Saturday, March 30, 2013

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்



சமர்ப்பணம்:

ஜனவரி, பிப்ருவரி, மார்ச் என்று கணக்குப் பார்க்கிறவர்கள் போலன்றி, ஜனவரி, பிப்ருவரி, மார்ச்சுவரி என்று செத்துச் சுண்ணாம்பாகும் அக்கவுண்டண்டுகளுக்கு......!



மெட்டு: கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்





கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்- தினம்

கண்பிதுங்கி எண்ட்ரிகளைப் போட வேண்டும்

வரவின்றிச் செலவெழுதி வாழ வேண்டும்-பலர்

வாய்நோக ஏசுவதைக் கேட்க வேண்டும்

                                                                                              

(கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்)


எத்தனை வவுச்சரடா! ஏராளம் டார்ச்சரடா!

இத்தனை வேலைசெய்தும் இவன்மீதே பாய்ச்சலடா!-ஒரு

பற்றின்றி வாழ்பவர்க்கு வைத்தபெயர் சித்தரடா

பற்றுடன் வரவுவைக்கும் கணக்கர்கள்தான் பித்தரடா



(கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்)


தணிக்கை நரகமடா! தலையின்மேல் கரகமடா!

ஆடிட்டர் என்ற பேரில் பீடித்திடும் கிரகமடா!

புழுவாய்ப் பிறந்திடினும் குற்றமே இல்லையடா

பூமியிலே கணக்கனென்றால் சாகும்வரை தொல்லையடா!



கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்- தினம்

கண்பிதுங்கி எண்ட்ரிகளைப் போட வேண்டும்

வரவின்றிச் செலவெழுதி வாழ வேண்டும்-பலர்

வாய்நோக ஏசுவதைக் கேட்க வேண்டும்


பின்குறிப்பு: 

கேலிச்சித்திரத்தில் உள்ள எனது உருவம் நேரில் பார்ப்பதை விடவும் அழகாக இருந்தால், அதற்கு கம்பனி பொறுப்பேற்காது!

Friday, March 15, 2013

மசாலாவே மங்கையின் பாக்கியம்



வேண்டுகோள்: இணையம் பக்கவே வர இயலாத சூழல். சகபதிவர்களின் பல அருமையான இடுகைகளை வாசிக்கவும், கருத்திடவும் முடியாமல் போயிருப்பதோடு, எனது இடுகைகளுக்குப் பின்னூட்டமிட்டவர்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்லவும் முடியாத நிலை. புரிந்துகொண்டு, பொறுத்தருளுமாறு கோருகிறேன். அனைவருக்கும் நன்றி!



மசாலாவே மங்கையின் பாக்கியம்

                ஞாயிற்றுக்கிழமை!
     
      கணவர் கிட்டாமணி வீட்டிலிருக்கிற வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்று, பலநாள் தயக்கத்தை உதறிவிட்டு, துணிச்சலாக பாட்னா பருப்புருண்டைக் குழம்பு செய்துமுடித்த பாலாமணி, எதற்கும் இருக்கட்டும் என்று தாயே காமாட்சி, என் மாங்கல்யத்தைக் காப்பாத்து,’ என்று வேண்டிக்கொண்டிருந்தாள். பிட்சாவுக்காகக் காத்திருக்கும்போது பிச்சைக்காரன் வந்து கதவைத் தட்டுவதுபோல, அசந்தர்ப்பமாக அழைப்புமணி அடிக்கவே, எரிச்சலுடன் கதவைத் திறந்தாள். எதிரே ஆய்ந்துபோட்ட அகத்திக்கீரையின் தண்டைப்போல நின்றிருந்தவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போலிருந்தது.

              யாரு  நீங்க? அவரு வெளியிலே போயிருக்காரே!

          வந்துட்டாரு! இப்போ வெளியிலேதான் நின்னுட்டிருக்காரு!என்று அந்த நபர் அசட்டுச்சிரிப்பு சிரித்ததும், ‘இந்தக் கேவலமான அசட்டுச்சிரிப்பையும் இதற்கு முன்னால் எங்கோ பார்த்திருக்கிறோமேஎன்று பாலாமணி யோசித்துக் கொண்டிருக்கும்போதே...

          என்ன பாலாமணி, என்னைத் தெரியலியா?” எனவும், அகப்பையால் அலுமினியைச்சட்டியைச் சுரண்டுவதுபோலிருக்கிற இந்தக் கரகரப்பான குரலையும் இதற்கு முன்னால் எங்கோ கேட்டிருக்கிறோமேஎன்று யோசித்த பாலாமணிக்கு ‘கடல்‘ படம் பார்த்த கடைக்கோடி ரசிகனைப் போல, மிகவும் லேட்டாகப் புரிந்தது.

          அட நீங்களா?” என்று கணவனுக்கு வழிவிட்டாள். என்னாச்சுங்க, சலூனுக்குப் போனா எப்பவும் உரிச்ச கோழி மாதிரி வருவீங்க? இன்னிக்கு வித்தியாசமா, பொறிச்ச கோழி மாதிரி வந்திருக்கீங்களே? தலைக்கு டைபோட்டிருக்கீங்களா? புடிக்காதுன்னு சொல்லுவீங்களே? போறதுக்கு முன்னாடி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? நான்கூட யாரோ பழநிக்குப் பாதயாத்திரை போக பிச்சை கேட்க வந்திருக்காங்களோன்னு நினைச்சிட்டேன். கதவைத் திறந்தவுடனேயே சொல்லியிருக்கக் கூடாதா?”

                பாலாமணி! ஹேர்-கட் பண்ணிட்டு வந்திருக்கிற புருஷன்கிட்டே இவ்வளவு கேள்விகேட்டா எப்படி? பிய்ச்சுக்க முடிகூட இல்லை!

      ஹேர்-கட்டுக்கும் கேள்விக்கு பதில் சொல்றதுக்கும் என்னங்க சம்பந்தம்?அடுத்த கேள்வியை எடுத்து விட்டாள் பாலாமணி. “முடியை உபயோகிச்சா பதில் சொல்லப்போறீங்க? மூளையை உபயோகிச்சு பதில் சொல்ல வேண்டியதுதானே?

      மூளையா? இன்னும் என்னைப் பத்தின தப்பான அபிப்ராயம் மாறலியா?பெருமூச்சு விட்டார் கிட்டாமணி.

      சரிசரி, தெரியாத்தனமா மூளையை ஞாபகப்படுத்திட்டேன். வருத்தப்படாதீங்க,என்ற பாலாமணி, திடீர்னு எதுக்காக ‘டைபண்ணினீங்க? ஊருலே நாலு பேர் நாலுவிதமாப் பேச மாட்டாங்களா? ஏதோ, உங்க தலை நான் பண்ணற ஊத்தப்பம் மாதிரி பாதி வெள்ளை, பாதி கருப்பா இருந்தவரைக்கும் மத்தவங்க கண்ணுக்கு நான் ‘யங்காத் தெரிஞ்சிட்டிருந்தேன். இப்போ அதையும் கெடுத்திட்டீங்களா?

      நீ இப்படிச் சொல்றே. ஆனா, நிறைய பேரு நீதான் தலைக்கு ‘டைஅடிச்சிட்டிருக்கிறதா என்கிட்டே சந்தேகமாக் கேட்குறாங்க! அவங்க வாயை அடைக்கிறதுக்குத்தான் நானும் ‘டைபண்ணிக்கிட்டேன்.

      பரவாயில்லை. உங்க தலை முன்னேயெல்லாம் காக்கா எச்சம்போட்ட மாதிரி இருந்திச்சு. இப்ப பெட்டரா இருக்கு.

      எப்படி? மாடு சாணிபோட்ட மாதிரியிருக்கா?

      சரிசரி, போய்க் குளிச்சிட்டு வாங்க! இன்னிக்கு சாம்பார்பொடி, ரசப்பொடி, மசாலாப்பொடியெல்லாம் அரைச்சுத் தர்றதா பிராமிஸ் பண்ணியிருக்கீங்க! ஞாபகமிருக்கா?

      அதனாலேதானே ‘டைபண்ணினேன்? என்று அவசரத்தில் உளறிய கிட்டாமணி நாக்கைக் கடித்துக் கொண்டார்.

      என்னது?

      அதாவது...என்று சுதாரித்தார் கிட்டாமணி. “மில்லு திறந்திருக்கான்னு பார்க்கப் போயிருந்தேனா, எதிர்த்தாப்புலே சலூன் திறந்திருந்திச்சு. மசாலாவை நான் அரைக்கலேன்னா, என் தலையை நீ அரைச்சிருவேன்னு எதுக்கும் தயாரா ஹேர்-கட் பண்ணிட்டு வந்திட்டேன்.

      கணவரின் பதில் திருப்தியளிக்காவிட்டாலும், மசாலாவுக்காக மேற்கொண்டு கேள்வி கேட்காமல் நகர்ந்தாள் பாலாமணி.

      கிட்டாமணியும் தே.மு.தி.க-விலிருந்து தப்பித்த எம்.எல்.ஏவைப் போலக் குளியலறைக்குள் புகுந்தார். பாத்ரூம் வெண்டிலேட்டர் வழியாக எங்கிருந்தோ ‘தேரே மேரே பீச் மே...கைஸா ஹை யே பந்தன் அஞ்சானா...என்ற ‘ஏக் தூஜே கே லியேபாடல் கேட்டது. உடனே கிட்டாமணிக்கு, சில தினங்களுக்கு முன்னர், அரவை மில் அண்ணாசாமியைச் சந்தித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஃப்ளாஷ்-பேக்!

      கிட்டாமணி சார்! போனவாட்டி நீங்க மசாலா அரைக்க வந்தபோது என்ன நடந்ததுன்னு ஞாபகமிருக்கா?

     ஓ! என்னை நிக்க வைச்சிட்டு நீ லேடீஸுக்கு முதல்லே அரைச்சுக் கொடுத்துக் கடுப்பேத்தினே!

      அட அதில்லை சார்! உங்களுக்கு முன்னாலே ஒரு நார்த்-இண்டியன் லேடி நின்னுட்டிருந்தாங்களே! பார்க்கிறதுக்கு ஹிந்தி நடிகை ஷீலா தீட்சித் மாதிரி இருந்தாங்களே!

     உன் வாயிலே 100 கிராம் வரமிளகுப்பொடியைப் போட! அது ஷீலா தீட்சித் இல்லை; மாதுரி தீட்சித்! ஷீலா தீட்சித் முதலமைச்சர் தெரியுமா?

      ஏதோ ஒரு தீட்சித்! அந்தப் பொண்ணு தினமும் கடைக்கு வந்து உங்களைப் பத்தி விசாரிக்குது கிட்டாமணி சார்!

     என்னைப் பத்தி விசாரிக்குதா? எதுக்குய்யா?

     யாருக்குத் தெரியும்? நீங்க வந்தா உங்க வீட்டு அட்ரஸ், செல்போன் நம்பர் எல்லாத்தையும் கேட்டு வைக்கச் சொல்லிச்சு! எனக்குத் தெரியும்னாலும், உங்களைக் கேட்காமக் கொடுக்கிறது தப்புல்லியா?

      அது சரி, என்னை எதுக்குத் தேடுது அந்தப் பொண்ணு?

     என்ன கிட்டாமணி சார், இந்தக் காலத்துலே பொறுப்பா மசாலாவெல்லாம் அரைச்சுக் கொடுக்கிற ஆம்பிளைங்க கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்?

     ஏன், நீ கூடத்தான் நாள்பூராவும் மசாலா அரைக்கிறே?

      அது என் தொழில்சார். ஆனா, உங்களை மாதிரி வீட்டுக்காக மசாலா அரைக்கிற ஆம்பிளைங்க, கார்த்தி நல்ல படத்துலே நடிக்கிறதைவிட அபூர்வம் சார். அதுவும், உங்களைப் பத்தி விசாரிக்கும்போதெல்லாம், அதோட முகத்திலே தெரியுற சந்தோஷமிருக்கே! அந்த டிப்ரஷனை பார்த்தா உங்களுக்கே புரியும்.

     டிப்ரஷன் இல்லை. அது எக்ஸ்பிரஷன்! இப்போ நீ இங்கிலீஷ் பேசலேன்னு கலைஞர் பொதுக்குழுவைக் கூட்டித் தீர்மானமா போட்டாரு?

      சார், விஷயத்தைச் சொல்லிட்டேன். பார்த்து சூதனமா நடந்துக்குங்க! எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் இதை உங்க வீட்டு ஆன்ட்டிகிட்டே சொல்ல மாட்டேன்!

     என் சம்சாரத்தை நீ ஆன்ட்டின்னு சொன்னது தெரிஞ்சா என்னை ஆண்டியாக்கி பழனிக்கு அனுப்பிருவா! நீ ஏதோ தப்பாப் புரிஞ்சிட்டிருப்பேன்னு நினைக்கிறேன். அந்தப் பொண்ணு வயசென்ன, என் வயசென்ன? அது லஸ்ஸி டம்ளர் மாதிரி கும்முன்னு இருக்கு. நான் பேப்பர்-கப் மாதிரி நசுங்கிப்போய்க் கிடக்கேன். எதையாவது கற்பனை பண்ணி, என்னையும் உசுப்பேத்தாதே!

     நீங்க கேள்விப்பட்டதில்லியா? காதலுக்குக் கண்ணில்லேன்னு சொல்வாங்க தெரியுமா? முதல் மரியாதை படம் பார்க்கலியா நீங்க?

      அப்போ என் சம்சாரத்தை வடிவுக்கரசின்னு சொல்றியா?

     இல்லை சார், நீங்க சிவாஜி மாதிரின்னு சொல்றேன். அந்தப் பொண்ணு என்னதான் சொல்லுதுன்னு பார்க்கலாமே?

     இத பாரு, என் போன் நம்பர்லாம் கொடுக்காதே! அது வந்து விசாரிச்சா, அடுத்தவாட்டி மசாலா அரைக்க வரும்போது சந்திக்கலாம்னு சொல்லு. சரியா?

     குளியலறையில் கிட்டாமணியின் ஃப்ளாஷ்-பேக் முடிந்தது.

      குளித்து முடித்துவிட்டு, சீவிமுடித்துச் சிங்காரித்துக் கொண்டு, செண்ட் பூசிக்கொண்டு, கண்ணாடியின் முன்பு நின்று அழகுபார்த்தவாறே முணுமுணுத்தார்.

     தேரே மேரே பீச் மே....தேரே மேரே பீச் மே..

      அர்த்தம் தெரியாம எதுக்கு ஹிந்திப்பாட்டு பாடறீங்க?என்று கையில் காப்பியுடன் பாலாமணி வரவும், வெலவெலத்துப்போனார் கிட்டாமணி.

      யாருக்கு அர்த்தம் தெரியாது? தேரே மேரே பீச் மே...அப்படீன்னா, நானும் நீயும் பீச்சுக்குப் போலாமான்னுதானே அர்த்தம்?

      அப்படியில்லை....உனக்கும் எனக்கும் எப்படி இந்த உறவுன்னு அர்த்தம்...

      ஓஹோ!என்று கண்களை மூடிய கிட்டாமணியின் கனவுசீனை பாலாமணியின் காப்பி கலைத்தது.

      காப்பியைக் குடிச்சிட்டுக் கிளம்புங்க. சண்டேன்னா நிறைய கூட்டம் வரும்!

                ஏன் இப்படி அண்ணா ஹஜாரேயோட அடுத்த வீட்டுக்காரி மாதிரி எல்லா விஷயத்துக்கும் அவசரப்படுத்தறே?

      ஐயோ!பாலாமணி கிட்டாமணியின் தாவாங்கட்டையைப் பிடித்துக் கொஞ்சினாள். “இத்தனை வருஷத்துலே நீங்க ஒரு காரியம் பண்ணி, நான் ரொம்ப சந்தோஷப்பட்ட காரியம் என்ன தெரியுமா?

      உன்னைக் கட்டிக்கிட்டதுதானே?

      இல்லீங்க! நீங்க அரைச்சிட்டு வந்தீங்களே மசாலா! ஆஹா! நானும் எத்தனையோ வாட்டி அதே மில்லுலேதான் அரைச்சிட்டு வந்திருக்கேன். ஆனா, இந்த மணம், இந்தப் பக்குவம் இதுவரைக்கும் வந்ததேயில்லை. அதென்னமோ தெரியலேங்க, இந்தப் பொடியைப் போட்டுச் சமையல் பண்ணினா, அப்படியே ஒரு நார்த்-இண்டியன் வாசனை வருது!

      “என்னது? நார்த்-இண்டியன் வாசனையா?

      ஆமாங்க! அதுனாலே தான் நான் நம்ம ஊரு டிஷ் பேரையெல்லாம் கூட நார்த்-இண்டியன் பேரா மாத்திட்டேன். அலஹாபாத் அரைச்ச சாம்பார், கான்பூர் காரக்கொழம்பு, பாட்னா பருப்புருண்டைக் குழம்பு...

      பாட்னாவா? பானிபட் பருப்புருண்டைக் குழம்புன்னு வைச்சிருக்கலாமே?

      ஏன், அந்த ஊருலே என்ன விசேஷம்?

      மூணு போர் நடந்திருக்கே!

      சும்மாயிருங்க! எல்லாத்துக்கும் ஒரு கைமணம் வேணும்! நீங்க போனதுக்கப்புறம் நம்ம வீட்டு சாப்பாட்டு டேஸ்ட்டே மாறிடுச்சு! நீங்க ஒரு நாள் கூட கண்டுபிடிக்கவேயில்லையா?

      மூக்கைப் பிடிச்சிட்டுச் சாப்பிடறவன் எப்படிக் கண்டுபிடிப்பான்?

      என்னது?

      அதாவது, மூக்குமுட்ட சாப்பிடறவன் எப்படிக் கண்டுபிடிப்பான்னு கேட்டேன்.

      சரி, காப்பி ஆறிடப்போவுது. சூடாச் சாப்பிட்டுக் கிளம்புங்க!

      ரயிலுக்குப் போகிற அவசரத்தில் டாஸ்மாக்கில் குவார்ட்டர் அடிக்கிறவனைப் போல, ஒரே மடக்கில் பாலாமணியின் காப்பியை ‘ஆன் தி ராக் குடித்துவிட்டு, சிறியதும் பெரியதுமாய் இருந்த அடுக்குகளைத் தூக்கிக் கொண்டு அண்ணாசாமியின் அரவை மில்லை நோக்கி நடந்தார். அடுத்த வீட்டில் குடிவந்திருந்த சேட்டு வீட்டு டிவியில் ஹிந்திப்பாடல் கேட்டது.

தேரே மேரே பீச் மே...தேரே மேரே பீச் மே...!
     
      வாசலுக்கு வந்ததும் எதிரே ஒரு கழுதை வந்தது. நல்ல சகுனம் என்று எண்ணிக் கொண்டார். விரைந்து அண்ணாசாமி மில்லை அடைந்தபோது, கடையில் ஈ, காக்காயைக் காணோம்.

      அண்ணாசாமி, என்னாச்சு?

      அதான் தமிழிலே புதுசா மகாபாரதம் ஆரம்பிச்சிட்டாங்களாமே டிவியிலே? அது முடிஞ்சதுக்கப்புறம்தான் ஜனங்க வருவாங்க!

      மத்தவங்க வராட்டிப் பரவாயில்லை!என்று அண்ணாசாமியின் காதருகே சென்று கேட்டார். “அந்தப் பொண்ணு இன்னிக்கு வரும்னு சொன்னியே, வருவாளா?

      கிட்டாமணி சார்! உங்க வாயிலே சர்க்கரையைத்தான் போடணும். யாருமே வர மாட்டாங்களோன்னு நினைச்சேன். அங்க பாருங்க சார், அந்தப் பொண்ணே அன்ஃபார்ச்சுனேட்டா வந்திட்டிருக்கு பாருங்க!

      அன்ஃபார்ச்சுனேட் இல்லை; அன் எக்ஸ்பெக்டட்! நீ மிஷின்லே மசாலா அரைக்கிறதோட நிறுத்திக்க! இங்கிலீஷை ஒண்ணும் பண்ணாதே!என்றவாறு திரும்பிய கிட்டாமணி தூரத்தில் அந்தப் பெண் வருவதைப் பார்த்தார்.

      அண்ணாசாமி! உனக்கு ஹிந்தி தெரியுமா?

      தெரியாது!

      நல்ல வேளை!

      அந்தப் பெண்ணின் முகம் கிட்டாமணியைப் பார்த்ததும், முட்டக்கோசைப் போல மலர்ந்தது. ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்து கொண்டிருந்தாள்.

      கிட்டாமணி சார்! உங்களைவிட அந்தப் பொண்ணுக்குத்தான் எமர்ஜென்ஸி போலிருக்கு!

      அது எமர்ஜென்ஸி இல்லை; அர்ஜென்ஸி!

      நமஸ்தே!என்று கிட்டாமணியைப் பார்த்துக் கைகூப்பினாள் அந்தப் பெண். “போனவாட்டி மசாலா அரைக்க வந்தபோது, உங்க பாத்திரமும் எங்க பாத்திரமும் ஒரே மாதிரி இருந்ததாலே இந்த அண்ணாசாமி எங்க மசாலாவை உங்க டப்பாவுலேயும், உங்க மசாலாவை எங்க டப்பாவுலேயும் மாத்திப் போட்டுட்டார். இப்போ எங்க வீட்டுலே தினமும் சவுத்-இண்டியன் மணத்தோட சமைக்கிறோம். ஆனா, அதுவே எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! அதான் உங்க வொய்ஃப் கிட்டே கேட்டு சவுத்-இண்டியன் மசாலா எப்படி அரைக்கிறதுன்னு கேட்கணும்னு ஆசையாயிருக்கு! உங்க வீடு எங்கே இருக்கு அங்கிள்...?

      அந்தப் பெண் ‘அங்கிள்என்று சொன்னதும், கிட்டாமணியின் மண்டையில் ஒரு கண்டாமணி விழுந்ததுபோன்ற அதிர்ச்சி ஏற்பட்டது.

      டப்பா...மசாலா...சவுத்-இண்டியன்... நார்த்-இண்டியன்...சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிய கிட்டாமணியைப் பார்த்து அந்தப் பெண் குழம்பி நின்றாள். அடுத்து நடந்தவையெல்லாம்....எதற்கு, கிட்டாமணியின் வயிற்றெரிச்சலைக் கொட்டி ஆகப்போவது என்ன?

      ஒருவழியாக, கிட்டாமணி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதும், பக்கத்து வீட்டு சேட்டின் டிவியில் ஹிந்திப்பாட்டு கேட்டது.

     யே க்யா ஹுவா? கைஸே ஹுவா? கப் ஹுவா? க்யூன் ஹுவா?

     அப்படீன்னா என்ன அர்த்தம்?வீட்டுக்குள் நுழைந்ததும் பாலாமணியிடம் கேட்டார் கிட்டாமணி.

      இது என்னாச்சு? ஏன் ஆச்சு? எப்படி ஆச்சு?

      ஓஹோ!

      சோகப்பாட்டுங்க!

      அது மட்டும் நல்லாப் புரியுது!என்று சட்டையைக் கழற்றப் போனவரைப் பார்த்து, கண்ணாடியில் தெரிந்த பிம்பம் கைகொட்டிச் சிரித்தது.

********
 



Saturday, March 9, 2013

ஓ மானிட ஜாதியே!


பள்ளியிலிருந்து திரும்பியதும் விளையாடக் கிளம்பாமல், வானொலிப்பெட்டியருகே தவமிருந்த நாட்கள் அவை. மிகச்சரியாக மாலை ஐந்து மணிக்கு விவிதபாரதியில் அந்த விளம்பரம் ஒலிபரப்பாகும்.

      எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று
     பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று...என டி.எம்.சௌந்தர்ராஜனின் கழிவிரக்கம் கலந்த அறைகூவலைத் தொடர்ந்து.............

      விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் அளிக்கும் ‘வசந்த்த்த்த்த்த மாளிகைஎன்று வாணிஸ்ரீயின் குரல் ஒலிக்கும். ஆஹா! தவத்தின் பயன் கிடைத்து விட்டது.

      அன்றைய தினம் மங்களகரமாக முடிந்ததுபோன்ற உணர்வோடு கிளம்புவோம். நகரின் முக்கிய சந்திப்புகளில், பெரிய பெரிய தட்டிகளில் ஒட்டப்பட்டிருக்கும் ‘வசந்த மாளிகைபடத்தின் சுவரொட்டிகளைக் கண்டு ரசிப்போம். காரணம், ஒரு படத்துக்கு இத்தனை விதமாக, இத்தனை வண்ணமயமான போஸ்டர்களை அச்சிட முடியும் என்பதை ‘வசந்த மாளிகைபடத்திற்குப் பிறகுதான் புரிந்து கொண்டோம். படத்தின் போஸ்டர்கள் சென்னையிலும், சிவகாசியிலும் அச்சிடப்பட்டிருந்தாலும், அப்போதெல்லாம் நோட்டீசுகள் உள்ளூரிலேயே ஏதேனும் ஒரு அச்சகத்தில் ஒற்றைவண்ணத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். ஆனால், வசந்த மாளிகையின் நோட்டீசுகள் முதன்முறையாக வண்ண நோட்டீசுகளாக அச்சிடப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வைத்துக் கொள்வதும், நண்பர்களுடன் பண்டமாற்று செய்துகொள்வதும் ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது.

      வசந்த மாளிகைபடத்தின் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, 1973-ம் ஆண்டின் கையடக்கக் காலண்டர்கள் வழங்கப்பட்டன. சிவாஜி வாணிஸ்ரீயின் கழுத்தை மோப்பமிடுகிற படம், ஒரு கிண்ணத்தை ஏந்தி நிற்கிற படம், அதில் நான் சக்கரவர்த்தியடா என்று இடுப்பில் கைவைத்து நிற்கிறபடம், ‘என் காதல்தேவதைக்கு நான் கட்டியிருக்கின்ற ஆலயத்தைப் பார்என்று கைகாட்டுகிற படம், தரையில் உடைந்து கிடக்கும் மதுபாட்டிலைப் பார்த்து ‘என்னைக் காதலிச்சது உண்மைதானே?என்று கேட்கும் படம், ‘யாருக்காக?என்று இடதுகை தூக்கியபடி, வலதுதோளில் பச்சைக்கலர் சால்வை போர்த்திய படம் என்று எத்தனையோ படங்கள் போட்ட காலண்டர்கள். அத்தனையையும் சேர்த்து வைத்திருந்ததில் எனக்கு ஒரு அலாதிப் பெருமிதமே ஏற்பட்டதுண்டு.

      சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடியென்றாலே, அவர்களது திரைக்காதல் சற்று எரோட்டிக்காக இருப்பது ‘நிறைகுடம் படத்திலிருந்தே கவனிக்க முடிந்த ஒன்று. இப்போது சொல்கிறார்களே, கெமிஸ்ட்ரி-பயாலஜி என்று, அது அவர்களிடம் அபரிமிதமாய்க் காணக்கிடைக்கும். சில காட்சிகள் தணிக்கையின் கத்திரியிலிருந்து எப்படித் தப்பின என்ற கேள்வி, (அந்தக் காட்சிகளுக்காகவே திரும்பத் திரும்பப் பார்க்கிறபோதெல்லாம்) எழும். வசந்த மாளிகைசிவாஜி-வாணிஸ்ரீ ஜோடியின் ‘பெஸ்ட்என்றுதான் சொல்ல வேண்டும்.

      படத்தில் குழந்தைகளோடு வந்த பெற்றோர்கள் நெளிவதற்கான காட்சிகள் நிறையவே உண்டு. சில உதாரணங்கள் மட்டும்......

      முதலாவதாக, ஹோட்டலில் வேலைதேடி வருகிற வாணிஸ்ரீயை, மேனேஜர் ராம்தாஸ் பலவந்தப்படுத்த முயலும் காட்சி, அந்தக் காலகட்டத்தில் மிகவும் explicit ஆகக் கருதப்பட்டது. குடிமகனே பெருங்குடிமகனேபாட்டில் வருகிற சில வரிகளைக் கூர்ந்து கவனித்தால், கவியரசு கண்ணதாசனின் குசும்பு தெரியும். நாகேஷ் வாயைத் திறந்தாலே ‘ஜகஜகாஎன்பதும், ரமாபிரபா மற்றும் வி.கே.ராமசாமியுடன் அவர் அடிக்கிற கூத்தும்... அருவருப்பிலும் அருவருப்பாக இருக்கும். இது தவிர, ஆதிவாசிகள் விழாவில் மழையில் சிவாஜியும் வாணிஸ்ரீயும் ஆடிவிட்டு, (உண்மையில் இந்தக் காட்சிக்கு ‘அடியம்மா ராஜாத்தி சங்கதியென்ன.. நீ அங்கேயே நின்னுக்கிட்டா என்கதியென்னஎன்ற பாடல் படம்பிடிக்கப்பட்டு, பின்னால் கத்தரிக்கப்பட்டது.), இருவரும் ஈரத்தோடு நெருப்புமூட்டிக் குளிர்காய்கிற காட்சியில் குழந்தைகளைப் பெற்றோர்கள், ‘கண்ணைப் பொத்திக்கோஎன்று சொல்லியிருப்பார்கள். இப்படி இந்தப் படத்தைப் பற்றிப் பெருவாரியாக விமர்சிக்கப்பட்ட அம்சங்களின் பட்டியல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல் பட்டியலைவிட நீளம்!

      ஆனால், ‘வசந்த மாளிகைபல முந்தைய சாதனைகளைத் தகர்த்த படம். அதுவரை எம்.ஜி.ஆர். தன்வசம் வைத்திருந்த ‘வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை, சிவாஜி தட்டிப்பறித்த படம். எந்த ஒரு சிவாஜி ரசிகனைக் கேட்டாலும், ‘நான் 25 தடவை பார்த்தேன்; 30 தடவை பார்த்தேன்என்பார்கள். இத்தனை வருடங்களில் நான் திரையரங்கில் மட்டுமே 75 தடவைகள் பார்த்தேன். (இப்போது பார்த்ததைப் பற்றி, வேணாம்..... கோபம் உடம்புக்கு ஆகாது, கடைசிப் பத்தியில் பார்க்கலாம்)

      சிவாஜியென்றாலே ‘ஓவர்-ஆக்டிங்என்று சொல்லுவதும், சிவாஜி ரசிகர்களைக் கேணயர்களைப் பார்ப்பதுபோலப் பார்ப்பதும் அப்போது(ம்) இருந்த ஃபேஷன் தான். பல அதிசயப்பிறவிகள் ‘அவள் அப்படித்தான்’ ‘கிராமத்து அத்தியாயம்அக்ரஹாரத்தில் கழுதைபோன்ற படங்களைப் பார்த்துவிட்டு, ‘இந்த மாதிரிப் படம் வர மாட்டேங்குதே.... ஜிவாஜியும் எம்ஜாரும் சினிமாவைக் கெடுத்துப்போட்டாங்களே...என்று பிலாக்காணம் பாடுவார்கள். எழுத்தாளர் சுஜாதாவுக்கு சிவாஜி-எம்.ஜி.ஆரைக் கிண்டல் பண்ணுவது அல்வாய் சாப்பிடுவது மாதிரி. (அவரு என்னத்தைக் கிழிச்சாருன்னு எல்லாருக்கும் தெரியும்). ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்படத்தில் சாமுண்டி பாத்திரத்தில் சிவாஜி நடிக்காமல் இருந்திருந்தால், தயாரிப்பாளர் எஸ்.வி.சுப்பையா வீட்டுத் தோட்டக்காரன்கூட அந்தப் படத்தைப் பார்த்திருக்க மாட்டாரு! ஆனாலும் பாருங்க, இந்த முற்போக்கு சினிமா பண்டிதர்கள், கேசினோவிலும், ப்ளு டைமண்டிலும், பைலட்டிலும் இங்கிலிபீசு படத்தைப் பாத்துப்புட்டு எலிப்பாஷாணம் தின்னது மாதிரி பேஸ்தடிச்சு வெளியே வந்து, சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும்  காய்ச்சி எடுப்பாங்க. காய்ச்ச மரம்- கல்லடி பட்டது.

      சரி, படத்தைப் பத்திப் பேசுவோம்!

ஆனந்த்-சிவாஜி கணேசன்

      குருவிக்கூடு போன்ற ‘விக்குடன், ‘ஓ மானிட ஜாதியேஎன்று பாடியவாறு அறிமுகமாகும் ஆனந்த்(சிவாஜி) ஒரு பணக்காரக்குடிகாரனை அப்படியே கண்முன்பு கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். ‘புனர்ஜென்மம்படத்தில் வந்த குடிகாரனைப்போலன்றி, அவரது நடை,உடை, பாவனைகளில் ஒரு பணக்காரத்தனம் இருக்கும். இமேஜைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஹோட்டலில் கவர்ச்சி நடிகைகளுடன் ஆடி, நீச்சல்குளத்தில் பெண்களுடன் ஜலக்கிரீடை செய்து, வீட்டுக்குள்ளும் ‘குடிமகளேஎன்று ஏ.சகுந்தலாவை எசகுபிசகாய்க் கிள்ளி, ‘நான் ரொம்பக் கெட்டவன் என்றெல்லாம் ஒப்புக்கொள்கிற மாதிரி ஒரு பாத்திரத்தில் அப்போது நடிக்க சிவாஜியை விட்டால் யார் இருந்தார்கள்?

      நான் யாருக்காகப் பொறந்தேன்னு எனக்கே தெரியலே! என்று வேலைக்காரனாக வரும் வி.எஸ்.ராகவனிடம் ஒரு அரைப்புன்னகையுடன் சொல்கிற காட்சியே போதும். அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு அருமையான prelude கொடுத்திருப்பார். ‘வசந்த மாளிகைசிவாஜியின் நடிப்புக்கு இன்னொரு ஷோ-கேஸ் என்றால் மிகையல்ல. உதாரணத்துக்கு மூன்று காட்சிகளை மட்டும் இங்கு குறிப்பிட விருப்பம்:

      சிவாஜியின் காரியதரிசியான வாணிஸ்ரீயிடம் நாகேஷ் மரியாதைக்குறைவாகப் பேச, அவர் நாகேஷை ‘கெட் அவுட்என்று திட்டி அனுப்புவார். அடுத்த காட்சியில் சிவாஜி வந்து ‘நீ என்கிட்டே சம்பளம் வாங்குற வேலைக்காரி. தகுதியை மீறி அளவுக்கு மீறி நடந்துக்காதேஎன்று எச்சரிப்பார். வாணிஸ்ரீ அதற்கடுத்த காட்சியில் ராஜினாமா செய்ய, ‘இதுக்கெல்லாம் காரணம் என் பலவீனம்என்று மதுக்கோப்பையைக் காட்டி மன்னிப்புக் கோருவார். இந்த அடுத்தடுத்த காட்சிகளில் சிவாஜி கோபம், தர்மசங்கடம், கண்டிப்பு, பரிவு என்று பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விடுவார். நடிகர் திலகம்னா, நடிகர் திலகம் தான்!

      சிவாஜியின் அண்ணியாக வரும் சுகுமாரியிடம், சிவாஜியின் அம்மாவாக வரும் சாந்தகுமாரி, “உன் தங்கைக்கும் ஆனந்துக்கும் கல்யாணம் செய்துவைக்கலாமே?என்று கேட்க, அதற்கு சுகுமாரி ஏடாகூடமாக பதிலளிக்க, அவமானத்துடன் ‘குடிகாரன்கூட வருத்தப்படுற அளவுக்குப் பேசறதுதான் அவங்களுக்குத் தெரிஞ்ச மரியாதைஎன்று எழுந்து போகிற காட்சியில், யாரிடமிருந்தும் பாசம்கிடைக்காத ஒரு பணக்காரக்குடிகாரனின் கையாலாகாத்தனத்தைப் பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தியிருப்பார்.

      இரண்டாம் பகுதியில், சிவாஜியும் வாணிஸ்ரீயும் பிரிந்தபிறகு, வாணிஸ்ரீயின் தம்பி சிவாஜியைப் பார்க்க வர, அக்கா வரலியா? அவ வரமாட்டா, ரொம்ப அகம்பாவம் பிடிச்சவ. ஆனா, அவகிட்டே எனக்குப் பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்என்று ஒரு அலாதி சோகப்புன்னகையுடன் கூறுகிற காட்சி!

      விட்டால் எழுத எத்தனையோ காட்சிகள் இருப்பதால், போதும்...!

      இந்தப் படத்திலும் சிவாஜியை டைப்-காஸ்ட் செய்கிற பிரயத்தனங்கள் உண்டு. தன்னைத்தானே நொந்து கொண்டு சிவாஜி பாடுகிற பாடல்கள் (இரண்டு மனம் வேண்டும்,’ ‘யாருக்காக’) உண்டு. ரசிகர்களை மரமண்டைகள் என்றெண்ணி, நமக்குப் புரிய வேண்டுமே என்பதற்காக ‘விஷம்என்று எழுதப்பட்ட பாட்டிலிலிருந்து தக்காளி சூப்பைக் குடித்து ரத்தமாகக் கக்குகிற காட்சியுண்டு. சிவாஜி படங்களுக்கே உரித்தான கிளிஷேக்கள் இவை! சிவாஜி மட்டுமா, இதுபோன்ற கிளிஷேக்களிலிருந்து விடுபட்ட, எந்த க்ளிஷேக்களும் தேவையில்லாத நடிகர் யாராவது இருந்து, அறியத்தந்தால் தன்யனாவேன்.

      இந்தப் படத்தை இந்தியிலும் (பிரேம் நகர்) பார்க்க நேர்ந்ததால், ராஜேஷ்கன்னா (உவ்வ்வ்வே!) -ஹேமாமாலினி ஜோடியால் சிவாஜி-வாணிஸ்ரீ ஏற்படுத்திய ஜாலத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதைப் புரிந்ததால், ‘வசந்த மாளிகையும் சின்ன முதலாளி(சிவாஜி)யும் இன்றளவிலும் என் மனதைவிட்டு அகல மறுக்கிறார்கள்.

லதா(வாணிஸ்ரீ)

     யாரும் தவறாக எண்ணவில்லையென்றால், வாணிஸ்ரீ அவரது காலத்தின் மிகச்சிறந்த exhibitionist என்பதே எனது கருத்து. சிவாஜியுடன் பத்மினி இணைந்தபோது, அந்த ஜோடியில் ஒரு கம்பீரம் இருந்தது. சரோஜாதேவியுடன் சிவாஜி நடித்த படங்களில் கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது. ஆனால், சிவாஜி வாணிஸ்ரீ படங்கள் மிக சிருங்காரமயமாய் அமைந்தது தற்செயலா என்பது தெரியவில்லை. இந்தப் படம் வாணிஸ்ரீக்கும் ஒரு மைல்கல்தான்! அந்தப் பெரிய கொண்டை, முக்கால்கை ரவிக்கை, உடம்போடு ஒட்டிய மெல்லிய புடவை, முகத்தில் அடிக்கிறாற்போல புருவங்கள், தூளியிலிருந்து எட்டிப்பார்க்கிற குழந்தைபோல தொங்கும் மூக்கு, மிகுதியான ஒப்பனை இவையெல்லாவற்றையும் மீறி, அந்த ஜோடி புசுக்கென்று மனசுக்குள் இறங்கிவிட்டது. இப்போது பார்த்தாலும், அப்போது ரசித்ததைப் பற்றி கொஞ்சம் கூச்சத்தோடு எண்ணிப்பார்த்துப் புன்னகைக்க முடிகிறது.

      ஏறக்குறைய சிவாஜியையே ஆக்கிரமிக்கிற ஒரு கதாபாத்திரம் வாணிஸ்ரீக்கு! அவருடைய பாத்திரத்தையும் வசனம், காட்சிகள் மூலமாக, ஆரம்பம்தொட்டே வலியுறுத்திச் சொல்லியிருப்பார்கள். ஆகவே, சிவாஜி ‘ஏன் இப்படி செஞ்சே?என்று கேட்டதும், ரோஷப்பட்டுக்கொண்டு பிரிந்து போகிறபோது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை மேலும் உறுதிப்படுத்தப்படுவது போலவே இருக்கும்.

      சிவாஜியின் காரியதரிசியாக வரும்போது அவரது நடிப்பில் ஒரு கண்ணியம், கம்பீரம் தென்படும். உதாரணம், பாகப்பிரிவினையின்போது சிவாஜியை ஏமாற்றுகிற மாதிரி பத்திரம் தயாரிக்கப்பட்டிருக்க, அதை வாசிக்கிற வாணிஸ்ரீ ‘எந்தவிதமான பாத்யதையும் இல்லையென்று....என்று நிறுத்திவிட்டு, மீண்டும் ‘எந்தவிதமான பாத்யதையும் இல்லையென்று..என்று மீண்டும் அழுத்தமாகச் சொல்லும்போது, அரங்கம் அதிரும். அடுத்த காட்சியில், சிவாஜியின் அம்மாவிடம் தன்பக்கத்து நியாயத்தைத் தெரிவிக்கிற இடத்தில், அவரது உச்சரிப்பு, நடிப்பு படுபாந்தமாக இருக்கும். (charecterisation-ன்னா என்னான்னு பார்த்துப் படிச்சுக்குங்கப்பா கோடம்பாக்கத்துக் கத்துக்குட்டிங்களா)

      ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டுமுறை சொன்னதுபோல, வாணிஸ்ரீயின் இன்னொரு பலம் அவரது கவர்ச்சி. இந்தப் படத்தில் அதை முழுமையாக, போதும் போதுமென்று திகட்டுமளவுக்கு exploit செய்திருப்பார்கள். தமிழிலேயே இப்படியென்றால், தெலுங்கில் எப்படியிருந்திருக்குமோ, பார்த்தவர்கள் தெரிவித்தால், காதுகுளிரக்கேட்டு மனதை ஆற்றிக்கொள்வேன்.

கே.வி.மகாதேவன் & கவியரசு கண்ணதாசன்

      மாமாஎன்று இன்றளவிலும் இசைஞானியாராலும் போற்றப்படுகிற திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இந்தப் படத்தில் பல தினுசுகளில் மெட்டுக்களைப் போட்டு அசத்தியிருப்பார்.

      ஓ மானிட ஜாதியேபாடலைக் கவனியுங்கள். ஒரு விமானத்துக்குள் குத்து டான்ஸா ஆட முடியும்? இருக்கைகளுக்கு ஊடே நடந்தவாறு, கதாநாயகன் குடிபோதையில் பாடுகிற பாட்டு என்பதால், மெட்டு மிக மிக மெதுவாக ஆமைவேகத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

      ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்..ஏன்?ஏன்? ஏன்? என்ற பாடல் பார்ட்டி மூடுக்கு ஏற்றது மாதிரி மிக வேகமாக இருக்கும். ஒரு கிளப் டான்ஸ் என்றாலும், நடுவில் வருகிற “கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்என்ற சரணம் தொடங்குமுன்னர், “ஆ.....என்ற சிறிய ஆலாபனையையும் சேர்த்திருப்பார் கே.வி. கிளாசிக் ஜுகல்பந்தி!

      குடிமகனே...பெருங்குடிமகனேபாடலும் அதற்கான சூழலும் கொஞ்சம் விரசமானது. முதலாளி தனது அறையில் ஒரு பெண்ணோடு கும்மாளமிடுவதைப் பார்த்து, புதிதாக வந்த காரியதரிசி முகம்சுளிப்பதுபோன்ற காட்சி. மெட்டும், பாடல்வரிகளும், காட்சியமைப்பும், ஏ.சகுந்தலாவின் நடனமும் நிச்சயம் விசிலடிச்சான் குஞ்சுகளை (i.e….என் போன்றவர்களை) திருப்திப்படுத்துவதாக இருக்கும்.

      கலைமகள் கைப்பொருளே இந்தப் பாடல் ஒரு இசையமைப்பாளர், ஒரு கவிஞர், ஒரு இயக்குனர் ஆகியோரின் ஒருங்கிணைப்புக்கு மிகச்சிறந்த உதாரணம். வாணிஸ்ரீ வீணையை மீட்டியவாறு பாடும் இந்தப் பாடலின் வரிகளில் இரண்டு பொருள் வருமாறு எழுதியிருப்பார் கவியரசு கண்ணதாசன். நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்டஎன்ற வரிகள் போதும், சூழலுக்கேற்ற பாடல்வரிகளை எழுதுவதில் இன்னும் ஏன் கண்ணதாசனை நிறைய பேர் நினைவுகூர்கிறார்கள் என்பதை விளக்குவதற்கு!

      மயக்கமென்ன இந்த மௌனமென்ன?பாடல் காதல்மயம். “அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன். கண்ணதாசன் இறக்கவில்லை; இன்னும் இருக்கிறார் அவரது வரிகளாய்! இந்தப் பாடலுக்கு நடுவில் வருகிற ஸ்லோ மோஷன் காட்சிகளை இப்போது பார்ப்பவர்கள் நக்கல் செய்யலாம். ஒரு தகவல். ‘வசந்த மாளிகைபடத்தில்தான் முதன்முறையாக தமிழில் ‘ஸ்லோ மோஷன்காட்சிகள் காட்டப்பட்டன. அதையடுத்து, ‘அவள்என்ற படத்தில். (அதைப் பற்றி எழுதினால், இருக்கிற பெண் வாசகிகளும் ஓடிவிடுவார்கள்.)

     இரண்டு மனம் வேண்டும்; இறைவனிடம் கேட்பேன் பாடல் கதாநாயகன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதைக் காட்டுகிற பாடல். காதலி கோபித்துக் கொண்டுபோக, ஆரோக்கியம் குலைந்த நிலையில், மருத்துவரின் ஆலோசனைப்படி மதுவருந்த முடியாதபடி, காதலிக்கு அளித்த சத்தியம் தடுக்க, ஊசலாடுவது போன்ற ஒரு நிலை!

      கண்களின் தண்டனை காட்சிவழி
     காட்சியின் தண்டனை காதல்வழி
     காதலின் தண்டனை கடவுள்வழி
     கடவுளை தண்டிக்க என்ன வழி?
      கண்ணதாசா! கண்ணதாசா!

     யாருக்காக இது யாருக்காக? படத்தின் கிளைமேக்ஸ் காட்சி. நிச்சயித்தபடி காதலிக்கும் இன்னொருவனுக்கும் திருமணம் நடக்குமென்று, தான் கட்டிய மாளிகையில் சோகத்தோடு பாடி, கதாநாயகன் விஷமருந்த, அங்கே திருமணம் நின்றுபோக, கதாநாயகியை நாயகனின் அம்மா அழைத்துக்கொண்டு வர, மழையும், இடியும், மின்னலும், பார்வையாளர்களின் ‘த்சு..த்சு..த்சுக்களும் சேர்ந்து ஏகமாய்ப் பரபரப்பேற்றுகிற காட்சி.

      ஓவ்வொரு பாடலின் மெட்டும் ஒவ்வொரு ரகம். பாடலுக்கேற்ற வரிகள்.

      கொசுறு தகவல்: கேரளாவில் பல ஊர்களில் ‘வசந்தமாளிகைதிரையிடப்பட்டபோது, ‘நீ விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுன்னு சொன்னே...விஷத்தைக் குடிக்கக்கூடாதுன்னு சொல்லலியேஎன்று ரத்தம் கக்கியவாறு கதாநாயகன் சாய, கேமிரா ஊய்ங்க்...ஊய்ங்க்...என்று சுற்றி, கூரையில் தொங்கும் சிவப்பு விளக்கைக் காட்டுவதோடு முடிக்கப்பட்டது. ஆனால், நம்மூரில் தமிழ் சினிமாவின் ஆஸ்தான டாக்டரான எஸ்.வி.சஹஸ்ரநாமம் வந்து “நல்ல நேரத்துலே ஆனந்தைக் கூட்டிக்கிட்டு வந்தீங்க. இன்னும் கொஞ்சம் தாமதமாயிருந்தா படம் ஃப்ளாப் ஆகியிருக்கும்“ என்று சொல்வதுபோல முடித்திருந்தார்கள். வியாபாரம் கண்ணா, வியாபாரம்

வசனம்-பாலமுருகன்

      சரின்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது! ராம்தாஸை அடித்துப்போட்டு விட்டு, சிவாஜி சொல்லும் இந்த வசனம் ஒரு விதத்தில் பஞ்ச் டயலாக் என்று கொள்ளலாம்.

      இங்கே பெத்த தாயை மகன் பார்க்கிறதா இருந்தாலும் அனுமதியோடத்தான் பார்க்கணும். அதான் எங்க ஜமீன் கௌரவம்..இல்லை கர்வம்! என்று வாணிஸ்ரீயிடம் சிவாஜி சொல்கிறபோதும் தியேட்டர் கலகலக்கும்.

      நான் காதலிக்கிற பொண்ணு எனக்குத்தேவையில்லை; என்னைக் காதலிக்கிற பொண்ணுதான் எனக்குத்தேவை!என்று அண்ணன் பாலாஜியின் மூக்குடைக்கிற காட்சியில் கைதட்டல் காதைப்பிளக்கும். (இந்த வசனத்தை அதுக்கப்புறம் எத்தனை படத்திலே சொருவிட்டாங்கய்யா சாமீ....?)

      இதோ உங்க பணம்! இது என் ராஜினாமா,என்று வாணிஸ்ரீ சொல்ல, “ஒண்ணு என் அதிகாரம். ஒண்ணு உன் அகம்பாவம்என்று சிவாஜி பதிலளிப்பார்.

      படம் முழுக்க பாலமுருகன் என்ற, அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒரு அற்புதமான வசனகர்த்தாவின் திறமை விரவிக்கிடந்தது. சிவாஜியைக் கொஞ்சம் நீளமான வசனம் பேச வைக்க வேண்டுமென்பதற்காக, “அனார்கலிக்கு சமாதி கட்டின அக்பர் சாம்ராஜ்யம் என்னாச்சு? அம்பிகாபதிக்கு மரணதண்டனை கொடுத்த குலோத்துங்கனோட ஆட்சி எங்கே போச்சு?என்பன போன்ற பாண்டித்தியமான வசனங்களும் உண்டு.

      ஆனால், திருஷ்டி போல நாகேஷ் பேசுகிற வசனங்கள் சில சமயங்களில் ஆண்களையே முகம் சுளிக்க வைத்தன என்பதும் உண்மை.

உதிரிக்கதாபாத்திரங்கள்

      வி.எஸ்.ராகவன் சிவாஜியின் விசுவாசமான வேலைக்காரராக வந்து, முடிந்தவரை மண்டையை ஆட்டாமல், பல முக்கியமான காட்சிகளில் உருக்கம் சேர்த்திருப்பார். ஆணவம்பிடித்த கதாபாத்திரங்கள் என்றால், பாலாஜிக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி; ‘எங்கிருந்தோ வந்தாள்படத்துக்குப் பிறகு, இந்தப் படத்திலும் சிறுவேடமானாலும் கலக்கியிருப்பார். சிவாஜியின் அப்பாவாக வரும் எஸ்.வி.ரங்காராவ், படம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே இறந்துபோனதால், இறுதிக்காட்சிகளில் அந்தச் சிங்கத்துக்கு யாரோ டப்பிங் குரல் கொடுத்திருப்பார்கள். ஆயாவாக வந்த புஷ்பலதா கண்ணியம், கருணையுடன் கண்ணீரும் கம்பலையுமாய் அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொள்வார். வாணிஸ்ரீயின் தந்தையாக வேட்டியில் வருகிற மேஜர் சுந்தர்ராஜன் இந்தப் படத்தில் தமிழில் மட்டுமே பேசி நம் மீது கருணை காட்டியிருப்பார். அவரது மகனாக வரும் ஸ்ரீகாந்த் வலிப்பு வந்தவர் மாதிரி நிற்கும்போதும் காலாட்டியவாறே வசனம்பேசி எரிச்சலைக் கிளப்புவார். ஸ்ரீகாந்தின் மனைவியாக வரும் குமாரி பத்மினியின் கற்பு அனேகமாக இந்த ஒரு படத்தில் தான் கடைசி வரை வில்லனிடமிருந்து (இல்லாமல் தொலைந்ததால்)  காப்பாற்றப்பட்டது என்று நினைக்கிறேன். பண்டரிபாய் வழக்கம்போல! ‘சித்தப்பா சித்தப்பாஎன்று ஓடிவரும் போண்டாமூக்கு பேபி ஸ்ரீதேவியைப் பார்த்தால், இங்கிலீஷ் விங்கிலீஷ் பார்த்தவர்கள் சிரித்துச் சிரித்துக் கழுத்துச் சுளுக்கிக் கொள்ள நேரிடலாம்.

      காதல்,மணம்,குணம் நிறைந்த மசாலாவான ‘வசந்த மாளிகைஒரு செமத்தியான ஃபார்முலா படம். எல்லாப்படத்திலும் காலில் ஆணிவந்த மாதிரி கடுப்பான எக்ஸ்பிரஷனைக் காட்டிக் கழுத்தறுக்கிற சில புதுமுகங்கள் ஒரு நடை வசந்தமாளிகை பார்த்தால் கொஞ்சம் சொரணை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு படம் ஓடியதும், ஓவராய்க் கத்தி, ஓவராய் பாடி லாங்குவேஜ் காட்டுகிற அஞ்சலியும், உலகமே மூழ்கினாலும் நடிக்க மாட்டோம் என்று வைராக்கியமாய் இருக்கிற ஹன்ஸிகா, ஸ்ரேயா போன்ற பார்பி பொம்மைகளும் கூட இந்தப் படத்தைப் பார்த்தால், சப்பாத்தியுடன் கூடுதலாய் இரண்டு பச்சை மிளகாய் சாப்பிட்டதுபோல உணர்ச்சி பெற்றாலும் பெறலாம்.

வணக்கம்

       நான் சிவாஜியின் ரசிகன் ‘அவன் தான் மனிதன்படம் வரைக்கும். அதன்பிறகு, சிவாஜி மீது ஏற்பட்ட சலிப்புக்கு அவரே காரணம். இருந்தாலும், ‘வசந்த மாளிகைபோன்ற படங்களைப் பார்க்கும்போது, அவர் ஏன் சிவாஜியாய் இருந்தார் என்பதும், நாம் ஏன் அவரது ரசிகராய் இருந்தோம் என்பதும் மீண்டும் நிரூபணமாகிறது. இன்றைக்கு கமல், ரஜினி நடித்த படங்களைக் கூட ரீமேக் பண்ணி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், சிவாஜி நடித்த படங்களை ரீமேக் செய்து நடிக்கிற துணிச்சல் எந்த நடிகருக்காவது இருக்கிறதா என்று நானும் நப்பாசையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் சிவாஜி!

      கடைசியாய், இந்த டிஜிட்டல் ‘வசந்த மாளிகைகுறித்து ஒரு வார்த்தை....

      சீரியசா எழுதாதே சேட்டை!ன்னு சிலர் சொல்லக்கேட்டு, புச்சா ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு இடுகையும் போட்டேன். சும்மாயிருந்ததைச் சொறிஞ்சு கெடுத்தா மாதிரி, அதுலே என்னென்னத்தையோ சேர்க்கப்போயி, அந்த வலைப்பதிவைக் காக்கா தூக்கிட்டுப்போயிருச்சு. எதுக்குச் சொல்ல வர்றேன்னா, தயிர்சாதத்துலே கிஸ்மிஸ் பழம் போடுறது தப்பில்லை. அதுக்காக, தயிர்சாதமா பஞ்சாமிர்தமான்னு குழம்ப வைச்சிரக்கூடாது. இதைத்தான் ‘வசந்த மாளிகைடிஜிட்டல் தயாரிப்பாளர்கள் செய்திருக்கிறார்கள்.

      மோனோ சவுண்டை ஸ்டீரியோ ஆக்குகிற தொழில்நுட்பம் வளரவில்லையா அல்லது கர்ணன் படத்தின் மறுவெளியீடு தந்த மப்பில் ஆளாளுக்கு சிவாஜியின் பழைய படங்களை ரவுண்டு கட்டி அடிக்கிறார்களா தெரியவில்லை. கூட ஒரு ட்ராக்கைச் சேர்த்து அதில் கொசுறாய் இசை சேர்த்து அவஸ்தைப்படுத்துகிற கொடுமையை நிறுத்துங்க என்று கூச்சலிட வேண்டும் போலிருக்கிறது. நாஸ்டால்ஜியா என்ற ஒரு கருமம் இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, படத்தின் ஒரிஜினாலிட்டியைச் சிதைக்காமல் எடுக்க முடிந்தால் செய்யுங்கள். இல்லாவிட்டால், இருக்கவோ இருக்கிறது மாமனார்-மருமகள், அண்ணன் கொழுந்தன் கதைகள் காசு பார்க்க! இப்படி சிவாஜி ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டி, பாவத்துக்கு ஆளாகாதீர்கள்!

                பி.கு: இருக்கீங்களா, தூங்கிட்டீங்களா?