Saturday, September 3, 2011

அண்ணா ஹஜாரே– ”துக்ளக்” தலையங்கம்

துக்ளக்பத்திரிகைக்கும் எனக்கும் இதுவரையில் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒரு ஒற்றுமை மட்டுமே இருந்து வந்திருக்கிறது. இப்போது, இன்னொரு ஒற்றுமையாக அண்ணா ஹஜாரே!

கொஞ்சம் பெரிய தலையங்கம்! இருந்தாலும் நேரமிருப்பவர்கள் வாசிக்கலாம்.

நன்றி: "துக்ளக்" (ஆசிரியர் வக்கீல்; கேசு போடாம இருக்கணும்)

வெற்றி; சுபம்!

பிரதமரின் பெயர் ‘மன்மோகன் சிங்கா, அல்லது ‘மண்மகான் கிங்கா என்று பத்திரிகையாளர்களோ, விவரஸ்தர்களோ, மற்றவர்களோ குழம்புவதில்லை; அவர் பெயர் பிரபலம் ஆன ஒன்று. இப்போது, அன்னா ஹஸாரேவில் உள்ளது, ‘அன்னாவா, ‘அண்ணாவா என்ற குழப்பம் நீடிக்க, தினமணி அது ‘அண்ணாதான் என்று விளக்கியிருக்கிறது. எழுத்தில் அண்ணாவாக இருந்தாலும், வட இந்தியர்கள் ‘அன்னாஎன்றுதானே உச்சரிக்கிறார்கள்? எது சரி?என்ற கேள்விக்கு இன்னமும் விடையில்லை.

எதற்கு இதைச் சொல்ல நேர்ந்தது என்றால் அன்னா அல்லது அண்ணா ஹஸாரேவின் பெயர் இன்னமும் நாடு முழுவதும் முழுமையாக பிரபலம் ஆகாத ஒன்று. சொல்லப்போனால் சில மாதங்களுக்கு முன்னால், நாட்டின் சில பகுதிகளில் மட்டும், அறிமுகமாயிருந்த பெயர் அது. டெலிவிஷன் நடத்திய மெகா சீரியல் புண்ணியத்தில், இப்போது நாடெங்கும் அப்பெயர் பிரபலமாகியுள்ளது. சாதாரண பிரபலமல்ல; ‘அன்னா தான் இந்தியா; இந்தியா தான் அன்னா என்று அவருடைய ஆதரவாளர்கள் முழங்குகிற அளவிற்குப் பிரபலம்.

அவருடைய உண்ணாவிரதமும் பிரபலமே. கிரிக்கெட் மேட்சில் அம்பயர் அவுட் கொடுக்கிற மாதிரி, ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டி நிற்கிற அவருடைய ‘போஸ்பிரபலமே. அவருடைய ஆதரவாளர்களில் டி-20 கிரிக்கெட் மேட்சில் பங்கேற்கிற ‘சியர் லீடர்ஸ்பெண்மணிகள் குஷிப்படுத்துகிறவர்கள் மாதிரி, கொடியை வீசிக்கொண்டு ‘ஜதிபோடுகிற கிரண் பேடியும் பிரபலமே...!

இப்படி பல பிரபலங்கள் அடங்கிய, இந்த ஊழல் ஒழிப்புப் போராட்டத்தின் கோரிக்கை என்ன என்பது மட்டும் இன்னமும் பிரபலம் ஆகவில்லை. அவர்களுடைய ‘ஜன் லோக்பால்மசோதா என்ன சொல்கிறது என்பதும் பிரபலம் ஆகவில்லை. ‘ஊழலை ஒழிக்கத்தான் போகிறார்கள். அதனால் ஆதரிப்போம்,என்றுதான் இதை ஆதரிக்கிற பொதுமக்களில் பலர் நினைக்கிறார்கள். ஆகையால், இந்த ‘போராட்டம்,என்ன கோருகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் அயுக்தா என்பது 1966-ல் நிர்வாக சீர்திருத்த கமிட்டி (தலைவர்; மொரார்ஜி தேசாய்) செய்த சிபாரிசு. அதன் பிறகு இதை நிறைவேற்ற பல முறைகள் அரைகுறை முயற்சிகள் நடந்தன. ஒரு முறை லோக்சபையில் கூட லோக்பால் மசோதா நிறைவேறியது; ராஜ்ய சபையில் நிறைவேறாததால், சட்டம் வரவில்லை. இப்போது லோக்பால் அமைப்பை உண்டாக்குகிற சட்டத்திற்கான மசோதாவை அரசு தயாரித்தது. அப்போது ஹஸாரே அதைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண், கர்நாடக லோக் அயுக்தா தலைவராக இருந்த சந்தோஷ் ஹெக்டே, ஒரு தன்னார்வ அமைப்பைச் சார்ந்த கெஜ்ரிவால் ஆகியோர் சேர்ந்து ஒரு மசோதாவைத் தயாரித்து, அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர். அதன்பிறகு, அவர்கள் அன்னா ஹஸாரேவின் தலைமையைப் பெற்று அரசு தங்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும் என்று கோரினர்.

அந்த ‘விவாதிக்க அழையுங்கள்,கோரிக்கைக்காக, அன்னா ஹஸாரே ஒரு சிறிய உண்ணாவிரதம் இருந்தார். அன்னா ஹஸாரே ‘எங்கள் மசோதாவை ஏற்க வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை; விவாதிக்க ஒரு மேடை கோருகிறோம். அவ்வளவு தான்,’ என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். விவாதம் நடந்தது. பயனில்லை. பின்னர் கோரிக்கை, ‘மசோதாவை ஏற்றாக வேண்டும்,என்று மாறியது.

அதாவது தனது நிலையை ‘மசோதாவை ஏற்கத் தேவையே இல்லைஎன்பதிலிருந்து, ‘மசோதாவை அப்படியே ஏற்றாக வேண்டும்என்று போராட்டக்குழு மாற்றியது; அடிப்படைக் கோரிக்கையே மாறிவிட்டது. இதுதான் ‘காந்தீயம்என்று பாராட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, அரசின் லோக்பால் மசோதா, படுபலவீனமானது என்பது பற்றி சர்ச்சைக்கே இடமில்லை. அதை நிறைவேற்றுவதால், ஒரு பயனும் இருக்கப்போவதுமில்லை அரசின் ஆசிபெற்ற சிலர் பதவிகளைப் பெறுவார்கள் என்பதைத் தவிர. ஆனால், அதற்கு மாற்றாக அன்னா ஹஸாரே குழு அளிக்கிற மசோதா எப்படிப்பட்டது?

சுப்ரீம் கோர்ட்டிற்குப் புதுவேலை

முதலில், லோக்பால் அமைப்பிற்கான நீதிபதிகள் (அவர்களுக்கு நீதிபதி என்ற பெயர் கிடையாது அவர்கள் லோக்பால்) தேர்வு. இதற்கு ஒரு தேர்வு கமிட்டி. முதலில் இந்தத் தேர்வு கமிட்டியில், நோபல் பரிசு பெற்ற இந்தியர்களும், மாகஸேஸே பரிசு பெற்ற இந்தியர்களும் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. நல்ல வேளை அது கைவிடப்பட்டது. ஆனால், இப்போது ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.வம்புதான்.

தேர்வு செய்யப்படுகிறவர், ஊழலை ஒழிக்கத் தீர்மானம் கொண்டவராகத் தன்னை ஏற்கனவே காட்டிக்கொண்டிருக்க வேண்டும். இதை எப்படி நிர்ணயிப்பது என்பதற்கு, மசோதா வழி சொல்வதாகத் தெரியவில்லை. ‘ஊழலை ஒழிக்க உறுதிகொண்டவன்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ‘ என்று அவர் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டுமா? அல்லது ஊழலை ஒழிக்க ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருக்க வேண்டுமா? அல்லது ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டுமா? தெரியவில்லை. ஊழலை ஒழிக்க உறுதி கொண்டவர் என்று காட்டிக்கொண்டவராக இருக்க வேண்டும் அவ்வளவு தான் சொல்லப்பட்டிருக்கிறது.

சரி, அப்படி ஒருவர் தேர்வானால், என்ன ஆகும்? அதை எதிர்த்து யார் வேண்டுமானாலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யலாம். எடுத்த எடுப்பில், நீதிமன்றம் அந்த நிராகரிக்க முடியாது. விசாரிக்க வேண்டும் அதற்காக ஒரு விசேஷ விசாரணைக் குழுவைக் கூட சுப்ரீம் கோர்ட் நியமிக்கலாம். இப்படி எத்தனை தேர்வுகளுக்கும் வழக்கு வரலாம். சுப்ரீம் கோர்ட் விசாரித்துத்தான் ஆக வேண்டும். அதற்குப் பிறகும் நேரம் இருந்தால் சுப்ரீம் கோர்ட், தனது மற்ற வேலைகளைக் கவனிக்குமோ என்னவோ!

தேர்வு ஆகிறவர்களை, மிரட்டுவது வெகு எளிது. ‘சுப்ரீம் கோர்ட்டில் மனு போடுவேன்,என்று ப்ளாக் மெயில் செய்யப்பட்டால், அசிங்கத்திற்குப் பயந்து, தேர்வு ஆனவர் பணிய வேண்டியதுதான். இது, ஜன் லோக்பால் மசோதாவின் முதல் கோணல்.

போலீஸ்+ ப்ராஸிக்யுஷன்+ நீதிமன்றம் = லோக்பால்!

சரி, எப்படியோ விசாரணைக்குத் தப்பி, 10 லோக்பால்கள் ஒரு தலைவருடன் சேர்ந்து அமர்கிறார்கள். அவர்கள் போலீஸ் என்று சட்டத்தினால் கருதப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது. அதாவது, 11 போலீஸ்காரர்கள் சேர்ந்து ஒரு லோக்பால் அமைப்பு! அவர்களுக்குப் போலீஸுக்கு உள்ள எல்லா அதிகாரமும் உண்டு. விசாரிக்கலாம்; டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்கலாம். ( போலீஸ்கூட இதை உடனே செய்ய முடியாது லோக்பால் செய்யலாம்). ஸி.பி.ஐ. கூட லோக்பாலுடன் சேர்ந்து விடும். லோக்பால்தான் ஸி.பி.ஐ; ஸி.பி.ஐதான் லோக்பால்!

இப்படி போலீஸ் அதிகாரம் பெறுவதுடன், லோக்பால் உறுப்பினர்கள், பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்களாகவும் செயல்படுவார்கள்; ஏனென்றால், நீதிமன்றத்திற்கு வழக்குகளை லோக்பால் அனுப்பலாம்; நீதிமன்றம் அவற்றை விசாரித்தே ஆக வேண்டும். ஆக, போலீஸும், ப்ராஸிக்யூஷனும் சேர்ந்தது லோக்பால்!

அதோடு முடியவில்லை லோக்பாலின் பரந்து விரிந்த அதிகாரம்! நீதிமன்றமும் அதுவே! எப்படி என்றால் நீதிமன்றத்திற்கு வழக்குகளை அனுப்புவது மட்டுமில்லாமல், தாமே கூட சஸ்பென்ஷன், சொத்து முடக்கல் போன்ற தண்டனைகளை வழங்கலாம். ஆக, போலீஸ் வேறு, ப்ராஸிக்யூஷன் வேறு, நீதிமன்றம் வேறு என்ற அடிப்படை தத்துவமே கோவிந்தா! மூன்றும் ஒன்று த்ரீ இன் ஒன், சைக்கிள் ஆயில் போல!

இன்னமும் லோக்பாலின் மகிமை முடியவில்லை. யார் வேண்டுமானாலும், எந்த அதிகாரி மீது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அதற்கு முன் அனுமதி எதுவும் தேவையில்லை. புகாரை லோக்பால் விசாரணைக்கு ஏற்றவுடன், ஒரு ஆரம்ப விசாரணை நடக்கும். இது புகார் கொடுத்தவருக்குத் தெரிந்துதான் நடக்கும்; அவருக்கு என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும். ஆனால், யார் மீது புகார் வந்திருக்கிறதோ அவருக்கு ஆரம்ப விசாரணை தொடர்பான விபரங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. இது முடிந்து, முழு விசாரணை. இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தன் பக்கத்தைக் கூற வாய்ப்பு உண்டு.

தண்டனை வரும் முன்னே, குற்ற நிரூபணம் வருமா பின்னே?

இப்படி ஒரு விசாரணை நடக்கிறபோதே சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்கிற உத்தரவை லோக்பால் பிறப்பிக்கும். அவருடைய சொத்தின் எந்தப் பகுதி லஞ்ச சம்பாத்தியம் என்று கருதப்படுகிறதோ, அதை முடக்கி விடும். இவை எல்லாம், அந்த அதிகாரி மீது குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பு!

விசாரணை முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரியால் தரப்பட்ட கான்ட்ராக்ட்டை லோக்பால் ரத்து செய்துவிடலாம்; சம்பந்தப்பட்ட கம்பனியை ‘ப்ளாக் லிஸ்ட்செய்து, இனி அதற்கு அரசு கான்ட்ராக்ட்கள் கிடைக்காமல் செய்யலாம். இந்த நடவடிக்கையும் கூட, குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே!

ஜன் லோக்பால் மசோதாவின் இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பார்த்தால், ஒரு அதிகாரியை ப்ளாக் மெயில் செய்ய நினைப்பவர்களுக்காக தீட்டப்பட்ட மசோதா மாதிரி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிப்பதற்கு முன்பாகவே சஸ்பென்ஷன் உட்பட சொத்து முடக்கம்வரை நடக்கலாம் என்றால், எந்த அதிகாரிக்குத்தான் உதறல் எடுக்காது? அப்பீல் வேறு கிடையாது (சொத்து முடக்கத்துக்கு மட்டும் அப்பீல் உண்டு). லோக்பால் நடவடிக்கையை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. ப்ளாக்மெயிலர்களுக்கு லட்டு!

ஜன் லோக்பால் இன்னொரு புதுமையையும் புகுத்தியிருக்கிறது. லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்சம் வாங்கிய ஒருவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கிற லஞ்சம் கொடுப்பவருக்குத் தண்டனை கிடையாது; லஞ்சம் கொடுப்பவருக்குத் தண்டனை என்றால், லஞ்சம் வாங்கியவரின் குற்றத்தை நிரூபிப்பது கடினமாகும் என்பதால் , இம்மாதிரி ஏற்பாடு சட்டத்தில் இருக்கிறது. ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி, லஞ்சம் கொடுத்தவரும் தண்டனைக்குள்ளாவார். ஆகையால் சாட்சியம் அளிக்க அவர்கள் முன்வரவே மாட்டார்கள்.

கழுதை தேய்ந்து, கொசு ஆன கதை

இப்படி பல பிரிவுகள் உள்ள ஜன் லோக்பால் மசோதா, அப்படியே முழுமையாக ஏற்கப்படாவிட்டால் அதுவும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் ஏற்கப்படா விட்டால் உண்ணாவிரதம் முடிக்கப்படாது,என்று அன்னா ஹஸாரே அறிவித்தார். இதில் எந்த வித மாறுதலுக்கும் இடம் கிடையாது என்பது, அவருடைய பிரதம ஆதரவாளர்களால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இறுதியில் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்த பின்னர், ‘முழு ஏற்புகோரிக்கை கைவிடப்பட்டது; பிரதமர் லோக்பால் விசாரணைக்கு உட்பட்டவர் என்பது போயிற்று; நீதித்துறையும் போயிற்று. இந்த நிலையில் அன்னா ஹஸாரே மூன்று நிபந்தனைகளை மட்டும் விதித்தார்; ‘மாநிலங்களில் லோக் அயுக்தா வர வேண்டும்; கீழ்மட்ட அதிகாரிகளும் லோக்பால் சட்டத்தின் கீழ் வர வேண்டும்; அரசு காரியாலயங்களில் இத்தனை நாட்களில் இன்னின்ன பணிகள் செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் என்ன தண்டனை என்றும் அறிக்கை நோட்டீஸ்கள் வைக்கப்பட வேண்டும், என்ற மூன்று விஷயங்களை ஏற்கிறவகையில், ஒரு தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அன்னா ஹஸாரே அறிவித்தார். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையல்ல இது; கழுதை தேய்ந்து கொசு ஆகிவிட்டது, இங்கே!

அதாவது, ‘தன் மசோதா முழுமையாக ஏற்கப்பட வேண்டும்; ஆகஸ்ட் 30-க்குள் அது நடக்க வேண்டும்; எந்தவித மாறுதலும் கிடையாது...,என்பதையெல்லாம் அவர் கைவிட்டார். அத்துடன், தனது மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற, பா.ஜ.கவின் ஒத்துழைப்பைய்ம் அவர் நாடினார்.

குஜராத் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறியதையும்; பா.ஜ.கவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியதையும்; அப்படிக் கூறியவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் என்று கூறியதையும்-அவர் மறந்தார். பா.ஜ.கவும் மறந்தது. ‘அக்கட்சியின் ஒத்துழைப்பு கிட்டியவுடன், அவருடைய ‘வைராக்கியம்அதிகமாகியது; முன்று நிபந்தனைகளை அவர் விதிக்க, காங்கிரஸ் அதை ஏற்றது அதாவது ஏற்ற மாதிரி காட்டிக்கொண்டது.

‘தீர்மானம் என்பதே சந்தேகம்

மேலே பார்த்த அந்த மூன்று நிபந்தனைகள் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட வேண்டும்; அதற்கு அந்த நிபந்தனைகள் ஏற்கப்படுவதாக ஒரு தீர்மானம் வர வேண்டும்; அந்தத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க வேண்டும்; லோக்பால் சட்டத்தில் அந்த மூன்று அம்சங்கள் இடம்பெற்றாக வேண்டும் என்பது அன்னா ஹஸாரே குழுவின் இறுதிக் கோரிக்கை. அரசு தரப்பு, ‘ஓட்டெடுப்பு முடியாது; இந்த அம்சங்கள் பற்றி சபையில் உணர்வு வெளிப்படுத்தப்படும்; அது போதும்,என்று கூறியது. அன்னா ஹஸாரே தரப்பு, அதெல்லாம் முடியாது; ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வந்தால்தான் ஏற்போம்; இல்லாவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்என்று கடைசி நிமிடம்வரை கூறிவந்தது.

நடந்தது என்ன? ஓட்டெடுப்பு இல்லை; ‘அன்னா ஹஸாரே குழுவின் மூன்று அம்சங்களுடன் பொதுப்படையாக இந்த சபை ஒத்துப்போகிறது,என்று ஒரு தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. (தீர்மானமே நிறைவேறவில்லை உணர்வுதான் வெளிப்படுத்தப்பட்டது என்று பிரணாப் முகர்ஜி விளக்கியிருக்கிறார் என்பது வேறு விஷயம்). குரல் வாக்கெடுப்பாவது நடத்த வேண்டும் என்று அன்னா ஹஸாரே தரப்பு கூறியது கூட நிறைவேறவில்லை.

சரி, ‘உணர்வுதீர்மானமாவது உருப்படுமா? எப்படி உருப்படும்? பிரணாப் முகர்ஜி மிகத் தெளிவாக சபையிலேயே இந்த சமாச்சாரத்தை பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். ‘லோக்பால் மசோதா பற்றிய தனது கருத்துக்களை ஸ்டாண்டிங் கமிட்டி வடிவமைக்கிறபோது, பரிசீலிக்கப்படுவதற்காக இந்த சபையின் உணர்வு பற்றிய தகவல் அக்கமிட்டிக்கு அனுப்பப்படும்,என்றார் அவர்! ஆக, மேலும் ஒரு பரிசீலனை இருக்கிறது. அந்தப் பரிசீலனை முடிந்தபிறகு மீண்டும் சபையில் இன்னொரு பரிசீலனை நடக்கும். பரிசீலனைக்கு மேல் பரிசீலனை.

இத்துடனாவது பிரணாப் முகர்ஜி நிறுத்தினாரா என்றால் இல்லை. இன்னமும் சொன்னார்: ‘இதைப் பரிசீலிக்கிறபோது இதனுடைய (அதாவது அன்னா ஹஸாரே குழுவின் மூன்று அம்ச நிபந்தனையினுடைய) நடைமுறை சாத்தியக்கூறு, செயல்படுத்தப்படக்கூடிய தன்மை, அரசியல் சட்ட சார்புடைமை ஆகியவற்றை ஸ்டாண்டிங் கமிட்டி கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

அதாவது, ‘மாநிலங்களில் லோக் அயுக்தாவை பாராளுமன்றம் நிறைவேற்ற முயற்சிப்பது அரசியல் சட்ட சார்புடைமை அல்ல; காரியாலயங்களில் செயல்முறை பற்றிய நோட்டீஸ்களை வைப்பதில் நடைமுறை சிக்கல் வரும் என்பதால், அதற்கு நடைமுறை சாத்தியக்கூறு இல்லை; கீழ்மட்ட அதிகாரிகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவருவது செயல்படுத்தப் படக்கூடிய தன்மை அற்றது என்று ஸ்டாண்டிங் கமிட்டி சொன்னால்....? அப்புறம் மீண்டும் கிரண் பேடி தேசியக்கொடியுடன் டான்ஸ் ஆட, ஆமீர்கான் வந்து பாட, அன்னா ஹஸாரே தாளம்போட, மக்கள் மகிழ்ச்சி பொங்க குதித்து ஆட, டெலிவிஷன் சேனல்கள் இந்தக் கேளிக்கையை இடைவிடாது ஓளிபரப்ப ஊழல் ஒழிப்புப் போர் மீண்டும் தொடங்க வேண்டியதுதான்! அன்னா ஹஸாரே வேண்டுமானால் தன் திருப்திக்கு ‘இது மூன்றாவது சுதந்திரப் போர்என்று அறிவிக்கலாம். அப்போது எல்லாமே முழுமையடையும்.

பிரதமர் சொன்னது, நடந்தது

இப்படிப்பட்ட ஒரு மாய்மால வேலையை அரசு செய்திருக்கிறது; பிரதமர் முதலில் ‘பாராளுமன்றம் இந்த விஷயம் பற்றி விவாதம் நடத்தும். அந்த விவாதத்தின் விபரங்கள் ஸ்டாண்டிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்என்று சொன்னார். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. இதைத்தான் போராட்டத்தின் வெற்றி, அன்னா ஹஸாரேவின் வெற்றி, இந்தியாவின் வெற்றி, மக்களின் வெற்றி என்று பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் கொண்டாடுகின்றன. ‘எங்களுடைய ஜன் லோக்பால் மசோதா முழுமையாக ஏற்கப்பட்டாக வேண்டும் அதுவும் ஆகஸ்ட் 30 க்குள். இல்லையென்றால், காலவரையற்ற உண்ணாவிரதம்தான்,என்ற கெடுபிடியுடன் கூடிய சவால் விட்ட அன்னா ஹஸாரே குழுவினர் அதை அடியோடு மறந்தனர்; மூன்று அம்சங்கள் ஏற்கப்பட்டாக வேண்டும் என்ற இறுதி நிபந்தனையையும் அவர்கள் மறந்தனர். மூன்று நிபந்தனைகள் பற்றி ஓட்டெடுப்பு நடக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் மறந்தனர். கடைசியில் பிரதமர் முதலிலேயே சொன்ன மாதிரி ஒரு ‘உணர்வு வெளியீடு’; அதுவும் கூட ஸ்டாண்டிங் கமிட்டியின் பரிசீலனைக்கு விடப்பட்டாகி விட்டது.

இது அன்னா ஹஸாரேவுக்கும், அவர் குழுவினருக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்துக்கும் வெற்றி. ‘ஆரம்ப கோரிக்கையும் விட்டுக் கொடுக்கப்பட்டு கடைசி நிபந்தனைகளும் விட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் இது என்ன வெற்றி?என்று கேட்பவன் ஊழல் ஆதரவாளன். நாம் ஊழல் ஆதரவாளர்கள் அல்ல என்பதால், நாமும் இது வெற்றி தான், வெற்றிதான் என்று கொண்டாடுவோம்.

ஒரே ஒரு மனவருத்தம். இங்கிலாந்தில், நான்கு டெஸ்ட்களில் தோற்ற இந்தியக் கிரிக்கெட் அணி, கடைசி டெஸ்ட் மாட்சில், ஒரு ரன் எடுத்து விட்டு, ‘வெற்றி, வெற்றி,என்று கத்திக்கொண்டே, இந்தியாவுக்கு விமானம் ஏறியிருக்கலாம்! அன்னா ஹஸாரே போராட்ட வெற்றி போல, இந்தியாவிற்கு மற்றொரு வெற்றியும் கிடைத்திருக்கும். சான்ஸ் போச்சு! அது கிடக்கட்டும்; ‘இரண்டாவது சுதந்திரப்போர்வெற்றியைப் பார்ப்போம்.

இது கொண்டாட்ட நேரம்

ஒரு வழியாக ஊழல் எதிர்ப்பு உற்சவம் சுபமாக முடிந்திருக்கிறது. தங்களுடைய ஜன் லோக்பால் மசோதா முழுமையாக ஏற்பு என்ற முடிவை அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் இப்போது நினைவில் கொள்ள மாட்டார்கள்; இது கொண்டாட்ட நேரம்; பல்டிகளை நினைவு கொள்ள வேண்டிய நேரம் அல்ல. டெலிவிஷன் சேனல்களும் அதை நினைக்கப் போவதில்லை. ஆக வெற்றிதான்.

இந்தத் திருவிழா முடிவதில், சிலருக்கு வருத்தம் இருக்கும். 2-ஜி ஊழல்வாதிகள், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்வாதிகள், ஆதர்ஷ் ஊழல்வாதிகள் போன்றவர்கள் இனி வருத்தப்பட வேண்டியதுதான்; அவர்களுடைய விவகாரங்களை மறைக்கவும், அவை பற்றிய செய்திகளை அமுக்கி விடவும், இந்த அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் உதவியது. இப்போது நாடு மீண்டும் அவற்றை நினைவு கொள்ளும்.

ஊழல்? இனி ஊழல் என்ன ஆகும்? உஸ்! அதைப் பற்றிப் பேசுகிற நேரம் இதுவல்ல. இது கேள்வி நேரம் அல்ல; கொண்டாட்ட நேரம்.

ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே!

இரண்டாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்

என்று, ஆடுவோம், ஆடுவோம்,

ஆடுவோமே, ஏ...ஏ...ஏ....!

28 comments:

கும்மாச்சி said...

சேட்டை அருமையான அலசல், இந்த விஷயத்தை நல்லா கரைத்து குடித்துவிட்டீர்கள் போல இருக்கிறது. மொத்தத்தில் நல்ல பதிவு.

Yoga.s.FR said...

நன்றாகத் தான் அலசியிருக்கிறார்,சோ.ராமசாமி! நாங்கள் சொன்னால் எங்கே கேட் கிறார்கள்?

ஜெய்லானி said...

ஏற்கனவே கேசு கோர்ட்டுக்கு போனா வருஷ கனக்கில ஆகும் ..இதுல இது வேறா அவ்வ்வ்வ்வ்


இதுல இன்னும் என்னென்னெ கொள்ளை கூத்து நடக்க போகுதோ ?...!!

சார்வாகன் said...

அன்னா ஹசாரே ஸ்பெசலிஸ்ட் சேட்டைக்காரன் அவர்களே நன்றி.ஓட்டும் போட்டாச்சு!

kobiraj said...

நல்ல பகிர்வு .ஓட்டு போட்டாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

வியாழக்கிழமை துக்ளக் படிக்கும்போதே உங்களை நினைச்சேன்.. ஹா ஹா

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சேட்டைக்காரன்...

இவ்விஷயத்தில் சோ ரொம்ப லேட்..!
So, துக்ளக் கட்டுரை ஒரு ஆறிய காஃபி.

பொதுவாக இவர் செருப்புக்கு ஏற்றவாறு காலை நறுக்குபவர். :-( ஆனால், இம்முறை காலுக்கு ஏற்றவாறு கச்சிதமான செருப்பை வடிவமைத்திருக்கிறார். :-)

பெரும்பாலும் நீங்கள் ஏற்கனவே உங்கள் பதிவுகளில் எழுதினவைதான் என்றாலும்...

துக்ளக் ஆசிரியர் வக்கீல் அல்லவா..? கட்டுரையின் வாதங்கள் அனைத்தும் அருமை. தெளிவான நடை.

அட்டைப்படத்திலேயே கட்டுரை முழுக்கதையையும் சொல்லி விடுகிறது.

இப்போது..........................

சோ குரூப் ஆட்கள் கிட்டத்தட்ட அனைவருமே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் ஆயிற்றே..?

இனி, அவர்கள் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளத்தான் ரொம்ப ஆவலாக உள்ளேன்..!

பகிர்வுக்கு நன்றி சகோ.

ராஜ நடராஜன் said...

உங்கள் கருத்து என்ன என்பதை மட்டும் சொல்லுங்கள்.சோ கூட சேர்ந்தீங்கன்னா உங்க கேஸ் ஊத்திக்கும்:)

சோ சொல்லி இதுவரைக்கும் நிகழ்ந்தவை என்ன என்று பட்டியல் போட முடியுமா?

இந்த முறை பிஜேபிதான் வரும்ன்னு ஆருடம் சொல்வாரு.காங்கிரஸ் வந்து உட்கார்ந்துக்கும்.இல்லைன்னா மூன்றாவது அணிங்கிற மாதிரி வேலைகள் நடக்கும்.தி.மு.க கதி அவ்வளவுதான்ம்பாரு!டீ சாப்பிட வீட்டுக்கு வாங்கன்னு கலைஞர் கூப்பிடுவாரு.இந்த முறை ஸ்பெக்டரம்ங்கிறதால சின்னக்குழந்தைக்கும் கூட தெரியும்.தி.மு.க தேறாதுன்னு.

மோடி ஜன்லோக்பால் சட்டத்தை கொண்டு வந்திருக்கட்டும்.இனிமேல் இந்தியாவில் மும்மாரி மழை பெய்யும்ன்னு தலையங்கம் எழுதிடுவாரு.

ஒன்னு தனியா நின்னு பேட்டிங் செய்யுங்க இல்ல பால் போட ஆளு வேணுமின்னா என்னைக்கூப்பிடுங்க.சோவையெல்லாம் நம்பி டீம் பார்ம் செஞ்சா உங்க கேம் புட்டுக்கும்.சொல்லிப்புட்டேன்:)

உணவு உலகம் said...

உங்கள் நிலைப்பாட்டிற்கு ஒத்த கருத்து கிடைத்த சந்தோஷம் இந்த பகிர்வா?

எல் கே said...

//மோடி ஜன்லோக்பால் சட்டத்தை கொண்டு வந்திருக்கட்டும்.இனிமேல் இந்தியாவில் மும்மாரி மழை பெய்யும்ன்னு தலையங்கம் எழுதிடுவாரு.//

கண்டிப்பா எழுத மாட்டார். இது நமது "இணைய தமிழர்களின்" கற்பனை அவ்வளவே.

இந்த ஜன்லோக்பால் முழுவதும் காங்கிரசின் திட்டமிட்ட நாடகமோ என்ற சந்தேகம் என் மனதினில் இருக்கு....

ரிஷபன் said...

துக்ளக் படிக்கும்போதே உங்கள் பதிவுகள் நினைப்புத்தான் வந்தது.

முஹம்மத் ஆஷிக் சொல்வது தப்பு.
லேட் இல்லை..
சோவும் முன்பிருந்தே இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.. கேள்விபதில், நினைத்தேன் எழுதுகிறேன்.. இப்படி.

settaikkaran said...

//கும்மாச்சி said...

சேட்டை அருமையான அலசல், இந்த விஷயத்தை நல்லா கரைத்து குடித்துவிட்டீர்கள் போல இருக்கிறது. மொத்தத்தில் நல்ல பதிவு.//

என்ன செய்வது? எல்லா வெகுஜனப்பத்திரிகைகளும், செய்தித்தாள்களும் ’இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை’ மெச்ச, ’துக்ளக்’ ஒருவர்தான் எனக்குக் கைகொடுத்திருக்கிறார்! :-)

மிக்க நன்றி!

//Yoga.s.FR said...

நன்றாகத் தான் அலசியிருக்கிறார்,சோ.ராமசாமி! நாங்கள் சொன்னால் எங்கே கேட் கிறார்கள்?//

அதே தான் எனது கேள்வியும்! நானும் எவ்வளவோ எழுதியாகி விட்டது; எல்லாரும் என்னைத்தான் கோபிக்கிறார்கள். :-)))

மிக்க நன்றி!

settaikkaran said...

//ஜெய்லானி said...

ஏற்கனவே கேசு கோர்ட்டுக்கு போனா வருஷ கனக்கில ஆகும் ..இதுல இது வேறா அவ்வ்வ்வ்வ்//

இன்னும் நிறைய இருக்கிறது. பல ஆங்கில Forum-களில் எழுதுவதை வாசித்தால் தலைசுற்றுகிறது. சற்றும் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு வரைவு! :-(

//இதுல இன்னும் என்னென்னெ கொள்ளை கூத்து நடக்க போகுதோ ?...!!//

ஏற்கனவே நடந்திருக்கும் என்றும் அரசல்புரசலாக பேச ஆரம்பித்து விட்டார்களே! :-)

மிக்க நன்றி!

//சார்வாகன் said...

அன்னா ஹசாரே ஸ்பெசலிஸ்ட் சேட்டைக்காரன் அவர்களே நன்றி.//

ஹாஹா! அவர் ஊழல் ஸ்பெஷலிஸ்ட்; நான் அவர் ஸ்பெஷலிஸ்ட்!!
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருக்கணுமே? :-)

//ஓட்டும் போட்டாச்சு!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//kobiraj said...

நல்ல பகிர்வு .ஓட்டு போட்டாச்சு//

மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி!! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

வியாழக்கிழமை துக்ளக் படிக்கும்போதே உங்களை நினைச்சேன்.ஹாஹா//

முதலில் போடுவதாக இல்லை தல. ஆனா, ஒரு வாசகர் பின்னூட்டத்துலே எழுதினதும், ’சரி, எவ்வளவோ பண்ணிட்டோம்; இதப் பண்ண மாட்டோமா?’ன்னு போட்டுட்டேன். மிக்க நன்றி!

settaikkaran said...

//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.சேட்டைக்காரன்...//

ஸலாம் சகோ!

//இவ்விஷயத்தில் சோ ரொம்ப லேட்..! So, துக்ளக் கட்டுரை ஒரு ஆறிய காஃபி.//

இல்லை சகோ! இதற்கு முன்பும் ஒரு தலையங்கம் எழுதியிருந்தார். அப்புறம் கேள்வி-பதில்களில் நிறைய கருத்துத் தெரிவித்திருந்தார்.

//பொதுவாக இவர் செருப்புக்கு ஏற்றவாறு காலை நறுக்குபவர். :-( ஆனால், இம்முறை காலுக்கு ஏற்றவாறு கச்சிதமான செருப்பை வடிவமைத்திருக்கிறார். :-)//

உண்மை. இவரது வாதங்கள் சில சமயங்களில் எரிச்சலூட்டுவதாயிருக்கும். சில சமயங்களில் ’அட ’ சொல்லவைக்கும் என்பதுதான் எனது கருத்தும்.

//பெரும்பாலும் நீங்கள் ஏற்கனவே உங்கள் பதிவுகளில் எழுதினவைதான் என்றாலும்...துக்ளக் ஆசிரியர் வக்கீல் அல்லவா..? கட்டுரையின் வாதங்கள் அனைத்தும் அருமை. தெளிவான நடை.//

ஆம்! நானும் அவர் ஒரு வழக்குரைஞர் என்ற காரணத்திலாயே அவரது கருத்துக்களைக் கூர்ந்து கவனித்தேன். பல விஷயங்களை தெரிவிக்க அவரது தலையங்கம் உதவும் என்று தோன்றியது.

//அட்டைப்படத்திலேயே கட்டுரை முழுக்கதையையும் சொல்லி விடுகிறது.//

’துக்ளக்’ உள்ளடக்கம் எப்படியோ, அட்டைப்படத்துக்கு எப்போதுமே நான் விசிறி! :-)

//இப்போது.......................... சோ குரூப் ஆட்கள் கிட்டத்தட்ட அனைவருமே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் ஆயிற்றே..? இனி, அவர்கள் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளத்தான் ரொம்ப ஆவலாக உள்ளேன்..!//

வாசகர் கடிதங்களிலும், கேள்வி பதில்களிலும் வறுத்தெடுக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. அவரும் செமத்தியாக பதிலளித்து தன்பக்க நியாயத்தை சொல்லிவருகிறார்.

//பகிர்வுக்கு நன்றி சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ௧ :-)

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

உங்கள் கருத்து என்ன என்பதை மட்டும் சொல்லுங்கள்.சோ கூட சேர்ந்தீங்கன்னா உங்க கேஸ் ஊத்திக்கும்:)//

என்னுடைய கருத்தைத் தான் இதுவரை எத்தனை பதிவுகளில் சொல்லிவிட்டேன் நண்பரே? :-)

துக்ளக் குறித்த எனது கருத்தை மேலேயே சொல்லிவிட்டுத்தான் பிறகு இடுகை போட்டிருக்கிறேன்.

//சோ சொல்லி இதுவரைக்கும் நிகழ்ந்தவை என்ன என்று பட்டியல் போட முடியுமா? இந்த முறை பிஜேபிதான் வரும்ன்னு ஆருடம் சொல்வாரு.காங்கிரஸ் வந்து உட்கார்ந்துக்கும்.இல்லைன்னா மூன்றாவது அணிங்கிற மாதிரி வேலைகள் நடக்கும்.தி.மு.க கதி அவ்வளவுதான்ம்பாரு!டீ சாப்பிட வீட்டுக்கு வாங்கன்னு கலைஞர் கூப்பிடுவாரு.இந்த முறை ஸ்பெக்டரம்ங்கிறதால சின்னக்குழந்தைக்கும் கூட தெரியும்.தி.மு.க தேறாதுன்னு. மோடி ஜன்லோக்பால் சட்டத்தை கொண்டு வந்திருக்கட்டும்.இனிமேல் இந்தியாவில் மும்மாரி மழை பெய்யும்ன்னு தலையங்கம் எழுதிடுவாரு.//

காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலைப்பாடு தவிரவும், துக்ளக் பத்திரிகையின் எந்தக் கருத்துடனும் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்தது கிடையாது. ஆகவே, நீங்கள் குறிப்பிட்டிருப்பதில் பெரும்பாலானவற்றில் எனக்கு முழு உடன்பாடு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், அ.தி.மு.க.வந்தாலும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும் பல பத்திரிகைகள் எழுதியபோது, 170+ இடங்களைக் கைப்பற்றும் என்று சொன்னது துக்ளக் மட்டும்தான். அது எனக்கு பெரிய குட் நியூஸ்! :-)

//ஒன்னு தனியா நின்னு பேட்டிங் செய்யுங்க இல்ல பால் போட ஆளு வேணுமின்னா என்னைக்கூப்பிடுங்க.சோவையெல்லாம் நம்பி டீம் பார்ம் செஞ்சா உங்க கேம் புட்டுக்கும்.சொல்லிப்புட்டேன்:)//

ஆஹா, நான் இம்புட்டு நாளா தனியாத்தான் பேட்டிங் பண்ணுறேன். ஏறக்குறைய அண்ணாவைப் பத்தி 10 இடுகை எழுதி, வந்த பந்தையெல்லாம் பவுண்டரிக்கு அடிச்சிட்டேன். ஐயாம் நாட் அவுட்! :-)

நீங்க பவுன்ஸர் போடுறதாயிருந்தாலும், காத்திட்டிருக்கேன். :-)))

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//FOOD said...

உங்கள் நிலைப்பாட்டிற்கு ஒத்த கருத்து கிடைத்த சந்தோஷம் இந்த பகிர்வா?//

மிகச்சரி! பெரும்பாலான வெகுஜனப்பத்திரிகைகளும், செய்தித்தாள்களும் துக்ளக்-கின் கருத்திலிருந்து நேர்மாறாக இருப்பதும் ஒரு காரணமே! மிக்க நன்றி! :-)

//எல் கே said...

//மோடி ஜன்லோக்பால் சட்டத்தை கொண்டு வந்திருக்கட்டும்.இனிமேல் இந்தியாவில் மும்மாரி மழை பெய்யும்ன்னு தலையங்கம் எழுதிடுவாரு.//

கண்டிப்பா எழுத மாட்டார். இது நமது "இணைய தமிழர்களின்" கற்பனை அவ்வளவே.//

நரேந்திர மோடியை அடுத்த பிரதமர்-னு சோ எழுதுவதுண்டு கார்த்தி! அதை பா.ஜ.கவே ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே! :-)
இருந்தாலும், அண்ணா விஷயத்தில் அவரது கருத்துக்கள் ஒரு different perspective என்பதை மறுப்பதற்கில்லை.

//இந்த ஜன்லோக்பால் முழுவதும் காங்கிரசின் திட்டமிட்ட நாடகமோ என்ற சந்தேகம் என் மனதினில் இருக்கு....//

இல்லை கார்த்தி! காங்கிரஸ் நல்லாவே பல்பு வாங்கியிருக்கு! குப்புற விழுந்தும் மீசையிலே மண் ஒட்டலேன்னு பினாத்திட்டிருக்கு. ஆனால், ஜன் லோக்பாலுக்குப் பின் வேறு சில திட்டங்கள் இருந்தன; அவை குறித்து இன்னும் சில தகவல்கள் சேகரித்துப் பிறகு எழுதுவேன்.

நன்றி கார்த்தி!

//ரிஷபன் said...

துக்ளக் படிக்கும்போதே உங்கள் பதிவுகள் நினைப்புத்தான் வந்தது.//

ஆஹா! தல சி.பி.எஸ்-ஸும் இதைத்தான் சொன்னாரு! :-)

//முஹம்மத் ஆஷிக் சொல்வது தப்பு. லேட் இல்லை..சோவும் முன்பிருந்தே இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.. கேள்விபதில், நினைத்தேன் எழுதுகிறேன்.. இப்படி//

உண்மைதான்! நானும் ஏப்ரல் முதற்கொண்டே துக்ளக் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதைக் கவனித்து வருகிறேன். பல கருத்துக்கள் ஒத்துப்போவதில் எனக்குக் குஷி! :-)

மிக்க நன்றி! :-)

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

வலையுகம் said...

உண்மையா..? நிஜமாகவா...? துக்ளக் சோவா...? நம்ப முடியவில்லை

நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் ஆதரிப்போம் சகோ உங்களைப் போன்று

போலிகள் என்று தெரிந்தால் விழுந்து விழுந்து எதிர்ப்போம் அதுவும் உங்களை போன்றே

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு.

காவ்யா said...

//அடிப்படைக் கோரிக்கையே மாறிவிட்டது. இதுதான் ‘காந்தீயம்’ என்று பாராட்டப்படுகிறது//

காந்தியும் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்தவரே. அதற்கு அவரிட்ட பெயர் ப்யூட்டி ஆஃப் காம்ப்ரமைஸ். அன்னாவின் வழிமுறையை வைத்தே 'காந்தீயம்' என்று சொல்கிறார்களேயொழிய அவரின் கொள்கை மாற்றலை வைத்தன்று. அதையும் காந்தியம் எனலாம் நான் மேலே சொன்னதை வைத்து.

இளைஞர் ஆயிரக்கணக்கில் திரண்ட போது வன்முறை தாராளமாக வெடிக்கும். தனக்கு வன்முறை பிடிக்காதவொன்று என்றவர் கோடிட்டுக் காட்டியதால் திரண்டவர்கள் அதைப்புரிந்து நடந்துகொண்டார்கள் அவர்களில் சிலர் மீறி போலிசால அடக்குமுறைக்கு ஆளானபோது அன்னா எங்களைப்போலீசு பழிவாங்குகிறது எனச் சொல்லவில்லை. கண்டுகொள்ள வேண்டாமெனச் சொல்லிவிட்டார். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் ? இளைஞர்கள் தில்லியை ரணகளப்படுத்தியிருப்பார்கள். உயிர்ச்சேதம் நடந்திருக்கும்.

எனவேதான் அன்னாவின் செயல்கள் காந்தியம் என போற்றப்படுகின்றன. சோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.

காவ்யா said...

சோவின் தலையங்கம் வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கும் அன்னா தான் மோடிக்குக் கொடுத்த ஆதரவை - மோடி சிறந்த நிருவாகி. அவர் குஜராத்தை நன்றாகக்கொண்டு போகிறார் - என்றச் சான்றிதழை வாபஸ் வாங்காமலிருந்திருந்தால். சோவுக்கு பெரிய ஏமாற்றம். அதை ஏற்கனவே துக்ளக்கில் எழுதிவிட்டார். சோவின் தெய்வமல்லவா மோடி?

இத்தலையங்கத்தில், அன்னாவின் இறுதி 3 கோரிக்கைகளப்பற்றி சோ அவை பாராளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டிவிட்டதால் நீர்த்துவிட்டதாக எழுதுகிறார். தவறு. பாராளுமன்றம் 3 கோரிக்கைகளையும் இன் ப்ரின்ஸிபல்லின் ஏற்றுக்கொண்டு அதைப் பாராளுமன்றக்குழுவுக்கு அனுப்பிவிட்டது. அக்குழ இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். மேலும் பாரளுமன்றம் தாம் கோரிக்கைகளை ஏற்றுவிட்டதாகவும் அவைகளை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான் பிரச்சினை; அதை குழு ஆராயவேண்டுமேன்றுதான் சொல்லியிருக்கிறது.

ஆக கோரிக்கைகள் நிராகரிக்கப்படவில்லை. அவை நிறைவேற்றப்படும் வழிகள்தான் ஆராயப்படும் குழுவால்.

சோ அக்கோரிக்கைகளே அம்பேல் என்று எழுதுகிறார்.

settaikkaran said...

//விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!//

மிக்க நன்றி! :-)

//ஹைதர் அலி said...

உண்மையா..? நிஜமாகவா...? துக்ளக் சோவா...? நம்ப முடியவில்லை//

அதனால் தான் முதல் முறையாக ஒரு பத்திரிகையில் வந்ததை நானே பதிவாகப் போட்டிருக்கிறேன். :-)

//நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் ஆதரிப்போம் சகோ உங்களைப் போன்று.//

உண்மை! சொல்வது யார் என்பதை விடவும் சொல்வது என்ன என்பது முக்கியமாயிற்றே!

//போலிகள் என்று தெரிந்தால் விழுந்து விழுந்து எதிர்ப்போம் அதுவும் உங்களை போன்றே//

இப்போதும் எதிர்ப்பவர்களின் குரல் சன்னமாகவே இருக்கிறது. இது இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும். பார்க்கலாம்! :-)

மிக்க நன்றி நண்பரே!

//சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு.//

மிக்க நன்றிண்ணே! :-)

காவ்யா said...

சோ எழுதுகிறார்: "காரியாலயங்களில் செயல்முறை பற்றிய நோட்டீஸ்களை வைப்பதில் நடைமுறை சிக்கல் வரும் என்பதால், அதற்கு நடைமுறை சாத்தியக்கூறு இல்லை;"

இது petitio principii .

தில்லி அரசு சிலநாட்களுக்கு முன் 'அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வேலைகளுக்கும் எவ்வளவு நாட்களில் முடிக்கப்படவேண்டும். முடிக்காவிட்டால ஊழியருக்கு என்ன தண்டனை' என்று அறிவிப்பு சிட்டிசன்ஸ் சார்டர் வெளியிட்டு அனைவரையும் அசத்திவிட்டது. போன வாரம் செய்தித்தாள்களைப்படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

லோக்பள்ளாவது மண்ணாங்கட்டியாவது? நாங்கள் செய்தே விட்டோம் எவரையும் எதையும் பற்றிச் சட்டை பண்ணாமல் என்று சொல்லி எல்லார் முகத்திலும் கரிபூசிவிட்டது.

சிட்டிசன்ஸ் சார்டர்ஸ் ஒரு சாத்தியம் என்பதை ஷீலா திக்சித் அரசு நிரூபித்துவிட்டது. சோ சாத்தியமில்லையென்கிறார்.

ஏற்கனவே, வங்கிகளில் ஒரு வேலைக்கு எவ்வளவு நேரம் என்று எழுதிப்போட்டிருக்கிறார். முடிக்காவிட்டால் கம்ப்ளெயிண்ட் பண்ணலாம். அல்லது ஆர் டி ஐ போடலாம். இனி என்ன தண்டனை என்றும் போடுவார்கள.

settaikkaran said...

//காவ்யா said...

//காந்தியும் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்தவரே. அதற்கு அவரிட்ட பெயர் ப்யூட்டி ஆஃப் காம்ப்ரமைஸ். அன்னாவின் வழிமுறையை வைத்தே 'காந்தீயம்' என்று சொல்கிறார்களேயொழிய அவரின் கொள்கை மாற்றலை வைத்தன்று. அதையும் காந்தியம் எனலாம் நான் மேலே சொன்னதை வைத்து.//

பியூட்டி ஆஃப் காம்ப்ரமைஸ் எனப்படுவது மூலக்கொள்கைக்கே கோவிந்தா போடுவதா? எனக்குத் தெரிந்து காந்தி அப்படிப்பட்ட காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக தெரியவில்லை. உதாரணம் சொன்னால், உங்களது கருத்தை முழுமையாக ஏற்பேன்.

//இளைஞர் ஆயிரக்கணக்கில் திரண்ட போது வன்முறை தாராளமாக வெடிக்கும். தனக்கு வன்முறை பிடிக்காதவொன்று என்றவர் கோடிட்டுக் காட்டியதால் திரண்டவர்கள் அதைப்புரிந்து நடந்துகொண்டார்கள் அவர்களில் சிலர் மீறி போலிசால அடக்குமுறைக்கு ஆளானபோது அன்னா எங்களைப்போலீசு பழிவாங்குகிறது எனச் சொல்லவில்லை. கண்டுகொள்ள வேண்டாமெனச் சொல்லிவிட்டார். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் ? இளைஞர்கள் தில்லியை ரணகளப்படுத்தியிருப்பார்கள். உயிர்ச்சேதம் நடந்திருக்கும்.//

இந்தியாவில் அண்மைக்காலத்தில் குஜ்ஜர்கள் போராட்டம் உட்பட பல வன்முறைகள் வெடித்திருக்கின்றன. அந்தப் போராட்டங்களை ஊடகங்களோ, இந்தியாவின் பிற பகுதிகளில் வசிக்கிறவர்களோ ஏற்றுக்கொள்ளவோ போற்றிப்பேசவோ இல்லை.

இவ்வளவு ஏன், ஐரோம் சர்மிளாவின் பத்தாண்டு உண்ணாவிரதத்தை விடவா அண்ணாவின் போராட்டம் அஹிம்சையானது? அதன் கருப்பொருள் பெரும்பாலான இந்தியர்களுக்குத் தொடர்பில்லாததாலும், அவருக்குப் பின்னால் ஊடகங்களின் துணையில்லாததாலும், அண்ணாவுக்கு இருக்கிற அளவு நிதிவசதிபடைத்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இல்லாததாலும், நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் நேரடி ஆதரவு இல்லாததாலும்தான் ஐரோம் சர்மிளா சானுவின் போராட்டம் இன்றுவரை அறியப்படாமல் இருக்கிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல், சும்மா அஹிம்சை, சத்யாகிரஹம் என்றெல்லாம் சொல்வதை ஏற்பதற்கில்லை.

ஜன் லோக்பாலுக்கான போராட்டத்தில் சிறிதளவு வன்முறை ஏற்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அதை நிராகரித்திருப்பார்கள். சத்யாகிரஹம் என்ற லேபிள் இருந்த ஒரே காரணத்தால்தான், இது ஊடகங்கள் மற்றும் ஒத்த கருத்துடைய குழுக்கள் ஏற்றன. வன்முறையின் சிறு அறிகுறி தென்பட்டிருந்தாலும் பொதுமக்கள் வந்திருக்க மாட்டார்கள்.

//எனவேதான் அன்னாவின் செயல்கள் காந்தியம் என போற்றப்படுகின்றன. சோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.//

ராம்லீலா மைதானத்தில் என்னென்ன நிகழ்ந்தன என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கின்றன. தில்லியில் என்னென்ன நிகழ்ந்தது என்று உண்ணாவிரதத்தின் எட்டாவது நாள் முதலாக சில தொலைக்காட்சிகளும் சொல்ல ஆரம்பித்திருந்தன. ’அண்ணாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அரசுதான் பொறுப்பு,’ என்று மக்களைத் தூண்டிவிடுகிற முட்டாள்தனமான பேச்சுக்களும் மேடையில் கேஜ்ரிவால் போன்றவர்களால் நடந்தேறின. ஆகையால், இதற்கு அஹிம்சை என்ற லேபிளை ஓவராக சுற்ற முயலாதீர்கள்! :-)

settaikkaran said...

//காவ்யா said...

சோவின் தலையங்கம் வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கும் அன்னா தான் மோடிக்குக் கொடுத்த ஆதரவை - மோடி சிறந்த நிருவாகி. அவர் குஜராத்தை நன்றாகக்கொண்டு போகிறார் - என்றச் சான்றிதழை வாபஸ் வாங்காமலிருந்திருந்தால். சோவுக்கு பெரிய ஏமாற்றம். அதை ஏற்கனவே துக்ளக்கில் எழுதிவிட்டார். சோவின் தெய்வமல்லவா மோடி?//

சோவை விடுங்க! அந்த மோடியின் கட்சியின் ஆதரவை இரவோடு இரவாகப் போய்ப் பெற்றவர்கள்தானே அண்ணாவின் பஜனை கோஷ்டியினர்? விஸ்வ ஹிந்து பரிஷத் கூட ’தினமும் 20000 பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போட்டோம்,’ என்று அறிவிப்பே செய்ததே? இது மட்டுமா? கிராந்திகாரி மனுவாதி மோர்ச்சாவின் அடிபொடிகள்தானே ராம்லீலாவில் உண்ணாவிரத ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்கள்?

சுஷ்மா ஸ்வராஜே கூட, "India Against Corruption என்பதே பெருவாரியான RSS உறுப்பினர்களால் துவங்கப்பட்டது தான்,’ என்று அறிக்கை விட்டாரே? உங்க ஆளுங்க யாராவது மறுப்புத் தெரிவித்தார்களா? ஆக, உங்க கணக்குப்படி சோ அண்ணாவை ஆதரிக்கத்தான் அதிகமான காரணம் இருக்கிறது. புரிகிறதா? :-)

//இத்தலையங்கத்தில், அன்னாவின் இறுதி 3 கோரிக்கைகளப்பற்றி சோ அவை பாராளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டிவிட்டதால் நீர்த்துவிட்டதாக எழுதுகிறார். தவறு. பாராளுமன்றம் 3 கோரிக்கைகளையும் இன் ப்ரின்ஸிபல்லின் ஏற்றுக்கொண்டு அதைப் பாராளுமன்றக்குழுவுக்கு அனுப்பிவிட்டது. அக்குழ இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.//

சத்தியமாக உங்கள் போன்றவர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சி.என்.என்-ஐ.பி.என்னில் கரண் தபருக்குக் கொடுத்த பேட்டியில் பா.ஜ.க.வின் அருண் ஜேட்லீ என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ?

"அது தீர்மானம்(resolution) அல்ல; உணர்வு அறிக்கை (Statement of sense of house). அது ஸ்டாண்டிங் கமிட்டியைக் கட்டுப்படுத்தாது (will not be binding on the standing committee)."


ஆக, இந்த மூன்று அம்சங்கள் குறித்த உணர்வு அறிக்கையைக் கூட ஸ்டாண்டிங் கமிட்டி சீரியஸாக எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த லட்சணத்தில் ’வெற்றி வெற்றி,’ என்று கூப்பாடு போடுவதைப் பார்த்து என் போன்றவர்கள் சிரிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது? :-))))

//மேலும் பாரளுமன்றம் தாம் கோரிக்கைகளை ஏற்றுவிட்டதாகவும் அவைகளை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான் பிரச்சினை; அதை குழு ஆராயவேண்டுமேன்றுதான் சொல்லியிருக்கிறது.//

once again, முந்தைய பாராவே இதற்கும் பதில்! :-)

//ஆக கோரிக்கைகள் நிராகரிக்கப்படவில்லை. அவை நிறைவேற்றப்படும் வழிகள்தான் ஆராயப்படும் குழுவால்.சோ அக்கோரிக்கைகளே அம்பேல் என்று எழுதுகிறார்.//

Devil's Advocate பார்க்கிறவரையில் வேண்டுமானால், சோ அப்படி எண்ணியிருக்கலாம். இப்போது எனக்கும் தெளிவாகி விட்டது. அருண் ஜேட்லி சொல்வதைப் பார்த்தால், முக்கிய எதிர்க்கட்சியே கூட அண்ணாவின் மூன்று கோரிக்கைகளுக்குப் பட்டை நாமம் சாத்தியாகி விட்டது. :-)))

இன்று இரவு மீண்டும் ஒளிபரப்பாகிறது. பார்த்து மகிழுங்கள்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)))))))))))))))

settaikkaran said...

//தில்லி அரசு சிலநாட்களுக்கு முன் 'அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வேலைகளுக்கும் எவ்வளவு நாட்களில் முடிக்கப்படவேண்டும். முடிக்காவிட்டால ஊழியருக்கு என்ன தண்டனை' என்று அறிவிப்பு சிட்டிசன்ஸ் சார்டர் வெளியிட்டு அனைவரையும் அசத்திவிட்டது. போன வாரம் செய்தித்தாள்களைப்படித்து தெரிந்துகொள்ளுங்கள்.//

நான் போனவாரம் செய்தித்தாள்களைப் படிப்பது இருக்கட்டும். எனது முந்தைய இடுகைகளை நீங்கள் படியுங்கள். இதில் ஒரு சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை என்று எழுதியிருப்பதோடு, இந்த சிட்டிசன்ஸ் சார்ட்டர் எந்தெந்த மாநிலங்களில் இருக்கின்றன என்ற விபரங்களையும் "என்னது, ஜெயிச்சுட்டோமா?’ என்ற எனது இடுகையில் எழுதியிருக்கிறேன். :-)

//சிட்டிசன்ஸ் சார்டர்ஸ் ஒரு சாத்தியம் என்பதை ஷீலா திக்சித் அரசு நிரூபித்துவிட்டது. சோ சாத்தியமில்லையென்கிறார்.//

நானும் சாத்தியம் என்று சொல்கிற கட்சிதான்! :-)

இந்த விஷயத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், நிறைவேற்றுவதில் சிரமமேயிருக்காது என்றுதான் பலமுறை எழுதியிருக்கிறேன் தெரியுமோ? :-)

நிரூபன் said...

அண்ணாச்சி, கோவிச்சுக்க வேணாம்...

இந்த விடயத்தில் நான் அம்பாலிக்கா போயிட்டு, அடுத்த பதிவில் வாரேன்.
எனக்கு அரசியல் பிடிக்கும், அரசியல் மொக்கை எல்லாம் எழுதுவேன், ஆனால் ஹசாரே விடயத்தில் பந்து எந்தப் பக்கம் உருளுது என்பது தான் புரியவே மாட்டாங்குது பாஸ்.