Sunday, February 7, 2010

பயணிகள் கவனத்திற்கு

மீட்டர்கேஜ் ரயிலெல்லாம் இருந்த காலத்து ஜோக்கோட இந்தப் பதிவை மங்களகரமா ஆரம்பிக்கிறேன்.

ஒரு ஆளு முத முதலா திருநேலிலேருந்து விழுப்புரத்துக்கு ரயிலிலே போனாராம். டிக்கெட் கலெக்டர்கிட்டே "ஐயா, தயவு செய்து என்னை விழுப்புரம் வந்ததும் எழுப்பிருங்க; நான் இறங்கணும்,"னு கேட்டுக்கிட்டாராம் (சே, விழுப்புரம் வந்தா எழுப்பறோமுங்கிற மொக்கையை இன்னொரு இழையிலே ஏற்கனவே போட்டுத்தொலைச்சிட்டனே!). அந்த டிக்கெட் கலெக்டரும் "அதுக்கென்ன, எழுப்பிடறேன்,"ன்னு சொன்னதும் இந்தாளும் நிம்மதியாத் தூங்கிட்டாராம். மறுநாள் காலையிலே கண்முழிச்சுப் பார்த்தா வண்டி தாம்பரத்துலே நின்னுக்கிட்டிருந்ததாம். இந்தாளு டிக்கெட் கலெக்டரைப் புடிச்சுக் கோபத்துலே தாறுமாறத் திட்டினாராம். ஆனா, டிக்கெட் கலெக்டர் ரொம்ப யோசனையோட எதுவுமே பேசாம சிலை மாதிரி நின்னாராம். "யோவ், விழுப்புரத்துலே இறங்க வேண்டியவனை எழுப்பறேன்னு சொல்லி, தாம்பரத்துக்கே கூட்டிட்டு வந்திட்டு என்னய்யா யோசனை வேண்டிக்கிடக்கு?"ன்னு இவரு கேட்டாராம். அதுக்கு டிக்கெட் கலெக்டர் சொன்னாராம்: "யோவ், நீ என்னைத் திட்டுறதைப் பத்தி யோசிக்கலேய்யா! நீன்னு நினைச்சு விழுப்புரத்துலே வேறே எவனையோ தப்பா எழுப்பி இறக்கி விட்டுட்டேனே, அவன் என்ன திட்டிக்கிட்டிருப்பான்னு யோசிச்சிட்டிருக்கேன்,"ன்னு சொன்னாராம். இது ஒரு சாம்பிள்..!

ரயிலைப் பத்தி சுதந்திரம் கிடைச்ச காலத்துலேயிருந்து நிறையவே ஜோக்குங்க இருந்தாலும் கூட, நம்ம லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சரானதும் தான் ரயில் ஜோக்குகளிலே ஒரு பசுமைப்புரட்சியே ஏற்பட்டதுன்னு சொல்லலாம். அவரு ரயில்வே பட்ஜெட்டுலே இலாபத்தைக் காட்டுனபோது கூட சபாநாயகர் உட்பட எல்லாருமே அதையும் ஜோக்குன்னு நினைச்சு சிரிச்சதாச் சொல்லுறாங்க; ஆனா, நெசமாவே அவரு தான் ரயில்வே துறையாலும் இலாபம் சம்பாதிக்க முடியுமுன்னு காமிச்சாரு! இதுலேருந்து என்ன தெரியுது? வேடிக்கையா பேசுறவங்களை அப்பப்போ சீரியசாவும் எடுத்துக்கணும்! இனிமேல் என்னோட பதிவுகளையும் சீரியசாப் படிச்சு வாழ்க்கையிலே பயனுற வேண்டும்னு புரிஞ்சுக்கோங்க!

மேலே சொன்ன ஜோக்குக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்குறீங்களா? இருக்குங்க!

நேத்து பீச்சிலேருந்து தாம்பரத்துக்கு மின்சார ரயிலில் வந்தபோது ஒரு புது அனுபவம் ஏற்பட்டது. வண்டி கிளம்புனதுமே "அடுத்த ரயில் நிலையம் சென்னை கோட்டை,"ன்னு ஒலிபெருக்கியிலே அறிவிப்பு வந்திச்சு! ஏதாவது அசரீரியா இருக்குமோன்னு அண்ணாந்து பார்த்தா நெசமாவே தலைக்கு மேலே ஒலிபெருக்கியிலே தமிழ்,ஆங்கிலம்,இந்தி மூணு மொழியிலேயும் அடுத்து வரப்போற ஸ்டேஷன் எது, இப்போ வண்டி எந்த ஸ்டேஷனிலே நிக்குதுன்னு தொடர்ந்து அறிவிப்பு வந்துக்கிட்டே இருந்தது. எல்லா வண்டியிலேயும் இருக்கா, இது தொடர்ந்து செய்வாங்களான்னு நாளைக்குப் போனாத் தான் தெரியும். ஆனா, ரொம்ப நல்ல விஷயமுண்ணே!

ஆடிக்கொருவாட்டி அமாவாசைக்கொருவாட்டி மின்சார ரயிலிலே போறவங்களை விடுங்க! தினமும் போறவங்களைக் கேளுங்க! குறிப்பா பீச்,தாம்பரம் மாதிரி புறப்புடுற இடங்களிலே சில பேருக்கு வழி சொல்லியே நாம் ஒரு வழியாயிருவோம்.

"சார்! இது தாம்பரமா? செங்கல்பட்டா?"

"ரெண்டுமில்லே! இது பீச்!"

"அதில்லே சார், இது தாம்பரம் போகுதா, செங்கல்பட்டு போகுதா?"

"செங்கல்பட்டு!"

"தாம்பரம் வண்டி எங்கே வரும்?"

"இது போகும்; ஏறுங்க சார்!"

சொல்வதற்குள் அவர் இன்னொருவரிடம் போய் தாம்பரம் வண்டி எந்த நடைமேடைக்கு வரும் என்று கேட்டு ஓடியிருப்பார். ஏனய்யா, செங்கல்பட்டு வண்டியிலே தாம்பரம் போனால் புடிச்சு ஜெயில்லே போட்டுருவாங்களா?

இது ஒரு விதம்! இன்னொரு விதம்....!

"எக்ஸ்க்யூஸ் மீ! இது பழவந்தாங்கல் போகுமா?"

"போகும் சார்!"

அவர் உடனே வண்டிக்குள்ளே வெறிகொண்ட வேங்கை மாதிரிப் புகுந்து சரியாக நமக்கு எதிரே அமர்ந்து கொள்வார்.

"வண்டி எப்போ கிளம்பும்?"

"செங்கல்பட்டு போற வண்டி வந்ததும் கிளம்பும்?"

"அது அடுத்த பிளாட்பாரத்துலே வருமா?"

பின்னே இதே பிளாட்பாரத்துலேயா வரும்? என்னய்யா கேள்வி இது??????

"ஆமாம்!"

"எத்தனை மணிக்கு வரும்?"

"வர்ற நேரம் தான்!"

மூன்றாவது பிளாட்பாரத்துக்கு செங்கல்பட்டு செல்கிற வண்டி வந்ததும், இந்த ஆள் "வண்டி வந்திருச்சு," என்று சொல்லிப் புன்னகைப்பார். ’அது எங்களுக்கும் தெரியுதுய்யா யோவ்,’னு சொல்லணும் போலத் தோணும். பல்லைக்கடிச்சிட்டு உட்கார்ந்திருப்போம்.

"பழவந்தாங்கல் எப்போ வரும்?"

"மவுண்ட்டுக்கு அடுத்த ஸ்டேஷன்!"

"மவுண்ட் எப்போ வரும்?"

வருகிற ஆத்திரத்துக்கு வண்டியிலிருந்து இறங்கி பீச்சிலிருந்து தாம்பரத்துக்குப் பொடிநடையாக நடந்தே போய் விடலாமா என்று எரிச்சலாக வரும்.

"நிறைய நேரம் இருக்கு சார்! வரும்போது சொல்லறேன்."

"ரொம்ப தேங்க்ஸ்!" க்கும்! ரொம்ப முக்கியம்....!!

கொஞ்ச நேரம் கழிச்சு வண்டி கிளம்பும். உடனே....

"சார், வண்டி கிளம்பிருச்சு...!"

எங்களுக்குத் தெரியாதாக்கும்?

"பழவந்தாங்கலுக்கு அடுத்த ஸ்டேஷன் எது சார்?"

"மீனம்பாக்கம்!"

"ஓ! அப்படீன்னா மீனம்பாக்கத்துக்கும் மவுண்ட்டுக்கும் நடுப்புலே இருக்குதா பழவந்தாங்கல்!"

இது லொள்ளு தானே? இந்தாளுக்குப் போக வேண்டியதோ பழவந்தாங்கல்! அது நடுப்புலே இருந்தா என்ன, இடுப்புலே இருந்தா என்ன? நாம கடுப்புலே இருக்கிறது தெரியாம டார்ச்சர் பண்ணுறாங்கய்யா!!

மாம்பலத்தில் கொஞ்சம் அதிகமாகக் கூட்டம் இறங்குமா, உடனே அடுத்த கேள்வி பிறக்கும்.

"இது எந்த ஸ்டேஷன் சார்?"

"மாம்பலம்!"

"பழவந்தாங்கலுக்கு இன்னும் எத்தனை ஸ்டேஷன் இருக்கு?"

வர்ற எரிச்சலுக்கு இந்தாளை கிண்டியிலே இறக்கி விட்டுரலாமான்னு கூடத் தோணும். இருந்தாலும் என்ன செய்வது? பொறுமையாக....

"சைதாப்பேட்டை,கிண்டி,மவுண்ட்..அடுத்தது பழவந்தாங்கல்...!"

"ஓ! இன்னும் மூணு ஸ்டேஷன் தானிருக்கா...?"

நல்ல வேளை, ஒண்ணு, ரெண்டு மூணாவது தெரிஞ்சிருக்கே!

இப்படி எத்தனை நாளு, எத்தனை ஆளு டென்சன் பண்ணியிருக்காங்க தெரியுமா? இந்த புது அறிவிப்பு முறையினாலே இனிமேலாவது கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுறவங்களோட தொல்லை குறையும்னு எதிர்பார்க்கலாம். புதுசா மின்சார ரயிலிலே வர்றவங்களுக்கும் இது வசதி தானே?

எங்களை மாதிரி வருஷக்கணக்கா போயிட்டு வர்றவங்க பீச்சுலே தூங்க ஆரம்பிச்சாலும், வண்டி நிக்குற ஒவ்வொரு ஸ்டேஷன் பெயரையும் கண்ணை மூடிட்டே சொல்ல முடியும். மூக்கைப்பொத்துற நாத்தம் வந்துதுன்னா அது கோட்டை ஸ்டேஷன், டாஸ்மாக் வாசனை வந்திச்சுன்னா அது நுங்கம்பாக்கம், கொத்துமல்லி, கறிவேப்பிலை வாசனை வந்தா மாம்பலம், மல்லிகைப்பூ, கனகாம்பரம் வாசனை வந்தா பழவந்தாங்கல், வெளிநாட்டு சென்ட் வாசனை வந்தா அது திரிசூலம்னு ஏகப்பட்ட அயிட்டமிருக்கு....!

12 comments:

அண்ணாமலையான் said...

பாவம்தான் நீங்க

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப அனுபவிச்சிருப்பீங்க போல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
ஒரு வழியாத்தான் ஆகி இருக்கீங்க.. இப்ப இதை ப்படிச்சு சிரிச்சி நாங்க ஒருவழியாகிட்டோம்.. மேலே இருக்க ஜோக்கை விட கீழ இருக்கற ஜோக் தான் சூப்பர்..( நாங்க வடிவேலு கஷ்டப்படுவதைப்பார்த்து சிரித்துப் பழக்கப்பட்டவர்களாக்கும்..)

Ananya Mahadevan said...

ரொம்ப ரொம்ப ரசிக்கும்படியா இருந்தது இந்த ரயில். இன்னும் நிறைய ரயில்கள் வரட்டும்

Rajan said...

Kanagaambaratthukku vaasam irukka? Sari atha vidunga kanagaava kaanomnu pesikkarangale ! Appidiyaa?

settaikkaran said...

//பாவம்தான் நீங்க//

ரொம்ப நன்றிங்க! வருகைக்கும் அனுதாபத்துக்கும்! :-)

settaikkaran said...

//ரொம்ப அனுபவிச்சிருப்பீங்க போல...//

அதை ஏன் கேட்கறீங்க? அது ஒரு தொடர்கதை! நன்றிங்க

settaikkaran said...

//ஒரு வழியாத்தான் ஆகி இருக்கீங்க.. இப்ப இதை ப்படிச்சு சிரிச்சி நாங்க ஒருவழியாகிட்டோம்..//

அது தான் குறிக்கோளே! ஒரு நாளைக்கு ஒருத்தரையாவது சிரிக்க வைச்சா அதை விட வேறென்ன வேண்டும்?

ரொம்ப நன்றிங்க! தொடரும் உங்க ஆதரவுக்கு...!

settaikkaran said...

//ரொம்ப ரொம்ப ரசிக்கும்படியா இருந்தது இந்த ரயில். இன்னும் நிறைய ரயில்கள் வரட்டும்//

அப்படீன்னா தொடர்ந்து அனுபவிக்கணுமுன்னு ஆசீர்வாதமா? ஏனுங்க??? :=))))

நன்றிங்க

settaikkaran said...

//Kanagaambaratthukku vaasam irukka?//

:-(((((

Sari atha vidunga kanagaava kaanomnu pesikkarangale ! Appidiyaa?

ஐயையோ! யாரோ ஆவி அமுதாவாமே? நமக்கு ஏனுங்க வம்பு? சந்திரமுகி படம் பார்த்திட்டே நான் ஒருவாரம் தூங்கலே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

சென்ஷி said...

இன்னொருக்கா அசத்தல் போட்டுக்கறேன்.. :)

புதுசா சென்னைக்கு வந்து மின்சார ரயில் பிடிச்சு ஸ்டேசன் பேர மனப்பாடம் செஞ்சு வைச்சு மத்தவங்களுக்கு உதவி செஞ்ச என் நல்ல மனசுக்கு இந்த பதிவு நல்லா புரியுது..

settaikkaran said...

//இன்னொருக்கா அசத்தல் போட்டுக்கறேன்.. :) //

இன்னொரு நன்றி சொல்லிக்கிறேன். :-))

புதுசா சென்னைக்கு வந்து மின்சார ரயில் பிடிச்சு ஸ்டேசன் பேர மனப்பாடம் செஞ்சு வைச்சு மத்தவங்களுக்கு உதவி செஞ்ச என் நல்ல மனசுக்கு இந்த பதிவு நல்லா புரியுது..

ஹா...ஹா! நம்ம கட்சியா? வாங்க வாங்க!!