(ஏப்ரல் 14-ம் தேதி கேப்டன் டி.வி. துவக்கப்படுவதற்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், கேப்டன் டிவியைத் தொடர்ந்து, வைஸ்-கேப்டன் டிவி, பேட்ஸ்மேன் டிவி, பௌலர் டிவி, அம்பயர் டிவி என்று பல டிவிகள் துவங்கப்படலாம் என்று காற்றுவாக்கில் செய்தி வந்ததால், நானும் "சேட்டை டிவி" என்ற பெயரை பதிவு செய்துவிட்டேன். இதன் ஒளிபரப்பைத் துவங்க ஏப்ரல் 1-ம் தேதியைத் தவிர பொருத்தமான வேறு நல்ல நாள் கிடைக்காது என்பதால், இப்போது முதலே ஒளிபரப்பு ஆ-ரம்பம்!)மற்ற தொலைக்காட்சிகள் போலன்றி, நமது "சேட்டை டிவி"யில் ஒவ்வொரு நாளும் பல புதுமையான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சில:
அலங்கோலங்கள்(நெடுந்தொடர்)இது இரண்டு அண்ணன்கள், மூன்று தம்பிகள், நான்கு அக்காக்கள், ஐந்து தங்கைகள், ஆறு சினேகிதிகள், ஏழு வில்லிகள், எட்டு வில்லன்கள் மத்தியில் அகப்பட்ட ஒரு அபலைப்பெண்ணின் வாழ்க்கைப்போராட்டம் பற்றிய கதை. மற்ற நெடுந்தொடர்களைப் போல சதா அழுதுகொண்டேயிராமல், சோகக்காட்சியிலும் கூட வயிறுகுலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், நகைச்சுவைக் காட்சிகளில் பிழியப் பிழிய அழவைக்கும் சோகவசனங்களும் இடம்பெறும். இந்தத் தொடரில் வறுமையில் வாடுகிற அம்மா வேஷத்தில் நடிப்பதற்காக 125 கிலோவுக்கு மேல் எடையுள்ள நடுத்தர வயது நடிகையைத் தேடி வருகிறோம். மேற்கூறிய தகுதியுள்ள நடிகைகள் (வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு) எங்கள் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏப்ரல் 1-ம் தேதியன்று துவங்குகிற இந்தத் தொடர் விளம்பரங்கள் வருகிற வரையிலும் தொடரும்.
(IPL-IV) இந்தியன் பேட்டை லீக்சிந்தாதிரிப்பேட்டை சிறுத்தைகளுக்கும் கொலைகாரன்பேட்டை கோட்டான்களுக்கும் இடையிலேயான IPL போட்டி நேரடி ஒளிபரப்பாகும். மற்ற ஐ.பி.எல்.போட்டிகள் போல அன்றி, இந்தப் போட்டிகளில் சியர்லீடர்ஸ்-க்கு பதிலாக, கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்,நையாண்டி மேளம் ஆகியவை நடக்கும். போட்டியின் வர்ணனையை கோழிக்குளம் குப்புசாமி பார்ட்டி வில்லுப்பாட்டாக சொல்லுவார்கள். சிந்தாதிரிப்பேட்டையின் பிராண்டு அம்பாஸடராக கொல்லங்குடி கருப்பாயியும், கொலைகாரன் பேட்டை கோட்டான்களின் பிராண்டு மாருதியாக பரவை முனியம்மாவும் இருப்பது அனைவரும் அறிந்ததே!
சேட்டை செய்திகள்இப்போது இருக்கிற சேனல்களுக்குக் கொஞ்சம் கூட சமூகப்பொறுப்புணர்ச்சியே இல்லீங்க! சும்மா பணவீக்கம், ஆளுங்கட்சி சூளுரை, எதிர்க்கட்சி அறைகூவல்-னு போரடிக்கிறாங்க. அதுனாலே நம்ம சேட்டை டிவியிலே பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான செய்திகளை மட்டும் தான் சொல்லப்போறோம். அதாவது...
காணாமப்போனவங்களைக் கண்டுபிடிக்கிறதுக்கு வெத்தலையிலே மைபோட்டுப் பார்த்து சொல்லுறவங்களைப் பத்தி...
கல்யாணம் ஆகாம தவிக்கிறவங்க, கல்யாணம் பண்ணிட்டு இன்னும் தவிக்கிறவங்க, குழந்தை பாக்கியம் இல்லாதவங்க, கடவுள் கொடுத்தாருன்னு சொல்லி கும்பகோணம் அடுக்கு மாதிரி ப்ள்ஸ்-டூவிலிருந்து எல்.கே.ஜி.வரைக்கும் படிக்கிற எல்லா வயசுலேயும் தலா ஒரு குழந்தை வச்சிருக்கிறவங்க...இவங்களோட தோஷத்தை எந்த சாமியார் போக்குவாருங்கிறதப் பத்தி....
எந்த நடிகைக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு, எந்த நடிகை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அவங்களுக்கு அது எத்தனாவது கல்யாணம், இதுக்கு முன்னாடி அவங்க எத்தனை கல்யாணம் பண்ணினாங்க, எத்தனை விவாகரத்து பண்ணினாங்கன்னு ஆதாரபூர்வமா சொல்லப்போறோம். சில பத்திரிகைகளைப் படிச்சிட்டு மக்கள் "இந்த நடிகை கல்யாணம் பண்ணினது அதிகமா, விவாகரத்து பண்ணினது அதிகமா?"ன்னு மண்டை குழம்பிப்போயிருக்காங்க!
செய்திகளுக்கு நடுநடுவே சேட்டை டிவியின் சிறப்பு நிருபர்கள், பல்வேறு ஆசிரமங்களுக்குச் சென்று சாமியார்களின் படுக்கையறையிலிருந்து நேரடி ஒளிபரப்பும் நடத்துவாங்க! இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வர்ணனையாளர்கள் தேர்வு நடந்திட்டிருக்குது. அடுத்தவன் பெட்-ரூமிலே ஒளிஞ்சிருந்து பார்த்த அனுபவமுள்ளவங்க தங்கள் சான்றிதழ்களோட எங்களை வந்து (காமிரா இல்லாமல்) சந்திக்கவும்.
சேட்டை டிவி துவங்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல பரவியதால், பலதரப்பட்ட மக்கள் கலவரத்துடன் வாழ்த்துச்செய்தி அனுப்பியவண்ணம் உள்ளனர். அதிலிருந்து குறிப்பிட்ட சில செய்திகளை உங்களுக்காக கீழே அனுப்பியிருக்கிறோம்.
நடிகை சில்மிஷா(மொழிபெயர்க்கப்பட்டது)
"வணக்கம்!
(இதை மொழிபெயர்க்கவில்லை!)
சென்ற ஆண்டில் நான் நடித்த (?) ஆறு படங்களுக்கு ஆதரவு அளித்த மாதிரியே, என்னைப் பற்றி வெளியான 4567 எம்.எம்.எஸ்கள், 56789 எஸ்.எம்.எஸ்.கள் மற்றும் 57890123 கிசுகிசுக்களுக்கும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி! குறிப்பாக எனது கல்யாணம் குறித்து எனக்கே தெரியாத பல தகவல்களை வெளியிட்ட பத்திரிகைகளைப் படித்து அவரவர் பொது அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதாக அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.விலைவாசி உயர்வு போன்ற சின்ன பிரச்சினைகளையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் என்னைப் பற்றிக் கவலைப்பட்ட உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஏப்ரல் முதல் தேதி வாழ்த்துக்கள்! ஹேப்பி ஏப்ரல் ஃபூல்ஸ் டே!"
நடிகர் குஜால்குமார்"வணக்கம்! தொடர்ந்து பல மொக்கைப் படங்களில் நடித்தாலும், வெயிலிலே காத்திருந்து பிளாக்கிலே டிக்கெட் வாங்கி, என்னோட படத்தை ஓட வச்ச உங்க எல்லாருக்கும் எனது முட்டாள் தின நல்வாழ்த்துக்கள். அடுத்து நான் நடிக்கப்போற படத்துக்குப் பேரு "கருவாடு". இதுலே கதாநாயகியை வில்லன் மயக்கி அமெரிக்காவுக்கு தந்திரமாக் கடத்துற காட்சி இது வரை தமிழிலே வராத காட்சி! மீனம்பாக்கத்துலேருந்து பிளேன் டேக்-ஆஃப் ஆகும்போது, கதாநாயகன் பரங்கி மலையிலிருந்து ஒரு ஜம்ப் பண்ணி நேரா பிளேனுக்குள்ளெ பைலட்டோட கேபினிலே குதிக்கிறா மாதிரி ஒரு புதுமையான காட்சி! இதுவரைக்கும் ஹாலிவுட்லே கூட இப்படியொரு சீன் வந்தது கிடையாது. எல்லாரும் மறக்காம தியேட்டருக்குப் போயிப் பாருங்க! இல்லாட்டி பாப்-கார்ன் விக்கிற ஏழை எளிய மக்களின் தொழில் நசிந்து போய் விடும்.
அப்புறம், நான் படத்துலே நடிச்சாலும் சரி, நடிக்காட்டாலும் சரி, படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியும், ரிலீஸ் ஆகி ஆறு மாசம் பின்னாடியும் அலுக்காம சளைக்காம என்னை கலாய்க்கிற வலைப்பதிவாளர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு அண்ணா! உங்க புண்ணியத்துலே தான் சல்லிக்காசுக்கு லாயக்கில்லாத படமெல்லாம் அம்பது நாள் ஓடுது! அதுனாலே திரைப்படத்துறை சார்பாக எல்லா வலைப்பதிவாளர்களுக்கு எனது சிறப்பு முட்டாள் தின வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேன். நீங்க இல்லேன்னா நாங்க இல்லே!"
சுவாமி கல்கண்டு பகவான்"சுவாமி சுத்தியானந்தா ஆசிரமத்தில் நடந்ததைப் படம் பிடிச்சுப்போட்டு, என் வயித்துலே பாலை வார்த்தீங்க! உங்க புண்ணியத்துலே அவரோட லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போ என் ஆசிரமத்துக்கு டைவர்ட் ஆயிட்டாங்க! பிசினஸ் நல்லாப் போயிட்டிருக்கு! அடுத்த வருஷம் முப்பது பர்சென்ட் டிவிடெண்டு டிக்ளேர் பண்ணப்போறேன். ஐ.பி.ஓவுக்குப் போயி ஷேர்-மார்க்கெட்டையும் ஒரு கலக்கு கலக்கணுமுன்னு ஆசையா இருக்கு! அதுனாலே உங்க எல்லாருக்கும் என் சார்புலேயும் என் மனைவி சார்புலேயும் ஆசீர்வாதங்களும் நல்வாழ்த்துக்களும்! பக்தகோடிகளுக்கு முட்டாள் தின நல்வாழ்த்துக்கள்! கோவிந்தா கோவிந்தா!!"

சேட்டை டி.வியின் துவக்க விழாவை முன்னிட்டு, இன்று, ஏப்ரல் 1-ம் தேதி.......
"உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத "டங்குவார்" என்ற புத்தம்புதிய சுத்தமான தமிழ்ப்படம்....உங்கள் சேட்டை டிவியில்.....! காணத்தவறாதீர்கள்!!!
சேட்டை டிவி துவக்கவிழா அழைப்பிதழை ஆளுங்கட்சித்தலைவருக்கும், எதிர்க்கட்சித்தலைவருக்கும் அனுப்பினோம். அவர்கள் இருவருமே "நாங்கள் தான் தினசரி மக்களுக்குப் பல அறிக்கைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோமே! அதனால், முட்டாள்கள் தினத்துக்கென்று தனியாக வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அதனால், எங்களது தேர்தல் அறிக்கைகளையே முட்டாள் தின வாழ்த்துச் செய்தியாகப் போட்டுக்கொள்ளுங்கள்," என்று தெரிவித்து விட்டனர். அப்பாடா, ஏதோ இந்த ஒரு விஷயத்திலாவது இருவருக்கும் ஒத்துப்போகிறதே, அந்த வகையில் மகிழ்ச்சி!