Monday, February 25, 2013

கவிதைக்காய்ச்சல்




கவிதைக்காய்ச்சல்

1.       தலைப்புக்கும் இடுகைக்கும் சம்பந்தம் கிடையாது.
2.       படத்துக்கும் இடுகைக்கும் சம்பந்தம் கிடையாது.
3.       படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் கிடையாது.
4.       கவிதைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.



      எடோ...அங்கே பாரு!                

      மொட்டைமாடியை அடைந்ததும், சுரேந்திரன் காட்டிய திசையைப் பார்த்த எனக்கு, பகல்காட்சியில் பலான படம் பார்க்கப்போய் பக்திப்படம் பார்த்ததுபோல பக்கென்று ஆயிற்று! ஆருயிர் நண்பன் வைத்தி மொட்டைமாடியின் குட்டிச்சுவரை ஒட்டி நின்றபடி எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்.

      ஐயையோ! சுரேந்திரா என்னடா ஆச்சு? தற்கொலை பண்ணிக்கப்போறானா?

      என் குரலைக்கேட்டுத் திரும்பிய வைத்தி எங்களைப் பார்த்து, பழைய தமிழ்ப்படத்தில் தனியாகச் சிக்கிய கதாநாயகியைப் பார்த்து வில்லன் சிரிப்பதுபோலச் சிரித்தான்.

      வாங்கடா! ஒரு அருமையான கவிதை சொல்றேன். கேட்கறீங்களா?

      என்னது கவிதையா?  அதிர்ந்தேன் நான். இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்குப் போய் வந்ததுமுதல் வைத்தி ஒரு மார்க்கமாகவே இருப்பதை கவனித்து வந்தாலும், இப்படிக் கவிதை எழுதுமளவுக்கு விஷயம் விபரீதமாகும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

      வேணாண்டா!சுரேந்திரன் கெஞ்சினான். “ஏற்கனவே சேட்டைக்கு உடம்பு சரியில்லை. நீ புக்-எக்ஸிபிஷன் போயிட்டு வர்றப்போ சொன்ன கவிதையே இன்னும் செரிமானம் ஆகலே!

      ரசனை கெட்ட ஜென்மங்களா!உறுமினான் வைத்தி. “அது எவ்வளோ நல்ல கவிதை.... இன்னொரு வாட்டி கேளுங்கடா...

புத்தகக்கண்காட்சி!
சுடச்சுடக் கிடைத்தன
கவிதை நூல்களும்
காப்பி போண்டாவும்!

      வைத்தி!அலறினேன் நான். “இதுவரைக்கும் நீ எவ்வளவோ இடைஞ்சல் பண்ணியிருக்கே! ஃபிரெண்ட்ஷிப் கெட்டுரக்கூடாதேன்னு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டோம். அதுக்காக கவிதையெல்லாம் சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்லை. உனக்கு நாங்க ரெண்டு பேரும் அப்படியென்ன கெடுதல் பண்ணிட்டோம்..?

      டேய் சேட்டை! சென்சார்போர்டுக்குப் போன சினிமா டைரக்டரைப் போலக் கெஞ்சினான் வைத்தி. எனக்காக ஒரே ஒரு கவிதை கேளுடா! அது நல்லாயில்லேன்னா அப்புறம் நான் கவிதையே எழுத மாட்டேன். சரியா?

       நானும் சுரேந்திரனும் ஜாடையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். வைத்தியின் கவிதைகளிலிருந்து தப்பிக்க நல்ல வழியை அவனே சொல்லி விட்டான்.

      சரிடா! ஒரே ஒரு கவிதை தான் அலவ்ட்! தப்பித்தவறி நாங்களே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாக்கூட நீ இன்னொரு கவிதை சொல்லுவேன்னு அடம்பிடிக்கக் கூடாது. சரியா?

      சேச்சே! அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைடா!

      எதுக்கு? நாங்க நல்லா இருக்குன்னு சொல்றதுக்கா...?

      கேளுங்கடா!என்ற வைத்தி தொண்டையைச் செருமிக் கொண்டான். பிறகு....

என்மீது தாழப்பறந்தும்
எச்சமிடாமல் செல்கிறது.....!

என்று நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தான் வைத்தி.

      எச்சமிடாமல் செல்கிறதா? பாவம், காக்காய்க்கு கான்ஸ்டிபேஷன் போலிருக்குது...!

      இல்லைடா!எரிந்து விழுந்தான் வைத்தி. “என்மீது தாழப்பறந்தும் எச்சமிடாமல் செல்கிறது.....ஆகாய விமானம்..

      எண்டே குருவாயூரப்பா...என்னை மாத்ரம் ரட்சிக்கணே!என்று தலையில் கைவைத்தவாறு அமர்ந்தான் சுரேந்திரன்.

      ஏண்டா....ஏன்....ஏன்...? பதறினான் வைத்தி.

      ஏனா..?உறுமினேன் நான். “ஏரோப்ளேன் எச்சம் போடலைன்னு ஒரு கவிதையா? மவனே, நீ இப்படியெல்லாம் கவிதையெழுதி டார்ச்சர் பண்ணுற ஆளுன்னு தெரிஞ்சிருந்தா உன் தலையிலே குண்டே போட்டிருக்கும் தெரியுமா?

      பாவிங்களா! எவ்வளவு நல்ல கவிதை சொல்லியிருக்கேன். அதை ரசிக்கத்தெரியலியே? என்னோட கவிதையெல்லாத்தையும் புஸ்தகமாப் போட்டா என்னாகும் தெரியுமா?

      கிலோவுக்கு  நாலே கால் ரூபாய் கிடைக்கும்!

      ஓஹோ!வைத்தி கறுவினான். “எனக்குப் புரிஞ்சிருச்சுடா; புரிஞ்சிருச்சு!

      மவனே, எழுதின உனக்குப் புரிஞ்சாப் போதுமா?எகிறினேன் நான். “எங்களுக்குப் புரியற மாதிரி கவிதை சொல்லுடா....

      ஐயோ...வேண்டே....!கதறினான் சுரேந்திரன். “வைத்தி, போதும், இத்தோட நிறுத்திக்குவோம். எங்களுக்கு அறிவு கம்மி. ஏர்டெல் பிராட்பேண்ட் பில்லும் கவிதையும் எல்லாராலேயும் புரிஞ்சுக்க முடியாது. விட்டிரு!

      பொறாமை பிடிச்சவங்களா...!வைத்தியின் குரல் தழுதழுத்தது. “அவனவன் நண்பன் கவிதை எழுதினா எப்படியெல்லாம் ஊக்குவிக்கிறாங்க?

      சர்தான் நிறுத்துடா!அதட்டினேன் நான். “உன்னை ஊக்குவிக்கிறதுக்குப் பதிலா நான் லோக்கல் டிரெயினிலே ஊக்கு விப்பேன். ஊக்கு மட்டுமில்லேடா, குண்டூசி, குத்தூசி, பென்சில் எல்லாம் விப்பேன். காசாவது தேறும்!

      சேட்டை! நீ இவ்வளோ வயித்தெரிச்சல் புடிச்சவனா இருப்பேன்னு எனக்குத் தெரியாதுடா!

      எனக்கே தெரியாதே! நேத்துத்தான் டாக்டர் எனக்கு பெப்டிக் அல்ஸர் இருக்கு. எண்ணை, உப்பு, காரம், கவிதையெல்லாம் கூடாதுன்னு சொல்லியிருக்காரு!

      டேய் சேட்டை!சுரேந்திரன் மலையாளப்பட க்ளைமேக்ஸில் பொங்கியெழும் லாலேட்டன் போல வெகுண்டான். “ஈ வைத்தி நமக்குப் பொறாமைன்னு சொல்றாண்டா! நாம நினைச்சா கவிதை எழுத முடியாதா? என்னமோ இவன் ஒருத்தன் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்னுறா மாதிரியல்லே பேசுறான்?

      சுரேன்...எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவிதை எழுதத் தெரியாதுடா!

      இருக்கட்டுமே! வைத்திக்கு மட்டும் தெரியுமாக்கும்?

      டேய் சுரேந்திரா...!வைத்தி குரலெழுப்பினான். “என்னோட கவிதையை மட்டமாப் பேசறீங்களே, உங்களாலே என்னை மாதிரி ஒரு கவிதை சொல்ல முடியுமா...?

      உன்னை மாதிரி யாராலேயும் கவிதை எழுத முடியாதுடா!நான் ஒப்புக்கொண்டேன். “தலையிலே விக் வைச்சவனெல்லாம் பவர் ஸ்டார் ஆக முடியுமா?

      நீங்க நினைச்சாலும் கவிதை எழுத முடியாதுடா!கொக்கரித்தான் வைத்தி. “அதுக்கெல்லாம் அறிவு வேணுண்டா!

      எந்தாடா பறஞ்சது?சுரேந்திரன் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டான். “எந்து விஜாரிச்சு? ஞானும் கவிதை பறையும்....கேட்கான்.... யே ஓமனே....எண்டே ஓமனே...!

      டேய் சுரேந்திரா...!இடைமறித்தேன் நான். “அஞ்சாம் கிளாஸ் பசங்கல்லாம் ஐ-பேடோட சுத்திட்டிருக்காங்க; தினத்தந்தியிலே கன்னித்தீவே முடியப்போகுது. இன்னும் ஓமனையை விடலியா? லேட்டஸ்டா பாவனா, மீரா ஜாஸ்மின், மம்தா மோகன்தாஸ், காவ்யா மாதவன்னு சொல்லுடா! தமிழுலே சொல்லுடா!

      அது இன்னும் ஈஸி!என்றான் சுரேந்திரன். “நம்ம வைத்தி சொன்னதுமாதிரியே ஒரு தமிழ்க்கவிதை சொல்றேன் கேளு....

ஒவ்வொரு மதிய உணவு
இடைவேளைக்கு முன்பும்
நினைவுக்கு வருகிறது...
திறக்க முடியாத டிபன் பாக்ஸும்...
மூட முடியாத மனைவியின் வாயும்..

      சபாஷ் சுரேந்திரா!நான் கைதட்டினேன். “இது வைத்தியோட கவிதையை விட பெட்டராயிருக்கு!

      அடச்சீ!வைத்தி சீறினான். “கவிதையாடா இது?

      அப்படீன்னா நான் சொல்ற கவிதையைக் கேளு!என்று தோள்தட்டினேன்.

ஞாயிற்றுக்கிழமை நெருங்கினால்
அலுவலகங்களில் எல்லாரும்
அலைபாய்கிறார்கள்..!
சனிப்பெயர்ச்சிக்காக...

                வாவ் சேட்டை!சுரேந்திரன் கைகுலுக்கினான். “உனக்குள்ளே கவிதை இருக்குடா!

      தூங்கிட்டிருந்ததை எழுப்பிட்டீங்களே?சலித்துக்கொண்டேன். “அது எப்படிப் பாஞ்சு பிறாண்டப்போவுதுன்னு போகப் போகத்தான் தெரியும்.

      உங்க கவிதையை நீங்கதான் மெச்சிக்கணும்!பொருமினான் வைத்தி. “இயல்பா கவிதை எழுதுங்கடா... நான் எழுதியிருக்கேன் கேளுங்க...!

கல்யாண மண்டப வாசலில்
கைகுலுக்கிக்கொண்டனர்
பிச்சைக்காரனும்
பெண்ணின் தகப்பனும்.

      நீ எதுக்கு பெண்ணின் தகப்பனோட கைகுலுக்கினே?

      சேட்டை! வரதட்சணைக் கொடுமைடா! கவிதைன்னா சமூக அக்கறை வேணுண்டா!முழங்கினான் வைத்தி.

      சேட்டை!சுரேந்திரன் தோளைச் சுரண்டினான். “சமூக அக்கறையோட எப்படிக் கவிதை எழுதறது?

      அது ரொம்ப சிம்பிள் மேட்டர்டா! கவிதை எழுதுறவனைத் தவிர மத்தவன் எவனுக்கும் சூடு சூலாயி, வெக்கம் வேலாயி, மானம் மங்காத்தா எதுவும் கிடையாதுன்னுறா மாதிரி எழுதணும். கவிதையைப் படிச்சதும் நாக்கைப் பிடுங்கிட்டுச் சாவணும் போலிருக்கணும்.

      வைத்தி கவிதையைக் கேட்டதும் எனக்கும் அப்படித்தான் தோணிச்சு! இதுக்குச் செத்துப்போறது எத்தரையோ பெட்டர்...!

      டேய் சேட்டை! டேய் சுரேந்திரா!விஜய் போல விரல் சொடுக்கினான் வைத்தி. “என்னை மாதிரி பின்நவீனத்துவத்தோட ஒரு கவிதை சொன்னீங்கன்னா, ஒரு பக்க மீசையை எடுக்கறேண்டா!

      எடோ சேட்டை! ஈ பின்நவீனத்துவம் எந்தாணு?

      அது ஒண்ணுமில்லேடா! நீ வெனிலா ஐஸ் க்ரீம் சாப்பிட்டிருக்கியா?

      ஓ! அத்தரை ரசமாணோ ஈ பின்நவீனத்துவம்...?

      அவசரப்படாதேடா! அந்த வெனிலா ஐஸ் க்ரீம்லே வேப்பெண்ணையை ஊத்திச் சாப்பிட்டா எப்படியிருக்கும்? அதான் பின்நவீனத்துவம்!

                கிண்டல் போதும்! முடிஞ்சா கவிதை சொல்லுங்க!சீறினான் வைத்தி.


      இதோ எடுத்து வுடறேன் பாரு! க்கும்...!என்று தொடங்கினேன்.

பேருந்துப் பயணங்களில்
பரிதவிக்கிறது மனம்...

உனது புன்னகைக்காகவும்..
கண்டக்டர் தர வேண்டிய
பாக்கி சில்லரைக்காகவும்...!

     பிரமாதம் சேட்டை!கைதட்டினான் சுரேந்திரன். “இப்ப என்னடா சொல்றே வைத்தி?

     விழுந்தாலும் எழுவேன்; எழுந்து ஓடுவேன்! என்று கம்பீரமாய்ச் சொன்னான் வைத்தி.

      ஏன்? நாய் துரத்துதா? என்று வைத்தியைக் கடுப்பேற்றினேன்.

      சே! உங்க கிட்டே போயி கவிதை சொன்னேனே! என் புத்தியைச் செருப்பாலே அடிக்கணும்!

      அதெல்லாம் வேண்டாம்! அதுக்குப் பதிலா என் கவிதையைக் கேளு!

சில்லறை வர்த்தகத்தில்
அன்னிய முதலீடா?
அதிர்ந்து போய்
ஆங்கிலம் கற்க
முடிவு செய்தனர்
பிச்சைக்காரர்கள்!

     அடிபொளி!என்று ஆர்ப்பரித்தான் சுரேந்திரன். “ நானும் இன்னொரு கவிதை சொல்லட்டுமா?

ஒவ்வொரு மின்தடங்கலின் போதும்..
ஓடிப்போய்ப் பார்க்கிறேன்..
பக்கத்து வீட்டிலும்
போய் விட்டதா என்று...

      சூப்பர்ப்!

      டேய் சேட்டை! டேய் சுரேந்திரா! நிறுத்துங்கடா!கெஞ்சினான் வைத்தி.

      இருடா! கவிதைன்னா பொண்ணுங்களைப் பத்தி ஒண்ணாவது சொல்ல வேணாமா? கேளுடா...
அவளது இடையும்
ஆண்டவனும் ஓன்று..
உண்டென்பர் சிலர்..
இல்லைஎன்பார்கள் சிலர்..
கண்டவர் விண்டதில்லை
கண்டவர் உள்ளம் மட்டும்
விண்டு போகிறதே...!

      கவிஞர் சேட்டை வாழ்க!என்று கோஷமிட்டான் சுரேந்திரன். “சேட்டை, இப்போ எனக்கு இந்த ஆட்டம் நல்லாப் புரிஞ்சிருச்சு! நானும் சமுக சர்க்கரையோட ஒரு கவிதை சொல்லட்டுமா?

      டேய், அது சமுக சர்க்கரை இல்லேடா; அக்கறை!

      ஓ.கே!என்று கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு சுரேந்திரன் அடுத்த கவிதையைச் சொன்னான்.

மனநல மருத்துவமனையில்
கால்பந்தாட்டம்!
காதலர்களுக்கும் கவிஞர்களுக்கும்
நடந்த போட்டி
டை-பிரேக்கரில்முடிந்தது.


      அற்புதம்டா!என்று சுரேந்திரனைக் கட்டித்தழுவிக்கொண்டேன். அடுத்த வினாடி வைத்தியைக் காணவில்லை. மொட்டைமாடியிலிருந்து ஏதோ ஒரு கனமான பொருள் உரத்த சத்தத்துடன் ‘ஐயோஎன்ற அலறலுடன் கீழே விழுந்தது புரிபட இரண்டொரு நொடிகள் பிடித்தன.


**************

Saturday, February 23, 2013

கடலோரக் கப்சாக்கள்-03

எச்சரிக்கை.01:    மீண்டும், இதுவும் கொஞ்சம் நீளமான இடுகைதான்!

எச்சரிக்கை.02:   இதற்கு முந்தைய பதிவை வாசிக்க இதைச் சொடுக்கி, அதற்கு முந்தைய பதிவை வாசிக்க அங்கு தரப்பட்டிருக்கிற இழையைச் சொடுக்கி...சரி..சரி., வேண்டான்னா வுட்டுரலாம்.


ஒரு நற்செய்தி:   அம்புட்டுத்தேன்! இந்த இடுகையின் இறுதிப்பகுதி இது!


எங்கே வுட்டேன்? ஆங்...டிம்பிள் கபாடியாவைப் பற்றி, சிம்பிளாகச் சொல்வது சாத்தியமல்ல என்பதால், கொஞ்சம் அம்மணியைப் பற்றி எழுதிவிட்டு, கப்சாக்களைத் தொடரலாம் என்று. (ஸ்ரீதேவி பெருமூச்சு இடுகை போலவே, விரைவில் டிம்பிள் கபாடியாவைப் பற்றியும் பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.)

      ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய மேரா நாம் ஜோக்கர்படம் மட்டும் வெற்றியடைந்திருந்தால், இந்தியத் திரையுலகுக்கு டிம்பிள் கபாடியா என்ற கலைப்பொக்கிஷம் (முறைக்காதீங்கய்யா!) கிடைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். இப்போது பார்த்தால் பல காட்சிகளில் கண்ணீர் மல்க வைக்கும் அந்தப்படம் வெளியானபோது மிகப்பெரிய தோல்வியடைந்து, ராஜ்கபூரைப் பெருங்கடனில் தள்ளியதாம். அதிலிருந்து மீள்வதற்கென்றே, ஜாலியாக ஒரு லவ்-ஸ்டோரி எடுக்கலாம் என்று ராஜ்கபூர் உருவாக்கிய படம்தான் ‘பாபி’. தன் மகன் ரிஷிகபூருக்கு ஜோடியாக டிம்பிள் கபாடியா என்ற இளம்பெண்ணை அறிமுகம் செய்வித்து, லட்சுமிகாந்த்-பியாரேலால் ஜோடியின் அட்டகாசமான இசையுடனும், கே.ஏ.அப்பாஸின் கதையுடனும் ஒரு செமத்தியான லவ்-ஸ்டோரியாக ‘பாபியை உருவாக்கி வெளியிட்டு, பணத்தை அள்ளிட்டாரு மனுசன்! இந்தப் படத்தின் கதை வாராவாரம் ‘குமுதம் இதழில் வெளியானபோது, டிம்பிளின் படத்துக்காகவே அதைக் கிழித்துப் பத்திரப்படுத்தியிருந்தேன். (‘நீ ஏன் உருப்படலேன்னு இப்பத் தெரியுதுனு  நீங்க முணுமுணுக்கிறது என் காதுலே விழுது!)

      இந்திய அளவில் இமாலய வெற்றிபெற்ற அந்தப் படம், அப்போதைக்கு, டிம்பிள் கபாடியாவின் முதலும் கடைசிப்படமாகவே கிட்டத்தட்ட அமைந்து விட்டது. அம்மணி அந்நாளைய காதல் மன்னன் ராஜேஷ் கன்னாவைக் கல்யாணம் கட்டிக்கிட்டு (பின்னே உன்னையா கட்டிக்குவாங்க..ன்னு கேட்கப்படாது!) சினிமாவுக்கு ‘டாட்டாசொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். பல வருடங்கள் கழித்து, அதே ரிஷிகபூருடன் டிம்பிள் நடித்த படம்தான் ‘ஸாகர்’. இப்போ அந்தப் படத்தைப் பற்றித்தான் கொஞ்சம் பார்க்கப்போகிறோம்.

      கதை? ஒரு ஏழை மீனவன் (கமல்), தனது கிராமத்தில் வசிக்கிற ஒரு பெண்ணை (டிம்பிள்) காதலிக்கிறான். தற்செயலாக ஒரு பணக்கார வாலிபனுடன் (ரிஷிகபூர்) நட்பு ஏற்பட, நண்பனாக வந்தவனுக்கும் நாயகிக்கும் காதல் வர, ஏழை-பணக்கார வர்க்க மோதல், பணக்காரனின் சொத்தை அபகரிக்க சதி, ஏழை மீனவன் தன் காதலை விட்டுக்கொடுத்து, நண்பனுக்காகத் தனது இன்னுயிர் ஈந்து.....தி எண்ட்! இந்தப் படம் டேவிட் லீன் இயக்கிய ‘ரயன்ஸ் டாட்டர்என்ற படத்தின் தழுவல் என்றெல்லாம் வதந்தி உலாவியது. எனக்கும் இங்கிலிபீஸு படத்துக்கும் ஆவாதுன்ன்றதுனாலே, அதெல்லாம் மெய்யாலுமா லுல்லுலாயிக்கான்னு தெரியாது. (David Lean-ன்னா என்னை விட ஒல்லியா இருப்பாரோ?#டவுட்டு!)

      ரிஷிகபூர், கமல் இருவருமே ஆகச்சிறந்த நடிகர்கள், வேணாம், ஆகச்சிறந்த என்ற பதத்தை உபயோகப்படுத்தினா, என்னை பின்நவீனத்துவவாதி எழுத்தாளர்னு சொல்லிருவாங்க; மிக அற்புதமான நடிகர்கள் என்பதுடன், செமத்தியாக நடனமாடுபவர்களும் கூட! ஆகவே, (இந்த ஆக வேறே!), கமலும் ரிஷியும் குடித்துவிட்டு ஆடுகிற “ஹோ...யுஹி காத்தே ரஹோ! ஹோ..முஸ்குராத்தே ரஹோ!என்ற பாடலை யூடியூபில் (கிடைத்தால்) பாருங்க! சான்ஸே இல்லை! Two masters at work…!           

      80-களின் இறுதிவரையில் இந்திப்படங்களில் எதார்த்தமான நடிப்பு என்பது ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹிலானி, பாசு சாட்டர்ஜீ, குல்ஜார் போன்று வர்த்தக நிர்ப்பந்தங்களுக்குப் பணியாத இயக்குனர்களின் படங்களில் மட்டுமே பார்க்கிற அபூர்வ வஸ்துவாக இருந்து வந்தது. அந்தக் கட்டமைப்பை உடைத்த நடிகர்களில் கமலும் ஒருவர் என்பதற்கு ‘ஸாகர்படம் ஒரு சிறந்த உதாரணம். ‘சத்மா (மூன்றாம் பிறை)வின் வடிவம் வட இந்திய ரசிகர்களுக்கு மிக அந்நியமாக இருந்ததால் அது தோல்வியடைந்ததில் வியப்பில்லை. அதே போல வறுமையின் நிறம் சிகப்பு, அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் இந்தியில் எடுக்கப்பட்டபோதும், கமலின் நடிப்பு விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்ததேயன்றி, ரசிகர்கள் கமலை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதே உண்மை. ‘ஸாகர்கமலின் ஒட்டுமொத்தத் திறமைகளையும் ஒரு சின்ன பொருட்காட்சி போல ஒழுங்குபடுத்தி அழகாய்க் காட்டியது. ‘யே கமல்ஹஸன் ஆக்டிங் அச்சா கர்தா ஹை ரே என்று சாமானிய இந்தி ரசிகன் வியக்க ஆரம்பித்தது, குறைந்தபட்சம் அப்படி வியந்து நான் கேள்விப்பட்டது, ‘ஸாகர்படத்துக்குப் பிறகுதான். யெப்பா, அப்படி எத்தனை காட்சிகள்...!

      டிம்பிளைக் கலாய்ப்பதற்காக, தவறுதலாக எலிமருந்தைக் குடித்துவிட்டதுபோல அவர் விழுந்து புரண்டு அரங்கத்தை அதிரவைக்கிற கலகலப்பாகட்டும்......

      மின்விசைப்படகுகளால் அறுந்துபோன வலைகளுக்கு நஷ்டஈடு கேட்டு, கொட்டுகிற மழையில், ரிஷிகபூரின் அலுவலகத்தில் ஆக்கிரோஷமாகப் பேசுகிறதாகட்டும்.... (இந்தி உச்சரிப்பும் வெகுவாக முன்னேறியிருந்தது!)

      ரிஷிகபூரோடு போட்டிபோட்டுக் கொண்டு குடித்துவிட்டு, பாரில் மேஜை நாற்காலியின் மீதெல்லாம் ஏறி நடந்து அடிக்கிற லூட்டியாகட்டும்...

      தனது பால்ய சினேகிதியிடம் காதலைத் தெரிவிப்பதற்கு முன்னரே, அவளும் தன் நண்பனும் காதலிக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்து, அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, மூச்சு வாங்க வாங்க, கண்ணீர் மல்குகிற உருக்கமாக இருக்கட்டும்...

      காதல் தோல்வியுற்ற சோகத்தில் குடித்துவிட்டு, மறு நாள் வளர்ப்புத்தாயிடம் (நதிரா...வாவ்!) எதுவுமே நடக்காததுபோலப் பேச முயன்று, கடைசியில் உடைந்துபோய் வாய்விட்டு அழுகிற சோகமாகட்டும்....

      மன்னிப்புக் கேட்க வரும் டிம்பிளிடம் தன் கண்ணீரை மறைக்க, முகத்தில் தண்ணீரை அள்ளிக் கொட்டிக்கொண்டுவிட்டு, சிரித்துச் சமாளிக்கிற காட்சியாகட்டும், ஞொப்புரானே சத்தியமா கமலைவிட வேறெந்தக் கொம்பனும் இந்தக் காட்சிகளில் இப்படி வெளுத்து வாங்கியிருக்க முடியாது.

      இந்தப் படத்துக்காக, கமல் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும், துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி ஒரு புதிய சரித்திரமே படைத்தார். சும்மாவா...? (துரதிருஷ்டவசமாக இந்திப் படத்துக்காக கமல் வாங்கிய ஒரே ஃபிலிம்ஃபேர் விருதும் அதுதான் என்று நினைக்கிறேன்.)

      கமல், ரிஷிகபூர், டிம்பிள், நதிரா அனைவரும் போட்டிபோட்டு நடித்திருந்தாலும், கோப்பை கமலுக்குத்தான்! ‘ஷோலே’ ‘ஷான்படங்களுக்குப் பிறகு, 70 எம்.எம், டோல்பி சவுண்டுடன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் என்பதால், இது ஒரு குறிப்பிடத்தக்க படம். போதாக்குறைக்கு, ஆர்.டி.பர்மனின் அற்புதமான இசையமைப்பு....!

      செஹரா ஹை யா சாந்த் கி...என்ற கிஷோர்குமாரின் ஸோலோவும், அதில் தொய்ந்துவரும் கிதார் இசையும்! ‘ஜானே தோ நா...என்ற ஆஷா போஸ்லேயின் ஹேவார்ட்ஸ் 5000 கிளர்ச்சிக்குரலும்... ‘ஸாகர் கினாரே...தில் யே புகாரே..என்ற கிஷோர்-லதா டூயட்டும், கமலுக்கு எஸ்.பி.பி.பாடிய ‘ஓ மாரியா...ஓ மாரியா’, ‘யுஹீ காத்தே  ரஹோ,’ ‘சச் மேரே யார் ஹைபோன்ற சுமார்+ ரகப்பாடல்களும் என...கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இதுவும் ஒரு மியூசிக்கல் என்று சொல்லப்பட்டிருக்கலாம். இருப்பினும், தவிர்க்கக்கூடாத, மறக்க முடியாத ஒரு படம் “ஸாகர்”.

      தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் என்ற பேரில் வந்து, காதலியைப் பார்த்ததற்கும், கடன்காரனைப் பார்த்ததற்கும் ஒரே எக்ஸ்பிரஷன் கொடுத்து உசிரை வாங்குகிற ஜென்மங்கள் இந்தப் படத்தின் டி.வி.டி.வாங்கிப் பார்த்து உய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். யார் திட்டினாலும் சரி, இன்றைய நடிகர்களுக்கு (?!???!!!???) நடிப்பு என்பது ட்ரை பண்ணினாலும், ஃப்ரை பண்ணினாலும் (அதாவது சுட்டுப்போட்டாலும்..) வர மாட்டேன் என்கிறது என்பதே அப்பட்டமான உண்மை.




வாத்யாரின் கடற்கரைப் படங்கள்

      அடுத்து, நம்ம வாத்யார் படங்கள் இரண்டைப் பார்க்கலாம். ‘படகோட்டிமற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

      இரண்டொரு வருடங்களாய் சில குறும்பட இயக்குனர்கள், சில புகுமுக திரைப்பட இயக்குனர்களுடன் சங்காத்தம் ஏற்பட்டிருப்பதால், தமிழ் சினிமாவில் திரைக்கதை என்ற கொழுக்கட்டை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பது ஓரளவு புரிந்து வருகிறது. கட்டிலில் போட வேண்டிய மெத்தையை, தரையில் போட்டு, கால்நீட்டி உட்கார்ந்தால், மண்டைக்குப் பின் ஒளிவட்டம் தோன்றி, திரைக்கதை பிறந்துவிடும் என்றுதான் நான் பார்த்த அளவில் பெரும்பாலானோர் முடிவுகட்டி வைத்திருக்கிறார்கள். இது நடக்காதபட்சத்தில், அருகிலிருக்கிற டாஸ்மாக்கிலிருந்து சரக்கும், அடையாறு ஆனந்தபவன் மிக்ஸரும், ஃபில்டர் கிங்க்ஸும், பர்மா பஜாரில் வாங்கிய உலக்கைப்பட குறுந்தகடுகளும் அறைமுழுக்கப் பரப்பினால், வித்தியாசமான கதைபிறந்துவிடும் என்று நம்புகிறவர்கள், தயவு செய்து பழைய எம்.ஜி.ஆர்.படங்களைப் பாருங்கள்! கதையை விடுங்கள் ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது என்ற அடிப்படையை அங்கு தேடுங்கள்! இன்னும் three-part திரைக்கதைகளே பிரபலமானதாக இருந்து தொலைக்கிறபடியால், அந்த வடிவத்துக்குள் ஒரு கதையை எப்படித் தொடங்குவது, எங்கு இடைவேளை போடுவது, எப்படி முடிப்பது என்ற அரிச்சுவடிக்கணக்கை அறிய, எம்.ஜி.ஆர்.படங்களைக் காட்டிலும் சிறந்த (கையடக்கப்) புத்தகத்தை ஸிட் ஃபீல்டோ அவரது பாட்டனோ கூட எழுத முடியாது.

கடுப்ஸ்: சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?என்ற புத்தகம் இருந்தால், அதை பழைய பேப்பரோடு விலைக்குப் போடுங்கள்! நான் எப்போதோ செய்துவிட்டேன்! Exceptionally substandard என்பதற்கு அது ஒரு உதாரணம். எங்காவது யாராவது கடலை மடக்காவாவது பயன்படட்டும்!

ஆயிரத்தில் ஒருவன்

      பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். மெல்லிசை மன்னர்கள் இசை ராச்சியம் நடத்திய படம். சக்தி கிருஷ்ணசாமியின் (வீ.பா.கட்டபொம்மன் புகழ்) பொறிபறக்கும் வசனங்கள்.

நம்பியார்:   மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?

எம்.ஜி.ஆர்:  சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!

நம்பியார்:   தோல்வியையே அறியாதவன் நான்!

எம்.ஜி.ஆர்:  தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்!

      பின்பக்கம் பட்டன் வைத்த, போச்சம்பள்ளிப் பட்டுப்புடவையில் தைத்த  சட்டையுடன் எம்.ஜி.ஆரும், லுங்கி ஸ்டைலில் நம்பியார் கட்டிக்கொண்டு வரும் காஞ்சீவரமும் நகைப்பூட்டலாம். ஆனால், இந்தப் படத்தின் அசுரபலம் திரைக்கதையமைப்பும் காட்சியமைப்பும். பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்,’ ‘ஆடாமல் ஆடுகிறேன் என்று கதாநாயகிக்கு மட்டுமே மூன்று பாடல்களை, அதுவும் ஒரு புதுமுக நாயகிக்கு (ஜெயலலிதா) கொடுத்திருக்கிறார்கள் என்றால், இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையைக் கவனிக்கவும்.

      ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.

     ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...

     அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்...

      இந்தப் பாடல்களெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் என்பது உள்ளங்கை பூசணிக்கனி. இது தவிர, ‘நாணமோ இன்னும் நாணமோஎன்று ஒரு டூயட். ஒரு வெகுஜனப்படம் என்றால், அதன் சாமுத்ரிகா லட்சணங்கள் என்னென்ன உண்டோ, அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

      எம்.ஜி.ஆர்.படத்தில் நாலைந்து சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். சுறுசுறுப்பாய் முகமெல்லாம் புன்னகை பூத்தவாறு, படுகேஷுவலாய் போடுகிற ஜாலி சண்டை; (பொறு பூங்கொடி! போய் சற்று விளையாடிவிட்டு வருகிறேன்!) சிலம்பம், வாள், மான்கொம்பு, இடுப்பு பெல்ட், சுருள்வாள், இரும்புக்கம்பி, சவுக்கு என்று ஏதேனும் ஒரு உபகரணத்துடன் போடுகிற ஒரு சண்டை; குண்டுமணி, ஜஸ்டின், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒண்டிக்கு ஒண்டி போடுகிற ஆக்கிரோஷமான சண்டை... என்று எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட்கள் பலவகைப்படும். இந்தச் சண்டைக்காட்சிகளின் அமைப்பு, திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்க முடியும். உதாரணமாக, ‘ரிக்‌ஷாக்காரன்படத்தில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டியவாறே, வாத்யார் சிலம்பம் சுற்றுகிற காட்சி. படம் ஆரம்பித்து ஏறத்தாழ அரை மணி கழித்து வருகிற முதல் சண்டைக்காட்சி என்பதாலோ என்னவோ, சற்று நீ...ளமாகவும் ஆனால் ஒரு நொடி கூட சலிப்பூட்டாமல், பார்க்கப்பார்க்க உள்ளங்கை சிவக்கக் கைதட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். (இது குறித்தும் பின்னால் தனித்தனி இடுகை எழுத நப்பாசை உண்டு!)

      ஆயிரத்தில் ஒருவன்படத்திலும் அப்படித்தான்! நம்பியாரின் கொள்ளைக்கூட்டம் கன்னித்தீவுக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆரும் கூட்டாளிகளும் அவர்களை எதிர்த்துப் போராடுகிற காட்சி படுசாதாரணமாக, ஒரு ஓடிப்பிடித்து விளையாடுகிற ஆட்டத்தைப் பார்ப்பது போலிருக்கும். ஆனால், எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒற்றைக்கு ஒற்றை போடுகிற சண்டைக்காட்சி மிகவும் இறுக்கமாக, ஆவேசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை எள்ளுபவர்களுக்கு இந்தச் சின்னச் சின்ன நுணுக்கங்கள் தென்படாது. ஆனால், இன்றளவிலும் ‘சண்டைக்காட்சிகள்என்றால் ‘வாத்யார் படம் தான்என்று வியக்கப்படுவதற்குக் காரணம், இத்தகைய வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான். அதனால்தான் அவர் இன்னும் வாத்யார்; என்றும் வாத்யார்!

      பாய்மரக்கப்பல், அழகான கடற்கரை, தீவு என்று ஈஸ்ட்மென் கலரில் ‘ஆயிரத்தில் ஒருவன்கடலழகின் பல பரிமாணங்களை அப்போதே திரையில் வெளிப்படுத்தி மலைக்க வைத்த படம். ஓடும் மேகங்களே,பாடலில் எம்.ஜி.ஆர் கடற்கரையில் பாடிக்கொண்டே போக, ஜெயலலிதா பின்தொடர்வது போலவும்; ‘அதோ அந்த பறவை போலபாடல் ஒரு பாய்மரக்கப்பலிலேயே அனைவரும் பாடுவதாகவும் அமைத்து, கடலின் அழகைப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் பந்துலு. பாறைகள் நிறைந்த கடல்பகுதியில் எம்.ஜி.ஆர்- நம்பியார் போடுகிற சண்டையிலும் கடலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் பெரும்பகுதி ஸ்டூடியோவுக்கு வெளியே எடுக்கப்படுவதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை.

      இப்போதுகூட ஜெயா டிவியில் ஒளிபரப்பினால், கண்கொட்டாமல் பார்ப்பேன்.

படகோட்டி

     இந்த மியூசிக்கல், மியூசிக்கல்னு அலப்பறை பண்ணுகிறார்களே, ‘படகோட்டியை மிஞ்சிய ஒரு மியூசிக்கல் வந்திருக்கிறதா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

      படகோட்டி-யில் எம்.ஜி.ஆரின் அறிமுகமே, கடற்கரையில் நடக்கிற ஒரு (ஆக்கிரோஷமான) சிலம்புச்சண்டைக் காட்சியில் தான். அதைத் தொடர்ந்து சற்றே சோகம் தோய்ந்த ‘தரைமேல் பிறக்க வைத்தான்என்ற பாடல். ஒரு டிப்பிக்கல் எம்.ஜி.ஆர் படத்துக்குண்டான உற்சாகமான துவக்கம் இதில் இருப்பதாகச் சொல்ல முடியாதுதான். ஆனால், விறுவிறுவென்று காட்சியை நகர்த்துகிற நேர்த்தியும், ‘தரைமேல் பிறக்க வைத்தான்ல் தொடங்கி ‘கல்யாணப்பொண்ணு..கண்ணான கண்ணுவரைக்கும் முத்து முத்தாய் கேட்டாலே மிக்சிங் இல்லாமல் குவார்ட்டர் அடித்த எஃபெக்ட் தருகிற பாடல்களும், இதை எம்.ஜி.ஆரின் ஆக...மன்னிக்கவும், மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக்கி விட்டன. பாட்டுக்கு ஒரு படகோட்டிஎன்று சொல்லுமளவுக்கு இந்தப் படத்தை மெல்லிசை மன்னர்கள் ஆட்கொண்டிருந்தபோதிலும், படமாக்கப்பட்ட விதத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

      கொடுத்ததெல்லாம் கொடுத்தான்பாடலில் எம்.ஜி.ஆர் பாடியவாறே கடலில் தொடங்கி கால்வாய் வரை நடப்பதைப் பார்க்க முடியும்.

      தொட்டால் பூ மலரும்பாடலில் கடற்கரையை ஒட்டிய தென்னந்தோப்பில் படமாக்கியிருப்பார்கள். மற்ற பாடல்கள் பெரும்பாலானவை ஸ்டூடியோக்களிலேயே படமாக்கியிருந்தது கொஞ்சம் குறையாகப் பட்டது. இல்லாவிட்டால், ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அப்புறம் தான் இதுவென்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

      கடல், கடற்கரையோடு தொடர்புடைய படங்கள் பல இருக்கின்றன. ‘மீனவ நண்பன்  என்று கூட ஸ்ரீதர் எடுத்தார். அதற்காக, அதைப் பற்றி எழுதி எம்.ஜி.ஆர்.ரசிகர்களிடம் மொத்துவாங்க நான் தயாராக இல்லை. கடலோரக்கவிதைகள்கூட குறிப்பிடத்தக்க படம் தான்! இப்படி ஞாபகம் வர வர நான் இடுகையின் நீளத்தை அதிகரித்தால், அலுவலகத்தில் படிக்கிறவர்கள் குறட்டைவிட்டு, அவர்களது உத்தியோகத்தைக் கெடுத்த பாவம் என்னைவந்து சேரும் என்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

பிற்குறிப்பு: (இது வேறயா?)

      சேட்டைக்காரன் என்று பெயரை வைத்துக் கொண்டு சீரியஸாக எழுதி இம்சை பண்ணாதீர்கள் என்று பலர் நேரிலும், போனிலும், தபாலிலும், தந்தியிலும், தினகரனிலும் கேட்டுக்கொண்டதால், இனி மொக்கை தவிர்த்த விஷயங்களை எழுத புதிய பதிவு ஒன்று ஆரம்பிக்கப்போகிறேன். பயப்படாதீங்க, இன்னும் பதிவு போட ஆரம்பிக்கலை; அறிவிப்பு வரும்வரை அனைவரும் நிம்மதியாக இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

அப்பாடா...எம்புட்டுப் பெரிய இடுகை...முற்றும்-ங்கண்ணா...!