Tuesday, February 16, 2016

இறுதிச்சுற்று???????



      பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் கதையாகப்பட்டது, தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிக் கிளம்புகிற மின்சார ரயில் வண்டிகளைப் போன்றது. அவ்வப்போது சைதாப்பேட்டைக்கு முன்னாலும், கோட்டை தாண்டியும் புசுக்கென்று நின்று சில நிமிடங்கள் கழுத்தறுத்தாலும், எப்படியும் கடற்கரையில் இறக்கி விடுவது உறுதி. என்ன, சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத பிளாட்பாரத்தில் வண்டி போய் நின்று கடுப்பேற்றுவதும் நடக்கிற சங்கதிதான்.

                'இறுதிச்சுற்று' - ஒரு பார்வையாளராக என்னை ஏமாற்றவில்லை. ஒவ்வொரு காட்சியிலும், 'அடுத்து இது வரும்' என்ற எனது எல்லா ஊகங்களையும் உண்மையாக்கி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வைத்த படம்ஆனால், ஒரு திரைப்படத்திலிருந்து நாம் எதிர்பார்ப்பது இதற்கு முற்றிலும் எதிர்மறையானது. கதையின் போக்கைக் கணிக்க முடிவதற்கும், காட்சிகளின் அடுக்கை ஊகிக்க முடிவதற்கும் இருக்கிற வித்தியாசம் மிகப் பெரியது. அவ்வகையில் 'இறுதிச்சுற்று' சரவணபவனில் இரண்டாவது முறை சாப்பிடுகிறகுவிக் மீல்ஸ்போல தவிர்க்க முடியாத ஒரு அலுப்பைத் தந்திருக்கிறது என்பதே உண்மை.

இந்தப் படத்தை மைக் டைசன் பார்க்க விரும்புவதாக செய்திகள் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றன சில பத்திரிகைகள். நியாயம் தான்; இந்தப் படத்தில் வரும் சில below-the-belt சங்கதிகளை, அத்தகையunsporting antics நிறைய ஆடிய மைக் டைசன் நிச்சயம் பார்த்துப் பாராட்டுவார். ரெப்ரீ சண்டையை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் லூ சாவரீஸை துவம்சம் செய்ததோடு அல்லாமல், ரெப்ரீ ஜான் கோய்லையும் அடித்து வீழ்த்தியவர் அல்லவா டைசன்? அவருக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

'விகடன்' விமர்சனத்தில், இயக்குனர் சுதா கொங்கரா இரண்டரை ஆண்டுகளாய், மகளிர் குத்துச்சண்டை குறித்து மிகுந்த ஆராய்ச்சி மேற்கொண்டதாக சொல்லிப் பாராட்டியிருப்பதை வாசித்து எனக்கு சிரிப்பே வந்து விட்டது. குத்துச்சண்டைகள்  எப்படி நடைபெறுகின்றன என்று எந்த அளவு இயக்குனர் வீட்டுப்பாடம் செய்திருக்கிறார் என்பதற்கு, படத்தின் இறுதியில் வருகிற உலக சாம்பியன்ஷிப் தொடர்புடைய காட்சிகளே ஒரு சோறு பதம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பட்டியலில் உள்ள எந்த விளையாட்டின் சர்வதேச போட்டியிலும், ஊக்க மருந்து பரிசோதனைகளை ஒரு சர்வதேச கமிட்டியே மேற்பார்வை செய்து நிர்வகிக்கும். ஒரு குத்துச்சண்டை வீரனாக இருந்து பயிற்சியாளராகும் கதாநாயகனுக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாதது போல, அவரை வில்லன் மிரட்டுவது போல காட்சி அமைத்திருப்பது நகைப்பூட்டுவதாக இருக்கிறது. மேலும், அரை இறுதியில் ஜெயித்த ஒரு வீரர் அல்லது வீராங்கனை, காயம் உட்பட பிற மருத்துவ காரணங்களுக்காகத் தானே முன்வந்தால் ஒழிய அவரை இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள விடாமல் எந்தக் கொம்பனும் தடுக்க முடியாது. இந்த பூச்சாண்டிக்குப் பயந்து கதாநாயகன் ராஜினாமா செய்வது போல காட்சி அமைத்திருப்பதிலேயே, குத்துச்சண்டை குறித்து எவ்வளவு விபரம் திரட்டியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

குத்துச்சண்டையில் இடுப்புக்குக் கீழே அடிப்பது, நடுவரை அடிப்பது, ஜட்ஜுகளைத் தாக்குவது என்பதெல்லாம் 80-களிலேயே கடுமையான குற்றங்களாக்கப் பட்டு விட்டன. லாரி கோம்ஸ், மைக் டைசன் ஆகியோரின் குத்துச்சண்டை வரலாற்றை மேலோட்டமாக வாசித்திருந்தால் கூட, அவர்கள் இத்தகைய குற்றங்களுக்காக என்ன பாடு பட்டார்கள் என்று புரியும். அப்படியிருக்கையில், தொடர்ந்து இத்தகைய விளையாட்டு விதிமீறல்களை செய்கிற habitual offender கதாநாயகியை, மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு உலக சாம்பியன்ஷிப் ஆட, குத்துச்சண்டை அனுமதித்திருப்பதாய்க் காட்டியிருப்பது அபத்தத்திலும் அபத்தம்

'இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்களுக்காக படத்தை மோசம் என்பதா?' என்று கேட்பவர்களுக்கு - நிச்சயம் இது மோசமான படம் இல்லை; ஆனால், இந்த அளவுக்கு வியந்து விகசிக்குமளவுக்கு இது ஒரு காவியமும் இல்லை. குறிப்பிட்ட நுணுக்கங்களில் கவனம் செலுத்தி, கதைக்கட்டிலும் பாத்திரப்படைப்பிலும் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால், இது இந்தியாவிலேயே இதுவரை தயாரிக்கப்பட்ட Sports Drama-க்களில் மிகச் சிறந்த படம் ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது. தற்போதைக்கு, இந்தப் படம் 'மேரி கோம்' படத்தின் கால்நுனி நிழல் அளவுக்கே இருக்கிறது என்பதே வேதனை. சுருக்கமாக சொன்னால், இது குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட - ஒரு அடக்கி வாசிக்கப்பட்ட romantic melodrama; அவ்வளவே!

சினிமா தவிரவும் உலக விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், இந்தப் படத்தில் சித்தரித்திருப்பதைப் போல, எங்கிருந்தோ யாரோ ஒரு பெண்ணை பயில்வித்து, ஒரு ஹெவி-வெயிட்டுடன் மோதி, தோல்வியடையச் செய்து, பிறகு நேரடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கே அழைத்துப்போவதெல்லாம், விட்டலாச்சாரியா உயிரோடு இருந்தால் அவர் படங்களில் நடக்கிற சங்கதிகள். மாவட்டம், மாநிலம், மண்டலம் அப்புறம் தேசிய அளவிலான போட்டிகள் என்று ஏழுகடல், ஏழுமலை தாண்டாமல், ஐந்து நிமிடப் பாட்டில் ஹீரோ கோடீஸ்வரன் ஆவதுபோல, காட்டியிருப்பதேல்லாம் திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம் என்று அடித்துச் சொல்லலாம்

விகடன் விமர்சனத்தில் மேலுமொரு நகைச்சுவைக் குறிப்பு: "'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!". படத்தின் ஆரம்பத்தில், 'கதையில் குறிப்பிடப்படும் சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே' என்று போட்ட டிஸ்க்ளைமர் கார்டை விகடன் விமர்சனக் குழு பார்க்கவில்லை போலிருக்கிறது. ஒரு படத்தைப் பாராட்டுவது என்று முடிவு செய்தால், என்னவெல்லாம் பாசாங்கு பண்ணுறீங்க சாமிகளா! விகடன் விமர்சனத்தில் குறிப்பிட்ட "இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்" தான் இப்படம் குறித்த பெரும்பாலான மிகையான புகழுரைகளுக்குக் காரணமே தவிர, இது இந்த அளவுக்குக் கொண்டாடத்தக்க ஒரு படமே அல்ல. “ஒரு ஏழைப்பெண் எப்படி தனது சூழலிலிருந்து விடுபட்டு, வெற்றியின் உச்சியை அடைகிறார்? அவரது பாதையில் அவர் கடக்க நேரிடுகிற முட்கள் எத்தனை? துயரங்கள் எத்தனை? தியாகங்கள் எத்தனை?” என்ற சலித்துப்போன போலிப் பெண்ணியப் பிரச்சாரத்தின் ஒரு நாசூக்கான வடிவம்தான் 'இறுதிச்சுற்று".
மற்றபடி, இந்தப் படத்தின் வருகிற எந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் திரையில் முதன்முதலாய்ப் பார்த்தீர்கள்? மனைவியைப் பிரிந்து மது,மாது என்று வாழ்கிற கதாபாத்திரம் புதுமையா? குடும்பத்துக்காக தியாகம் செய்கிற நாயகி புதுமையா? தனது ஊதாரித்தனத்துக்காக மகள் சம்பாத்தியத்தை ஏப்பமிடுகிற தகப்பன் புதுமையா? சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் மீது காதல்வயப்படுகிற பெண் புதுமையா? பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்த வேண்டும் என்று அலைகிற வில்லன் புதுமையா? நாயகி மீன் விற்கிற பெண் என்பதும், நாயகன் குத்துச்சண்டை பயிற்சியாளர் என்பதும் தவிர்த்துப் பார்த்தால், இந்தப் படத்துக்கும் யுகயுகமாய் நாம் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு வீடு திரும்பிய மற்ற படங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று சத்தியமாய் எனக்குப் புரியவில்லை.
மாதவனின் கதாபாத்திரம் - 'இக்பால்' படத்தின் நசீருத்தீன் ஷா மற்றும் 'சக்தே இந்தியா' ஷாரூக்கான் இருவரது கதாபாத்திரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் சுரண்டியெடுத்து பூசப்பட்டிருக்கிறது என்பதுதானே உண்மை? ஒரு பயிற்சியாளருக்கும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைக்கும் இருக்கக் கூடிய மெல்லிய உறவை 'மேரி கோம்' படத்தில் நாம் பார்க்கவில்லையா? சில இடங்களில் 'மிலியன் டாலர் பேபி' -கிளின்ட் ஈஸ்ட்வுட் -ஹிலாரி ஸ்வான்க் ஞாபகம் வருகிறது. (ஐயையோ, ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகிற வியாதி என்னையும் தொற்றிக் கொண்டதே, கடவுளே!)

            இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான இப்படத்தில், இருக்கிற விரல்விட்டு எண்ணத்தக்க கதாபாத்திரங்களைச் சரிவரச் செதுக்கி, திரைக்கதையைச் செம்மையாய் அமைத்திருந்தால், இன்று கொண்டாடுகிறவர்களின் புகழ்ச்சிக்கு இந்தப் படம் உண்மையிலே தகுதியுடையதாய் இருந்திருக்கும். ஒரு பொன்னான வாய்ப்பு பறிகொடுக்கப் பட்டிருக்கிறது. வாட் ய ஷேம்!

      மாதவனை எனக்குப் பிடிக்கும். ’ஆய்த எழுத்து’, ‘அன்பே சிவம்’, ‘ரன்’ போன்ற படங்களில் ஏற்கனவே விதவிதமாய் நடித்து நிரூபித்தவர்தான் என்றாலும் ‘தம்பி’ மாதிரி அனாவசியமாக முறைத்து, அளவுக்கதிகமாக இரைந்து நடித்திருப்பாரோ என்று ஒருவிதமான பயத்துடன் போயிருந்தேன். மனிதரின் அமெரிக்கையான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் பல சறுக்கல்களையும் தாண்டி மனதுக்குள் ஐஸ்க்ரீம் போல் இறங்கியது. நிஜத்தில், மாதவன் என்ற கோந்து ஒன்றுதான் இந்த உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்திருக்கிறது. ஆனால், அந்த அசுர உழைப்பும், அமெரிக்கையான நடிப்பும்கூட ஒரு தெளிவான பிம்பத்தை இறுதியில் அளிக்கவில்லை என்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. சிவாஜி,கமல்,அமிதாப்,மம்மூட்டி போன்ற பல நடிகர்கள், தங்களது நேர்மையான உழைப்பால் பல சொதப்பல் படங்களையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது மாதவனும் சேர்ந்து, தன் தோள்களில் ஒரு படத்தின் மொத்தச்சுமையையும் தாங்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

       நாசர், ராதாரவி இருவரது நடிப்பும், அனுபவசாலிகளுக்கும் புதியவர்களுக்கும் இருக்கிற அடிப்படை வித்தியாசத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ராதாரவி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்க, நாசர் அந்தக் கலகலப்பான பாத்திரத்துக்கு ஜீவன் அளித்திருக்கிறார்.

      மேற்கூறிய மூவர் தவிர்த்து பிறரின் நடிப்பு பெரும்பாலும் மிகவும் சீரியல்தனமாய் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. ரித்திகா சிங் அவ்வப்போது கிறீச்சிடுவதையும், மூக்கு விடைக்க, முகம்சுளிக்க வசனத்தை இரைந்து சொல்வதையும் நடிப்பு என்ற கணக்கில் சேர்க்க, நான் வேறோரு படத்தில், இதைவிட மோசமான நடிப்பைப் பார்த்தாக வேண்டும். அக்காக்காரியாக வரும் மும்தாஜ் சர்க்காரின் பொறாமை ஒரு புதிராக இருக்கிறது என்பதால், அவரது மாறுகிற உணர்ச்சிகள் எண்ணைமேல் தண்ணீர்த்துளிகள்போல ஒட்டாமலே இருக்கின்றன. அந்தப் பொறுப்பில்லாத அப்பாவின் நடிப்பு படத்தில் இன்னொரு நகைச்சுவையாய் இருந்தாலும், கொஞ்சம் புன்னகைக்க வைக்கிறது.

      இசை சந்தோஷ் நாராயணன். படத்தில் இன்னொரு ஆறுதல். ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டுக்குரியது – குறிப்பாக குத்துச்சண்டை காட்சிகளின்போது சில கோணங்கள் பிரமிக்க வைக்கின்றன.

      குத்துச்சண்டை என்றால், கையில் உறைபோட்டு, தலையில் கவசமணிந்து ரத்தம் வரக்குத்துவது மட்டுமல்ல; கால்களுக்கு குத்துச்சண்டையில் இருக்கிற முக்கியப்பங்கையும் காட்டியிருக்கலாம். ராக்கி தொடர்படங்களில் சில்வஸ்டர் ஸ்டாலோன் கால்களின் அசைவை அற்புதமாகப் படமாக்கிக் காட்டியிருப்பார்கள். இவ்வளவு ஏன்? ‘காவல்காரன்’ படத்தில் வாத்தியார் குத்துச்சண்டை பார்க்கவில்லையா? படத்தில் மாதவனே சொல்லுவதுபோல, குத்துச்சண்டையில் விரல்விட்டு எண்ணத்தக்க உத்திகளே உள்ளன. அதுதவிர, உடல் இயக்கம், பார்வை ஒருமைப்படுத்துதல் என்று அறிவுடன் தொடர்புடைய சங்கதிகள் உள்ளன. அவற்றை விஷுவலாகக் காட்ட பெருமளவு தவறி, ஒரு செங்கிஸ்கான் கதையை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள் – இக்பால் படத்தில் வருகிற ‘சக்ரவியூகம்’ போல.

      இந்தப் படத்தின் திரைக்கதையின் ஓட்டைகளை அடைக்க ஐம்பதுகிலோ அம்மா சிமெண்ட் வேண்டும். அது அனாவசியமானது; ஏனென்றால், நாயகன் தவிர்த்து மீதமுள்ள கதாபாத்திரங்களை செதுக்குகிற முயற்சியில் சேதாரமாக்கியிருக்கிறார்கள். திரைக்கதை குறித்த எனது தியரிக்கு, இப்படத்தில் சில மோசமான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

      சிகரம்தொட்டிருக்க வேண்டிய படம்; அடிவாரத்திலேயே கொடியேற்றிவிட்டு அற்பசந்தோஷம் அடைந்திருக்கிறது.