Monday, July 25, 2011

பேல்பூரி

ஒரு சபாஷ்!

சாதாரணமான மனிதர்களால் என்ன செய்ய முடியும்? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? சட்டம் குடிமகனுக்கு உதவுமா? என்றெல்லாம் எதிர்மறையான கேள்விகள் நிறைய இருந்தாலும், அவ்வப்போது நம்பிக்கையூட்டும் சில செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

சுபாஷ் அகர்வால் என்ற தனிநபர், தகவல் உரிமைச் சட்டத்தை உபயோகப்படுத்தி, இந்தியக்குடியரசுத்தலைவர் திருமதி. பிரதிபா பாட்டீலின் சொத்துக்கணக்கையும், அந்த விபரங்களை அரசு இணையதளத்தில் வெளியிடுவது குறித்தும் அனுப்பிய மனு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் விளைவாய், குடியரசுத்தலைவரின் சொத்துக்கள் குறித்த விபரம் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அல்லாம் சும்மா கண்தொடப்பு நைனா,’ என்று அங்கலாய்ப்பவர்கள் இருக்கலாம் என்றாலும், சுபாஷ் அகர்வால் போன்ற தனிநபர்கள் சட்டத்தின் துணையோடு உயர்பதவி வகிப்பவர்களை கேள்வி கேட்க முடிகிறது என்பது கவனிக்கத்தக்கது.

சுபாஷ் அகர்வாலுக்கு ஒரு சபாஷ்!

நியூஸ் ரீல்!

2ஜி ஏலம்: பிரதமர்-ப.சிதம்பரம் ஒப்புதல் தந்தனர்: நீதிமன்றத்தில் ராசா பரபரப்பு வாதம்!

மறுபடியும் முதல்லேருந்தா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

அப்படிச் சொல்லுங்க! ஒரு உறையிலே ரெண்டு கத்தி எதுக்குண்ணேன்!

திமுகவை அழிக்க கருணாநிதி குடும்பத்தால் மட்டுமே முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆமாம், அது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஆனா, உங்க கட்சியை அழிக்க உங்க கேப்டன் பேசினாலே போதும்! வெரி வெரி சிம்பிள்!

ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவேன்: அன்புமணி

அதானே, அவரும் எவ்வளவு நாள் தான் சும்மாயிருப்பாரு பாவம்?

கல்மாடிக்கு மறதி நோயாம்!

எல்லாம் இந்த ஆமீர்கானாலே வந்த வினை. அவரை யாருய்யா இந்தியிலே ’கஜினி’ படத்தை எடுக்கச் சொன்னது?

சந்தேகம்:

13-07-11 அன்று மும்பையில் நிகழ்ந்த குண்டு வீச்சில் 21 பேர்கள் உயிரிழந்து, 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா தொடங்கி, பாகிஸ்தான் வரைக்கும் அனைத்து தேசத்தலைவர்களும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்த இந்த பயங்கரவாதச்செயலுக்கு இந்தியாவின் ஒரு பிரபலம் இந்த நிமிடம் வரைக்கும் எவ்விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் ஒரு மராட்டியர்; ஊருக்கெல்லாம் அகிம்சையைப் போதிப்பவர். சொடுக்குப் போட்டால் உயிரை விடத் தயார் என்று அறிக்கை விடுபவர்.

யார் அந்த மகாத்மா? வேறு யார், நம்ம அண்ணாஜி ஹஜாரே தான்! பிரபல எழுத்தாளரான ஷோபா டே கூட தனது வலைப்பதிவில் "ஏன் அண்ணாஜி இது குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை?" என்று கேட்டிருக்கிறார்.

’அடப்போ சேட்டை, அவரு வெறும் காந்தீயவாதியில்லை! ஊழலை மட்டும் எதிர்க்கிற சூப்பர் ஸ்பெஷாலிட்டி காந்தீயவாதி! பயங்கரவாதத்தைப் பற்றியெல்லாம் அவரு பேச மாட்டாரு,’ என்று சொல்றீங்களா? அதுவும் சரிதான்! ஒருவேளை, உண்ணாவிரதம் இருந்த நேரம் போக, மீதியிருக்கிற நேரமெல்லாம் அவரு மவுனவிரதம் இருப்பாரோன்னு ஒரு டவுட்டு இருந்தது.

அப்போ, ’மிட்-டே’ பத்திரிகை நிருபர் ஜோதிர்மய் டே-யை கூலிப்படையினர் சுட்டுக்கொன்ற போது பொங்கியெழுந்து, ’இது ஜனநாயகப்படுகொலை!’ என்று பிரதமருக்கு கடுதாசு எழுதினாரே என்று யாரும் கேட்கக்கூடாது. இதையெல்லாம் எதுக்குய்யா ஞாபகத்துலே வச்சிருக்கீங்க?பத்திரிகைக்காரங்களும் சாதாரண அப்பாவிக் குடிமக்களும் ஒண்ணாக முடியுமா?

அண்ணாஜி ’நாமம்’ வாழ்க!

ரசித்த வீடியோ

தமிழ் ’சிங்கம்’ படத்தை இந்தியிலும் ’சிங்கம்’ என்ற பெயரில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக் கொண்டிருப்பது பழைய செய்தி. இந்த சிங்கத்தோட டிரெயிலரை ’டெல்லி பெல்லி’ படம் பார்த்தபோது, பி.வி.ஆரில் பார்த்தேன். அதே டிரெயிலர் இப்போது இணையத்தை வேறு காரணத்துக்காக கலக்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன காரணம்னு கேட்குறீங்களா?

வீடியோவைப் பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க!



சிங்கம்லே.....!

3 comments:

Anonymous said...

என் முதல் விசிட்...கலக்கல் பதிவு...வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

துவைங்க, அலாசுங்க, காயப்போடுங்க.. ஹா ஹா

settaikkaran said...

//Reverie said...

என் முதல் விசிட்...கலக்கல் பதிவு...வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி! அடிக்கடி வாங்க! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

துவைங்க, அலாசுங்க, காயப்போடுங்க.. ஹா ஹா//

என்ன தல, இஸ்திரி பண்றத மறந்திட்டீங்களே...? :-))

மிக்க நன்றி தல!