Friday, July 1, 2011

அண்ணாஜிப்பழம்-பாகம்.01



கு.மு.கழத்தின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியும், கொள்கைப்பரப்புச் செயலாளர் நெப்போலியன் நெடுவளவனும் முதல் ரவுண்டை முடித்துக் கொண்டிருந்தபோது, பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி பரபரப்போடு ஓடிவந்தார்.

“தலீவரே! அண்ணான்னு ஒருத்தரு உங்களைப் பார்க்குறதுக்கு வாசல்லே வந்திருக்கிறாரு!”

“என்னது? அண்ணான்னு வந்திருக்கிறாரா? எனக்குத் தம்பியே கிடையாதேய்யா! என்ன விசயமா வந்திருக்கிறாராம்?”

“என்னமோ ’பில்’ விசயமா பேசணுமாம்!”

“இன்னாடா அனியாயமா இருக்குது! நம்ம எடத்துலே சரக்கடிக்கிறதுக்கு எதுக்கு பில் கொடுக்கணும்?”

”தலீவரே, இது வேற மேட்டரு, நான் டீல் பண்றேன்,” என்று இடைமறித்தார் நெப்போலியன் நெடுவளவன்.“யோவ் பக்கிரிசாமி, கதர் போட்டுக்கினு குல்லா போட்டுக்கினுக்கிறாரா?”

“ஆமாண்ணே!”

“அப்போ வந்திருக்கிறது அண்ணா ஹஜாரே! தலீவரு பிசியா இருக்கிறாரு, கொஞ்ச நேரம் வெளியிலே குந்திக்கினு இருக்கச் சொல்லு!”

பக்கிரிசாமி நகர்ந்ததும், “யோவ் நெடுவளவா, யாருய்யா இந்த அண்ணா ஹஜாரே?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி.

“அவரு ஒரு காமெடி பீசு!” என்றார் நெடுவளவன். “இன்னிக்கு இந்தியாவுலே இருக்கிற எல்லா டிவிக்காரனுங்களும் அவரு கக்கூஸ் போறதைத் தவிர மத்தது அல்லாத்தியும் லைவ்-டெலிகாஸ்ட் பண்ணிக்கினுக்கீறாங்க!”

“யோவ், அவ்வளவு பெரிய ஆளை வெளியே உட்காரச் சொல்லிட்டியே!” என்று பதறினார் கிருஷ்ணசாமி.

“ரிலாக்ஸ் தலீவரே! அந்தாளு ஒரு டம்மி பீசு! சொல்லுறது ஒண்ணு; செய்யுறது ஒண்ணு! மத்த அரசியல்வாதிங்க மாதிரி நாமளும் இந்தாள வளர்த்து விட்டிரக்கூடாது!”

”அந்த அண்ணாவை வெயிட் பண்ணச்சொல்லிட்டேன் தலீவரே,” என்று திரும்பிவந்து தகவல் கொடுத்தார் பகார்டி பக்கிரிசாமி.

“யோவ் பக்கிரிசாமி, அந்தாளுக்கு பத்து நிமிசத்துக்கு ஒருவாட்டி காப்பி, டீ, ஜூஸ் கொடுத்திட்டேயிரு. இல்லாப்போனா, கு.மு.க. ஆபீசுலே அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் கீறாருன்னு டிவிலே நியூஸ் போட்டிருவானுங்க!”

”சரிண்ணே!”

பக்கிரிசாமி நகர்ந்ததும் கிருஷ்ணசாமி குழப்பத்தோடு நெடுவளவனைக் கேட்டார்.

"ஏன்யா, ஒரு ஃபுல் வாங்குனா, ஒரு குவார்ட்டர் ஃப்ரீன்னு தேர்தல் அறிக்கையிலே சொல்லியும் டெபாசிட் கிடைக்காமத் தோத்துப்போய் நிக்குறோம். நம்மளையும் ஒரு கட்சின்னு மதிச்சு ஒரு பெரீய்ய மனிசன் வந்தா, அவரை இப்படி வாசல்லே உட்காரச் சொல்றியே?"

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது தலீவரே," என்று சிரித்தார் நெடுவளவன். "இவுரு ஊழலை ஒழிக்கிறதுக்காக ஒரு சட்டம் கொண்டாரணும், அத்தக் கொண்டுவராங்காட்டி நான் நாஷ்டா துண்ணுறதில்லேன்னு தில்லியிலே பெர்சா அழும்பு பண்ணுனாரு! அல்லா டிவிக்காரனுங்களும் டேரா போட்டு கிரிக்கெட் மேட்ச் மாதிரி ரிலே பண்ணுனானுங்க! பணக்காரன் பின்னாலேயும் பைத்தியக்காரன் பின்னாலேயும் பத்து பேரு போவுறது நம்மூருலே புச்சில்லையே! ஆளாளுக்கு ஒரு மோம்பத்தியைக் கொளுத்திக்கினு வெளக்குப் புடிச்சானுங்க!"

"அப்படியா?"

"அத்த ஏன் கேக்குறே தலீவரே! நம்ம ஊருலே கூட காந்தி செலயாண்ட கூட்டம் போட்டானுங்க! மாலாப்பூர் மாமாங்களும் சவுகார்பேட்டை சேட்டானுங்களும் வந்து இங்கிலீஷுலே பேசுனாங்க! அல்லாரும் ரோஸ் பவுடர் போட்டுக்கினு வந்து போட்டோவுக்கும் டிவிக்கும் போஸ் கொடுத்தானுங்க! அப்பாலே பாதி எரிஞ்ச மோம்பத்தி, தீக்குச்சி அல்லாத்தியும் காந்தி செலயாண்ட போட்டு கலீஜ் பண்ணிட்டு, திர்லக்கேணி, ஜாம்பஜார், ஐஸவுஸு டாஸ்மாக்குலே சரக்கடிச்சிட்டு வூடு போய்ச் சேர்ந்தானுங்க!"

"அப்ப நம்மாளுங்க அங்கேயும் இருந்தாங்களா?" கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமிக்குப் பெருமிதமாக இருந்தது.

"நம்மாளு இல்லாத எடம் கீதா தலீவரே? அப்பாலே டி.நகருலே இந்திப் பிரசார சபாவாண்ட ஒரு இஸ்கூல் கீதில்லே, அங்கே கூட்டம் போட்டாங்க! இந்தாளுக்கு சப்போர்ட் பண்ண வந்த அரசியல்வாதிங்களையெல்லாம் வெரட்டினானுங்க!"

"அது எதுக்கு?"

"அண்ணா ஹஜாரேக்கு அரசியல்வாதீன்னாலே காப்ரா! அவனுங்க மொள்ளமாறிங்க, முடிச்சவிக்கிங்க, பேமானிங்கன்னு கலீஜாப் பேசுனாரு! இவுரு பேச்சைக் கேட்டு இவருக்குப் பதில் சொன்னா, பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கிட்டு சோனியா காந்திக்கு கட்தாசி எளுதிருவாரு! என்னை அடிச்சிட்டான், கடிச்சிட்டான்..என் பலப்பத்தைப் புடுங்கிட்டான்னு நொய்நொய்னு ஒரே அளுகைதான்!"

"இவுரு திட்டலாம், நாம திட்டக்கூடாதாமா?"

"அவரு பாஷையிலே அவரைத் திட்டுனா அது ஜனநாயக விரோதம்! ஆனா, அவுரு யாரை வேணுமானாலும் இன்னா வேணுமுன்னாலும் திட்டுவாரு!"

"என்னய்யா அக்கிரமா இருக்குது? அப்படி அவுருக்கு என்னதான் வேணுமாம்?"

"ஊழலை ஒழிக்கணுமாம். அதுக்காக, அவரு ஒரு சட்டத்தை ரெடி பண்ணிக்கினு போனாரு! அத்த பாஸ் பண்ணியே தீரணுமுன்னு ஒத்தக்காலிலே நிக்குறாரு!"

"அவரு வக்கீலா?"

"அவரு வக்கீல் இல்லை. அவரு குரூப்புலே ஒரு அப்பாவும், புள்ளையும் வக்கீலுங்க. அப்பாலே, இன்னொருத்தரு!"

"அப்போ, இந்த நாலு பேரு எழுதின சட்டத்தை நாட்டிலே இருக்கிற நூத்தி இருபது கோடி ஜனங்களும் எந்தக் கேள்வியும் கேட்காம ஒத்துக்கணும்கிறாரா?"

"ஒரு ரவுண்டு முடிஞ்சதுமே உங்களுக்கு எல்லாம் சட்டுன்னு புரியுது தலீவரே! அரசாங்கம் பண்ணுன்னா அதுக்குப் பேரு அராஜகம்; அதையே அண்ணா ஹஜாரே பண்ணுனா, அதுக்குப் பேரு ஜனநாயகம்! படா டமாசா கீதில்லே?"

"தலீவரே! அந்த அண்ணா..." என்று எதையோ கூறியபடி பக்கிரிசாமி உள்ளே நுழையவும், நெப்போலியன் நெடுவளவன் எரிச்சலடைந்தார்.

"அவரை வெயிட் பண்ணச் சொல்லியிருக்கோமில்லே? அவசரம்னா எந்திரிச்சுப் போகச் சொல்லுய்யா!"

"இல்லீங்க! அவருக்கு ரொம்ப போரடிக்குதாம்! அதுனாலே நீங்க கூப்பிடுற வரைக்கும், டிவிக்காரங்களை உள்ளே கூப்பிட்டு ஒரு பேட்டி கொடுக்கலாமான்னு அண்ணா கேக்குறாரு!"

(தொடரும்)

8 comments:

rajamelaiyur said...

Good post

சேலம் தேவா said...

நீங்க அவரை ஆதரிக்கப்போறீங்களா..?! எதிர்க்கப்போறீங்களா..?!அடுத்த பாகத்துல தெரியும் போல....எனிவே உங்க ட்ரேட்மார்க் நகைச்சுவை பன்ச்-கள் அங்கங்க சூப்பரா குத்தியிருக்கீங்க சேட்டை..!! :)

middleclassmadhavi said...

அல்வா கிளற ஆரம்பிச்சாச்சு - நடக்கட்டும் நையாண்டி தர்பார்!

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பரா ஸ்டார்ட் ஆயிடுச்சு இந்த நகைச்சுவைத்தொடர்.

இந்தத்தொடர் முடியும் வரை நானும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று இருக்கிறேன்.

ஆனால் எனக்கு அடிக்கடி பசி வந்து விடும். பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

அதனால் உடனடியாக எனக்கு அடுத்தப்பசி எடுக்கும் முன்பு, அடுத்த பகுதியை வெளியிட்டு விடவும், என்ற கோரிக்கையை உங்கள் முன்பு வைக்கிறேன்.

அன்புடன்
vgk

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அடுத்த சேட்டை தொடங்கி விட்டதா.... நல்லது... அடுத்த பகுதி எப்போது....

settaikkaran said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Good post//

Thank You Friend! :-)

//சேலம் தேவா said...

நீங்க அவரை ஆதரிக்கப்போறீங்களா..?! எதிர்க்கப்போறீங்களா..?!அடுத்த பாகத்துல தெரியும் போல....//

அதே! அவசியம் தெரிவிப்பேன்! (இதற்குள் புரிந்திருக்கலாம்)

//எனிவே உங்க ட்ரேட்மார்க் நகைச்சுவை பன்ச்-கள் அங்கங்க சூப்பரா குத்தியிருக்கீங்க சேட்டை..!! :)//

ஆமாம் நண்பரே! என்னாலே அருண் கேஜ்ரிவால் மாதிரி பேசவோ, எழுதவோ முடியாது தானே? மிக்க நன்றி நண்பரே! :-))

//middleclassmadhavi said...

அல்வா கிளற ஆரம்பிச்சாச்சு - நடக்கட்டும் நையாண்டி தர்பார்!//

அது ரெண்டு மாசமா நாடுமுழுக்க நடந்திட்டிருக்கு! நான் கொஞ்சம் garnishing பண்ணுறேன். அம்புட்டுத்தேன்! மிக்க நன்றி! :-)

//அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....//

அடடா! தப்பான விலாசத்துக்கு வந்திட்டீங்க போலிருக்குதே!
Please contact : Sri Kalikambal, Thambu Chetty Street, Chennai-600001
Immediate relief assured. :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பரா ஸ்டார்ட் ஆயிடுச்சு இந்த நகைச்சுவைத்தொடர்.//

சரியாச் சொன்னீங்க ஐயா! உண்மையிலேயே இந்திய அரசியலிலே நகைச்சுவைக்கு எப்போதும் பஞ்சமேயிருந்ததில்லை; இனியும் இருக்காது.

//இந்தத்தொடர் முடியும் வரை நானும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று இருக்கிறேன்.//

சாப்பிடும் வரை உண்ணாவிரதம் தானே? :-)))))

//ஆனால் எனக்கு அடிக்கடி பசி வந்து விடும். பசி வந்தால் பத்தும் பறந்திடும்.//

பத்தும் பறந்து விடுமா? அண்ணா ஹஜாரே பத்தோட பதினொண்ணு தான். அதுனாலே அவசியம் சாப்பிடுங்க! :-)

//அதனால் உடனடியாக எனக்கு அடுத்தப்பசி எடுக்கும் முன்பு, அடுத்த பகுதியை வெளியிட்டு விடவும், என்ற கோரிக்கையை உங்கள் முன்பு வைக்கிறேன்.//

அவசியம் போடுகிறேன் ஐயா. அப்புறம், இத்தனை இடுகைகளுக்கு மத்தியிலும், நான் வாக்களித்தபடி உங்களது வலைப்பதிவுக்கு வர முடியாதபோதிலும், நீங்கள் மட்டும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தி எழுதுவதற்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமை ஐயா! மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அடுத்த சேட்டை தொடங்கி விட்டதா.... நல்லது... அடுத்த பகுதி எப்போது....//

வெங்கட்ஜீ! இரண்டாவது போட்டாயிற்று; மூன்றாவதும் ஏறக்குறைய தயார்! போட்டு விட வேண்டியது தான்! மிக்க நன்றிஜீ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம செம.....

///"அப்போ, இந்த நாலு பேரு எழுதின சட்டத்தை நாட்டிலே இருக்கிற நூத்தி இருபது கோடி ஜனங்களும் எந்தக் கேள்வியும் கேட்காம ஒத்துக்கணும்கிறாரா?"////

அதிலும் இது சூப்பர்ப் பஞ்ச்...!