Thursday, August 31, 2017

த்ரீ-இன்-ஒன் பதிவு

ஒன்று: கிரிக்கெட்


என்னுடைய மிகச்சிறிய வாசிப்பனுபவத்தில் சுஜாதாவின் சில கட்டுரைகள் ’பசக்’கென்று ஞாபகம் இருக்கின்றன. அதில் ஸ்ரீரங்கம்-தஞ்சாவூர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி, விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்து ஒரு அனாயசாமான கட்டுரை எழுதியிருந்தார். 

அனேகமாக அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த ரங்கு கடை போல ஒரு தூங்குமூஞ்சி கடையில் நாமும் நம் ஊர்களில் எப்போதாவது கடனுக்கு கத்திரி சிகரெட் வாங்கிப் புகைத்திருக்கலாம். அந்த மேலவீதி அம்பிபோல உருப்படியாக ஒரு பேட், பால் கூட இல்லாமல் வெளியூர் டீமையெல்லாம் மாட்ச் ஆடக் கூப்புடுகிற சவடால் சினேகிதர்களும் நமக்கு அவசியம் இருந்திருக்கிறார்கள். சுஜாதா பாணியிலேயே ‘கச்சலாக’ இருந்து, ஆட்டம் பார்க்க அழகாய் இல்லாதபோதும் பந்தைத் ’தேக்கி அடிக்கிற’ சாமர்த்தியமுள்ள நோஞ்சானை நாமும் பார்த்திருப்போம். ’த்ரோ’ மாதிரி பந்து போட்டு ’சாலக்காக’ விக்கெட் எடுப்பவர்களையும் நாம் அறிவோம். 

இவ்வாறாக, ‘தோற்பது நிஜம்’ என்று நெற்றியில் ரெட்-ஆக்ஸைடால் எழுதப்பட்ட அணிகள் சில சமயங்களில் ராட்சச டீம்களை மண்ணைக் கவிழ வைக்கிற மகோன்னதங்களும் நம் அனுபவத்தில் இருக்கத்தான் செய்யும். (அடியேனின் அணி செயிண்ட் ஜோசப் அணியை பாளையங்கோட்டையில் தோற்கடித்துவிட்டு நான்குநேரி வரை பாடிக்கொண்டு வந்து, வள்ளியூர் தாண்டுமுன் தொண்டை வற்றியதும் ஞாபகத்துக்கு வருகிறது. வழக்கம்போல நான் அதிலும் ஒன்றும் கிழிக்கவில்லை.)

இதைப்போலத்தான்! தென் ஆப்பிரிக்காவுக்குத் தண்ணி காட்டிய (வாடிக்கையான) மதர்ப்பில் சற்றே ஓவராக காலரை உயர்த்திய இங்கிலாந்து அணியை, பார்த்தாலேயே பரிதாபம் வரவழைக்கிற ஒரு மேற்கு இந்திய அணி, லீட்ஸ் மைதானத்தில் பதம் பார்த்திருப்பது, சுஜாதாவின் கட்டுரை உட்பட பல சங்கதிகளை ஞாபகப்படுத்தியது. கிரிக்கெட் திமிர் பிடித்தவர்களின் மண்டை வீங்கக் குட்டும் என்பதற்கான சமீபத்திய உதாரணம். இங்கிலாந்து அணி ஒரு தொடர் ஜெயித்தால் பதினோரு பேர்களும் இருபத்தி இரண்டு பேர்களுக்கான வீறாப்பு பேசுவது வழக்கம். பின்னால், சொப்பை அணியிடம் அடிவாங்கி, கேப்டன் பதவி விலகி, போன மாதம் லங்காஷேர் கவுன்டியில் முன்னூறு ரன்கள், முப்பது விக்கெடுகள் ( 45 மாட்சுகளில்) எடுத்தவரை கேப்டனாக்குவதும் பாரம்பரியம் என அறிக.


அப்புறம், நம்ம இந்தியா இலங்கையை அடித்து நொறுக்கியது பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.  பதினோரு பல்குத்தும் குச்சிகளை ஈவு இரக்கமில்லாமல் நொறுக்கியது குறித்துப் பெருமைப்பட்டால், கோலிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என்று பயில்வான் பக்கிரிகள் காத்திருக்கிறார்கள். அம்புட்டுத்தேன்.


2.அரசியல்

கமல்ஹாசன் மீது எனக்கிருக்கிற அபிமானம், ஓ.பி.எஸ் மீது டிடிவி.தினகரனுக்கு இருக்கும் அபிமானத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று இங்கு தொடர்ந்து வருகிறவர்களுக்குத் தெரியும். இருந்தும், தற்போது அவர் ‘ட்விட்டர்’ல் விடுகிற கீச்சுகளுக்கு நான் ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன். கமல் - ரஜினி இருவரில் அரசியலுக்கு வருகிற தகுதி யாருக்கு அதிகம் இருக்கிறது என்று கேட்பதைவிட, அந்தத் தகுதி முதலில் யாருக்கு இருக்கிறது என்று கேட்டால், நிச்சயம் கமல்ஹாசனுக்கே இருக்கிறது. போதாக்குறைக்கு ‘சுயமரியாதை’ வீரர் வேறு! இந்து மதத்தை எள்ளி நகையாடுவதில் சமர்த்தர் என்பது கூடுதல் தகுதியாகும்.  நிச்சயம் மக்கள் கமலுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றே நம்புகிறேன். அட, ஓவியாவுக்குப் போட்டவர்கள், கமலுக்குப் போடாமலா இருப்பார்கள்?

சீரியஸாகவே, கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிக்கலாம். சீரியஸாகவே, அவரது கருத்துக்கள் சிறப்பாகவே இருக்கின்றன. சீரியஸாகவே, அவர் எடுத்திருக்கிற நிலைப்பாடு சரியானது; பொருத்தமானதும் கூட! 

இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாராம்? ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாய்பொத்திக்கொண்டு இருந்தாரே?’


இது சொத்தை வாதம்!

ஜெ. உயிரோடு இருந்தபோது, நம் வலையுலகிலேயே கூட எத்தனைபேர் துணிச்சலாக எழுதினார்கள்? உண்மைத்தமிழன், ஜாக்கி சேகர், புதுகை அப்துல்லா..... அட, இன்னும் ஐந்து விரல் கூட தேறவில்லையே!

ஜெ..உயிரோடு இருந்திருந்தால், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியிருப்பார்களா? சந்தேகம்தான்! ஓ.பி.எஸ்-ஸை ‘மிக்சர்’ என்று நக்கலடித்ததுபோல, ஜெவை யாராவது நக்கலடித்திருப்பார்களா? ஊஹும்!

இதில் கமல் மட்டும் என்ன பாவம் செய்தார்? அவரும் உறுமீன் வருமளவு வாடியிருந்து ட்வீட்டுகிறார். 

தனது படங்களின் படப்பிடிப்புக்களைக் கூட தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களில் வைத்துக்கொள்கிற ரஜினியை விட, கமல் தைரியமானவர் என்றுதான் தோன்றுகிறது. மேலும், தமிழகத்தைப் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? கல்யாண மண்டபத்தில் கூடுகிற விசிலடிச்சான் குஞ்சுகளை தமிழக மக்கள் என்று நினைத்தால் அப்புறம் கதை கந்தலாகி விடும். அம்புட்டுத்தேன்.


3. ஆன்மீகம்


ஹர்யானாவில் குர்மீத் சிங் ராம் ரஹீம் இன்சான் என்ற மதகுரு பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதை வைத்துக் கொண்டு, சில அரைவேக்காடுகள் இந்துமதத்தை மட்டம் தட்டி எழுதிக் கொண்டு வருகின்றன. அவர் பிறப்பால் ஒரு சீக்கியர் என்பது ஞாபகம் இருக்கட்டும். பா.ஜ.க மட்டுமல்ல, காங்கிரஸ் மட்டுமல்ல, முலாயம் சிங் யாதவ் உட்பட பல அரசியல் தலைவர்கள் அவருடன் அனுசரித்துப் போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

”சரி, கேரளாவில் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கிறித்துவப் பாதிரியார்கள் குறித்து நமது செக்யூலர் பதிவர்கள் ஏன் இன்னும் கொதிக்கவில்லை?

ஜாகீர் நாயிக் என்னும் இஸ்லாமிய மதகுரு, மதமாற்றம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததைப் பற்றி ஏன் எழுதவில்லை?”


..................ன்று கேள்விகள் எழலாம். கேட்க வேண்டாம்.


பி.கு:

எழுதாமல் இருந்தால் ‘ஏன் எழுதுவதில்லை?’ என்று கேட்க வேண்டியது. எழுதினால் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியது. ஆனால், பெண் பதிவர்கள் பதிவுகளுக்கு மட்டும் தவறாமல் போய் கருத்தும் எழுதி, த.ம.ஓ.ந-வையும் குறிப்பிட வேண்டியது.

வலையுலகம் மாறவேயில்லை. அட போங்கய்யா!