Wednesday, August 11, 2010

'குடி' உயர கோன் உயரும்

வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்

-என்று சொன்ன ஔவையார் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், புல்லரித்துப் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து புன்னகை சிந்தியிருப்பார். (சே! செம்மொழி மாநாட்டை மிஸ் பண்ணிட்டேனே!)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தத்தை அரசின் உதவியோடு மதுமக்கள், அதாவது பொதுமக்கள் முறியடித்து வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றனர். சொல்லப்போனால், ஆகஸ்ட் 11, 2010 ஆகிய இந்த தினத்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும். ஆனால், யாராவது பொன்னைச் சுரண்டி விற்று அதில் க்வார்ட்டர் வாங்கி அடித்து விடலாம் என்பதால் இத்தோடு விட்டுவிடலாம்.

உலகத்திலேயே போலீஸ் பாதுகாப்போடு சரக்கடித்த பெருமை தமிழனையே சாரும் என்பதை எண்ணும்போது, தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போன்றவர்களின் வீரவரலாறுகளெல்லாம் விகடனின் இலவச இணைப்புப் போலக் கைக்கடக்கமாகத் தெரிகின்றதல்லவா?

அடாத வெயிலுக்கும், விடாத மழைக்குமே அஞ்சாத மொடாக்குடியர்களா இது போன்ற போராட்டங்களுக்கு அஞ்சுபவர்கள்?

இன்று ஸ்டிரைக் என்பதால் மதுகிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும், முன்னெச்சரிக்கையுடனும் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் அலை மோதியது. இது தவிர தினசரிக் குடிகாரர்கள் நேற்று இரவில், டாஸ்மாக் கடைகளருகேயிருந்த நடைபாதைகளில் அவரவர் வேட்டி, லுங்கியை விரித்துப் படுத்துக் கொண்டதால், குழம்பிப்போன தெருநாய்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்றைக்கு அதிகாலை முதலே தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகளின் முன்னால் குடிமக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கியிருந்ததால், புதிதாக பல்பொடி வியாபாரம் படுஜோராக நடந்ததாக நமது நிரூபர் மந்தாரம்புதூர் மப்பண்ணன் அறிகிறார்.

நீண்ட வரிசையில் நின்று விரும்பிய மது பானங்களை வாங்கிக் கொண்டு திருப்திகரமாக சென்றனர் குடிகாரர்கள். அவ்வப்போது ’கோவிந்தா..கோவிந்தா,’ என்ற கோஷங்களும் விண்ணைப் பிளந்தன. கடை திறக்கும் வரைக்கும் குடிமக்கள் மிகுந்த சிரத்தையுடன் ’வசந்தமாளிகை’ மற்றும் ’வாழ்வே மாயம்’ படத்திலிருந்து பக்திப்பாடல்களைப் பாடி பஜனையில் ஈடுபட்டனர். முடிவில் அனைவருக்கும் ஊறுகாய்ப் பாக்கெட் பிரசாதமாக வழங்கப்பட்டது.

வழக்கத்திற்கு மாறாக கூட்டம் நிரம்பி வழிந்ததால் போலீஸார் வரவழைக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்து குடிகாரர்களுக்கு அவர்கள் விரும்பிய மதுபானங்கள் கிடைக்க வழி செய்யப்பட்டது. விரும்பிய சரக்கு கிடைத்த உற்சாகத்தில் குடிமக்கள் ’காவல்துறை வாழ்க!’ என்று கோஷம் எழுப்பி, போலீசாருடன் கைகுலுக்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

குடிமக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி, கொருக்குப்பேட்டை டாஸ்மாக் கடை திறந்ததும் முதல் க்வார்ட்டர் வாங்கி பக்தகோடிகளின் தலைகளில் தெளித்து ஆசிவழங்கியபோது, கரவொலி விண்ணைப்பிளந்தது.

இதே போல தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கு.மு.கவின் பிரமுகர்கள் கடைதிறந்தவுடன் முதல் விற்பனையைத் தொடங்கியதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மதுரையில் கு.மு.க.பொருளாளர் பகார்டி பக்கிரிசாமியின் கட்-அவுட்டுக்கு பீரால் அபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த மனோகரன் (32) என்ற டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயன்றதாக செய்தி பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர் ’டீ குடிக்கப் போகிறேன்,’ என்று சொன்னதை "தீக்குளிக்கப் போகிறேன்,’ என்று அங்கிருந்த காவலர் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பம் என்பது புரிந்தது. அனேகமாக அந்தக் காவலருக்கு முந்தைய நாள் சரக்கின் போதை தெளியாமல் இருந்திருக்கலாம் என்று சந்தேகித்த உயர் அதிகாரிகள் அவரை டாஸ்மாக் பாதுகாப்புப் பணியிலிருந்து அப்புறப்படுத்தி, ஆர்.எஸ்.புரத்தில் போக்குவரத்துக் கண்காணிப்புப் பணிக்கு அனுப்பியிருப்பதாக ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் பிசுபிசுத்தது பொறுக்காமல், எதிர்க்கட்சியினர் பல திடுக்கிடும் வதந்திகளைப் பரப்பி பொதுமக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருவதாக, கு.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி டாஸ்மாக்கில் ஆம்லேட் மாஸ்டராகப் பணிபுரிபவர் பேக்பைப்பர் பெரியகண்ணு! இன்று இவரது வீட்டிலிருந்து பெருத்த உரத்த அழுகுரல் கேட்கவும், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை அரசு போலீஸ் உதவியோடு முறியடித்ததால், மனமுடைந்த பெரியகண்ணு தற்கொலை செய்து கொண்டதாக ஊருக்குள்ளே வதந்தி பரவியது. விரைந்து வந்த அரசு அதிகாரிகள் விசாரித்ததில் நண்பகலில் ஒளிபரப்பாகும் நகைச்சுவைத் தொடரைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற அபாயகரமான வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தழுதழுத்த குரலில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கு.மு.கவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் விஷமிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோல்கொண்டா கோவிந்தசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இன்று வழக்கத்தை விடவும் அதிகமாகவே டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் நடந்ததாகவும், பெரும்பாலான போலீஸ்காரர்கள் மதுக்கடைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."

"குடிமக்களின் நலத்தினைக் கருதி டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபட வைத்த தமிழக முதல்வருக்கு ’குடிகாத்த கோமகன்’ என்ற விருதை காந்தி ஜெயந்தி அன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் கோல்கொண்டா கோவிந்தசாமி தெரிவித்தார்."

கு.மு.கவின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க மயிலாப்பூரிலிருந்து பாதயாத்திரையாக கோட்டைக்கு செல்லவிருப்பதாகவும், ஊர்வலம் முடியும்வரையிலும் தொண்டர்கள் வழியிலிருக்கிற டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்றமுறை இது போல ஒரு பாதயாத்திரையை மந்தவெளியில் தொடங்கி அது மயிலாப்பூரிலேயே பாதியாத்திரையோடு முடிந்தது குறிப்பிடத்தக்கது.

"இனிமேல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், அவர்களை விடவும் திறமையாக காவல்துறையினர் செயல்படுவார்கள் என்பதற்கு இன்றைய தினம் ஒரு சான்று,’ என்று பெருமிதத்தோடு குறிப்பிட்ட கு.மு.க.இணைச்செயலாளர் நெப்போலியன் நெடுவளவன், "இது போன்ற போராட்ட மிரட்டல்களுக்கு அஞ்சி, பெட்டி பெட்டியாக கு.மு.க.தொண்டர்கள் பாட்டில்களை வாங்குவது கழகத்தின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது,’ என்றும் குறிப்பிட்டார்.

கடைசியாகக் கிடைத்த தகவல்: "டாஸ்மாக் ஸ்டிரைக்கின்போது காவல்துறை ஒத்துழைத்தது போல், இனிவரும் காலங்களில் காவல்துறை வேலைநிறுத்தம் செய்தால், எல்லாக் காவல்நிலையங்களிலும் கு.மு.க.தொண்டர்கள் பணியாற்றுவார்கள்" என்று கு.மு.கவின் தலைமைச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

22 comments:

பிரபாகர் said...

மிக அருமை நண்பா! பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தேன்.... குறிப்பாய் "குழம்பிப்போன தெருநாய்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது"...

என் சேட்டையின் சேட்டை ஆரம்பமாகிவிட்டது... தொடருங்கள்...

பிரபாகர்...

ஸ்ரீராம். said...

சேட்டைக்கு மட்டுமே கைவந்த நடை....! எந்த வரியை எடுத்துப் போட்டு பாராட்டிச் சிரிக்க....எல்லா வரிகளுமே சிரிக்க வைக்கின்றன. உங்களுக்கு மார்ஃபஸ் பரிசு..!

vasu balaji said...

பெயர்சூட்டு விழா ஸ்பெஷலிஸ்ட் சேட்டை:)). என்ன பொருத்தமான பெயர்கள். ஒரு வேளை சாதனைகளில் ஒன்றாக இதுவும் வரலாம்.:)

sathishsangkavi.blogspot.com said...

நண்பா சேட்டை...

உங்க பதிவ படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா... பக்கத்துல இருக்குற டாஸ்மார்க்ல போல்ஸ் வாங்கி இனிமேல் பதிவோட சேர்த்து கோட்டரையும் அனுப்புப்பா.....

senthil velayuthan said...

மிக அருமை நண்பா!

பெசொவி said...

அப்பப்பா......என்ன சரவெடி! பெயர்கள் மிக மிகப் பொருத்தமாக.......சேட்டை, கலக்குங்க!

பொன் மாலை பொழுது said...

அப்படி வாங்க செல்லம் வழிக்கு! இதுதானய்யா உம்ம ட்ராக். இதை வுட்டுபுட்டு நீறு பாட்டுக்கு கீஜாஞ்சலி கவிதை இலக்கியம் என்று பாதை மாறினால் நாங்க விட்டுவிடுவோமா என்ன? அதெக்கெல்லாம் வேற ஆளுங்க இருக்காங்க. நமக்கு என்ன வருமே அதையே செய்யலாமே . 'குடிகாத்த கோமகன் " ரொம்ப பொருத்தமான விருது. சீக்கிரம் விழா எற்பாட கவனிக்கணும்மையா. நா போறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,குடி சம்பந்தப்பட்ட மேட்டர்ல மட்டும் மீட்டர் ஜாஸ்தியா இருக்கே எப்படி?

அது சரி(18185106603874041862) said...

Hilarious mate ;-))))

சிநேகிதன் அக்பர் said...

பதிவு சும்மா கின்னுன்னு இருக்கு :)

Unknown said...

உங்க பதிவு படிக்கிரதுன்ன ஒரு குவாட்டர் அடிச்சுகிட்டுதான் படிக்கணும் பின்ன சிரிச்சு வயறு வலிக்குது சார்

cheena (சீனா) said...

அன்பின் சேட்டைக்காரன்

வி.வி.சி - நகைசுஅவையின் உச்சம் - சேட்ட ஜாஸ்தி தான்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Unknown said...

கு.ம,க சென்னை சைதைக் கிளையின் சார்பாக அண்ணனுக்கு இந்த பியர் மாலையை போடுகிறேன்..

Unknown said...

உங்க பதிழ்வு ழெம்ப ழெம்ம்ப அழுமை எனவெ உமழ்கு பரிசு. நான் அடிக்கும் குவழ்ட்டரில் பாதி கொடுழ்த்தெ ஆகழ்வேண்டும்.கிக்குடன் லுவேகக்ணீர்ம

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிக அருமை

Jey said...

எப்பா சேட்டை, சிரிச்சி முடியல....

வரதராஜலு .பூ said...

சேட்டை அதிமாயிடிச்சிடோய்.

:)

வெங்கட் நாகராஜ் said...

”ஓஹோஹோ... கிக்கு ஏறுதே....” படித்த அனைவருக்கும் கிக்கு ஏறும் பதிவினை அளித்த அண்ணன் சேட்டைக்கு ஒரு குவாட்டர் பார்சல்.....

வெங்கட்.

Anonymous said...

நாட்டின் பொறுப்பான குடிமகன் சேட்டை வாழ்க...

பித்தனின் வாக்கு said...

sattai summa kalakki eduthu irukkeenga. romba arumai.

மங்குனி அமைச்சர் said...

சேட்ட, எல்லா சரக்கு போரையும் கரக்ட்டா சொல்றியே ?

vels-erode said...

சரியான சரக்கு ......ஸாரி...விஷ்யம் உள்ள ஆளுதான்.