Friday, August 20, 2010

பிரதமன்

என்னது, ஓணம் பண்டிகை வருதுன்னுறதுனாலே ’பிரதமன்’னு தலைப்பு வச்சு, சேட்டை இந்த வாட்டி ’அடைப்பிரதமன்’, ’சக்கைப்பிரதமன்’-னு கேரளாவோட பாயசங்களைப் பத்தி எழுதப்போறானோன்னு யாரும் சந்தேகப்படாதீங்க! ரொம்ப நாளைக்கு முன்னாடி, அர்ஜுன் ஒரு நாள் முதல்வரா ’முதல்வன்’ படத்துலே நடிச்சாரில்லே; அதே மாதிரி நான் ஒரு நாள் பிரதமரா இருந்ததை ’பிரதமன்’னு எழுதியிருக்கிறேன்.

உண்மையிலேயே அன்னிக்கு என்ன நடந்ததுன்னா....!

ஞொய்ய்ங்....ஞொய்ய்ங்....ஞொய்ய்ங்....ஞொய்ய்ங்....!

இடம்: புது தில்லி பிரதமர் அலுவலகம்

சேட்டை: சே! ஆபீஸ் வேலையா டெல்லி வந்தோமா.சோலே பட்டூரே சாப்பிட்டோமா, கனாட் ப்ளேசுக்குப் போயி பீர் குடிச்சோமா, கரோல்பாக்லே கலர்பார்த்தோமான்னு இல்லாம, பிரைம் மினிஸ்டரை ஒருவாட்டி பார்க்கலாம்னு வந்ததுக்கா இந்த ஒரு நாள் பிரதமர் தண்டனை?

காரியதரிசி: சேட்டைஜீ! நமஸ்தே! ஆப் கோ ஹிந்தி சமஜ் மே ஆத்தா ஹை?

சேட்டை: ஆத்தாவையெல்லாம் ஆபீஸ் வேலையா வரும்போது கூட்டிக்கிட்டு வர முடியாது.

காரியதரிசி: க்யா பாத் ஹை?

சேட்டை: பிஸிபேளாபாத் ஹை! கூடவே ரெண்டு பொரிச்ச அப்பளமும் கொண்டுவரச் சொல்லு!

காரியதரிசி: நஹீ சம்ஜா!

சேட்டை: போச்சுடா, முதல்லே பாத்துன்னான், இப்போ சமோசாங்கிறான்! சதா திங்குறதப்பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க போலிருக்கு! யூ ஸ்பீக் நோ இங்கிலீஷ்? ஐ ஸ்பீக் நோ ஹிந்தி!

காரியதரிசி: அச்சா!

சேட்டை: பார்றா, முதல்லே ஆத்தா, இப்போ அச்சாவா? அச்சனெல்லாம் ஓணத்துக்கு லீவு போட்டு கேரளாவுக்குப் போயிருப்பாங்க! யாராவது தமிழ் தெரிஞ்ச ஆளை வரச்சொல்லுய்யா! யூ கோயிங் அண்டு டமில் பர்சன் கமிங்! அண்டர்ஸ்டாண்ட்?

காரியதரிசி: ஓவர்ஸ்டாண்ட்!

(தமிழ்மொழிபெயர்ப்பாளர் வருகிறார்)

மொ.பெ: வணக்கம் சார்! என் பேரு சொரிமுத்து! இந்த ஆபீஸுலே அஞ்சுவருசமா சொரிஞ்சிட்டிருக்கேன்..சாரி, அதாவது வேலைபார்த்திட்டிருக்கேன்! உங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னுறதுனாலே எல்லா மினிஸ்டருங்களும், அவங்கவங்க பிரச்சினையை அவங்க சார்பா உங்ககிட்டே என்னையே பேசச் சொல்லி அனுப்பியிருக்காங்க!

சேட்டை: குட்! ஒவ்வொரு பிரச்சினையா சொல்லுங்க!

சொரிமுத்து: முதல்லே, பாகிஸ்தான் பார்டர் பிரச்சினை! எல்லையிலே எங்கே பார்த்தாலும் பாகிஸ்தான் படை ரொம்ப அதிகமாயிருக்கு சார்!

சேட்டை: அப்படியா? கத்திரிக்காய் சாப்பிடறதை நிறுத்தச் சொல்லுங்க! சில பேருக்கு அலர்ஜீனாலே கூட படை,சொரி,சிரங்கெல்லாம் வரும்.

சொரிமுத்து: நான் சொல்ல வந்தது என்னான்னா...

சேட்டை: அடுத்த பிரச்சினைக்குப் போங்க சார்! ஒரு பிரச்சினைக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கக் கூடாது.

சொரிமுத்து: நம்ம கிட்டே இருக்கிற ஆயுதங்களைப் பார்த்து சீனா பொறாமைப்படுதாம் சார்! இந்தப் பேப்பரிலே செய்தி போட்டிருக்கு பாருங்க!

சேட்டை: என்னய்யா இது? என்னவோ கன்னாபின்னான்னு எழுதி மேலே கோடு கோடாப் போட்டிருக்கு!

சொரிமுத்து: அது ஹிந்தி சார்! எழுத்துக்கு மேலே கோடுவரும்!

சேட்டை: முதல்லே ஹிந்தி எழுத்து சீர்திருத்தம் செய்யணும். உடனே அலஹாபாத்துலே ஒரு மாநாடுக்கு ஏற்பாடு பண்ணுங்க! தீபிகா படுகோன், கரீனா கபூர், கத்ரீனா கைஃப் எல்லாரோட டான்ஸும் அமர்க்களமா இருக்கணும்! நிறைய சரக்கு வாங்கி கங்கோத்ரியிலேயே ஊத்தி விட்டுருங்க! அப்படியே அது கங்கையோட கலந்து வந்திரும்; மக்களெல்லாம் மொண்டு மொண்டு குடிப்பாங்க சரியா?

சொரிமுத்து: சரி சார், அடுத்தது நிதி!

சேட்டை: யோவ், டெல்லிக்கு வந்தப்புறமும் எதுக்குய்யா அந்தப் பேரை ஞாபகப்படுத்தறே?

சொரிமுத்து: சார் நான் சொன்னது நிதியமைச்சகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைன்னு சொன்னேன்!

சேட்டை: சொல்லுங்க, என்ன பிரச்சினை?

சொரிமுத்து: நாடு முழுக்க பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே இருக்கு. என்ன சார் பண்ணலாம்?

சேட்டை: எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு டப்பா 'அயோடக்ஸ்' இலவசமாக் கொடுங்க, கொறஞ்சு போயிடும்.

சொரிமுத்து: சார், (அழாக்குறையாக) அடுத்தது உணவுப்பிரச்சினை சார்! இதை கவனமா கேளுங்க! மகாராஷ்டிரத்துலே திரும்ப பட்டினி சாவு ஆரம்பிச்சிடுச்சு; ஆனா, பஞ்சாபுலேயும் ஹரியானாவுலேயும் கோதுமையை வைக்க இடமில்லாம திறந்தவெளியிலே வச்சு பெருச்சாளிங்கெல்லாம் திங்குது சார்! என்ன சார் பண்ணலாம்?

சேட்டை: ஒண்ணு பண்ணுங்க, அதையெல்லாம் கூட்ஸ் வண்டியிலே ஏத்தி மகாராஷ்டிராவுக்கு அனுப்பிடுங்க

சொரிமுத்து: பெருச்சாளிங்களையா?

சேட்டை: யோவ், கோதுமையைச் சொன்னேன்யா! அங்கே பட்டினிச்சாவும் இருக்காது. இங்கே பெருச்சாளித் தொந்தரவும் இருக்காது.

சொரிமுத்து: ஆமா சார், இடமும் காலியாயிடும்; கிரிக்கெட் ஆடலாம். நம்ம மினிஸ்டர் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாரு. ஆனா, இவ்வளவு கோதுமையையும் கூட்ஸ் ரயில்லே அனுப்பறதுன்னா.....??

சேட்டை: ஏன்? ரயில் கிடைக்காதா?

சொரிமுத்து: ரயில் மந்திரி கிடைக்க மாட்டாங்க சார்! கெஞ்சிக்கூத்தாடி கல்கத்தாவிலேருந்து ஒருவாட்டி வந்து அட்டண்டன்ஸ்லே கையெழுத்துப் போடச் சொல்லியிருக்கோம் சார்.

சேட்டை: வரும்போது ஒரு கிலோ ரசகுல்லா வாங்கிட்டு வரச்சொல்லுங்க!

சொரிமுத்து: சார், ரசகுல்லான்னதும் தான் ஞாபகம் வருது! டெல்லியிலே காமன்வெல்த் விளையாட்டு நடக்குதில்லியா? துவக்க விழாவுக்காக குமிளியிலேருந்து பத்து யானையைக் கூட்டிட்டு வந்திருக்காங்க! அதுக்கு குலோப்ஜாமூனும் சமோசாவும் வாங்கின கணக்குலே ஒரு நூறு கோடி ரூபாய் உதைக்குது சார்!

சேட்டை: எங்க ஊருலே யானைக்கு அல்வாய் கொடுத்ததா எழுதுவாங்க, இது வடநாடில்லையா? அதான் குலாப்ஜாமூன், சமோசான்னு எழுதியிருக்காங்க! யானை சாப்பிடற சமோசான்னா பெருசாத் தான் இருக்கும். அதுனாலே நூறுகோடி ஒரு பெரிய மேட்டரில்லை!

சொரிமுத்து: அப்புறம் ஒரு நல்ல செய்தி சார்! இந்த காமன்வெல்த் விளையாட்டுக்காக நம்ம ஏ.ஆர்.ரஹமான் ஒரு பாட்டுப் போட்டிருக்காரு! அதை நீங்க இன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறீங்க!

சேட்டை: யோவ், உருப்படியா இருந்த டெல்லியை ஒரு இடம் விடாம தோண்டி மேடும் பள்ளமுமாக்கியாச்சு! பாட்டா கேட்குது? இந்த விளையாட்டு முடியுற வரைக்கும் எல்லா டெல்லிக்காரங்களையும் ’கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை; ஏத்தி விடய்யா...தூக்கி விடய்யா,’ன்னு பாடிட்டு இருக்கச் சொல்லுங்க! அது போதும்! அடுத்தது என்ன?

சொரிமுத்து: அணு ஆயுத ஒப்பந்தம் சார்! அதுலே புதுசா ஒரு ’கமா’ சேர்த்திட்டோம்னு எதிர்க்கட்சிங்க ஒரே அலப்பறை பண்ணிட்டிருக்காங்க சார்!

சேட்டை: இவ்வளவு தானே? ஒப்பந்தத்துலே கமா, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, அரைப்புள்ளி எல்லாத்தையும் எடுத்திருங்க. ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் இடைவெளி கூட இருக்கப்படாது. இவ்வளவு ஏன், ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் நடுவுலே கூட ஸ்பேஸ் இருக்கக் கூடாது.

சொரிமுத்து: ஐயோ, கசகசன்னு ஆயிருமே, யாருக்கும் புரியாதே?

சேட்டை: இப்போ மட்டும் எவனுக்கய்யா புரிஞ்சது? அடுத்த பிரச்சினைக்குப் போங்க!

சொரிமுத்து: பாகிஸ்தானுலே வெள்ளமுன்னு நிதியுதவி தர்றதாச் சொன்னோம்! அதை வேண்டாமுன்னு மூஞ்சியிலே அடிச்சா மாதிரி சொல்லிட்டாங்க சார்!

சேட்டை: இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? அதை அப்படியே தமிழ்நாட்டுக்கு அனுப்பிட்டாப் போச்சு! வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்களுக்கு ஆளுக்கு ஒரு நானோ கார் இலவசமாக் கொடுத்திரலாம்.

சொரிமுத்து: இந்த தெலுங்கானா பிரச்சினை பெரிய தலைவலியா இருக்கு? என்ன சார் பண்ணறது?

சேட்டை: இதெல்லாம் சிம்பிள் மேட்டர்யா! தெலுங்கானா கொடுக்கிறதா இருந்தா மேற்கு தெலுங்கானா, கிழக்கு தெலுங்கானான்னு ரெண்டாப் பிரிச்சுத்தான் கொடுப்போமுன்னு சொல்லுங்க! ஜனங்க ரெண்டாப் பிரிஞ்சுபோயி அடிச்சிப்பாங்க. ரெண்டு பத்தாது, நாலாப் பிரிச்சுக்கொடுன்னு சொல்லுவாங்க! தெலுங்கானாவை மறந்திடுவாங்க! நெக்ஸ்ட்..?

சொரிமுத்து: இந்த போபால் விவகாரத்துலே ஆண்டர்சனை தப்பிக்க விட்டது நரசிம்ம ராவ்னு சொன்னதுக்கப்புறமும் எதிர்க்கட்சிங்க குதிக்கிறாங்க! என்ன சார் பண்ணலாம்?

சேட்டை: அதையும் நம்பலேன்னா சந்திரகுப்த மௌரியர் தான் காரணம்னு சொல்லிடுங்க! அதுக்கும் மசியலேன்னா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யப்போறோம்னு சொல்லுங்க! அப்புறம் மாயாவதி, லாலு, அத்வானி முலாயம் எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்குவாங்க! போபாலைப் பத்திக் கேட்க நாதியே இருக்காது.

சொரிமுத்து: தமிழ்நாடு முதல்வர் ஒரு கடிதம் எழுதியிருக்காரு! அதாவது....

சேட்டை: இதுக்கு முந்தி எழுதின பதிலை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிருங்க!

சொரிமுத்து: சரி, இதுவரைக்கும் வெளியுறவு, பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறைன்னு பல பிரச்சினைகளை டக்கு டக்குன்னு சால்வ் பண்ணிட்டீங்க! இனிமே கொஞ்சம் கட்சி விவகாரத்தையும் பார்க்கலமா? தமிழ்நாட்டுலே கலைஞரும் செல்வியும் நேருலே சந்திக்கப்போறாங்களாம். கேள்விப்பட்டீங்களா?

சேட்டை: இப்படியெல்லாம் நடக்குமுன்னு ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நாஸ்ட்ரடாமஸ் எழுதியிருக்காரு! நீங்க கவலைப்படாதீங்க! அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா அவங்க வீட்டு கூர்க்காவைத் தான் அனுப்புவாங்க!

சொரிமுத்து: நம்ம கட்சி ஆளுங்கெல்லாம் தி.மு.கவைத் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க! என்ன பண்ணலாம்?

சேட்டை: இதையெல்லாம் உடனே கண்டிக்கணும்! இன்னிக்கு தி.மு.கவைத் திட்டுறவங்க, நாளைக்கு நம்மளையே திட்டினாலும் திட்டுவாங்க! ரோசப்படுறது நம்ம கட்சிக்கொள்கைக்கே விரோதமானதுன்னு கண்டிச்சு வையுங்க!

சொரிமுத்து: பரவாயில்லையே, ஒரு நாளிலே முடிக்க வேண்டிய பிரச்சினையெல்லாத்தையும் பத்து நிமிசத்துல முடிச்சிட்டீங்களே? நீங்க கிளம்பலாம் சார், உங்களை எங்கேயாவது ட்ராப் பண்ணச் சொல்லணுமா?

சேட்டை: ஆமாய்யா, என்னை ஐ.எஸ்.பி.டியிலே கொண்டு போய் விட்டிருங்க! ஹரித்வார் போகணும்!

சொரிமுத்து: ஆனாலும் உங்களுக்கு ரொம்ப கடவுள் பக்தி சார்!

சேட்டை: யோவ், கடவுள் பக்தியெல்லாம் ஒண்ணுமில்லே! ஹரித்வார்-லே தான் ஸ்ரேயா பொறந்தாங்க! சிவாஜி படம் ஹிட்டானா அவங்க வீட்டு வாசல்லே அங்கப்பிரதட்சிணம் பண்ணி, தேங்காய் உடைக்கிறதா வேண்டுதல். அதுக்கு இப்பத்தான் வேளை வந்திருக்கு!

பி.கு (அ) டிஸ்கி: மெய்யாலுமே இந்த மாசக்கடைசியிலே நான் டெல்லி போறேன்! அதைப் பத்தியே சிந்திச்சிடிருந்தேனா, அதோட விளைவு தான் இது!

13 comments:

பெசொவி said...

தூள்..................!

Unknown said...

//சொரிமுத்து: தமிழ்நாடு முதல்வர் ஒரு கடிதம் எழுதியிருக்காரு! அதாவது....

சேட்டை: இதுக்கு முந்தி எழுதின பதிலை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிருங்க!///

அண்ணே கலைஞர் கூட செராக்ஸ்தான் அனுபுராரோ...அதாவது கூட்டணி தர்மம்... ஹி..ஹி ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரிஷிகேஷ் ல யாரு பொறந்தான்னு கேட்டுட்டு அங்க போயிட்டு வாங்க ஹரித்வாரை விட ரிஷிகேஷ் தான் நல்லாருக்கு

Anonymous said...

இப்டியே போய்கிட்டு இருந்தா எப்டி??????
தலைவரே.. நம்ம பக்கமும் தலைய காட்டிட்டு போங்க..

அகல்விளக்கு said...

//என்னய்யா இது? என்னவோ கன்னாபின்னான்னு எழுதி மேலே கோடு கோடாப் போட்டிருக்கு!

அது ஹிந்தி சார்..//


ஹாஹாஹா...

பட்டைய கழட்டுறீங்க போங்க...

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல். படிச்சிட்டே வந்ததும் நினைச்சேன், தில்லி வந்துட்டு போயிட்டீங்களோன்னு - கடைசி பத்தி படிச்சதும்தான் விளங்கிச்சு!

வெங்கட்.

vasu balaji said...

:)). தூள்

முகுந்த்; Amma said...

சூப்பர் ஆ கலக்குரீங்க. பிரதமர் சேட்டை வாழ்க.

Chitra said...

கலக்கல்!

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் சேட்டை.

ஸ்ரீராம். said...

பிரதாமன்...சீ...பிரமாதம்.

பிரபாகர் said...

பிரதமன்! வித்தியாசமா இருக்கு நண்பா, அதிகமான அசத்தலான நக்கலுடன்!

பிரபாகர்...

ரிஷபன் said...

ரோசப்படுறது நம்ம கட்சிக்கொள்கைக்கே விரோதமானதுன்னு கண்டிச்சு வையுங்க!

எல்லா கட்சிக்கும் அதான் கொள்கை.