Thursday, September 2, 2010

தெய்வம் பேசினால்...?

"ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் பயங்கரமான யுத்தம் நடந்துண்டிருக்கு. ராவணனுக்கு ஈக்வலா ஜடாயூ சண்டைபோடறார்."

ஒலிபெருக்கியிலிருந்து கணீர் என்று குரல் ஒலித்தது. வீடருகேயிருந்த விநாயகர் கோவில் குடமுழுக்குவிழாவின் ஒரு பகுதியாக, தினசரியும் அந்த பண்டிதரின் கதாகாலட்சேபம் நடந்து கொண்டிருக்கிறது. அன்றும் அப்படித்தான்.....!

"ஒரு கட்டத்துலே ராவணனே களைச்சுப் போயிடறான். 'ஏம்பா ஜடாயூ, நான் இம்புட்டு நாழி உன்னோட சண்டைபோட்டுண்டிருக்கேன். என்னோட சரிக்கு சமமா சண்டை போடறியே, உன்னை எப்படித்தான் ஜெயிக்கறதோ தெரியலியே’ன்னு நொந்துபோய்க் கேட்கிறான். அதுக்கு ஜடாயு சொல்றார். ’இலங்கேஸ்வரா, என்னோட சக்தியெல்லாம் என் ரெக்கையிலே இருக்கு!’. உடனே ராவணன் என்ன பண்றான் தெரியுமோ, ஜடாயுவோட ரெக்கையை வெட்டறான். ஜடாயு தோத்துப் போயிடறார்."

சுத்தம்!’ என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டேன். ’இதுக்குத் தான் டூப்பு விடணுங்கிறது. உண்மையைச் சொல்லுவானேன், சொந்தச் செலவுலே சூனியத்தை வச்சுக்குவானேன்?

நான் மட்டும் ஜடாயுவாக இருந்திருந்தால், ’ராவணா, என்னோட சக்தி ஸ்விஸ் பேங்கிலே இருக்கு; பிரணாப் முகர்ஜீயாலே கூட அதை டச் பண்ண முடியாது,’ன்னு சொல்லியிருப்பேன். ராமாயணகாலத்துலே ஸ்விஸ் பேங்க் இல்லியேங்கறீஙகளா? அதுசரி, அப்போ நான் கூடத்தான் இல்லை!

ஆனால், அந்த பண்டிதர் மீது எனக்கு ரொம்பவே அனுதாபமுண்டு. குடமுழுக்கு தினத்துக்கப்புறம் கோவிலுக்கு வருகிற பக்தர்களில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் மட்டுமே அவரது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த மழை வந்து அவர்களும் வருவதை நிறுத்தி விட்டனர். ஆனாலும், இவர் விடுவதில்லை; மைக்கின் முன்னால் உட்கார்ந்து கொண்டு, தினமும் அயராமல் தனது கதாகாலட்சேபத்தைத் தொடர்கிறார். சில சமயங்களில் அவர் சொல்லுகிற விஷயங்களைக் கேட்டால், ’அட, இப்படியெல்லாம் கூட இருக்கிறதா?’ என்று தோன்றுகிறது.

மழை சற்று நின்றபின், கோவிலுக்குள் போனபோது, அந்தப் பண்டிதர் வழக்கம்போல உரத்த குரலில் தனது கதாகாலட்சேபத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க, அவருக்கு முன்னே ஒரு ஈ, காக்காய் கூடக் காணோம். குடமுழுக்கில் புத்துணர்ச்சி பெற்று ஜம்மென்று உட்கார்ந்திருந்த பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் தெரிவித்து விட்டு, மூன்று முறை வலம் வந்துவிட்டு, விடைபெறுகிற நேரத்தில்.....

"சேட்டை!"

சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. சரி, ரெண்டு நாளாக வலைப்பூ பக்கம் போகாததால் ஏற்பட்ட பின்விளைவாக இருக்கும்போலிருக்கிறது என்று எண்ணியபடி திரும்பி நடக்க முயன்றபோது, மீண்டும்....’சேட்டை!’ என்று யாரோ அழைப்பதுபோலிருக்க, எதிரே நோக்கினால், பிள்ளையார் கண்சிமிட்டிக் கொண்டிருந்தார்.

"பிள்ளையாரே, நீங்களா கூப்பிட்டீங்க?"

"ஆமா சேட்டை! அதுலென்ன சந்தேகம் உனக்கு?"

"என்னாலே நம்பவே முடியலே பிள்ளையாரே, வெளியிலே போயி சொன்னா என்னை லூசுன்னு சொல்லிருவாங்க!"

"இல்லாட்டாலும் அதையே தான் சொல்லுவாங்க!"

"என்ன தல நக்கல் பண்ணுறீங்க? எதுக்காக என்னைக் கூப்பிட்டீங்க?" என்று சற்று எச்சரிக்கையோடு கேட்டேன்.

"அந்த பண்டிதர் ரொம்பப்பாவம்! தனியா உட்கார்ந்துகிட்டு அவருக்கு அவரே கதாகாலட்சேபம் பண்ணிட்டிருக்காரு! இன்னிக்கு ஒரு நாள் நீயாவது உட்கார்ந்து கேளேன்! எச்சில் கூட முழுங்காமப் பேசிட்டிருக்காரு பாரு!"

"பிள்ளையாரே, ஐயம் ஸோ சாரி! எனக்கு இதெல்லாம் ரொம்ப போரடிக்கும்."

"இந்த எட்டுமாசமா நீ என்னத்தையெல்லாமோ எழுதி எத்தனை பேரை போரடிச்சிட்டிருக்கே! ஐயோ பாவம்னு எல்லாரும் உனக்கு ஓட்டுப் போட்டு கருத்தும் போடலியா?"

"சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க தல! இவரு நிறைய படிச்சிருக்காரு! பெரியபுராணம், கம்பராமாயணம், பிரபந்தம், திருக்குறள்னு எடுத்து விடுறாரு! ஆனா, கூட்டத்தை வரவழைக்கிற ட்ரிக் அவரோட பேச்சிலே இல்லை!அவரு அறிவுபூர்வமா பேசுறாரு; பத்தாது! உணர்ச்சிபூர்வமாப்பேசணும்! அப்படிப்பேசினா, இங்கே கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸை வரவழைக்க வேண்டிவரும் தெரியுமா?"

"பரவாயில்லியே சேட்டை, நீ கூட புத்திசாலித்தனமா பேசறே! இப்போ பாரு வேடிக்கையை! இவரை இப்போ யாருமே பேசாத அளவுக்கு உணர்ச்சிபூர்வமாப் பேச வைக்கிறேன் பாரு!"

பிள்ளையார் சொல்லி வாய் மூடவில்லை, பண்டிதரின் குரல் உயர்ந்தது.

"ஜடாயு மாதிரி இந்தக் காலத்துலே மனுஷாள் இருந்தா அம்புட்டுத்தான். பெத்த புள்ளைகளே எல்லாத்தையும் உருவிண்டு தெருவுலே விட்டிருவா தெரியுமோன்னோ? அப்புறம் இந்த மாதிரி கோவில்லே கதாகாலட்சேபம் பண்ணிண்டு உண்டைச்சோத்தைச் சாப்பிட்டுண்டு, திண்ணையிலே படுத்துண்டு தூங்க வேண்டியது தான்! பாதிநா பட்டினிதான்! பகவான் நாமாவைச் சொல்லிண்டு நம்ம தலையெழுத்தை நொந்துண்டு இருக்க வேண்டியது தான்!"

"கேட்டியா சேட்டை? இப்போ இவர் அறிவுபூர்வமா பேசலே; உணர்ச்சிபூர்வமாப் பேசறாரு! என்ன ஆகப்போகுதுன்னு பார்ப்போம்!"

"பக்தஜனங்களே பக்தஜனங்களேன்னு அடிக்கொருவாட்டி சொல்றேன்! யாரு பக்தஜனம்? விநாயகமூர்த்திக்கு பூஜாவிதானம் பண்ணற சிவாச்சாரியாருக்கே பக்தியில்லை. அவரோட கவனம் தட்டுலே ஒரு ரூபாய் காயின் விழுமா, அஞ்சு ரூபாய் காயின் விழுமாங்கிறதுலே தானிருக்கு!"

வாசலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த சிவாச்சாரியார் திடுக்கிட்டுப்போய், அவசர அவசரமாகக் கோவிலுக்குள் நுழைந்தார்.

"கும்பாபிஷேகம் பண்ணினதா எல்லாரும் பெருமைப்பட்டுண்டிருக்கோம்! பகவானுக்கு சேவை பண்ணிட்டு, சிமெண்ட் கொடுத்தவாளுக்கும், பெயிண்ட் அடிச்சவாளுக்கும் மைக்செட் வச்சவாளுக்கும் விநாயகர் முன்னாலேயே மாலைபோட்டு மரியாதை பண்ணி போட்டோ வேறே எடுத்துக்கிறோம். அடக்கமில்லாதாவா எதுக்கு ஆண்டவன் சேவைக்கு வரணும்? எதுக்காக உங்க பப்ளிசிட்டிக்காக பகவானை யூஸ் பண்ணிக்கறேள்?"

"பிரமாதம்!" பிள்ளையார் மகிழ்ச்சியுடன் சிரித்தார். "உன் ஐடியா நல்லா ஒர்க்-அவுட் ஆகுது சேட்டை! அதோ பாரு, ஊர்வம்பு பேசிட்டிருக்கிறவங்க எல்லாரும் கோவிலுக்கு வந்திட்டிருக்காங்க!"

"இதுக்கு ஒரு கமிட்டி; அதுக்கு ஒரு தலைவர்! ஆறுமணியானா தண்ணியைப் போட்டுண்டு ரோட்டுலே வர்ற போற பொம்மனாட்டிகளைச் சீண்டற ஒரு ஜந்து! செயலாளர்னு ஒருத்தரு, வயசான அம்மாவுக்கு தனியா தட்டும், டம்ளரும் கொடுத்து ஆத்துக்குள்ளேயே கைதி மாதிரி வச்சிண்டிருக்கான். பொண்டாட்டியோட வெளியே போறச்சே, அம்மாவை உள்ளே வச்சுப் பூட்டிண்டு போறான். அவன் செயலாளர். இவா கையாலே பகவான் கைங்கரியம் ஆகணும்னு இருக்கு பாருங்கோ! கலி முத்திடுத்துன்னு சொல்றது இது தான்!"

"வெல் செட்!" கைதட்டினேன் நான்.

"இன்னிக்குக் காலம்பற ஒரு ஸ்த்ரீ வந்து உருகியுருகி ’கற்பகவல்லி பொற்பதங்கள் பிடித்தேன்,’னு பாடினாரே, அந்த ஸ்த்ரீ சனி,ஞாயிறானா பெரிய ஹோட்டலுக்குப் போயி புருஷாளுக்கு சமமா ஃபுல்லாத் தண்ணி போட்டுட்டு, பரபுருஷாளோட ஆட்டம்போட்டுக் கூத்தடிக்கிறவா! கைநிறைய சம்பளம், மாமியார் மாமனார் ஒரு பிடுங்கல் இல்லை! ஆனாலும், இவா சந்தோஷமா இருக்கிறதுக்காக குழந்தைகளை கொடைக்கானல் கான்வென்டுலே சேர்த்திருக்கார்! இவாள்ளாம் கோவிலுக்கு வரலேன்னு யார் அழுதா?"

"பிள்ளையாரே, இந்த பண்டிதர் கொஞ்சம் ஓவராப் போற மாதிரியிருக்கே? என் மேட்டரையும் எடுத்து விட்டிருவாரா?" என்று பிள்ளையாரிடமும் கிசுகிசுப்பாகக் கேட்டேன்.

"நான்தானே சாவி கொடுத்திட்டிருக்கேன் சேட்டை," என்று சிரித்தார் பிள்ளையார். "உன்னை இந்த வாட்டி விட்டுடறேன்!"

பண்டிதர் பேசப்பேச, தெருவிலிருந்த அனைத்து வீடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும், நிலநடுக்கம் வந்தது போல பரபரப்போடு வெளியே வந்து கோவிலைப்பார்த்து ஓடி வரத்தொடங்கினர். சிறிது நேரத்தில் கோவில் வாசலில் கூடிய கூட்டம் சர்வசாதாரணமாக ஒரு அரசியல்கூட்டத்தைப் போலவே ஆகி விட்டிருந்தது. அத்தோடு, அந்தத் தெருவிலிருந்த ஒவ்வொருவரது வண்டவாளமும் ஒலிபெருக்கி வழியாக தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருந்தது.

"இவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் பிள்ளையாரே?"

"அவரா சொல்றாரு, நான் சொல்ல வைக்கிறேன்!" என்று சிரித்தார் பிள்ளையார்.

"போதும் பிள்ளையாரே, இவரை இப்படியே பேச விட்டா, நாளையிலேருந்து எவனைப் பார்த்தாலும் அடச்சீன்னு சொல்லத்தோணும். நிறுத்தச் சொல்லுங்க!"

"பொறு சேட்டை!"

பண்டிதர் தெருவில் வசிக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்களது லஞ்சலாவண்யங்கள், வக்கிரங்கள், இருட்டுக்குள் ஒளித்துவைத்த ரகசியங்கள், துரோகங்கள் என ஒவ்வொன்றாய் எடுத்து விட, பல பழைய பிம்பங்கள் கலைந்து கரைந்து நிலைகுலைந்து கொண்டிருந்தன.

"ஏன் பிள்ளையாரே, ஒரு பயகூட யோக்கியன் இல்லையா இந்தத் தெருவிலே?"

"இருக்காங்களே, பளபளப்பில்லாம அடக்கமா இருக்காங்க!!"

யாருமே பண்டிதரின் பேச்சை நிறுத்த முயற்சிப்பதாகத் தெரியவில்லை. ஆச்சரியம்!

"இந்த அர்ச்சகருக்கு ஏன் மைக்-செட்டை நிறுத்தணுமுன்னு தோணலே? உங்க வேலையா?"

"இப்போ பாரு சேட்டை!"

திடீரென்று தெருவில் மின்வெட்டு ஏற்பட்டு இருள்மயமானது. பண்டிதர் தொடர்ந்து பேசினாலும், யார் யாரோ அவரைக் கட்டுப்படுத்தி அவரது பேச்சை நிறுத்தியதும், மீண்டும் வெளிச்சம் வந்தது. கூடியிருந்தவர்களில் பலர் கோபத்தோடும், சிலர் நிம்மதிப்பெருமூச்சோடும் நகர்ந்தனர்.

"எல்லாம் முடிஞ்சது பிள்ளையாரே!" என்று திரும்பியபோது, அவர் மீண்டும் சிலையாகி விட்டிருந்தார்.

பண்டிதரின் வாயை அடக்கிய திருப்தியுடன் எல்லாரும் வெளியேறினர். அரைமயக்க நிலையில் பண்டிதர் கால்நீட்டிப் படுத்திருக்க, சிலர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து விசிறியால் வீசிக்கொண்டிருந்தனர். நல்ல வேளை, இவரை மொத்தாமல் விட்டார்களே! நன்றி பிள்ளையாரே!

இப்போது இங்கே கூடிக்கலைந்தவர்கள் நாளை மீண்டும் வருவார்கள். ஒருவேளை கதாகாலட்சேபம் இல்லாமல் இருக்கலாம்; அல்லது வேறு ஒரு பண்டிதர் பேசலாம். உணர்வைக் கழற்றி வைத்துவிட்டு, அறிவுபூர்வமாகப் பேசலாம்..

நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.இந்தக் கற்பனைக்கதையின் சம்பவங்கள் நிகழுமா தெரியாது. பிள்ளையார் பேசுவாரா தெரியாது. ஆனால்....

குடமுழுக்குகள் (இனிமேலும்) தொடரும்!

19 comments:

துளசி கோபால் said...

அன்னிக்கு நல்லவேளை! இந்தக் கோவிலுக்கு வராமல் தப்பிச்சேன்:-))))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வித்தியாசமான சிந்தனை.

ரசிக்கும்படியான எழுத்து...

தெய்வம் பேசினால்..என்று யாரோ ஒரு பிரபலம் ஒரு கதை எழுதியதாக நினைவு..புதுமைப் பித்தன் அல்லது ஜயகாந்தன் !?..நினைவில்லை..

நீங்களும் பிரபலாமாகி விட்டீர்கள்,அதே தலைப்பில் எழுதியதனால்..
(இப்படி ஈயடிச்சான் காப்பி அடிக்காதப்பான்னு டீசண்டா இப்படித்தான் சொல்லுவோம்!
)
:))

suneel krishnan said...

நல்ல கற்பனை ,ரசித்தேன் , அறிவு பூர்வமாக எழுதினால் / பேசினால் கொட்டாவி விட்டு எந்திருச்சு அடுத்த வேளைக்கு போய்டுறாங்க :)

அஷீதா said...

உங்க கற்பனை சுப்பர் சேட்டை :)

"என்னாலே நம்பவே முடியலே பிள்ளையாரே, வெளியிலே போயி சொன்னா என்னை லூசுன்னு சொல்லிருவாங்க!"

"இல்லாட்டாலும் அதையே தான் சொல்லுவாங்க!"

ஹா ஹா ஹா...நாங்க சொல்ல முடியாதது கடவுள் சொல்லிட்டாரு :)

Chitra said...

நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.இந்தக் கற்பனைக்கதையின் சம்பவங்கள் நிகழுமா தெரியாது. பிள்ளையார் பேசுவாரா தெரியாது.


......ஆனால்..... இந்த பதிவை படித்து விட்டு, வோட்டு போட்டு விட்டு, கமென்ட் போட்டு விட்டு சென்று விட்டார்.... :-)

sathishsangkavi.blogspot.com said...

சேட்டை எப்படி உன்னால் மட்டும் இப்படி எங்களை சிரிக்க வைக்க முடியுது...

அழகான கற்பனை... சேட்டை சேட்டை தான்.....

நான் எல்லாம் இந்த மாதிரி எழுதுறதுக்கு சான்சே இல்ல...

புள்ளையார போட்டு பின்னீட்டிங்க..

கோமதி அரசு said...

இதுக்குத் தான் டூப்பு விடனுங்கிறது//


உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசவேண்டுமா?

உண்மை பேசுபவன் பைத்தியக் காரன் தான்.

ஆவணி மாதம் ஆரம்பித்துவிட்டால் குடமுழுக்குகள் தான்.குட்முழுக்கு போனால் பிள்ளையார்,சேட்டை உரையாடல் நினைவு வரும்.

ப.கந்தசாமி said...

சேட்டே, உன்னைப்பத்தி எதாச்சும் வரும்னு கடைசி வரைக்கும் படிச்சேன். பிள்ளையாரு ஏமாத்திட்டாரப்பா.

ப.கந்தசாமி said...

சேட்டை, கமென்ட் எழுதினா பதிய மாட்டேங்குது?

ப.கந்தசாமி said...

உங்க சமாசாரம் ஏதாச்சும் வருமுன்னு கடேசி வரைக்கும் படிச்சேன். பிள்ளையாரு ஏமாத்திட்டாரே?

Anonymous said...

கொழுக்கட்டை வேணும்னா கேக்கவேண்டியது தான??
அதுக்கு ஏன் இப்படி பிள்ளையார் பதிவு எல்லாம் போடறீங்க??

முகுந்த்; Amma said...

இப்படி எல்லாம் பிள்ளயார் நேரில் வந்து சேட்டையாருக்கு மட்டும் காட்சி கொடுத்து ஊருக்கு கிலி ஏற்படுத்திடுரார்.

நல்ல வேல அன்னைக்கு நானும் கோவிலுக்கு வராம தப்பிச்சேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உணர்வு பூர்வமான்னா இதானா ..
எல்லாத்தையும் உளறுருரதா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ளோ அருமை.. நீங்க கதை சொல்ல உக்காந்தா நல்லா கூட்டம் வரும்போலயெ..

vasu balaji said...

பிள்ளையாரும் சிக்கினாரா:))

Anonymous said...

பிள்ளையார்ரையும் விட்டு வைக்கலயா நீங்க?

ADHI VENKAT said...

நல்ல கற்பனை சேட்டை. பிள்ளையாரும் பாவம் மாட்டிகிட்டாரு.

Anonymous said...

கதை கேக்குறதுல தமிழன மிஞ்ச ஆள் இல்லைனு புரிஞ்சு வெச்சிருப்பீங்க போல..நல்லாருக்கு

Anonymous said...

பிள்ளையார் சேட்டையை பத்தி எதுவுமே சொல்லலியே..?? போங்க.