டி அமர்ந்துகொள்வாள். பிறகு, சாவகாசமாக இடுப்பிலிருந்து ஒரு பனையோலைப்பையை எடுத்து, அதிலிருந்து வாழைமட்டையில் சுற்றப்பட்டிருக்கும் புகையிலையைக் கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மெல்வாள். சிறிது நேரம் எச்சில் ஊற ஊற சவைத்தபிறகு, மெதுவாய்க் குரலெடுத்து ஒப்பாரியைத் தொடங்குவாள்.

சில சமயங்களில், களைத்துப்போயோ அல்லது ’எப்படியோ செத்து ஒழிஞ்சுதே,’ என்ற அயர்ச்சி காரணமாகவோ அழுவதை நிறுத்தியிருக்கிறவர்களும் முத்தாளுப்பாட்டியின் ஒப்பாரி ஆரம்பித்த சில நேரத்தில் மீண்டும் அழத்தொடங்குவார்கள். அழுவதற்குத் திராணியற்றவர்களும், அமைதியை விரும்புகிறவர்களும் ’அந்த முண்டச்சிக்குக் காசை க் கொடுத்து அனுப்பு,’ என்று சலித்துக்கொள்வதுமுண்டு. என் பாட்டி இறந்தபோது இதில் எல்லாவற்றையும் மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அப்போது, என் பாட்டியின் பிரேதத்தைக் காட்டிலும், உயிரோடிருந்த முத்தாளுவின் முகமே என்னை அதிகமாய் அச்சுறுத்தியிருக்கிறது.

இப்போது யோசித்தால், முத்தாளு போன்றவர்களுக்கு இப்படியொரு பிழைப்பைக் கொடுத்துவிட்டு, அவர்கள் மீதே சலித்துக்கொள்ள என்ன நியாயமிருக்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது. அவமானம், வெறுப்பு எல்லாவற்றையும் தினசரியும் சகித்துக்கொண்டு, உதாசீனப்படுத்துவதன்றி வேறு கௌரவமே கிட்டாத ஒரு பிழைப்புக்கு ஆட்பட எத்தனை பேரால் முடியும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. தெருவில் நாம் நடக்கும்போது, நம்மை விடியாமூஞ்சி என்று யாரேனும் சொன்னாலோ, நாம் எதிர்ப்படுவது அபசகுனம் அல்லது அமங்கலம் என்று சொன்னாலோ நம்மில் எத்தனை பேரால் பொறுமையாய், காறித்துப்பாமல் கடந்துபோக முடியும் என்று கேட்கத்தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால், முத்தாளுப்பாட்டியின் பிழைப்பு ஒரு வேசியின் வாழ்க்கையைக் காட்டிலும் அதிக அனுதாபத்துக்குரியது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

ஐம்பதோ, நூறோ வாங்கிக்கொண்டு தெருமுனைக்கடையில் போய், அரை கிலோ அரிசி, பருப்பு, புளி, உப்பு, மிளகாய் தலா ஒரு ரூபாய்க்கும், சற்றே ஆடம்பரமாய் கொஞ்சம் பன்னீர்ப்புகையிலையும் வாசனைச்சுண்ணாம்பும் வாங்கிக்கொண்டு போகிறவளைப் பார்க்கும்போது, ’இன்னிக்கு இவளுக்கு யோகம்தான்,’ என்று மனம் குரூரமாய்ச் சொல்லிக் கேலி செய்யும்.

இதெல்லாம் எப்போதோ, எத்தனை வருடங்களுக்கு முன்னர் என்று சட்டென்று ஞாபகப்படுத்திச் சொல்ல முடியாத மிகத் தூரமாகச் சென்றுவிட்ட கடந்தகாலத்தின் நிகழ்வுகள். அப்போதெல்லாம் ’அடுத்து எவர் வீட்டில் யார்...?’ என்றுதான் அவள் கணக்குப் போட்டிருப்பாளோ என்று இரக்கமில்லாத மனம் அவளின் மனவோட்டம்குறித்த கேள்வி எழுப்பும்.

காலம் செல்லச் செல்ல, மரணம் குறித்த அதிர்ச்சிகளும், குழப்பங்களும், வியப்புகளும் மெல்ல மெல்லக் குறைந்துவிட்ட நிலையில், அவள் அப்போது அப்படியெல்லாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் புலப்படுகிறது. ஒருவேளை, சராசரி மனிதர்களைப் போலவே அவளும் தனது சாவைப்பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கக் கூடும்.

27 comments:

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!நலமா இருக்கீங்களா?

“ இந்தக் கேள்வியை எளிதில் யாரிடமும் கேட்டுவிட முடியாது. வீட்டில் கேட்டால் மொத்துவார்கள் அல்லது ’நல்ல விசயமாப் பேச மாட்டியா?’ என்று கடிந்து கொள்வார்கள். ஆகவே, அவ்வப்போது நிகழும் மரணமும், தெருக்களில் தென்படும் விசனம்சுமந்த முகங்களும், தலைவிரிகோலங்களும், இறுதியாத்திரைக்கான ஆயத்தங்களும், துக்க வீட்டில் வாசல் தெளிக்கப்படும்வரை வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்ட அனுபவங்களுமே குழந்தைப்பருவத்தில் மரணம் குறித்த சிந்தனையின் குறியீடுகளாய் இன்னும் இருக்கின்றன.”

அருமையாவும், எதார்த்தமாவும் சொல்லியிருக்கீங்க!

கும்மாச்சி said...

\\நம்மை விடியாமூஞ்சி என்று யாரேனும் சொன்னாலோ, நாம் எதிர்ப்படுவது அபசகுனம் அல்லது அமங்கலம் என்று சொன்னாலோ நம்மில் எத்தனை பேரால் பொறுமையாய், காறித்துப்பாமல் கடந்துபோக முடியும் என்று கேட்கத்தோன்றுகிறது.//

உண்மைதான் சேட்டை, முத்தாளுப்பாடியைப் போன்ற பாவப்பட்ட ஜென்மங்கள் வாழ்கையை நினைத்தால் நமக்கு தூக்கம் வராது, என்ன செய்வது வாழ்கை?

அருமையான பதிவு சேட்டை.

கும்மாச்சி said...

தமிழ்மனத்தில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன் பாஸ்.

பால கணேஷ் said...

அனுபவத்தில் விளைந்த அழகான பதிவு!

வெட்டிப்பேச்சு said...

//தெருவில் நாம் நடக்கும்போது, நம்மை விடியாமூஞ்சி என்று யாரேனும் சொன்னாலோ, நாம் எதிர்ப்படுவது அபசகுனம் அல்லது அமங்கலம் என்று சொன்னாலோ நம்மில் எத்தனை பேரால் பொறுமையாய், காறித்துப்பாமல் கடந்துபோக முடியும் என்று கேட்கத்தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால், முத்தாளுப்பாட்டியின் பிழைப்பு ஒரு வேசியின் வாழ்க்கையைக் காட்டிலும் அதிக அனுதாபத்துக்குரியது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

//

உண்மைதான்.

நிதானமான நடை நம்மை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. நல்ல பதிவு.

வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

right sir

Unknown said...

நல்ல அனுபவம்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவு மிகவும் நன்றாகவே யோசித்து எழுதப்பட்டுள்ளது. யோசிக்கவும் வைக்கிறது. எப்படியெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிழைப்பு அமைகிறது.

//ஒருவேளை, சராசரி மனிதர்களைப் போலவே அவளும் தனது சாவைப்பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கக் கூடும்.//

ஆமாம். அது தான் உண்மை.

அவளுக்காக இதுபோல அழுவதற்கு ஆள் யார் வரப்போகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கலாம்.

MANO நாஞ்சில் மனோ said...

முத்தாளு பாட்டியை நினச்சா மனசுக்கு பாரமா இருக்குய்யா...

பித்தனின் வாக்கு said...

nalla irukku. ithai avarkal oru kadamaiyaka seithu irupparkal.

ithuthan karma yokamaa?.

உணவு உலகம் said...

மனதை கணக்க வைத்த பகிர்வு.

Anonymous said...

ஒருவேளை, சராசரி மனிதர்களைப் போலவே அவளும் தனது சாவைப்பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கக் கூடும்...

ஒரு நல்ல பதிவின் முத்தாய்ப்பு...உங்கள் உணர்வுகளை வாசிப்பவர்களுக்கு கொண்டு சென்றது உங்கள் எழுத்துக்கு வெற்றி...

ரிஷபன் said...

என் பாட்டியின் பிரேதத்தைக் காட்டிலும், உயிரோடிருந்த முத்தாளுவின் முகமே என்னை அதிகமாய் அச்சுறுத்தியிருக்கிறது.

ஸ்ரீரங்கத்தில் எங்கு சாவு விழுந்தாலும் முதலில் ஓடி வருகிறவர் அவர்தான். பின்னால் வருகிற சாஸ்திரிகள் இவரைப்பார்த்தாலே நிம்மதி பெருமூச்சு விடுவார். சுடுகாட்டில் என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமோ அதிலிருந்து, வாங்கி வர வேண்டிய சாமான்கள் (பால், பொரி, வரட்டி, மூங்கில் இத்யாதி) எல்லாம் மனக்கணக்காய் செய்து வைத்து விடுவார். கடைசிக் கட்ட தானமாய் ஏதேனும் (பிரேத நிமித்தம்) தருவதும் அவரிடம்தான். முகம் அப்படியே பிரேதக் களை என்று தோன்றும் குரூரமாய். பசி.. பட்டினி.. வேறு வேலைக்கு வழி இல்லை.. ஆயிரம் பிணங்களைக் கரை சேர்த்த அவர் கடைசியில் அனாதைப் பிணமாய் தெருவில் கிடந்தார்.. விதி எழுதிய கொடூரக் கவிதை.

சென்னை பித்தன் said...

//சராசரி மனிதர்களைப் போலவே அவளும் தனது சாவைப்பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கக் கூடும்.//

சரியே.எனக்கு யார் ஒப்பாரி வைக்கப் போகிறார்கள் என்று கூட எண்ணியி ருக்கலாம்.

அக்கப்போரு said...

செத்துப்போறதுன்னா என்ன?


இப்பகுட எனக்குத் தெரியாது சேட்ட. ஆனா ஆபிஸ்ல கட் ஓவர் டிலே, செட்யுள் வேரியன்ஸ் அப்டினா அதுக்கு சாவே மேல்நு சொல்றாங்க

அக்கப்போரு said...

ஐம்பதோ, நூறோ வாங்கிக்கொண்டு தெருமுனைக்கடையில் போய், அரை கிலோ அரிசி, பருப்பு, புளி, உப்பு, மிளகாய் தலா ஒரு ரூபாய்க்கும், சற்றே ஆடம்பரமாய் கொஞ்சம் பன்னீர்ப்புகையிலையும் வாசனைச்சுண்ணாம்பும் வாங்கிக்கொண்டு போகிறவளைப் பார்க்கும்போது, ’இன்னிக்கு இவளுக்கு யோகம்தான்,’ என்று மனம் குரூரமாய்ச் சொல்லிக் கேலி செய்யும்.

கடவுளே


அவள் அப்போது அப்படியெல்லாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் புலப்படுகிறது
ம்ம்ம்

settaikkaran said...

//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!நலமா இருக்கீங்களா?//

வணக்கம்! கும்புடுறேனுங்க! நலம்; நலமறிய ஆவல்!

//அருமையாவும், எதார்த்தமாவும் சொல்லியிருக்கீங்க!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! :-)

//கும்மாச்சி said...

உண்மைதான் சேட்டை, முத்தாளுப்பாடியைப் போன்ற பாவப்பட்ட ஜென்மங்கள் வாழ்கையை நினைத்தால் நமக்கு தூக்கம் வராது, என்ன செய்வது வாழ்கை?//

இப்போது முன்போல கிராமத்தில் இவர்களின் எண்ணிக்கை இல்லை என்றும் சொல்லக்கேள்வி. நல்லதா, கெட்டதா புரியவில்லை. அந்தக் குழப்பத்தில் எழுதியதுதான் இது.

//அருமையான பதிவு சேட்டை.//

மிக்க நன்றி!

// தமிழ்மனத்தில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன் பாஸ்.//

டபுள் தேங்க்ஸ்! :-)

settaikkaran said...

//கணேஷ் said...

அனுபவத்தில் விளைந்த அழகான பதிவு!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//வெட்டிப்பேச்சு said...

நிதானமான நடை நம்மை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//

எதைக்குறித்தோ யோசித்திருக்கையில் எழுதலாமே என்று தோன்றியதன் விளைவு இது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//suryajeeva said...

right sir//

thanks sir. :-)

settaikkaran said...

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல அனுபவம்..//

மிக்க நன்றி! :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவு மிகவும் நன்றாகவே யோசித்து எழுதப்பட்டுள்ளது. யோசிக்கவும் வைக்கிறது. எப்படியெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிழைப்பு அமைகிறது.//

ஆம் ஐயா, அந்தப் பிழைப்பும் இப்போது காணாமல் போவதாய் அறிந்தேன்.

//ஆமாம். அது தான் உண்மை. அவளுக்காக இதுபோல அழுவதற்கு ஆள் யார் வரப்போகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கலாம்.//

அதுவே இருக்கக்கூடும். ஆனால், அவர் போன்றவர்களோடு உரையாடி அவர்கள் மனவோட்டத்தை அறிகிற வாய்ப்பு அமைவதில்லையே! மிக்க நன்றி ஐயா!

//MANO நாஞ்சில் மனோ said...

முத்தாளு பாட்டியை நினச்சா மனசுக்கு பாரமா இருக்குய்யா...//

அவர் போல பலர் இருப்பார்கள் நண்பரே! பாரமான விசயம்தான்! :-(

settaikkaran said...

//பித்தனின் வாக்கு said...

nalla irukku. ithai avarkal oru kadamaiyaka seithu irupparkal. ithuthan karma yokamaa?.//


கடமையாக கருதினார்களோ, வேறு வழியில்லாமல் செய்தார்களோ, அதுவும் கர்மயோகம்தான். மிக்க நன்றி!


//FOOD said...

மனதை கணக்க வைத்த பகிர்வு.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ரெவெரி said...

ஒரு நல்ல பதிவின் முத்தாய்ப்பு...உங்கள் உணர்வுகளை வாசிப்பவர்களுக்கு கொண்டு சென்றது உங்கள் எழுத்துக்கு வெற்றி...//

எழுதுவதா வேண்டாமா என்று யோசித்து, எழுதியதில் பலவற்றைக் குறைத்துப் போட்ட இடுகை இது. மிக்க நன்றி நண்பரே! :-)

//ரிஷபன் said...

ஸ்ரீரங்கத்தில் எங்கு சாவு விழுந்தாலும் முதலில் ஓடி வருகிறவர் அவர்தான். பின்னால் வருகிற சாஸ்திரிகள் இவரைப்பார்த்தாலே நிம்மதி பெருமூச்சு விடுவார். சுடுகாட்டில் என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமோ அதிலிருந்து, வாங்கி வர வேண்டிய சாமான்கள் (பால், பொரி, வரட்டி, மூங்கில் இத்யாதி) எல்லாம் மனக்கணக்காய் செய்து வைத்து விடுவார். கடைசிக் கட்ட தானமாய் ஏதேனும் (பிரேத நிமித்தம்) தருவதும் அவரிடம்தான். முகம் அப்படியே பிரேதக் களை என்று தோன்றும் குரூரமாய். பசி.. பட்டினி.. வேறு வேலைக்கு வழி இல்லை.. ஆயிரம் பிணங்களைக் கரை சேர்த்த அவர் கடைசியில் அனாதைப் பிணமாய் தெருவில் கிடந்தார்.. விதி எழுதிய கொடூரக் கவிதை.//

நான் குறிப்பிட்ட முத்தாளுவின் முடிவு எனக்குத் தெரியாது. நிச்சயமாக அவர் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்பது குரூரமாயிருப்பினும், புரிகிறது. ஆனால், அவரது முடிவும் அப்படியோ, அதைக் காட்டிலும் மோசமாகவோ தான் இருந்திருக்கும் என்ற அச்சமிருக்கிறது. மிக்க நன்றி!

settaikkaran said...

//சென்னை பித்தன் said...

சரியே.எனக்கு யார் ஒப்பாரி வைக்கப் போகிறார்கள் என்று கூட எண்ணியி ருக்கலாம்.//

உண்மை. உண்மை. நேர் மாறாக, யாரும் என் போல் பிழைக்க வேண்டாம் என்றும் எண்ணியிருக்க ஒரு வாய்ப்பிருக்கிறது. மிக்க நன்றி ஐயா!

//அக்கப்போரு said...

செத்துப்போறதுன்னா என்ன? இப்பகுட எனக்குத் தெரியாது சேட்ட. ஆனா ஆபிஸ்ல கட் ஓவர் டிலே, செட்யுள் வேரியன்ஸ் அப்டினா அதுக்கு சாவே மேல்நு சொல்றாங்க//

எனக்கு நீங்கள் சொன்னவையும் சுத்தமாகப் புரியவில்லை. :-))))

//கடவுளே அவள் அப்போது அப்படியெல்லாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் புலப்படுகிறது ம்ம்ம்//

உண்மை! யாருக்குத் தெரியும்? அவர்களோடு உறவாடாமல் ஒதுங்கியிருந்தவரை, அவர்கள் குறித்து அதிகம் புரியாமலே போகிறது. மிக்க நன்றி!

மாலதி said...

சிறந்த பட்டறிவு பேசி இருக்கிறது உம்மையில் சிறந்த ஒரு இடுகை பாரட்டுகள்.

Unknown said...

அருமையான பதிவு மாப்ள!

ம.தி.சுதா said...

////"செத்துப்போறதுன்னா என்ன?"////

எனக்கும் டவுட்டு வாறிங்களா செத்துப் பாப்போம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

settaikkaran said...

@மாலதி
@விக்கியுலகம் said...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@♔ம.தி.சுதா♔
//எனக்கும் டவுட்டு வாறிங்களா செத்துப் பாப்போம்..//

நீங்க முதல்லே போயி லெட்டர் போடுங்க! அப்பாலிக்கா நானு...! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

kaialavuman said...

//இந்தக் கேள்வியை எளிதில் யாரிடமும் கேட்டுவிட முடியாது. வீட்டில் கேட்டால் மொத்துவார்கள் அல்லது ’நல்ல விசயமாப் பேச மாட்டியா?’ என்று கடிந்து கொள்வார்கள். //

என் மூத்த அக்காளின் திதி வந்த பொழுது (2- வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்) எனக்கு எப்பொழுது திதி வரும் என கேட்டு என் சித்தியிடம் (தாயின் தமக்கை) திட்டு வாங்கினேன். ஒரே அழுகை அவரை சமாதானம் படுத்த முடியவில்லை. 2 நாட்கள் என்னிடம் பேச வில்லை. இந்த அனுபவமும் உண்டு.

நல்ல உணர்சிகரமான பதிவு.

settaikkaran said...

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

என் மூத்த அக்காளின் திதி வந்த பொழுது (2- வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்) எனக்கு எப்பொழுது திதி வரும் என கேட்டு என் சித்தியிடம் (தாயின் தமக்கை) திட்டு வாங்கினேன். ஒரே அழுகை அவரை சமாதானம் படுத்த முடியவில்லை. 2 நாட்கள் என்னிடம் பேச வில்லை. இந்த அனுபவமும் உண்டு.//

விபரம் தெரியாத வயதில் இதுபோன்ற சந்தேகங்கள் எல்லாருக்கும் வரும்; இத்தகைய கேள்விகள் அனைவருக்கும் எழும்போலிருக்கிறது. ஆயினும், உங்களது சித்தியைப் போலவே, பெரும்பாலானோர் குழந்தைகள் சாவு குறித்துக் கேட்டால் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதும் உண்மைபோலிருக்கிறது.

//நல்ல உணர்சிகரமான பதிவு.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)