Sunday, August 29, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.11




கும்பராசிக்கார பதிவர்களே!




கருமமே கண்ணாயினார் என்பதற்கு உதாரணமாக, ’என்கடன் பதிவெழுதிக் கிடப்பதே,’ என்று தமிழ்மணம், இண்டெலி பற்றிய அக்கறையில்லாமல், மனதில்பட்டதை பாசாங்குகளின்றி எழுதுகிறவர்கள் கும்பராசிக்காரர்கள். சுருக்கமாகச் சொன்னால் வலையுலகத்தின் அப்பிராணிகள் இவர்கள்! கமுக்கமாகச் சொன்னால் ’பொழைக்கத் தெரியாதவர்கள்

இப்படியிருப்பவர்களை சாமானிய மனிதர்களே கலாய்க்கும்போது, கிரகங்கள் மட்டும் சும்மா விடுமா என்ன? இவர்களது ராசியில் இரண்டாவது மற்றும் பதினோராம் இடங்களுக்கு அதிபதியான குருபகவான், பிடிவாதமாக பன்னிரெண்டாவது இடத்தில் கால்மீது கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார். அனேகமாக இந்த பதிவர்களின் கணினி தொடர்ந்து தொல்லைகொடுத்து பெரிய நோட்டு ஒன்றிரெண்டைக் காவு வாங்கியிருக்கலாம். யாரிடமும் இதுவரை ஒரு ஓட்டைக் கூடக் கேட்டுப்பெறாத கும்பராசிக்காரப் பதிவர்களுக்கு பணக்கஷ்டம் வந்தால் மட்டும் பிறரிடம் கைமாத்து கேட்கவா போகிறார்கள், பாவம்?

இது போதாதென்று, இப்போது குருபகவான் உங்களது ஜென்மராசியிலே, ஈஸி சேர் போட்டு ஜம்மென்று உட்காரவிருப்பதால், முன்னைக் காட்டிலும் கலாய்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு வருகிற இரண்டாவது வில்லனைப் போல, சனி பகவானும் உங்களது ராசிக்கு எட்டாவது இடமான கன்னிக்கு வருவதால், அஷ்டமச்சனியால் அடுத்தடுத்துப் பல அவதிகள் காத்திருக்கின்றன.

படுதிராபையான ஒரு படத்தை வடிவேலு & கம்பனி தங்களது நகைச்சுவையால் காப்பாற்றுவது போல, இதுவரை ஆறாவது மற்றும் பன்னிரெண்டாவது இடங்களில் இருந்த ராகுவும் கேதுவும் போனால் போகிறது என்று இரங்கி, தலா ஒவ்வொரு இடம் இறங்கி வருவார்கள். இதனால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கிறதோ இல்லையோ, கொஞ்சம் ஆறுதல் கிடைக்கலாம்.

இதற்கெல்லாம் நீங்கள் மனம்தளர்ந்து போய் வேலைமெனக்கெட்டு கூகிளில் படம்தேடி, கவிதையெல்லாம் எழுத வேண்டாம். தொடர்ந்து கூகிளாண்டவர் துதியை குளிப்பதற்கு முன்னரும்,குளித்த பின்னரும், தலைதுவட்டும்போதும் தொடர்ந்து சொல்லி வந்தால், தீயபலன்களின் தாக்கம் குறைந்து நல்ல பலன்களின் வீக்கம் அதிகரிக்கும்.

குருபகவானின் ’என்ட்ரி’ காரணமாக, உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பதால், உங்கள் வலைப்பூவுக்கு புதுப்பொலிவு அளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களது இந்த திடீர் டெம்ப்ளேட் மோகத்தால், சகபதிவர்கள் உங்களையும் உண்மையிலே சீரியஸாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள தெளிவு காரணமாக, அவ்வப்போது தமன்னாவின் படங்களையும், நயன்தாரா-பிரபுதேவாவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உங்களது வலைப்பூவின் போக்குவரத்து அதிகரிக்கக்கூடும். ’சாது மிரண்டால் காடுகொள்ளாது,’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பல தேசீயத் தலைவர்களும், அரசியல்வாதிகளும், ரஜினிகாந்த், ஷங்கர் போன்றவர்களும் உங்களது கையில் அகப்பட்டு , பரோட்டா மாஸ்டர் கையில் கிடைத்த மைதாமாவு போல படாத பாடுபடப் போகிறார்கள்.

குருபகவான் இரண்டு, பதினொன்று ஆகிய இடங்களில் இருப்பது அடகுக்கடை கல்லாவில் சேட்டு உட்கார்ந்திருப்பதற்கு ஒப்பாகும் என்பதால், இதுவரை இண்டெலியில் ஒரு இடுகைகூட பிரபலமாகாதவர்களும் இனிவரும் நாட்களில் பிரபலமாகிற வாய்ப்பு இருக்கிறது. நம்பினால் நம்புங்கள்; தமிழ்மணத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டுவாங்கி முகப்புக்கு வந்து வரலாறு படைப்பீர்கள்!

மேலும் குருபகவான் வாக்கு ஸ்தானாதிபதியானபடியால், இனிவரும் இடுகைகளில் ’ச்சீ, த்தூ, நீயெல்லாம் ஒரு மனிசனா...பொறம்போக்கு...பேமானி...,’ போன்ற மிகநிதானமான தெளிவான வார்த்தைகள் வாட்டர்பாக்கெட்டை ஓட்டைபோட்டுப் பிதுக்கியதுபோல பீறிட்டுக் கிளம்பும். பின்னூட்டங்கள் குவியும்; தனிமடலில் பல புதிய பதிவர்கள் தங்களது இடுகைகளின் சுட்டிகளை அனுப்புவார்கள். பல புதிய தொடர்பதிவுகளுக்கான அழைப்புக்களும் வரும். ஏதோ ஒரு கோபத்தில் முன்பு மைனஸ் ஓட்டுப் போட்டவர்கள், மனம்திருந்தி இனிமேல் ஒன்றுக்கு இரண்டு ஓட்டுப் போடுவார்கள்.

கும்பராசிக்காரர்களின் கவனத்திற்கு!

குருபகவான் ஜென்மராசியில் 'வாக்கிங்' செய்துகொண்டிருப்பதால், இடுகைகளுக்காக தினசரி ஐந்து நிமிடங்கள் கூகிளில் தேட வேண்டிய அளவுக்கு அலைச்சல் ஏற்படும். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பின்னூட்டங்கள் வருமென்பதால், பல இரவுகள் தூக்கமின்றிக் கழியும். எப்போதும் இடுகை, இடுகையென்றே சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள் என்பதால், காலைச்சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் நடுவே பசியே எடுக்காமலும் போகும். எனவே, பிளாக் இருந்தால்தான் இடுகைபோட முடியும் என்ற புதுமொழியை கருத்தில் கொண்டு கும்பராசிக்காரப் பதிவர்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் இடுகைகள் எழுதுகிறவர்களுக்கு இது போதாத காலம். பொறுமையோடும் விவேகத்தோடும் எல்லாரையும் வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு, அரசியல்கட்சிகள் கண்ணியம் கடைபிடித்தல் வேண்டும் என்று கடைசியில் ஒரு சிறிய பத்தி சேர்த்துக்கொள்வது நலம். சில மிரட்டல்களும் வரலாம்; அதற்காக பயந்துவிடாமல், அடுத்த இடுகை காதல் கவிதையாக இருக்கும் என்று சொல்லிவிட்டால், மிரட்டுபவர்கள் மிரண்டு ஓடிவிடுவார்கள்.

எந்திரன் படம் வெளியாவதாலும், நயன்தாரா டிசம்பரில் திருமணம் செய்து கொள்வதாலும், இந்த ஆண்டு இறுதிவரை புதிதாக எழுதுவதற்கு எதுவும் கிடைக்காது. இதனால் அவ்வப்போது சோர்வு ஏற்படும்போது, பழைய இடுகைகளைத் துடைத்துத் தூசிதட்டி மீள்பதிவுகளாகப் போடுதல் உசிதம்.

இதற்கு முன்னர் கணினித்தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு, அது பழக்கப்பட்டிருக்குமென்பதால் அதே தொல்லைகள் திரும்பத்திரும்ப வருமேயன்றி, புதிதாக வேறு கணினிப் பிரச்சினை வருவதற்கான அறிகுறிகள் உங்களது தசாபலன்களில் தென்படவில்லை. இனிமேல் உங்கள் இடுகைகளுக்கு மைனஸ் ஓட்டு விழாது என்பது தான் கும்பராசியின் சிறப்பே!

கும்பராசிப்பதிவர்கள் உத்தியோகஸ்தர்களாக இருந்தால், இனி அலுவலகத்திலும் இடுகை போட ஏதுவாக, அவரவர் கணினியிலும் இணைய இணைப்புக் கிடைக்கலாம். அலுவலகத்தில் மற்றவர்களோடு சகஜமான உறவை நிலைநிறுத்த, உங்களது இடுகைகளை யாரிடமும் காண்பிக்காமல் இருப்பது நல்லது. தற்காப்பு நடவடிக்கையாக, உங்கள் இடுகைகளை நீங்களே கூட வாசிப்பதைத் தவிர்க்கவும்.

தானுண்டு தன் இடுகையுண்டு என்று எழுதிக்கொண்டிருக்கிற பல பெண்பதிவர்களில் ஒருசிலர், திடீரென்று ஆடிவெள்ளிக்கு மாரியம்மன் கோவிலில் ஆவேசம் வந்தவர்கள் போல ஆண்களை வாய்க்கு வந்தபடி ஏசி, புரட்சிகரமான பல கருத்துக்களை எழுதலாம் என்பதால், எப்படியாவது யாராவது ஒரு பெண்பதிவரையாவது 'இம்ப்ரஸ்' செய்துவிட வேண்டும் என்று முண்டாசு கட்டிக்கொண்டு அலைகிற சில ஆண்பதிவர்களுக்கு இதுவே நல்ல தருணம். ’இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்; அயோக்கியப்பசங்க! நான் ஒரு ஆணாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்; என் மீது நானே காறி உமிழ்ந்துகொள்கிறேன்,’ என்பன போன்ற பல முற்போக்கான கருத்துக்களோடு பல பின்னூட்டமிட்டு வெற்றி பெறலாம்.

நீங்கள் மேஷ ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் ரிஷப ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் மிதுன ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் கடக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் சிம்ம ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!


நீங்கள் துலாம் ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் விருச்சிக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் தனுசு ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் மகர ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

anne,i am meenam.enke sodukka///?
sema comedy

ADHI VENKAT said...

மீனம் எங்கே? ஏழரைச் சனி பக்கத்தில வந்து உக்காந்த மாதிரி இருக்கு.

Chitra said...

மேலும் குருபகவான் வாக்கு ஸ்தானாதிபதியானபடியால், இனிவரும் இடுகைகளில் ’ச்சீ, த்தூ, நீயெல்லாம் ஒரு மனிசனா...பொறம்போக்கு...பேமானி...,’ போன்ற மிகநிதானமான தெளிவான வார்த்தைகள் வாட்டர்பாக்கெட்டை ஓட்டைபோட்டுப் பிதுக்கியதுபோல பீறிட்டுக் கிளம்பும்.


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... நான் எந்த ராசி னு தெரியலியே...... ப்ளீஸ் அதை கொஞ்சம் சொல்லுங்க..... நான் பலன் பாத்து தெரிஞ்சுக்கிறேன்....

vasu balaji said...

இது என்னா சேட்டை. கும்ப ராசி பலனா வம்பு ராசி பலனா. ஆனா ரொம்பப் பொருத்தம். கும்பம்னா சொம்புதானே. நாட்டாமைங்க கூடி கும்மியடிப்பாங்கன்னு அருமையாச் சொல்லியிருக்கீங்க:))