Sunday, June 10, 2012

விஜய் டி.வி.க்கு என்னால் ஒரு கோடி லாபம்!


ஏப்ரல் 26, 2012

     சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு மோர் குடிப்பதா, பீர் குடிப்பதா என்று என் மண்டைக்குள்ளே சிறப்புப் புட்டி மன்றம் நடந்து கொண்டிருந்தபோது, எனது செல்போன் ‘முதல்லே டாப்-அப் பண்ணுடா பரதேசி,என்று முனகுவதுபோல மணியடித்தது. எடுத்துப் பார்த்தேன். புது நம்பர்; அதுவும் மும்பையிலிருந்து! யாராயிருக்கும்? கோடைக்காலத்தில் என்னைத் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே, அசின் தொடங்கி ஸ்ரேயா வரை, அனைத்து நடிகைகளுக்கும் எஸ்.எம்.எஸ்.அனுப்பியிருந்தேனே? அப்புறம் யாராயிருக்கும்?

     ஹலோ, நாங்க NVOK-லேருந்து பேசறோம்!

     NVOK-வா? நான் POK தான் கேள்விப்பட்டிருக்கேன்?

     NVOK-ன்னா...நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலேருந்து பேசறோங்க!

     ஆஹா! சூர்யாவா? எப்படியிருக்கீங்க? ஜோ எப்படி இருக்காங்க? குழந்தை தியா சௌக்யமா? உங்க ஏழாவது அறிவு படத்தை நான் இண்டர்வல் வரைக்கும் பார்த்தேனுங்க!

     அடடா, சூர்யா இல்லீங்க! நாங்க அந்த புரோகிராம் விஷயமாப் பேசறோங்க! அந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கிறதுக்கான ப்ரிலிமினரி ரவுண்டுக்காக உங்களை செலக்ட் பண்ணியிருக்கோங்க!

     மெய்யாலுமா? ஹலோ, என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலியே?”

     இல்லீங்க! மே மாசம் 4-ம் தேதி, திருச்சி காஜாமலை, எஸ்.ஆர்.எம்.ஹோட்டல்லே உங்களுக்கான ஆடிஷன் நடக்கப்போகுதுங்க! காலையிலே ஏழு மணிக்கு வந்திடுங்க! ஒன்பது மணிக்கெல்லாம் கேட்டை இழுத்து மூடிடுவோம்!

     பரவால்லேங்க, நான் கம்பி வழியாப் பூந்து உள்ளாற வந்திருவேனுங்க!

            அதெல்லாம் முடியாதுங்க! அப்புறம், இந்த நிகழ்ச்சியிலே 18 வயசுக்கு மேலானவங்கதான் கலந்துக்கலாம். அதுனாலே வரும்போது அதுக்கான சர்டிபிகேட்டோட வரணுங்க!

     அதெல்லாம் எதுக்குங்க? என் மண்டையைப் பார்த்தாப் பத்தாதா?

     இல்லீங்க! இது மண்டைக்கு உள்ளே ஏதாவது இருக்கான்னு பார்க்கிற கேம்-ஷோ! வெளியிலே இருக்கா, இல்லியான்னெல்லாம் பார்க்கறதில்லீங்க!

     சரீங்க! என்னோட டெத்-சர்டிஃபிகேட் தவிர மீதி எல்லா சர்டிபிகேட்டும் எடுத்திட்டு வந்திடறேனுங்க!

     அப்புறம் நீங்க இந்தியக் குடிமகன் கிறதுக்கான அத்தாட்சி வேணுங்க! அதையும் கொண்டு வரணும்!”

     நான் இந்தியக் குடிமகனேதானுங்க! தமிழ் நாட்டுலே எந்த டாஸ்மாக் கடையிலே கேட்டாலும் சொல்லுவாங்க!

     இம்சை பண்ணாதீங்க சார்! உங்க டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வோட்டர்ஸ் ஐ.டி இதுலே ரெண்டு அத்தாட்சி கொண்டு வரணுங்க! கூடவே உங்க போட்டோ... என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, நான் அவசரமாகக் குறித்துக் கொண்டேன்.

            சரீங்க!

     அப்புறம், நீங்க திருச்சிக்கு வந்து போற செலவெல்லாம் உங்களுதுங்க! இந்த நிகழ்ச்சியோட விதிமுறைகளெல்லாம் எங்களோட ஃபேஸ்புக் பக்கத்துலே இருக்கு! பார்த்துக்கோங்க!

     விதிமுறை மட்டும் தானா? என்னென்ன கேள்வின்னு போட்டிருக்க மாட்டீங்களா?

     ஆசை,தோசை, அப்பளம், போண்டா! அப்புறம், நாம பேசி முடிச்சதும் உங்களுக்கு ஒரு கால் வருங்க!

     ஆட்டுக்காலா, கோழிக்காலா?

     அட, டெலிபோன் கால் வருங்க! அதுலே ரெண்டு கேள்வி கேட்பாங்க! அதுக்கு பதில் சொல்லணும். வேற ஏதாவது சந்தேகம் இருக்குங்களா?

     ஒரே ஒரு சந்தேகம்தானுங்க! நீங்க ஒண்ணும் தப்பான நம்பருக்கு போன் பண்ணிடலியே?

     இல்லீங்க! ஆல் தி பெஸ்ட்!

     பேச்சு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு வந்தது. முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்குரல், நான் கேள்விகளுக்கு எப்படிப் பதில் பதிவு செய்ய வேண்டும் என்று விளக்கியதும், அடுத்தடுத்து இரண்டு கேள்விகள்:

     கேள்வி 1: திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள்?
     கேள்வி 2: புட்டபர்த்தி ஆந்திராவில் எந்த மாவட்டத்தில் இருக்கிறது?

     சரியான பதிலைப் பதிவு செய்துமுடித்ததும், டி.வியை ஆன் செய்தேன். அங்கே சன் மியூசிக்கில் ‘பொன்மகள் வந்தாள்என்று விஜய் பாட, ஸ்ரேயா ஆடிக்கொண்டிருந்தார். நல்ல சகுனம் தான்!

     ஆஹா, நான் கோடீஸ்வரனாகப் போகிறேன்! இதை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமே! அடேய் வைத்தி, எடோ சுரேந்திரா! போனை எடுத்தேன்; நம்பரை அழுத்தினேன்.

     என்னடா?வைத்தி அலுப்புடன் கேட்டான்.

     டேய், நான் டி.வியிலே வரப்போறேண்டா!கத்தினேன் நான்.

     ஏன், ஆசிரமம் ஆரம்பிச்சிட்டியா?

     அடேய், நான் கோடீஸ்வரனாகப் போறேண்டா!

     பாவி, பகல்லேயே தொடங்கிட்டியா? பேசாமத் தூங்குடா!

     வைத்தி ‘ணங்கென்று போனைத் துண்டித்தான்.

     சேட்டை, உன்னைப் புரிஞ்சுக்க உலகத்துலே யாருமே இல்லடா! யூ கோ அஹெட்ரா! போடா திருச்சிக்கு! ஒரு கோடியை ஜெயிச்சிட்டு வா!

     மனசாட்சி உற்சாகமூட்டவே, மே மூன்றாம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

     இது என்ன கோயம்பேடா? கும்பகோணம் கும்பமேளவா?

     கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு மணி நேரம் போராடி, ஒரு பேருந்தில் ஏறக்குறைய சாத்துக்குடிபோலப் பிழியப்பட்டு நுழைந்து, ஜன்னலோர சீட்டைப் பிடித்தேன்.

     பேருந்து திருச்சியை நோக்கி விரைய, என் மண்டைக்குள் ஆயிரமாயிரம் சீரியல் பல்புகள் எரிய ஆரம்பித்தன.

(தொடரும்)

21 comments:

ரிஷபன் said...

”பரவால்லேங்க, நான் கம்பி வழியாப் பூந்து உள்ளாற வந்திருவேனுங்க!”

சேட்டை ஆரம்பிச்சாச்சா..

கும்மாச்சி said...

ஆஹா சேட்டை ரகளை திரும்ப ஆரம்பமாகிவிட்டதா.

நாய் நக்ஸ் said...

செம சேட்டை--சேட்டை....
:)))))))))))

middleclassmadhavi said...

Aaaha...!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கெளம்பிட்டாருய்யா சேட்டை........... கேடிகளை வென்று ...ச்சே... கோடிகளை வென்று வருக..............

rajamelaiyur said...

சூர்யாவுக்கு பதில் நின்ன்கதான் நிகழ்ச்சி நடத்தபோறதா ஒரு பேச்சு இருக்கே உண்மையா ?

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை ஆரம்பிச்சாச்சு டோய்....

தொடருங்க சேட்டை....

ஹாலிவுட்ரசிகன் said...

கடைசி வரைக்கும் அந்த இரண்டு கேள்விக்கும் பதில் என்னன்னு சொல்லவே இல்ல?

முத்தரசு said...

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

Anonymous said...

Settai Returns..Welcome.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லாம் தொடர்ச்சியா போட்டு சுபம்னு முடிங்க, மொத்தமா படிச்சிக்கிடுறேன்.

பெசொவி said...

நமக்கு எல்லாம் அந்த அளவு அறிவு இல்லை, எனவே, எனக்கு அந்த நிகழ்ச்சியில கலந்துக்க வாய்ப்பு இருக்கப் போறதில்லை. இருந்தாலும், நானும் அந்த நிகழ்ச்சியில பேச ஒரு வாய்ப்பு இருக்கு. சேட்டை, இந்த Phone a Friend-னு ஒண்ணு இருக்குல்ல, அதுல என் நம்பரை சேர்த்துக்குங்க, நம்பரா,
zero double zero triple zero!
(If the participation is a real one, ignore this comment and accept my advance congrats!)

பால கணேஷ் said...

கெளம்பிட்டாருய்யா... கெளம்பிட்டாருய்யா... கோடியை வெல்றதுக்கு! கம்பி வழியாப் பூந்தாவது உள்ள போய்‌ ஜெயிச்சுட்டு வாங்க!

Unknown said...

என்னய்யா கோவம் எல்லாம் தீந்துதா...வந்ததுக்கு சந்தோசம்யா...

” நான் இந்தியக் குடிமகனேதானுங்க! தமிழ் நாட்டுலே எந்த டாஸ்மாக் கடையிலே கேட்டாலும் சொல்லுவாங்க!”

இது டாப்புய்யா!

Unknown said...

குழந்தைகளின் மாமா!என்று அழைக்கப்படுபவர்?

1.விக்கிமாமா

2.நேருமாமா

இதுக்கு பதில் உங்களுக்கு தெரிந்தால் போதும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!

ஸ்ரீராம். said...

தொடருமா...? அப்போ போலி ஃபோன் காலா.... அந்த பஸ்ல மற்ற பஸ்ல எல்லாருமே திருச்சிக்கா... கோடி ரூபாய்க் கனவில்?! நிஜம்னா ஆல் தி பெஸ்ட்!

www.eraaedwin.com said...

மிக்க நன்றி தோழர்.

அருமையாக வருகிறது.
மனசுக்கும் இதமாக இருக்கிறது தோழர்

இந்திரா said...

பல்பு வாங்குனீங்களா குடுத்தீங்களானு சொல்றதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே..

Prabu Krishna said...

அடடா சேட்டை வந்தாச்சா? ஏப்ரல் மாச பதிவுகளை மிஸ் பண்ணிட்டேனே. இனிமே அடிக்கடி வாங்க தலைவா, நாங்களே ஒரு கோடி தர்றோம். :)

Unknown said...

வாங்க பாஸ்! இனி ரணகளம்தான்! :-)

அனைவருக்கும் அன்பு  said...

சிரித்து மகிழ்ந்தேன் ...........உண்மையில் சிரிக்க வைக்க திறமை வேண்டும் உங்களுக்கு நிறைய இருக்கு