Sunday, March 9, 2014

மனைவி குமைவதெல்லாம்...!


அன்று காலையிலிருந்தே மனைவி பாலாமணியின் முகம் பல மாதங்களாகத் துடைக்கப்படாத பாத்ரூம் பல்பைப் போல டல்லடித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தார் கிட்டாமணி. ஏற்கனவே தன் ஜாதகத்தில் ஏழரைச்சனி ஏகத்துக்கும் பீடித்திருந்ததால், அனேகமாக ஏ.டி.எம். செல்ல வேண்டிய அபாயமிருப்பதை உணர முடிந்தது. போதாக்குறைக்கு, டிவியில் ராசிபலன் சொன்ன புருடாபுரம் புண்ணியமூர்த்தி வேறு ’மீனராசிக்காரர்களின் வாயை உள்ளேயிருக்கும் சனிபகவான் உப்புமா போலக் கிண்டி வம்புச்சண்டையை வரவழைப்பார்’ என்று சொல்லித் தொலைத்திருந்ததால், மனைவியின் கோபத்துக்கு என்ன காரணம் என்று கேட்கவும் துணிவின்றி, பேப்பர் படிக்கிற சாக்கில் சோபா கண்ட இடமே சொர்க்கம் என்று அமர்ந்திருந்தார். மனைவி கோபப்படுமளவு தான் என்ன தவறைச் செய்து விட்டோம் என்ற சிந்தனையிலிருந்தவருக்கு, தான் வாசித்துக் கொண்டிருப்பது மனைவி மாவு சலிப்பதற்காக எடுத்துவைத்த போன மாதத்துச் செய்தித்தாள் என்ற சொரணையும் (வழக்கம்போல) இல்லாமல் போனது.

      சமையலறைக்குள் பாலாமணி செமகடுப்பில் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

      "ஊரு உலகத்திலே மத்த ஆம்பிளைங்கல்லாம் கீரை ஆய்ஞ்சு கொடுப்பாங்க; காய்கறி நறுக்கிக் கொடுப்பாங்க; சில பேரு வீட்டைக்கூடக் கூட்டிப் பெருக்குவாங்க. இவரும் இருக்காரே, வீட்டுக்கு வந்தாலும் ஆபீஸ் மாதிரியே ஒரு வேலையும் செய்யாம உசிரை வாங்கறாரு!"

      கிட்டாமணியின் வாய்க்குள்ளிருந்து சனிபகவான் கிசுகிசுத்தார்.

      "டேய் கிட்டாமணி! உன் பொஞ்சாதி சொல்றதைக் கேட்டியா? உனக்கு ரோஷம் வர்லே? உன் ரத்தம் கொதிக்கலே? மூளையிலே உறைக்கலே? நரம்பு புடைக்கலே? கண் சிவக்கலே?"

      "சும்மாயிரு பகவானே! திருநள்ளாறுலே பொழுதுபோகாம திருட்டு விசிடியிலே விஷால் படம் பார்த்தியா? புருஷனா லட்சணமா நானே சோபாவோட சோபாவா சும்மாயிருக்கேன். என்னை உசுப்பேத்தாதே! இந்த உடம்புலே கடைசிச்சொட்டு ரத்தமிருக்கிறவரைக்கும் ரோஷம்ங்கிற பேச்சுக்கே இடமில்லை!"

      பொதுவாக ஸைலண்ட் மோடில் வைத்த செல்போன்போல சத்தம்போடாமல் கிணுகிணுக்கும் பாலாமணி, ஸைலன்ஸர் இல்லாத மணல்லாரியைப்போலச் சத்தமாகப் பேசிவிடவே....

      "யாருகூடப் பேசிட்டிருக்கீங்களாம்?" சிலருக்கு பாம்புக்காது; பாலாமணிக்கோ அனக்கோண்டா காது.

      "யாருமில்லை!" என்று பதிலளித்த கிட்டாமணி சனிபகவானைக் கடிந்து கொண்டார். "வாயை மூடிட்டிருக்க மாட்டியா சனியே?"

      "என்னது?" அடுக்களையிலிருந்து பாலாமணி கூவியவாறு வெளிப்பட்டபோது, கிட்டாமணி கிடுகிடுமணியானார்.

      "என்னையா சனியேன்னு சொன்னீங்க?" பாலாமணியின் குரல், பா.ஜ.க.சார்பாக ’புதுப்புது அர்த்தங்கள்-ல் பங்கேற்கவந்த வானதி சீனிவாசனின் குரல்போல வலுத்தது. "உங்களுக்குப் பிடிக்குமேன்னு நான் கோதுமை தோசையும் கொத்துமல்லிச் சட்னியும் ரெடி பண்ணிட்டிருக்கேன். என்னைப் போயி...."

      "ஐயையோ! நீ தப்பா நினைச்சிட்டே!" பதறினார் கிட்டாமணி.

      "என்ன தப்பா நினைச்சேன்? போனவாட்டி கோதுமை தோசை பண்ணினபோது ஒரு டஜன் தோசையையும் கால் கிலோ சட்னியும் உள்ளே தள்ளினீங்களா இல்லையா?"

      "அதைச் சொல்லலை பாலாமணி! உன்னை நான் சனியேன்னு சொல்லலை," புருடாபுரம் புண்ணியமூர்த்தியின் ஜோசியம் பலித்ததை உணர்ந்து கதறினார் கிட்டாமணி. "சனியைச் சனியேன்னுதானே கூப்பிடணும்?"

      "திரும்பத் திரும்பச் சொல்றீங்களே! இதென்ன சனியாயம்...ச்சீ! கோபத்துலே வாய் குளறுது. இதென்ன அநியாயம்?"

      "பாலாமணி! இதுக்கு முன்னாடி உன்னை நான் எப்பவாச்சும் சனியேன்னு திட்டியிருக்கேனா?"

      "ஓஹோ! இப்படியொரு ஆசையை இத்தனை நாளா மனசுலே வச்சிட்டிருந்து அதை இன்னிக்கு நிறைவேத்திக்கிட்டீங்களா?"

      "பாலாமணி! நீ அரைச்ச கொத்துமல்லிச் சட்னி மேலே சத்தியமாகச் சொல்றேன். சத்தியமா உன்னை நான் சனியேன்னு சொல்லலை. இத்தனை வருசம் என்னோட குப்பைகொட்டியுமா உனக்குத் தெரியலே? அவ்வளவு தைரியமெல்லாம் எனக்கு எப்பவாச்சும் இருந்ததுண்டா?"

      கிட்டாமணி சட்டைபோட்ட சரண்யா போல உருக்கமாகப் பேச, பாலாமணிக்கு உண்மையிலேயே தன்னை அவர் சனியே என்று அழைத்திருக்கவில்லை என்று புரிந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தனது குமுறலைக் கொட்டித் தீர்க்க முடிவு செய்தாள்.

      "சரி சரி! வெள்ளிக்கிழமை விசயத்தை நீங்க சொதப்பின கடுப்புலே இருந்தேனா? அதான் என்னைத் திட்டினீங்களோன்னு சந்தேகம் வந்திருச்சு!"

      "வெள்ளிக்கிழமை விசயமா?" கிட்டாமணி குழம்பினார். "என்ன அது? நான் என்ன சொதப்பினேன்?" தன் வாழ்க்கையில் திருமணம் செய்துகொண்டது தொடங்கி பல விஷயங்களில் தான் சொதப்பியிருந்ததால், எந்த சொதப்பலைப் பற்றி பாலாமணி குறிப்பிடுகிறாள் என்பது அவருக்கு விளங்கவில்லை.

      "போன வெள்ளிக்கிழமை என்ன விசேஷம்னு தெரியாதா உங்களுக்கு?"

      "ஏன் தெரியாது? சுவாதி நட்சத்திரம்; சந்திராஷ்டமம்; ஸப்தமி; காலையிலே பத்தரையிலேருந்து பன்னிரெண்டு மணிவரைக்கும் ராகுகாலம்."

      "முக்கியமான விசயத்தை விட்டுட்டீங்களே?"

      "வேறேன்ன முக்கியமான விசயம்? அட ஆமாம்! அன்னிக்கு மேல்நோக்கு நாள்! நான்கூட ஆபீஸ்லே ஒரு வேலையும் பண்ணாம மோட்டையே வெறிச்சுப் பார்த்திட்டிருந்தேன்."

      "க்கும்! மத்த நாள்லே மட்டும் என்னத்தைப் பண்ணுறீங்களாம்? நான் அதைக் கேட்கலை. அன்னிக்கு உலக மகளிர் தினம். தெரியுமா?"

      "தெரியுமே! எங்க ஆபீஸ் அட்டெண்டர்கூட ’ஆண்களே, நீங்க நாசமாப் போவீங்க; உருப்படாமப் போவீங்க; வெளங்காமப் போவீங்க’ன்னு பெண்களுக்கு வாழ்த்துக்கவிதை எழுதி பேஸ்புக்-லே போட்டிருந்தானே?"

      "பார்த்தீங்களா? ஒரு அட்டெண்டருக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சிகூட அக்கவுண்டண்ட் உங்களுக்கு இல்லையே?"

      "பாலாமணி, நான் எழுதற கணக்கே புரியலேன்னு ஆடிட்டர் தலையைப் பிய்ச்சுக்கிறாரு. இதுலே கவிதை வேற எழுதணுமா?"

      "உங்க பால்ய சினேகிதர் பஞ்சாட்சரம் அன்னிக்கு என்ன பண்ணினாரு தெரியுமா?"

      "ஐயோ பாவம்! அவனே எதையோ பார்த்து பயந்திருக்கான்னு தோணுது. அவனை குணசீலத்துக்கோ சோட்டாணிக்கரைக்கோ சீக்கிரமாக் கூட்டிட்டுப் போகணும். இல்லாட்டி அனேகமா அவன் ஆம் ஆத்மி கட்சியிலே சேர்ந்தாலும் சேர்ந்திருவான்."

      "அதில்லீங்க! அவரு வெள்ளிக்கிழமையன்னிக்கு கேஷுவல் லீவு போட்டு வீட்டுலே இருந்து, மூணு வேளையும் தன் கைப்பட சமையல் பண்ணிக் கொடுத்திருக்காரு!"

      "அப்போ சனிக்கிழமையன்னிக்கு சத்தியமா ஸிக்-லீவ் போட்டிருப்பான்!"

      "இப்படியே நக்கல் பண்ணிட்டிருங்க!" பாலாமணி சலித்துக் கொண்டாள். "அவரை விடுங்க. எதிர்வீட்டு சோமயாஜுலு உங்க சினேகிதர்தானே? தன் மனைவிக்கு ஸாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்திருக்காரு தெரியுமா?"

      "போனாவது ஸ்மார்ட்டா இருக்கட்டுமேன்னு வாங்கிக் கொடுத்திருப்பான். விடு!"

      "இந்த மாதிரி நல்ல ஆம்பிளைங்களை டிவி சீரியல்லே கூடப் பார்க்க முடியாது. நீங்களும் இருக்கீங்களே? அன்னிக்கு ஒரு வென்னீராவது போட்டுக் கொடுத்தீங்களா?"

      "எதுக்கு வென்னீர் போடணும்? வழக்கம்போல அன்னிக்கும் நீ ரெண்டு டோஸ் காப்பி குடிச்சியே?"

      "வாயை மூடுங்க! எனக்கு ஸ்மார்ட் போனெல்லாம் வேண்டாம். ஸிம்பிளா ஒரு புது போன் வாங்கித் தந்திருக்கலாமே?"

      "ஏன்? இப்போ இருக்கிற செட் நல்லாத்தானே இருக்கு?"

      "போதுமே! மத்தவங்க பேசறது எனக்குக் கேட்க மாட்டேங்குது. நான் பேசறது மத்தவங்களுக்குக் கேட்க மாட்டேங்குது."

      "அதுனாலேதான் நல்லாயிருக்குன்னு சொன்னேன்."

      "எரிச்சலைக் கிளப்பாதீங்க!" பாலாமணி சீட்டுக் கிடைக்காத உதிரிக்கட்சிப் பிரமுகர்போலப் பொரிந்தாள். "மத்த நாளிலே எப்படியோ, வருசத்துலே ஒரு நாள், வீட்டுலே இருக்கிற பொம்பளைக்கு ஒத்தாசையா இருப்போம்னு தோணிச்சா? ஜெயா டிவியிலே திருவிளையாடல் படம் பார்த்தீங்களே? அதுலே ’ஆணும் பெண்ணும் சமம்’னு சிவன் பார்வதிகிட்டே சொன்னதைக் கவனிச்சீங்களா?"

      "இல்லை; சிவன் பார்வதியைப் பொசுக்கினதைத்தான்  நான் கவனிச்சேன்!"

      "உங்ககூட பேசறதே வேஸ்ட்டு!" பாலாமணி அங்கிருந்து நகர்ந்தாள்.

      கிட்டாமணிக்கு பஞ்சாட்சரம், சோமயாஜுலு இருவர் மீதும் கடுப்பாக இருந்தது. செல்போனை எடுத்து பஞ்சாட்சரத்தின் நம்பரை அழுத்தவும், அவரது சகதர்மிணி மறுமுனையில் பேசினாள்.

      "ஹலோ! பஞ்சு இல்லையா?"

      "இன்னிக்கு சண்டேயில்லையா? குளிச்சிட்டிருக்காரு!"

      "அப்போ சண்டேக்கு சண்டேதான் குளிக்கிறானா?"

      "ஐயையோ! சண்டேங்கிறதுனாலே லேட்டா எழுந்திரிச்சு லேட்டா குளிச்சிட்டிருக்காருன்னு சொல்ல வந்தேன்."

      "சரி, குளிச்சிட்டு வந்ததும் என்கிட்டே பேசச்சொல்லுங்க. ஹலோ, சண்டேங்கிறதுக்காக லேட் பண்ணாம உடனே பேசச் சொல்லுங்க."

      எரிச்சலுடன் சோமயாஜுலுவுக்கு போன் செய்தார் கிட்டாமணி.

      "ஹலோ கிட்டாமணி! சொல்லுடா!"

      "டேய் சோமு! என்னடா சினேகிதன் நீ? விமன்ஸ் டே விஷயம்பத்தி எனக்கு ஒரு போன் பண்ணக்கூடாதாடா?"

      "விமன்ஸ் டே-க்கு உனக்கு ஏண்டா போன் பண்ணனும்? நீ ஏதாவது ஆபரேஷன் பண்ணிக்கிட்டியா?"

      "அடேய், உன் சம்சாரத்துக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தியாமே? அது என் சம்சாரம் காதுக்கு எட்டி அவ என்னைக் கடுப்பேத்திட்டிருக்காடா! எனக்கு ஒரு தகவல் சொல்ல மாட்டியா?"

      "என்ன விளையாடறியா? என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிக் கொடுக்கிறதுக்கு உன்கிட்டே எதுக்குடா பர்மிஷன் வாங்கணும்?"

      "அந்த அர்த்தத்துலே கேட்கலைடா! அந்த ஐடியாவை என்கிட்டேயும் சொல்லியிருக்கலாமில்லே? நானும் எதையாவது பண்ணி என் சம்சாரத்தைக் குஷிப்படுத்தியிருப்பேனே?"

      "டேய், இதையெல்லாம் போனிலே சொல்ல முடியாது. சாப்பிட்டதும் தம்மடிக்க வருவேல்லே. அப்போ பேசலாம். வரும்போது பஞ்சுவையும் கூட்டிட்டு வந்திடறேன். சரியா?"

      மதியம் தெருமுனைக்கடையில் கிட்டாமணி, சோமயாஜுலு, பஞ்சாட்சரம் மூவரும் ஆளுக்கு ஒரு ரெண்டு ரூபாய் சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

      "என்னங்கடா திடீர்னு ரெண்டு பேரும் பொஞ்சாதிக்கு ஒத்தாசையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க? ஒருத்தன் சமையல் பண்ணறான்; இன்னொருத்தான் ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்கிறான். நல்லாத்தானேடா இருந்தீங்க, ஏதாச்சும் காத்து கருப்பு பட்டிருச்சா?" கிட்டாமணி பொரிந்து தள்ளினார்.

      "கிட்டாமணி!" பஞ்சாட்சரம் உறுமினார். "உனக்கு அறிவே கிடையாதா? அன்னிக்கு நான் பண்ணினது ஒரு சூப்பர் ட்ரிக் தெரியுமா? சனி, ஞாயிறு வந்தாலே போதும்; என் சம்சாரம் புலம்ப ஆரம்பிச்சிடுவா. மத்த வீடுகள்லே புருஷனுங்க சமையல்கூடப் பண்ணுறாங்க. நீங்க ஒரு நாளாவது எனக்குக் கூடமாட உதவி பண்ணியிருக்கீங்களான்னு ஒரே நச்சரிப்பு."

      "அதுக்காக, அடுக்களைக்குள்ளே போயி சமையல் பண்ணிடறதா? உனக்கு சமையல் தெரிஞ்சிருக்குன்னுறதுனாலே பண்ணிட்டே! என்னை மாதிரி ஆளுங்க என்ன பண்ணறதாம்?" கிட்டாமணி குமுறக்கேட்டு சோமயாஜுலுவும் ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினார்.

      "எனக்குச் சமைக்கத் தெரியும்னு யாருடா சொன்னா?" சிரித்தார் பஞ்சாட்சரம். "சமையல் பண்ணறேன்னு உள்ளே புகுந்து ரெண்டு மூணு பாட்டிலை உடைச்சேன். எவர்சில்வர் பாத்திரம், இலுப்புச்சட்டியைக் கருக விட்டேன். சாம்பாருலே உப்பை அள்ளிக் கொட்டினேன். கச்சாமுச்சான்னு கண்றாவியா ஒரு சமையலைப் பண்ணினேன். அன்னிக்கு ராத்திரி என் சம்சாரம் ரோஸ்மில்க் மாதிரி ஜெலூஸிலை ஒரு கிளாஸ் முழுக்க ஊத்திக்குடிச்சான்னா பாரேன். கடைசியிலே அவ என்ன சொன்னா தெரியுமா? ’இத பாருங்க, இன்னிக்குப் பண்ணினது போதும். இனிமே அனாவசியமா சமையலறைப் பக்கமே நீங்க வரவேண்டாம். நீங்க படற கஷ்டத்தை என்னாலே பார்க்கவே முடியலே’ன்னு சொல்லிட்டா. இனிமே சமையல் செய்ய ஒத்தாசை பண்ணலேன்னு புலம்புவாளா? நான்பாட்டுக்கு ஹாயா டிவியிலே கிரிக்கெட், நியூஸ் பார்த்துக்கிட்டு ஜாலியா இருப்பேனில்லே?"

      "அடப்பாவி! நீ இவ்வளவு புத்திசாலியா?" கிட்டாமணி அசந்தார்.

      "அதானே, கிட்டாமணியோட பால்யசினேகிதனா இருந்தும் எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்கே பஞ்சு?" என்று கொஞ்சம் ஓவராகவே வியந்தார் சோமயாஜுலு.

      "அடேய் சோமு, அவனாவது சமையல்னு ஒரு கண்றாவியைப் பண்ணி வீட்டுக்காரி வாயை அடைச்சிட்டான். உன்னை யாருடா ஸ்மார்ட் போனெல்லாம் வாங்கிக் கொடுக்கச் சொன்னது? நீயும் இதெல்லாம் சூப்பர் ட்ரிக்னு சொல்லப்போறியா?" எரிந்து விழுந்தார் கிட்டாமணி.

      "இல்லையா பின்னே?" சிரித்தார் சோமயாஜுலு. "வெள்ளிக்கிழமை புது போன் வாங்கிக் கொடுத்தேன். சனிக்கிழமையன்னிக்கு அதைக் காட்டறதுக்காக அம்மா வீடு, அக்கா வீடு, பெரியம்மா வீடுன்னு ஒரு ரவுண்டு போயிட்டு சாயங்காலம்தான் வீட்டுக்குத் திரும்பிவந்தா. நேத்து ஜாலியா ரெண்டு பீர் குடிச்சிட்டு, டிவிடியிலே சன்னி லியோன் படமெல்லாம் போட்டுப் பார்த்துட்டு பொழுதைப் போக்கினேன். நேத்து பீச்- தாம்பரம் லைன்லே சுத்திட்டு வந்தாளா? இன்னிக்கு பீச்-வேளச்சேரி லைன்லே ஒரு ரவுண்டு போகப்போறா. இன்னிக்கு ரெண்டு கொரியன் படத்தோட டிவிடி பார்க்கப்போறேன். வீட்டுலே சம்சாரம் இல்லாம ரெண்டு நாள் கிடைக்கிறதுன்னா சும்மாவாடா?"

      "சே! என்கிட்டே சொல்லியிருந்தா நானும் இந்த மாதிரி எதையாவது பண்ணி, என் சம்சாரத்தைக் குஷிப்படுத்துறா மாதிரி செமயா ஏமாத்தியிருப்பேனேடா!" கிட்டாமணி கூட்டணியில் சீட் கிடைக்காத உதிரிக்கட்சித் தலைவரைப் போல விரக்தியுடன் பேசினார்.

      "கிட்டாமணி! உனக்கெல்லாம் சாமர்த்தியமே போதாதுடா!" என்று பஞ்சாட்சரம் சொல்லிச் சிரிக்க, சோமயாஜுலுவும் சேர்ந்து சிரித்தார்.

      "சிரிக்கறீங்களா?" கிட்டாமணி கிளைமேக்ஸ் காட்சியில் வீறுகொண்டெழும் தெலுங்குப்பட ஹீரோவைப் போலச் சூளுரைத்தார். "அடுத்த மகளிர் தினத்துக்கான பரிசை இன்னிக்கே முடிவு பண்ணி வாங்கிக்கொடுத்து அசத்தறேன் பாருங்கடா!"

     சூளுரைத்த சூட்டோடு வீடு திரும்பிய கிட்டாமணி, டிவியில் மனைவி லயித்திருப்பதைக் கவனித்தவாறே சோபாவில் அமர்ந்தார். இவளுக்கு என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாம்? அவரது யோசனையை பாலாமணியின் குரல் கலைத்தது.

      "ஏங்க, இந்த அமலா பாலுக்கு ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் ரொம்ப நல்லாப் பொருந்துது இல்லே?"

      யுரேகா!

      "பாலாமணி!" கிட்டாமணி திருவாய்மலர்ந்தருளினார். "அடுத்த விமன்ஸ் டே-க்கு உனக்கு நான் என்ன வாங்கித் தரப்போறேன் தெரியுமா?"

      பாலாமணி இன்ப அதிர்ச்சியுடன் திரும்பி கணவனை ஏறிட்டாள்.

      "ஜீன்ஸ் பேண்ட்டும் டி-ஷர்ட்டும்...!"

      சில நொடிகள் கழித்து...

      வீடு திரும்பிக் கொண்டிருந்த பஞ்சாட்சரமும் சோமயாஜுலுவும் கிட்டாமணி வீட்டு வாசலைக் கடந்தபோது சட்டென்று நின்றனர்.

      "டேய் பஞ்சு! என்னடா கிட்டாமணி வீட்டுக்குள்ளேயிருந்து கும்கும்ன்னு ஒரே சத்தமாயிருக்கு?"

*****************