Tuesday, November 27, 2012

ராஜா என்பார் மந்திரி என்பார்




நண்பர் கும்மாச்சியின் சச்சினின் சோககீதம்இடுகையை வாசித்ததும், சில வருடங்கள் முன்பு கூகிள் குழுமங்களில் நான் எழுதிய ஒரு பாடலையே கொஞ்சம் மாற்றி அளித்திருக்கிறேன். சச்சின் பக்தர்கள் மன்னிப்பார்களாக! (காட்டமாக ஒரு இடுகை எழுதலாம் என்று ஆசைதான்; இப்போது இயலாது என்பதால் இந்தப் பாடல்!)


மெட்டு- ராஜா என்பார் மந்திரி என்பார்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்
ஒரு செஞ்சுரியில்லை; ஒரு ஃபிஃப்டியுமில்லை
பல்புமேலே பல்பாய் வாங்குகிறேன் நானும்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

பந்தினைத் தீண்டவில்லை பவுண்டரி தாண்டவில்லை
சொந்தவூர் திரும்பிவந்தும் சொதப்புவது மாறவில்லை
அன்றோ நான்தான் ஆட்டத்தில் மாஸ்டர்
இன்றோ எனக்கு போட்டார் பிளாஸ்டர்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

வார்னேயை உதைத்ததெல்லாம் பழங்கதையாச்சுதடா
பானேஸர் பந்தைக்கண்டா பயம்பெருகிப்போச்சுதடா
அடிக்கடி நானும் ஆகுறேன் பௌல்டு
அடடா நானும் ஆயிட்டேன் ஓல்டு

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

நாற்பது நெருங்கிருச்சு ஆட்டமும் சுருங்கிருச்சு
நாளொரு மேனியுமாய் விளம்பரமும் குறைஞ்சிருச்சு
கைத்தடி ஊன்றி பல்செட்டும் மாட்டி
களத்தில் இருப்பேன் தொடர்ந்திடும் லூட்டி!

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்
ஒரு செஞ்சுரியில்லை; ஒரு ஃபிஃப்டியுமில்லை
பல்புமேலே பல்பாய் வாங்குகிறேன் நானும்
 

Sunday, November 18, 2012

RIP பால் தாக்கரே




சாலைவழியாக மும்பைக்குள் நுழைவதாயிருந்தால், ஆர்.கே.ஸ்டூடியாவுக்கு முன்பாக, தேவ்னார் சந்திப்பில் அமைக்கப்பட்டிருக்கிற சத்ரபதி சிவாஜி சிலையைக் கடந்தே அனைவரும் சென்றாக வேண்டும். சராசரியை விடவும் உயரமான பீடத்தின் மீது, குதிரையில் சவாரி செய்யும் சிவாஜியின் உருவச்சிலையைக் கவனிக்காமல் மும்பை நகரத்துள் நுழைவது கடினம். அந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பால் தாக்கரே அப்போது சொன்னது: “நமது மும்பை நகரத்துக்குள் எவர் வந்தாலும் சரி, சத்ரபதி சிவாஜியின் காலடியைப் பாராமல் உள்ளே செல்ல முடியாது.

     மும்பை-பூனே முக்கிய சாலையில், போக்குவரத்து ஆமைவேகத்தில் ஊர்ந்துகொண்டிருக்க, பாலாசாஹேபின் சூளுரையைக் கேட்டு சேனாக்காரர்கள் ஆரவாரம் எழுப்பியபோது, மராட்டி புரியாதபோதிலும் அவருக்கும் மக்களுக்கும் இடையிலிருந்த உணர்ச்சிகரமான பிணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. சிவசேனாவைக் குறித்து எனக்கிருந்த அச்சத்துடன், சற்றே பிரமிப்பும் உண்டாகிய தருணம் அது.

            பால் தாக்கரேயை விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, பெரும்பாலும் வெறுக்கிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவரை ஒரு மராட்டிய சிங்கமாக உருவகித்து, அதற்கு ஆதாரமாக நேற்றுமுதல் மாதோஸ்ரீயின் முன்பு கூடிய கூட்டத்தையும், பிரபலங்களின் இரங்கல் செய்திகளையும் கலந்துகொட்டிப் பரிமாறிக் கொண்டிருக்கிற தொலைக்காட்சிகளின் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மறைந்த தலைவர்களை சற்றே அதீதமாகப் புகழ்வது மரபு என்பதை ஒப்புக்கொண்டாலும், மும்பையில் சில வருடங்கள் வசித்தவன், சிவசேனா ‘மந்த்ராலயாவுக்குள் ஆட்சிபீடத்தில் அமர்ந்தபோது ஆயாசத்துடனும், கொஞ்சம் அச்சத்துடனும் குழம்பியவன் என்ற முறையில், தாக்கரேயின் அரசியலும் அணுகுமுறைகளும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை.

     சிவசேனா அரசியல் கட்சியாக உருமாறும் முன்னரே, மும்பையைத் தனது கிடுக்கிப்பிடியில்தான் வைத்திருந்தது. ‘ஷாகாஎன்றழைக்கப்படுகிற கிளை அலுவலகங்களை எங்கெங்கும் காண முடிந்தது. ‘ஜெய் மகாராஷ்ட்ராஎன்று ஒருவருக்கொருவர் வந்தனம் சொல்லும் சிவசேனைக்காரர்களை அங்கெங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம். ‘குட் மார்னிங்என்று ஆங்கிலத்தில் பேசுகிறவர்களை அவர்கள் பார்க்கிற பார்வையில் ஒரு அந்நியம் இருக்கும். இரண்டு மராட்டியர்கள் சந்தித்தால், சுற்றியிருப்பவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, தங்களது சம்பாஷணைகளை மராட்டியிலேயே தொடர்வதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இது மொழிப்பற்றா அல்லது மொழிவெறியா என்பதை அவரவரின் புரிதலுக்கு விட்டுவிடுதலே நல்லது.

            ஒரு தமிழனாக, பால்சாஹேபின் ‘லுங்கி ஹடாவோ(வேட்டியை ஒழி!)என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கு எதிரான, குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையும் இயல்பாகவே ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது உண்மைதான்.  நாளாவட்டத்தில் அவரது அசூயை மராட்டிய மண்ணின் மைந்தர்கள் தவிர்த்து அனைவரின் மீதும் பாரபட்சமின்றிப் படர்ந்திருந்தது என்பதைப் புரிந்தபோது, இப்படிப்பட்ட கண்ணோட்டம் கொண்ட ஒரு மனிதரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும் என்ற சந்தேகமும் எல்லாரையும் போலவே எனக்கும் எழுந்ததுமுண்டு. மும்பையைத் தவிர சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஏனைய பகுதிகளில் செல்வாக்கு இல்லை என்பதும் ஒரு பொதுப்படையான கருத்தாக முன்வைக்கப்பட்டது. கொங்கண் தவிர, கரும்பாலை முதலைகளின் கைப்பிடிக்குள் சிக்கியிருந்த மராட்வாடா, விவசாயிகளும் தொழிலாளிகளும் மிகுந்திருந்த விதர்பா ஆகிய பகுதிகளில் சிவசேனா தவழும் குழந்தையாயிருந்த சூழலில், ‘மண்ணின் மைந்தன் என்ற ஒற்றைக்கொள்கையை மட்டும் வைத்து தேசீயக் கட்சிகளுக்கு இவர் எப்படி முட்டுக்கட்டைகள் போடப்போகிறார் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், அவரால் அது அவரால் முடிந்தது. சிவசேனா ஆட்சிக்கு வந்தது ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ‘களப்பணியை முடித்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியது என்றால், அது பால் தாக்கரே என்ற ஒற்றை மனிதருக்காகவே!

     இந்த மிரட்டல் அரசியல் மும்பைவாழ் மராட்டியர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னணியில் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸும், தொழிலாளர்களின் நலத்தைப் புறக்கணித்துவிட்டு, தொழிலதிபர்களுடன் கைகோர்த்துவிட்டு சொகுசுவாழ்க்கையில் ஈடுபட்ட ஒருசில தொழிற்சங்கத் தலைவர்களும் இருந்ததை இப்போது நினைவுகூர பலர் தயாராக இல்லை. ஆனால், இந்தியாவிலேயே பிற மாநிலத்தவர் மிகமிக அதிகமாக வாழ்கிற மும்பையென்ற நகரத்தில், மராட்டியர்களில் பெரும்பாலானோரை ஒன்றிணைக்க ‘ஜெய் மகாராஷ்ட்ராஎன்ற கோஷம் மட்டுமே உதவியது என்று சொன்னால், அது மூர்க்கத்தனமான வன்மத்தில் சொல்வதாகவே இருக்கும். பால்தாக்கரேயை மராட்டியர்கள் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்வதற்குப் பல உளவியில்ரீதியான காரணங்கள் இருந்திருக்கலாம். அவர் மீது அவர்களுக்கு இருந்த அச்சத்தைக் காட்டிலும் அவரவர்க்கு எதிர்காலம் மீதிருந்த அச்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

     பால்தாக்கரேயை எதிர்மறையாக விமர்சிக்கக் காரணங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், சற்று யோசித்தால் அவரது அரசியல் அணுகுமுறைகளில் பலவற்றை, பலர் பல்வேறு கட்டங்களில் தங்களால் இயன்றவரைக்கும் முலாம் பூசிப் பயன்படுத்தியதை நாம் அறிந்திருக்கிறோம். ‘அம்ச்சி மாத்தி அம்ச்சி மாணூஸ்’ (எனது மண்; என் மக்கள்) என்ற கோட்பாடு பால்தாக்கரேவுக்கும் மகாராஷ்ட்ராவுக்கும் மட்டுமே பொருந்தக்கூடிய உதாரணங்களல்ல.

            பம்பாய் மும்பை ஆனதும் அதைத் தொடர்ந்து வேறு சில  மாநிலங்களிலும் சில நகரங்களின் பெயர்கள் மாறின. அறிவிப்புப்பலகைகள் மராட்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டை, பின்னாளில் பல மாநிலங்களிலும் பின்பற்றினார்கள். எல்லாத் திரையரங்குகளிலும் மராட்டிப் படங்களுக்கென்று குறிப்பிட்ட காட்சியில் எண்ணிக்கை வரையறுத்தே ஆக வேண்டும் என்பதும் பின்னாளில் மகாராஷ்டிரம் தாண்டிப் பரவியது. இவையெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள் என்றாலும், நமக்கும் பரிச்சயமான நிகழ்வுகள்.

     பால் தாக்கரே ‘சாம்னாவில் எழுதிய தலையங்கங்களைப் போல வேறு எவரேனும் எழுதியிருந்தால் பல உரிமைப்பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்கள். அவர் ஒவ்வொரு விஜயதசமியன்றும் சிவாஜி பார்க்கில் ஆற்றிய உரைகளில் அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களைச் சொல்ல பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அஞ்சியிருப்பார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவே அரசுகளும் அரசியல்வாதிகளும் அஞ்சின. சொல்லப்போனால், அவரைப் பற்றி பெருவாரியான மக்களுக்கு இருந்த அச்சமே அவரது வெற்றியோ என்று எண்ண வேண்டிய துரதிருஷ்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை.

            பால் தாக்கரேயின் இறுதி யாத்திரையை, பல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தனர். (கலைஞர் டிவி உட்பட!).

     அவரை விரும்பலாம்; வெறுக்கலாம்; ஆனால், புறக்கணிக்க முடியாது; முடியவில்லை என்பதே பால் தாக்கரேயின் வாழ்வும் மரணமும் உணர்த்துகிற உண்மை.

Tuesday, November 13, 2012

எண்ணை தாண்டி வருவாயா?

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும் மன்னிக்கணும்!

Tuesday, November 6, 2012

#ட்வீட்டுக்கு #ட்வீட்டு வாசப்படி!




பொதுவாகவே கல்லூரியிலிருந்து சோர்ந்துபோய் வீடுதிரும்புகிறபோது திருப்பதியின் முகம் பஞ்சரான பால்பாக்கெட் போலிருக்கும். அன்று வழியில் பெட்டிக்கடை சண்முகம் அழைத்து, ‘வாத்தியாரய்யா, உங்க வீட்டு விலாசத்தைப் போலீஸ்காரர் விசாரிச்சிட்டுப்போனாருய்யா! கொஞ்சம் உஷாரா இருங்க,என்று சொன்னதும், அடிவயிற்றில் ஒரு பால்குக்கரே  விசிலடிப்பது போலிருந்தது. ‘போலீஸா? என்னையா? எதற்கு?

      வீட்டை அடைந்து, அழைப்புமணியை அழுத்திவிட்டு, மனைவி கதவைத் திறப்பதற்காகக் காத்திருந்தபோது வயிற்றுக்குள் வலையப்பட்டி தவிலின் தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தது. போதாக்குறைக்கு, கதவைத் திறந்த மனைவி மங்காவின் முகம்,  நாலாக மடித்த நமுத்துப்போன அப்பளத்தைப் போலிருக்கவே, திருப்பதியின் மனதுக்குள் கிலி பரவியது. வீட்டுக்குள் நுழைந்தவாறே, சட்டையைக் கழற்றினான்.

      இது உங்களுக்கே நல்லாயிருக்கா? எடுத்த எடுப்பிலேயே, சின்னத்திரையிலிருந்து வீட்டுக்குள் குதித்துவந்த சீரியல் நாயகிபோல மங்கா மூக்கைச் சிந்தினாள்.

      நல்லாயில்லைதான். ஆனா, வேறே  நல்ல சட்டையில்லையே!

      அதில்லீங்க! நான் ரேஷன் கடைக்குப் போயிருந்தபோது நம்ம வீட்டுக்குப் போலீஸு வந்திட்டுப் போயிருக்காங்களாம். இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

      ஏற்கனவே என் குடலுக்குள்ளே யாரோ தேங்காய் துருவுற மாதிரியிருக்கு. நீ வேறே அதுலே பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து சட்னியரைச்சிடுவே போலிருக்குதே!

      நீங்க என்னவோ தப்புப் பண்ணியிருக்கீங்க,விசும்பினாள் மங்கா. “என் தலையிலே அடிச்சுச் சத்தியம் பண்ணுங்க!

      தலையிலே அடிக்கிறதா? வேணாம்! நீ வேறே பார்லருக்குப் போயி மருதாணியைத் தடவிக்கிட்டு வந்து நிக்குறே! கையெல்லாம் அசிங்கமாயிடும். என்று சொல்லியவாறு, உள்ளே சென்று கைகால் கழுவிவிட்டு திருப்பதி ஹாலுக்குத் திரும்பியபோது, மங்கா கையில் சர்க்கரை இல்லாமல் காப்பியுடனும், கண்ணில் கிளிசரின் இல்லாமல் கண்ணீருடனும் நின்றிருந்தாள்.

      இப்போ எதுக்கு சரண்யா மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாம அழறே? போலீஸ் எதுக்கு வந்தாங்களோ யாருக்குத் தெரியும்? காப்பியைக் கொடுத்திட்டு டிவியைப் போடு! வரவர நீ ஆதித்யா டிவி பார்த்தாலும் அழ ஆரம்பிச்சிட்டே!

      டிவியைப் பார்த்தவாறே, காப்பியைப் பருகிய கணவன் திருப்பதியிடம் ரகசியமாகக் கேட்டாள் மங்கா.

      ஏங்க, காலேஜ்லே ஸ்டூடண்ட்ஸ் யாரையாவது அடிச்சிட்டீங்களா?

      அவங்ககிட்டே நான் அடிவாங்காம வந்தாப் பத்தாதா?என்று எரிந்து விழுந்தான் திருப்பதி. “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னிக்கு எனக்கு அஞ்சு பீரியட் இருந்திச்சு. ஒவ்வொரு பீரியட்லேயும் நாப்பது நிமிஷம் தொண்டைத்தண்ணி வத்துற அளவுக்குக் கத்திப் பாடம் எடுத்திருக்கேன் தெரியுமா?

      இது எல்லா வாத்தியாரும் பண்றதுதானே?

      முழுசாக் கேளு! அஞ்சு பீரியட்லே ஒண்ணுலேகூட ஒரு ஸ்டுடண்ட் கூட வகுப்புலே கிடையாது. கண்டக்டர் செல்லாத நோட்டைக் கொடுத்திட்டாருன்னு ஸ்ட்ரைக் பண்ணப்போயிட்டாங்க. ஆனாலும் நான் கடமைதவறாம பாடம் நடத்தினேன். காலியாயிருந்த கிளாசுலே கூட போர்டை அஞ்சு பீரியட்லேயும் அம்பதுவாட்டி துடைச்சிருப்பேன் தெரியுமா?

      அப்புறம் எதுக்கு போலீஸ் வருது?

      நீ தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் பண்ணுற நியூஸ் லீக் ஆயிருக்கும் போலிருக்குது. ஏதாச்சும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்திருமோன்னு முன்னெச்செரிக்கை நடவடிக்கையா இருக்கலாம். இப்போ என்னை நியூஸ் பார்க்க விடு!

      என்னங்க, ஒண்ணு கேட்டாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?என்று தயக்கமாகக் கேட்டாள் மங்கா. “நம்ம வீட்டுலேருந்து புழலுக்கு எந்த பஸ்சிலே வரணும்? தெரிஞ்சுக்கிட்டா உங்களைப் பார்க்க ஜெயிலுக்கு வர்றதுக்கு வசதியாயிருக்குமேன்னு....

      முடிவே பண்ணிட்டியா?அலறினார் திருப்பதி. “உனக்குப் புழலுக்கு வர அவ்வளவு ஆசைன்னா, அடுத்தவாட்டி வேப்பம்பூ ரசம் வைக்கும்போது கொஞ்சம் விஷத்தைக் கலந்திரு!

      சும்மாயிருங்க! விஷமெல்லாம் எதுக்கு? வெறும் ரசமே போதும்,என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு மங்கா அமைதியாக, திருப்பதி செய்திகளைக் கேட்க ஆரம்பித்தான்.

     அரசியல் பிரமுகரைப் பற்றி அவதூறாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டவர் கைது!

     ஐயையோ!அலறினான் திருப்பதி. “நான் கூட டிவிட்டர்லே அப்பப்போ எதையாவது எழுதுவேனே? அதுக்காகத்தான் போலீஸ் தேடி வந்துட்டுப்போச்சோ?

      என்னது?மங்கா அதிர்ந்தாள். “நீங்க டிவிட்டர்லே எழுதினீங்களா? என்ன எழுதினீங்க?

      நிறைய எழுதியிருக்கேன்,திருப்பதி தலையைப் பிடித்துக் கொண்டான். “ஆனா, எல்லாருக்கும் பயன்படுற விஷயங்களைத்தானே எழுதியிருக்கேன்.

      குடியைக் கெடுத்தீங்களே!அலறினாள் மங்கா. “யாராவது டிவிட்டர்லே போயி உருப்படியான விஷயங்களை எழுதுவாங்களா? இப்படிப் பத்தாம்பசலியா இருக்கீங்களே?

      மங்கா! நானே கலங்கிப்போயிருக்கேன். நீ வேற பத்தாம்பசலி, பருப்பு உசிலின்னு என் உசிரை வாங்காதே!என்று புலம்பினான் திருப்பதி.

      ஏங்க, உங்க ஃபிரண்டு தளபதிக்குப் போன் பண்ணுங்க!

      ஐயோ, அவன் ஒரு வடிகட்டின முட்டாளாச்சே!

      உங்க ஃபிரண்டு தானே, ஆபத்துக்குப் பாவமில்லை. கூப்பிடுங்க!

      இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக மங்கா உருப்படியாக ஒரு யோசனை சொல்லியிருக்கவே, வேறு வழியின்றி நண்பன் தளபதிக்குப் போன் செய்யவும், உடுக்கை இழந்த நண்பனுக்குக் கடுக்காய் கொடுக்காமல், சொடுக்குப் போடுகிற நேரத்தில் மிடுக்காய் வந்து நின்றான் தளபதி.

      டேய் தளபதி, பெரிய சிக்கல்லே மாட்டிக்கிட்டேண்டா! என்னைத் தேடிட்டு போலீஸ் வந்து போயிருக்குது.

      என்னாச்சு? தப்புப் பண்ணுற சாமர்த்தியமெல்லாம் உனக்குக் கிடையாதே, கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர!

      டிவிட்டர்லே போயி எதையாவது உளறிட்டேன் போலிருக்குதுடா.

      அது தப்பில்லையே! அதுக்கா போலீஸ் தேடுது? உன்னோட லாப்-டாப்பை எடு. அப்படி என்னதான் எழுதியிருக்கேன்னு பார்க்கலாம்.

      திருப்பதி லாப்-டாப்பை எடுத்து இணையத்தைப் பிடித்து, தனது டிவிட்டர் கணக்குக்குள் நுழைந்து தனது எழுத்துக்களைக் காட்டினான். ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டுவந்த தளபதியின் முகம், திடீரென்று காய்ந்த கல்லில் கவனிக்கப்படாமலே விடப்பட்ட தோசையைப் போலக் கறுத்தது.

      டேய் திருப்பதி! உன்னை போலீஸ் தேடுறதுலே தப்பேயில்லைடா! இது என்னடா எழுதியிருக்கே? எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்படி எழுதியிருப்பே?

      தளபதியின் கோபத்தைப் பார்த்து திருப்பதியும், மங்காவும் அதிர்ந்தனர்.

      டேய், இது திருக்குறள்டா! இதை எழுதினதுக்கா இவ்வளவு கோபப்படுறே?

      திருப்பதி!தளபதி விரலைச் சொடுக்கினான். “கவர்ன்மெண்ட் பஸ்சுலே எழுதியிருந்தா அது திருக்குறளாயிடுமா? ‘கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்னு பஸ்சுலே எழுதியிருக்கில்லே, அந்தத் திருக்குறளை டிவிட்டர்லே போட்டியா?
‘சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்னு போட்டிருக்குமே, அந்தத் திருக்குறளை டிவிட்டர்லே போட்டியா? அதையெல்லாம் விட்டுட்டு இதை ஏண்டா எழுதினே?

      டேய், இது ஒரிஜினல் திருக்குறள்! நம்ம ஊருலே மழை பெஞ்சபோது, திருவள்ளுவர் மழையைப் பத்திச் சொன்னது ஞாபகம் வந்தது. அதுனால தான் எழுதினேன்.

      ஓஹோ! எங்க தலைவரைப் பத்தித் தப்பா எழுதிட்டு, பழியைத் தூக்கித் திருவள்ளுவர் மேலே போடறியா? என்ன எழுதியிருக்கே? ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை ஏண்டா, உனக்கு அவ்வளவு திமிரா? ரிலீஸ் ஆகறதுக்குள்ளேயே துப்பாதவங்களும் துப்புவாங்கன்னா எழுதறே? அதாண்டா எங்காளு யாரோ போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க!

      டேய் நீ சொல்றே துப்பாக்கி வேற; இந்தத் துப்பாக்கி வேறடா!

      அப்படீன்னா இது கள்ளத்துப்பாக்கியா? அது இன்னும் மோசம்!தளபதியின் குரல் தழுதழுத்தது. “உன் பேரு திருப்பதி. உன் சம்சாரம் பேரு மங்காத்தா! அப்படியிருந்தும் இன்னிவரைக்கும் உன்னை நான் விரோதியாப் பார்த்திருக்கேனாடா? நான் இவ்வளவு பெருந்தன்மையா இருக்கும்போது நீ மட்டும் இப்படி எழுதலாமாடா? துரோகி!

      ஐயோ! இதுக்குத்தான் தலை மேலே சத்தியம் பண்ண மாட்டேன்னு சொன்னீங்களா?மங்கா மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

      என்னது?சீறினான் தளபதி. “இது வேறயா? டேய், இது சைபர் கிரைம் இல்லேடா, ஹண்ட்ரட் கிரைம், தௌசண்ட் கிரைம், டென் தௌசண்ட் கிரைம்!

      மங்கா! அலமாரியிலே திருக்குறள் பரிமேலழகர் உரை இருக்கு. எடுத்திட்டு வந்து இவன்கிட்டே கொடு! என்னைத் திட்டினாக்கூடப் பரவாயில்லை. படுபாவி, திருக்குறளுக்கு புதுசு புதுசா விளக்கம் சொல்றானே? இதுக்கு போலீஸ் பிடிச்சிட்டுப் போனாலே பரவாயில்லை போலிருக்கே?

      டிங் டிங்! அழைப்பு மணி சத்தம் கேட்டு புலம்பலை நிறுத்தினான் திருப்பதி. மங்கா போய் கதவைத் திறக்கவும், முகம் எது, மீசை எது என்று தெரியாத ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அச்சத்தில் திருப்பதியின் உடம்பு அம்பத்தூர் மெயின்ரோட்டில் ஆட்டோவில் போவதுபோலக் குலுங்க ஆரம்பித்தது.

      மிஸ்டர் திருப்பதி வீடு இதுதானே?

      ஆமாம்! மங்காவின் முகத்தில், பதற்றம் ‘ஹவுஸ் ஃபுல்போர்டு போட்டது. “என்னங்க, உங்களைப் பார்க்க போலீஸ் வந்திருக்கு!

      வணக்கம் சார்!திருப்பதியின் பற்கள், விக்கு வினாயகத்தின் கடம் போலச் சத்தம் போட்டன. “என்ன விஷயம்?

      என் பையன் மாமூலன் உங்க கிளாசுலேதான் படிக்கிறான். தெரியுமோ?

      அப்படியா? ஆச்சரியமாயிருக்கே? என் கிளாசுலே ஒருபயலும் படிக்கிறதேயில்லேன்னு நினைச்சிட்டிருக்கேன்.

      ஹிஹி! அதான் சார்,போலீஸ்காரர் தொப்பியைக் கழற்றித் தலையைச் சொரிந்தார். “அந்தக் காலேஜ்லேயே நீங்க ஒருத்தர்தான் பொழைக்கத் தெரியாத, அதாவது புத்திசாலி லெக்சரர்னு சொன்னாங்க. நீங்க என் பையனுக்கு டியூஷன் எடுத்தீங்கன்னா, அவனும் உருப்பட்டிருவான்.கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்!

      இதுக்குத்தான் எங்க வீட்டை விசாரிச்சு வந்தீங்களா?திருப்பதி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். “நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். சரி சார், நீங்க கவலைப்படாதீங்க! உங்க பையனை ஒருவழியாக்கி, அதாவது ஒரு வழிக்குக் கொண்டுவந்திடறேன்.

      தேங்க்ஸ் சார், வர்றேன் சார்!என்று சல்யூட் அடித்துவிட்டுக் கிளம்பினார் போலீஸ்காரர்.

      அப்பாடா தலைக்கு வந்தது..........,என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவன், தளபதி இருப்பதை அறிந்து பழமொழியைப் பாதியிலேயே நிறுத்தினான்.

      டேய் திருப்பதி!தளபதி எழுந்தான். “உன்னை போலீஸ் விட்டிரலாம். ஆனா நான் விடமாட்டேன்! நீ போட்ட ட்வீட்டுக்கு எனக்குச் சரியான பதில் கொடுத்தே ஆகணும்.

      பதில்தானே? தர்றேன்,என்று ஆசுவாசமாக அமர்ந்தான் திருப்பதி. “மங்கா, தளபதிக்கு பதில் வேணுமாம். அந்த வேப்பம்பூ ரசத்தைக் கொண்டா.

***********************

Friday, November 2, 2012

திடீரிசம்!




முன்ன்ன்ன்னுரை

      இணையத்தில் எழுத வந்த காலத்தில், நான் குழுமங்களில் எழுதிய பல இடுகைகள் இன்னும் எனது இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்து வருகின்றன. அவ்வகையில், 10-12-2008 அன்று ‘பண்புடன்குழுமத்திலும், அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ‘கிணற்றுத்தவளைஎன்ற வலைப்பதிவிலும் (இப்போது உள்ள ‘கிணற்றுத்தவளைஅல்ல!) எழுதிய இந்தக் கட்டுரையை, தற்செயலாக மீண்டும் வாசித்ததும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்; பகிர்ந்து விட்டேன்.

      இந்தக் கட்டுரையை வாசித்த நம் அமீரக அண்ணாச்சி ஆசீப் மீரான், இதை ஒரு புனைவாக எழுதியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டதுடன், தானே எழுதப்போவதாகவும் அப்போது கூறியிருந்தார். அப்போது அதுவே மிகப்பெரிய பாராட்டாக எனக்குப் பட்டது.

      இந்தக் கட்டுரையின் சில பகுதிகளை, “வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்கசார்..... வலைப்பதிவில் திரு.வேல்மகேஷும், நினைவுப்பாதைவலைப்பதிவில் ‘அழியாச்சுடர்திரு.ராம் அவர்களும் எனக்கு ‘நன்றி என்று குறிப்பிட்டுச் சேர்த்திருந்தனர். என் எழுத்தையும் பலர் கவனிக்கிறார்கள் என்ற ஊக்கத்தைத் தந்த அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, ‘சேட்டைக்காரன்பதிவில் இதுவரை வராத, எனது மீள்பதிவை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.



      திடீரிசம் என்றால் என்ன?

      தினசரி செய்தித்தாள்கள் வாசிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தலைப்புக்கள் பெரும்பாலும் இப்படித்தானே இருக்கின்றன?

                பிரபல நடிகர் திடீர் மரணம்
                பிரபல நடிகை திடீர் திருமணம்
                திடீர் கூட்டணி
                திடீர் அறிக்கை
                திடீர் அரசியல் பிரவேசம்

      ஒவ்வொரு முறை திடீர்என்ற வார்த்தையைக் கேட்கும்போதும், எனக்கு நாகர்கோவிலில் வசித்த காலங்களில், வாரம் தவறாமல் அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்தி சொற்பொழிவு நிகழ்த்திய ஒரு தேசியவாதியின் பெயர் நினைவுக்கு வரும். அவர் பெயர் பூமேடை ராமையா பிள்ளை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பூமேடை என்றாலே பெரும்பாலானோர் அடையாளம் கொண்டு, ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள். எந்த அளவுக்கு அவர் பிரபலமாக இருந்தாரோ அந்த அளவுக்கு அவரையோ அவரது பொதுக்கூட்டங்களையோ யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக எனக்கு நினைவில்லை.

      வாரந்தோறும், நாகர்கோவில் நகரசபைத் திடலில் அவரது பொதுக்கூட்டம் நடைபெறும். அவரது பொதுக்கூட்டங்கள் பற்றி சுவரொட்டி அச்சடிக்க யாராவது புரவலர்கள் பொருளுதவி செய்ய முன்வருவார்கள்; ஒரு வேளை புரவலர்கள் பொருளுதவி தரவலர்களாக இல்லாதபோது, பொதுக்கூட்டங்கள் சில வாரங்கள் நடைபெறாமல் இருப்பதும் உண்டு. இந்த வாரம் ஏன் பூமேடை கூட்டம் போடவில்லை என்று எவரும் எப்போதும் ஆதங்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை.

                சுவரொட்டிகள் அடிக்கப்பட்டதும், அதைத் தனது சைக்கிளில் பின்னால் வைத்துக்கொண்டு, ஒரு வாளியில் ஒட்டுப்பசையை தொங்க விட்டுக்கொண்டு பூமேடை தானே ஊர் முழுக்கப்போய் முக்கியமான இடங்களில் ஒட்டுவார். பெரும்பாலும் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத சந்துகளில் உள்ள சுவர்களில் அவரது சுவரொட்டிகளை அதிகம் ஒட்டுவார். ஏன் என்று கேட்டால், மெயின் ரோட்டிலே ஒட்டினா எவன் பார்க்கான்? நான் என்ன சினிமாப் போஸ்டரா ஒட்டுகேன்? முடுக்குலே ஒட்டுனேமுண்ணா ஒண்ணுக்கு இருக்கப்போறவன் பாப்பான்,’ என்று விளக்கம் அளிப்பார். அவர் சொல்லுவதில் ஒரு நியாயம் இருக்கும். அவரது கூட்டங்களுக்குப் பெண்கள் வந்து நான் பார்த்ததில்லை. எனவே ஆண்கள் தேடிப்போகும் மறைவிடங்களில் அவர் சுவரொட்டிகளை ஒட்டுவது சரிதான் என்று படும்.

      அவரது ஒவ்வொரு பொதுக்கூட்டத்துக்கும் ஒரு தலைப்பு இருக்கும்.

      'திடீர்' கசையடி விழா!
      'திடீர்' எதிரடி அதிரடி விழா!
      'திடீர்' ஊழல் விழா!

      ஆறு மணிக்குப் பொதுக்கூட்டம் என்றால், ஐந்தரை மணி வரைக்கும் அங்கே ஒரு அரசியல் கூட்டம் நடப்பதற்கான சுவடே தென்படாது. அவரை விடவும் வயதான சைக்கிளில் ஒரு மரமேஜை, ஒரு ஒலிபெருக்கி,ஒரு மைக் இன்னும் சில சில்லறை வஸ்துக்களோடு, மொடமொடவென்று கஞ்சி போட்டுத் தோய்த்த, தும்பைப்பூ போன்ற கதர் சட்டை, கதர் வேட்டி, கதர் காந்தித் தொப்பியோடு பூமேடை வருவார். நாகர்கோவில் நகரசபைத் திடல் பக்கத்திலிருந்த ஒரு கட்சி அலுவலகத்திலிருந்து அவரது பொதுக்கூட்டத்துக்கு மின் இணைப்பு தானமாக வழங்கப்படும். (அதே கட்சியையும் அவர் தனது விமர்சனத்தில் விட்டு வைக்க மாட்டார் என்பது வேறு விஷயம்)

      கூடியிருக்கும் மிகச்சிறிய கூட்டத்தினரில் ஒருவர் கூட அவருக்கு உதவியாக எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத அந்த சுதந்திரப்போராட்டத் தியாகி, ஆறு மணிக்குள்ளே தான் கொண்டு வந்த மேஜையை மேடையாக்கி, அதன் மீது ஏறி தானே ஹலோ, மைக் டெஸ்டிங்..ஒன்..டூ..த்ரீ..,’என்று பரிசோதித்து விட்டு, இறைவணக்கத்தைத் தானே பாடுவார். இறைவணக்கத்தைப் பாடி முடித்து விட்டு, இரண்டாவது பாட்டைப் பாட ஆரம்பித்ததும் தான் கூட்டத்துக்கு சற்றே சுவாரசியம் தட்டும்.

      "ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப் பாருங்க
     நாளை அடையாளம் நல்லாத் தெரியணும்
     ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப்பாருங்க!"

இது பல்லவி! சரணத்துக்கு வருவார் அடுத்து..!

      "டெல்லியிலே குதிரை மண்ணை அள்ளித் திங்குது!"

      அது வரைக்கும் கட்சி அலுவலக வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கட்சித் தொண்டர்கள், சிரித்துக்கொண்டே உள்ளே போய் விடுவார்கள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்; அவர்களுக்குப் புரிந்து விட்டது, இன்று பூமேடை என்ன விஷயம் பற்றிப் பேசப்போகிறார் என்று!

      சின்னச்சின்னத் தாள்துண்டுகளில் எதையெதையோ குறித்து வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் கோர்வையாகப் பேசுவார் பூமேடை. யாரையும் தனிப்பட்ட முறையிலோ, தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியோ தாக்காமல், சொல்ல வந்ததை, ஒரு விதமான நக்கலோடு, நகைச்சுவை இழையோட, கூட்டத்தினரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தபடி பேசுவார். ஆரம்பத்தில் இருபது, இருபத்தைந்து பேர்களாக இருந்த கூட்டம் போகப்போக நூறு, நூற்றைம்பதைத் தாண்டும். கூட்டம் கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி, பூமேடையின் உற்சாகம் மட்டும் சற்றும் குறையாது. சரியாக ஏழு மணிக்கெல்லாம் பேசி முடித்து விட்டு, கூட்டத்தினரின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். சில சமயங்களில் கேள்விகளை சீட்டில் எழுதி அனுப்புவோரும் உண்டு. எசகு பிசகாக எதையாவது கேட்டால், எரிந்து விழுவார். தேசீய கீதத்தோடு கூட்டம் இனிதே நிறைவுறும்.

      கூட்டம் கலைந்து போகவும், பூமேடை தனது தடவாளங்களை மீண்டும் சேகரித்துக்கொண்டு, தனது சைக்கிளில் வைத்துக் கட்டி முடித்துக்கொண்டு, ஆள் அரவமற்ற நகரசபைத் திடலிலிருந்து தனியாளாக, சைக்கிளை மிதித்துக்கொண்டு பாலமோர் ரோட்டுக்கு வந்து போக்குவரத்தில் காணாமல் போய் விடுவார்.

      அது மட்டுமல்ல! நகரசபைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் ஒன்று விடாமல் போட்டியிடுவார். அவருக்காக யாராவது பொருளதவி அளித்து டெபாசிட் கட்ட உதவுவார்கள். அவரது கூட்டம் தான் வினோதமானது என்றால், அவரது தேர்தல் பிரச்சாரம் அதை விடவும் வினோதமாக இருக்கும்.

      தனது நிரந்தர வாகனமான சைக்கிளில் உட்கார்ந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் சுயேச்சையாகப் போட்டியிடுவார் என்றாலும் எனக்கு நினைவுக்கெட்டிய வரைக்கும் அவரது சின்னம் யானையாகத் தானிருந்தது. தனது வாயில் ஒரு விசிலை ஊதிக்கொண்டே சைக்கிளை நாகர்கோவிலின் சந்து பொந்துகளெல்லாம் போவார்; ஒரு கையில் பொம்மை யானை ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டே தெருவின் இரண்டு பக்கங்களிலும் தனது சின்னத்தை மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டே போவார்.

      சிறுவர்களாக இருந்த நாங்களெல்லாம், எங்களது கபடிகளையும், கிரிக்கெட்டையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு அவரது சைக்கிள் எங்களது தெருவை விட்டுப் போகும்வரைக்கும் அவரைப் பின்தொடர்ந்து செல்வோம். அவர் சற்றும் அசராமல், கோபப்படாமல், கருமமே கண்ணாகத் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வார்.

      எனக்குத் தெரிந்து அவர் எந்தத் தேர்தலிலும் டெபாசிட்டைக் கூடத் திரும்பப் பெற்றதில்லை. ஆனால், நான் நாகர்கோவிலில் இருந்த வரைக்கும் அவர் போட்டியிடாத தேர்தலேயில்லை. அவருக்கு அரசியல் விரோதிகள் யாருமே இருந்ததில்லை. எல்லாக் கட்சியை சேர்ந்தவர்களும் அவரது பொதுக்கூட்டங்களுக்கும், தேர்தல் செலவுகளுக்கும் பண உதவி செய்தனர்.

      அவரால் எந்தத் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது என்று அவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கையும், இவரையெல்லாம் ஜெயிக்க வைத்து என்ன பண்ணப்போகிறோம் என்ற அவநம்பிக்கை பொதுமக்களுக்கும் இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

      காரணம், அரசியிலில் வெற்றி பெறுவதற்காக செய்ய வேண்டிய சில தியாகங்களை அவர் செய்திருக்கவில்லை. இறுதி வரைக்கும் எளிமை,நேர்மை என்ற பெரிய சுமைகள் அவரது சைக்கிளில் பின்பக்கம் வைத்துக் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

பிற்குறிப்பு: பூமேடை ராமையா பிள்ளை குறித்து கடுக்கரை திரு.பொன்னப்பன்  அவர்கள் எழுதிய இடுகையையும் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த இடுகையில் நீங்கள் காணும் புகைப்படத்தை அவரது இடுகையிலிருந்தே நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.