Monday, August 15, 2011

"உண்ணா" ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

மத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதிய வரலாறு படைத்தது என்பது, இன்று வடபழநி கோவிலில் காதுகுத்தி மொட்டையடித்துக் கொண்ட ஒருவயதுக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அண்ணாவின் உண்ணாவிரததுக்குப் பயந்து, பற்பல நிபந்தனைகளையெல்லாம் விதித்து, இப்போது "அனுமதியெல்லாம் கிடையாது," என்று தில்லி காவல்துறையின் மூலம் சொல்ல வைத்திருப்பது காங்கிரஸின் கடைந்தெடுத்த கையாலாகாத்தனம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எவ்வித நிபந்தனைகளுமின்றி அண்ணா ஹஜாரேயை அனுமதித்திருக்க வேண்டும். இம்முறை அண்ணாவின் உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் படுகேவலமாகத் தோல்வியடைந்திருக்கும். அதன்மூலம், அவருக்கு பல்பு கொடுக்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் அரசு தவற விட்டுவிட்டது.

ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில், வெறும் 6 தான் அண்ணாவின் பஜனைகோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன? "5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்று நாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது," என்றுதான் நேற்று காலைவரையில் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்," என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், இன்று திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள் என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்ப விதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள். முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும், முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும் உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான் அண்ணா ஹஜாரேயின் குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!

ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று அண்ணாவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்று சட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும். அப்படியே இருந்தாலும், அதுகுறித்து அண்ணா ஹஜாரே கவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவே அவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

பி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணா ஹஜாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது. "சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமான தீர்ப்புக்களைப் பெற முடியும்," என்று அப்போது அண்ணா தெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை 2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப் பெற வைத்திருக்கிறார் என்பதையும் நினைவூட்ட வேண்டும்)

அதே போல "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த் கமிட்டியால் அண்ணா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை நேற்று காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும், அண்ணாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று அடுத்த சவடால்!

அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அண்ணா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அண்ணாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?

இவருக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்ன யோக்யதை இருக்கிறது? அதை மதிப்பவர்களாயிருந்தால், பாராளுமன்றக்குழுவுக்கு முன் சென்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இப்போது இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன? அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏகடியம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?

சரி, இந்த மனிதருக்கு அரசியல் சட்டம், பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவர் கூறிக்கொள்வது போல உண்மையிலேயே இவர் காந்தீயவாதியா?

இவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறிய கிராமத்தில் தன்னிறைவு ஏற்பட அண்ணா ஹஜாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பதும் நிஜம். ஆனால், ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை ஏன் ஊடகங்கள் வெளியிடாமல் இருக்கின்றன?

யாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம் அண்ணா ஹஜாரே! "இப்படிச் சொன்னால்தான் இவர்கள் திருந்துவார்கள்," என்பது இவரது வாதம். நான் சொல்லவில்லை; ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.

இவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவ்வளவு ஏன், ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார். கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார். தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர் வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.

ராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரது பிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதி வருகிறார்கள்.

இதுவா காந்தீயவாதம்? பெல்ட்டால் அடிக்கிறவரா அஹிம்சாவாதி?

காந்தி மட்டுமல்ல; மக்களால் பெரிதும் போற்றப்படுகிற எந்தத் தலைவர்களைப் பற்றியும் எழுத எனக்கு எப்போதும் தயக்கமுண்டு. இருந்தாலும், கேட்கிறேன்!

காந்தி எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்தார்? மூன்று முறை! அதில் எத்தனை முறைகள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? ஒரு முறை கூட இல்லை! அவர் பிளவுபட்ட சமுதாயங்களை ஒன்றிணைக்க உண்ணாவிரதம் இருந்தார். இந்த அண்ணா ஹஜாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்று விரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒரு எதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.

அது உண்மைதானே?’ என்று கேட்பவர்களுக்கு! என்ன செய்யலாம்? 120 கோடி மக்களும் கடலில் போய் விழுந்துவிடலாமா? இல்லை மீண்டும் பிரிட்டிஷாரை வந்து ஆளச்சொல்லலாமா? அல்லது, ஜன் லோக்பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?

"ஆ.ராசா போன்றவர்களைத் தூக்கில் போட வேண்டும்," இது அண்ணா ஹஜாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து. அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதே கூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா? அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட், மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா? இதுவா காந்தீயவாதியின் லட்சணம்?

"ஹிஹிஹி! அதுலே பாருங்க, நான் காந்தீயவாதிதான். ஆனால், அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன்," என்று இதற்கு நேற்று ஒரு விளக்கம் வேறு!

சத்ரபதி சிவாஜியின் கொள்கை என்றால் சிவசேனாவின் கொள்கையென்று வைத்துக்கொள்ளலாமா? அப்படியென்றால், திக்விஜய் சிங் சொன்னது போல இது சங்க்பரிவாரின் ஆசீர்வாதம் பெற்ற போராட்டமா? (ஆர்.எஸ்.எஸ்.ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டது என்பதையும் நினைவில் கொள்க!)

சுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின் முதலமைச்சர் மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில் விடுதலையானவர் அல்லவா நமது காந்தீயவாதி அண்ணா ஹஜாரே?

பின்னாளில் நரேந்திர மோதியைப் பாராட்டி கடிதம் எழுதினார். "நரேந்திர மோதியைப் பாராட்டினால் இந்தப் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை," என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும், மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோதியின் ஆட்சியை விமர்சித்து "நான் ரொம்ப நல்லவனாக்கும்," என்று எல்லாரையும் நம்ப வைக்க முயன்ற இந்தப் போலியா காந்தீயவாதி?

ராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா ஹஜாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபா ஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும் இருந்திருக்கிறார்கள். வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள்! அண்ணா ஹஜாரேயின் ஒரு தம்பிடி கூட செலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான் தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணா ஹஜாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

காங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார் ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும் ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்து காரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

இதெல்லாம் தான் காந்தீயத்தின் அடையாளங்களா?

ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதை விட ஊழலை ஒழிக்க புகாரி ஹோட்டலில் கிடைக்கிற பல்குத்தும் குச்சியைப் பயன்படுத்தலாம்.

ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.

"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."

ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இது யாரை ஏமாற்றுகிற வேலை?

Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?

ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத் மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்க முடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி போன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.

ஏன்? ஏன்?? ஏன்???

சரி, அரசு கொணர்ந்துள்ள லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (Non Government Organisations) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன. ஆனால், அவற்றை அண்ணா ஹஜாரேயின் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்?

மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல் மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானது கூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.

இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அண்ணா சொல்வது ஏன்?

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஒழிக்க அண்ணா ஹஜாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!

ஏப்ரல் மாதம் தொடங்கி, இன்று வரையில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தேடுவதில் செலவழித்த நேரத்தில், ஒருவராவது ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பார்களா? இம்முறை உண்ணாவிரதம் முடிந்ததும், அடுத்த உண்ணாவிரதம் வரைக்கும் கைகளைக் கட்டிக்கொண்டு, "அண்ணா என்ன சொல்கிறார் பார்ப்போம்?" என்று காத்திருக்கப் போகிறார்களா?

இன்னும் ஒரே ஒரு டிராபிக் ராமசாமி தானே இருக்கிறார்?

தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவை நடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி, பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்ற அடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம் போட்டு, பேனர் தூக்கியது தவிர என்ன கிழித்திருக்கிறார்கள்?

இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்ற பெருமூச்சுடன்! ஆனால், அண்ணாவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறு என்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டாமா?

அனேகமாக, இது அண்ணாவைப் பற்றி நான் எழுதுகிற கடைசி இடுகையாய் இருக்கும். வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள், எத்தனை பேர் follow செய்வதை நிறுத்துவார்கள், எத்தனை பேர் தனிமடலில் திட்டப்போகிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.

ஊழலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. கொடுக்கல்-வாங்கல்! முதலில் கொடுப்பதை நிறுத்துவோம் என்று உறுதி மேற்கொண்டாலொழிய, ஊழல் ஒழியவே ஒழியாது - எத்தனை ஆயிரம் லோக்பால் சட்டங்கள் வந்தாலும் சரி!

பி.கு: இதை பதிவிடும் நேரத்தில் ராஜ்காட்-டில் அண்ணா அமர்ந்திருப்பதாக அறிகிறேன். பாபா ராம்தேவ் விஷயத்தில் நடைபெற்றதுபோல எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அண்ணாவின் உண்ணாவிரதம் அமைதியாக நடந்தேற விரும்புகிறேன். அப்போதுதான், அடிக்கடி இது போன்ற கேலிக்கூத்துகளை வேடிக்கை பார்க்க முடியும்.


119 comments:

Robin said...

நம் நாட்டிற்கு பிடித்த கேடு: ஊழலை எதிர்ப்பவரும் ஊழல்வாதியாகத்தான் இருக்கிறார்.

Anonymous said...

லோக்பால் வளையத்திற்குள் அன்னா அணி குறிப்பிட்ட துறைகளை அரசு வர விடாமல் தடுப்பதால்தான் அவர் மீதான பொதுமக்களின் நல்லெண்ணம் மேலோங்குகிறது. அன்னா நல்லவரோ கெட்டவரோ..அவர் சொன்ன சில நல்ல விஷயங்களை கேட்காமல் நம்மை திசை திருப்பும் காங்கிரசின் போக்கு சத்தியமாக பிடிக்கவில்லை சேட்டை!!

Jey said...

சேட்டை கபில்சிபலுக்கு உன்னை மாதிரி ஆள் பி ஏ - வேணும்னு தேடிட்டிருக்காராம். நீரும் அதுக்கு சரியான ஆளாதான் தெரியுரீரு. வாழ்த்துக்கள்.

Unknown said...

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஒழிக்க அண்ணா ஹஜாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை! //

மொத்ததில் என்னதான் சொல்லவர்றீங்க. ரஜனிகாந்த் இல்லை விஜயகாந்த வந்தா ஊழல் ஒழியுமா? இல்லையென்றால் யார்தான் ஊழலை ஒழிக்க முடியும்????????????

Jey said...

மைனஸ் ஓட்டு என்னோடதுதான் சேட்டை. என்ன.. நல்லா பதிவுகள் எழுதுர உம்ம பதிவுக்கு போடவேண்டியதாப் போச்சேனுதான், கொஞ்சம் வருத்தம்.

இந்த மாதிரி சமுதாயப் பிரச்சினையப் பத்தி ப்திவு போடும் போது இந்த கமெண்ட் மாடுரேசன் எடுத்துரனும் சேட்டை... அப்பதான எதி கருத்துகளுக்கும் இடம் குடைக்கும்...

settaikkaran said...

//Robin said...

நம் நாட்டிற்கு பிடித்த கேடு: ஊழலை எதிர்ப்பவரும் ஊழல்வாதியாகத்தான் இருக்கிறார்.//

விஷயம் அதுவல்ல! குறிக்கோளே ஊழல் எதிர்ப்பு இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது! எனக்கு மட்டுமல்ல, பல பத்திரிகைகளுக்கே (நல்லகாலமாக) வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. மிக்க நன்றி!

settaikkaran said...

//சிவகுமார் ! said...

லோக்பால் வளையத்திற்குள் அன்னா அணி குறிப்பிட்ட துறைகளை அரசு வர விடாமல் தடுப்பதால்தான் அவர் மீதான பொதுமக்களின் நல்லெண்ணம் மேலோங்குகிறது.//

மக்களை பெரிதாகக் குற்றம் சொல்வதற்கில்ல்லை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். நானே அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக இருந்தவன் தான். :-)

//அன்னா நல்லவரோ கெட்டவரோ..அவர் சொன்ன சில நல்ல விஷயங்களை கேட்காமல் நம்மை திசை திருப்பும் காங்கிரசின் போக்கு சத்தியமாக பிடிக்கவில்லை சேட்டை!!//

அவரது சட்டவரைவிலும் முழுமையில்லையே நண்பரே! அதைத்தானே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்? இன்னும் இருக்கிறது என்றாலும் நீளம் கருதி எழுதாமல் விட்டிருக்கிறேன். மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//Jey said...

சேட்டை கபில்சிபலுக்கு உன்னை மாதிரி ஆள் பி ஏ - வேணும்னு தேடிட்டிருக்காராம். நீரும் அதுக்கு சரியான ஆளாதான் தெரியுரீரு. வாழ்த்துக்கள்.//

யோசனை நல்லாத்தானிருக்கு! அவரு என்னை கூப்பிடணுமே? :-))
அப்பாலே, அண்ணா ஹஜாரேயை நம்பி ஆத்துல இறங்குறதுக்கு நான் அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாமுன்னு இருக்கிற உத்தியோகத்தைப் பிடிச்சுக்கிட்டு திருப்தியா இருப்பேன்! :-)

//மைனஸ் ஓட்டு என்னோடதுதான் சேட்டை. என்ன.. நல்லா பதிவுகள் எழுதுர உம்ம பதிவுக்கு போடவேண்டியதாப் போச்சேனுதான், கொஞ்சம் வருத்தம்.//

ஆஹா, நான் தான் ஓட்டு பத்தி கவலையில்லேன்னு பளிச்சின்னு பேனரே போட்டிருக்கிறேனே? இப்பல்லாம் நான் ஓட்டு, ரேங்க் இது பத்தியெல்லாம் சுத்தமா கவலைப்படுறது கிடையாது. எனக்குத் தெரிஞ்சதை எழுதுறேன். அம்புட்டுத்தேன்! :-)

//இந்த மாதிரி சமுதாயப் பிரச்சினையப் பத்தி ப்திவு போடும் போது இந்த கமெண்ட் மாடுரேசன் எடுத்துரனும் சேட்டை... அப்பதான எதி கருத்துகளுக்கும் இடம் குடைக்கும்...//

எல்லாரும் உங்களை மாதிரி நாகரீகமா பின்னூட்டம் போடுறவங்களா இருந்தா எப்பவோ பண்ணியிருப்பேன். இல்லியே? :-))

சுதந்திரத்தை யாரும் தவறா உபயோகப்படுத்த நான் ஏன் அனுமதிக்கணும்?

மிக்க நன்றி! மைனஸ் ஓட்டுக்கு டபுள் தேங்க்ஸ்! :-)

Jey said...

/// "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர்.//

சேட்டை உமக்கு நீயே தலைவராக்கிகிட்டு,உமது அல்லக்கைகள் நாலு பேரை கூட வச்சிகிட்டு, ஊழலுக்கு எதிரா நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தா.. நான் உட்பட பலபேர் உங்கூட வந்து உக்காரதான்யா செய்வோம், நீர் நல்லவரா கெட்டவரான்ரது இந்த இடத்துல ரொம்ப முக்கியம் இல்லை. ஏன்னா இன்னைக்கி நாட்ல அவ்வளவு ஊழல் பெருகிடுச்சி. ஒருவருசமா நீரும் கபில் சிபல், மனீஷ்,சிங்வி, முகர்ஜின்னு என்ன காமடி பண்ணிட்டிருக்காங்கண்ணு எல்லோரும் பாத்துகிட்டுதான இருக்கோம். இப்ப கூடுர கூட்டம் தைபட்ட அண்ணா ஹசாரேவுக்கு இல்லைப்பா, அவர் சொல்ர நோக்கத்துக்காக. நாளைக்கே ஒரு கேனத்தனமான ஒரு விசயத்துக்கு அவர் உண்ணா விரதம் இருக்கட்டும், மக்கள் அல்வாதான் குடுப்பாங்க.

உங்களுக்கே உள்ளுக்குள்ள நாலு பேரு வந்து இந்த பதிவப் படிச்சி காறித்துப்புவாங்கனு தெரியும், இருந்தாலும் அரசியல்ல இதெல்லாம் சகசமப்பான்ற ரேஞ்சுக்கு எழுதிட்டீக.

உங்களப் பிடிக்குன்றதுக்காக இதுக்கு முன்னாடி இந்த போராட்டத்தை பத்தி எழுதுனப்ப ஒன்னும் கருத்து சொல்லாம விட்டுட்டேன் (ங்கொய்யாலே அடங்குடா அப்படியே கருத்து சொல்லிட்டாலும்!!), ஏனோ இன்னிக்கி முடியல...

settaikkaran said...

//கே. ஆர்.விஜயன் said...

மொத்ததில் என்னதான் சொல்லவர்றீங்க. ரஜனிகாந்த் இல்லை விஜயகாந்த வந்தா ஊழல் ஒழியுமா? இல்லையென்றால் யார்தான் ஊழலை ஒழிக்க முடியும்????????????//

நீங்க இடுகையை முழுமையாகப் படித்திருந்தால், அதற்கு விடையை இறுதியில் தந்திருக்கிறேன் என்பது புரியும். இன்னொரு விஷயம் - ஊழலை முழுமையாக அழித்த நாடுகள் அனேகமாக இல்லை. அதைக் குறைக்க, அரசும் பொதுமக்களும் சரிசமமான பொறுப்பை ஏற்றாக வேண்டும். ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்லி பொதுமக்களை போகாத ஊருக்கு அழைத்துச் செல்பவர்களிடமிருந்து தப்பித்து நாமே சுயமாக முதலடியை எடுத்து வைக்க வேண்டும்.

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Jey said...

உமக்கு நீயே தலைவராக்கிகிட்டு,உமது அல்லக்கைகள் நாலு பேரை கூட வச்சிகிட்டு, ஊழலுக்கு எதிரா நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தா.. நான் உட்பட பலபேர் உங்கூட வந்து உக்காரதான்யா செய்வோம்,//

அதைத்தான் நானும் சொல்லியிருக்கேன்; நானும் செஞ்சேன். தக்கர் பாபா வித்யாலயாவுலே ஒரு நா முழுக்கா லீவு போட்டு உட்கார்ந்தேன். அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவா இடுகையும் எழுதினேன்.

//நீர் நல்லவரா கெட்டவரான்ரது இந்த இடத்துல ரொம்ப முக்கியம் இல்லை. ஏன்னா இன்னைக்கி நாட்ல அவ்வளவு ஊழல் பெருகிடுச்சி.//

அது உங்க விருப்பம் நண்பரே! :-)

நான் அவரோட குறிக்கோள் ஊழல் ஒழிப்புதானான்னு மட்டும் பார்க்கிறேன். இல்லேன்னு என்னாலே கற்பூரத்தை அடிச்சு சத்தியம் பண்ண முடியும்.

அப்புறம், காங்கிரஸ் ஊழலைப் பத்தி முதல் பாராவுலேயே சொல்லிட்டேன். ஆனா, அதுக்கு இது தான் சரின்னு என்னாலே ஏத்துக்க முடியாது. அம்புட்டுத்தேன்!

////உங்களுக்கே உள்ளுக்குள்ள நாலு பேரு வந்து இந்த பதிவப் படிச்சி காறித்துப்புவாங்கனு தெரியும், இருந்தாலும் அரசியல்ல இதெல்லாம் சகசமப்பான்ற ரேஞ்சுக்கு எழுதிட்டீக//

அதுக்கெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. என்னோட கருத்தை ஏத்துக்க முடியாதவங்களை நான் வற்புறுத்த முடியாது. இது ஜனநாயகம். துப்பினாத் துப்பட்டும்! I am entitled to MY opinion! :-)

Anonymous said...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...

settaikkaran said...

//Reverie said...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்..//

இனிய சுதந்திரதின வாழ்த்துகள்! மிக்க நன்றி நண்பரே! :-)

Unknown said...

நாடு முழுவதும் ஊழல் உளுத்து போய்விட்ட நிலையில் இனி யார் தான் ஊழலுக்கு எதிராக போராட முடியும்?

Unknown said...

இரண்டு பக்கத்தையும் சாடி இருக்கிறீர்கள்.
எதிர்க்கும் கட்சிகள் வலுவாக இல்லாத சூழ்நிலையில், அன்னா போன்றவர்களை கண்டு மட்டும் தான் தற்போதைய சூழலில் காங்கிரஸ் பயப்படுகிறது. அன்னாவுக்கு எதிரான பார்வைகள், வாதங்கள், காங்கிரசுக்கு சாதகமாக போய்விடக்கூடாது என்பது என் கருத்து.

settaikkaran said...

//பாரத்... பாரதி... said...

நாடு முழுவதும் ஊழல் உளுத்து போய்விட்ட நிலையில் இனி யார் தான் ஊழலுக்கு எதிராக போராட முடியும்?//

இப்போது மிகப்பெரிய ஊழல்களை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. உச்சநீதி மன்றம் விழிப்பாக, அரசுக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கிறது. தலைமைத் தணிக்கை அதிகாரிகள் அரசுத்துறைகளின் வண்டவாளத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, சாமானிய மனிதன் அரசைப் பணியவைக்க முடிகிறது. முன்போல ஒரு கட்சியே அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிற சூழலும் காணாமல் போய்விட்டது. தேர்தல் ஆணையும் சிறப்பாக இயங்குகிறது. ஊழல் என்ற பூதம் அச்சுறுத்தினாலும், மேற்கூறியவை நம்பிக்கை தரக்கூடியவை தானே?

இத்துடன் பொதுமக்களாகிய நானும் நீங்களும் சற்று முன்னெடுத்து சென்றால், அவசியம் மாறுதல்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.

//இரண்டு பக்கத்தையும் சாடி இருக்கிறீர்கள். எதிர்க்கும் கட்சிகள் வலுவாக இல்லாத சூழ்நிலையில், அன்னா போன்றவர்களை கண்டு மட்டும் தான் தற்போதைய சூழலில் காங்கிரஸ் பயப்படுகிறது.//

ஹாஹா! இப்போதைய மத்திய அரசை யாரெல்லாம் மிரட்டினார்கள், மிரட்டி வருகிறார்கள் என்று தெரியாதா நமக்கு? அவ்வளவு பலவீனமான அரசு தில்லியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறது. :-)

//அன்னாவுக்கு எதிரான பார்வைகள், வாதங்கள், காங்கிரசுக்கு சாதகமாக போய்விடக்கூடாது என்பது என் கருத்து.//

எனது முந்தைய இடுகைகளிலும் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். அண்ணா ஹஜாரே முதலிலேயே எல்லா எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி, அவரது லோக்பாலுக்கு ஆதரவு கேட்டிருந்தால், காங்கிரஸ் முழிபிதுங்கிப் போயிருக்கும். ஆனால், அதைச் செய்யாததோடு, தேவையற்ற பலவற்றை அண்ணா செய்ததனால்தான், இன்று காங்கிரஸ் துணிந்து அவரது உண்ணாவிரதத்துக்கு அனுமதியை மறுத்திருக்கிறது. மிக்க நன்றி நண்பரே! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த இடுகைக்கு எனது முழு ஆதரவும் உண்டு! ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதிலும், காங்கிரசின் கையாலாகத்தன்மையிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் சிலர் சேர்ந்து கொண்டு அரசை ப்ளாக்மெயில் செய்து ஒரு சட்டத்தை கொண்டுவரமுடியும் என்ற தோற்றம் வருவது இந்தியா போன்ற சாதி, மதவாதக் கட்சிகளும், சுயநல அரசியல்வாதிகளும் நிறைந்த ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.சேட்டைக்காரன்.

எல்லா விஷயங்களையும் ஒரே பதிவில் அடக்கி உண்ணா ஹசாரே எனும் உயர்ந்த மாலையை உலுக்கு உலுக்கு என்று உலுக்கி நார் நாராக்கி விட்டீர்கள்.

செமை நெத்தியடி பதிவு..! கலக்கிட்டீங்க..!

எப்போது இவர் அரசியல் வாதிகளிடம் தஞ்சம் அடைந்தாரோ அப்போதே நான் தெளிவு பெற்று, அது பற்றி.....

///ஊழலை ஒழிக்க புறப்படுவோர் எவராயினும் உண்மையிலேயே அவருக்கு அதுதான் நோக்கமா என்றும் உரசிப்பார்ப்போம். அதன் பின்னர் அவர்களை ஆதரிப்போம். இல்லையேல் அண்ணா ஹசாரே என்ற மண்குதிரையை நம்பி ஊழல் ஒழிப்பு எனும் காட்டாற்றில் இறங்கிய கதைதான்..!///

....மே மாசமே இப்படி ஒரு பதிவும் போட்டு விட்டேன் சகோ..!

சி.பி.செந்தில்குமார் said...

என்னண்ணே, நீங்களும் மைனஸ் ஓட்டு வாங்க ஆரம்பிச்சுட்டீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

பல புதிய தகவல்கள். ஒரு சமூக விழிப்புணர்வுப்பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

Siva said...

நல்ல பதிவு. அன்னாவின் இன்னொரு பக்கம் இப்படித்தான் இருக்கும் என நினைத்தேன். எதற்கெடுத்தாலும் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி, உண்ணாவிரதம் என்ற பதத்தையே கேலிக்குள்ளாக்கிவிட்டார்.

உண்மையில் லஞ்சம் ஒழிய லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவோம்.

சௌமியா said...

Hats off Settai, One of your best written postings in recent times. I wish you could have avoided some hard hitting lines but can't help appreciating the way you have put across the real picture nevertheless.

Anonymous said...

காங்கிரஸ் என்னும் பிரம்மாண்டமான திருடன்,120 கோடி மக்கள் வசிக்கும் நாட்டையே பின்னுக்கு தள்ளும்போது,சின்ன திருடன் அன்னாவை கொண்டாடுவதில் தவறில்லை.சின்ன திருடன் அன்னாவிடம் அதிகாரம் இல்லை.மிகப்பெரிய திருடன் காங்கிரசிடம் இந்தியாவை கொள்ளையடிக்கும் அதிகாரம் இருக்கிறது...ஊழல்,நாட்டை சுரண்டும் வில்லனை இன்னொரு வில்லன் கொண்டு அடிப்பது தவறில்லை.அன்னா தவறுகளை பூதகரமாக்குவது சரியில்லை...ஊழலுக்கு எதிராக மக்களையும் போராட வைத்த அன்னாவின் தூண்டுதல் நல்ல விசயம்..அதற்காக அவருக்கு என் பாராட்டு.உங்கள் கட்டுரை பல விசயங்களை யோசிக்க வைத்தது நன்றி

Anonymous said...

ஆனால் சிலர் சேர்ந்து கொண்டு அரசை ப்ளாக்மெயில் செய்து ஒரு சட்டத்தை கொண்டுவரமுடியும் என்ற தோற்றம் வருவது இந்தியா போன்ற சாதி, மதவாதக் கட்சிகளும், சுயநல அரசியல்வாதிகளும் நிறைந்த ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.//
உண்மை.நம் இந்திய பிரதமர் கண்டிப்பும்,துணிச்சலும்,செயலாற்றலும் இல்லாத ஒரு கோழை.இதனால் ஆ.ராசா கூட சுப்ரீம் கோர்ட்டில்,பிரதமருக்கு தெரிந்தே எல்லாம் நடந்தது என சொல்கிறார்.அன்னா விடமும் தவறு இருக்கிறது.இதை படித்தபின் மறுக்க முடியாது.

settaikkaran said...

//பாரத்... பாரதி... said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..//

உங்களுக்கு இந்த வரிகள் ஞாபகத்துக்கு வருவதுபோல, தில்லியில் நடப்பதைப் பார்த்து எனக்கு...

“ நெஞ்சில் துணிவுமின்றி நேர்மைத்திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி,” என்ற வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

//அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..//

உங்களுக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள் நண்பரே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த இடுகைக்கு எனது முழு ஆதரவும் உண்டு! ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதிலும், காங்கிரசின் கையாலாகத்தன்மையிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.//

வாங்க பானா ராவன்னா, இந்த இடுகைக்கு ஒத்த கருத்துடையவர்கள் நிறைய இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எழுதும்போதே இருந்தது.அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறீர்கள். :-)

// ஆனால் சிலர் சேர்ந்து கொண்டு அரசை ப்ளாக்மெயில் செய்து ஒரு சட்டத்தை கொண்டுவரமுடியும் என்ற தோற்றம் வருவது இந்தியா போன்ற சாதி, மதவாதக் கட்சிகளும், சுயநல அரசியல்வாதிகளும் நிறைந்த ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.//

கண்டிப்பாக, இது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும். இப்போதே இந்த போராட்டத்துக்கு பல சாயங்கள் பூசப்பட்டு வருவது கவலை தருவதாக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

Unknown said...

சேட்டை,

எனக்கு கொஞ்சம் புரியல உங்களுக்கு புரிஞ்சிருந்தா சொல்லுங்க .

1 சட்டத்தின் முன் எல்லோரும் சமம்ன்னு சொல்லுறாங்களே அது உண்மையா? அப்ப ஏன் இந்த சட்டத்துக்குள்ள அவர் வர மாட்டார் இவர் வர மாட்டார்ன்னு தட்டி கழிக்கிறாங்க

2. ஹஜாரே ஒரு ஊழல் பேயுன்னு வச்சுக்குவோம், அவர் சொல்ற மாதிரி சட்டம் போட்ட அவரையும் அந்த சட்டத்தை பயன்படுத்தி உள்ள தூக்கி போடலாமே!!?? அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள்?

முத்தரசு said...

இருக்கும் சட்டத்தை ஒழுங்கா நடை முறை படுத்தினாலே போதும் இது எல்லாம் சும்மா புப்ளிசிட்டி...

யோக்கியன் வாரான் சொம்பை எடுத்து உள்ளே வை என்ற பழமொழி தான் நினைவுக்கு வருதுப்பா...??

settaikkaran said...

//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.சேட்டைக்காரன்.//

உங்களுக்கும் எனது ஸலாம் சகோதரரே!

//எல்லா விஷயங்களையும் ஒரே பதிவில் அடக்கி உண்ணா ஹசாரே எனும் உயர்ந்த மாலையை உலுக்கு உலுக்கு என்று உலுக்கி நார் நாராக்கி விட்டீர்கள்.//

இதற்கு முன்னரும் ஒரு இடுகையும், நான்கு பகடிகளும் எழுதியிருந்தேன் என்றாலும், இப்போது நிலைமை உச்சகட்டத்தை எட்டியிருப்பதால், இதை எழுத நேரிட்டது.

//செமை நெத்தியடி பதிவு..! கலக்கிட்டீங்க..!//

மிக்க நன்றி!

எப்போது இவர் அரசியல் வாதிகளிடம் தஞ்சம் அடைந்தாரோ அப்போதே நான் தெளிவு பெற்று, அது பற்றி.....

///ஊழலை ஒழிக்க புறப்படுவோர் எவராயினும் உண்மையிலேயே அவருக்கு அதுதான் நோக்கமா என்றும் உரசிப்பார்ப்போம். அதன் பின்னர் அவர்களை ஆதரிப்போம். இல்லையேல் அண்ணா ஹசாரே என்ற மண்குதிரையை நம்பி ஊழல் ஒழிப்பு எனும் காட்டாற்றில் இறங்கிய கதைதான்..!///

....மே மாசமே இப்படி ஒரு பதிவும் போட்டு விட்டேன் சகோ..!//

மிகவும் மகிழ்ச்சி, இப்படி தனித்து சிந்திக்கிறவர்கள் இருக்கும்வரையில், கருத்து சுதந்திரத்தை நேர்முகமாய் பயன்படுத்தி, மாறுபட்ட கருத்துக்களைச் சொல்லலாம் என்ற எனது நம்பிக்கை மேலும் வலுக்கிறது. மீண்டும் நன்றி சகோதரரே!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

என்னண்ணே, நீங்களும் மைனஸ் ஓட்டு வாங்க ஆரம்பிச்சுட்டீங்க?//

வாங்க தல, நான் எதிர்பார்த்தது தான். எதிர்நீச்சல் போட முயலும்போது இது நடக்கக்கூடியது தானே? :-)

//பல புதிய தகவல்கள். ஒரு சமூக விழிப்புணர்வுப்பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு அடையாளம்.//

நிறைய மீதமிருந்தாலும், நீளம் கருதி கணிசமாய்க் குறைத்திருக்கிறேன் தல. உங்களுக்குப் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Siva said...

நல்ல பதிவு. அன்னாவின் இன்னொரு பக்கம் இப்படித்தான் இருக்கும் என நினைத்தேன். எதற்கெடுத்தாலும் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி, உண்ணாவிரதம் என்ற பதத்தையே கேலிக்குள்ளாக்கிவிட்டார்.//

அண்ணாவின் இன்னொரு பக்கத்தைப் பற்றி நானும் பெரிதாகக் கவலைப்படாமல் தானிருந்தேன். ஆனால், அவரது பேச்சு, செயல்பாடுகள் அவரது குறிக்கோள் மீதே எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாலேயே தொடர்ந்து அவரைப் பற்றி எழுத வேண்டி வந்தது.

//உண்மையில் லஞ்சம் ஒழிய லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவோம்.//

மிக்க மகிழ்ச்சி, அது தான் நாம் செய்ய வேண்டியது. மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சௌமியா said...

Hats off Settai, One of your best written postings in recent times.//

அப்படீன்னா, கொஞ்ச நாளா மோசமாகவும் எழுதியிருக்கேன்னு சொல்றீங்களா மேடம்? :-)

//I wish you could have avoided some hard hitting lines but can't help appreciating the way you have put across the real picture nevertheless.//

ஒப்புக்கொள்ளுகிறேன். சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். மிக்க நன்றி!

ராஜ நடராஜன் said...

ஜெ என்னை முந்திகிட்டாரே!மனிஷ் திவாரியை தூக்கிட்டு உங்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளாராகப் போட்டு விடலாம்.

நல்லது செய்ய நாலு பேர் முன்னுக்கு வந்தா நொள்ளைகள் கண்டு புடிச்சு காலை வாரி விட்டுடனும்.

இப்படியே இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது.

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

காங்கிரஸ் என்னும் பிரம்மாண்டமான திருடன்,120 கோடி மக்கள் வசிக்கும் நாட்டையே பின்னுக்கு தள்ளும்போது,சின்ன திருடன் அன்னாவை கொண்டாடுவதில் தவறில்லை.//

இது எப்படியிருக்கிறது என்றால், என் வீட்டுக்குள் ஓட்டைப் பிரித்து எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போகிற திருடனுக்கு, பேருந்தில் என்னிடம் பிக்-பாக்கெட் அடிப்பவன் எவ்வளவோ மேல் என்பது போலிருக்கிறது. :-)

//சின்ன திருடன் அன்னாவிடம் அதிகாரம் இல்லை.மிகப்பெரிய திருடன் காங்கிரசிடம் இந்தியாவை கொள்ளையடிக்கும் அதிகாரம் இருக்கிறது...ஊழல்,நாட்டை சுரண்டும் வில்லனை இன்னொரு வில்லன் கொண்டு அடிப்பது தவறில்லை.//

அப்படியென்றால், பாபா ராம்தேவை ஒன்றரையாவது காந்தி என்றும் அவர் இருந்த உண்ணாவிரதத்தை ஒன்றேமுக்காலாவது சுதந்திரப் போராட்டம் என்று சொல்லலாமா? :-)

93 வயது காந்தீயவாதி ஷம்புதத்தா ஷர்மா இதே லோக்பால் சட்டத்துக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, ஊடகமோ மக்களோ கண்டுகொள்ளவில்லை. ஆனால், அண்ணா ஹஜாரேவுக்கு மட்டும் சிவப்புக்கம்பளம் விரிப்பது ஏன்?

வில்லனுக்கு வில்லன் எதற்கு? ஒரு ஹீரோவே வந்தபோது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, ஹரி படத்தில் வருகிற வசனத்தைப் பேசி என்ன புண்ணியம்? :-)

//அன்னா தவறுகளை பூதகரமாக்குவது சரியில்லை...ஊழலுக்கு எதிராக மக்களையும் போராட வைத்த அன்னாவின் தூண்டுதல் நல்ல விசயம்..அதற்காக அவருக்கு என் பாராட்டு.//

அண்ணா தன்னை காந்தீயவாதி என்றும், இந்தப் போராட்டத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று சொல்லும்வரை அவரை விமர்சனம் செய்யவும், கேள்வி கேட்கவும் எல்லாருக்கும் உரிமையுண்டு. உங்களது விருப்பத்தையும், உரிமையையும் நான் மதிக்கிறேன்.

//உங்கள் கட்டுரை பல விசயங்களை யோசிக்க வைத்தது நன்றி//

மிக்க நன்றி சதீஷ்குமார்! :-)

settaikkaran said...

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

எனக்கு கொஞ்சம் புரியல உங்களுக்கு புரிஞ்சிருந்தா சொல்லுங்க//

புரிஞ்சிருந்தா என்பதை விடவும் தெரிஞ்சிருந்தா சொல்லுறேன் நண்பரே!

// 1 சட்டத்தின் முன் எல்லோரும் சமம்ன்னு சொல்லுறாங்களே அது உண்மையா? அப்ப ஏன் இந்த சட்டத்துக்குள்ள அவர் வர மாட்டார் இவர் வர மாட்டார்ன்னு தட்டி கழிக்கிறாங்க//

அதுதான் சொல்லிவிட்டேனே, அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்று? :-)

//2. ஹஜாரே ஒரு ஊழல் பேயுன்னு வச்சுக்குவோம், அவர் சொல்ற மாதிரி சட்டம் போட்ட அவரையும் அந்த சட்டத்தை பயன்படுத்தி உள்ள தூக்கி போடலாமே!!?? அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள்? //

ஆஹா, யாராவது இதைக் கேட்க மாட்டாங்களா என்று காத்திருந்தேன். :-)

உண்மை, அதனால் தான் NGO அமைப்புகளை இதற்குள் கொண்டுவரக் கூடாது என்று அண்ணா எதிர்ப்புத் தெரிவிக்கிறார். யார் வேண்டுமானாலும் உள்ளே போகலாம், ஆனால், தன்னை யாரும் ‘டச்’ பண்ணக்கூடாது என்பது அவரது வாதம். இது எப்படி இருக்கு?

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//மனசாட்சி said...

இருக்கும் சட்டத்தை ஒழுங்கா நடை முறை படுத்தினாலே போதும் இது எல்லாம் சும்மா புப்ளிசிட்டி...//

அதே! அதே! அண்ணா ஹஜாரே ஊடகங்களின் செல்லக்குழந்தை என்பதுதான் அப்பட்டமான உண்மை. :-)

//யோக்கியன் வாரான் சொம்பை எடுத்து உள்ளே வை என்ற பழமொழி தான் நினைவுக்கு வருதுப்பா...??//

அட, இது எங்க ஊருப்பக்கத்து சொலவடை ஆயிற்றே! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

ஜெ என்னை முந்திகிட்டாரே!மனிஷ் திவாரியை தூக்கிட்டு உங்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளாராகப் போட்டு விடலாம்.//

வைத்திருக்கும் வாதங்களுக்குப் பதில் சொல்லாமல், இப்படி மொட்டையாய் எழுதுபவர்களுடன் எதிர்வாதம் செய்ய தயாராயில்லை.

//நல்லது செய்ய நாலு பேர் முன்னுக்கு வந்தா நொள்ளைகள் கண்டு புடிச்சு காலை வாரி விட்டுடனும். இப்படியே இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. //

அது உங்களது கருத்து. மதிக்கிறேன். ஆனால், என் கருத்தில் எந்த மாற்றமுமில்லை. ஏனென்றால், உண்மையை வரிசையாய் எழுதியிருக்கிறேன். நன்றி! :-)

மாலதி said...

அன்னா நல்லவரோ கெட்டவரோ.. // இரண்டு பக்கத்தையும் சாடி இருக்கிறீர்கள்.//
அன்னா போன்றவர்களை கண்டு மட்டும் தான் தற்போதைய சூழலில் காங்கிரஸ் பயப்படுகிறது. அன்னாவுக்கு எதிரான பார்வைகள், வாதங்கள், காங்கிரசுக்கு சாதகமாக போய்விடக்கூடாது என்பது என் கருத்து.//என்கருத்தும்

ராஜ நடராஜன் said...

//இன்னொரு விஷயம் - ஊழலை முழுமையாக அழித்த நாடுகள் அனேகமாக இல்லை. அதைக் குறைக்க, அரசும் பொதுமக்களும் சரிசமமான பொறுப்பை ஏற்றாக வேண்டும்.//

சேட்டை!நீங்க என்ன மறுமொழி சொன்னீங்கன்னு திரும்ப வந்தேன்.நான் எந்தப் பதிவையும் படிக்காமல் பின்னூட்டமிடுவதில்லையென்று விரதம் வைத்திருக்கிறேன்:)

உங்களுடன் முழு விவாதத்தில் சொல்ல வேண்டியதை அன்னா ஹசாரே எதிர்ப்பு நிலை இந்தியாவுக்கு நல்லதல்ல என்று திருக்குறள் மாதிரி சொல்லியிருக்கிறேன்:)

இப்ப அடைப்பானுக்கு வந்துடலாம்.நீங்க சொல்ற அரசும் பொதுமக்களும் சரிசமமான பொறுப்பை ஏற்றாக வேண்டும் என்பதைத்தானே அன்னா ஹசாரே போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள்.

அன்னா ஹசாரே சொல்வதும் நீங்க சொல்ற மாதிரிதான்.100% ஊழலைக் குறைக்க முடியாவிட்டாலும் கூட முழுமையான லோக்பால் சட்டம் 60% முதல் 65% வரை ஊழலைக் குறைக்கும்.அப்படியில்லா விட்டால் கபில் சிபல் வீட்டுக்கு தண்ணீர் சுமக்கிறேன் என்று சவால் விடுகிறார் ஹசாரே.

இன்னும் விவாதிப்பேன்.ஆனால் கூகிளண்ணன் எப்ப பார்த்தாலும் உனக்கு வள வளக்கிறதே வேலையாப் போச்சுன்னு பின்னூட்டத்தை அனுமதிப்பதேயில்லை:)

ராஜ நடராஜன் said...

பதிவு போடலாம்ன்னு இருந்ததை உங்களுக்கே தாரை வார்க்கிறேன்.

இது தலைப்பு!

ஊழல் வாழ்க!இந்தியர்களைக் குழப்பிய காங்கிரஸ் வாழ்கவே!

இப்ப சரக்கு என்னன்னா

அன்னா ஹசாரேவின் லோக்பால் சட்டம் பற்றியும் ஆளும் காங்கிரஸின் லோக் பால் சட்டம் பற்றிய நிலைப்பாடுகளுக்குள்ள இழு பறிகளை ஏற்கனவே சொல்லியாகி விட்டது.லோக் பால் சட்டத்திற்கும் மேலாக அன்னா ஹசாரே குழுவினரை திசை திருப்பும் காங்கிரஸின் யுக்திகள் அப்பட்டமாகத் தெரிகின்றன.அன்னா ஹசாரே ஊழல்வாதியென்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரியும்,ஹசாரே செய்வது ஜனநாயக விரோதச் செயல் என்று கிரிமினல்(லாயர்)கபில் சிபலும் எப்படியெல்லாம் பூச்சாண்டி காட்ட முடியுமோ அப்படியெல்லாம் ஹசாரேவுக்கு ரத்தக் காட்டேறி படங்களைக் காட்டியும் பயப்படாத காரணத்தால் 5000 பேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும்.இல்லைன்னா தியேட்டருல உட்கார இடம் கிடைக்காது சொல்வதில் கூட ஒரு நியாயம் இருக்குது.காரணம் ஹசாரேவுக்கான மக்கள் ஆதரவு ரஜனி புதுப்படம் ரிலிஸ் மாதிரி என்பதை காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்திருக்கிறது.மேலும் அதிக கூட்டத்தை காவல் துறை கட்டுப்படுத்த முடியாமல் பாபர் மசூதி போன்ற அசம்பாவிதங்கள் நிகழலாம் என்ற முன்னெச்சரிக்கையும்,பின் புலத்தில் பி.ஜே.பி தூண்டி விடுகிறதோ என்ற சந்தேகமும் கூட ஆளும் கட்சிப் பொறுப்பில் இருப்பதால் காங்கிரஸ் தூரப்......பார்வை நோக்குகிறது என்று சொல்லலாம்.காங்கிரஸ் எங்கே அம்மணமாகிப் போகிறதென்றால் 5000 பேருக்கு 50 கார்,50 மோட்டர் பைக் மட்டுமே இலவச அனுமதி என்பதில் தெரிந்து விடுகிறது.

ISR Selvakumar said...

//முதலில் கொடுப்பதை நிறுத்துவோம் என்று உறுதி மேற்கொண்டாலொழிய, ஊழல் ஒழியவே ஒழியாது - எத்தனை ஆயிரம் லோக்பால் சட்டங்கள் வந்தாலும் சரி! //

சபாஷ்! மிகவும் தெளிவான கட்டுரை!

settaikkaran said...

//மாலதி said...

அன்னா நல்லவரோ கெட்டவரோ.. // இரண்டு பக்கத்தையும் சாடி இருக்கிறீர்கள்.// அன்னா போன்றவர்களை கண்டு மட்டும் தான் தற்போதைய சூழலில் காங்கிரஸ் பயப்படுகிறது.//

ஹையோ, காங்கிரஸ் யாரைப் பார்த்துப் பயப்படவில்லை. மகாராஷ்டிராவில் ஷரத்பவாரைப் பார்த்தும், மேற்கு வங்கத்தில் மம்தாவைப் பார்த்தும் பயப்படுகிறது. எதிர்க்கட்சிகளைப் பார்த்துப் பயப்படுகிறது. சி.பி.ஐ, சுப்ரீம் கோர்ட்டைப் பார்த்து பயப்படுகிறது. காரணம், அதன் மடியில் அவ்வளவு கனம் இருக்கிறது; காங்கிரஸின் பாவத்தைக் கழுவ ஆயிரம் கங்கைகள் போதாதே?

//அன்னாவுக்கு எதிரான பார்வைகள், வாதங்கள், காங்கிரசுக்கு சாதகமாக போய்விடக்கூடாது என்பது என் கருத்து.//என்கருத்தும்//

நடுநிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கிற இடுகை இது. இது போன்ற கருத்துக்கள் சாதகமா பாதகமா என்று நடுநிலையிலிருந்தே பாருங்களேன்! நன்றி! :-)

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

உங்களுடன் முழு விவாதத்தில் சொல்ல வேண்டியதை அன்னா ஹசாரே எதிர்ப்பு நிலை இந்தியாவுக்கு நல்லதல்ல என்று திருக்குறள் மாதிரி சொல்லியிருக்கிறேன்:)//

உங்களது திருக்குறளின் பொழிப்புரை "சேட்டை காங்கிரஸ் ஆள்," என்று வந்தது. அது இல்லை என்பது எனது பல முந்தைய இடுகைகளை வாசித்தவர்களுக்கும் (உங்களுக்குமே கூட!) தெரிந்திருக்கும். :-)

//இப்ப அடைப்பானுக்கு வந்துடலாம்.நீங்க சொல்ற அரசும் பொதுமக்களும் சரிசமமான பொறுப்பை ஏற்றாக வேண்டும் என்பதைத்தானே அன்னா ஹசாரே போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள்.//

நீங்கள் லோக்பால் குழுவில் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்று அண்ணாவின் குழு சொல்லியிருப்பதையா குறிப்பிடுகிறீர்கள்? ஐந்து பேர் அரசு தரப்பிலிருந்து, ஐந்து பேர் பொதுமக்கள் தரப்பில் என்பதையா? முழுக்க முழுக்க ஒப்புக்கொள்ளுகிறேன்.

//அன்னா ஹசாரே சொல்வதும் நீங்க சொல்ற மாதிரிதான்.100% ஊழலைக் குறைக்க முடியாவிட்டாலும் கூட முழுமையான லோக்பால் சட்டம் 60% முதல் 65% வரை ஊழலைக் குறைக்கும்.அப்படியில்லா விட்டால் கபில் சிபல் வீட்டுக்கு தண்ணீர் சுமக்கிறேன் என்று சவால் விடுகிறார் ஹசாரே.//

அண்ணா ஹஜாரேவுக்கு சவால் விடுவது ஒன்றும் புதிதில்லை. நான் எடுத்துக்காட்டியிருக்கிற சட்டப்பிரிவுகளைப் பாருங்கள்! பணம் இருக்கிறவன் மோசடி செய்தாலும் தப்பித்துக்கொள்வான் என்பது புரியவில்லையா? அது போல, பத்து பேர் சேர்ந்து ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஊழல் பண்ணினாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படித்தான் அண்ணாவின் லோக்பால் வரைவு இருக்கிறது.

//இன்னும் விவாதிப்பேன்.ஆனால் கூகிளண்ணன் எப்ப பார்த்தாலும் உனக்கு வள வளக்கிறதே வேலையாப் போச்சுன்னு பின்னூட்டத்தை அனுமதிப்பதேயில்லை:)//

ஹாஹா! சேம் பிளட்!! :-)

நானும் கூட இன்னும் சில சட்டப்பிரிவுகளை நுணுக்கமாகப் படித்து எழுதியிருந்தேன். ஆனால், அதை வைத்து மட்டுமே இன்னொரு இடுகை போடலாம் போலிருந்தது. அதனால் தான் ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்று இத்தோடு விட்டு விட்டேன்.

அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக சட்டம் இயற்ற முனைவது சரி. ஆனால், ஊழலை ஒழிக்கச் சட்டம் கொண்டு வருவதே என் லட்சியம் என்பவர்கள் அதே தவறைச் செய்தால் எப்படி? அதுவும் நாடுதளவிய அளவில் வழக்குரைஞர்களைத் தங்களது செயல்படையில் வைத்துக்கொண்டே?

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

பதிவு போடலாம்ன்னு இருந்ததை உங்களுக்கே தாரை வார்க்கிறேன்.

இது தலைப்பு! ஊழல் வாழ்க!இந்தியர்களைக் குழப்பிய காங்கிரஸ் வாழ்கவே!

ராங் நம்பர்! :-)

சோனியா காந்தி-கலைஞர் படத்தைப் போட்டு "மோசடிக்கும்பலை முறியடிப்போம்; ஜனநாயகம் காப்போம்," என்று தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசார இறுதிநாள்வரை எனது வலைப்பதிவில் பேனர் வைத்திருந்தேன். :-). மேலும் இந்த இடுகையிலும் காங்கிரஸின் தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆகவே, காங்கிரஸ் குறித்த உங்களது அனைத்துக் கருத்துக்களையும் நான் ஏற்கிறேன்.

ஆனால், அண்ணா ஹஜாரே குறித்த எனது சந்தேகங்கள் ஒவ்வொன்றாக ஊர்ஜிதப்படுகிறபோது, அவற்றைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாதல்லவா?

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//r.selvakkumar said...

சபாஷ்! மிகவும் தெளிவான கட்டுரை! //

மிக்க நன்றி நண்பரே! :-)

Noolulagam said...

//ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஒழிக்க அண்ணா ஹஜாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை! //

நன்று.

//ஏப்ரல் மாதம் தொடங்கி, இன்று வரையில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தேடுவதில் செலவழித்த நேரத்தில், ஒருவராவது ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பார்களா?//
நீங்கள், நான் உட்பட யாரும் எதுவும் செய்யவில்லை.

//தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன. //
நண்பரே, உங்கள் வருத்தம் புரிகிறது. நமக்கு இப்பொழுது தேவை முழுமையான லோக் பால். ஆளும்வர்க்கம் தரும் மற்றும் அன்னஹசரே தரப்பு தரும் லோக் பால் இரண்டுமே ஓட்டைகள் உள்ளது.

நீங்கள் ஏன், இரண்டில்லும் உள்ள நல்லவைகளை எடுத்து , தேவையான புதியவைகளை சேர்த்து ஒரு முழுமையான லோக் பால் இது என்று கொடுக்க கூடாது. எங்கே தவறு என்று தேடுவதை விடுத்தது, இதுதான் தேவை என்று ஒன்றை தாருங்கள்.

அதனை தூக்கி பிடிக்க ஆயிரம் பேர் வருவார்கள். குறைந்த பட்சம் நான் வருவேன்.அதனை செய்ய நீங்கள் தயாரா? நம்மால் முடியுமா என்றால் முடியும், ஒத்த கருத்துள்ள நான்கு பேர் இணையும் பொழுது நல்லதோ கேட்டதோ, எதுவும் சாத்தியம்.

நான் ரெடி, நீங்கள் ரெடியா?

settaikkaran said...

//Noolulagam said...

//நீங்கள், நான் உட்பட யாரும் எதுவும் செய்யவில்லை.//

சரி! :-)

//நண்பரே, உங்கள் வருத்தம் புரிகிறது. நமக்கு இப்பொழுது தேவை முழுமையான லோக் பால். ஆளும்வர்க்கம் தரும் மற்றும் அன்னஹசரே தரப்பு தரும் லோக் பால் இரண்டுமே ஓட்டைகள் உள்ளது.//

எனது இடுகையின் கருவே "கொடுக்கிறவர்கள் நிறுத்தினால், லஞ்சம் ஒழிந்து விடும்," என்பதே! லோக்பால் சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தம் காரியம் நடக்க ரகசியமாகப் போய் லஞ்சம் கொடுப்பவர்களை என்ன செய்ய முடியும்?

//நீங்கள் ஏன், இரண்டில்லும் உள்ள நல்லவைகளை எடுத்து , தேவையான புதியவைகளை சேர்த்து ஒரு முழுமையான லோக் பால் இது என்று கொடுக்க கூடாது. எங்கே தவறு என்று தேடுவதை விடுத்தது, இதுதான் தேவை என்று ஒன்றை தாருங்கள்.//

லோக்பால் சட்டம் என்பதே தேவையற்றது. தேங்கிக்கிடக்கிற வழக்குகளைக் குறைத்து மக்களுக்கு விரைவில் நீதிகிடைக்கிற வழிவகைகளை, அதாவது நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் அதிகரிப்பது, பொய்வழக்குப் போடுகிறவர்களுக்கு, வாய்தா வாங்கி இழுத்தடிப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்குவது...இவற்றை உறுதிபடச் செய்தாலே மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும். தற்போது பரிசீலனையிலுள்ள Judicial accountability Bill மற்றும் Whisteblower's protecton Bill போன்றவற்றை அமலுக்குக் கொண்டுவந்தால் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும். (உதாரணம்: தகவல் உரிமைச் சட்டத்தின் வெற்றி!)

//அதனை தூக்கி பிடிக்க ஆயிரம் பேர் வருவார்கள். குறைந்த பட்சம் நான் வருவேன்.அதனை செய்ய நீங்கள் தயாரா? நம்மால் முடியுமா என்றால் முடியும், ஒத்த கருத்துள்ள நான்கு பேர் இணையும் பொழுது நல்லதோ கேட்டதோ, எதுவும் சாத்தியம். நான் ரெடி, நீங்கள் ரெடியா?//

லோக்பாலே வேண்டாம் எனும்போது, இந்தக் கேள்விக்கே இடமில்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

ராஜ நடராஜன் said...

முன்னாடியே போய் மகுடத்துல உட்கார்ந்துகிட்டீங்களா இல்லை நான் போட்ட பின்னூட்டத்துல மகுடம் வந்துடுச்சான்னு தெரியலை:)இப்பத்தான் கவனிச்சேன் வாழ்த்துக்கள்.

என்னைப் பொறுத்த வரையில் அன்னா ஹசாரே,சீமான்,மே 17 இயக்கம் போன்ற இயக்கங்கள் ஜனநாயகத்தைப் பரிசோதிக்கும் புதிய விதைகள்.தண்ணீர் ஊற்றித்தான் பார்ப்போமே!சில நல்லா வளரும் இன்னும் சில திருமா மாதிரி கால ஓட்டத்தில் பட்டுப்போகும்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்தியாவுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்ற மிசா போராட்டக்காரர்கள் இந்திரா காந்தி அம்மையாரின் காங்கிரஸ் ஆட்சியில்.

இந்திரா காந்தியை அனைவரும் இப்பொழுதும் புகழ்ந்தாலும் அவரது மிசாவைப் புகழ்பவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் குறைவே.அதே போல்தான் ஹசாரேவும்,மன்மோகன் சிங்கும் ஊழல் வரலாற்றில் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

ஹசாரேவுக்கான குரல் ஒலிக்கிறதா அல்லது காங்கிரஸின் சூழ்ச்சிகள் வெற்றி பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Noolulagam said...

//எனது இடுகையின் கருவே "கொடுக்கிறவர்கள் நிறுத்தினால், லஞ்சம் ஒழிந்து விடும்," என்பதே! லோக்பால் சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தம் காரியம் நடக்க ரகசியமாகப் போய் லஞ்சம் கொடுப்பவர்களை என்ன செய்ய முடியும்?//
நான் கொடுக்க மாட்டேன், நல்லது. ஆனால் அவன் வேண்டும் என்று சொல்கிறானே? இல்லை என்றால் ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறதே? இன்று போய் நாளை வா என்கிறானே?

//லோக்பால் சட்டம் என்பதே தேவையற்றது. தேங்கிக்கிடக்கிற வழக்குகளைக் குறைத்து மக்களுக்கு விரைவில் நீதிகிடைக்கிற வழிவகைகளை, அதாவது நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் அதிகரிப்பது, பொய்வழக்குப் போடுகிறவர்களுக்கு, வாய்தா வாங்கி இழுத்தடிப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்குவது...இவற்றை உறுதிபடச் செய்தாலே மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும். //

இதை யார் செய்வது? இதை செய்ய லோக் பால் வேண்டும் என்பது, இந்த மாற்றம் வேண்டும் என்பவர்களின் தவிப்பு.

//தற்போது பரிசீலனையிலுள்ள Judicial accountability Bill மற்றும் Whisteblower's protecton Bill போன்றவற்றை அமலுக்குக் கொண்டுவந்தால் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும். (உதாரணம்: தகவல் உரிமைச் சட்டத்தின் வெற்றி!)//

இதை எல்லாம் நீங்கள் சொல்கரீர்கள், ஏன் பிரதமரும் அவரை சுற்றி உள்ளவர்களும் சொல்ல வில்லை.

இல்லை அவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள் என்றால் எதற்காக இந்த incompleate lokpal?


//Judicial accountability Bill மற்றும் Whisteblower's protecton Bill //

Lokpal கூட நாற்பது ஆண்டு காலம் பரிசீலனையில் தான் உள்ளது. நண்பரே, அதுவல்ல முக்கியம் இவையெல்லாம் எபொழுது வரும், எனது குழந்தைகள் இந்த இழிவான சமுகத்தில் வாழ நான் விரும்ப வில்லை. இது எனது நாடு, என்னால் எங்கும் போக முடியாது.

ராஜ நடராஜன் said...

//தற்போது பரிசீலனையிலுள்ள Judicial accountability Bill மற்றும் Whisteblower's protecton Bill போன்றவற்றை அமலுக்குக் கொண்டுவந்தால் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும். (உதாரணம்: தகவல் உரிமைச் சட்டத்தின் வெற்றி!)//

Whisteblower பத்தியெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரிகிறது.அதே மாதிரிதான் லோக்பால் சட்ட வரைவும் இப்ப மக்கள் மத்தியில் பிரபலம்.தகவல் உரிமைச் சட்டம் இந்தியாவின் சில மாநிலங்களில் வெற்றின்னு சொல்லுங்க.மொத்தமா முதுகைத் தட்டிக்கொடுக்க வேண்டாம்,முக்கியமா தமிழகத்துக்கு:)

settaikkaran said...

எனது ஆதர்ச பதிவர்களில் ஒருவர் இங்கு முதல்முறையாக வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. பின்னூட்டத்துக்கு பதில் எழுதுமுன்னர் profile பார்க்கத் தவறிவிட்டேன். :-)

//நான் கொடுக்க மாட்டேன், நல்லது. ஆனால் அவன் வேண்டும் என்று சொல்கிறானே? இல்லை என்றால் ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறதே? இன்று போய் நாளை வா என்கிறானே?//

உங்களுக்குத் தெரியாததல்ல! லஞ்ச ஓழிப்பு வழக்குகள் முடிவதற்குள்ளாக, புகார் கொடுத்தவர்களின் ஆயுளே முடிந்து விடுகிறது. இது போல பல சட்டங்களின்படி வழக்குத் தொடரும்போதும் இதே கதிதான். காரணம், பல்வேறு காரணங்களைக் கூறி வழக்கை இழுத்தடித்து, சாட்சிகளைக் கலைத்து, புகார் கொடுத்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறார்கள். இந்தக் குறைபாடுகளைச் சீர்செய்தாலே போதும் என்று கருதுகிறேன்.

//இதை யார் செய்வது? இதை செய்ய லோக் பால் வேண்டும் என்பது, இந்த மாற்றம் வேண்டும் என்பவர்களின் தவிப்பு.//

இதில் ஒத்த கருத்து எட்டப்பட முடியவில்லை என்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். முக்கியமாக, அரசியல்! தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி பிரதமரைக் கொண்டுவரக் கூடாது என்கிறது; எதிர்க்கட்சி கொண்டு வர வேண்டும் என்கிறது. மத்தியிலும் அதே நிலை! இது போல பல இடையூறுகள் இருப்பதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் லோக்பால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளதே?

//இதை எல்லாம் நீங்கள் சொல்கரீர்கள், ஏன் பிரதமரும் அவரை சுற்றி உள்ளவர்களும் சொல்ல வில்லை.//

ஐயா, நான் கண்டிப்பாக காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. அரசும் பிரதமரும் ஏன் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியாது. ஆனால், இவை குறித்து பல ஆங்கில தளங்களில் மிகவும் நம்பிக்கையுடன் வழக்குரைஞர்கள் எழுதியிருப்பதை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.

// இல்லை அவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள் என்றால் எதற்காக இந்த incompleate lokpal?//

அதே! எனது நிலைப்பாடும் இதுவே! குடிமகனுக்கு புகார் அளிக்கிற பாதுகாப்பும், தண்டனைகள் கடுமைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதமும் இருந்தால், லோக்பால் என்பது தேவையே இல்லை என்று கருதுகிறேன்.


// Lokpal கூட நாற்பது ஆண்டு காலம் பரிசீலனையில் தான் உள்ளது. நண்பரே, அதுவல்ல முக்கியம் இவையெல்லாம் எபொழுது வரும், எனது குழந்தைகள் இந்த இழிவான சமுகத்தில் வாழ நான் விரும்ப வில்லை. இது எனது நாடு, என்னால் எங்கும் போக முடியாது.//

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அன்றாடம் பல மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்குச் சென்று அடிமையைப் போல கைகட்டி, பல்லைக்காட்டி எல்லா உதாசீனங்களையும் சகித்துக்கொண்டு வருகிறேன். ஊழலால் நொந்து நூலான மக்களில் நானும் ஒருவன். ஊழல் ஒழிய வேண்டும் என்பதே எனது ஆசையும் கூட!

நான் சட்டம் படித்தவன் அல்ல. இந்த இடுகை கூட ஒரு சாமானியனின் ஆதங்கம் தான். இருபக்கமும் அடிவாங்கிய வலிதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

முன்னாடியே போய் மகுடத்துல உட்கார்ந்துகிட்டீங்களா இல்லை நான் போட்ட பின்னூட்டத்துல மகுடம் வந்துடுச்சான்னு தெரியலை:)இப்பத்தான் கவனிச்சேன் வாழ்த்துக்கள்.//

சத்தியமா என்னாலேயே நம்ப முடியலே! :-)

உண்மையிலேயே மகுடம், மாற்றுக்கருத்தைக் கூட நாகரீகமாகத் தெரிவிக்கிற உங்களைப் போன்றவர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும். இப்படிச் சொல்ல காரணமிருக்கிறது. NDTV, CNN-IBN, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், எகனாமிக் டைம்ஸ் என்று கடந்த ஒரு வாரத்தில் அனைத்துத் தளங்களிலும் எனது கருத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால், இங்கிலீஷிலும் ஹிந்தியிலுமாக வசைமாரி பொழிந்து தள்ளிவிட்டார்கள். :-))

நம்மாளுங்க எவ்வளவு நல்லவங்கன்னு இப்பத்தான் தெரியுது! நன்றி!


//என்னைப் பொறுத்த வரையில் அன்னா ஹசாரே,சீமான்,மே 17 இயக்கம் போன்ற இயக்கங்கள் ஜனநாயகத்தைப் பரிசோதிக்கும் புதிய விதைகள்.தண்ணீர் ஊற்றித்தான் பார்ப்போமே!சில நல்லா வளரும் இன்னும் சில திருமா மாதிரி கால ஓட்டத்தில் பட்டுப்போகும்.//

மக்களைத் திசைதிருப்பி விடாமல் இருந்தால் சரி. மூன்றாவது முறையாகச் சொல்லுகிறேன் - நான் ஆரம்பத்தில் அண்ணாவை தீவிரமாக ஆதரித்தேன். ஆனால், இப்போது முடியவில்லை. :-)

//ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்தியாவுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்ற மிசா போராட்டக்காரர்கள் இந்திரா காந்தி அம்மையாரின் காங்கிரஸ் ஆட்சியில்.//

எமர்ஜன்ஸிக்கு எதிரான போராட்டம் வெற்றியடைந்தாலும், அது நீடிக்காமல் போனதும் வரலாறல்லவா? என்னைப் பொறுத்தவரையில் அதுதான் இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்பேன்; வேறு எதுவுமல்ல!

//இந்திரா காந்தியை அனைவரும் இப்பொழுதும் புகழ்ந்தாலும் அவரது மிசாவைப் புகழ்பவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் குறைவே.அதே போல்தான் ஹசாரேவும்,மன்மோகன் சிங்கும் ஊழல் வரலாற்றில் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.//

துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சிகளும் சரியில்லை என்பதால், எதிர்கால ஆட்சி யார்வசம் என்பது கவலைதருவதாயிருக்கிறது. ஆனால், வரலாற்றில் காங்கிரஸின் ஊழல் இடம்பிடித்தே விட்டது.

//ஹசாரேவுக்கான குரல் ஒலிக்கிறதா அல்லது காங்கிரஸின் சூழ்ச்சிகள் வெற்றி பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.//

ம், பார்க்கலாம்! நல்லது நடந்தால் சரி! :-)

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

Whisteblower பத்தியெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரிகிறது.அதே மாதிரிதான் லோக்பால் சட்ட வரைவும் இப்ப மக்கள் மத்தியில் பிரபலம்.தகவல் உரிமைச் சட்டம் இந்தியாவின் சில மாநிலங்களில் வெற்றின்னு சொல்லுங்க.மொத்தமா முதுகைத் தட்டிக்கொடுக்க வேண்டாம்,முக்கியமா தமிழகத்துக்கு:)//

உண்மைதான்! ஆனால், இந்திய அளவில் தகவல் கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாக அறிகிறேன். (இந்த இடுகைக்கான சில தகவல்களைக் கூட RTI-ல் தான் பெற்றேன்!).

மிக்க நன்றி! மகுடத்தை (பெருந்தன்மையுடன்) எனக்கு அளித்ததற்கு! :-))

ஊரான் said...

நல்ல அலசல்!
லோக்பால் மசோதா என்று சொல்லி இங்கே அரசியல் நடத்தப்படுகிறது. ஏற்கவே இருக்கிற சட்டங்களால் ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை? இப்போது அண்ணா அசாரேவின் பின்னால் திரள்பவர்கள் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக எத்தனை புகார்களை துணிவோடு பதிவு செய்துள்ளார்கள்? இவர்கள் யாரும் இதுவரை இலஞ்சமே கொடுத்ததில்லையா? இதெல்லாம் கூட்டத்துாடு கோவிந்தா போடுவதற்குத்தான் பயன்படுமே ஒழிய ஊழல் ஒழிய ஒருபோதும் உதவாது. இவர்கள் சொல்கிற லோக்பால் வந்தாலகூட தைரியத்தோடு புகார் கொடுக்க எத்தனைபேருக்கு துணிச்சல் வரும்! ஊழலின் ஊற்றுக்கண் எது என்பதைக் கண்டறியாமல், அதற்கான அடிப்படையை மாற்றாமல் வெறும் சட்டங்களால் ஊழல் ஒருபோதும் ஒழியாது.

Anonymous said...

நிறைய தகவல்கள்...

ஆனால் நீங்கள் காந்தி வாழ்ந்த காலத்தில் இருந்திருந்தீர்களானால், காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் குறைகளை ஆராய்ந்து அடுக்கியிருந்திருப்பீர்கள்..

வாழ்க உங்கள் எண்ணம்... தொடர்க உங்கள் பதிவு..

settaikkaran said...

//ஊரான் said...

நல்ல அலசல்! லோக்பால் மசோதா என்று சொல்லி இங்கே அரசியல் நடத்தப்படுகிறது. ஏற்கவே இருக்கிற சட்டங்களால் ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை?//

எனது வாதமும் இதுவே! இப்போது இருக்கிற சட்டம் போதாது என்று சொல்கிற இரு தரப்பினருமே குறைபாடுகள் உள்ள சட்டத்தை மக்கள் மீது திணிக்க முயல்வது ஏன்?

//இப்போது அண்ணா அசாரேவின் பின்னால் திரள்பவர்கள் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக எத்தனை புகார்களை துணிவோடு பதிவு செய்துள்ளார்கள்?இவர்கள் யாரும் இதுவரை இலஞ்சமே கொடுத்ததில்லையா? இதெல்லாம் கூட்டத்துாடு கோவிந்தா போடுவதற்குத்தான் பயன்படுமே ஒழிய ஊழல் ஒழிய ஒருபோதும் உதவாது. இவர்கள் சொல்கிற லோக்பால் வந்தாலகூட தைரியத்தோடு புகார் கொடுக்க எத்தனைபேருக்கு துணிச்சல் வரும்! ஊழலின் ஊற்றுக்கண் எது என்பதைக் கண்டறியாமல், அதற்கான அடிப்படையை மாற்றாமல் வெறும் சட்டங்களால் ஊழல் ஒருபோதும் ஒழியாது.//

ஊழல் என்பது ஒரு சட்டத்தால் ஒழிந்துவிடக்கூடியதல்ல. துரதிருஷ்டவசமாக அது மேலிருந்து கீழ்வரைக்கும் புரையோடியிருக்கிறது. அதனை வெவ்வேறு வழிமுறைகளால் குறைக்க முயல முடியுமே தவிர ஒட்டுமொத்தமாக ஒழித்த நாடு இருப்பதாய்த் தெரியவில்லை. கூட்டத்தோடு கோவிந்தா போடுவது கூட, விளைவு அவர்கள் எதிர்பார்ப்பதாக இருந்தால், தவறில்லை. ஆனால், இங்கே குறிக்கோளே தெளிவற்று, சாத்தியங்களற்று வெறும் வாய்ச்சவடால்களும் ஏட்டிக்குப்போட்டியாகவும் இருந்தால் ஆகப்போவது என்ன?

கருத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

//ஷீ-நிசி said...

நிறைய தகவல்கள்// ஆமாம், மிச்சம் இருப்பதும் நிறைய, ஆனால், இப்போதைக்கு இவ்வளவுதான்! :-)

//ஆனால் நீங்கள் காந்தி வாழ்ந்த காலத்தில் இருந்திருந்தீர்களானால், காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் குறைகளை ஆராய்ந்து அடுக்கியிருந்திருப்பீர்கள்..//

நான் என்ன, அவரது உண்ணாவிரதத்தை அப்போதே நிறைய பேர் கேலி செய்திருக்கிறார்கள். காந்தியின் உண்ணாவிரதத்தோடு அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஒப்பிடுவது பாலோடு கள்ளை ஒப்பிடுவதற்கு சமம்!

//வாழ்க உங்கள் எண்ணம்... தொடர்க உங்கள் பதிவு..//

நல்லெண்ணத்துக்கும் கருத்துக்கும் நன்றி! அவசியம் பின்னொருநாளில் தொடர்வேன்! :-)

viji said...

Anna's biggest strength is that he has gone into the supportive hands of media because of which he is portrayed as someone next to Mahatma Gandhi. Your article is quite good, exposing the negative side of Anna. But he is sailing on a strong image, namely, that of a crusader against corruption. The emotionally sensitive followers of him are deaf to any accusations against him-this is the truth now. God Save Our Country!

www.eraaedwin.com said...

சமீபத்தில் நான் வாசித்த மிக நல்ல பதிவுகளில் இதுவும் ஒன்று.
எனது http://eraaedwin.blogspot.com/2011/04/blog-post_20.html
இந்தப் பதிவைப் படித்து விட்டு ஹசாரே பற்றி தான் படித்த மிக முக்கியமான பதிவு என்றார் காமராசு. மாதவராஜும் அதையேதான் சொன்னார்.
ஆனால் ஹசாரே குறித்த செய்திகள் உங்கள் இடுகையில்தான் மிக அதிகமாகவும் செழுமையாகவும் நேர்மையாகவும் இருப்பதை அறிகிறேன்.

உமர் | Umar said...

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தக்கர் பாபாவில் வந்து உட்கார்ந்தவனின் +1 இந்தப் பதிவிற்கு.

ராஜ நடராஜன், சூழ்ந்திருக்கும் வேலைகளுக்கு மத்தியில் உரையாட இயலவில்லை. மன்னிக்கவும்.

டக்கால்டி said...

எதோ அந்த வயதான கிழவர் நாடகம் நடத்துகிறாரோ இல்ல மெய்யாலுமே நாட்டு மேல அக்கறையோட செய்யறாரோ..அதை ஏன் நாம் சந்தேகப்படணும் நண்பா... ஆட்டு மந்தைக் கூட்டம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட்டம் ஒன்று இன்று அவரின் பின்னால் உருவாகி இருக்கிறது. அடுத்தவனுக்கு என்ன ஆனால் எனக்கென்ன என்ற மனநிலை மாறி ஒரு மிகப் பெரும் மக்கள் சக்தி உருவாகி இருக்கிறது நெடு நாள் பிறகு. அதை குலைத்துவிட வேண்டாமே... நான் தங்கள் கருத்துக்கு உடன்படவில்லை சேட்டை.

கவிதை பூக்கள் பாலா said...

இப்படியே எழுதி மக்களை திசை திருப்பி கொஞ்சம் நஞ்சம் வர தைரியத்தையும் முளையிலேயே வெட்டி எரிஞ்சிட்ட நல்ல இருக்கும் . இந்த விசயத்தில் நான் சதீஷ் வழி மொழிகின்றேன் . காரணம் நீயும் திருடன் நானும் திருடன் . எல்லாம் திருடன் . அவனவன் மனசாட்சியை கேட்டால் தெரியும் சேட்டையும் சேர்த்து தான் . என்னமோ இவரு மட்டும் யோக்கியம் அப்படின்னு நினைக்க கூடாது . ஒரு நல்லது நடக்க சில விசயங்களை பொறுத்து தான் ஆக வேண்டும் . இது இன்றைய நாட்களில் எதார்த்தம் . நாட்டை கூறு போட்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசை யார்தான் தட்டி கேட்பது . குறைந்த பட்சம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை என்றாலும் பிரபலமான ஒருவர் தேவை படுகின்றார் . கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் தெரிந்து விட போகின்றது . இப்போது தான் மக்கள் கொஞ்சம் தெருவில் இறங்கி போராட வந்திருக்கின்றனர் . உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நான் நக்கீரன் பரம்பரை என்று நீங்கள் நினைத்தால் கொஞ்ச நாள் கண்ணை காதலி பொத்தி கொள்ளுங்கள் மக்கள் தெருவில் இறங்கி போராடும் தான் உரிமையை தட்டி கேட்கும் தைரியம் வளர்த்து கொள்ளட்டும் அப்புறம் நீங்க உங்க கண்ண திறந்து எழுதுங்க . இப்போது உயிர் பெருசா அல்லது உடல் பெருசா என்ற நிலைக்கு நாம் தள்ள பட்டிருகின்றோம் . முதலில் உயிர் தான் முக்கியம் அதை பாது காப்போம் முதலில் . உயிர் இருந்தால் தான் முச்சையாவது விட்டு கொள்ள முடியும் . இவர்களை இப்படியே விட்டு வைத்தால் நமக்கு சமாதி தான் . இதற்க்கு சிறந்த உதாரணம் இலங்கை தமிழர் பிரச்சணை . இதில் தமிழ் நாட்டு கட்சிகளின் மாறு பட கருத்தால் போராட்டங்களும் எதிர்ப்புகளும் நீர்த்து போக செய்தது விளைவு பல ஆயரம் உயிர்களை இழந்தது தான் மிச்சம் . இப்போது இலங்கை ஆட்டம் போடுகின்றான் . ஊறலில் நாட்டை முழுகி போக செய்து கொண்டிருக்கும் அரசை யாரவது எதிர்த்து கேள்வி கேக்கத்தான் வேண்டும் உடனே காங்கிரஸ் காரண மாதிரி அவன் பென்சில் திருடிட்டான் படிக்கும் போது, நாடு ரோட்டுல நடந்து போய்ட்டான், எதிர்த்த வீட்டுகாரன திட்டிட்ட அப்பும் மன்னிப்பு கேட்டுட்டன் என்ற எதற்கும் உதவாத காரணங்களை சொல்லி போராட்டங்களை தடை செய்து விட்டால் யாருக்கு லாபம் இன்னும் காங்கிரஸ் குஜால் ஆய்ட்டு உன் அப்பனுக்கும் பெப்பே என்று கட்டிட்டு போயிட்டு இருப்பான் . இப்பவே தலைகால் புரியாமல் அலையரான்னுங்கே !. அதெல்லாம் சரி இவ்வளவு நாள் எங்கையா போனாங்க. இன்னக்கு தான் தெரிஞ்சதா அன்னா ஹசாரே ஊழல் வாதி என்று . இவ்வளவு நாள் என்னத்த கழுட்டிகிட்டி இருந்தீங்க . கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்துநீங்களே அப்பா என்னத புடிகிட்ட இருந்தீங்க மனிக்கவும் எல்லாம் காங்கிரஸ் காரன பார்த்து கேட்டு தான் எழுதுறேன் . எதையும் யோசிக்காமல் இதற்க்கு ஆதரவு வேற உங்களை எல்லாம் என்னத சொல்றது . இது நாளா தைய தமிழன் இன்னும் உருபடாம எங்க போனாலும் உதய் வாங்குறான் முதல்ல ஒற்றுமை வேணும் . இப்ப மறுபடியும் நம்ம சேட்டை கிட்ட வருவோம் . நல்ல தான் எழுதி இருக்கீங்க ஆனால் ஒரு நல்லது நடக்க சின்ன சின்ன விசயங்களை விட்டு கொடுப்பது நல்லது தான் எப்படி கலைஞ்சருக்கு பதில் ஜெயலலித்தா மேல் என்று மக்கள் வக்களித்தனரோ அதை போல தான் . இதுவும் . முதலில் நீங்கள் நடை முறைக்கு வாங்கள் நீங்கள் நேர்மையானவரா மன்னிக்கவும் லஞ்சம் கொடுகாதவரா , அல்லது வாங்காதவரா. அல்லது நீங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று முடிவெடுத்து வாழ்ந்து பாருங்களேன் முடியுமா ? என்று முடியாது இன்றைய நிலையில் அது கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைக்க முடியும் கண்காணிப்பு கேமராக்கள் வைப்பது ஏன், திருடுபவனை பயமுறுத்தவும் , அப்படியே திருடி விட்டாலும் அதை கண்டு பிடிக்கவும் உதவும் என்பதாலையே . அதை போல தான் கண்காணிப்பு போல தான் இதுவும் அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் ஊழல் வாதிகளுக்கு கொஞ்சம் பயம் இருக்கும் கண்டிப்பாக ஊழல் படிப்படியாக குறையும் ....... இன்று நமக்கு எது லஞ்சம் எது லஞ்சம் கொடுக்காத நல்ல வழி என்பதே தெரியாதா அளவிற்கு சென்று விட்டிருகின்றோம் . தலைமை சரியாக முதலில் அமையட்டும் தானாக அனைத்தும் பயத்தில் அடி மட்டம் வரை குறையும் . அதை நீங்கள் நானும் நினைத்தால் முடியாது நான் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என்று தெருவில் இறங்கி சொல்லி பாருங்களேன் .உங்கள் நிலை என்ன என்று ஏதோ பைதிகாரனை போல் பார்க்கும் இன்று உங்களை ஆதரித்து கமெண்ட் போட்டவர்கள் உள்பட . மீண்டும் சொல்கின்றேன் சில நல்லது நடக்கும் போது சின்ன சின்ன சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் .....
கடைசியாக உண்மையில் நல்ல பதிவே ! பாராட்டுகின்றேன் ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் இதை போன்ற கருத்துக்களை வெளியிடுவதால் பலரின் ஊழல் எதிர்ப்பு எண்ணைகள் சிதறடிக்க படும் என்பது எனது தாழ்மையான கருத்து

MANI said...

சேட்டைக்காரனின் சேட்டை நல்லாதான் இருக்கு. மற்றவர்களைப் போல நானும் படித்துவிட்டு போகலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் இவ்வளவு நுண்ணறிவுடன் நீங்கள் தேர்ந்தெடுத்து அலசி ஆராய்ந்து எழுதின பிறகு இதற்கு கருத்து கூறாமல் சென்றால் அவ்வளவு நன்றாக இருக்காது என நினைத்ததன் விளைவு எமது பின்னூட்டம். நிற்க...

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் யானை போறது தெரியாது? பூனை போறது பெரிசா தெரியுமாம். அது அவங்க பார்க்கின்ற பார்வையில் உள்ள கோளாறோ என்னவோ?

முதலில் அன்னா ஹசாரே யாரு? அவருடைய பலம் என்ன? பவர் என்ன? காங்கிரஸ் அரசின் பலம் என்ன? அவிங்க பவரு என்ன? இரண்டையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது எவ்வளவு பெரிய புத்திசாலித்தனம்.

மிஞ்சி மிஞ்சி போனா ஹசாரேவால் என்ன செய்ய முடியும்? ஒரு வாரம் 10 நாள் உண்ணாவிரதம் இருக்கலாம். சிறையில் இருக்கலாம். மீடியாக்கள் அலறும். பின்பு அதைவிட வேற எங்கயாவது குண்டு வெடிச்சா மீடியாக்கள் அடுத்த சோலிய பார்க்க போய்விடுவார்கள்.

ஆனால் காங்கிரஸ்? நினைத்தால் எவ்வளவு பெரிய அதிகாரம். படைபலம் கொண்டவர்கள். அவர்கள் நினைத்தால் ஹசாரே இருக்கும் இடம் கூட மக்களுக்கு தெரியாமல் செய்துவிட முடியும்.

MANI said...

பிரதம மந்திரி எவ்வளவு பெரியவரோ? அவரைவிட ஒரு மடங்கு சட்டம் பெரிது என்று நீதிபதி குறிப்பிட்டதாக
நீங்களே உங்கள் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியிருக்க ஜன் லோக்பால் சட்டத்திலிருந்து பிரதம மந்திரிக்கு விலக்கு அளிப்பது எப்படி நியாயமான சட்டமாக இருக்க முடியும்.

இதற்கு முன்பிருந்த பிரதம மந்திரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தனவே? போர்பஸ் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களினால் என்ன செய்ய முடிந்தது.

அதனால் ஹசாரே ஜன் லோக்பால் பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்று முக்கியமான கோரிக்கையாக கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்.

சரி நீங்க சொல்ல வர்றது என்னன்னா... காந்தியவாதின்னு சொல்லிகிட்டு டிராக் மாறலாமா? பெல்ட்டை தூக்கலாமா? என்பது தானே?

சில பேர் இப்படிதான் நம்மிடம் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும். ஆனா யாராச்சும் ஒரு பொதுப் பிரச்சனைக்கு களம் இறங்கினா போதும். அவரு பலவீனம் என்ன? அவரு உத்தமரா? அவரு 15 வயசில சைட் அடிச்சாரு. 25 வயசில பிக்பாக்கெட் அடிச்சாரு. அதை பன்னாரு இதைப் பன்னாருன்னு பழசை போட்டு நோண்டி நுங்கெடுத்து பெரிசா டாக்டர் பட்டம் எல்லாம் வாங்க போராடுவாங்க.

MANI said...

நான் என்ன சொல்றவரேன்னா எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில தப்பு செய்யறது இயல்புதான். அதுக்காக நாங்க ஊரை அடிச்சு உலையில போடுவோம் எங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னுட்டு நாட்டாமை செய்தால் எப்பூடி!. சரி அவர் தவறு செய்திருந்தால் இப்போது இருக்கும் சட்டத்தின் படி அவரை தண்டிக்கலாமே. இல்லாத பொய் வழக்குகளையெல்லாம் போடும் காவல்துறைக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

திருடனில் யார் தேவலாம் என்று பொறுக்கியெடுக்கும் மனநிலையில்தான் இப்போது நாடு இருக்கிறதே தவிர. திருடனுக்கு மாற்று நேர்மையான ஆள் யார் என்று தேடினால் நாட்டில் ஒருத்தரும் மிஞ்சமாட்டார்கள். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. அதாவது அழுகிய பழத்தில் ஓரளவிற்கு நன்றாக இருக்கும் பகுதியை சாப்பிட வேண்டியது தான். அதுவும் தேவையில்லை என்றால் பட்டினிதான்.

அதாவது பொதுப்பிரச்சனைக்கு போராட வந்தவர்கள் அப்பழுக்கற்றவராக தப்பு தண்டா செய்யாதவராக உத்தமராக இருந்தால் தான் தப்பு செய்யறவரை தட்டிக் கேட்கும் உரிமை உள்ளதாம். இல்லாவிட்டால் உரிமை இல்லையா? இதற்கு முன்பு சில தவறுகள் செய்திருக்கலாம் அதற்காக எப்போதும் அவர் தவறு செய்பவர் என்று பொருள் கொள்ளலாமா?

தொண்டு நிறுவனங்களை ஜன் லோக்பால் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கூறிவிட்டால் அரசு அதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டுமா? என்ன! அரசும் ஒரு நேர்மையான சட்டத்தை இவ்வளவு நாட்களாக கொண்டுவந்திருந்து ஊழல்களுக்கு நியாயமான தண்டனைகள் கிடைத்திருந்தால் இவர் ஏன் இப்போது போராட போகிறார்.

உண்மையில் இந்த பிரச்சினையை யார் கையில் எடுத்திருக்க வேண்டும். எதிர்கட்சிகள்! ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் தானே. யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்களா? அதான் கண்டும் காணாமல் இருக்க காரணம். அவர்கள் அவர்கள் கடமையை செய்தால் அன்னா ஹசாரே எதற்கு?

MANI said...

நம்ம ஊரில் சாலையில் ஒரு பள்ளம், சாக்கடையென்றால் நாமெல்லாம் என்ன மண்னை வெட்டி போட்டதுக்கப்புறம் தான் மறுவேலை பார்க்கிறோம் பாருங்கள். எதுவோ எப்படியோ இருந்துவிட்டு போகிறது என்று மூக்கை பொத்திக்கொண்டு கடந்து செல்பவர்கள் இருக்கும் இந்த நாட்டில் தாம் வாழும் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் மீது குறைசொல்ல நமக்கு முதலில் என்ன தகுதியிருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஊழலை ஒரே நாள் இரவில் எந்த சட்டங்களாலும் ஒழித்துவிட முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் போதுதான் நிரந்தரமாக ஊழலை ஒழிக்க முடியும். அன்னா ஹசாரே செய்வதெல்லாம் என்னவென்றால் ஊழல் இருட்டில் மூழ்கி கிடக்கும் இந்த நாட்டில் ஒரே ஒரு தீக்குச்சியை பற்றவைத்திருக்கிறார். அவ்வளவே! மக்கள் எவர் எவ்வளவு கொள்ளையடித்தால் எனக்கென்ன என்று இருப்பதை மறந்து கொள்ளைப்போவது அவர்களது பணம் என்ற விழிப்புணர்வு வர போராடுகிறார்.

விழிப்புணர்வு வந்தபின்பு அவர்கள் அதற்கான சரியான தீர்வினை தேடிக்கொள்வார்கள். அதைவிடுத்து மக்களை இலவசங்களை கொடுத்து ஓட்டுகளைப் பெற்று ஊழல்களை புரிந்து அவர்களை நிரந்தர தூக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு அன்னா ஹசாரேவின் செயல் எரிச்சலை ஏற்படுத்த தான் செய்யும்.

மிகப்பெரிய வானுயர்ந்த கட்டிடங்கள் ஒரே நாள் இரவிலேயே எழுப்பப்பட்டவை அல்ல. அவை ஒவ்வொரு செங்கற்களாக தான் சிறுக சிறுகதான் எழுப்பப்படுகின்றன. இத்தனை வயதிலும் ஒரு பெரியவர் மக்களுக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்கு போராட துணிந்திருக்கிறார். ஆனால் ஏ.சி. அறையில் உட்கார்ந்துகொண்டு மெத்தப்படித்த அதிகார வர்க்கம் நினைத்திருந்தால் இதுநாள் வரை மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாமே. அப்படி செய்திருந்தால் நம்நாடு எப்போதோ வல்லரசாகியிருக்கும். படித்தவர்கள் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்றார் பாரதி....

எனது பின்னூட்டத்திற்கு பதில் வருமா? குறைந்த பட்சம் வெளியிடவாவது செய்வீர்களா? பார்ப்போம்.

Noolulagam said...

This is a personal message for you and you need not approve this for others.

dear சேட்டைக்காரன்,

please forgive me for writing this in English. //எனது ஆதர்ச பதிவர்களில் ஒருவர் இங்கு முதல்முறையாக வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. பின்னூட்டத்துக்கு பதில் எழுதுமுன்னர் profile பார்க்கத் தவறிவிட்டேன். :-)
//

i think you misunderstood my identity, i am not sure whom you are referring here.

because i don't have my blog in my profile. Blogs I have in my profile page are few of the blogs I follow.

my blog is at http://www.shansugan.net

people who visit this site won't come back as my blog does not have anything to entertain anybody, becasue as i mentioned in my blog (from my arimugam pathivu) எழுத்தும், பேச்சும், செய்யும் செயல்களும் சமுக நலன் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்றும் நம்பும் ஒரு சாதரணமானவன்.
//நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அன்றாடம் பல மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்குச் சென்று அடிமையைப் போல கைகட்டி, பல்லைக்காட்டி எல்லா உதாசீனங்களையும் சகித்துக்கொண்டு வருகிறேன். ஊழலால் நொந்து நூலான மக்களில் நானும் ஒருவன். ஊழல் ஒழிய வேண்டும் என்பதே எனது ஆசையும் கூட!

நான் சட்டம் படித்தவன் அல்ல. இந்த இடுகை கூட ஒரு சாமானியனின் ஆதங்கம் தான். இருபக்கமும் அடிவாங்கிய வலிதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//

I am also working in a private company, a MNC, as a senior person. So I earn too much and I can live a peaceful life and nothing affects me. But I don’t want to accept what I am seeing and which is wrong in all ways. Also I do not want to give this type of country to my children. I got a country from my grand parents which was poor but yet beautiful. But today lot of money is there but not beautiful.

After reading the lives and sacrifice of Gandhi, Bharathi, Bhat singh, Netaji, JP , Periyar Chidambaram Pilli, Subhra maniyam siva, Tholar Jeeva and Kamaraj etc, I could accept the present day politics and politicians.

Still I believe that we need to create these people, not just one more Gandhi, one more Kamaraj for entire country. I want to create each and every children of this country to be a another Gandhi, another Jeeva another JP, another Kamaraj. At least multiple Gandhi, multiple Kamaraj for this whole nation.

I don’t know whether this is possible, but this is my goal.

As a final note I want to say you something. I know that Anna’s team ,including Anna, is not perfect, (உங்களை போலவே இவர்கள் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. இருந்தாலும் ஒரு மனிதனை பார்க்கிற போது இந்த மனிதனிடத்தில் எவற்றை எல்லாம் பெற்றால் இந்த சமுகம் பயன்பெரும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்)

//எனது ஆதர்ச பதிவர்களில் ஒருவர் இங்கு முதல்முறையாக வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. பின்னூட்டத்துக்கு பதில் எழுதுமுன்னர் profile பார்க்கத் தவறிவிட்டேன். :-)//

Note sure how to take this. But I felt that I need to tell you this. please don’t answer based on who said it. Whether he is your friend or not. Give importance to the message. Hope I am not hurting you by saying this.
என்றும் அன்புடன்,
வேலு.சாந்தமூர்த்தி

செவிலியன் said...

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதை தப்பா புரிஞ்சிக்கினாங்களோ???? ஊழலை ஊழல்வாதி எதிர்கிறத பாத்தா அப்படித்தான் தெரியுது....
ஆனா ஒரு விசயங்க....

"எல்லாரும் எல்லாரையும் எப்பவும் ஏமாத்தமுடியாதுங்க......"

settaikkaran said...

//viji said...

Anna's biggest strength is that he has gone into the supportive hands of media because of which he is portrayed as someone next to Mahatma Gandhi. //

அதே! 2G, CWG, ஆதர்ஷ் ஊழல்கள் நாறத்தொடங்கிய நேரத்தில், நீரா ராடியா டேப்புகளால் சாயம்வெளுத்த ஊடகங்களுக்கு ஒரு Damage Control excercise அவசியப்பட்டது. தங்களை மீண்டும் சுத்தமானவர்கள் என்று வெளிப்படுத்த, அவர்கள் உபயோகித்தது அண்ணாவின் உண்ணாவிரதத்தை...!

//Your article is quite good, exposing the negative side of Anna. But he is sailing on a strong image, namely, that of a crusader against corruption. The emotionally sensitive followers of him are deaf to any accusations against him-this is the truth now. God Save Our Country!//

சேட்டைக்காரனின் இடுகையைப் படித்து எப்படி அவர்களது தொண்டர்கள் அவரைப் பின்பற்றுவதை விடப்போவதில்லையோ, அதே போல அண்ணா ஹஜாரே எவ்வளவு காட்டுக்கூச்சல் போட்டாலும் ஜன் லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படப் போவதுமில்லை. :-))

மிக்க நன்றி! :-)

Noolulagam said...

Mr MANI, thanks and i salute you. what i and many of us have in my mind, you just brought out in beautiful words.thanks again.

Noolulagam said...

//அதே! 2G, CWG, ஆதர்ஷ் ஊழல்கள் நாறத்தொடங்கிய நேரத்தில், நீரா ராடியா டேப்புகளால் சாயம்வெளுத்த ஊடகங்களுக்கு ஒரு Damage Control excercise அவசியப்பட்டது. தங்களை மீண்டும் சுத்தமானவர்கள் என்று வெளிப்படுத்த, அவர்கள் உபயோகித்தது அண்ணாவின் உண்ணாவிரதத்தை...!
//
you are not searching a truth, closing your eyes and saying what you think is what truth.

//சேட்டைக்காரனின் இடுகையைப் படித்து எப்படி அவர்களது தொண்டர்கள் அவரைப் பின்பற்றுவதை விடப்போவதில்லையோ, அதே போல அண்ணா ஹஜாரே எவ்வளவு காட்டுக்கூச்சல் போட்டாலும் ஜன் லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படப் போவதுமில்லை. :-))//
99 people out of 100 is behind Anna for the cause he is working and not for a person called Anna.

//அண்ணா ஹஜாரே எவ்வளவு காட்டுக்கூச்சல் போட்டாலும் ஜன் லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படப் போவதுமில்லை//

current issue is stop the incomplete lokpal and bring a complete lokpal which covers 100% of indian population. not about bring ஜன் லோக்பால் as it is in Parliment.

settaikkaran said...

//இரா.எட்வின் said...

சமீபத்தில் நான் வாசித்த மிக நல்ல பதிவுகளில் இதுவும் ஒன்று.// மிக்க நன்றி எட்வின் அவர்களே! :-)

//எனது http://eraaedwin.blogspot.com/2011/04/blog-post_20.html இந்தப் பதிவைப் படித்து விட்டு ஹசாரே பற்றி தான் படித்த மிக முக்கியமான பதிவு என்றார் காமராசு. மாதவராஜும் அதையேதான் சொன்னார்.//

மிக்க மகிழ்ச்சி! ஒத்த கருத்துடையவர்கள் இருப்பது மகிழ்ச்சி என்றால், அதைத் துணிவுடன் வெளிப்படுத்துகிறார்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த இடுகைகளையும் அவசியம் வாசிக்கிறேன்.

//ஆனால் ஹசாரே குறித்த செய்திகள் உங்கள் இடுகையில்தான் மிக அதிகமாகவும் செழுமையாகவும் நேர்மையாகவும் இருப்பதை அறிகிறேன்//

இதற்கு முன்னர், எனது பாணியில் பகடிகளை வேடிக்கையாய் எல்லாரும் கடந்து சென்றதால், இரண்டாவது முறையாக இதை எழுத முடிவுசெய்தேன். மிக்க நன்றி!

Noolulagam said...

//சேட்டைக்காரனின் இடுகையைப் படித்து எப்படி அவர்களது தொண்டர்கள் அவரைப் பின்பற்றுவதை விடப்போவதில்லையோ, அதே போல அண்ணா ஹஜாரே எவ்வளவு காட்டுக்கூச்சல் போட்டாலும் ஜன் லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படப் போவதுமில்லை. :-))
//
are we jealousy here? we don't want someone to gain any name. even the cause is fight against corruption.

settaikkaran said...

//உமர் | Umar said...

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தக்கர் பாபாவில் வந்து உட்கார்ந்தவனின் +1 இந்தப் பதிவிற்கு.//

மிக்க நன்றி! என்னோடு மெரீனா கடற்கரைக்கும், தக்கர் பாபா வித்யாலயாவுக்கும் வந்தவர்கள் அத்தனை பேரும் (7) இன்று எனது கருத்துக்களையே பிரதிபலிக்கிறார்கள்.

மிக்க நன்றி! :-)


//டக்கால்டி said...

எதோ அந்த வயதான கிழவர் நாடகம் நடத்துகிறாரோ இல்ல மெய்யாலுமே நாட்டு மேல அக்கறையோட செய்யறாரோ..அதை ஏன் நாம் சந்தேகப்படணும் நண்பா...//

குறிக்கோள்? அது முக்கியமில்லையா? அரசுக்கெதிராக கூட்டம் கூட்டிவிட்டால், உடனே அவர் அப்பழுக்கற்றவர் என்று ஆகி விடுவாரா?

//ஆட்டு மந்தைக் கூட்டம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட்டம் ஒன்று இன்று அவரின் பின்னால் உருவாகி இருக்கிறது.//

அதை விட கூட்டம் பாபா ராம்தேவுக்கு வந்ததே? :-)

//அடுத்தவனுக்கு என்ன ஆனால் எனக்கென்ன என்ற மனநிலை மாறி ஒரு மிகப் பெரும் மக்கள் சக்தி உருவாகி இருக்கிறது நெடு நாள் பிறகு. அதை குலைத்துவிட வேண்டாமே.//

மன்னிக்க வேண்டும்! அண்ணாவின் தொண்டர்களில் கணிசமானோர் கூட கூட்டத்தோடு கோவிந்தா போடுகிறவர்கள் தான்! இதையெல்லாம் சீரியஸாக அரசு எடுத்துக்கொள்ளலாம். அது அவர்களது கட்டாயம்.

//நான் தங்கள் கருத்துக்கு உடன்படவில்லை சேட்டை.//

தவறே இல்லை! நானும் நீங்களும் ஜனநாயகத்துக்கு மதிப்புக்கொடுப்பவர்கள்; அண்ணா ஹஜாரே மாதிரியா...? :-))

மிக்க நன்றி!

Noolulagam said...

//Anna's biggest strength is that he has gone into the supportive hands of media because of which he is portrayed as someone next to Mahatma Gandhi.

அதே! 2G, CWG, ஆதர்ஷ் ஊழல்கள் நாறத்தொடங்கிய நேரத்தில், நீரா ராடியா டேப்புகளால் சாயம்வெளுத்த ஊடகங்களுக்கு ஒரு Damage Control excercise அவசியப்பட்டது. தங்களை மீண்டும் சுத்தமானவர்கள் என்று வெளிப்படுத்த, அவர்கள் உபயோகித்தது அண்ணாவின் உண்ணாவிரதத்தை...!

//

Let it be. we need to be united to taggle corruption. we can not find a fault on the people who are getting united. let the same law find the faults we have amount ourself. including you, me, Anna and all these medias.

We have Law but with holes. let us fill those holes with new Law. for example yday they send him to Jail, but they released as soon as Rahul has intervened , what does this mean, is he president of india? who gave a power to release Anna from Jail. should not court do that? what is the Law follwed there. when they refuse to give grant to fast on JP Park, they tell that its decidion of poor police and we can not control. but later when Court send a person to Jail, these people can release. what a nonsense Boss. are they not fooling us here. are you afraid of contempting them?

settaikkaran said...

//bala said...

இப்படியே எழுதி மக்களை திசை திருப்பி கொஞ்சம் நஞ்சம் வர தைரியத்தையும் முளையிலேயே வெட்டி எரிஞ்சிட்ட நல்ல இருக்கும்.//

எது தைரியம்? யாரும் கைது செய்ய மாட்டார்கள், கைது செய்தாலும் காலையில் பிடித்து மாலையில் விட்டு விடுவார்கள் என்று போய் நிற்பதா? :-)

//ஒரு நல்லது நடக்க சில விசயங்களை பொறுத்து தான் ஆக வேண்டும்.//

நல்லது நடந்தால் சரி! எது நல்லது என்று சொல்லுங்கள் முதலில்! ஜன் லோக்பால் சட்டம் நிறைவேறுவதா? அந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் அண்ணாவுக்கு எதிரணியில் இருக்கின்றனர், இன்றுவரை! ஆகவே அது நிகழாது! வேறேன்ன நல்லது, ஊழல் முற்றிலும் ஒழிந்து விடுமா? சாத்தியமே இல்லை. அப்புறம், எதற்கு நல்லது நடக்கும் என்று சொல்கிறீர்கள்?

//இது இன்றைய நாட்களில் எதார்த்தம் . நாட்டை கூறு போட்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசை யார்தான் தட்டி கேட்பது . குறைந்த பட்சம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை என்றாலும் பிரபலமான ஒருவர் தேவை படுகின்றார்.//

காமெடி பண்ணாதீங்க சார்! ஊழலுக்கு எதிராக தில்லியில் முதலில் உண்ணாவிரதம் இருந்தவர் யார் தெரியுமா? உங்கள் வாதப்படியே பார்த்தாலும், பாபா ராம்தேவுக்கு அண்ணாவுக்கு வந்ததை விட அதிக கூட்டம் கூடியது. அவர் பரவாயில்லையா?

//உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நான் நக்கீரன் பரம்பரை என்று நீங்கள் நினைத்தால் கொஞ்ச நாள் கண்ணை காதலி பொத்தி கொள்ளுங்கள்//

அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது. :-) இது ஜனநாயக நாடு; நான் என்ன சொல்வது, எழுதுவது என்று அண்ணா ஹஜாரேயின் பஜனைகோஷ்டி கட்டுப்பாடு விதிக்க முடியாது.

//மக்கள் தெருவில் இறங்கி போராடும் தான் உரிமையை தட்டி கேட்கும் தைரியம் வளர்த்து கொள்ளட்டும் அப்புறம் நீங்க உங்க கண்ண திறந்து எழுதுங்க.//

சபாஷ்! 144 தடையுத்தரவு போட்டாலும் நீங்கள் தெருவில் போய் நின்று கூச்சல் போடுவீர்கள். எந்தத் தடையுத்தரவும் இல்லாமலே நான் சும்மாயிருக்கணுமா? அண்ணா ஹஜாரேயின் தொண்டர்களும் சர்வாதிகாரிகள் போலிருக்கிறதே? :-))

//இலங்கை தமிழர் பிரச்சணை.//

இதைப் பற்றி நான் எழுதியதில்லை. நீங்கள் குறிப்பிட்டதால் கேட்கிறேன். இலங்கையில் கொத்துக்கொத்தாய் மனிதர்கள் செத்துப்போனபோதும், முத்துக்குமரன் தீக்குளித்தபோதும், இன்று அண்ணாவுக்குக் கொடிபிடிக்கிற நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? இன்றும் முள்வேலியில் என் சகோதர,சகோதரிகள் அடைபட்டிருக்கிறார்களே, சிவில் சொசைட்டி என்று பீற்றிக்கொள்ளுகிற நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்போது போராடியிருந்தால், மாநில அரசு பிடித்து உள்ளே போட்டிருக்கும் என்று ஒதுங்கிப்போனவர்கள் தானே நீங்கள்?

//உதவாத காரணங்களை சொல்லி போராட்டங்களை தடை செய்து விட்டால் யாருக்கு லாபம் இன்னும் காங்கிரஸ் குஜால் ஆய்ட்டு உன் அப்பனுக்கும் பெப்பே என்று கட்டிட்டு போயிட்டு இருப்பான்.//

காங்கிரஸை நானே எதிர்த்துக்கொண்டுதானிருக்கிறேன்! இன்னும் எதிர்ப்பேன். அது வேறு விசயம். ஆனால், அண்ணா ஹஜாரே என்ற போலிக்குத் துணைபோக முடியாது. ஒருவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள, அவனது தகுதி என்னவென்று பார்ப்பேன். அது இல்லாதவனை விமர்சனம் செய்வேன். செய்துகொண்டிருப்பேன்.

//எதையும் யோசிக்காமல் இதற்க்கு ஆதரவு வேற//

இது அண்ணா ஹஜாரேயின் ஆதரவாளர்களுக்கு நான் அடிக்கடி சொல்வது போலிருக்குதே! :-))

settaikkaran said...

//உங்களை எல்லாம் என்னத சொல்றது . இது நாளா தைய தமிழன் இன்னும் உருபடாம எங்க போனாலும் உதய் வாங்குறான் முதல்ல ஒற்றுமை வேணும்.//

திரும்ப தமிழன்-லேருந்து ஆரம்பிக்கிறீங்களா? நான் கேட்குறேன் -ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுக்கப்புறம் எத்தனை பேரு (அரசியல் கட்சி தவிர!) தெருவுக்கு வந்து இலங்கைத்தமிழனுக்காகப் போராடினீங்க? ஒரு மனிதன் (சீமான்) குரலை உசத்தினா, எத்தனை பேரு கண்டுக்கறீங்க? கலைஞர் ஆட்சியிலே அவரோட ஊழலை எதிர்த்து எத்தனை பேரு தெருவுக்கு வந்து கோஷம் போட்டீங்க?

சும்மா தமிழன், இந்திக்காரன்னெல்லாம் பீலா விடாதீங்க சார்!

//எப்படி கலைஞ்சருக்கு பதில் ஜெயலலித்தா மேல் என்று மக்கள் வக்களித்தனரோ அதை போல தான் . இதுவும்.//

ஆஹா, நான் கால்கடுக்கக் காத்திருந்து ஓட்டுப்போட்டு ஒரு அரசாங்கத்தை அஞ்சு வருஷத்துக்குத் தேர்ந்தெடுப்பேன். நீங்க சும்மா லுல்லுலாயி பண்ணி, இதைப் பண்ணலேன்னா சாகும் வரை உண்ணாவிரதம், அதைப் பண்ணலேன்னா சாப்பிடும்வரை உண்ணாவிரதமுன்னு படமா காட்டறீங்க?

//முதலில் நீங்கள் நடை முறைக்கு வாங்கள் நீங்கள் நேர்மையானவரா மன்னிக்கவும் லஞ்சம் கொடுகாதவரா , அல்லது வாங்காதவரா. அல்லது நீங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று முடிவெடுத்து வாழ்ந்து பாருங்களேன் முடியுமா?என்று //

நான் அயோக்கியன்னே வச்சுக்குவோம்! நான் ஒண்ணும் உலகத்தைச் சீர்திருத்தலாம் வாங்கன்னு டிராமா பண்ணலியே! :-)

//முடியாது இன்றைய நிலையில் அது கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைக்க முடியும்//

அப்புறம் எதுக்குண்ணா லோக்பால் சட்டம் வந்தா ஊழல் ஒழியுமுன்னு அண்ணா ஹஜாரே புரூடா விட்டுக்கினு திரியுறாரு? :-)

//அதை போல தான் கண்காணிப்பு போல தான் இதுவும் அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் ஊழல் வாதிகளுக்கு கொஞ்சம் பயம் இருக்கும் கண்டிப்பாக ஊழல் படிப்படியாக குறையும்.....//

சார் பேப்பர்லாம் படிக்கிறதில்லை போலிருக்குது! இந்தியாவுலே கருப்புப்பணம் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டதல்ல. பெரிய நிறுவனங்களாலே உருவாக்கப்பட்டது. அவங்களைத் தான் ஜன் லோக்பால் சட்டத்தாலே ஒண்ணும் பண்ண முடியாதே! :-)

//இன்று உங்களை ஆதரித்து கமெண்ட் போட்டவர்கள் உள்பட . மீண்டும் சொல்கின்றேன் சில நல்லது நடக்கும் போது சின்ன சின்ன சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் .....//

நான் அண்ணா ஹஜாரேயை ஆதரித்து எழுதியிருக்கிறேன். அவருக்காக நடந்த ஆதரவுக்கூட்டத்தில் கலந்திருக்கிறேன். ஆனால், அவரது குறிக்கோள் ஊழலை அழிப்பது அல்ல என்பதில் எனக்குத் தெளிவு பிறந்து விட்டது. அவர் என்னை முட்டாளாக்க நான் அனுமதிக்க முடியாது. என் போலிருப்பவர்களுக்கு எனது இடுகை ஒரு எச்சரிக்கை; அவ்வளவு தான்!

//கடைசியாக உண்மையில் நல்ல பதிவே ! பாராட்டுகின்றேன் ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் இதை போன்ற கருத்துக்களை வெளியிடுவதால் பலரின் ஊழல் எதிர்ப்பு எண்ணைகள் சிதறடிக்க படும் என்பது எனது தாழ்மையான கருத்து//

ஐயோ, திரும்ப முதல்லேருந்தா? தெருவுலே வந்து கூச்சல் போட்டா ஊழல் அழியவும் அழியாது; குறையவும் குறையாது. நிறைய நேரம் எடுத்து நிறைய எழுதியிருக்கீங்க! (இன்னொரு பின்னூட்டத்துக்கு ஆபீசுக்குப் போயி முடிஞ்சா பதில் எழுதுகிறேன் சார்) மிக்க நன்றி!

settaikkaran said...

//MANI said...

சேட்டைக்காரனின் சேட்டை நல்லாதான் இருக்கு.//

அதான் சேட்டைக்காரன்! :-)

//இதற்கு கருத்து கூறாமல் சென்றால் அவ்வளவு நன்றாக இருக்காது என நினைத்ததன் விளைவு எமது பின்னூட்டம். நிற்க...//

எனக்கு பின்னூட்டங்கள் தான் டானிக்! :-)
அது ஆக்கபூர்வமான விவாதமாக அமைந்தால் டபுள் ஓ.கே! மிக்க மகிழ்ச்சி சார்!

//முதலில் அன்னா ஹசாரே யாரு? அவருடைய பலம் என்ன? பவர் என்ன? காங்கிரஸ் அரசின் பலம் என்ன? அவிங்க பவரு என்ன? இரண்டையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது எவ்வளவு பெரிய புத்திசாலித்தனம்.//

சரி, புத்திசாலித்தனம் இல்லைதான்.

//மிஞ்சி மிஞ்சி போனா ஹசாரேவால் என்ன செய்ய முடியும்? ஒரு வாரம் 10 நாள் உண்ணாவிரதம் இருக்கலாம். சிறையில் இருக்கலாம். மீடியாக்கள் அலறும். பின்பு அதைவிட வேற எங்கயாவது குண்டு வெடிச்சா மீடியாக்கள் அடுத்த சோலிய பார்க்க போய்விடுவார்கள்.//

சூப்பர், இதைத்தான் நான் சுருக்கமா ரெண்டாவது பாராவுலே சொல்லியிருக்கேன். இவரது உண்ணாவிரதத்தைத் தடைபண்ணாம இருந்திருக்கணும் காங்கிரஸ்! பிசுபிசுத்துப் போயிருக்கும்! :-)

//ஆனால் காங்கிரஸ்? நினைத்தால் எவ்வளவு பெரிய அதிகாரம். படைபலம் கொண்டவர்கள். அவர்கள் நினைத்தால் ஹசாரே இருக்கும் இடம் கூட மக்களுக்கு தெரியாமல் செய்துவிட முடியும்.//

எந்தக் காலத்துலே இருக்கீங்க சார் நீங்க? பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கூட இல்லாமல், உதிரிக்கட்சிகளின் மிரட்டலுக்கெல்லாம் பயந்து,வளைந்து குழைந்து கொண்டிருக்கிற மிக பலவீனமான அரசு இந்த காங்கிரஸ் அரசு! தில்லியில் விவசாயிகள் நடத்தின் போராட்டம் பற்றி படிச்சிருக்கீங்களா இல்லையா?

இதுவே இந்திரா காந்தியாக இருந்திருந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் சரி! இப்போது இருக்கிற அரசு ஒரு டம்மி பீசு! அதை யார் வேண்டுமானாலும் மிரட்டலாம். :-)

settaikkaran said...

//MANI said...

பிரதம மந்திரி எவ்வளவு பெரியவரோ? அவரைவிட ஒரு மடங்கு சட்டம் பெரிது என்று நீதிபதி குறிப்பிட்டதாக நீங்களே உங்கள் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியிருக்க ஜன் லோக்பால் சட்டத்திலிருந்து பிரதம மந்திரிக்கு விலக்கு அளிப்பது எப்படி நியாயமான சட்டமாக இருக்க முடியும்.//

நான் நியாயம்னு சொல்லலியே? அரசு லோக்பால் சட்டத்தைப் பற்றி என்ன எழுதியிருக்கிறேன்னு பாருங்க!

//இதற்கு முன்பிருந்த பிரதம மந்திரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தனவே? போர்பஸ் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களினால் என்ன செய்ய முடிந்தது.//

இப்போது நடந்த ஊழல்கள் எப்படி வெளியாகின? உங்களையும் என்னையும் போல ஒரு தனிமனிதன், பத்து ரூபாய் சலான் கட்டி தகவல் உரிமைச் சட்டத்தில் மனுக்கொடுத்து, அங்கிருந்து ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் என்று போய், அரசாங்கம் வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. அப்போது முடியாதது இப்போது முடிவதற்குக் காரணம், தனிமனிதனுக்கு முன்பிருந்ததை விட அதிக உரிமையும் பாதுகாப்பும் அதிகரித்திருக்கிறது.

//அதனால் ஹசாரே ஜன் லோக்பால் பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்று முக்கியமான கோரிக்கையாக கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்.// பதில் சொல்லிட்டேன்!

//சரி நீங்க சொல்ல வர்றது என்னன்னா... காந்தியவாதின்னு சொல்லிகிட்டு டிராக் மாறலாமா? பெல்ட்டை தூக்கலாமா? என்பது தானே?//

அவரு பெரிய தாதாவாகவே இருந்துக்கிட்டுப் போவட்டும். எனக்கு இன்னா? அவரது குறிக்கோள் ஊழலை ஒழிப்பதா? ஜன் லோக்பாலை கொண்டு வருவதா? இவை இரண்டு மட்டும் தானா? இல்லை! ஆக, அவர் அரசு மக்கள் இருதரப்பையும் முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்.

//சில பேர் இப்படிதான் நம்மிடம் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும். ஆனா யாராச்சும் ஒரு பொதுப் பிரச்சனைக்கு களம் இறங்கினா போதும். அவரு பலவீனம் என்ன? அவரு உத்தமரா? அவரு 15 வயசில சைட் அடிச்சாரு. 25 வயசில பிக்பாக்கெட் அடிச்சாரு. அதை பன்னாரு இதைப் பன்னாருன்னு பழசை போட்டு நோண்டி நுங்கெடுத்து பெரிசா டாக்டர் பட்டம் எல்லாம் வாங்க போராடுவாங்க.//

அவரு பொதுப்பிரச்சினைக்காக "போராடவேயில்லை" என்பதுதான் என் வாதம். அவர் உண்மையிலேயே தெளிவாக இருந்தால், டக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போன நான் தொடர்ந்து அவரது ஆதரவாளராயிருந்து தொலைத்திருப்பேனே! :-))

admin said...

வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவியில் நிகழ்வுகளை பார்த்து .. இவன் நல்லவன் .. அவன் கெட்டவன் .. இவன் சொல்றது சரியில்லை .. இது எப்படி நடக்குதுன்னு பார்த்துடுவோம் .. நான் அப்போவே சொன்னேன்.. இந்த ஆழ நல்லவருன்னு நினைச்சேனே என்று இன்டர்நெட்டில் ஆலமரத்தடி பஞ்சாயத்து செய்பவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை உங்கள் மனைவியிடமோ .. கணவனிடமோ.. குழந்தைகளிடமோ சொல்லி பாராட்டு பத்திரம் வாங்கிகொள்ளுங்கள்.. வெளியில் உங்கள் கருத்துக்களை கூறி நல்ல நோக்கத்தை திசை திருப்பாதீர்கள்.. அன்னா நல்லவரா .. இல்லை கெட்டவரா என்பதில்லை இப்போதைய கேள்வி.. இந்த ஜன லோக்பால் சட்டதில் உள்ள குறைகளை விமர்சனம் செய்யாதீர்கள்.. எந்த ஒரு சட்டமும் ஒரே நாளில் இயற்றியது அல்ல!. எல்லோரும் சொல்வது போல அது வலுவில்லாத சட்டமாக இருந்தால் காங்கிரெஸ் அதை எதிர்திருக்காது !. முதலில் இதை கொண்டு வருவோம்.. பிறகு அந்த சட்டத்தில் உள்ள குறைகளை களைவோம். அதே போல அரசாங்கம் என்ன நினைக்கிறது .. மக்கள் என்ன நினைகிறார்கள் என்று உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு டிவி நிருபர் வேலை பார்க்காதீர்கள்!. முடிந்தால் போராடுங்கள் அல்லது போராடுபவர்க்கு ஆதரவு தெரிவியுங்கள் ... இல்லை கதவை மூடிக்கொண்டு செல்வி சீரியல் பாருங்கள் !

சிவானந்தம் said...

```தவறே இல்லை! நானும் நீங்களும் ஜனநாயகத்துக்கு மதிப்புக்கொடுப்பவர்கள்; அண்ணா ஹஜாரே மாதிரியா...? :-))```

```எது தைரியம்? யாரும் கைது செய்ய மாட்டார்கள், கைது செய்தாலும் காலையில் பிடித்து மாலையில் விட்டு விடுவார்கள் என்று போய் நிற்பதா? :-)```

காற்று எப்படி அடிக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் பேசுவதுதான் இப்போதைய பேஷன்.ஆனால் அந்த தியரியை மீறி தனக்கு சரி எனப்பட்டதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களுடைய கருத்தில் நானும் உடன் படுகிறேன்.

மேலே குறிப்பிட்டிருக்கும் உங்களின் இரண்டு வரிகள் இந்த போராட்டத்தின் நிஜமான முகத்தை காட்டுகிறது.

settaikkaran said...

//MANI said...

//அதுக்காக நாங்க ஊரை அடிச்சு உலையில போடுவோம் எங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னுட்டு நாட்டாமை செய்தால் எப்பூடி!//

ஒரு காங்கிரஸ் விரோதியாக இருந்தாலும் சில விசயங்களை உங்களது கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். ஏப்ரலில் அண்ணா உண்ணாவிரதம் இருந்தபோது, இதே போல ஊடகங்கள் அவரை கடவுளாக்கியபோது, காங்கிரஸ் அவரை அழைத்துப் பேசியது. அதே போல பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் என்று வந்தபோது, அவரை அமைச்சர்கள் விமான நிலையத்துக்கே சென்று பேசினார்கள். அண்ணா கேட்டுக்கொண்டபடி லோக்பால் வரைவுக்குழுவையும் அமைத்தனர். அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பது உண்மை. ஆனால், இதுவே ராஜீவ் காந்தியோ, இந்திரா காந்தியாகவோ இருந்திருந்தால், போராட்டத்தை நசுக்குவது பற்றித்தான் அதிகம் யோசித்திருப்பார்கள்.

//சரி அவர் தவறு செய்திருந்தால் இப்போது இருக்கும் சட்டத்தின் படி அவரை தண்டிக்கலாமே. இல்லாத பொய் வழக்குகளையெல்லாம் போடும் காவல்துறைக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை.//

அதை நீங்கள் காங்கிரஸ் கட்சியிடம், குறிப்பாக மனீஷ் திவாரியிடம் கேட்கலாம். அப்புறம், அண்ணா ஏப்ரலில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் முன்னரே, இது குறித்து பல ஆங்கிலப்பத்திரிகைகளில் பலர் எழுதியிருக்கிறார்களே? :-)

//திருடனில் யார் தேவலாம் என்று பொறுக்கியெடுக்கும் மனநிலையில்தான் இப்போது நாடு இருக்கிறதே தவிர. திருடனுக்கு மாற்று நேர்மையான ஆள் யார் என்று தேடினால் நாட்டில் ஒருத்தரும் மிஞ்சமாட்டார்கள்.//

நீங்கள் சொல்ல வருவதென்ன? எல்லாரும் திருடர்கள்! லோக்பால் சட்டம் இயற்றப்பட்டால் திருடர்கள் எல்லாம் தூக்குப்போட்டு செத்து விடுவார்களா?

//குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. அதாவது அழுகிய பழத்தில் ஓரளவிற்கு நன்றாக இருக்கும் பகுதியை சாப்பிட வேண்டியது தான். அதுவும் தேவையில்லை என்றால் பட்டினிதான்.//

அப்படியென்றால், அடுத்த பிரதமர் அண்ணா ஹஜாரேயா? உங்கள் கருத்துப்படி அவர்தானே ஓரளவு நன்றாக இருக்கும் பழம்?

//அதாவது பொதுப்பிரச்சனைக்கு போராட வந்தவர்கள் அப்பழுக்கற்றவராக தப்பு தண்டா செய்யாதவராக உத்தமராக இருந்தால் தான் தப்பு செய்யறவரை தட்டிக் கேட்கும் உரிமை உள்ளதாம். இல்லாவிட்டால் உரிமை இல்லையா?//

அவர் பொதுப்பிரச்சினையைப் பற்றித் தட்டிக்கேட்கவில்லை. ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு மோசடி நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறாருங்க! இன்னுமா இந்த ஊரு இவரை நம்புது? :-))))

//இதற்கு முன்பு சில தவறுகள் செய்திருக்கலாம் அதற்காக எப்போதும் அவர் தவறு செய்பவர் என்று பொருள் கொள்ளலாமா?//

இப்போதும் நிறைய செய்து கொண்டிருக்கிறார். இவரது நடவடிக்கைகள், பேச்சுக்கள் எல்லாம் நடுநிலையாளர்களுக்கு எரிச்சலை அளித்து வருகின்றன என்பது தான் உண்மை.

//தொண்டு நிறுவனங்களை ஜன் லோக்பால் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கூறிவிட்டால் அரசு அதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டுமா?//

அதே கேள்வியை அரசு திருப்பிக் கேட்கிறது. பிரதமரை விலக்கக் கூடாது என்று அண்ணா சொன்னால் கேட்க வேண்டுமா? உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? :-)

//என்ன! அரசும் ஒரு நேர்மையான சட்டத்தை இவ்வளவு நாட்களாக கொண்டுவந்திருந்து ஊழல்களுக்கு நியாயமான தண்டனைகள் கிடைத்திருந்தால் இவர் ஏன் இப்போது போராட போகிறார்.//

எமர்ஜன்ஸியின் போது அண்ணா என்ன செய்து கொண்டிருந்தார்? போபர்ஸ் ஊழலின் போது ராஜீவ் காந்தியின் கையால் விருது வாங்கினாரே, அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்? ஷரத் பவாரின் கையிலிருந்து மகாராஷ்டிர அரசின் விருது வாங்கினாரே அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்?

//உண்மையில் இந்த பிரச்சினையை யார் கையில் எடுத்திருக்க வேண்டும். எதிர்கட்சிகள்!//

சரி, எதிர்க்கட்சி யார்? பா.ஜ.க! இதே பா.ஜ.க. கர்நாடகாவில் ஊழல் செய்து கொண்டிருந்தபோது, நீதிபதி ஹெக்டே தவிர சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் யாராவது பேசினார்களா? ஏன், சுரங்க ஊழலில் மாட்டிய ஒரு தனியார் நிறுவனம் அண்ணாவின் இயக்கத்துக்கு நன்கொடை அளித்திருக்கிறது என்பது தானே காரணம்? இல்லையென்று அண்ணாவின் குழு இதுவரை மறுத்ததா? இந்தக் கேள்வி அவர்களிடம் கேட்கப்பட்டபோது யாராவது பதில் அளித்தார்களா?

//அவர்கள் அவர்கள் கடமையை செய்தால் அன்னா ஹசாரே எதற்கு?//

தலைமைத் தணிக்கை அதிகாரி தனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் தனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. சி.பி.ஐ கூட தனது கடமையை இப்போதெல்லாம் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. இது தவிர, ஊடகங்கள் அரசின் ஒவ்வொரு சறுக்கல்களையும், அவர்களது சுயநலத்துக்காக என்றாலும் கூட, கிழி கிழியென்று கிழித்து வருகின்றன. இப்போது இருப்பதுபோன்ற பத்திரிகை சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் எப்போதாவது இருந்ததுண்டா?

இவ்வளவு இருக்கும்போதும், ஊழலை ஒழிக்க அண்ணா ஒருவர் தான் வேண்டும் என்றால், அது உங்கள் விருப்பம். எனக்கு வேண்டாம் என்கிறேன் நான்!

settaikkaran said...

MANI said...

//எதுவோ எப்படியோ இருந்துவிட்டு போகிறது என்று மூக்கை பொத்திக்கொண்டு கடந்து செல்பவர்கள் இருக்கும் இந்த நாட்டில் தாம் வாழும் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் மீது குறைசொல்ல நமக்கு முதலில் என்ன தகுதியிருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.//

எனக்கு அண்ணா ஹஜாரே என்ற தனிமனிதர் மீது குறைசொல்ல தகுதி இல்லை என்பது உண்மையானால், அண்ணா ஹஜாரேவுக்கு அரசியல் சட்டம், பாராளுமன்ற ஜனநாயகம் குறித்துப் பேச ஒரு அருகதையும் கிடையாது. சேட்டைக்காரன் ஒரு இடுகை எழுதியதும், "நீ யார் இதைச் சொல்ல?" என்று கேட்க உங்களுக்கு இருக்கிற அதே உரிமை, "யோவ் அண்ணா ஹஜாரே, நீ ரொம்ப ஒழுங்கா?" என்று நான் கேட்பதற்கும் இருக்கிறது. புரியுதா...? :-)

//ஊழலை ஒரே நாள் இரவில் எந்த சட்டங்களாலும் ஒழித்துவிட முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் போதுதான் நிரந்தரமாக ஊழலை ஒழிக்க முடியும்.//

அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். :-)

//அன்னா ஹசாரே செய்வதெல்லாம் என்னவென்றால் ஊழல் இருட்டில் மூழ்கி கிடக்கும் இந்த நாட்டில் ஒரே ஒரு தீக்குச்சியை பற்றவைத்திருக்கிறார். அவ்வளவே!//

தீக்குச்சியைப் பற்றவைத்ததோடு நிறுத்தவில்லை புண்ணியவான். எல்லா அரசியல்வாதிகளும் திருடர்கள், தேர்தல், ஜனநாயகம் எல்லாம் சுத்த பம்மாத்து, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்று மக்களின் மனதில் வெறுப்புத்தீயைக் கொளுத்தி விட்டிருக்கிறார்.

//மக்கள் எவர் எவ்வளவு கொள்ளையடித்தால் எனக்கென்ன என்று இருப்பதை மறந்து கொள்ளைப்போவது அவர்களது பணம் என்ற விழிப்புணர்வு வர போராடுகிறார்.//

அப்படியா? அவரது மாவட்டத்தில் தொழில்நகரங்கள் உருவாக்க விளைநிலங்களை கையகப்படுத்தியபோது என்ன செய்தார் அண்ணா ஹஜாரே? விதர்பாவில் பூச்சிமருந்து குடித்துச் செத்தவர்களுக்காக என்ன குரல் கொடுத்தார் அண்ணா? எலியைப் பிடித்து மராட்டிய விவசாயிகள் தின்றபோது என்ன செய்தார்? இன்னும் நிறைய கேட்கலாம்.

//விழிப்புணர்வு வந்தபின்பு அவர்கள் அதற்கான சரியான தீர்வினை தேடிக்கொள்வார்கள். அதைவிடுத்து மக்களை இலவசங்களை கொடுத்து ஓட்டுகளைப் பெற்று ஊழல்களை புரிந்து அவர்களை நிரந்தர தூக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு அன்னா ஹசாரேவின் செயல் எரிச்சலை ஏற்படுத்த தான் செய்யும்.//

அது ஆட்சியாளர்களின் கவலை. எனக்கிருக்கிற எரிச்சல் இவர் ஊரை ஏமாற்றிக்கொண்டு அலைவது தான்- அது தொடரும்வரை விமர்சிப்பேன்; எழுதுவேன்.

//மிகப்பெரிய வானுயர்ந்த கட்டிடங்கள் ஒரே நாள் இரவிலேயே எழுப்பப்பட்டவை அல்ல. அவை ஒவ்வொரு செங்கற்களாக தான் சிறுக சிறுகதான் எழுப்பப்படுகின்றன.//

அதே போல, இந்திய சுதந்திரம், ஜனநாயகம் போன்றவைகளும் பலரின் தியாகங்களால் செங்கல் செங்கலாக உருவாக்கப்பட்டவை. அதை அண்ணா ஹஜாரே போன்ற புல்லுருவிகள் கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

//இத்தனை வயதிலும் ஒரு பெரியவர் மக்களுக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்கு போராட துணிந்திருக்கிறார்.//

இந்தியாவில் நாற்பது வயதுக்குக் கீழ் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டியவர்கள் ஒருவராவது உண்டா? வயதுக்கு மரியாதை என்பது வேறு; கொள்கையை எதிர்ப்பது வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்! :-)

//படித்தவர்கள் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்றார் பாரதி....//

அதே பாரதி தான் "வாய்ச்சொல்லில் வீரரடி,"என்றும் பாடியிருக்கிறான்.

"கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி," என்றும் பாடியிருக்கிறான்.

அண்ணா ஹஜாரேயின் போராட்டம் எனக்கு அந்த வரிகளைத் தான் நினைவூட்டுகின்றன.

//எனது பின்னூட்டத்திற்கு பதில் வருமா? குறைந்த பட்சம் வெளியிடவாவது செய்வீர்களா? பார்ப்போம்.//

திருப்தியா? இன்னும் எழுதினாலும் பதில் என்னிடம் இருக்கிறது. அண்ணா ஹஜாரே மாதிரி மழுப்ப மாட்டேன். :-))

எனக்காக, அல்லது அண்ணா ஹஜாரேவுக்காக நிறைய நேரம் செலவழித்திருக்கிறீர்கள். வருகைக்கும் தாராளமான கருத்துக்களுக்கும், என்னையும் ஏராளமாக பதில் எழுத வைத்தமைக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//செவிலியன் said...

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதை தப்பா புரிஞ்சிக்கினாங்களோ???? ஊழலை ஊழல்வாதி எதிர்கிறத பாத்தா அப்படித்தான் தெரியுது....//

இல்லீங்க, அவரு ஊழலை எதிர்க்கவே இல்லை; எதிர்க்கிறதா பாவ்லா காட்டிக்கினு கீறாருங்க! சினிமாவுலே ஹீரோவைச் சுத்தி வில்லனோட ஆளுங்க ரவுண்டு கட்டி பில்ட்-அப் கொடுப்பாங்க இல்லே, அது மாதிரித்தான் இதுவும்....!

//ஆனா ஒரு விசயங்க...."எல்லாரும் எல்லாரையும் எப்பவும் ஏமாத்தமுடியாதுங்க......"//

முடியாது. அதுவும் அண்ணா ஹஜாரேயோட நாடகம் ரொம்ப நாளு தாக்குப்பிடிக்காது. சீக்கிரமே ஊத்திக்கப்போவுது பாருங்க! :-)

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//Noolulagam said...

Mr MANI, thanks and i salute you. what i and many of us have in my mind, you just brought out in beautiful words.thanks again.//

First of all, let me regret for the confusion with regard to my misunderstanding about your identity. Unexpectedly, I was rusing through several feedbacks and I presumed that you are Madhavraj. :-) Nevertheless, I have as much respect to you as much I have for all those whom I admire simply because you have taken the time to reply positively and substantially. I will reply to your views in the evening or else there is a fat chance that I might end up jobless today for getting caught hooked onto the net during office hours! :-)))))

Thank you for your patience and pragmatism.

settaikkaran said...

//admin said...

பொதுவாக நான் profile இல்லாதவர்களின் comments-க்கு பதிலளிப்பவன் இல்லை என்றாலும், அநாகரீகமாக எழுதாமல் இருந்ததால், பதிலளிக்கிறேன்./


//வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவியில் நிகழ்வுகளை பார்த்து .. இவன் நல்லவன் .. அவன் கெட்டவன் .. இவன் சொல்றது சரியில்லை .. இது எப்படி நடக்குதுன்னு பார்த்துடுவோம் .. நான் அப்போவே சொன்னேன்.. இந்த ஆழ நல்லவருன்னு நினைச்சேனே என்று இன்டர்நெட்டில் ஆலமரத்தடி பஞ்சாயத்து செய்பவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை உங்கள் மனைவியிடமோ .. கணவனிடமோ.. குழந்தைகளிடமோ சொல்லி பாராட்டு பத்திரம் வாங்கிகொள்ளுங்கள்..//

அதே போல நீங்கள் அண்ணா ஹஜாரே என்கிற போலியின் புகைப்படத்தை உங்கள் வீட்டில் மாட்டி, மாலைபோட்டு, பூஜை செய்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபடுங்கள். எவனும் கேட்க மாட்டான். ஆனால், அவரை இரண்டாவது காந்தி, அவர் நடத்துவது இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்றெல்லாம் மக்களின் காதிலே பூ சுற்றினால், அந்த பிம்பத்தை உடைத்து, ’இது தான் இந்த ஆளின் நிஜ உருவம்," என்று சொல்ல எனக்கு மட்டுமல்ல, யாருக்கும் உரிமை இருக்கிறது.

அண்ணா ஹஜாரேவுக்கு எதிரான குரலை அடாவடியாகப் பேசி அடக்க நினைப்பதை நிறுத்துங்கள்! இந்த நாடு எவ்வளவு அண்ணா ஹஜாரேவுக்கு சொந்தமானதோ அதே அளவு எனக்கும் என்னோடு ஒத்த கருத்துள்ளவர்களுக்கும் சொந்தமானது.

வாதங்களுக்கு பதில் கூற வக்கில்லாமல், எதிர்த்துப்பேசுகிறவன் வாயை அடைக்கிற கையாலாகாத்தனத்தை வேறு எங்காவது காட்டுங்கள். முடிந்தால், நெஞ்சில் துணிவிருந்தால், நீங்கள் ஒரு இடுகை எழுதி, நான் எழுதியிருப்பது எல்லாம் பொய் என்று நிரூபியுங்கள். துணிச்சல் இருக்கிறதா யாருக்காவது? இந்த இடுகையில் எழுதியிருப்பவை அனைத்துக்கும் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை வைத்து ஒரு புத்தகமே எழுதப்போகிறேன் வெகு விரைவில்!

//வெளியில் உங்கள் கருத்துக்களை கூறி நல்ல நோக்கத்தை திசை திருப்பாதீர்கள்.. அன்னா நல்லவரா .. இல்லை கெட்டவரா என்பதில்லை இப்போதைய கேள்வி..//

அதையெல்லாம் நீங்கள் முடிவு செய்ய முடியாது. அது என் விருப்பம்.

//இந்த ஜன லோக்பால் சட்டதில் உள்ள குறைகளை விமர்சனம் செய்யாதீர்கள்..//

நீங்கள் அரசின் லோக்பால் சட்டத்தை எரிக்கலாம். நான் குறை கூறக்கூடாதா? என்ன வெளையாடறீங்களா?

//எந்த ஒரு சட்டமும் ஒரே நாளில் இயற்றியது அல்ல!. எல்லோரும் சொல்வது போல அது வலுவில்லாத சட்டமாக இருந்தால் காங்கிரெஸ் அதை எதிர்திருக்காது!.//

காங்கிரஸ் மட்டுமல்ல, பல கட்சிகள் பல ஷரத்துக்களை எதிர்க்கின்றனர். ஜெயலலிதா உட்பட!

//முதலில் இதை கொண்டு வருவோம்.. பிறகு அந்த சட்டத்தில் உள்ள குறைகளை களைவோம். அதே போல அரசாங்கம் என்ன நினைக்கிறது .. மக்கள் என்ன நினைகிறார்கள் என்று உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு டிவி நிருபர் வேலை பார்க்காதீர்கள்!//

நீங்களும் அண்ணாவுக்கு ஜால்ரா தட்ட மெரீனாவுக்குப் போய் பத்து நிமிடம் உண்ணாவிரதம் இருங்கள்! :-) இல்லாவிட்டால் எட்டணா மெழுகுவர்த்தி கொளுத்துங்கள்; ஊழல் ஒழியும்! :-))

//முடிந்தால் போராடுங்கள் அல்லது போராடுபவர்க்கு ஆதரவு தெரிவியுங்கள் ... இல்லை கதவை மூடிக்கொண்டு செல்வி சீரியல் பாருங்கள் !//

இதையெல்லாம் சொல்ல எந்தக் கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது. அதுவும் அண்ணாவின் பஜனைகோஷ்டிக்கு அதிகாரம் கிடையவே கிடையாது. முடிந்தால், எனது வாதங்களுக்கு எதிர்வாதம் வையுங்கள். இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு போங்கள்!

settaikkaran said...

//Let it be. we need to be united to taggle corruption. we can not find a fault on the people who are getting united. let the same law find the faults we have amount ourself. including you, me, Anna and all these medias.//

With due respect, let me remind you that any movement that doesn’t have clarity about its basic objective can only be a showpiece in the political history. Would you agree that most of Anna’s followers are not even aware about the contents of the Jan Lokpal Bill? At best, the current euphoria that is to be seen can be termed as a show of strength against the Government and/or Corruption or for Anna Hazare. How do we ignore several such shows that had taken place earlier just because the current so called struggle has been glorified by the media. Are we expected to believe that this antithesis is a credible reflection of the people’s mood at large? It is really amazing to see that the practical hurdles for the first step, i.e. Jan Lokpal Bill are mounting more than ever before although the Civil Society claims otherwise.

//We have Law but with holes. let us fill those holes with new Law. for example yday they send him to Jail, but they released as soon as Rahul has intervened , what does this mean, is he president of india? who gave a power to release Anna from Jail. should not court do that? what is the Law follwed there. when they refuse to give grant to fast on JP Park, they tell that its decidion of poor police and we can not control. but later when Court send a person to Jail, these people can release. what a nonsense Boss. are they not fooling us here. are you afraid of contempting them? //

What happened yesterday is nothing but monstrous folly on the part of the Government. It just indicates the extent of desperation that has crept in the Government. It was unwarranted, ill-timed and absolutely ridiculous. I am convinced that had the Government granted permission to Anna, his fast unto death melodrama would have ended up being a damb squip and exposed the chinks in the civil society’s armour. By barring him from proceeding to JP Park and detaining him in haste, the Congress has handed over all its advantages on a silver platter to Anna Hazare. Congress Government will have to pay a very heavy price for this bungling of the whole issue and rightly it should.

However, I will never advocate or support the bravado of people like Anna Hazare who seem to challenge every law under the sun. His acts and speeches are provocative and have the potential to set very dangerous precedents in the days to come.

Noolulagam said...

Let us forget Anna for now. Can you give me a single person in tamil whom we can go behind and fight for our rights.

as you would have seen in my blog, i consider "Tamilaruvi Maniyan" as one such person. though i differ from his views sometimes, still i consider him as a proven person to stand behind.

Can you give who is in your mind or atleast a person in our history whom you believe is the correct person to stand behind.

Noolulagam said...

//With due respect, let me remind you that any movement that doesn’t have clarity about its basic objective can only be a showpiece in the political history. //

i fully agree with you, i don't consider this as movement itself. for a movement a long way to go.

movement can not happen overnight, as you pointed out in another post, it can not be just done with the help of TV media.

they will run away if someone shows their body nacked and they think that that's bigger issue than LokPal.

To bring a movement one needs to travel to all corners of the country and need to unit the people, which i believe is not there with any of the existing people (i can't say leaders). For Gandhi and JP that was their strenght.

however we can not stop showing our opposition to whatever government is doing, although i agree with you that someone should not think its a support for them.

in this issue, i can tell you that many people are united because of our government inability and its fully corrupted. not becasue of Anna or his team.

settaikkaran said...

//are we jealousy here? we don't want someone to gain any name. even the cause is fight gainst corruption.//

Why should anyone be jealous of Anna Hazare. I presume he will be in a highly unenviable position when the parliament session gets over. There are no takers for his Jan Lokpal Bill in the political circles (except Varun Gandhi). Even if the Jan Lokpal Bill is accepted by the Government, there is no likelihood that it would be placed before the houses in the immediate future. He will be back to square one and that is exactly what he wants. He wants to be before the media glare all the time rather than bringing in the lokpalbill.


//you are not searching a truth, closing your eyes and saying what you think is what truth.//

Now, please answer my question with a convincing answer.

Yesterday, Anna Hazare was arrested and late in the night his release order was issued. What did he do? He did not want to get out of the jail? Why? What was his demand?

“The Government must unconditionally permit him to undergo his fast unto death in JP Park and then only he will move out of the jail.”

If Anna Hazare is so particular and penchant about Jan Lokpal Bill, what he should have done?

“Unless and until the Jan Lokpal Bill is placed in the parliament, I will not move out of the Jail.” – Was he not expected to make such a statement rather than pestering to go on a fast yet again. This has beyond doubt proved that his intention is not to implement the Lokpal Bill but simply to beat around the bush saying that he wants to free the country from corruption.

This shows cleary that this man is craving for publicity and making fools of his followers. It has become very obvious now.

//99 people out of 100 is behind Anna for the cause he is working and not for a person called Anna. //

You are living in a different world I presume. Are you talking about those frivolous opinion polls? They are worth to be dumped to the trash. Do you remember the several opinion polls before the Assembly polls in several states (including Tamilnadu)?. Not one of them was proved right by the final result.

For your kind information, let me remind you that the Government had officially conducted perhaps the first and last referendum in 1967 with regard to giving separate status to Goa. Do you know what was the result? 83% of the people wanted Goa to be part of Maharashtra. But what is Goa today? A separate state. These opinion polls and sample surveys are not as authentic as Elections.

Let us take my posting. 1000 + people have read my article. 24 People have voted supporting me and 5 People have voted against this. That means that 83% support my posting and only 17% are against this. This means that Anna Hazare doesn’t have any mass support as is being claimed by you. :-))))))

Noolulagam said...

//Now, please answer my question with a convincing answer.

Yesterday, Anna Hazare was arrested and late in the night his release order was issued. What did he do? He did not want to get out of the jail? Why? What was his demand?

“The Government must unconditionally permit him to undergo his fast unto death in JP Park and then only he will move out of the jail.”

If Anna Hazare is so particular and penchant about Jan Lokpal Bill, what he should have done?

“Unless and until the Jan Lokpal Bill is placed in the parliament, I will not move out of the Jail.” – Was he not expected to make such a statement rather than pestering to go on a fast yet again. This has beyond doubt proved that his intention is not to implement the Lokpal Bill but simply to beat around the bush saying that he wants to free the country from corruption.
//
I might be wrong. but my understanding is that current fast is for asking government to stop going ahead with government version of lokpal bill.

//This shows cleary that this man is craving for publicity and making fools of his followers. It has become very obvious now. //

please understand that i am not Anna supporter or follower.

i am just againt this governemnt and their acts. so i am forced to get just united with this group.

also, i don't fully agree with Jan Lokpal bill, my request is please get the best otherwise get lost. current lokpal has nothing and hence i can't accept it.

Noolulagam said...

//99 people out of 100 is behind Anna for the cause he is working and not for a person called Anna. //

sorry, you misunderstood me.

what i am saying that, if you speak to people, you can understand that they are supporting Anna for the cause, here its fight against corruption.

what i am saying is that 99 out of 100 people who support Anna are because of this cause. not for what he has done.

if he tomorrow says something else, all of these people will not support him blindly. it will be based on what he stands for.

hope now you accept that i am living in correct world.

settaikkaran said...

//sorry, you misunderstood me.//

Probably yes! :-)

//what i am saying that, if you speak to people, you can understand that they are supporting Anna for the cause, here its fight against corruption.//

That would be true in anycase. If I conduct a poll in my blog about corruption, most people would say "NO" to corruption.

//what i am saying is that 99 out of 100 people who support Anna are because of this cause. not for what he has done.//

That is why I am trying to tell them that he is not reliable. They are laying faith on a wrong person if the proportion is as high as 99%. I am convinced that they are expecting a right thing from a wrong person whose objective is not what people believe to be.

//if he tomorrow says something else, all of these people will not support him blindly. it will be based on what he stands for.//

even now, I don't think many people believe in what he is saying. I dont believe the urban and literate population, which has always remained a mute spectator to all the perils of the country, can constitute a true representation of the whole country. The sudden uprsing of these intellecutals and the exaggerated enthusiasm does not promise to be sustainable anyway.

//hope now you accept that i am living in correct world.//

Not very far away I can guess...!


//I might be wrong. but my understanding is that current fast is for asking government to stop going ahead with government version of lokpal bill.//

Why should he take a circuitous route when he has the Government on the mat? His ultimate aim is to let the Jan Lokpal see the light of the day. If he wants that to happen, he should say that he won't get out unless it is done in THIS session of the parliament? Why is he doing this dillydallying?

//please understand that i am not Anna supporter or follower.//

I dont think so. You have been very rational throughout the conversation and very reasonable too.

//i am just againt this governemnt and their acts. so i am forced to get just united with this group.//

So am I.

//also, i don't fully agree with Jan Lokpal bill, my request is please get the best otherwise get lost. current lokpal has nothing and hence i can't accept it.//

My perception is simple. For eradicating corruption, the common man has to denounce it in his thought, speech and action which might be complimented or supplemented by a strong act. There can't be a one way traffic to eradicate corruption by the Government by itself.

Although I messed up with your identity, I can't help admiring the way with which you have put across your point of view. I think this is an ample testimony about a democracy where people can have diametrically opposite views but still can debate in a manner that gives more insights to both the parties concerned. I consider this a previlege to be reading and replying to your view points notwithstanding the differences in our individual perceptions.

Thank you very much Sir.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதையும் பாருங்கள்
http://apkraja.blogspot.com/2011/08/blog-post_17.html

SURYAJEEVA said...

நமக்கு எல்லாம் தெரிந்த இவ்வளவு விஷயங்களையும் வைத்துக் கொண்டு ஏன் இந்த தாத்தாவை ஒன்னும் செய்யாம அவர வச்சு அரசு காமடி பண்ணிக்கிட்டு இருக்குன்னு தான் தெரியல சாமி...

சக்தி பிரகாஷ் said...

ஒண்ணும் தப்பில்லைங்க தலைவரே. காங்கிரசுக்கு இப்படி எதாச்சும் எவனாச்சும் வந்து சொரண்டிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி அவனுக குலத்தொழிலான சுருட்டல சங்கடப்படாம பப்ளிக் -ஆ செய்ய ஆரம்பிச்சுருவாணுக. அதுமட்டுமில்லாம 2 பேர் அடிச்சுகிட்டா 3 ஆவது ஆளுக்கு தான லாபம். இங்க 3 அவது ஆளுங்கறது நம்ம தான். நமக்கு என்ன லாபம் நா 2 தரப்போட வண்டவாலத்தையும் இந்த அடிதடில தெரிஞ்சிக்கலாம். எல்லாம் நன்மைக்கே. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

tekvijay said...

http://www.vinavu.com/2011/08/17/lokapal-v2/#comment-47446

settaikkaran said...

//Silicon Sillu said...

http://www.vinavu.com/2011/08/17/lokapal-v2/#comment-47446//

You are a poor looser! :-)

settaikkaran said...

//சிவானந்தம் said...

காற்று எப்படி அடிக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் பேசுவதுதான் இப்போதைய பேஷன்.ஆனால் அந்த தியரியை மீறி தனக்கு சரி எனப்பட்டதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களுடைய கருத்தில் நானும் உடன் படுகிறேன்.//

எனக்கு மட்டுமல்ல; பலருக்கு இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. ’எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..." என்ற புரட்சித்தலைவரின் பாடல் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? :-)

//மேலே குறிப்பிட்டிருக்கும் உங்களின் இரண்டு வரிகள் இந்த போராட்டத்தின் நிஜமான முகத்தை காட்டுகிறது.//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதையும் பாருங்கள் http://apkraja.blogspot.com/2011/08/blog-post_17.html//

பார்த்துப் பின்னூட்டமும் இட்டேன் பானா ராவன்னா! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//suryajeeva said...

நமக்கு எல்லாம் தெரிந்த இவ்வளவு விஷயங்களையும் வைத்துக் கொண்டு ஏன் இந்த தாத்தாவை ஒன்னும் செய்யாம அவர வச்சு அரசு காமடி பண்ணிக்கிட்டு இருக்குன்னு தான் தெரியல சாமி...//

அரசியல்தான் வேறென்ன? பிரிஞ்சுபோன ஷரத்பவாரை அப்போ அவர் எதிர்த்திட்டிருந்தாரு, அதுனாலே அண்ணா மேலே காங்கிரஸ் டச் பண்ணலே! இப்போ டூ லேட்டாயிருச்சு! :-)

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//Sakthi Prakash N said...

ஒண்ணும் தப்பில்லைங்க தலைவரே. காங்கிரசுக்கு இப்படி எதாச்சும் எவனாச்சும் வந்து சொரண்டிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி அவனுக குலத்தொழிலான சுருட்டல சங்கடப்படாம பப்ளிக் -ஆ செய்ய ஆரம்பிச்சுருவாணுக.//

அவங்களாவது விடுறதாவது? கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் அவங்களாலே விட முடியாது. :-)

//அதுமட்டுமில்லாம 2 பேர் அடிச்சுகிட்டா 3 ஆவது ஆளுக்கு தான லாபம். இங்க 3 அவது ஆளுங்கறது நம்ம தான். நமக்கு என்ன லாபம் நா 2 தரப்போட வண்டவாலத்தையும் இந்த அடிதடில தெரிஞ்சிக்கலாம். எல்லாம் நன்மைக்கே. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//

அப்படித்தான் எடுத்துக்கிட்டுப் போகணும் போலத்தெரியுது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

Anbu said...

இந்த கட்டுரையை படித்து அண்ண ஹசாரேவை கன்னை மூடிக்கொண்டு ஆத‌ரிக்கும் சில படித்த முட்டாள்கள் திருந்தினால் நாட்டுக்கு நல்லது..

Unknown said...

உண்ணா ஹஜாரே

anbu said...

நன்பரே மிகவும் அருமையான பதிவு. எனது நெடு நாளைய சந்தேகம் இப்போது தீர்ந்து விட்டது. நன்றிகள் பல! தொடரட்டும் உங்களது முயற்சிகள். மீண்டும் நன்றிகள் பல!

Pradeep said...

Good Review sir !!!!!

settaikkaran said...

//Anbu said...

இந்த கட்டுரையை படித்து அண்ண ஹசாரேவை கன்னை மூடிக்கொண்டு ஆத‌ரிக்கும் சில படித்த முட்டாள்கள் திருந்தினால் நாட்டுக்கு நல்லது..//

அவ்வாறு நடந்தால் நல்லது. நடக்காதுபோனாலும், இதை எழுதியது குறித்து நான் வருந்தவோ, வெட்கப்படவோ எந்தக் காரணமுமில்லை.

மிக்க நன்றி!

//john sabin raj said...

உண்ணா ஹஜாரே//

:-)

நன்றி!

//anbu said...

நன்பரே மிகவும் அருமையான பதிவு. எனது நெடு நாளைய சந்தேகம் இப்போது தீர்ந்து விட்டது. நன்றிகள் பல! தொடரட்டும் உங்களது முயற்சிகள். மீண்டும் நன்றிகள் பல!//

இன்னும் பல தகவல்கள் மீதமுள்ளன. பிறிதொரு சமயத்தில் அவசியம் எழுதுவேன். மிக்க நன்றி! :-)

//Pradeep said...

Good Review sir !!!!!//

Thank You very much! :-)

Prakash Inbasekaran said...

read about many officers in FBI who were big robbers and thief's earlier and now they are rocking officers... i dont argue whether Ann is gud person or bad but if something happens gud to country because of one bad person i am Okay to accept. To understand the dirty politics then we need to be dirty and chameleons for sometime... I totally agree with you... Have you ever tried to take any steps towards corruption? how many articles have u written against corruption?

settaikkaran said...

prakash said...

//read about many officers in FBI who were big robbers and thief's earlier and now they are rocking officers//

You are from USA I suppose. I know little about that country. I am just Indian.

//i dont argue whether Ann is gud person or bad but if something happens gud to country because of one bad person i am Okay to accept.//

The fact of the matter is nothing good is going to happen because, for his draft to be enacted, the entire constitution needs a thorough overhauling which is not within the limits of this minority Government. Secondly, it has plenty of flaws, a few of which I have explained in the post iteself. Thirdly, there are several bills waiting to be passed during this parliament session and no political party has owned up the responsibility to speak for Anna's bill. Last but not the least, Anna has earned the contempt of all political parties for many of his irresponsible statements and autocratic behaviour forcing many to oppose him by exposing his past.


//To understand the dirty politics then we need to be dirty and chameleons for sometime... I totally agree with you... //

You agree with me? :-)


//Have you ever tried to take any steps towards corruption? how many articles have u written against corruption?//

If you have the patience, go through the feedbacks for this post and you will know yourself.

Thanks! :-)

bukari said...

ஊழலை ஒழிக்கவே முடியாது ....
ஏன்னா அவ்வளவு பெரிய ரப்பர் கணடு பிடிக்கலை ....

தாறுமாறு said...

சேட்டை,
என்ன இந்த மாதிரி anti-climax ஆயிடிச்சி?

Surprise announcement

“I have made the decision of my life. It is up to the government to pass the bill. If the bill is not passed in this (on going) session, then I will continue my fast till my last breath,” the 73-year-old social activist told reporters at the fast venue

செல்வா said...

எனக்கு எது சரி, எது தவறு என்பதில் குழப்பமே.. ஆனால் உங்கள் பதிவு எனக்கு அன்னா ஹசாரேவின் இன்னொரு முகத்தைக் காட்டியது. மிக்க நன்றி..

//இவ்வளவு ஏன், ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? //

ssk said...

பிளாக்மெயில் பண்ணுவதை எப்படி ஏற்பது. ? பலர் இணைந்து திட்டம் தீட்ட வேண்டும். ஒரு கூட்டம் மற்றும் இதை செய் என்று எப்படி பலர் மீது திணிக்க முடியும்? இங்கு என்ன அரசன் ஆட்சியா நடக்கிறது கருத்தை திணிக்க?
சுவிஸ் நாட்டு பேங்கில் போட்டால் கருப்பு பணம். நம் நாட்டில் இருக்கும் கோவில் போட்டால் ஒன்றும் இல்லையா?
கல்லுக்கு எதற்கு காசும் பணமும் தங்கமும் நகையும் கோடி கோடியாக? எல்லாம் ஏழை மக்களின் உழைப்பு, இரத்தம் தானே. இதை கேட்க அண்ணாவிற்கு துப்பு உண்டா?
ஊழல் தொடங்கும் இடம் கோவில் தானே. எனக்கு மட்டும் கொடு என்ற பேராசையின் விளைவுதானே கடவுள்.
அண்ணா இந்த கடவுளையும் கோவிலையும் ஒழிக்க முன் வருவா? கடவுளால் எதாவது எங்காவது நடந்து உண்டா?
இல்லாத ஒன்றை சொல்லி மக்களை இன்று வரை ஏய்த்து பிழைப்பதை எப்போது நிறுத்து முன் வருவார்கள்.
நாளை என்ன நடக்கும் என்பதை எங்குமுள்ள மக்கள் செயல் தானே தீர்மானிகிறது?
மக்களை அறிவு அற்று வைத்திருக்க ஆசைபடும் இவர்களை என்ன சொல்வது? சுயநல வாதிகள்.
விளம்பர பிரியர்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ உண்ணா ஹஜாரே....

கொஞ்சம் லேட் என்றாலும்... விஷயம் இன்னும் முடியவில்லையே... நீங்கள் வேறு, 'இதுதான் அண்ணா ஹசாரே பத்தி கடைசி பதிவு' என்று சொல்லிவிட்டீர்களே... யாராவது அஞ்சல் ஓட்டப்பந்தயம் தொடர வேண்டுமே... அரசுக்கு கொடுக்கப்பட்ட கேடு ஸாரி கெடு வேறு இன்னும் பாக்கி இருக்கே..!

அதனால்... சகோ.செட்டைக்காரன்...
நம் கருத்தை மேலும் நாம் வலுப்படுத்தவேண்டி....

ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்..!

....என்று நான் என்னால் இயன்ற வரை சிறிது முயன்று இருக்கிறேன் சகோ..! படித்துவிட்டு தங்கள் நிறை குறையை சுட்டுங்கள் சகோ.

settaikkaran said...

//bukari said...

ஊழலை ஒழிக்கவே முடியாது ....ஏன்னா அவ்வளவு பெரிய ரப்பர் கணடு பிடிக்கலை....//

இந்த லோக்பால் கூட ரப்பர் மாதிரி இழுத்திட்டே போகுதே! :-)
நன்றி நண்பரே!

//தாறுமாறு said...

சேட்டை, என்ன இந்த மாதிரி anti-climax ஆயிடிச்சி?

//“I have made the decision of my life. It is up to the government to pass the bill. If the bill is not passed in this (on going) session, then I will continue my fast till my last breath,” the 73-year-old social activist told reporters at the fast venue//

அவரு கெஞ்சினா மிஞ்சுவாரு; மிஞ்சினா கெஞ்சுவாரு! காங்கிரஸுக்கு மட்டும் கொஞ்சம் மெஜாரிட்டியும், ஒரு துணிச்சலான பிரதமரும் இருந்திருந்தா, இந்த கேலிக்கூத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிருப்பாங்க! :-)

நன்றி நண்பரே!

settaikkaran said...

//கோமாளி செல்வா said...

எனக்கு எது சரி, எது தவறு என்பதில் குழப்பமே.. ஆனால் உங்கள் பதிவு எனக்கு அன்னா ஹசாரேவின் இன்னொரு முகத்தைக் காட்டியது. மிக்க நன்றி..//

இன்னும் இருக்கிறது நண்பரே! ஆனால், வழக்கத்துக்கு மாறாக, நான் அன்னாவைப் பற்றி நிறையவே விமர்சித்து விட்டதால், இது போதும் என்று நிறுத்தியிருக்கிறேன். மிக்க நன்றி! :-)

//ssk said...

பிளாக்மெயில் பண்ணுவதை எப்படி ஏற்பது. ? பலர் இணைந்து திட்டம் தீட்ட வேண்டும். ஒரு கூட்டம் மற்றும் இதை செய் என்று எப்படி பலர் மீது திணிக்க முடியும்? இங்கு என்ன அரசன் ஆட்சியா நடக்கிறது கருத்தை திணிக்க?//

இதையே பல ஆங்கில நாளேடுகள் Annarchy என்று விமர்சித்து வருகிறார்கள். நான் வைத்ததுதான் சட்டம் என்று ஒரு கூட்டம் சொல்வதை ஏற்பது எப்படி?

//சுவிஸ் நாட்டு பேங்கில் போட்டால் கருப்பு பணம். நம் நாட்டில் இருக்கும் கோவில் போட்டால் ஒன்றும் இல்லையா? கல்லுக்கு எதற்கு காசும் பணமும் தங்கமும் நகையும் கோடி கோடியாக? எல்லாம் ஏழை மக்களின் உழைப்பு, இரத்தம் தானே. இதை கேட்க அண்ணாவிற்கு துப்பு உண்டா?//

தனது முயற்சியால்தான் மஹாராஷ்டிராவில் ஏழு ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் வந்ததாகப் பெருமைப்படுகிறார். இப்போது அந்த மாநிலத்தில் ஊழலின் லட்சணம் ஊர்சிரிக்கிறதே? :-)

//ஊழல் தொடங்கும் இடம் கோவில் தானே. எனக்கு மட்டும் கொடு என்ற பேராசையின் விளைவுதானே கடவுள். அண்ணா இந்த கடவுளையும் கோவிலையும் ஒழிக்க முன் வருவா? கடவுளால் எதாவது எங்காவது நடந்து உண்டா? இல்லாத ஒன்றை சொல்லி மக்களை இன்று வரை ஏய்த்து பிழைப்பதை எப்போது நிறுத்து முன் வருவார்கள்.//

வித்தியாசமான கோணங்களில் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். சற்று ஆழமாய் யோசிக்கத் தக்க கேள்விகளே!

//நாளை என்ன நடக்கும் என்பதை எங்குமுள்ள மக்கள் செயல் தானே தீர்மானிகிறது? மக்களை அறிவு அற்று வைத்திருக்க ஆசைபடும் இவர்களை என்ன சொல்வது? சுயநல வாதிகள். விளம்பர பிரியர்கள்.//

அதுதான் உண்மை! ஊடகங்கள் தூக்கிப்பிடித்திருப்பதால், இவர்கள் தங்களது போராட்டங்களை விளம்பரப்படுத்தி, பெரும்புரட்சி ஏற்பட்டிருப்பதாய் ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முயன்று வருகிறார்கள். மிக்க நன்றி நண்பரே! :-)

Unknown said...

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Anbu said...

எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு- மாற்றத்தை விட விழிப்புணர்வே மக்களுக்கு அவசியமானது...

vinu said...

i need English version of this article kindly help me