Monday, May 31, 2010

அரையிருட்டின் நிழல்!


"மாத்திரை போட்டுக்கிட்டீங்களா?" என்று கேட்டவாறே, பால்கனிக்கு வந்த சுஜா பிரம்பு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தபோது, சபரீசன் இருளில் சலனமற்று அமைதியாயிருந்த தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஓ!" என்று ஒற்றைவார்த்தையில் பதிலளித்தவன், தெருமுனையில் தண்ணீர்த்தொட்டியருகே மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

"மணி பதினொண்ணு ஆகப்போகுதா?" என்று கிண்டலாகச் சிரித்தாள் சுஜா. மனைவியை ஆமோதிப்பது போலத் தலையசைத்து விட்டு சபரீசன் அந்த வாலிபனையே வேடிக்கை பார்க்கத்தொடங்கினான்.

அந்த இளைஞன் யார், என்ன பெயர் என்று இருவருக்கும் தெரியாது. ஆனால், அண்மைக்காலமாக அவன் அந்தத் தெருவில் பலருக்குத் தெரிந்த முகமாகி விட்டிருந்தான். அவன் போன்ற இளைஞர்களைப் பெரும்பாலும் ஏதேனும் ஒரு இடுகுறிப்பெயராலோ, காரணப்பெயராலோ பொதுமைப்படுத்தி அழைத்து விடலாம். காரணம், அவனும் காதல் வயப்பட்டிருக்கிறான்! தினசரியும் தெருமுனையில் அவனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தவம் போலக் காத்திருக்கிறான். வாரா வாரம் நேரங்கள் மாறுபடுமேயன்றி வேறு வித்தியாசம் இல்லை! அவன் யாருக்காகக் காத்திருக்கிறானோ, அவள் இன்னும் சிறிது நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சிக்கொண்டு வருகிற ஒரு டெம்போ டிராவலரில் வந்து இறங்குவாள். தெருக்கோடியிலிருக்கும் வீட்டுக்கு செல்வதன் முன்னர், தனக்காக காத்திருக்கும் அவனருகே சென்று சிரிக்கச் சிரிக்கச் சில நிமிடங்கள் பேசுவாள். அடிக்கடி கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டு கைகளை உதறிக்கொண்டு நடக்க முயல்வாள். சில சமயங்களில் அவன் அவளது மணிக்கட்டைப் பிடித்து நிறுத்துவான். இறுதியில், அதற்கு மேலும் தாமதம் செய்ய விரும்பாத அந்தப் பெண் அவனுக்குக் கையசைத்து விட்டு வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்வாள். தெருக்கோடியின் இருட்டுக்குள் அவளது உருவம் மறையும் வரையிலும் அவளையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு, திருப்தியும் சலிப்பும் கலந்து வண்டியை உதைத்து முடுக்கித் திருப்பிக்கொண்டு அந்த இளைஞன் தெருவை விட்டு வெளியேறுவான்.

பின்னிரவு வரையிலும் தூங்காமல் மாடியில் காற்று வாங்குபவர்கள், காலாற நடப்பவர்கள் என்று பலர் இந்த சுவாரசியமான காட்சியை அனுதினமும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! இது அவர்களுக்கும் தெரிந்தேயிருக்கும். ஆனால், அவரவருக்கு அன்றைய இரவு தூங்க வேண்டுமே என்பது தொடங்கி ஆயிரம் கவலைகள் இருந்ததாலோ என்னமோ, எவரும் இதுகுறித்து வெளிப்படையாக புருவத்தைச் சுருக்கியது கிடையாது. நல்லது!

"ஒண்ணு கவனிச்சீங்களா? முன்னெல்லாம் அந்தப் பையன் அகால நேரத்துலே வரும்போது எல்லா நாய்ங்களும் குரைச்சுத் தெருவையே எழுப்பிரும்! இப்போ அதுங்களும் இவனை அக்ஸப்ட் பண்ணிருச்சு போலிருக்கு!" என்று சிரித்தாள் சுஜா.

"தினமும் பிஸ்கெட் போட்டு நைஸ் பண்ணி வச்சிருக்கான்," என்று மனைவிக்குப் புன்னகையோடு விளக்கினான் சபரீசன்.

"ஓ! நாய்க்குக் கூட லஞ்சமா?"

"காதல்லே லஞ்சம்கிற பேச்சுக்கே இடமில்லை," என்று திருத்தினான் சபரீசன். "ஒண்ணு பரிசா இருக்கும்; மிச்சமெல்லாம் தண்டச்செலவுதான்!"

"ஆனாலும், அவ ஷிஃப்டுலே வேலை பார்த்தாலும் பார்க்காம இருக்க முடியாதுங்கிறது கொஞ்சம் பித்துக்குளித்தனமா இல்லே?" என்று சீண்டினாள் சுஜா.

"இருந்திட்டுப்போகட்டுமே!" என்று சிரித்தான் சபரீசன். "எந்த விஷயத்தை முழுக்க முழுக்க அறிவார்த்தமாப் பார்த்திருக்கோம்? காதல் மட்டும் விதிவிலக்காயிருக்கணும்னு ஏன் எதிர்பார்க்கிறோம்?"

சுஜா அடுத்த கேள்வி எழுப்புவதற்குள்ளாகவே, பழக்கப்பட்டு விட்ட இன்ஜினின் ஓசை கட்டியம் கூற, அந்த டெம்போ டிராவலர் தெருவுக்குள்ளே நுழைந்தது. அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி அவளுக்காக நின்றபடி காத்திருந்தான். ’பை..குட்நைட்,’ என்று வண்டியிலிருந்த யார் யாருக்கோ விடையளித்து விட்டு அந்தப் பெண் கதவைச் சாத்தியதும், அந்த வண்டி சற்றே பின்னால் சென்று, பிறகு திரும்பி தெருவை விட்டு வெளியேறியது.

"சரி, இளம்ஜோடிகள் பேசட்டும்; நாம தூங்குவோம்," என்று எழுந்து கொள்ள முயன்ற சபரீசனைக் கையமர்த்தினாள் சுஜா.

"அங்கே பாருங்க!"

அந்தப் பெண் வண்டியிலிருந்து இறங்கிய வேகத்தில் வீட்டை நோக்கி விடுவிடுவென்று நடந்து போய்க்கொண்டிருந்தாள். அந்த இளைஞன் அவளை சிறிது தூரம் வரைக்கும் பின்தொடர்ந்து சென்று, அவள் தன்னைத் திரும்பியும் பாராமல் வீட்டை நோக்கிச் செல்வதைப் பார்த்ததும், தெருவின் மத்தியில் சோர்ந்து போய் சிலையாய் நின்றபடி அவள் இருட்டுக்குள்ளே மறைவதுவரை பார்த்துக்கொண்டே நின்றான்.

"என்னாச்சு, ஏதோ பிரச்சினை போலிருக்கே!"

"ஐயோ அவனைப் பாருங்க!" சுஜா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த இளைஞன் நடைபாதையில் உட்கார்ந்து கொண்டு, இரண்டுகைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டான்.

"அவன் என்ன தப்பு பண்ணினானோ?" சபரீசன் முணுமுணுத்தார்.

"அதுவும் சரிதான்!"

ஒரு சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்த அந்த இளைஞன் எழுந்து மோட்டார் சைக்கிளை நெருங்கினான். ஏறி அமர்ந்து கொண்டு, அவன் உதைத்த உதையில் அவனது விரக்தியும் ஆத்திரமும் வெளிப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரைவட்டமாகத் தெருவின் குறுக்கே வண்டியைத் திருப்பி, பின்னால் புகை சீறச் சீற அவன் தெருவிலிருந்து வெளியேறி மறைந்து போனான்.

பெயர் கூட தெரியாத அந்த இளைஞனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்ட பிணக்கின் காரணம் எதுவாயிருக்கும் என்று ஊகிக்கிற முயற்சியில் சுஜாவோ, சபரீசனோ ஈடுபட விரும்பவில்லை. அதை விட வலிமிகுந்த கேள்விக்குறிகள் அவர்களது வாசலில் காத்திருந்தன.

யாரோ யாருடனோ பேசிக்கொண்டிருந்தால் நமக்கென்ன என்று அலட்சியமாக அதை கவனிக்காமல் போகிற பக்குவம் சாமானியர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை. அப்படி கவனிப்பது, அநாகரீமாக இருந்தால், அந்தக் காட்சியை அரங்கேற்றுவதைக் காட்டிலும் அதை கவனித்துப் பார்ப்பதிலுள்ள அநாகரீகத்தின் அடர்த்தி சற்றே குறைவு தான் என்று இருவரும் நம்பினார்கள். அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல், அஜாக்கிரதை காரணமாகவோ, அலட்சியம் காரணமாகவோ தங்களது அந்தரங்கங்களை வெளிச்சப்படுத்துபவர்களுக்கு, மற்றவர்களை கவனிக்காமல் இருக்கச் சொல்கிற உரிமை இயல்பாகவே இருப்பதில்லை. ஒன்றைப் பார்க்கக் கூடாது என்ற நியதிகளை போதிக்கிறவர்கள், கவனமாயிருக்கக் கடமைப்பட்டவர்கள்.

சுஜாவும் சபரீசனும் பார்வையாளர்கள்! தங்களைச் சுற்றி நடப்பதை மட்டுமின்றி, ஒருவர் மற்றவருக்குமே சில சமயங்களில் பார்வையாளராக இருக்க நேர்ந்ததுண்டு! எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதில்லை! சில சமயங்களில் ஒருவருக்குத் தேள் கொட்டுகிறபோது, வலியைப் பகிர முடியாமல், பார்வையாளராய் வாளாவிருந்து பார்ப்பதை மட்டும் பழக்கப்படுத்திக் கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் அந்த இளம்ஜோடிகளின் கதைக்கும் அவர்கள் பார்வையாளர்களே!

அந்தக் காதல் கதையின் ஊடல் குறித்து, அடுத்த சில நாட்களுக்கு சுஜாவும், சபரீசனும் இரவின் அமைதியில், பால்கனியில் அமர்ந்து ஊகிக்க முயன்றதென்னவோ உண்மை தான்!

"யாரு மேலே தப்புன்னு தெரியலே! ஆனா, தினமும் அந்தப் பையன் வர்றான், காத்திருக்கிறான்! அவ திரும்பிக்கூடப் பார்க்காமப் போனதும் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருக்கான்! வண்டியைக் கிளப்பிக்கிட்டுப் போயிடறான்!"

சுஜாவுக்கு முன்னைக் காட்டிலும் இந்த காதல்கதையில் சுவாரசியமும், அவர்களின் மீது ஒரு தினுசான கரிசனமும் ஏற்பட்டிருப்பதை சபரீசன் உணர்ந்திருந்தார். பெண்மனம்! எளிதில் எவர் மீதும் அனுதாபப்பட்டு விடுகிறது!

"எனக்கென்னமோ இந்தச் சண்டை ரொம்ப நாள் நீடிக்காதுன்னு தோணுது," என்று ஆருடம் கூறினான் சபரீசன். "இந்த நாடகம் ரொம்ப நாள் நீடிக்காது!"

சபரீசன் சொன்னது பலித்தது! ஒரு சில நாட்களிலேயே பலித்தது!

அந்தப் பெண்ணுக்கு மீண்டும் இரவு ஷிஃப்ட்! வழக்கம் போல அன்றைய இரவும் டெம்போ டிராவலர் வந்தது. அவளும் தன் சக ஊழியர்களுக்கு விடையளித்து விட்டு கதவைச் சாத்தியதும், அவள் வந்த வண்டி அடுத்த ஒரு சில நொடிகளில் சென்று மறைந்தது. அவள் வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே, தெருமுனையில் மோட்டார் சைக்கிளின் சத்தம் கேட்டது.

"ஹீரோ வந்திட்டாரு போலிருக்கே!" என்று சிரித்தான் சபரீசன். ஆனால், இயல்புக்கு மாறாக, அன்று தெருநாய்கள் அந்த மோட்டார் சைக்கிளின் ஓசையைக் கேட்டுக் குரைத்தன. ஒன்று, இரண்டு, மூன்று என்று எங்கெங்கிருந்தோ நாய்கள் ஓடிவந்து அந்த இளைஞனைப் பார்த்துக் குரைத்தபடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன.

"சுஜா! இது அந்தப் பையன் இல்லே!" என்று சபரி கூறியதும் தான் சுஜாவுக்கும் புரிந்தது. அவளது மனதுக்குள் ஒரு விவரிக்க முடியாத சங்கடம் ஏற்பட்டது.

"அட ஆமாங்க! இது யாரு? புதுசா....!"

நாய்களின் குரைப்புகளை அலட்சியம் செய்தபடி அந்தப் பெண்ணும், அந்த இளைஞனும் தெருமுனையில் நின்றபடி பேசத்தொடங்கினார்கள். அவர்களது சம்பாஷனை பல நிமிடங்கள் நீடித்தன. இறுதியில் அந்தப் பெண் கைக்கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு, பதறியபடி கையசைத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டை நோக்கி விரையத் தொடங்கினாள். இவனும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி அவள் கண்களிலிருந்து மறையும்வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்னங்க இது? அந்தப் பையன் என்ன ஆனான்?"

"அதுக்கு பதில் சொல்ல எனக்குத் தெரியலே!" சபரீசன் விரக்தியாகச் சிரித்தார். "ஆனா, நாளையிலேருந்து நம்ம தெருநாய்ங்களுக்கு திரும்பவும் பிஸ்கெட் கிடைச்சாலும் கிடைக்கலாம்!"

Saturday, May 29, 2010

குற்றம்-நடந்தது ஏன்?

சேட்டை டிவியின் நேயர்களுக்கு அன்பான வணக்கங்கள்! இது சொம்பு மார்க் சோளப்பொறி ’குற்றம் நடந்தது ஏன்?’. இன்று நாம் என்னென்ன காணப்போகிறோம்?

தன் பெயருக்கு மிகப்பொருத்தமாக, நூறு கார்களைத் திருடிய கார்மேகம்!

கோட்டூர்புரத்தில் கொள்ளிவாய்ப் பிசாசுகள்!

கார்மேகம்! சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணையில் வசிப்பவர். வாகனங்களைத் திருடுவது இவர் தொழில்! பேபி மோரீஸ் தொடங்கி பி.எம்.டபுள்யூ வரை இவர் திருடாத வாகனமே இல்லை என்று சொல்லலாம். இவரது தொழிலில் ஏற்பட்ட அபாரமான அபிவிருத்தி காரணமாகத் தான் அரபு நாடுகளிலிருந்து பேரீச்சம்பழத்தின் இறக்குமதி அதிகமானது என்றும் ஒருசில பொருளாதார வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தொண்ணூற்றி ஒன்பது கார்களைத் திருடிய கார்மேகம், நூறாவது முயற்சியில் ஈடுபட்டபோது சட்டத்தின் இரும்புப்பிடியில் மாட்டி, சிறைத்தண்டனை அனுபவித்து அண்மையில் தான் விடுதலையாகியிருக்கிறார். தனது கடந்தகாலம் குறித்து கார்மேகம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

"பத்து வருசமா இந்தத் தொழிலிலே தான் இருந்தேனுங்க! இது வரைக்கும் எத்தனையோ வண்டியைத் திருடியிருக்கேனுங்க! ஒரு வாட்டி பேஸின் பிரிட்ஜ் லோகோ-ஷெட்டுலே நிறுத்தி வச்சிருந்த ரயில் இன்ஜினைக் கூடத் திருடியிருக்கேனுங்க! அதுக்கப்புறம் தான் பெரியமேட்டுலே பேரீச்சம்பழ மண்டி ஆரம்பிச்சேன்! சரி, நூறாவது திருட்டை கிராண்டாப் பண்ணனும்கிற ஆசை வந்திருச்சு! அதுனாலே நுங்கம்பாக்கத்துலே ஒரு வீட்டுலே நிறுத்தியிருந்த காரைத் திருடிட்டேனுங்க! இந்த வாட்டி போலீஸ் பிடிச்சிட்டாங்க!"

நூறாவது திருட்டு முயற்சியில் ஈடுபட்டபோது தான் கார்மேகத்தின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஆம், அவர் திருடியது ஒரு அரசியல்வாதியின் காரை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை! அதை அறிந்து கொண்டபோது மிகவும் தாமதமாகி விட்டிருந்ததால், தப்பிக்க வழியே இன்றி அவர் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக்கொண்டார்.

"எனக்கு வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போதே சந்தேகமா இருந்துச்சுங்க! ஜி.எஸ்.டி.ரோட்டுக்குப் போகணுமுன்னு ஆக்சிலேட்டரை அழுத்தினா வண்டி கேதீட்ரல் ரோட்டுக்குப் போயிருச்சுங்க! சரி, அப்படியே ரைட்டுலே வண்டியை ஒடிச்சு போயஸ் கார்டன் போயி ஆழ்வார்பேட்டை வழியா எஸ்கேப் ஆயிரலாமுன்னு பார்த்தா, வண்டி அதுவே லெஃப்டுலே திரும்பி கோபாலபுரத்துக்குள்ளே போயிருச்சுங்க! அப்புறமா பெட்ரோல் தீர்ற வரைக்கும் கோபாலபுரத்தையும் லாயிட்ஸ் ரோட்டுலேயும் சுத்திக்கிட்டே இருந்துச்சுங்க! சரி, பெட்ரோல் தீர்ந்ததுக்கப்புறமாவது நிக்குமான்னு பார்த்தா அது பாட்டுக்கு நிக்காம ஜெனரல் பாட்டர்ஸ் ரோட்டுக்குப் போயிருச்சு!"

அறியாமல் அரசியல்வாதியின் காரைத் திருடிய கார்மேகத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஜெனரல் பாட்டர்ஸ் சாலையிலிருந்து விசுக்கென்று திரும்பிய கார் பேகம் சாஹிப் தெருவுக்குள்ளே நுழைந்தது; சத்தியமூர்த்தி பவனை நெருங்க நெருங்க கார்மேகம் திருடிய கார் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து விட்டிருந்தது.

"லாயிட்ஸ் ரோடு, கோபாலபுரத்திலேயெல்லாம் ஒழுங்காத்தான் வண்டி ஓடிட்டிருந்ததுங்க! சத்தியமூர்த்தி பவன் பக்கம் போனதும் என்னாச்சுன்னு தெரியலே! காருக்கு காக்கா வலிப்பு வந்த மாதிரி உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு! இன்ஜினுக்கு ஜலதோஷம் வந்து, பானட்டுக்குள்ளேயிருந்து அச்சு அச்சுன்னு ஒரே தும்மல் சத்தம்! சைலன்ஸர் ஓன்னு அலறுதுங்க; ரேடியேட்டருலேருந்து தண்ணியாக் கொட்டுது! என்ன ஏதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னாலே வண்டி சத்தியமூர்த்தி பவனுக்குள்ளேயே போயிருச்சுங்க!"

கார்மேகத்தின் கதை அங்குதான் முடிந்தது. சத்தியமூர்த்தி பவனுக்குள்ளே அந்த கார் நுழைந்ததைப் பார்த்ததும் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். அதன்பின் நடந்தது என்ன? கார்மேகமே சொல்கிறார்:

"காம்பவுண்டுக்குள்ளே வண்டி நின்னதும் நிறைய பேரு வந்து என்னை வெளியே இழுத்துப்போட்டு மொத்து மொத்துன்னு மொத்த ஆரம்பிச்சாங்க! எனக்கு ஒண்ணுமே புரியலே; ஒரு வேளை இந்தக் கட்சி ஆபீஸிலே புதுசா யாரு வந்தாலும் இப்படித்தான் வரவேற்பாங்களோன்னு சந்தேகம் வந்திருச்சு ! ஆனாலும், முடிஞ்சவரையிலும் சத்தம் போட்டுப் பார்த்தேன். ’ஐயா, நான் டி.எம்.கே, ஏ.டி.எம்.கே இல்லை, காங்கிரஸ் ஆளுதான், என்னை விட்டுருங்க,’ன்னு கெஞ்சினேன். ஆனா நான் அவங்க கட்சிக்காரன்னு சொன்னதும் முன்னை விட பலமா அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஏன்னு கேட்டதுக்கு, ’நாங்க மத்த கட்சிக்காரனை என்னிக்குய்யா அடிச்சோம்?’னு கேட்டுக்கிட்டே அடிச்சாங்க! நான் கட்சிக்காரன்னு சொன்னது தப்புன்னு அப்புறம் தான் தெரிஞ்சது! நான் எந்த கோஷ்டின்னு தெரியாததுனாலே ஆளாளுக்கு எல்லா கோஷ்டிக்காரங்களும் ஆசை தீர மொத்துனாங்க! இதுக்குள்ளே போலீஸ் வந்திருச்சு! என்னைப் புடிச்சுக்கிட்டுப் போயி ஜெயிலிலே போட்டு என் உசிரைக் காப்பாத்துனாங்க! அவங்க நல்லாயிருக்கணும்!"

நூறாவது திருட்டு முயற்சியில் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான கார்மேகம் மனம்திருந்தி வாழ்கிறார். அது மட்டுமல்ல, தன்னைப் போன்ற திருடர்களுக்கு நிறைய அறிவுரையும் சொல்ல விரும்புகிறார்:

"நான் திருட்டை ஆரம்பிச்சபோது எனக்கொரு ஆசை இருந்தது. எப்படியாவது ஒரு வாட்டி ஆவடி ஃபேக்டரியிலேருந்து ஒரு டாங்கைத் திருடணுமுன்னு! ஆனா, என்னோட நூறாவது முயற்சியிலே தோத்துட்டதுனாலே நான் திருந்திட்டேன். இவ்வளவு தர்ம அடி வாங்குன அனுபவம் இருக்குறதுனாலே நானே ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டேன். இந்த மாசக்கடைசியிலே முசிறியிலே தேசீய மாநாடு நடத்தப்போறேன்! அனேகமா எல்லாரும் போஸ்டர் பாத்திருப்பீங்க! அதுலே கோட்டெல்லாம் போட்டுக்கிட்டு போஸ் கொடுத்திருக்கேன்! அந்த டை கூட என்னுது தான்; திருடினதுல்லே! அதுனாலே எல்லாரும் மாநாட்டுக்கு வந்திருங்க!"

"அப்புறம் இன்னொரு விஷயம்! தொண்ணூத்தி ஒம்பது தடவை திருடினவங்க, நூறாவதா ஏதாவது கோவில் உண்டியலை உடைச்சிட்டு அதுக்கப்புறம் தான் திருடப்போகணுமுன்னு இப்போத்தான் புரிஞ்சுக்கிட்டேன். இல்லாட்டா தெய்வகுத்தமாயிரும்! என் வாழ்க்கையிலேருந்து எல்லா திருடங்களும் பாடம் கத்துக்கணும்!"

நேற்று திருடன்; இன்று புதிய அரசியல்கட்சித் தலைவர! இது தான் கார்மேகம்!

ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தொடரும் சொம்பு மார்க் சோளப்பொறி "குற்றம்-நடந்தது ஏன்?"

வெல்கம் பேக் டு ’நடந்தது ஏன்?’

அண்மைக்காலமாக சென்னை கோட்டூர்புரத்தில் கொள்ளிவாய்ப்பிசாசுகளின் கொட்டம் அதிகரித்திருப்பதாகப் பொதுமக்கள் மிகுந்த பீதியை அடைந்திருக்கிறார்கள். இந்தப் பீதியின் காரணமாக அங்கு குடியிருக்கும் மக்கள் மட்டுமின்றி, காலம் காலமாக அங்கு வசித்துவரும் கொசுக்களும் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இது பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட்!

சென்னை கோட்டூர்புரம்! வெயில்காலத்தில் தார் பாலைவனமாகவும், மழைக்காலத்தில் இந்துமகாசமுத்திரமாகவும் காட்சியளிக்கும் பகுதி! இங்கு அண்மைக்காலமாக இரவில் கொள்ளிவாய்ப்பிசாசுகள் உலவுவதாக பொதுமக்கள் பரவலாகப் புகார் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பீதியின் காரணமாக, அங்கே வசிப்பவர்கள் ஒவ்வொரு இரவிலும் ஒரு கையில் டார்ச் லைட்டும் இன்னொரு கையில் தண்ணீர் பக்கெட்டுமாக அலைந்து திரிவதாகக் கூறுகிறார் பல்லாண்டுகளாய் அங்கே வசிக்கிற பலவேசம்.

பலவேசம்: "நான் பத்துவருஷமா இங்கே குடியிருக்கிறேன்! இப்பல்லாம் தினமும் ராத்திரியானா எல்லார் வீட்டு மொட்டைமாடியிலேயும் கொள்ளிவாய்ப்பிசாசுங்க கொட்டமடிக்குதுங்க! இங்கே நிறைய சனமெல்லாம் இருக்குறதுனாலே அதுங்கெல்லாம் பயந்துக்கிட்டு கீழே இறங்காம மேலேயே இருக்குதுன்னு வெத்தலை ஜோசியர் சொல்லுறாருங்கோ! நாங்களும் இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுங்களை விரட்டுறதுக்காக ஆந்திராவிலேருந்து மந்திரவாதி, கேரளாவிலேருந்து நம்பூதிரி, உள்ளூரிலேருந்து அரசியல்வாதின்னு எல்லாரையும் வரவழைச்சுப் பாத்திட்டோமுங்க! எதுக்கும் மசியாம அன்னாடம் ராத்திரியாச்சுதுன்னா மொட்டைமாடியிலே கொட்டமடிக்குதுங்க!"

இது குறித்து கோட்டூர்புரம் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

"பிசாசெல்ல்லாம் ஒண்ணுமில்லேங்க! இந்த ஏரியாவுலே அடிக்கடி மின்வெட்டு ஆவுதுன்னுறதுனாலே ஆம்பிளைங்கெல்லாம் மொட்டை மாடியிலேதான் தூங்குறாங்க! எல்லாரும் பொஞ்சாதியைப் பத்தின பயமேயில்லாம சிகரெட், பீடின்னு குடிக்குறாங்க! கீழே இருட்டுலே இருக்குறவங்களுக்கு அது கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தெரியுதுங்க! மத்தபடி நாங்க இருக்கும்போது எங்க ஜூரிஸ்டிக்சனிலே பிசாசெல்லாம் வரதுக்கு வாய்ப்பேயில்லீங்க!"

இதில் யார் சொல்வது உண்மை? உண்மையிலேயே பிசாசுகள் இருக்கின்றனவா? அல்லது பிசாசுகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லையென்று காவல்துறை மழுப்புகிறதா? இது குறித்து பொதுமக்கள் என்ன கருதுகிறார்கள்?

"இது கண்டிப்பா கொள்ளிவாய்ப் பிசாசு தானுங்க! மொட்டைமாடியிலே சிகரெட் புடிக்கிறாங்கங்கிறதெல்லாம் மூடநம்பிக்கைங்க! ஒருவேளை இந்த விஞ்ஞானயுகத்துலே பிசாசுங்க பீடி குடிக்குதோ என்னமோ? போலீஸ் பாத்துக்கிட்டு சும்மாயிருக்குதுங்க! அரசாங்கம் தான் ஏதாவது செய்யணும்!"

இந்த மர்ம முடிச்சு எப்போதும் அவிழும்?

இரவில் அச்சுறுத்துவது யார்? கொள்ளிவாய்ப் பிசாசா? கொள்ளிவாய்ப் புருஷன்களா?

மீண்டும் அடுத்த ’குற்றம்-நடந்தது ஏன்?’ நிகழ்ச்சியில் சந்திப்போமா?

வணக்கம் நேயர்களே!!

Tuesday, May 25, 2010

கு.மு.கழகம் உதயமானது!

டாஸ்மாக் மது விறபனை நிலையங்கள் மூலம் 2009-2010ம் ஆண்டில் ரூ.12,401.53 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளதாகவும், இதில் லாபமாகவே ரூ.2,500 கோடி கிடைத்துள்ளதாகவும் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பைப் படித்து (KMK) குடிமக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். இது குறித்து கட்சியின் மதுச்செயலாளர், மன்னிக்கவும்,பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஜின்வருமாறு, மன்னிக்கவும், பின்வருமாறு:

"தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை டாஸ்மாக் கழக நிர்வாகிகளைத் தாங்கொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பார் ஏலம், காலி பாட்டில் விற்பனை மூலம் ரூ.500 கோடி வருமானம் ஏற்பட்டுள்ளதாக அரசுக்குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், காலி அட்டைப்பெட்டிகள், பாட்டில் மூடிகள், பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவு விற்பனை மூலம் வசூலான சுமார் ரூ.29 கோடி குறித்து அரசு விபரம் தெரிவிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. டாஸ்மாக் கழகத் தொண்டர்களின் நல்வாழ்வுக்காக செலவிட வேண்டிய இத்தொகை இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதைக் கண்டித்து கட்சியின் துணைத்தலைவர் விஸ்கி வீரமுத்து ’ரா’வாய் அருந்துகிற போராட்டத்தை ராவோடு ராவாக ஆரம்பிக்கவுள்ளார். குடிமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு பீராதரவை, மன்னிக்கவும், பேராதரவை அளித்து அரசின் மெத்தனப்போக்கைக் கண்டிக்க வேண்டுமென்று பிராண்டிக்கேட்டுக் கொள்கிறோம், அதாவது, வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம்."

இதைத் தொடர்ந்து கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி நமது நிருபர் மந்தாரம்புதூர் மப்பண்ணனுக்கு அளித்த விபரமான பேட்டி இதோ:

கேள்வி: உங்கள் கோரிக்கை தான் என்ன? ஏன் இந்த புது இயக்கம்?

கி.கி.சாமி: கடந்த ஆறு வருடங்களாக ஒரு குவார்ட்டர் வாங்கினால், ஒரு வாட்டர் பாக்கெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை இன்றுவரை அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் என்ன பீருக்கா தண்ணீர் பாக்கெட் கேட்கிறோம்? இதைக் கூடவா நிறைவேற்றக் கூடாது?

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட குவார்ட்டர் வாங்கினால் தலா ஒரு மிக்சர் பாக்கெட்டோ, வறுத்தகடலையோ வழங்குவதோடு கண்டிப்பாக ஒரு ஊறுகாய்ப் பாக்கெட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. இதை வலியுறுத்தி நாடெங்கும் குடிமக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் நாளை காலை எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை டாஸ்மாக் கடைகளில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவார்கள்.

கேள்வி: இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவா கட்சி தொடங்கியிருக்கிறீர்கள்?

கி.கி.சாமி: அது மட்டுமல்ல! அண்மையில் எங்களது சங்கத்தின் முன்னாள் செயலாளர் மெக்டொவல் மேகநாதனை அவரது மனைவி பழஞ்செருப்பால் அடித்துப் படுகொலை செய்திருப்பதையறிந்து சங்கத்தின் உறுப்பினர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம்.

கேள்வி: இது தவிர கு.மு.க.தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மனு அளித்திருக்கிறீர்களாமே?

கி.கி.சாமி: ஆம்! எங்கள் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலே தினமும் கடமைதவறாமல் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் தினமும் தெருநாய்கள் துரத்துவதும் கடிப்பதும் வழக்கமாகி விட்டது. சென்ற மாதம் மட்டும் எங்களது உறுப்பினர்களில் 1234 பேரை நாய்கள் கடித்திருப்பதும், கடித்த நாய்களில் பெரும்பாலானவை அடுத்த அரைமணியில் பரிதாபமாக இறந்து போயிருப்பதையும் மக்கள் அறிவார்கள். எனவே, நாய்களிலிருந்து எங்களது கட்சி உறுப்பினர்களைக் காப்பாற்ற தினமும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் ஒரு நாய்வண்டியை நகராட்சிகள் நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு வேளை போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்!

கேள்வி: இதற்காக தனிப்படை அமைக்கச் சொல்லியிருக்கிறீர்களே?

கி.கி.சாமி: தனிப்படை கோரிக்கைக்கான காரணமே வேறு! பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் வைக்கக் கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் பாதாளச்சாக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். குடிபோதையில் எங்கள் உறுப்பினர்கள் அவசரத்தில் உள்ளே இறங்கிவிடுவதால் பலர் ஆந்திராவுக்கே சென்று விடுகிறார்கள். எனவே கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்.

கேள்வி: குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதால் மனைவியை அடித்து உதைக்கிற கணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனரே.

கி.கி.சாமி: இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு! 2008-2009-ல் எங்கள் உறுப்பினர்கள் மனைவிக்குக் கொடுத்த அடிகளின் எண்ணிக்கை 12,34,567. ஆனால் கடந்த ஆண்டில் இது கணிசமாகக் குறைந்து 12,33,456 ஆகியுள்ளது.

கேள்வி: இதற்குக் காரணம் என்ன?

கி.கி.சாமி: பலவருட அனுபவம் காரணமாக, எங்கள் உறுப்பினர்கள் வீட்டுக்குப் போய் மனைவியை அடிப்பதைக் காட்டிலும் கடையிலேயே யாரையாவது அடிக்கிற பழக்கத்தைக் கடைபிடிக்கத்தொடங்கி விட்டனர். ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு இருப்பதால் மனைவியை அடிப்பதை விடவும் இது உகந்த பழக்கமாகக் கருதப்படுகிறது.

கேள்வி: இப்போது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

கி.கி.சாமி: இது மிகப்பெரிய மோசடி! 2009-2010ம் ஆண்டில் மட்டும் சுமார் 123 கோடி ரூபாய்க்கு வெள்ளரிக்காய், கொய்யாக்காய்,மாங்காய் ஆகியவை விற்பனையாகியுள்ளன. எங்கள் கழகத்தொண்டர்களின் பேராதரவு காரணமாகத் தான் வெளிச்சந்தையில் இவற்றின் விலை ஏறியது என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள். மேலும் சென்ற ஆண்டில் மட்டும் 13,24,456 ஆம்லெட்டுகளும், 9,11,987 ஆப்பாயில்களும் அதிகப்படியாக விற்பனையாகியுள்ளன. இது தவிர நாடெங்கும் எண்ணூறு டன் எலுமிச்சங்காய் ஊறுகாயும், ஐநூற்றி எழுபது டன் மாங்காய் ஊறுகாயும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து அரசின் அறிக்கை குறிப்பிடாதது எங்களது சாதனையை இருட்டடிப்பு செய்வது போலிருக்கிறது.

கேள்வி: அண்மையில் தங்கள் கட்சியின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி நிதியமைச்சரைச் சென்று சந்தித்ததன் நோக்கம் என்ன?

கி.கி.சாமி: எங்கள் கட்சித் தொண்டர்கள் குடிப்பதற்காக எதையெதையோ விற்றும் அடமானம் வைத்தும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே ’வட்டியில்லா புட்டிக்கடன்,"வழங்க வேண்டுமென்று மக்ஜர் அளித்திருக்கிறோம்.

கேள்வி: உங்கள் கட்சியை ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

கி.கி.சாமி: இருக்கிறது! எங்கள் இயக்கத்தின் தூணாக இருந்த மொடக்குறிச்சி மொடாக்குடியன் அன்றுதான் டாஸ்மாக் கடையிலேயே தனது இறுதி மூச்சை விடுத்தார். இனிவரும் ஆண்டுகளில் அவரது நினைவு நாளன்று எங்கள் தொண்டர்கள் "பீர்ப்பந்தல்" அமைத்து பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்றைய தினத்தை அரசு விடுமுறையாக அறிவிப்பதோடு அவர் பெயரில் ஒரு தபால்தலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

கேள்வி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடக்கூடாது என்று கூட கோரிக்கை வைத்திருக்கிறீர்களே?

கி.கி.சாமி: ஆமாம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பது போலவே காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா போன்ற நாட்களிலும் கடைகளை மூடாமல் திறந்தே வைத்திருக்க வேண்டும். எங்கள் கட்சித்தொண்டர்கள் அந்த மாபெரும் மனிதர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டாமா?

கேள்வி: உங்கள் கழகத்துக்கென்று புதிய சமூக பொருளாதாரக்கொள்கை வேறு வைத்திருக்கிறீர்களே? அது பற்றி ஓரிரு வார்த்தைகள் கூற முடியுமா?

கி.கி.சாமி: அவசியம் கூறுகிறேன்! எங்களது இயகக்த்தின் வளர்ச்சி காரணமாக, போக்குவரத்துக் காவலர்களின் வருவாய் இரவு நேரங்களில் அதிகரித்திருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் தமிழகத்தில் நடைபெறும் விபத்துக்களில் 22 சதவிகித விபத்துக்கள் எங்களது வளர்ச்சியால் நடைபெறுகின்றன என்பதால் ஜனத்தொகையை கட்டுப்பாட்டில் வைப்பதில் நாங்கள் ஆற்றிவரும் பெரும் தொண்டை யாரும் மறுக்க முடியாது. மேலும் எங்களது இயக்கத்தின் இமாலய வளர்ச்சி காரணமாக குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், ஜோசியர்கள் ஆகியோரின் தொழிலில் வியக்கத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கட்சித்தொண்டர்களின் வீட்டுப் பெண்மணிகள் தங்களது பெரும்பாலான நேரத்தைக் கோவில்களிலும் குளங்களிலுமே செலவழிக்கிறார்கள் என்பதால் எங்களால் ஆன்மீகத்துக்கும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் மூலமாக விளக்க ஆவன செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: குடிப்பழக்கம் காரணமாக சேமிப்பு கரைந்து விடுவதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே? அது குறித்து உங்கள் கருத்தென்ன?

கி.கி.சாமி: இது குறித்து எங்கள் தொண்டர்களுக்கு விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும். மேலும், அலுவலகத்துக்குக் கொண்டு செல்வது போல டாஸ்மாக் கடைகளுக்கும் வீட்டிலிருந்தே தண்ணீரைக் கொண்டு போகத்தொடங்கினால் வாட்டர் பாக்கெட் செலவும் மிச்சமாகும். இது போன்ற ஒரு பத்து அம்சத்திட்டதை நாங்கள் நாடெங்கும் பிரசாரம் செய்ய்த்தொடங்கியிருக்கிறோம்.

கேள்வி: இறுதியாக ஒரு கேள்வி! உங்கள் கட்சி நிர்வாகிகளை நடைபெறவிருக்கிற செம்மொழி மாநாட்டில் பேச அழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம்?

கி.கி.சாமி: தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எங்களது கழகம் அயராது பாடுபட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 2004-2005-ல் புதிதாக 112 புதிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவே 2009-2010ல் 947 வார்த்தைகளாக உயர்ந்துள்ளன. இந்த வார்த்தைகளைத் தமிழ் அகராதியில் சேர்ப்பதோடு இது குறித்து ஆராய்வதற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ’டாஸ்மாக்காலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எங்களது அவா.

அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி மறுத்து விட்டார். இருந்தாலும், கு.மு.கவின் கட்சிக் கொள்கைகளை ஏற்று, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்று பெயர் சொல்ல விரும்பாத சில கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேட்டியின் போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமியும், இணைச்செயலாளார் நெப்போலியன் நெடுவளவனும் உடனிருந்தனர்.

Sunday, May 23, 2010

அந்த ஒரு விளக்கு மட்டும்....!

சற்றே சாய்ந்து உட்கார்ந்தால், ஜன்னல் வழியாய், அந்த வீட்டில், அந்த விளக்கு இன்னும் எரிவதைக் காண முடிகிறது. ஜன்னலுக்குப் பின்னே திரையிட்டிருந்தாலும், அதை ஊடுருவியபடி இன்னும் அந்த மஞ்சள் வெளிச்சம் தென்பட்டு மனதைப் பிசைகிறது. அந்த ஜன்னலும், திரையும் வெளிச்சத்தின் வீரியத்தின் முன்பு தோற்றிருக்கலாம். ஆனால், அந்த அறையின் நான்கு சுவர்களுக்குள்ளே விடைகளில்லாத பல வினாக்கள் முறியடிக்கப்பட்டு முடங்கிக்கிடக்கின்றன.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அது நிகழ்ந்தது. ஓய்வுநாளாகியிருக்க வேண்டிய ஒரு ஞாயிறு அது. சோம்பல் முறித்து ஜன்னல் வழியாக தெருவை நோட்டமிட்டபோது, எதிர்ப்புறத்து அடுக்கு மாடிக் குடியிருப்பின் வாயிலில் இயல்புக்கு மீறிய கூட்டம் சேர்ந்திருந்தது. எவர் முகத்திலும் சிரிப்பின் மெல்லிய சுவடும் புலப்படவில்லை. என்னவாயிருக்கும் என்று ஊகித்துக் குழம்ப விருப்பமின்றி, அவரவர் வேலைகளைக் கவனித்து விட்டு, ஒரு மணிநேரம் கழித்து கீழே இறங்கியபோது தான் விபரம் தெரிந்தது. திடுக்கிட்டோம்!

"அந்தப் பையனா? நேற்று இரவு கூட என்னோடு பேசிக்கொண்டிருந்தானே?"

"இது எப்படி நடந்தது? தற்கொலையாக இருக்குமோ?"

"அப்பா,அம்மா இருவரும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார்களே? என்ன பிரச்சினை புரியவில்லையே!"

"எதுவாயிருந்தாலென்ன, இருபத்தைந்து வயது என்ன சாகிற வயதா?"

"லவ் ஃபெயிலியரா இருக்குமோ?"

"அதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சு நிச்சயதார்த்தமும் பண்ணிட்டாங்களாமே!"

இவர்களின் விவாதப்பொருளான அந்த இளைஞனோடு எனக்குப் பழக்கமில்லையென்றாலும், அவ்வப்போது பார்த்திருக்கிறோம்; புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். பேசியதில்லை; என்னுடன் மட்டுமல்ல; அந்த இளைஞர் எவருடனும் பேசிப் பார்த்ததாக நினைவில்லை. ஆனால்....

அவனது பெற்றோர்களை அறிவேன்! தெலுங்கு பேசுபவர்கள்! அந்த இளைஞனின் அப்பாவின் கையில் ஆறாவது விரலாய் எப்போதும் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்! பெரும்பாலும் பெர்முடா, டி-ஷர்ட்டில் தான் வலம் வந்து கொண்டிருப்பார். அதே உடையுடன் அவர் முக்கிய சாலைகளில் மனைவியோடு நடந்து போய் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவ்வப்போது எங்கள் பகுதியில் மின்வெட்டு ஏற்படும்போதெல்லாம், இரவின் இருட்டில் கூடி நின்று அளவளாவியதுண்டு. சற்றே உடைந்து போன ஆங்கிலத்தில் தான் பேசுவார்.

இறந்து போனவன் அவர்களது ஒரே மகன்! ஒரே மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டிருந்தது. பட்டப்படிப்பை முடித்து, அந்த இளைஞனும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனம், ஆடம்பரமான கைபேசி, பெரும்பாலும் சரிவர ஷவரம் செய்யப்படாத முகம்- இவற்றையும் மீறி எங்கு பார்த்தாலும் பரிச்சயமாய்ப் புன்னகைக்கிற அந்த முகம்!

"குளிப்பதற்கு முன்னர் போய்ப் பார்த்து விட்டு வரலாமே?" யாரோ கேட்டார்கள்; யாரும் ’வேண்டாம்’ என்று சொல்லவில்லை. அதற்கு முன்பு வரை போயிராதபோதிலும், அன்று போகாமல் இருக்கக் கூடாது என்று உள்ளே நுழைந்தோம்.

இறந்து போயிருந்த இளைஞனின் சகோதரி நாற்காலியில் அமர்ந்திருந்தாள்; நிறைமாத கர்ப்பிணி! அம்மா சுவரோடு சுவராய் சாய்ந்தபடி எவருடனோ கைபேசியில் தெலுங்கில் என்ன நடந்தது என்பதைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பாவோ பார்த்துப் பழக்கப்பட்ட பெர்முடா, டி-ஷர்ட்டில் அறையின் ஒரு மூலையில் நின்றிருக்க, நட்ட நடுவே கம்பளி போன்ற போர்வையால் போர்த்தப்பட்டு, அந்த இளைஞனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. ஏதோ நெருடியது!

கண்கள் திறந்திருந்தன; வாய் பிளந்திருந்தது. ஒரு கை, ஒரு கால் மடக்கப்பட்ட நிலையில் உடல் இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது கழுத்தின் இடது பக்கத்தில் கட்டைவிரலளவுக்குக் கருகருவென்று நீளமாக ஒரு தடம் தெரிந்தது.

சிறிது நேரத்துக்குப் பின்னர் நாங்கள் வெளியேறியதும் எங்களில் பலருக்கு அந்த சந்தேகம் இருந்தது.

"இது இயற்கையான மரணமல்ல; தற்கொலை தான்! மாரடைப்பு வருகிற வயதா அவனுக்கு?"

"தற்கொலையென்றால், இறக்கும் முன்னர் அவன் தனது உடலை நகங்களால் பிறாண்டி விட்டுக்கொண்டிருப்பான்! கழுத்து நீண்டிருக்கும்! உடம்பிலிருந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறியிருக்கும்! ஒருவேளை மின்சாரம் தாக்கி இறந்திருப்பானோ? ஆனாலும், இது இயற்கை மரணம் என்று ஏன் சொல்ல வேண்டும்? போலீஸ், வழக்கு என்று பயந்து விட்டார்களோ?"

என்னவெல்லாமோ ஊகங்கள்! விவாதங்கள்! முடிவில் எல்லாரும் குழம்பித்தான் போயிருந்தோம்.

எங்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தெருவுக்குமே பலவிதமான சந்தேகங்கள்! அவற்றைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, அந்த இளைஞனின் அப்பா வீட்டை விட்டு வெளியே வந்தார். நாங்களெல்லாம் நிற்பதைப் பார்த்துக்கொண்டே, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு ஊதத்தொடங்கினார். அவரது முகத்தில் அதிகம் தென்பட்டது அதிர்ச்சியா? துயரமா? புரியவில்லை!

இப்படிக் கேட்பது மிகவும் குரூரம் தான்! ஆனாலும், ஒரு துயரச்சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்குச் சென்று வந்த எங்களுக்கு, அந்த இளைஞனின் பெற்றோர் கண்ணிலோ, சகோதரி கண்ணிலோ ஒரு துளி கண்ணீர் கூட காண முடியாதது புதிராக இருந்தது. ஆனால்....

அவ்வப்போது அந்த இளைஞன் அழைத்துக்கொண்டு வந்த, அந்த இளம்பெண் வந்ததும் காட்சி சற்றே மாறியது. இடைவிடாத கூச்சலும் அழுகுரலும்!

"நேற்று இரவு கூட பேசினியேடா! தூங்குறதுக்கு முன்னாடி கூட எஸ்.எம்.எஸ்.அனுப்பினியேடா! என்னடா நடந்தது? யாரு என்ன பண்ணினாங்கடா? என்ன சொன்னாங்கடா? ஏண்டா இப்படிப்பண்ணினே?"

மடேர் மடேரென்று அந்தப் பெண் முகத்திலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுத சத்தம் கேட்டு எல்லாருக்கும் வலித்தது. அதே சமயம் அவள் கேட்ட கேள்விகள் எங்களுக்குள்ளே ஆழமாக இறங்கின. அவளது கேள்விகளுக்கு பதில் என்ன?

சிறிது நேரத்தில் ஒரு அமரர் ஊர்தி வந்தது. அதிலிருந்து ஒரு குளிரூட்டும் பெட்டியும் வந்து இறங்கியது. உள்ளே போன அந்த ஓட்டுனரும் உதவியாளரும் சில நிமிடங்களிலேயே வெளியே வந்து ஏதோ ரகசியம் பேசிக்கொண்டனர். அன்றாடம் உயிரற்ற உடல்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிய அவர்களுக்கு, கண்டிப்பாக அது தற்கொலை என்று புரிந்திருக்காதா என்ன?

அவர்கள் எதையோ விவாதித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பிக்கொண்டு போன சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் வந்து நின்றது. அடுத்த பத்தாவது நிமிடமே மீண்டும் அந்த அமரர் ஊர்தி வந்து நின்றது. அந்த இளைஞனின் வாகனம் பிரேதப்பரிசோதனைக்காக, ஸ்டேன்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவல் கிடைத்த வாய்கள் அலறின!

"என்ன நெஞ்சழுத்தம் இந்தப் பொம்பளைக்கு! கதவைத் தட்டியும் திறக்கலேன்னதும் வெளியிலே போயி ஜன்னல் வழியாப் பார்த்திருக்கா! பையன் தூக்குலே தொங்கிட்டிருந்திருக்கான்! ஒரு சத்தம் கூட போடாம, புருசனையும் சேர்த்துக்கிட்டுக் கதவை உடைச்சு உள்ளே போயி, பொணத்தை இறக்கி, சுத்தம் பண்ணி யிருக்கிறா! அவன் போட்டிருந்த டிரெஸ்ஸையெல்லாம் சுத்தி வெளியிலே குப்பைத்தொட்டியிலே வீசிட்டு, புள்ளையை நடு ஹாலிலே படுக்கப்போட்டு, போர்வையாலே போர்த்தி ஊரையே ஏமாத்தப் பாத்திருக்கா! சீ, இவளெல்லாம் ஒரு அம்மாவா?"

கேட்பதற்கும் ஜீரணிப்பதற்கும் கடினமாக இருந்தது. ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அது தெரிந்து செய்ததா, தெரியாமல் செய்ததா?

அடுத்தடுத்து அந்த இளைஞனின் ஈமச்சடங்குகள் முடியும் வரையிலும், அதன் பின்னரும் கூட அடர்த்தியாகப் பல கேள்விகள் எழுப்பப் பட்டன.

"விடுங்கடா! அந்தப் பையனோ போயிட்டான்! அவங்களே புள்ளையைப் பறிகொடுத்த சோகத்துலே இருப்பாங்க! கடைசியிலே எல்லாத்தையும் முறைப்படி செஞ்சிட்டாங்க இல்லே? இதைப் பத்தியே பேசறதை நிறுத்திட்டு அடுத்த வேலையைக் கவனிப்போம்!"

மீண்டும், விடைகளைக் கண்டுபிடிக்க முடியாத இயலாமைக்கு சப்பைக்கட்டு கட்டுகிற அலுத்துப்போன அழுகுண்ணி சமாதானம்! அன்றாடமும் வாழ்க்கை முழுவதும் விடைகள் கிடைக்காமல் அபலைகளாய் நாதியற்றுக் கிடக்கிற கேள்விகளோடு, அன்று பிறந்த கேள்விகளும் ஐக்கியமாகின.

விடுமுறைக்காக ஊர் சென்றிருந்த நண்பர்கள் திரும்பி வந்ததும், விஷயம் கேள்விப்பட்டனர். துக்கம் விசாரிக்க செல்ல விரும்பினர். மறுநாள் மாலை, அவர்களில் ஒரு சிலரோடு மீண்டும் நானும் சென்றேன்.

க்தவு திறந்தேயிருந்தது! உள்ளே ’ஈ-டிவி’ ஓடிக்கொண்டிருக்க, தெலுங்குப்பட நாயகனும் நாயகியும் ஆடிக்கொண்டிருந்தனர். நாங்கள் உள்ளே சென்று, அமர்ந்து, உரையாடிய அந்த ஐந்து நிமிடங்களிலும் அந்தப் பெண்மணியின் கண்கள் தொலைக்காட்சிப் பெட்டியிலே நிலைகுத்தியிருந்தன. ஒலியின் அளவைக் கூடக் குறைக்கவில்லை.

பேசி விட்டு வெளியேறியபோது, தட்டித் தூங்க வைத்த கேள்விகள் நெட்டி முறித்துக் கொண்டு மீண்டும் கண்விழித்தன. சிறிது நேரம் கழித்து அந்த தம்பதியினர் வழக்கம் போல காற்று வாங்குவதற்காக நடந்து போவதைப் பார்த்தபோது குழப்பமும் மலைப்பும் அதிகரித்தது. பிறகு, அடுத்த நாள் முதல் எங்களது அன்றாட வாழ்க்கையின் வாடிக்கைகள் இழுத்த இழுப்புக்கு நாங்கள் செல்லத்தொடங்கினோம். அதன்பிறகு, இன்றுவரையிலும் அந்த தம்பதியை நான் பார்க்கவில்லை!

ஆனால், இரண்டொரு நாட்கள் கழித்து, அந்த அப்பா சுத்தமாக ஹேர்-கட் செய்து கொண்டு, பளபளவென்று ஷவரம் செய்து கொண்டு, தலை நிறைய பூவைத்திருந்த தன் மனைவியோடு கடைத்தெருவில் சென்று கொண்டிருந்ததைப் பார்த்ததாக இன்னொரு நண்பர் சொன்னார். இது எப்படி முடிகிறது, ஒரு பெற்றோரால்....?

வெளியூர் சென்று விட்டார்களாம்! ஆனால், மகன் தூக்கில் தொங்கிய அறையில் ஒரு மின்விளக்கை மட்டும் அணைக்காமல் விட்டுச் சென்றிருக்கின்றனர். ஒவ்வொரு இரவிலும், ஒவ்வொரு முறை எங்கள் ஜன்னலுக்கு வெளியே பார்க்கும்போதெல்லாம் அந்த ஜன்னலுக்குப் பின்னர் சில கேள்விகள் அழுது கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. அந்த இளைஞனின் காதலி கேட்ட வினாக்களும் அந்த அறைக்குள்ளே எங்கேயே திக்குமுக்காடிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

அந்த தம்பதியினர் திரும்பி வரும்போது, பகலில் வந்தால் நல்லது என்று படுகிறது! இரவில் வந்து இறங்கினால், அவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே, அந்த ஒற்றை மின்விளக்கின் சன்னமான ஜன்னல் வெளிச்சம் அவர்களை வரவேற்கக் கேள்விகளோடு காத்திருக்கின்றது.

பரீட்சைக்கு நேரமாச்சு.!

வாழ்க்கை என்பதே ஒரு தொடர்ச்சியான தேர்வன்றோ? இதில் வெற்றியும் வரும், தோல்வியும் வரும்! வெற்றி வரும்போது குதூகலம் அடைவதும், தோல்வி வரும்போதும் துவள்வதும் மனித இயல்பன்றோ?

ஐயையோ!

"நான் ஆதவன்"’ எழுதின,"ஒய் ப்ளட்?...சேம் ப்ளட்," இடுகையை என்னைத் தொடரச் சொன்னா, நான் என்ன இவ்வளவு சீரியஸா மரத்தடி மாமுனி மாதிரி பினாத்திட்டிருக்கேன்? அதுவும் வரிசைப்படி அஷீதாவும்."படிச்சு பார்த்தேன் ஏறவில்ல...,"-னு இடுகை போட்டதுக்கப்புறமும் நான் இதுலேயும் அரியர்ஸ் வைச்சா நல்லாவா இருக்கும்?

ஸ்டார்ட் மீஜிக்!

பரீட்சையாம், தேர்வாம்! என்ன அநியாயமய்யா இது? இதெல்லாம் தேவையா? கேட்டா, நமக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்குன்னு பார்க்கத்தான் பரீட்சைன்னு சொல்லுறாங்க! ஆனா, ஒவ்வொரு வாட்டியும் நமக்குத் தெரியாத கேள்வியாவே கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க! அந்தோ, இஃதென்ன கொடுமை!

ஒவ்வொரு வாட்டியும் பரீட்சை நெருங்கும்போது நான் எப்படிப் படிப்பேன்னு தெரியுமா? அதுக்குன்னு ஒரு திட்டமே போட்டு வச்சிருந்தேன். அதாவது, தினமும் ராத்திரி ஒரு காயினை எடுத்து, பூவா தலையா போட்டுப் பார்ப்பேன். பூ விழுந்தா தூங்கப்போயிடுவேன்; தலை விழுந்தா சினிமாவுக்குப் போயிடுவேன். ரெண்டுமே விழலேன்னா கண்டிப்பாப் படிக்கப்போயிடுவேன்! படிப்புன்னா எனக்கு அவ்வளவு ஈடுபாடு!

ஒவ்வொரு வாட்டியும் பரீட்சை வரும்போது எங்க வீட்டுலே பிள்ளையாருக்கு தேங்காய், ஐயனாருக்கு மஞ்சணை, முத்தாரம்மனுக்கு எலுமிச்சம்பழம், அனுமாருக்கு வெண்ணை-ன்னு வகைவகையா காணிக்கை! எனக்கு ஒண்ணும் கிடையாதான்னு கேட்கறீங்களா? அதெல்லாம் ரிசல்ட் வந்தப்புறம் விமர்சையா அர்ச்சனை பண்ணி கரெக்டா கற்பூரம் காட்டிருவாங்க! குறையே வைக்க மாட்டாங்க!

அவங்களுக்கு என் மேலேயும் என் படிப்பு மேலேயும் அவ்வளவு நம்பிக்கை! காரணம் இல்லாம இல்லை! இப்போ உதாரணத்துக்கு.....

விஞ்ஞானப் பாடம் நடத்திட்டிருந்த வாத்தியாரு, நல்ல தூக்கத்துலே என்னை திடீர்னு எழுப்பி விட்டு,"டேய், எடிசன், ஐன்ஸ்டீன், கிரஹாம் பெல் மூணு பேருக்கும் என்னடா ஒற்றுமை?"ன்னு கேட்டாருங்க!

"மூணு பேருமே செத்துப்போயிட்டாங்க,"ன்னு சொல்லிட்டேன். இதை ஒரு பெரிய புகாரா எடுத்துக்கிட்டு வாத்தியார் எங்கப்பா கிட்டே வந்து சொல்ல, எங்கப்பா என்னைத் திட்டு திட்டுன்னு திட்டிப்புட்டாரு! அத்தோட விட்டாரா? வாத்தியார் கிட்டே, "எங்க முன்னாலே ஒரே ஒரு வாட்டி அவனுக்கு சொல்லிக்கொடுங்க! அந்த மூணு பேருலே யாரு இன்னும் சாகலேன்னு அப்பவாச்சும் அவன் சொல்லுறானான்னு பார்ப்போம்,"ன்னுட்டாரு!

வாத்தியார் சைக்கிள்ளே வந்ததைக் கூட மறந்திட்டு ஓட்டமா ஓடிப்போயிட்டாரு! அதுக்கப்புறம் அவரை எங்க ஜில்லாவிலேயே யாரும் பார்க்கலியாம்! சைக்கிள் என்னாச்சுன்னா கேட்கறீங்க? ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்......!


ஆனா ஒண்ணு, அன்னிலேருந்து எங்கப்பா என் படிப்புலே தனி கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாரு! ஒவ்வொரு வாட்டியும் நான் பரீட்சை எழுதிட்டு வந்ததும் கயத்தாறு செக்-போஸ்ட் மாதிரி வாசல்லேயே என்னை வழிமறிச்சிருவாரு!

-டேய்! கணக்குப் பரீட்சை எப்படிடா எழுதினே?

-ஒரே ஒரு கணக்குத் தான் தப்பாப் போட்டுட்டேன்!

-நினைச்சேன்! படிச்சாத் தானே? சரி விடு, மொத்தம் எத்தனை கணக்கு கேட்டிருந்தாங்க!

-பதினைஞ்சு!

-பரவாயில்லே! மீதி பதினாலு கணக்கையாவது சரியாப் போட்டிருக்கியே!

-இல்லேப்பா! அதுலே ஒண்ணு கூட எனக்குத் தெரியலே; அதுனாலே எழுதவேயில்லை!

இனிமேல் உள்ளூர் சாமியை நம்பிப் புண்ணியமில்லேன்னு திருச்செந்தூர், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், நாங்குநேரின்னு அப்பா பஸ்-ஸ்டாண்டே கதின்னு கிடக்க ஆரம்பிச்சிட்டாரு! எங்கப்பா போக ஆரம்பிச்சதுக்கப்புறம் திருச்செந்தூரிலே மொட்டையடிக்கிறதுக்கு சீசன் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!

சுத்துப்பட்ட எட்டுப்பட்டியிலேயும் நாலெழுத்துப் படிச்சவங்க கிட்டேயெல்லாம் புலம்ப ஆரம்பிச்சாரு! அதுலே ஒருத்தர் என் கிட்டே வந்து,"நீ ஏன் பரீட்சைன்னா பயப்படுறே? அதையும் கிரிக்கெட், ஃபுட்பால் மாதிரி ஒரு விளையாட்டா நினைச்சுக்க!"ன்னு அட்வைஸ் பண்ணினாரு! என்ன ஆச்சரியம் பாருங்களேன்! அதுக்கப்புறம் எனக்கு கிரிக்கெட், ஃபுட்பாலுன்னாலே அலர்ஜீ ஆயிடுச்சு!

இந்தப் பெத்தவங்க கிட்டே என்ன குறைன்னா, நம்மளோட நியாயமான பிரச்சினையைக் கூட புரிஞ்சுக்க மாட்டாங்க! இப்படித்தான் ஒருவாட்டி ப்ராக்ரஸ்-ரிப்போர்ட்டை அப்பா கிட்டே நீட்டினேன்.

-ஏண்டா இங்கிலீஷ் பரீட்சையிலே ஜீரோ மார்க்?

-அன்னிக்கு ஆப்சண்ட்!

-பரீட்சையன்னிக்கு ஆப்சண்டா? வேறே எங்கேடா போனே?

-நான் பரீட்சைக்குத் தான் போனேன். என் ஃபிரண்டு தான் ஆப்சண்ட்! அவன் வந்திருந்தா நானும் பாசாயிருப்பேன்!

-சொந்தபுத்தியும் கிடையாது! சொல்புத்தியும் கிடையாது! எப்படித்தான் உருப்படப்போறியோ?

எவ்வளவு அபாண்டம் பாருங்க! சொந்தபுத்தி கிடையாதாம். என்னிக்காவது நான் வகுப்புலே வாத்தியார் கேட்குற கேள்விக்கு பதில் கொடுக்கிறதை வந்து பார்த்திருந்தாத் தெரியும்!

இப்படித்தான் இன்னொரு வரலாற்று வகுப்புலே என் வரலாறு பத்தி சரியாத் தெரியாம வாத்தியார் எழுப்பிக் கேள்வி கேட்டாரு.

-இங்கிலாந்தில் மன்னர்களுக்கும் ராணிகளுக்கும் எந்த இடத்தில் முடிசூட்டுவார்கள்?

-தலையிலே தான் சார்!

-நான் அதையா கேட்டேன்? பர்மிங்க்ஹாம் அரண்மனையிலே! சரி, இந்தக் கேள்விக்காவது சரியா பதில் சொல்லு!

-சரி சார்!

-மகேந்திரவர்ம பல்லவன் சிம்மாசனம் கிடைத்ததும் என்ன செய்தான்?

-அதுலே உட்கார்ந்தான் சார்!

-முதல்லே நீ உட்காரப்பா! இனிமேல் உன் கிட்டே கேள்வி கேட்டா என் பேரு அடைக்கோழி இல்லை....அதாவது...நயினார்சாமியில்லை...சே, வர வர நீங்க வச்ச பட்டப்பெயர் தான் என் வாயிலேயும் வருது!

ஆனா, எங்கம்மா அப்பா மாதிரியில்லை! ரொம்பப் பாசத்தோட என் கிட்டே பரிவாக் கேட்பாங்க!

"டேய், ஒருவாட்டியாவது நீ கிளாஸிலே முதல்லே வரணுண்டா! என் ஆசையை நிறைவேத்துவியா?"

"அம்மா! அதை நான் தினமும் நிறைவேத்திட்டிருக்கேம்மா! இப்பவும் பெல் அடிச்சா நான் தாம்மா கிளாசிலே முதல்லே வெளியே வருவேன்!"

ஆனா ஒரு விஷயத்துலே என்னை யாராலும் பீட் பண்ண முடியாது. என்னை மாதிரி 'நீட்’டா பரீட்சைப் பேப்பரை யாராலும் வச்சிருக்க முடியாது. எழுதினாத் தானே? சில சமயங்களிலே என்னோட ஆன்சர் பேப்பரையே அடுத்த பரீட்சைக்கு எக்ஸ்ட்ரா-பேப்பராக் கொடுக்கலாம். அவ்வளவு சுத்தமா ஒரு எழுத்துக் கூட எழுதாம இருக்கும்!

எது எப்படியிருந்தாலும், என் பெயர், வகுப்பு, பிரிவு, பாடம் இதையெல்லாம் நல்லா உருட்டி உருட்டி அழகா எழுதிடுவேன்! இதுவரைக்கும் எந்த வாத்தியாராலேயும் அதுலே தப்பே கண்டுபிடிக்க முடிஞ்சதில்லே தெரியுமா?

நான் மட்டும் தான் இவ்வளவு புத்திசாலியான்னு நினைக்காதீங்க! என் சினேகிதங்களும் அப்படித்தான்! அதுலே ஒருத்தன் கிட்டே வாத்தியாரு பொது அறிவு கேள்வி கேட்டாரு!

-சைக்கிளை யார் கண்டுபிடிச்சாங்க?
-ஐயையோ, என் சைக்கிள் எப்போ காணாமப் போச்சு?

பரீட்சைக்கு முந்தின நாள் நாங்கெல்லாம் 'குரூப் ஸ்டடி’ன்னு ஒண்ணு பண்ணுவோம்! ஆளுக்கு அரை லிட்டர் சுக்குக்காப்பியைக் குடிச்சுட்டு குறட்டை விட்டுத் தூங்கினவங்க உலகத்திலேயே நானும் என் சினேகிதங்களும் தான்!

எங்க நாலு பேருக்குள்ளே ஒரு அண்டர்-ஸ்டாண்டிங் இருந்தது. அதாவது எல்லா சப்ஜெக்டுக்கும் யாராவது ஒருத்தர் புஸ்தகம் வச்சிருந்தாப் போதும்! எக்ஸ்ட்ரா புத்தகம் இருந்தா அதை வித்து, நாராயணசாமி தியேட்டரிலே படம் பார்த்துருவோமில்லா? அப்படீன்னா பரீட்சைக்கு எப்படிப் படிப்போமுன்னு கேட்கறீங்களா? அதுக்குத் தான் குரூப் ஸ்டடி!

ஒருத்தன் வாசிக்கணும்; மத்தவங்க கேட்கணும்னு ஏற்பாடு! பிரச்சினை என்னான்னா, ஒருத்தன் வாசிக்கிறபோதே மத்தவனுங்க தூங்கிருவாங்க! அதுனாலே எல்லாரும் விழிப்புணர்ச்சியோட படிக்கிறதுக்காக நான் ஒரு ஐடியா பண்ணினேன். மொத்தம் அஞ்சு பேரு நாங்க! புத்தகத்தை சரியா அஞ்சு பகுதியாக் கிழிச்சு ஆளுக்கு ஒண்ணாக் கொடுத்திருவோம். ஒருத்தன் அவன் பகுதியைப் படிச்சிட்டு அடுத்தவனுக்குக் கொடுக்கணும்னு பேச்சு! ஆனா, கடைசிவரைக்கும் அந்த ஒரு தப்பை யாருமே பண்ணவேயில்லை!

மத்தவங்களெல்லாம் படிச்சுக் கிழிச்சாங்க; நாங்க கிழிச்சே படிச்சோம்!

இப்பவாச்சும் சேட்டை ஏன் உருப்படாமப் போயிட்டான்னு புரிஞ்சுதா? அப்படிப் புரியாதவங்களுக்கும் இந்த இடுகைக்கு சம்பந்தமேயில்லாம ஸ்ரேயா படம் போட்டதைப் பார்த்தா கண்டிப்பா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்! ஹிஹி!

இதை யார் யார் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, தாராளமாகத் தொடருங்கள்! :-) ரெடி, ஸ்டெடி...கோ....!

Friday, May 21, 2010

கடவுளைக் கண்டேன்!

"அஹம் பிரம்மாஸ்மி" இடுகை மூலம் முகிலன் அவர்களும், "நான்/கடவுள்" இடுகை மூலம் பிரபாகர் அவர்களும் கடவுள் குறித்த தங்களது தொடர்பதிவுக்கு என்னை அழைத்திருந்தனர். என்ன செய்யலாம்? ஒன்றே குலம்; ஒருவனே தெய்வம் என்று சொல்லி விடலாமா என்று ஒரு குயுக்தியான யோசனை தோன்றாமல் இல்லை. அப்படிச் சொன்னால், என்னைச் சுற்றியிருப்பவர்களை ஏமாற்றுவதோடு, அவர்களது பரந்த மனப்பான்மையை நானே குறைத்து மதிப்பீடு செய்வதாக ஆகி விடாதோ? இன்னும் ஒருவரது நம்பிக்கையை பெரும்பாலான மற்றவர் மதிக்கிற சமூகத்தில் இருந்து கொண்டு அதைச் சொல்வதா?

எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்று சவுகரியமாக ஒரு பொய் சொல்லித் தப்பித்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு நான் அலுவலகம் செல்லும்போது காளிகாம்பாள் கோவிலுக்குள்ளிருந்து யாரோ கைதட்டி அழைப்பது போல பிரமை ஏற்படலாம். இஷ்ட சித்தி விநாயகர் என்னைப் பார்த்து,'நீயும் அவ்வளவு தானா?’ என்று நக்கலாய்ச் சிரிப்பது போல ஒவ்வொரு நாளும் தம்புச்செட்டித் தெருவைக் கடக்கும்போதும் தோன்றலாம். பிறகு, ஒவ்வொரு முறை ஏதேனும் சஞ்சலம் ஏற்படுகிறபோதெல்லாம் நான் சொன்ன பொய்க்குக் கிடைத்த தண்டனையாய் இருக்குமோ என்று குழம்ப வேண்டியிருக்கும். அதனால், உண்மையைச் சொல்லி விட்டால் போயிற்று! எனக்குக் கடவுள் மீது அபாரமான நம்பிக்கையுண்டு!

எனது கடவுள் நம்பிக்கை, பிள்ளைப்பிராயத்தில் எனக்குக் கடவுள் மீது ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட ஒரு அதீதமான பயத்தின் தொடர்பரிமாணம் என்றும் கூறலாம். சாந்தமாய் புன்னகைக்கும் தெய்வங்களோடு, ஆக்கிரோஷமாக கையில் கொடுவாளுடன், முறுக்கு மீசையுடன் பிரம்மாண்டமாய் அமர்ந்து அச்சுறுத்திய கிராமத்து தெய்வங்களையும் வழிபட்டு வளர்ந்தவன் நான்! ஆனாலும் சிறுவயதிலிருந்தே பிள்ளையாருக்கும் எனக்கும் அடர்த்தியான நட்பு இருந்து வந்திருக்கிறது; இன்னும் அது தொடர்கிறது!

ஒரு விதத்தில் கிராமத்துத் திருவிழாக்கள் அந்த ஒரு சில நாட்களுக்குத் தந்த சுதந்திரம், அளித்த குதூகலம் இவற்றின் காரணமாக கடவுளின் மீது எனக்கு ஒரு அலாதியான சினேகிதமே ஏற்பட்டு விட்டது என்பதே உண்மை.

குறிப்பாக, கோவில் கொடைத்திருவிழாவும் முத்தாரம்மன் கோவில் திருவிழாவும்!

வெயில் கொளுத்துகிற தெருவெங்கும் லாரி லாரியாகக் கொண்டுவந்து குவிக்கப்படுகிற ஆற்றுமணலில் வீடு கட்டி விளையாடுவதிலிருந்து எங்கள் கொண்டாட்டங்கள் தொடங்கும். தென்னங்கீற்றுக்களாலும் மூங்கில்களாலும் தெருவை அடைத்துப் போடப்படும் பந்தலில் சிறார்களின் ராஜாங்கமும், பெரிசுகளின் சீட்டுக்கச்சேரியும் களைகட்டும். விடுமுறை மதியங்களில் அந்தப் பந்தலின் நிழலில் துண்டு விரித்துக் குறட்டை விடுகிறவர்களின் வயிறு உப்பியெழும்பித் தாழ்வதை அருகிலிருந்து சிரித்தவாறு பார்த்த நாட்கள் எத்தனை? அவர்கள் மீது எட்டுக்கால் பூச்சிகளையும் பிள்ளைப்பூச்சிகளையும் ஊர விட்டு ஓடிப்போய்ச் சிரித்த குறும்புக்கணங்களும் கணக்கிலடங்கா!

மாலையானதும் மணலில் நீர் தெளிக்கும் பொறுப்பு சிறுவர்,சிறுமியரிடம் பொதுவாக ஒப்படைக்கப்படும். வாளி வாளியாய் பொதுக்கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு வந்து போட்டி போட்டுக்கொண்டு மணலின் மீது நீர் தெளிப்பதும் எங்களது விளையாட்டுக்களில் ஒன்றாகவே இருந்து வந்தது. அதுவும் கடவுளுக்குச் செய்யும் சேவை என்று அறியாமலே செய்தோம்.

வண்ண வண்ணக் காகிதங்களைத் துண்டு துண்டாக்கி, சணல் கயிற்றில் கோர்த்து ஒட்டி, தெருவெங்கும் தோரணங்கள் கட்டியபோதும் அதுவும் கோவில்பணியென்று அறிந்து செய்ததில்லை. மாலையில் சிலம்பத்தின் இருமுனைகளிலும் துணிசுற்றிக் கொளுத்திய பந்தத்தைச் சுற்றிக்கொண்டு தெருவழியே சென்றபோதும் அது ஒரு வித வழிபாடு என்று அறிந்திருக்கவில்லை.

கொடிக்கால் நட்டு, திருவிழா தொடங்கியதும் ஊரே களைகட்டும். ஜவ்வு மிட்டாய், பலூன், ஓலைக்காற்றாடி, பஞ்சு மிட்டாய், பாயாஸ்கோப் என்று தெருவெங்கும் எங்களது கவனத்தையும் காசையும் கவருகிற விதவிதமான கவர்ச்சிகள்! மாலையில் தெருக்கூத்தும், இரவில் 16 MM திரையில் காண்பிக்கப்படும் பக்திப்படங்களும் ஊரையே குதூகலத்தில் ஆழ்த்தும்!

பட்டுப்பாவாடை,சட்டையணிந்து பால்குடம் ஏந்தி வரும் சிறுமிகளின் முகத்தில் தென்படும் சிரிப்பில் உண்மையிலேயே பால்வடியும்! கோவிலின் முகப்பில் கணக்கற்ற அடுப்புக்கள் ஏற்றப்பட்டு, படையலுக்காய் தயாரிக்கப்பட்ட பொங்கலை பெண்கள் குலவைச்சத்தத்தோடு கும்பிடும்போது, அவர்களின் நாக்குகள் ஆடும் நாட்டியத்தை ஆச்சரியத்துடன் கவனித்ததுண்டு.

திருவிழாவை முன்னிட்டு அகிலாண்டபுரம், கடம்பூர், கப்புலிங்கம்பட்டி, குப்பணாபுரம், தென்னம்பட்டி, வடக்குவந்தனம் என சுற்றுப்பட்ட பட்டிகளிலிருந்து வந்து வீடெங்கும் நிரம்பியிருக்கும் உறவினர்களால் ஒவ்வொரு வீடும் கலகலப்பாய்க் காட்சியளிக்கும். உறவுகளையும் நட்புக்களையும் கடவுள் பக்தி வளர்க்குமா? வளர்க்கும் என்பதே அனுபவரீதியாக நான் கண்ட உண்மை!

ஏனைய நாட்களில் நல்லெண்ணைப் பூச்சும், அழுக்குத் துண்டும் அணிந்திருக்கும் ஐயனாருக்கு திருவிழாவின் போது விதவிதமாய் அலங்காரங்கள்! நேரத்துக்கு ஒரு படையல்! காலை தொடங்கி நண்பகல் வரை தொடரும் அபிஷேகங்கள்! கோவிலின் வாசலில் அண்டாவில் கரைத்து வைத்திருக்கும் சந்தனத்தை அள்ளியள்ளி உடம்பெங்கும் பூசிக்கொண்டு வெயிலில் இதங்கண்ட நாட்கள் அவை!

இரவானால் ஊரே வண்ணவிளக்குகளில் ஜொலித்துக்கொண்டிருக்கும். வரிசையாய்க் கடைகளில் வளையல் தொடங்கி பொம்மைகள் வரை என்னென்னவோ விற்பனையாகிக்கொண்டிருக்கும். குச்சி ஐஸ் வண்டிகளே பத்து நின்றுகொண்டிருக்கும். மாங்காய்க்கீறலில் மிளகாய்த்தூளும், உப்பும் தடவி விற்கும் கடையை ஈ மொய்ப்பது போல நாங்கள் மொய்த்துக்கொண்டிருப்போம். உப்புத்தண்ணீரில் ஊறிய நெல்லிக்காயும், வெள்ளரிப்பிஞ்சும் இப்போது நினைத்தாலும் இனிக்கிறதே!

அதிகாலையில் "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்," என்று சீர்காழியின் வெண்கலக்குரல் ஊரைத் தட்டியெழுப்பும். ஆராதனைகள் முடிந்ததும் ஒரு மணி நேரத்துக்கு கமல்,ரஜினி படப்பாடல்களும் கேட்கலாம். படையல் விநியோகம் முடிந்ததும் ஒலிபெருக்கிகள் ஓயும்; கோவில் தொடங்கி தெருமுனை வரையிலும் எங்கு பார்த்தாலும் ஆளாளுக்கு அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பதைக் காண முடியும். மாலை நான்கு மணிக்கெல்லாம் வீரமணியின் ஐயப்ப பக்திப் பாடல்கள் ஆரம்பித்து விடும். பிறகு, அன்றைய மாலையில் ஏதேனும் நிகழ்ச்சி துவங்கும்வரைக்கும் ஒலிபெருக்கியின் சத்தம் ஓங்காரமாய் இசைத்துக்கொண்டிருக்கும்.

கரகாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம்! இவைகளைப் பற்றி விரிவாக எழுதினால், நிறுத்துவது கடினமாகி விடுமே!

வில்லுப்பாட்டு! ஆஹா, இந்த நகரத்து வாழ்க்கையில் நான் தவற விட்ட பல சின்னச் சின்ன சந்தோஷங்களில் அதுவும் ஒன்று.

"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட...ஆமா...வில்லினில் பாட...ஆமா...வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே....!"

காளியின் சூலம் அசுரர்களைக் கிழித்து வதம் செய்வதைப் பற்றி வில்லுப்பாட்டுக்கலைஞர் வேகமாக, வாத்தியங்கள் முழங்கப்பாடும்போது அம்மாவின் பக்கம் ஒடுங்கி அஞ்சியதுமுண்டு.

ஓங்காரி கையிருந்து புறப்பட்ட சூலமது
ஆங்கார அரக்கனை அழித்ததைப் பாரப்பா...

தேங்காயை உடைப்பது போலத்தான் சிரந்தனை
சுக்கல் சுக்கலெனத்தான் பொடிபட உடைத்தனள்....


ஆத்தா மீது பயம் அதிகரிக்கும்! வெள்ளிக்கண் வைத்துக்கொண்டு பார்த்திருக்கும் அம்மாவைப் பார்க்கும்போதும், அவள் கை சூலத்தையும், கதாயுதத்தையும் பார்க்கையில் அருகிலிருக்கும் அம்மாவே போதும் என்று தோன்றும். அதனினும், ஆடுகளையும் கோழிகளையும் பலியிடுகையில் அச்சம் மென்மேலும் அதிகரித்துக் கண்களை இறுக்கி மூடிக்கொள்ளத்தோன்றும். பரிவட்டம் அணிந்து கொண்டு கொடுவாளுடன் ஆடுகிற பூசாரியைக் கண்டதும் பயந்து போய் கூட்டத்திற்குப் பின்பக்கமாய்ப் ஒண்டிக்கொண்டு இருந்ததுமுண்டு.

அந்த அம்மாவின் கண்களையே இங்கும் மண்ணடியில் காளிகாம்பாளிடம் காணுகிறேன். "சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்!" என்று சூளுரைக்கும் வேல்விழிகள் கொண்ட காளிகாம்பாள்!

ஸர்வே ஜனா சுகினோ பவந்து!

இளம்வயதில் கைம்பெண்ணாகி, குழந்தைகளை வியர்வை சிந்தி வளர்த்து, ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்டாகச் சேர்ந்து இன்று மேலாளராகியிருக்கும் என் சகோதரியைப் போன்ற பெண்மணி சொன்னதை இன்றுவரை கடைபிடித்து வருகிறேன்.

"உனக்காக எதையும் கேட்காதே! ஸர்வே ஜனா சுகினோ பவந்து என்று சொல்! அம்மாவுக்கு எல்லாரும் பிள்ளைகள் தான்; அப்படிக் கேட்டால் தான் அவளுக்குப் பிடிக்கும்!"

ஸர்வே ஜனா சுகினோ பவந்து!

(இந்தத் தொடர் இடுகையைத் தொடர அனைவரையும் அழைக்கிறேன். )

குண்டக்க மண்டக்க!

வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டி.வியின் ’குண்டக்க..மண்டக்க’ நிகழ்ச்சி! இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆளுங்கட்சியைச் சேர்ந்த திரு. சுரண்டலூர் சுப்பாமணியும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த திரு.கொட்டாவிப்பாளையம் குருவப்பனும் வந்திருக்கிறார்கள். வணக்கம் திரு.சுப்பாமணி அவர்களே! வணக்கம் திரு.குருவப்பன் அவர்களே!

சுப்பாமணி: வணக்கம்!

குருவப்பன்: வணக்கம்!

சேட்டை: இன்று மாலை மத்திய போக்குவரத்துத் துறை செயலாளர் ஒரு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, இனிமேல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்கிற சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆளுங்கட்சிப் பிரதிநிதியாக இது குறித்து பொதுமக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சுப்பாமணி: இது வரவேற்கத்தக்க விஷயம்! நாங்கள் எங்களுக்காகவே மக்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்...மன்னிக்கவும்...மக்களுக்காகவே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் ஒவ்வொரு முறையும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி பெருந்தொகையை வசூலித்தால் எப்படி நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியும்?

சேட்டை: ஐயா! குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்! வெறும் முப்பது ரூபாய் தானே டோல்-கேட்டில் வசூலிக்கிறார்கள்? அதைக் கூடவா உங்களால் கொடுக்க முடியாது?

சுப்பாமணி: முப்பது ரூபாயா? மீது தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தி ஒன்பது காருக்கு யாரு காசு கொடுக்கிறது? பொதுவாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டால் பாத்-ரூம் தவிர வேறு எங்குமே தனியாகப் போக முடியாதல்லவா? ஒவ்வொரு வாட்டியும் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று கொடுத்தால் அப்புறம் சம்பாதிக்கிறதெல்லாம்...அதாவது, வாங்குற சம்பளம் எல்லாம் திரும்ப அரசாங்கத்துக்கே போயிடாதா?

சேட்டை: திரு.குருவப்பன் அவர்களே! எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

குருவப்பன்: இது அதிகார துஷ்பிரயோகம்! மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்! இதைக் கண்டித்து நாளை முதல் தமிழ்நாட்டின் எல்லா டோல்-கேட்டுகளின் முன்பும் எங்கள் கட்சித்தொண்டர்கள் கோல்கெட் பேஸ்ட்டால் பல்துலக்கி நாடுதழுவிய போராட்டத்தை மேற்கொள்வார்கள்.

சுப்பாமணி: சேட்டை! இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்தபோது, இதனால் பொதுமக்களின் வரிப்பணத்திற்கு இழப்பு ஏற்படாமல் இருக்க ஒரு யோசனை சொன்னோம். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்கினால் அவர்கள் டோல்-கேட்டில் பணம் கட்ட வேண்டிய அவசியமே இருக்காது என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், இந்தியாவில் அந்த அளவு எண்ணிக்கையில் ஹெலிகாப்டர் டிரைவர்களும் ஹெலிகாப்டர் கிளீனர்களும் கிடையாது என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

குருவப்பன்: டிரைவர் இல்லாவிட்டால் என்ன? எல்லா ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக்கொள்ளலாமே?

சுப்பாமணி: முதலில் நீங்கள் கற்றுக்கொள்வீர்களா குருவப்பன்? உங்கள் கட்சிக்காரர் ஹெலிகாப்டர் ஓட்டப் பயிற்சி பெற்றாரே, என்ன நடந்தது?

சேட்டை: என்ன நடந்தது?

சுப்பாமணி: ஹெலிகாப்டர் ஆகாயத்தில் பறந்தபோது, ’ரொம்பக் குளுருது,’ன்னு ஹெலிகாப்டர் மேலே சுத்திக்கிட்டிருந்த ஃபேனை ஆஃப் செய்து விட்டார்!

குருவப்பன்: இது அப்பட்டமான அவதூறு! மத்திய அரசு மலிவாய்க் கிடைக்கிறது என்று யூகோஸ்லாவியாவிலிருந்து ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்து விட்டார்கள். அதில் மேலே போக ஒரு பொத்தான், வலது பக்கம் போக ஒரு பொத்தான், இடது பக்கம் போக ஒரு பொத்தான் என்று மொத்தமே மூன்று பொத்தான்கள் தானிருந்தன. கீழே இறங்குவதற்குப் பொத்தானே இல்லை! ஏன் என்று கேட்டால், கமிஷன் தொகை அதிகமாகக் கொடுத்துக் கட்டுப்படியாகததால் அந்த ஒரு பொத்தானை மட்டும் வைக்காமல் விட்டு விட்டோம் என்று சொல்லி விட்டார்கள். பரங்கிப்பேட்டையிலிருந்து பறந்த எங்களது கட்சிக்காரர் இறங்கத் தெரியாமல் பாராமுலா வரைக்கும் போய்விட்டார்! இனிமேல் அவரை பாகிஸ்தான்காரர்கள் இறக்கினால் தான் உண்டு.

சேட்டை: திரு.குருவப்பன்! இது போன்ற விஷயங்களைப் பற்றி ஆளுநரிடம் முறைப்படி புகார் கொடுக்காமல் தினசரி ஏன் போராட்டங்களிலேயே ஈடுபடுகிறீர்கள்? அண்மையில் கூட தேனாம்பேட்டை சிக்னல் அருகே உங்கள் தலைமையிலே தொண்டர்கள் தீக்குளிக்கப்போவதாக பரபரப்பை ஏற்படுத்தினீர்களே?

சுப்பாமணி: அதெல்லாம் அவர்களது நாடகம்! இவர்கள் தீக்குளிப்பதாகச் சொன்னதும் சாலையில் போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது! பொதுமக்கள் அவரவர் வாகனங்களிலிருந்த பெட்ரோலைக் காலி செய்து பாட்டிலில் நிரப்பி இவர்களிடம் கொடுப்பதற்குள்ளாகவே எதிர்க்கட்சித்தொண்டர்கள் "போராட்டம் வெற்றி!" என்று கோஷம் போட்டுக்கொண்டு தலைதெறிக்க ஓடி விட்டார்கள்!

சேட்டை: விவாதம் திசைதிரும்புகிறது! சுப்பாமணி அவர்களே! அரசாங்க கஜானாவுக்கு முப்பது ரூபாய் கூட கொடுக்க விரும்பாத அரசியல்வாதிகள் என்று மக்கள் குற்றம் சாட்ட மாட்டார்களா?

சுப்பாமணி: இது தவறான கருத்து! மக்களுக்காக நாங்கள் எவ்வளவு வேண்டுமானலும் செலவழிக்கத் தயார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? சந்தேகமிருந்தால் அடுத்த இடைத்தேர்தலின் போது அதை மீண்டும் நிரூபித்துக்காட்டுகிறோம். எங்களது சவாலை சந்திக்க எதிர்க்கட்சிகள் தயாரா என்று சூளுரை விடுகிறேன்.

குருவப்பன்: மிகவும் குறுகிய கண்ணோட்டத்தோடு நிறைவேற்றப்பட்ட கோரிக்கை இது! எங்கள் வசம் வாகனங்கள் அதிகமில்லை என்பதற்காகவே திட்டமிட்டு இப்படியொரு சதித்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அடுத்த முறை எங்களது ஆட்சி மலர்ந்தால் இதை நாங்கள் கண்டிப்பாக மாற்றியமைப்போம்.

சேட்டை: எப்படி? மீண்டும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் டோல்-கேட்டில் பணம் செலுத்த வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றுவீர்களா?

குருவப்பன்: இல்லவே இல்லை! சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளித்தால் மட்டும் போதாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் பிரதிநிதிகளுக்கு இலவசமாக பெட்ரோலும் டீசலும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சுப்பாமணி: நீங்கள் இப்படி ஏறுக்கு மாறாக கோரிக்கை வைப்பீர்கள் என்று தெரிந்து தான், மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம்.

குருவப்பன்: நீங்கள் கோரிக்கை தானே வைப்பீர்கள்? நாங்கள் மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு சுங்கவரி, கலால்வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி,ஜனவரி, பிப்ருவரி, முகவரி போன்ற அனைத்திலிருமிருந்து விலக்கு வேண்டுமென்று நாடுதழுவிய போராட்டம் நடத்துவோம்.

சுப்பாமணி: நீங்கள் வரிவிலக்கு மட்டும் தானே கேட்பீர்கள்? நாங்கள் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பி.எம்.டபூள்யூ, டயோட்டா, மிட்சுபிஷி,ஹூண்டாய், ஹோண்டா போன்ற வாகனங்களையே இலவசமாக வழங்கக்கோரி விட்டோம்.

சேட்டை: என்னது, எல்லா அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் இலவசமாக கார் கொடுப்பதா? பொதுமக்கள் இனிமேல் மாட்டுவண்டியில் போக வேண்டியது தானா?

குருவப்பன்: சேட்டை! கட்சி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. பேசிமுடித்து விட்டு வருகிறேன்.

சேட்டை: சரி, பேசுங்கள்! சுப்பாமணி அவர்களே! இப்படியே பணமே செலுத்தாமல் இலவசமாக எல்லாம் நடந்தால் கஜானா காலியாகி விடாதா?

சுப்பாமணி: நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்லவா? மக்கள் மட்டும் எல்லாம் இலவசமாய் பெறலாம். நாங்கள் பெறக்கூடாதா?

குருவப்பன்: சரியாகச் சொன்னீர்கள் சுப்பாமணி!

சேட்டை: என்னது, எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சியை ஆதரிக்கிறீர்கள்?

குருவப்பன்: யார் எதிர்க்கட்சி? நான் போட்டிருக்கிற சட்டையில் ஒரு பொத்தான் இல்லையாம். அதனால் கட்சிவிரோதச் செயல்பாட்டுக்காக என்னை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக இப்பொது தான் போன் வந்தது. சுப்பாமணி அண்ணே, போகும்போது அப்படியே என்னையும் உங்க கட்சிக்குக் கூட்டிக்கிட்டு போறீங்களா?

சுப்பாமணி: வாங்க வாங்க! ஆனா, என் தொண்டர்கள் நிறைய பேரு காத்திட்டிருக்காங்க! நீங்க உங்க வண்டியிலேயே பின்னாலேயே வர்றீங்களா?

குருவப்பன்: அதனாலென்ன அண்ணே, நான் பாட்டுக்கு டிக்கியிலே உட்கார்ந்து கிட்டு வர்றேன். நம்ம கட்சி அலுவலகம் வரைக்கும் தானே? ஹிஹி!

சேட்டை: முடிவா இந்தப் பிரச்சினையைப் பத்தி என்ன சொல்றீங்க குருவப்பன் அவர்களே?

குருவப்பன்: இது விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரம்! மக்களாட்சியிலே மக்களுக்காக சேவை செய்கிற மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களாகக் கொடுக்கிற சலுகையை மக்கள் விரோத சக்திகள் எதிர்ப்பது மக்களின் மன்தை நோகடிக்கும் செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்.

சேட்டை: சுத்தமாப் புரியலே!

சுப்பாமணி: குருவப்பன், நல்லாப் பேசினீங்க! இனிமே நாம ரெண்டு பேரும் நகமும் சதையுமா, கண்ணும் இமையுமா, காரும் ஸ்டெப்னியுமா பிரியாம இருப்போம். சேட்டை, பேட்டியை முடிச்சிட்டு வந்து டிக்கியைத் திறந்து விடு! அண்ணனைக் கூட்டிக்கிட்டுப்போகணும்.

Tuesday, May 18, 2010

பொறுத்தது போதும்! பொங்கி எழுது!!

"ஹலோ! யாருங்க?"

"மேடம்! என் பேரு சேட்டைக்காரன்! சப்பைமூக்கன் வீட்டுலே இருக்காருங்களா?"

"யாருய்யா அது மரியாதையில்லாமப் பேசுறது? உங்களுக்கு எந்த நம்பர் வேணும்?" என்று சீறினார் அந்தப் பெண்மணி.

"மேடம், கோவிச்சுக்காதீங்க! பிரபல வலைப்பதிவாளர் சப்பைமூக்கன் வீடு தானுங்களே?" என்று மீண்டும் மிகவும் பணிவாய்க் கேட்டேன்.

"என்னது? வலைப்பதிவா? சரிதான், ஆன்லைன் ஷேர்-மார்க்கெட் பிசினஸ் பண்ணறேன்னு இந்த மனிசன் இதைத்தான் பண்ணிட்டிருக்காரா? வரட்டும், உண்மையிலேயே அவரு மூக்கை சப்பையாக்கிடறேன்," என்று போனைப் படக்கென்று வைத்தார் அந்தப் பெண்மணி.

ஐயையோ, என் அபிமான வலைப்பதிவாளரை மனைவியிடம் சிக்க வைத்து விட்டேனே என்ற குற்ற உணர்ச்சியோடு யோசித்துக்கொண்டிருந்தபோதே, சிறிது நேரம் கழித்து சப்பைமூக்கனிடமிருந்து போன் வந்தது.

"சேட்டை, எதுக்குய்யா வீட்டுக்கெல்லாம் போன் பண்ணுறே? அப்படியென்ன தலைபோற சங்கதி?" என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது கூடவே மளார் மளாரென்று ரீ-ரிக்கார்டிங் சத்தமும் சேர்ந்தே கேட்டது.

"அண்ணே, ஒண்ணும் அவசரமில்லை! அண்ணி கவனிச்சு முடிச்சதுக்கப்புறம் அயோடக்ஸெல்லாம் தடவிட்டு சாவகாசமா போன் பண்ணுங்க; நான் வெயிட் பண்ணுறேன்," என்று அனுதாபத்துடன் சொன்னேன்.

"அட நீ வேறே? பக்கத்து வீட்டுலே புதுசா குடிவந்திருக்கிறவங்க சுவத்துலே ஆணி அடிச்சிட்டிருக்காங்கய்யா! நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லை; விஷயத்தைச் சொல்லு!" என்று சலிப்புடன் கூறினார் சப்பைமூக்கன்.

"அண்ணே? இந்த பார்வதி ஓமனக்குட்டன் என்ன சொல்லியிருக்காங்கன்னு படிச்சீங்களா?" என்று குரல் தழுதழுக்கக் கேட்டேன். "பிரபுதேவா- நயன்தாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் 'பலே' ஆதரவு!" படிச்சீங்களா இல்லியா?"

"யாருய்யா பார்வதி? பேரே கேள்விப்பட்டதில்லையே?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டார் சப்பைமூக்கன்.

"உலக அழகிப்போட்டியிலே கலந்துக்கிட்டவரு அண்ணே, இப்போ ஏதோ சினிமாவுலே கூட நடிக்கிறாராம். நடிகைங்க ஏற்கனவே திருமணமான ஆண்களைத் திருமணம் செய்தால் தப்பில்லேன்னு சொல்லியிருக்காங்க!"

"சேட்டை, அவங்க போன் நம்பர், அட்ரஸ் தெரியுமா?" என்று உற்சாகமாகக் கேட்ட சப்பைமூக்கன் மறுகணமே "ஐயோ," என்று அலறினார்.

"என்னண்ணே, பக்கத்து வீட்டுலே ஆணியடிச்சா நீங்க ஏன் ஐயோன்னு கத்தறீங்க?" நான் பதறினேன்.

"அது ஒண்ணுமில்லே சேட்டை! நான் சுவத்தோட சாய்ஞ்சு உட்கார்ந்திருந்தேனா, அவங்க அந்தப் பக்கம் அடிச்ச ஆணி இந்தப் பக்கமா வந்து முதுகுலே குத்திருச்சு! அதான் அலறிட்டேன்." என்று சப்பைமூக்கன் பதிலளித்தாலும் எனக்கென்னமோ நம்பிக்கையில்லை.

"அடடா, இரத்தம் வரப்போகுதண்ணே!" அக்கறையோடு சொன்னேன்.

"இரத்தமா? ஊஹும், எத்தனை வருஷமா அடிச்சிட்டிருக்காங்க? ஒருவாட்டி கூட இரத்தம் வந்ததே கிடையாது! நான் பாட்டுக்கு ஐயோன்னு கத்திட்டே கேட்குறேன்; நீ பாட்டுக்கு மேட்டரைச் சொல்லு சரியா?" என்று பேசுவதற்கே சற்றுத் திணறியபடி கூறினார் சப்பைமூக்கன்.

"பார்வதி என்ன சொல்றாங்க தெரியுமா? கணவர் இன்னொரு பெண்ணைக் காதலிப்பது மனைவிக்குப் பிடிக்கலேன்னா பிரிந்து போக வேண்டியதுதானேன்னு கேட்கிறாங்க அண்ணே!" என்று குண்டைத் தூக்கிப்போட்டேன்.

"சரியாத்தானே சொல்லியிருக்காங்க!" என்று கூவிய சப்பைமூக்கன் உடனே,"ஐயோ, பலமா விழுந்திருச்சே!" என்று அலறினார்.

"அண்ணே! ஒண்ணு நான் பேசறேன்; இல்லாட்டி அவங்க ஆணி அடிக்கட்டும்! என் கான்சன்ட்ரேஷன் கெடுதில்லே?" என்று கோபமாகச் சொன்னேன்.

"நீ பாட்டுக்குப் பேசு சேட்டை," என்று பதிலளித்தார் சப்பைமூக்கன். "எவ்வளவு அடிவிழுந்தாலும் என் கான்சன்ட்ரேஷன் மட்டும் கெடவே கெடாது! என் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி உனக்குத் தெரியாது."

"உங்க இஷ்டம்! நீங்க ரொம்ப அனுபவசாலியான பதிவர்! அந்தப் பொண்ணு இப்படியொரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறதைக் கண்டிச்சு ஒரு இடுகை போடுங்கண்ணே!" என்று உசுப்பி விட்டேன்.

"என்னய்யா இது? இன்னும் ஒரு படத்துலே கூட நடிக்காத ஒரு நடிகை ஏதோ சொல்லிட்டா அதுக்கெல்லாமா இடுகை போடுறது? அதுவும் இந்த பிரபுதேவா-நயன்தாரா மேட்டர் ரொம்பப் புளிச்சுப்போன சப்ஜெக்ட்டாச்சேய்யா! வேறே யாராவது அரசியல் கட்சியிலே சேர்ந்திருக்காங்கன்னா சொல்லு! அவங்க இதுவரை கொடுத்த பேட்டியெல்லாத்தையும் படிச்சிட்டு அதை வச்சு வெள்ளைத்தோலு, ஜன்னல் வைச்ச ஜாக்கெட்டுன்னு கிழிகிழின்னு கிழிச்சிடறேன். இன்னி தேதியிலே உசிரோட இருக்கிறவங்களோட படம் மட்டுமே ஒரு எண்பது ஜி.பி. இருக்கு! பொளந்து கட்டிட மாட்டேன்?" என்று விளக்கினார் சப்பைமூக்கன்.

"என்னண்ணே, ஆணியடிக்கிறதை நிறுத்திட்டாங்க போலிருக்கே?" என்று கேட்டேன் நான்.

"ஒண்ணுமில்லே! போன் பேசிட்டிருக்காங்க, அனேகமா ராங் நம்பர்னு நினைக்கிறேன். ஒரு அரைமணி நேரம் கழிச்சுத் திரும்ப ஆணியடிக்க ஆரம்பிச்சிருவாங்க! நீ கன்டின்யூ பண்ணுய்யா!" என்றார் சப்பைமூக்கன் எரிச்சலுடன். "வேறே என்னென்ன சொல்லியிருக்காங்க பார்வதி?"

"கதைக்கு முக்கியமா இருந்தா கவர்ச்சியா நடிப்பாங்களாம்!"

"ஐயோ!"

"என்னாச்சு அண்ணே? ஆணியா?"

"இல்லைய்யா! ஒரு காலத்துலே எல்லா நடிகைகளும் சொன்னதை அப்படியே சொல்லுறாங்களேன்னு அசந்து போயிக் கத்திட்டேன். நல்ல விபரமான பொண்ணாத் தான் இருக்குது இந்தப் பார்வதி! தமிழ் சினிமாவுலே ஒரு பெரிய ரவுண்டு வரும் பாரு!" என்று ஆருடம் சொன்னார் சப்பைமூக்கன். "அப்புறம் வேறென்ன சொல்லியிருக்குறாங்க?"

"தேவைப்பட்டா நீச்சலுடையிலும் நடிப்பாங்களாம்!"

"ஆஹா! அப்படீன்னா முத்தக்காட்சி?"

"அதுவும் தேவைப்பட்டா நடிப்பாங்களாம்!"

"சேட்டை, செமத்தியான மேட்டர் சொல்லியிருக்கே! இன்னிக்கு ராத்திரி ஃபிளாஸ்கு நிறைய சுக்குக்காப்பியும் ஒரு கட்டு காலேஜ்பீடியும் வாங்கி வச்சுக்கிட்டு, விடிய விடிய தூக்கம் முழிச்சாவது இந்தப் பொண்ணைக் கண்டபடி திட்டி ஒரு இடுகை போட்டிடறேன்!" என்று உற்சாகமாகச் சொன்னார் சப்பைமூக்கன்.

"இன்னிக்கேவா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"பின்னே? மத்தவங்களை மாதிரியே இவங்களும் ஒரு அம்பது படம் நடிச்சு, என்னத்தையாவது எசகுபிசகா பேட்டி கொடுத்து, கோர்ட் வாசப்படி ஏறி இறங்கி, எங்கேயாவது ஒரு அரசியல் கட்சியிலே போய் சேர்றது வரைக்குமா காத்துக்கிட்டிருக்கிறது? சூட்டோட சூட்டா இன்னிக்கே எழுதி இடுகை போட்டுடறேன். சரியா?"

"நான் கூட இது பத்தி ஒரு இடுகை போடலாமுன்னு தாண்ணே நினைச்சேன். அப்புறம் இதையெல்லாம் யாரு படிக்கப்போறாங்கன்னு சந்தேகமாயிருந்ததுனாலே தான் உங்க கிட்டே மேட்டரை சொன்னேன்," என்று குட்டை உடைத்தேன்.

"சேட்டை, உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் பத்தாது! எதுலேயும் தமிழ்ப்பண்பாடு, கலாச்சரம் இதையெல்லாம் கருவேப்பிலை கொத்துமல்லி மாதிரி தாளிக்கணும்! நம்ம தமிழ்ப்பண்பாடுன்னா என்னா தெரியுமா? ஒருவனுக்கு ஒருத்தி!"

"என்னது?"

"ஒருவனுக்கு ஒருத்தி!"

"இன்னொருவாட்டி சொல்லுங்க!"

"ஒருவனுக்கு ஒருத்தி!" என்று எரிச்சலோடு சொன்னார் சப்பைமூக்கன். "நீ மனசுலே எதையோ வச்சுக்கிட்டு திரும்பத் திரும்பக் கேக்குறே! தமிழ்ப்பண்பாடுன்னா அது பெரிய பெரிய ஆளுங்களுக்கெல்லாம் தேவையில்லை. உன்னையும் என்னையும் மாதிரி சோத்துக்குச் செத்தவனுங்களுக்குத் தான் கலாச்சாரம், பண்பாடு, லொட்டு, லொசுக்கு எல்லாம் இருக்கணும். தெரியுதா?" என்று விளக்கினார் சப்பைமூக்கன்.

"சரி தாண்ணே!" என்று புரிந்தவன் போலக் கூறினேன்.

"எதுக்கும் அந்த நடிகையோட படம் எங்கே கிடைக்குமுன்னு லின்க் அனுப்பு! இருக்கிறதிலேயே படுகவர்ச்சியா ஒரு படத்தை எடுத்துப் போட்டு கன்னபின்னான்னு திட்டினா தான் தமிழ்ப்பண்பாட்டைக் காப்பாத்த முடியும்! நீச்சலுடையிலே இருக்கிற மாதிரி படம் இருந்ததுன்னு வை, பார்க்கிறவங்களுக்கே உடனேயே இது ஏதோ தமிழ்ப்பண்பாடு பத்தி எழுதியிருப்பான் போலிருக்குன்னு புரிஞ்சிடும். அப்புறம் என்ன, நம்ம இடுகையைப் படிச்சிட்டு அரசியல்வாதிங்க அறிக்கை விடுவாங்க, பெட்டிசன் ஆசாமீங்க கேஸ் போடுவாங்க, தினமும் பத்திரிகையிலே தலைப்புச் செய்தி வரும்! பார்வதி பேட்டி கொடுப்பாங்க, அழுவாங்க! அதை வச்சு இன்னும் பத்துப் பதிவு எழுதலாம். ஹையா! இன்னும் ஒரு வருஷத்துக்கு ஜாலிதான்!" என்று உற்சாகமாகக் கூறினார் சப்பைமூக்கன்.

"அண்ணே, அந்தப்பொண்ணு கேரளா பொண்ணுண்ணே!" என்று நினைவூட்டினேன்.

"இன்னும் நல்லதாப் போச்சு!" என்று சிரித்தார் சப்பைமூக்கன். "அந்தப்பொண்ணு தமிழச்சி இல்லேன்னு சொல்லி கூட ரெண்டு திட்டு திட்டலாம். தமிழ்ப்பண்பாடு கொஞ்சம் தூக்கலாயிருக்கும்."

"இதுலே ஒரு பிரச்சினையிருக்கண்ணே!" என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். "தேவையில்லாம அவங்களுக்கு நம்மளாலே நிறைய விளம்பரம் கிடைக்கும். இன்னும் ஒரு படம் கூட முடிக்காத அவங்களை நிறைய படத்துக்கு புக் பண்ணினாலும் பண்ணுவாங்க!"

"அதுவும் தமிழ்ப்பண்பாடு தானே?" என்று கூவினார் சப்பைமூக்கன். "நாம யாரு? வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லையா? வாழ்த்தியோ, வசவுபாடியோ வந்தவங்களை வாழவைக்கணும். உப்புப்பெறாத விஷயத்தை ஊதிப்பெருசாக்கி நாம மட்டும் ஒண்ணுத்துக்கும் உதவாம இப்படியே இருக்கணும்!"

"நல்ல வேளை, உப்புப்பெறாத விஷயமுன்னதும் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது அண்ணே," என்று ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுப்படுத்திக்கொண்டு சொன்னேன். "நீங்க இந்த இடுகையை எழுதுங்க! நான் பார்சிலோனாவுலே ஸ்ரேயாவோட கைப்பை காணாமப்போனது பத்தி ஒரு இடுகை எழுதணும்."

"எழுதுங்க எழுதுங்க!" என்று உற்சாகப்படுத்தினார் சப்பைமூக்கன். "நம்மளை மாதிரி சமூகப்பொறுப்புள்ளவங்க சும்மா இருக்கவே கூடாது. எதைப் பத்தியாவது எழுதிட்டே இருக்கணும்! சரியா? ஐயோ!! அம்மா!!! ஐயோ!!!"

"என்னண்ணே? திரும்பவும் ஆணி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று பதறினேன் நான்.

"உன் கிட்டே ஏன் பொய் சொல்லணும் சேட்டை? இவ்வளவு நேரமும் அலறினேனே அது ஆணி அடிச்சதுக்காக இல்லை; என் பொஞ்சாதி ராணி அடிச்சதுக்காக! நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

Sunday, May 16, 2010

அவளும் இவனும்


"எங்கே இருக்கீங்க?"

"இதோ செல்ஃப்-சர்வீஸ் கவுன்டரிலே சாம்பல் கலர் முழுக்கை சட்டை, கண்ணாடி போட்டிருக்கேன்!"

"பார்த்திட்டேன்!" பேச்சு சட்டென்று துண்டிக்கப்பட, கைபேசியை சட்டைப்பையில் சொருகிக்கொண்டிருக்கும்போதே அவள் சற்றே பெரிதான புன்னகையோடு அவனை நெருங்கி விட்டிருந்தாள்.

"நீங்க என்னைத் தான் எதிர்பார்த்திட்டிருக்கீங்க!"

"ஓ!" பார்த்திபனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கைகுலுக்கினால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றினாலும், அதை உடனே புறந்தள்ளி விட்டு மிகவும் மெனக்கெட்டு அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றான். கண்களைக் கட்டுப்பாடின்றி அலைய விடக்கூடாது என்று முன்னரே முடிவெடுத்திருந்தபோதும் ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது.

தோற்றத்தில் அதிசயிக்கத்தக்க கண்ணியம் தென்பட்டது. மாநிறம் என்றும் சொல்ல முடியாது. பதவிசாய் புடவையணிந்திருந்தாள். தலையை அழுத்திச் சீவிப்பின்னியிருந்தாள். நெற்றியில் மாங்காய் வடிவில் சின்னஞ்சிறிய ஸ்டிக்கர் பொட்டு! அதிக ஒப்பனை அவளுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை! வெயிலில் வந்திருந்ததால் நெற்றியில் சில வியர்வை முத்துக்கள் தென்பட்டன.

"என் பேர் பார்த்திபன்!"

"போனிலேயே சொன்னீங்களே?" அவள் சிரித்தாள். "என் பேரு ஜோதி!"

அது அவளது உண்மையான பெயராயிருக்க வாய்ப்பில்லையென்று பார்த்திபனுக்குப் புரிந்தது. பொய்யாயிருந்தாலும் அவன் வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை. உண்மையோ, பொய்யோ, நாளைய தினம் இருவருமே ஒருவர் பெயரை மற்றவர் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை! மறுநாள் விடிந்தால், இன்றைய பொய்களோடு புதிதாய் முளைக்கும் பொய்களையும் சேர்த்துச் சுமந்தாக வேண்டும்.

"போலாமா?" என்று கேட்டவள், புருவத்தைச் சற்றே நெறித்தபடி,"எங்கே போறோம்?" என்று கேட்டாள்.

"கோவிலுக்குப் போறோம்!" என்றான் பார்த்திபன். "சாமி கும்பிடுவீங்க தானே?"

"ம்!" என்று சிரித்தாள் ஜோதி. பற்கள் வரிசையாய் இருந்தன. சிரித்தபோது கண்களில் கொஞ்சம் குழந்தைத்தனம் தெரிந்தது; வலது கன்னத்தில் சின்னதாய் ஒரு குழி விழுவதையும் கவனிக்க முடிந்தது.

கூட்டம் நெரித்துக்கொண்டிருந்த கடற்கரை ரயில் நிலையத்தில் அவ்வப்போது தற்செயலாய் உராய்ந்தபடி இருவரும் நடந்து, சாவகாசமாக பாதசாரிகள் பாலத்தில் ஏறி, ஆறாவது நடைமேடைக்குச் சென்று, கூட்டம் குறைவாயிருந்த முதல்வகுப்புப் பெட்டியில் ஏறி, கடைசி இருக்கைகளில் அமர்ந்தனர். சிறிது நேரம் என்ன பேசுவது என்ற குழப்பமும், பல வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணின் அருகாமையில் அமர்ந்திருந்த பரபரப்பும் பார்த்திபனை மென்று விழுங்கியது. பிறகு....

"இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்!" என்றான்.

"ஓ! வாழ்த்துக்கள்!!" என்று அவள் சட்டென்று அவன் கைபிடித்துக் குலுக்கினாள். பார்த்திபன் அதிர்ந்தான். ஆண்டாண்டுகாலமாக, பெண்ணின் ஸ்பரிசம் உணர்ந்திராத அவனது உள்ளங்கையில் மெல்லிய ஊசிகள் இறங்குவது போல சில்லென்ற உறுத்தல் ஏற்பட்டது.

"ஒவ்வொரு வருஷமும் தனியாத் தான் கோவிலுக்குப்போவேன். ஃபிரண்ட்ஸ் இருக்காங்க! கோவிலுக்கு வர மாட்டாங்க! பிறந்தநாள்னா அவங்களைப் பொறுத்தவரையிலும் அர்த்தம் வேறே!" என்று விரக்தியாகச் சிரித்தான். "என்னாலே அந்தக் கேலிக்கூத்தையெல்லாம் சகிக்க முடியாது. எவ்வளவு நெருங்கின சினேகிதனா இருந்தாலும் அவன் வாந்தியெடுத்தா எரிச்சல் தான் வரும்! எல்லாரும் ஒழுங்கா வீடு போய்ச் சேர்ந்தாங்களான்னு பொறந்த நாள் ராத்திரியன்னிக்குக் கவலைப் பட்டுக்கிட்டுத் தூங்காம இருக்க முடியாது. அதுனாலே தான், இந்த வருஷம் யார் கூடவாச்சும் கோவிலுக்குப்போயி, எதையாவது பிடிச்சதைச் சாப்பிட்டு, பிடிச்ச விஷயம் பத்திப் பேசணுமுன்னு தான் உன்னை...ஸாரி, உங்களை....." என்று திருத்திக்கொள்ள முற்பட்டவனை அவள் கையமர்த்தினாள்.

"நீன்னே சொல்லலாம்!" அவள் முகத்தில் இன்னும் சிரிப்பு இருந்தது. கூடவே சற்று வியப்பும் கூட! பார்த்திபன் பதற்றத்தை மறைக்க அதிகமாகப் பேசி, இயல்பாய் இருப்பது போல நடிக்க முற்படுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.

ரயில் புறப்பட்டது. சின்னக்குழந்தை போல அவள் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தாள். காற்று முகத்தில் அறைய அறைய கண்களை லேசாய் மூடியபடி புன்னகைத்துக்கொண்டிருந்தாள். அவளைக் கூர்ந்து கவனித்தபோது கழுத்தில் அவள் அணிந்திருந்தது கவரிங் நகை என்பது புரிந்தது. தலையில் பூச்சூடியிருக்கவில்லை; பிடிக்காதோ என்னவோ! காதுகளிலும் மூக்கிலும் சின்னப்புள்ளியளவுக்கு பளபளப்பாய் எதையோ அணிந்திருந்தாள்.

"வேளச்சேரி ரூட்டுலே நான் வந்ததில்லை!" அவள் திரும்பிப் பார்த்து அவனிடம் குதூகலமாய்ச் சொன்னாள். "நல்லாயிருக்கு இது!"

திருவல்லிக்கேணி ரயில்நிலையம் வந்ததும் இறங்கினார்கள். தானியங்கிப் படிக்கட்டுகள் வழியாக இறங்கியபோது, மீண்டும் அவளது முகத்தில் ஒரு குதூகலம்! காரணமின்றி, சற்று அளவுக்கு அதிகமாகவே அவள் சிரிக்கிறாளோ என்று பார்த்திபனுக்குத் தோன்றியது. ஆனால், ஒரு பெண்ணின் விகல்பமில்லாத சிரிப்பை அருகிலிருந்து பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. சற்றே நெடியடித்த தெருக்களில் நடந்து பார்த்தசாரதி கோவில் வாசலை அடைந்தனர்.

"அம்மா! பூ வாங்கிக்கம்மா!" வாசலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த கிழவி ஏறக்குறைய அவர்களை வழிமறித்தாள்.

"ஜோதி! பூ வாங்கிக்க!" பார்த்திபன் நடப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னான். ஒரு கணம் ஜோதி அவனை ஏறிட்டபோது, அவளது கண்களில் இன்னும் மலைப்பு அதிகமாயிருப்பது போலத் தோன்றியது.

"எனக்குப் பூன்னா ரொம்ப இஷ்டம்! நிறைய வச்சுக்குவேன், பரவாயில்லையா?"

"ம்!"

ஜோதி தலைநிறைய பூ வைத்துக்கொண்டாள். வெள்ளை வெளேர் என்ற மல்லிகைப்பூக்கள் அவளுக்கு ஒரு அலாதி அழகை ஏற்படுத்தின. பூக்காரக்கிழவியிடமே செருப்புகளை ஒப்படைத்து விட்டு கோவிலுக்குள் நுழையும்போது, பார்த்திபனின் கைகளை அவள் பற்றிக்கொண்டாள்.

"என்ன?"

"ஒண்ணுமில்லை!"

ஐந்தே நிமிடத்தில் தரிசனம் முடித்து இருவரும் வெளியேறினர்.

"பொறந்த நாள்னீங்க? அர்ச்சனை பண்ணியிருக்கலாமே?" ஜோதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"எதுக்கு?" பார்த்திபன் சிரித்தான். "அது போகட்டும், கோவிலுக்குள்ளே போனதும் சட்டுன்னு கையைப் பிடிச்சியே, ஏன்?"

"இந்த ஊருக்கு வந்த புதுசிலே இந்தக் கோவிலுக்குத் தான் வந்தோம்," என்று குரலைத் தாழ்த்திக்கொண்டாள் ஜோதி. "அவரு கூட்டிக்கிட்டு வந்தாரு! அந்த ஞாபகம் வந்திச்சு!"

"ஓஹோ!" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான் பார்த்திபன். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்ற கேள்வி அவன் நாக்கின் நுனி வரை வந்தது. ஆனால், அதற்கு அவளிடம் ஒற்றை வரியில் பதில் இருக்க வாய்ப்பிலை என்பது புரிந்ததால் மவுனமாய் இருந்தான்.

"சரி, இப்போ இப்படியே ஆட்டோ புடிச்சு ரத்னா கஃபே போயி டிபன் சாப்பிடலாம். அப்புறம் தேவியிலே படம் பார்க்கலாம். இல்லாட்டி பீச்சுக்குப் போயி காத்து வாங்கலாம்! என்ன பண்ணலாம்?" என்று கேட்டான் பார்த்திபன்.

"பீச்சுக்கே போகலாமே?" என்று மீண்டும் உற்சாகம் ததும்பும் குரலில் கேட்டாள் ஜோதி. "நானும் ஒரு துணையோட பீச்சுக்கு போயி வருஷக்கணக்காச்சு! இல்லேன்னா......."

அவள் தயக்கமாக இழுக்கவும், பார்த்திபன் நின்று அவளை ஏறிட்டான்.

"இல்லேன்னா....?"

"ஐஸ் ஹவுஸ் பக்கத்துலே ஒரு இடம் இருக்கு! தெரிஞ்ச இடம் தான்! போலீஸ் தொந்தரவெல்லாம் இருக்காது!"

அவளது முகத்தில் எந்த சலனமுமின்றி சர்வசாதாரணமாகக் கூறியபோதும், பார்த்திபனுக்கு எரிச்சலாக இருந்தது.

"இத பாரு ஜோதி! பேச்சிமுத்து கிட்டேயே நான் தெளிவாச் சொல்லிட்டேன்! எனக்கு சும்மா கூட வந்து, பேசி, கூட சாப்பிட்டு கம்பனி கொடுத்தாப் போதும்! வேறே எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை! எதுக்காகவும் அலையுற ஆசாமியும் நானில்லை! சும்மா ஃபிரண்ட்ஸ் மாதிரி ரெண்டு மூணு மணி நேரம் பேசிட்டுப் போயிருவோம். அப்புறம் சுத்தமா எல்லாத்தையும் மறந்திடுவோம். சரியா?"

"சரி, உங்க விருப்பம்," என்று அவள் சிரித்த முகத்தோடு கூறினாள். இருவரும் தொடர்ந்து நடக்கத்தொடங்கினர்.

மெரீனா சாலை நெருங்குவதற்கு முன்னரே, பலமாகக் கடற்கரைக் காற்று வீசத்தொடங்கியது. விருட்டென்று அவளது சேலைத்தலைப்பு பார்த்திபன் முகத்தில் அடித்தது. உப்புக்காற்றில் அவளது புடவைவாசனையுடன், பூவாசனையும் கலந்து அவனுக்குள்ளே இறங்கியது. சாலையைக் கடக்கும் போது, சற்று அழுத்தமாகவே அவளது கையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் இறுக்கமாய்ப் பிடித்திருந்ததில், அவளது மோதிரம் இருவருக்குமே உறுத்திக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்தே அவளது கையை அவன் விடுவித்தான்.

"எத்தனையோ நாள் எத்தனையோ ஜோடிகளைப் பார்த்திருக்கேன்!" என்று ஒரு சிறிய பெருமூச்சை விட்டுச் சொன்னான். "அது எப்படியிருக்கும்னு ஒருவாட்டியாவது அனுபவிச்சுப் பார்க்கணுமுன்னு ஆசை! அதுனாலே தான் இவ்வளவு நேரம் கையை விட மனசு வரலே!"

"இன்னும் கொஞ்ச நேரம் பிடிச்சிட்டிருந்திருக்கலாமில்லே?" அவள் மீண்டும் சிரித்தாள். அவளது சிரிப்பிலிருந்த வெகுளித்தனத்தோடு அவளது தொழிலைப் பிணைப்பது கடினமாக இருந்தது.

"உட்கார்ந்து பேசலாமா?" அவளது பதிலுக்காகக் காத்திராமல், மணலில் அமர்ந்தான் பார்த்திபன்.

"ஏய் சுக்குக்காப்பி!" என்று கூவினாள் அவள். "ரெண்டு கப்!"

ஆவிபறக்கும் சுக்குக்காப்பியை அருந்தியபடி இருவரும் குறிக்கோளின்றி போகிறவர்களையும் வருகிறவர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

"நீங்க என்ன எழுத்தாளரா? நிருபரா?" அமைதியை உடைத்து அவள் கேட்டாள்.

"ஏன்?" பார்த்திபன் சிரித்தான். "உன்னைப் பத்தி குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்பேன்ன்னு நினைக்கிறியா? அதிலெல்லாம் எனக்கு ஆர்வமில்லை! என்னைப் பத்தியும் நீ கேட்காதே!"

"என் கதையும் ஒண்ணும் புதுசில்லை!" என்று புன்னகைத்தாள் அவள். "புளிச்சுப்போன கதை! இன்னிக்கு உச்சுக் கொட்டிட்டு நாளைக்கே மறந்திடுவீங்க!"

தயக்கம் கலைந்து இருவரும் பேசத்தொடங்கினார்கள்! மெரீனா கடற்கரையிலிருந்து தொடங்கி, அரசியல்வரைக்கும் பேசினார்கள். இடையிடையே எதையாவது கொறித்தார்கள். வெளிச்சத்திலிருந்ததைக் காட்டிலும் அரையிருட்டில் ஜோதி அழகாய்த் தெரிந்தாள். அடிக்கடி சிரித்தாள். பார்த்திபனுக்கு அவளைப் பிடித்து விட்டிருந்தது. அவளுக்கும் அவனைப் பிடித்துவிட்டது போலத் தான் இருந்தது. நேரம் போவது தெரியாமல் பேசினார்கள் கடைசியில்......

"ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்குப்போயிடணும்," என்று அவள் கைக்கடியாரத்தைப் பார்த்தபடி கூறினாள்.

"சரி, லைட் ஹவுஸ் பக்கம் போனா, ஏதாவது சைனீஸ் அயிட்டம் வாங்கிச் சாப்பிடலாம்! அப்படியே ஆட்டோ பிடிச்சு நீ எங்கே போகணுமோ, இறக்கி விட்டுட்டு நான் போறேன். சரியா?"

அப்படியே செய்தார்கள்! வயிறாரச் சாப்பிட்டார்கள். பனாரசி பான் சவைத்தார்கள். பிறகு, சாலையைக் கடந்து ஆட்டோ பிடித்தார்கள்.

"உன்னை எங்கே விடட்டும்?" பார்த்திபன் கேட்டான்.

"கோடம்பாக்கம் பிரிட்ஜ் தாண்டி விவேக் பக்கத்துலே இறக்கிடுங்க!"

ஆட்டோ கிளம்பியதும் பார்த்திபன் அவள் கையில் ஒரு உறையைத் திணித்தான்.

"சொன்னபடி இருக்கான்னு பார்த்துக்க!"

அவள் எண்ணிப்பார்க்கவில்லை. கைப்பையில் திணித்துக்கொண்டு மீண்டும் அதே புன்னகை! அவள் இன்னும் சில நிமிடங்களில் இறங்கி விடுவாள் என்ற உண்மை திடீரென்று பார்த்திபனுக்கு மனதில் கனத்தது. அவளது ஒரு கையைப் பிடித்துக்கொண்டான்; இப்படியே அவள் இறங்கும்வரையிலும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.

பயணத்தின் போது இருவரும் பெரும்பாலும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. பார்த்திபன் அடிக்கொரு தடவை அவளையே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வந்தான். போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டபோதெல்லாம் அவள் சலிப்புடன் வியர்வையைத் துடைத்துக்கொண்டிருந்தாள். கைக்கடியாரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டு ஞாபகம் வந்து விட்டது போலும்! வீட்டில் கணவனோ, குழந்தையோ அல்லது இன்னும் யார் யாரோ காத்திருக்கலாம். யார் கண்டார்கள்?

ஆற்காட்டு சாலையில் ஆட்டோ நின்றது. ஜோதி இறங்கிக்கொண்டாள்.

"அப்ப நான் வர்றேன்," அவள் இம்முறை சிரித்தபோது பார்த்திபனுக்கு இனம்புரியாத ஒரு வலி மனதில் உறுத்தியது.

"சரி, பை!" என்று கையசைத்தான். "ஆட்டோ, சாலிக்கிராமம் போப்பா!"

வீடு திரும்பும் அந்தப் பயணம் மிகவும் வலிமிகுந்ததாக இருந்தது. ஆனால், அடுத்த சில நாட்கள் அந்த வலியும், அவளைப் பற்றிய சிந்தனையும் வலுத்துக்கொண்டே போனது. யாராவது சிரித்தால் ஜோதியின் கன்னக்குழி நினைவுக்கு வந்தது. மீண்டும் ஒரு முறை அவளை சந்தித்தால் என்ன?

குழப்பமும் தயக்கமுமாய் நாட்கள் கடந்தன. ஒரு நாள், அவனே எதிர்பாராத நேரத்தில் அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"யாரு தெரியுதா?" அதே இனிமையும் முதிர்ச்சியும் கலந்த குரல்

"மறக்க முடியுமா?" பார்த்திபனுக்கு இதயம் படபடத்தது.

"என்னமோ தெரியலே! போன் பண்ணனுமுன்னு தோணிச்சு!" என்று மறுமுனையில் களுக்கென்ற சிரிப்பு. "அன்னிக்கு நாம சந்திச்சது வித்தியாசமா இருந்தது; கொஞ்சம் நிம்மதியாவும் இருந்தது!"

"எனக்கும்...," என்று தடுமாறினான் பார்த்திபன். "இன்னொரு முறை சந்திக்கணும் போலிருக்கு!"

"சந்திக்கலாமே?" என்று அவள் உற்சாகமாகச் சொன்னாள்."ஒரு நாள் முன்னாடி சொல்லுங்க! சந்திக்கலாம்! நான் சந்திச்சதிலேயே நீங்க ரொம்ப வித்தியாசமான நபர்!"

"சந்திப்போம் ஜோதி," என்று மென்றுவிழுங்கிய பார்த்திபன், துணிவை வரவழைத்துக்கொண்டு மனதிலிருந்த அரிப்பைப் போட்டு உடைத்தான். "ஆனால், இந்த முறை பீச்சிலே சந்திக்க வேண்டாம்! நீ அன்னிக்கு சொன்னியே, தெரிஞ்ச இடம் இருக்குன்னு....அங்கே போகலாம்! சரியா?"

மறுமுனையில் திடீரென்று மயான அமைதி!

"ஜோதி?" பார்த்திபன் பரபரத்தான்."நான் சொன்னது காதுலே விழுகுதா?"

பதிலுக்காகக் காத்திருந்த பார்த்திபனுக்கு, தொடர்ந்து நீண்ட அவளின் மவுனம் பெரும் வதையாக இருந்தது.

அந்த நெடிய மவுனத்தின் முடிவிலே, மறுமுனையில் இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.

Saturday, May 15, 2010

சேட்டை டிவியில் டாக்டர் "Z"

சேட்டை: வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டிவியின் "டாக்டர் இஜெட்" நிகழ்ச்சி! இன்றைய தினம் ஆண்களுக்கு ஏற்படும் காதல் என்ற தீராத வியாதி குறித்து நேயர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க டாக்டர்.குடைச்சலூர் கோவிந்தா வந்திருக்கிறார்! நேயர்கள் தங்கள் சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டுப் பயனடையலாம்.வணக்கம் டாக்டர்!

டாக்டர்: வணக்கம்!

சேட்டை: சமீபகாலமாக காதல்நோயால் நிறைய ஆண்கள் அவதிப்படுவதாக ஆல் இந்தியா லவ்வாலஜிஸ்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் கவலை தெரிவிக்கிறது. இந்தக் காதல்நோய்க்கு உண்டான ஆரம்ப அறிகுறிகள் என்னவென்று சொல்ல முடியுமா டாக்டர்?

டாக்டர்: இட்டிஸ் வெரி சிம்பிள்! வேலைக்குப் போகாத இளைஞர்களுக்கு காதல் வந்தா, வீட்டிலே அடிக்கடி பணம் காணாமப் போகும். வேலைக்குப் போகிற இளைஞர்களுக்குக் காதல் வந்தா, அடிக்கடி அவங்களே காணாமப் போயிருவாங்க!

சேட்டை: நல்ல பதில் டாக்டர்! நேயர் ஒருவர் தொலைபேசியில் அழைக்கிறார்! ஹலோ! வணக்கம்! சேட்டை டிவியின் டாக்டர் இஜெட்!

நேயர்: ஹலோ டாக்டருங்களா? என் பையன் ஒரு நாளைக்கு நூறுவாட்டி கண்ணாடி முன்னாலே நின்னுக்கிட்டு தலை சீவிட்டிருந்தானுங்க! இப்போ ரொம்ப அதிகமாகவே தலைசீவ ஆரம்பிச்சுட்டான்! பார்க்கிறவங்கெல்லாம் திருப்பதியா பழநியான்னு கேட்கிற அளவுக்கு, தலை சீவி சீவி முடியெல்லாம் கொட்டிருச்சுங்க! இதுக்கென்னங்க பண்ணலாம்?

டாக்டர்: இது ஆரம்பகால அறிகுறி மாதிரித் தான் தெரியுது! முடிஞ்சா சீப்பை ஒளிச்சு வையிங்க, இல்லாட்டி கண்ணாடியை ஒளிச்சு வையிங்க! ரெண்டும் முடியாட்டி பையனையே ஒளிச்சு வச்சிருங்க! சரியாப் போயிரும்.

நேயர்: ரொம்ப நன்றி டாக்டர்!

சேட்டை: டாக்டர்! இப்போ கான்சர் வந்தா இரத்தப்பரிசோதனை பண்ணிக் கண்டுபிடிக்கிறா மாதிரி, காதலைக் கண்டுபிடிக்க ஏதாவது பரிசோதனை இருக்குங்களா?

டாக்டர்: இப்பத்தான் டெவலப் பண்ணிட்டிருக்காங்க! கான்சரைக் கண்டுபிடிக்கிற பரிசோதனைக்கு "ஹிஸ்டபதாலஜீ"ன்னு சொல்லுறோமில்லையா? அதே மாதிரி காதலுக்கு "கஷ்ட’பதாலஜீ"ன்னு ஒண்ணு கண்டு பிடிச்சிருக்காங்க! ஆனா, ஆரம்ப காலத்துலேயே பண்ணனும்; இல்லாட்டி ஊசி போட்டு எடுத்தா இரத்தத்துக்கு பதிலா பீர் தான் வரும்!

சேட்டை: இது தவிர பார்த்தாலே கண்டுபிடிக்கிற மாதிரி ஏதாவது அறிகுறி இருக்குங்களா?

டாக்டர்: நிறைய இருக்கு! அது ஏரியாவுக்கு ஏரியா மாறுபடும்! ரொம்ப காமன் ஆன சிம்ப்டம் என்னான்னா, முகத்தைப் பார்த்தீங்கன்னா டைனோசருக்கு டயரியா வந்தது மாதிரி ரொம்ப வெளிறிப்போயிருக்கும்! திடீர்னு உடம்பு இளைச்சிடும்! ஒரே பேண்ட்டைக் கிழிச்சு ஆல்டர் பண்ணினா மூணு தைக்கலாம்!

சேட்டை: ரொம்ப உபயோகமான தகவலெல்லாம் சொல்றீங்க! இப்போ அடுத்த நேயரோட தொலைபேசி அழைப்பைக் கேட்கலாமா? வணக்கம், சேட்டை டிவி! சொல்லுங்க!

நேயர்: என்னங்க, நூறு கிராம் கடுகு, நூறு வெந்தயம், சின்ன வெங்காயம் அரைக்கிலோ, புளி கால் கிலோ எல்லாத்தையும் பத்தாம் நம்பர் வீட்டுக்கு அனுப்பி வையுங்க!

சேட்டை: ஹலோ, இது டிவி ஸ்டேஷன்! மளிகைக்கடையில்லை!!

நேயர்: டிவி ஸ்டேஷனா? சரி, அப்படியே 'டுமீல்குப்பம்’ படத்திலேருந்து ஒரு பாட்டுப்போடுங்க! கேட்டுட்டு சமைக்கப்போறேன்.

சேட்டை: போனை வையுங்கம்மா! சாரி டாக்டர், ராங் நம்பர்!

டாக்டர்: பரவாயில்லீங்க! அடிக்கடி என் கிளீனிக்குக்குக் கூட இந்த மாதிரி ராங் நம்பர் வரும். யாராவது நல்ல டாக்டர் இருக்காங்களான்னு கேட்பாங்க!

சேட்டை: டாக்டர், இந்த கவிதை எழுதுறது கூட காதலோட அறிகுறின்னு சொல்லுறாங்களே, அது பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

டாக்டர்: அப்படி உறுதியாச் சொல்ல முடியாது! எல்லாக் காதலாலேயும் கவிதை வராது! சில பேரு கவிதை எழுதி கொஞ்சம் சுமாரா வந்தா, அதை வேஸ்ட் பண்ண வேண்டாமேன்னு காதலிக்கிறதும் உண்டு! இந்த மாதிரி கவிதை எழுதுறவங்களுக்கு தினமும் ரெண்டு வேளை ’லவோசின்’ மாத்திரை தொடர்ந்து பத்து வருசம் கொடுத்தா நோய் தீவிரமடையாது!

சேட்டை: ஏன் டாக்டர், இப்போ கான்சருக்கு இருக்கிற மாதிரியே காதலுக்கும் இரத்தப்பரிசோதனை இருக்கிறதா சொன்னீங்க! அதே மாதிரி கான்சரை குணப்படுத்த ’கீமோதெரபி’ இருக்கிற மாதிரி காதலுக்கு ஏதாவது இருக்கா டாக்டர்?

டாக்டர்: ஓ இருக்கே! அதுக்குப் பேரு ’மாமோதெரபி!’ அதாவது பையன் எந்தப் பொண்ணை காதலிக்கிறானோ அந்தப் பொண்ணோட அப்பா காதுலே விஷயத்தைப் போட்டுட்டா அவரு குணப்படுத்த வேண்டிய விதத்துலே குணப்படுத்திருவாரு! அதுனாலே தான் இதுக்குப் பேரு மாமோதெரபி! இதைத் தொடர்ந்து பையனுக்கு நிறைய எக்ஸ்-ரேயெல்லாம் எடுக்க வேண்டி வரும். சிலருக்கு ஆபரேஷன் வரை கூட போகலாம்.

சேட்டை: இதுக்கு உத்தேசமா எவ்வளவு செலவாகும் டாக்டர்?

டாக்டர்: அதெல்லாம் பொண்ணோட அப்பாவோட சக்தியைப் பொறுத்தது. குத்துமதிப்பா எதுவும் சொல்லுறதுக்கில்லை! ஆனா, பெரும்பாலான கேசுலே பார்த்தீங்கன்னா அதுக்கப்புறம் இந்த வியாதி திரும்ப வரவே வராது! நல்ல சக்ஸஸ் பர்சன்டேஜ்! வில்லேஜ் பக்கமெல்லொம் இந்த ட்ரீட்மெண்ட் தான் ரொம்ப பாப்புலர்!

சேட்டை: அருமையான தகவல்! இப்போ இன்னொருத்தர் தொலைபேசியிலே தொடர்பு கொள்ளுறாரு! வணக்கம்! சேட்டை டிவி, டாக்டர் இஜெட்! உங்க கேள்வியென்ன சொல்லுங்க?

நேயர்: வணக்கம் டாக்டர்! என் பேரு மீனலோசினி! எங்க தெருவிலே ஒரு பையனுக்கு காதல்நோய் வந்திருச்சுங்க! ’உன்னைக் காதலிக்கிறேன்; நீ கல்யாணம் பண்ணிக்கலேன்னா தற்கொலை செய்துக்குவேன்,’னு மிரட்டறாருங்க! இதுக்கு என்னங்க பண்ணுறது?

டாக்டர்: அதாவது காதல் வேறே, கல்யாணம் வேறேங்குறது அவருக்கு இன்னும் புரியலே போலிருக்கு! இந்த மாதிரி பேசுறவங்க ’எதுக்கும் இருக்கட்டும்,’னு உங்க கிட்டே சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேருகிட்டேயாவது சொல்லியிருப்பாருங்க! இந்த மாதிரி அறிகுறியிருந்தா வியாதி தானாகவே கூட குணமாயிடறதுக்கு சான்ஸ் இருக்கு! பயப்படாதீங்க!

நேயர்: டாக்டர், கல்யாணம் பண்ணிக்கிடலேன்னா தற்கொலைன்னு பயமுறுத்தறாரு! பயமாயிருக்கு டாக்டர்!

டாக்டர்: பயப்படாம புத்திசாலித்தனமா டீல் பண்ணுங்க! கல்யாணத்துக்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரொம்ப ப்ரெஷர் கொடுத்தா ’வா, கல்யாணம் பண்ணிக்கலாம்,’னு சொல்லுங்க! கல்யாணமும் வேண்டாம், தற்கொலையும் வேண்டாமுன்னு போனாலும் போயிருவாங்க!

நேயர்: ரொம்ப நன்றி டாக்டர்!

சேட்டை: சமீபத்துலே இந்தியாவிலே பணவீக்கம் அதிகமானதுக்கு காதல்நோய் அதிகமா பரவியிருக்கிறது தான் காரணம்னு உலக வங்கியிலேருந்து ஒரு அறிக்கை விட்டிருக்காங்களே! இது பத்தி என்ன சொல்றீங்க?

டாக்டர்: கண்டிப்பா இருக்கும்! காதல்நோய் பரவிச்சுன்னா சேமிப்பு குறைஞ்சிடுது இல்லையா? செல்போன், பெட்ரோல், சினிமா, ஷாப்பிங், ஹோட்டல்னு எவ்வளவு செலவு இருக்குது! இதுலே சில பேரு ஒண்ணுக்கு மூணு நாலு சிம்கார்டு வச்சிருப்பாங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்திருப்பாங்க! எல்லாம் செலவுதானே? எனக்குத் தெரிஞ்ச ஒரு பேஷியண்ட் பெட்ரோல் செலவுக்காக வண்டியையே அடமானம் வச்சிட்டாருன்னா பாருங்களேன்!

சேட்டை: உண்மையிலேயே ரொம்ப பயங்கரமான வியாதிதான் டாக்டர்!

(டெலிபோன் மணி அடிக்கிறது)

சேட்டை: ஹலோ வணக்கம், இது மளிகைக்கடையில்லை; சேட்டை டிவி! சொல்லுங்க!

டெலிபோனில் பெண்குரல்: சேட்டை! யூ ஆர் அட்ரோஷியஸ்! செல்போனை சுவிட்ச்-ஆஃப் பண்ணிட்டா கண்டுபிடிக்க முடியாதுன்னா நினைச்சே? நேத்து சத்யம்லே ஈவ்னிங் ஷோவுக்குப் போலாமுன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டியே! உனக்காக நான் அஞ்சு மணியிலேருந்து ரெண்டரை நிமிஷம் கால்கடுக்கக் காத்திட்டிருந்தேன் தெரியுமா? என் செல்போனுக்கு டாப்-அப் பண்ணச் சொன்னேன். அதையும் மறந்திட்டே இல்லே நீ? ஐயம் ஃபெட் அப் வித் யூ!

சேட்டை: ஹலோ டார்லிங்! நான் சொல்றதைக் கேளு!

பெண்குரல்: ஓஹோ! நீ சொல்றதை நான் கேட்கணுமா? இது எப்போலெருந்து? ஆளை விடு! நான் பாய்-ஃபிரண்டை மாத்திக்கிட்டேன்! ஐ ஹேட் யூ!

(டெலிபோன் துண்டிக்கப்படுகிறது)

டாக்டர்: சேட்டை! இது கொஞ்சம் அட்வான்ஸ் ஸ்டேஜிலே இருக்கும்போலிருக்கே?

சேட்டை: ஏன் டாக்டர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க? இப்பெல்லாம் இந்த மாதிரி சட்டுன்னு மெடிக்கேஷனை மாத்திக்கிறாங்களே? இதுக்கு என்ன பண்ணலாம் டாக்டர்?

டாக்டர்: காதல்நோயைப் பத்தி பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தணும் சேட்டை! இந்தக் காதல் சினிமா டிக்கெட் மாதிரி! கிடைச்சதும் பத்திரமா பாக்கெட்டுலே போட்டுக்கணும்! கேட்டுலே பாதியைக் கிழிச்சிருவாங்க! படம் முடிஞ்சதும் சுருட்டிக் குப்பையிலே போட்டுட்டு சுத்தமா மறந்திடணும்! இப்பல்லாம் நூத்துக்கு தொண்ணூத்தி அஞ்சு பேஷியன்ட்ஸ் இப்படித்தான் பண்ணுறாங்க! இதுக்குப் பேரு பொய்யாலிசிஸ்! இப்படி இருந்தா பிரச்சினையே கிடையாது.

சேட்டை: ஏதாவது மேஜர் சர்ஜரி பண்ணி குணப்படுத்த முடியுமா டாக்டர்?

டாக்டர்: பண்ணலாம், ஆனா எதுக்கு வீண்செலவு? அதுக்குப் பேசாம கல்யாணத்தைப் பண்ணி வச்சிரலாம்! ரெண்டும் கிட்டத்தட்ட ஒண்ணு தான்! ரெண்டுலேயுமே பொழைக்கிற சான்ஸ் ரொம்ப கம்மி!

சேட்டை: டாக்டர், உங்க பரந்த அனுபவத்திலே எத்தனையோ பேஷியண்டுங்களை காதல்நோயிலேருந்து குணப்படுத்தியிருப்பீங்க! அதுலே குறிப்பிடத்தக்க ஒரு கேஸ் பத்தி சொல்லுங்களேன்!

டாக்டர்: ஓ யெஸ்! பாண்டியன்னு ஒரு 'அக்யூட் லவ் சிண்ட்ரோம்' கேஸ்! எங்க ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டிருந்தோம். காதலி கைவிட்டுட்டா சோர்ந்து போகக் கூடாது! இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லாயிருன்னு கவுன்சலிங் பண்ணினோம்! எங்க ட்ரீட்மெண்ட்லே அந்தப் பையன் குணமடைஞ்சதோட இல்லாம, எங்க ஆஸ்பத்திரிலேருந்தே ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு பில் கூட செட்டில் பண்ணாம ராத்திரியோட ராத்திரியே ஓடிப்போயிட்டான்!

சேட்டை: அட பாவமே! நிறைய பணம் நஷ்டமாயிருச்சுன்னு சொல்லுங்க!

டாக்டர்: பணம் போனாப் போகுது சேட்டை! அவன் யாரைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போனானோ அந்த நர்ஸைத் தான் நான் ஒன்-ஸைடா லவ் பண்ணிட்டிருந்தேன். இப்படி அடிமடியிலேயே கைவச்சிட்டானே, அவன் உருப்படுவானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சேட்டை: டாக்டர், நேயர்களெல்லாம் பார்த்திட்டிருக்காங்க! அழாதீங்க, நீங்க ஒரு டாக்டர்!

டாக்டர்: போய்யா யோவ், டாக்டருன்னா லவ் பண்ணக்கூடாதா? அந்தப் பொண்ணை நினைச்சு நான் பிரிஸ்கிருப்ஷன் பேட்லே கவிதையெல்லாம் எழுதியிருந்தேன் சேட்டை! ’உளுந்து ஊறினா தோசை, உள்ளம் ஊறினா ஆசை, உதட்டுக்கு மேலே மீசை, உடனே கொடுத்திடு பீஸை,’ன்னு எதுகை மோனையெல்லாம் வச்சுக் கவிதை எழுதினேன்...இப்படிப் பண்ணிட்டாளேய்யா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சேட்டை: நேயர்களே, தவிர்க்க முடியாத காரணங்களால்,இந்த நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெறுகிறது. வணக்கம்

(நிகழ்ச்சி நிறைவு)