Sunday, March 14, 2010

எனக்குப் பிடித்த பத்து பெண்கள்


எனக்குப் பிடித்த பத்து பெண்களைப் பற்றி எழுதணுமுன்னு ஒருத்தருக்கு மூணு பேர் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருந்தாங்க!

அகல்விளக்கு

சைவக்கொத்துப்பரோட்டா

இளந்தென்றல்

நான் கூட யோசிச்சேன்(மெய்யாலுமே யோசிச்சேன், நம்புங்க!). "நூற்றுப் பத்து கோடி ஜனத்தொகை இருக்கிற நம்ம நாட்டுலே வெறும் பத்துப் பேரை மட்டும் எப்படி எழுதுறது"ன்னு! ஆனா, இதை வெளியிலே சொன்னா "பரவாயில்லே சேட்டை, ஐம்பத்தி ஐந்து கோடி பெண்களைப் பற்றியும் எழுதிருங்க,"ன்னு யாராவது சொல்லிட்டா என்ன பண்ணறது? அதுனாலே வெறும் பத்துப் பேரைப் பத்தி மட்டும் எழுதி ’S' ஆகிடலாமுன்னு முடிவு பண்ணினேன்.

ஆனா, என்ன அநியாயம் பாருங்க! சரோஜினி நாயுடுவுலே தொடங்கி சமீரா ரெட்டி வரைக்கும் எல்லாரைப் பத்தியும் யாராவது ஒரு பதிவர் ஏற்கனவே பதிவு எழுதியிருக்காங்க! சரி, சாதனையாளர்களைப் பத்தி எழுதினாத் தானே இந்தப் பிரச்சினை, சாமான்யர்களைப் பற்றி எழுதலாமுன்னு பார்த்தா, நம்ம "சினேகிதன்" அக்பர் தயிர்க்கார அம்மாலேருந்து, இட்டிலி விக்குற ஆத்தா வரைக்கும் எல்லாரைப் பத்தியும் எழுதிப்புட்டாரு!

இது ஆவுறதில்லை! சந்தடி சாக்குலே எல்லாரும் தாய்க்குலத்தை ஒரேயடியா காக்கா புடிக்கறீங்க, இது அழுகுண்ணி ஆட்டம், நான் வர்லேன்னு சொல்லி விலகலாமுண்ணு பார்த்தா, அதுக்கும் வழியில்லை.

எனக்குப் பிடிச்ச பத்துப் பெண்களைப் பற்றி எழுதணும், அவ்வளவு தானே? இதோ எழுதி விட்டேன்.

1.ஷகீலா

உங்க மனசுலே என்ன கேள்வி எழுதுன்னு என் காதுலே விழுது!

"அடப்பாவி, நீ ஷகீலா படம் பார்க்கிறவனா? உன் ரசனை இவ்வளவு மட்டமா? "எக்ஸட்டரா..எக்ஸட்டரா தானே? ஒண்ணு கேட்டாத் தப்பா நினைக்கக் கூடாது!

இன்று உங்கள் வீட்டு வரவேற்பரையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிற எத்தனையோ "தமிழ்"ப் படங்களில் வருகிற காட்சிகளை விடவுமா ஷகீலா ஆபாசமா நடிச்சிட்டாங்க?

ஷகீலா நடித்த படங்கள் எல்லாமே தணிக்கைக்குழுவினரால் சான்றிதழ் வழங்கப்பட்டு, கேரளாவில் முதலில் மலையாளத்தில் வெளியாகி, மம்மூக்கா, லாலேட்டன் போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களை முறியடித்து, பின்னர் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் சக்கைபோடு போட்டவை. ஆக, ஒரு விதத்துலே ஷகீலா என்ற ஒரு பெண்மணி இரண்டு சூப்பர் ஸ்டாருங்களையே மண்ணைக் கவ்வ வைச்சவங்க! அதுக்காகவே எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்!

சராசரி ஆண் சராசரி தூண்டுதலுக்கு சுலபமான அடிமை என்பதை உலகத்துக்கு உரக்க உரக்கக் கூறிய ஷகீலா எனக்குப் பிடித்த பெண்மணி!

2. ரேஷ்மா

ஷகீலா பெயரைச் சொல்லிட்டு, ரேஷ்மா பெயரைச் சொல்லாமல் விடக் கூடாதுன்னு குறிப்பிடலை. சமீபத்துலே கேரளாவுக்குப் போயிருந்தேன். தமிழர்களை "பாண்டி"ன்னு கேவலமாகப் பேசுற மலையாளிங்க சிலர், நித்தியானந்த சுவாமி மேட்டரைச் சுட்டிக் காண்பிச்சு, தமிழ்நாட்டைப் பற்றிப் படுகேவலமாகப் பேசினாங்க! போன வேலை கெட்டுருமேன்னு பேசாம இருந்தேன். சரி, அதுக்கும் ரேஷ்மாவுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்கறீங்களா?

ஷகீலாவையும் ரேஷ்மாவையும் உலகத்துக்கு அறிமுகப்படுத்தின புண்ணியவானுங்க "கடவுளின் தேசம்" என்று சொல்லப்படுகிற "காட்டான்களின் தேசம்" கேரளாவில் தான் இருக்காங்க! சராசரி இந்தியனுக்கு செக்ஸ் என்றால் இருக்கக்கூடிய அரிப்பை மூலதனமாக்கி பகல்காட்சிப் படங்களை எடுத்துப் பணம் செய்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான்! அது மட்டுமல்ல, அந்த ரேஷ்மாவை போலீஸ்காரர்கள் கைது செய்தபோது கூட, அதையும் வீடியோவாக எடுத்து யூட்யூபிலே போட்டவனும் மலையாளிதான்! அந்த வீடியோவைப் பார்த்தவங்களுக்குத் தெரியும்! மத்தவங்க மாதிரி முக்காடு போட்டுக்கிட்டோ, கையாலே முகத்தைப் பொத்திக்கிட்டோ, அல்லது காமிரா லென்ஸைக் கையாலே மறைக்கவோ செய்யாம, ரேஷ்மா சிரிச்சுக்கிட்டே நின்னுக்கிட்டிருப்பாங்க!

இதுக்கு மேலே என்ன நடந்தா என்ன? இதுவரை பார்க்காத அவமானமா இனிமேல் பார்க்கப்போகிறேன்? வெளியிலே அனுபவிக்காத கொடுமையையா ஜெயிலிலே அனுபவிக்கப்போகிறேன்? ஜெயிலிலிருந்து வெளியே வந்திட்டா திரும்பவும் இதே மனிதர்கள் மத்தியில் தானே வாழப்போகிறேன்? - என்று மனதுக்குள் நினைத்தோ அல்லது.......

"அட பாவீங்களா! இப்போ கூட என்னைப் படம் பிடிச்சுப் பொழைப்பு நடத்துற ஆசை தீரலியா?"ன்னு முகத்துலே காறித்துப்புறா மாதிரி இருக்கும் அந்தச் சிரிப்பு!

3. புவனேசுவரி

இவங்களைப் பத்தி என்ன சொல்ல? அதான் எல்லாருமா சேர்ந்து நாறடிச்சுட்டாங்களே! "வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத் தான் தண்டனை,"ன்னு கவிஞர் கண்ணதாசன் சும்மாவா எழுதினாரு! நாம வேணா சொல்லிக்கலாம் - பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர், பெண் கவர்னர், பெண் சபாநாயகர், பெண் போலீஸ் அதிகாரின்னு! ஆனால், இன்னும் கற்பகோடி காலமானாலும் இந்த ஒரு விஷயத்துலே பெண்ணை மட்டும் குற்றவாளிக் கூண்டுலே நிறுத்துற குருட்டாம்போக்கிலிருந்து விடுபட முடியுமா? சந்தேகம் தான்!

ஆனா, புவனேசுவரியைச் சும்மாச் சொல்லக் கூடாது! சட்டுன்னு ஒரு அரசியல் கட்சியிலே சேர்ந்திட்டாங்க! ஐயையோ, இவங்க அரசியலுக்கிருந்த மரியாதையைக் கெடுத்திட்டதாக நிறைய பேரு எழுதினாங்க! இல்லேண்ணே! இவங்க போய்ச் சேர வேண்டிய இடத்துக்குத் தான் போய்ச் சேர்ந்திருக்காங்க! நேத்து வரை இவங்களை பழிச்சுப் பேசினவங்க, நாளைக்கு கட்-அவுட் வைப்பாங்க! ஆளுயர மாலை போடுவாங்க! இருக்கிற இடத்துக்குத் தான் மரியாதைங்கிறதை இவங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க!

சராசரி மனிசன் திருந்தாமல் சமுதாயம் திருந்த முடியாதுங்கிற உண்மையை உலகத்துக்கு உணர்த்துகிற பெண் புவனேசுவரி! அதனால் இவங்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

4. ராக்கி சாவந்த்

தொலைக்காட்சிக்கு Idiot Box என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று ஒரு சுயம்வரம் நடத்தி நூறு கோடி இந்தியர்களுக்கும் புரிய வைத்த புண்ணியவதி ராக்கி சாவந்த். கல்வி, சமூக அந்தஸ்து, பதவி இவையெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, சராசரி மனிதன் விளம்பரத்துக்காக எவ்வளவு கீழே இறங்குவான் என்பதற்கு உதாரணமாக இரண்டு மாதங்களில் நாற்பதாயிரம் முட்டாள்கள், விண்ணப்பங்கள் என்ற பெயரில் அவரவர் ஒப்புதல் வாக்குமூலங்களை அளிக்க வைத்த அயிட்டம்-கேர்ள் ராக்கி சாவந்த்! இத்தனை விண்ணப்பங்களிலிருந்து ஒரு அடிமடையனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கும் கடைசியில் பட்டை நாமம் சாத்தி, அதுவரை சற்றும் ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கு அவரவர் மேதாவித்தனத்தைப் புரிய வைத்தவர் அல்லவா இவர்? இவரை எப்படி மறக்க முடியும்?

5. குஷ்பூ

முன்னாள் தெய்வம் இவங்க! கோவிலே கட்டிப்புட்டாய்ங்களே நம்ம மக்கள்ஸ்? இவங்க "வெளிப்படையா" நடிச்சபோது தெய்வமாக்கினாங்க; வெளிப்படையா ஒரு கருத்துச் சொன்னதும் தெய்வத்தையே சைத்தானாக்கி, தினமும் கோர்ட்டுலே ஏறி எறங்க வச்சாங்க! அப்துல் கலாம் ராக்கெட் பத்திப் பேசுனபோது, நாமெல்லாம் குஷ்பூவோட ஜாக்கெட் பத்திப் பேசிட்டிருந்தோம்! சினிமா மோகம்ங்கிற தொழுநோய் எந்த அளவுக்கு நம்மை பாதிச்சிருக்குங்கிறதை மும்பையிலிருந்து வந்து முழுசா உணர்த்தினவங்க குஷ்பூ!

6. நமீதா

தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலாச்சாரம்-னெல்லாம் பேசுறோமே? அதை நமீதா கடைபிடிக்கிறா மாதிரி இன்னொருத்தர் கடைபிடிக்கிறாங்கன்னா சொல்லுங்க! எல்லா விழாவிலேயும் இவங்க ஆடி ஆடியே தமிழை வளக்குறாங்க! அந்த ஒரு காரணத்துக்காகவே இவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

7. ரகஸியா

என்ன படமாக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் சரி, சதையில்லாவிட்டால் படம் ஓடாது என்று தமிழ்கூறும் நல்லுலகுக்கு சிரிச்சுச் சிரிச்சு வந்து சொன்னவர்! இவர் புண்ணியத்தில் தானே எல்லாப் படங்களிலும் ஒரு குத்துப்பாட்டாவது சேர்க்கப்பட்டு கண்ணையும் கருத்தையும் கவர்ந்து கொண்டிருக்கிறது.


8.போலி ஐ.பி.எஸ். சாரு

இவங்களைப் பத்தி இங்கே ஏற்கனவே எழுதிட்டேன். நம்ம ஊருலே ஏமாந்த சோணகிரிங்களுக்குப் பஞ்சமேயில்லேன்னு மீண்டுமொரு முறை நிரூபிச்சவரு!

9. மாயாவதி

மக்கள் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவு செய்து தனக்குத் தானே சிலைகளை எழுப்பிக்கொண்டுவிட்டு, அதை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்டையும் உதாசீனம் செய்து, கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட ஏழை மக்களுக்கு நஷ்ட ஈடு தர கஜானாவில் நிதியில்லை என்று அறிக்கை விட்ட அரசியல்வாதி!

10. ரஞ்சிதா

நித்தியானந்தா யாரையாவது கொலை பண்ணியிருந்தாலோ, பணமோசடி பண்ணியிருந்தாலோ கூட இவ்வளவு பரபரப்பாகியிருக்காதுங்க! இந்த விஷயத்துலே ரஞ்சிதா சம்பந்தப்படாம இருந்திருந்தா, இன்னிக்கு இத்தனை பேருக்குப் பொழைப்பு நடந்திருக்குமா? எனக்குத் தெரிஞ்சு ஆஸ்திகர்களையும், நாஸ்திகர்களையும் ஒரே அணியிலே திரட்டிய பெருமை நடிகை ரஞ்சிதாவுக்குத் தான் இருக்கு!

டீக்கடையிலே நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு ஓசியிலே பேப்பர் படிக்கிறவங்க தொடங்கி, டிப்-டாப்பா டை கட்டிக்கிட்டு வேலைக்குப் போற பெரிய பெரிய ஆளுங்க வரைக்கும் இன்னிக்கு சுவாமி நித்யானந்தாவைத் திட்டித் தீர்த்திட்டிருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் அம்மணிதானே!

இந்தப் பட்டியலில் இருக்கிற பத்துப் பெண்களில் எத்தனை பேரை, வாசிக்கிற எத்தனை பேருக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பெண்களைப் பற்றி இங்கு எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இடைப்பட்ட நிலையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகுவது என்பது மிகவும் கஷ்டமான விசயம். ஒன்று, தீவிரமாக விமர்சிக்கணும், இல்லாட்டி கண்மூடித்தனமாக ஆதரிக்கணும் என்கிற கூட்ட மனப்பான்மை தான் பெரும்பான்மையான சமூகத்தின் அணுகுமுறையாக இருந்து வந்திருக்கிறது; இருக்கிறது, இனிமேலும் இருக்கும்.

மேலே நான் குறிப்பிட்டுள்ள பெண்களை எனக்குப் பிடித்திருப்பதற்கோ, மற்றவர்களுக்குப் பிடிக்காமல் இருப்பதற்கோ பல காரணங்கள் இருந்தாலும், இவர்களும் நமது சமூகத்தின் கண்ணாடிகள் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. எல்லாரும் பெண்களை உயர்த்தி எழுதி விட்டார்கள் என்பதற்காக, நான் வித்தியாசமாக முயன்ற முயற்சியல்ல இது. இந்தப் பத்துப் பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் என்னைப் போன்றவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கும் நான் என்னளவில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன் என்பதே பொருள்.

இது யாரையும் வருத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. வருந்தி எழுதியது. இவர்களும் பெண்கள் தான், இவர்களை உருவாக்கியதும் நாம் தான், இவர்களைப் போன்றவர்களையும் நம்மில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதும் நமது சமூகப்பொறுப்புதான்! அஃதன்றி, சிகரத்தை எட்டியவர்களை மட்டும் சிலாகித்துக்கொண்டு, நமது கண்ணெதிரே சின்னாபின்னமாகிற பெண்களை உதாசீனப்படுத்துதல் தான் உசிதம் என்றால், அந்த சமூகத்தை என்னவென்று சொல்வது?

44 comments:

பிரபாகர் said...

சேட்டை, பாரின் பிகருங்க (அதாம்பா, கிளிண்டன் மேட்டரு) ஏதும் புடிக்கலையான்னேன்?

எங்கும் எதிலும் வித்தியாசம்... அதுதான் சேட்டை.

பிரபாகர்.

Sanjai Gandhi said...

//0 எவ்வளவு பெரிய மனசு பாருங்களேன்: //

கொன்னியான்.. இப்போ புரியிது.. இவங்க ஏன்ன் பிடிக்கும்னு.. :)))



நமீதாவுக்கு 6 வது இடம் தானாஆஆஆஆஆஆஆஆ? முதல் இடம் குடுக்கனும்..

Unknown said...

நல்லாக்கீதுபா.. :))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதெல்லாம் டூ மச்..
பத்து பெண்களப் பற்றி எழுதச்சொன்னா,
20 பேர எழுதியிருக்கீங்க..
ஏன்னா... குஷ்பு ... 10 பேருக்குச் சமம்.. ஹி..ஹி

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களை "பாதித்த" பத்து பெண்கள் பட்டியல் :))
கலக்கல் சேட்டை.

pudugaithendral said...

வித்யாசமான பார்வை. எங்கோ படித்த வரிகள் ஞாபகத்துக்கு வருது. ஒரு விபச்சாரி அபலைப் பெண் தந்திருந்த பேட்டி ஒன்றில்,” எங்களைப்போன்றவர்கள் இருப்பதால்தான் நாட்டில் பல பெண்களின் மானம் காக்கப்படுகிறது” என்பது தான் அது.

:(

மங்குனி அமைச்சர் said...

//மேலே நான் குறிப்பிட்டுள்ள பெண்களை எனக்குப் பிடித்திருப்பதற்கோ, மற்றவர்களுக்குப் பிடிக்காமல் இருப்பதற்கோ பல காரணங்கள் இருந்தாலும், இவர்களும் நமது சமூகத்தின் கண்ணாடிகள் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. எல்லாரும் பெண்களை உயர்த்தி எழுதி விட்டார்கள் என்பதற்காக, நான் வித்தியாசமாக முயன்ற முயற்சியல்ல இது. இந்தப் பத்துப் பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் என்னைப் போன்றவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கும் நான் என்னளவில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன் என்பதே பொருள்.//

உனக்கு உள்ள இப்படி ஒரு நல்ல மனசு இவுகலபத்தி சோக ராகம் பாடிகிட்டு இருக்கிறத இவ்வளவு நாளா மரசிட்டியே

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை கலக்கிட்டீங்க ஒரு கலக்கு...

முகுந்த்; Amma said...

:(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்,வித்தியாசமான பதிவு.

ரிஷபன் said...

சிகரத்தை எட்டியவர்களை மட்டும் சிலாகித்துக்கொண்டு, நமது கண்ணெதிரே சின்னாபின்னமாகிற பெண்களை உதாசீனப்படுத்துதல் தான் உசிதம் என்றால், அந்த சமூகத்தை என்னவென்று சொல்வது?
ஹாட்ஸ் ஆஃப்!

Chitra said...

மேலே நான் குறிப்பிட்டுள்ள பெண்களை எனக்குப் பிடித்திருப்பதற்கோ, மற்றவர்களுக்குப் பிடிக்காமல் இருப்பதற்கோ பல காரணங்கள் இருந்தாலும், இவர்களும் நமது சமூகத்தின் கண்ணாடிகள் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது.


...............உண்மை கசக்கலாம், சிலருக்கு. ஆனால், உண்மை இல்லை என்று ஆகி விடாது. அருமையான பதிவு!
(பி.கு.) # 6 - வேதனையான உண்மை.

சிநேகிதன் அக்பர் said...

பாஸ் உங்களுக்கு பிடித்த பத்து பெண்கள் லிஸ்ட் கலக்கல். அரண்டு விட்டேன்.

நியாயமான ஆதங்கம் தான்.

ஜெய்லானி said...

சேட்டை , ரேஷ்மாவை முதல்ல ஏன்யா போடலை???

தாராபுரத்தான் said...

ஒழிவு மறைவு இல்லாம எழுதிப்போட்டீங்க தம்பி.

Unknown said...

நமிதாவை முதல் இடத்துக்கு எடுக்காது பற்றி எமது வானவில் கலர் கரை வேட்டி
ரசிகர் மன்றம் சார்பில் எச்சரிக்கை !!!!!!!! விடுக்கிறோம் .




சேட்டை நீங்க சேட்டை

கௌதமன் said...

உங்க பதிவுகளில் இருக்கும் நகைச்சுவை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பிரேமா மகள் said...

பார்த்து பாஸ்.. இந்த பத்து பேரும் சேர்ந்து உங்கள்க்கு விழா எடுக்கப் போறாங்க.. அதில் கலை நிகழ்ச்சி வெச்சு.. குத்தாட்டம் போடுவாங்க.. தேவையா‍ எங்களுக்கு?

'பரிவை' சே.குமார் said...

வித்யாசமான பார்வை..!

டக்கால்டி said...

பட்டாசு...

அண்ணாமலையான் said...

இந்த பத்துல நம்மாளு பேரு வராததால நான் டூ கா..

settaikkaran said...

//சேட்டை, பாரின் பிகருங்க (அதாம்பா, கிளிண்டன் மேட்டரு) ஏதும் புடிக்கலையான்னேன்?//

Be இண்டியன், Praise இண்டியன்! :-))


//எங்கும் எதிலும் வித்தியாசம்... அதுதான் சேட்டை.//

எல்லாம் நீங்க கொடுக்கிற உற்சாக டானிக்கோட விளைவு தான்!

மிக்க நன்றிங்க!!!!!

settaikkaran said...

//கொன்னியான்.. இப்போ புரியிது.. இவங்க ஏன்ன் பிடிக்கும்னு.. :)))//

ஹாஹா! வாங்க வாங்க! புரிஞ்சுக்கிட்டா சரிதானுங்க!


//நமீதாவுக்கு 6 வது இடம் தானாஆஆஆஆஆஆஆஆ? முதல் இடம் குடுக்கனும்..//

இன்னும் ரெண்டு மூணு பாராட்டு விழாவுலே ஆடினாங்கன்னா அவங்க தானுங்க நம்பர் ஒன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!!!

settaikkaran said...

//நல்லாக்கீதுபா.. :))//

மிக்க நன்றிங்க!!!!!

settaikkaran said...

//இதெல்லாம் டூ மச்..பத்து பெண்களப் பற்றி எழுதச்சொன்னா, 20 பேர எழுதியிருக்கீங்க..ஏன்னா... குஷ்பு ... 10 பேருக்குச் சமம்.. ஹி..ஹி//

என்னண்ணே, கணக்குலே இவ்வளவு வீக்கா? உங்க கணக்குப்படிப் பார்த்தாலும் 19 தானே ஆகுது? :-)))
மிக்க நன்றிங்க!!!!!

settaikkaran said...

//உங்களை "பாதித்த" பத்து பெண்கள் பட்டியல் :)) கலக்கல் சேட்டை.//

எல்லாத்துக்கும் நீங்க புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சது தானே காரணம்?
மிக்க நன்றிங்க!!!!!

settaikkaran said...

//வித்யாசமான பார்வை. எங்கோ படித்த வரிகள் ஞாபகத்துக்கு வருது. ஒரு விபச்சாரி அபலைப் பெண் தந்திருந்த பேட்டி ஒன்றில்,” எங்களைப்போன்றவர்கள் இருப்பதால்தான் நாட்டில் பல பெண்களின் மானம் காக்கப்படுகிறது” என்பது தான் அது.//

மிகவும் உண்மை! அப்படிப்பட்ட பெண்கள் ஒருவகையில் அழுக்கைத் தின்று குளத்தைச் சுத்தப்படுத்தும் மீன்களைப் போன்றவர்கள்!!
மிக்க நன்றிங்க!!!!!

settaikkaran said...

//உனக்கு உள்ள இப்படி ஒரு நல்ல மனசு இவுகலபத்தி சோக ராகம் பாடிகிட்டு இருக்கிறத இவ்வளவு நாளா மரசிட்டியே//

நம்ம எல்லாரோட நகைச்சுவை,நக்கலுங்கிற முகமூடிக்குப் பின்னாலே, சமகால அக்கறை கொஞ்சமாவது இருக்காமலா போயிடுமண்ணே? மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//சேட்டை கலக்கிட்டீங்க ஒரு கலக்கு...//

உற்சாகம் அளிக்க உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது வேறேன்ன வேண்டும்? மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

:(((

புரிந்து கொண்டேன்!!மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//ம்,வித்தியாசமான பதிவு.//

பாராட்டுக்கு மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//ஹாட்ஸ் ஆஃப்!//

பாராட்டுக்கு மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//...............உண்மை கசக்கலாம், சிலருக்கு. ஆனால், உண்மை இல்லை என்று ஆகி விடாது. அருமையான பதிவு! (பி.கு.) # 6 - வேதனையான உண்மை.//

உண்மையை ஒப்புக்கொள்ள பயந்து ஒடுவதால் அது நம்மைத் துரத்துவது நின்றுவிடாதே! மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//பாஸ் உங்களுக்கு பிடித்த பத்து பெண்கள் லிஸ்ட் கலக்கல். அரண்டு விட்டேன். நியாயமான ஆதங்கம் தான்.//

இது நம் அனைவரின் ஆதங்கங்களும் கூட அல்லவா? அதனால் தான் உங்களுக்கும் பிடித்திருக்கிறது! மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//சேட்டை , ரேஷ்மாவை முதல்ல ஏன்யா போடலை???//

இதுவும் மிகவும் நியாயமான ஆதங்கமே! :-))))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//ஒழிவு மறைவு இல்லாம எழுதிப்போட்டீங்க தம்பி.//

ஐயாவின் வருகை பெருமிதம் ஏற்படுத்துகிறது!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//நமிதாவை முதல் இடத்துக்கு எடுக்காது பற்றி எமது வானவில் கலர் கரை வேட்டி
ரசிகர் மன்றம் சார்பில் எச்சரிக்கை !!!!!!!! விடுக்கிறோம் .//

ஆஹா! காளமேகப்புலவர் கிட்டே சொல்லி வசைபாடிராதீங்க அண்ணே! :-)))
மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//உங்க பதிவுகளில் இருக்கும் நகைச்சுவை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//பார்த்து பாஸ்.. இந்த பத்து பேரும் சேர்ந்து உங்கள்க்கு விழா எடுக்கப் போறாங்க.. அதில் கலை நிகழ்ச்சி வெச்சு.. குத்தாட்டம் போடுவாங்க.. தேவையா‍ எங்களுக்கு?//

தமிழ்நாட்டுக்கு இன்னும் என்னென்ன கஸ்டம் மிச்சமிருக்குன்னு இப்போ தான் புரியுதுங்க! :-))))
மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//வித்யாசமான பார்வை..!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//பட்டாசு...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//இந்த பத்துல நம்மாளு பேரு வராததால நான் டூ கா..//

அண்ணாமலையாரே! அவசரப்படாதீங்க! இன்னும் தொடர்பதிவு வராமலா இருக்கப்போகுது?? :-)))
மிக்க நன்றிங்க!!!!!!

Unknown said...

ஜெயலலிதாவை விட்டுடீங்களே

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA Qualifications and Courses | ACCA courses Chennai | Best ACCA training institutes