Tuesday, August 17, 2010

மெய்யாலுமா....?

"டாக்டர், நாடு எவ்வளவு சுபிட்சமாயிடுச்சுன்னு பார்த்தீங்களா? தெருவெல்லாம் பாலும் தேனும் வழிஞ்சு ஓடிட்டிருக்கு! ஆனா, ஒருத்தரும் கண்டும்காணாத மாதிரி போயிட்டே இருக்காங்களே, ஏன் டாக்டர்?"

அரோகரா ஆஸ்பத்திரியின் எமர்ஜன்ஸி வார்டில் படுத்திருந்த சேட்டைக்காரன், அங்கிருந்த டியூட்டி டாக்டர் குஞ்சிதபாதத்திடம் இப்படிக் கேட்கவும், அவரது நெற்றி பார்சலில் மடக்கிய பரோட்டாவைப் போல சுருங்கியது. 'மெகா டிவி'யில் ’ஆலயமணி’ படம் பார்த்துவிட்டு வந்தவரைப் போல, அருகிலிருந்த சேட்டையின் நண்பர்கள் சுரேந்திரனையும், வைத்தியையும் சிவாஜி மாதிரி புருவத்தை உயர்த்தியபடி பார்த்தார்.

"உங்க ஃபிரண்டு எவ்வளவு நாளா இப்படிப் பேசிட்டிருக்காரு?" என்று கிசுகிசுப்பாகக் கேட்டார் குஞ்சிதபாதம்.

"இன்னிக்கு சாயங்காலத்துலேருந்து தான் டாக்டர்," என்று விசனத்தோடு சொன்னான் சுரேந்திரன்.

"ஆனா, இப்படியெல்லாம் ஆகும்னு நேக்கு முந்தியே தெரியும் டாக்டர்," என்று இடையே புகுந்தான் வைத்தி. "இவன் ஒரு ஆறுமாசமா வலைப்பதிவெல்லாம் எழுதிண்டிருக்கான்! வேண்டாம் வேண்டாம்னா கேட்டானா அபிஷ்டு? அந்தப் பாவமெல்லாம் சும்மா விடுமா? பாருங்கோ, புத்தியே பேதலிச்சுப் போயிடுத்து!"

"அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடாதீங்க! எங்க சீனியர் டாக்டர் ஊளம்பாறை உலகப்பனுக்கு போன் போட்டிருக்கேன்! அவர் வந்து பார்த்து என்ன சொல்றாருன்னு பார்ப்போம்! அது சரி, சமீபத்திலே சேட்டைக்காரன் அதிர்ச்சி அடையுறா மாதிரி ஏதாவது சம்பவம் நடந்ததா?"

"நார்மலாவே அவன் மூஞ்சி இப்படித்தான் பெயின்ட் வச்சிருந்த பிளாஸ்டிக் பக்கெட் மாதிரி இருக்கும்! ஆனா, 'ராவணன்' படம் பார்த்திட்டு தாத்தா,பாட்டி ஞாபகமெல்லாம் வந்திருச்சிடான்னு ஓன்னு அழுதான். அடுத்தநாள் ஆஃபீசுக்குப் போயி பிராவிடண்டு ஃபண்ட் பேப்பரெல்லாம் வாங்கிக் கையெழுத்துப் போட்டுட்டான்னா பாருங்களேன்! அவனோட பதிவைப் படிச்சு அவனே சிரிச்சுக்குவான்! இண்ட்லீலேருந்து இடுகை பாப்புலர் ஆயிடுச்சுன்னு மடல் வந்தா ’ஆத்தா,நான் பாஸாயிட்டேன்,"னு கூவுவான். ஆனா, இன்னிக்கு சாயங்காலத்திலேருந்து தான் இந்த மாதிரி புதுசு புதுசாப் பேத்த ஆரம்பிச்சான்!"

"தட்ஸ் ஓ.கே! பிளாகர்ஸ்னா கொஞ்சம் அப்படி இப்படித் தான் பேசுவாங்க! எக்ஸாக்டா அவர் என்ன சொன்னாருன்னு சொல்லுங்க!" என்று மேஜர் சுந்தர்ராஜனைப் போல தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"ரூமுக்குள்ளே வந்ததுமே, இன்னிக்கு உடுப்பி கிருஷ்ணபவனுக்குப் போயி, காண்டாமிருக காரக்குழம்பும், அனக்கோண்டா அவியலும் சாப்பிடணும்னு சொன்னான் டாக்டர்!"

"என்னது?" டாக்டர் குஞ்சிதபாதம் கூவியே விட்டார். "அப்புறம்?"

"சீக்கிரம் குளிச்சிட்டுக் கிளம்பணும், கேட்டுலே பில் கேட்ஸ் ஆட்டோவிலே வெயிட் பண்ணிட்டிருக்காருன்னான்!" தயங்கித் தயங்கிச் சொன்ன சுரேந்திரனுக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது.

"யாரு பில் கேட்ஸா?"

"ஆமாம் டாக்டர்," என்று வலுக்கட்டாயமாக சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசிய வைத்தி, "என்னடா கன்னாபின்னான்னு உளர்றேன்னு கேட்டா, ஸ்ரேயா இவனைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு ரஜினிகாந்தைத் தூது அனுப்பியிருக்கிறதாகவும், அதைக் கேட்டதுலேருந்து தலைகால் புரியலேன்னும் சொல்லுறான் டாக்டர்!"

"ஐயையோ, இது முத்திடுச்சு போலிருக்கே!" என்று டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சேட்டைக்காரன் மீண்டும் முனகும் சத்தம் கேட்டது.

"டாக்டர், சீக்கிரமா டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர்! முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் கம்பனியை என்கிட்டே கொடுத்திட்டு சந்நியாசம் வாங்கிட்டு ரிஷிகேசம் போகப்போறாராம். நான் போய் சார்ஜ் எடுத்துக்கணும் டாக்டர்!"

"மிஸ்டர் சேட்டை! உங்களுக்கு என்ன பண்ணுது? தலைசுத்துதா? மயக்கமா வருதா?"

"ஆமா, கொஞ்சம் அசந்தா மாங்காய் வேணுமா, சாம்பல் வேணுமான்னு கேட்பீங்க போலிருக்கே? சும்மா சிவனேன்னு கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு இந்தப் பாவிங்க கூட்டிட்டு வந்தா, டைனோசருக்கு டயரியா வந்தா போடுற ஊசியைப் போட்டுட்டீங்களே டாக்டர்! டேய், நண்பர்களாடா நீங்க? நாளைக்கு பிரணாப் முகர்ஜீ எல்.ஐ.சி.பில்டிங்கை எனக்கு எழுதி வைக்கப்போறாரு! உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு அஞ்சு மாடியைக்கொடுத்திட்டு, எனக்கு நாலுமாடி மட்டும் போதுமுன்னு பெருந்தன்மையா நினைச்சிட்டிருக்கேன். போங்கடா, உஙக்ளுக்கு பேஸ்மெண்ட் கூட கிடையாது போங்கடா!"

"திஸ் ஸீம்ஸ் டு பீ ய டெர்ரிபிள் கேஸ் ஆஃப் சிவியர் சைக்கோஸோமேட்டிக் டிஸீஸ்!" என்று கொலம்பஸின் கொள்ளுப்பேரன் போலக் கூறினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"அப்படீன்னா ஆபத்துதான், எதுக்கும் தமிழிலே ஒருவாட்டி சொன்னீங்கன்னா நாங்களும் புரிஞ்சுப்போம்," என்று அடக்கமாகச் சொன்னான் சுரேந்திரன்.

"உங்க ஃபிரண்டுக்கு மறை கழண்டிருக்குன்னு சொன்னேன்," என்று டாக்டர் குஞ்சிதபாதம் சற்றே உரக்கக் கூறவும், 'காக்க காக்க' கிளைமேக்ஸில் சூர்யா எழுவது போல, படுக்கையிலிருந்து துள்ளியெழுந்த சேட்டைக்காரனைப் பார்த்து அனைவரும் வெலவெலத்துப்போயினர்.

"யாருக்கு மறைகழண்டிருக்கு? இதோ நிக்குறானே வைத்தி, இவன் இன்ஃபோசிஸ் சேர்மேன் தானே?"

"டேய், நான் இன்ஃபோசிஸ் சேர்மேன் இல்லேடா! இண்டியன் காப்பி ஹவுஸ் வாட்ச்மேன்!" என்று அலறினான் வைத்தி.

"பொய் சொல்றான் டாக்டர்! இதோ இந்த சுரேந்திரன், கேரளாவோட முக்கிய மந்திரி தெரியுமா?"

"எண்டே குருவாயூரப்பா, என்னை ரட்சிக்கணே!" என்று குருவாயூரப்பனை வேண்டியபடி கும்மிடிப்பூண்டியின் திசையை நோக்கிக் கும்பிட்டான் சுரேந்திரன்.

"பார்த்தீங்களா டாக்டர், மலையாளத்துலே ஆமான்னு எவ்வளவு சுருக்கமா சொல்றான் பாருங்க!"

"மிஸ்டர் சேட்டை, நீங்க சொல்றது எதுவுமே நம்புறா மாதிரியே இல்லையே?" டாக்டர் குஞ்சிதபாதம் படுகிற அவஸ்தையைப் பார்த்து, எமர்ஜன்ஸி வார்டில் பம்மியபடி நின்றுகொண்டிருந்த நர்சுகள் பன்றிக்காய்ச்சல் வந்தவர்கள் போல வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தனர்.

"டாக்டர், பவுன் தங்கம் விலை பத்து ரூபாய்! நம்புறீங்களா...?"

"பத்து ரூபாயா...ஹிஹி..எப்படி நம்புறது...?"

"ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கினா ரெண்டு கிலோ வெண்டைக்காய் ஃப்ரீ! நம்புறீங்களா...?"

"என்ன விளையாடறீங்களா சேட்டை? இதை எப்படி....நம்புறது...? ஹிஹிஹி...!"

"தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாரும் பக்கத்துப் பக்கத்துலே உட்கார்ந்து தமிழ்நாட்டு வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தியிருக்காங்க! நம்புறீங்களா?"

"சேட்டை!" டாக்டர் குஞ்சிதபாதத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "நீங்க ஒரு பேஷியண்டா இருக்கீங்களேன்னு பார்க்கிறேன்! ஜோக் அடிக்கிறதுக்கு ஒரு அளவில்லையா? பவுன் தங்கம் பத்து ரூபாய் விக்கலாம்; ஒரு கிலோ கத்திரிக்காய்க்கு ரெண்டு கிலோ வெண்டைக்காய் ஃப்ரீயாக் கிடைக்கலாம். ஆனா, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் மேலே விளையாட்டுக்காகக் கூட இப்படியொரு அபாண்டமான பழியைப் போடாதீங்க! உங்க நாக்கு அழுகிடும்! தி.மு.கவும், அ.தி.மு.கவும், காங்கிரஸும், கம்யூனிஸ்டும் உட்கார்ந்து பேசினாங்களாம். அதுவும், தமிழ்நாடு வளர்ச்சியைப் பத்திப் பேசினாங்களாம்! இன்னொருவாட்டி இப்படி சொன்னீங்க, அவுட்-பாஸ் போட்டு கீழ்ப்பாக்கத்துக்கே அனுப்பிடுவேன்! ஆமா!" என்று தாள முடியாமல் பொரிந்து தள்ளினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"டாக்டர்! இதோ பாருங்க! நியூஸ் வந்திருக்கு!" என்று சேட்டைக்காரன் காட்டவும், டாக்டர் குஞ்சிதபாதமும், வைத்தியும் சுரேந்திரனும் உரலில் அகப்பட்ட உளுத்தமாவு போல இடிந்து போய் நின்றனர்.

தமிழக திட்டங்கள் தொடர்பான ஆலோசனை-திமுக,அதிமுக பங்கேற்பு

"சே..ட்..டை....!" குற்றாலமலை போல நிமிர்ந்திருந்த குஞ்சிதபாதம் கூவத்தைப்போல குறுகிவிட்டார். நோயாளியைக் குணப்படுத்த வேண்டிய டாக்டரே நொந்து நூலாய் விட்டதைப் பார்த்த வைத்தியும், சுரேந்திரனும் திறந்தவாய் மூடாமல் திகைத்துப்போய் நின்றனர்.

அதே சமயம்...!

"எஸ் டாக்டர் குஞ்சிதபாதம்! எங்கே நான் பார்க்க வேண்டிய பேஷியன்ட்...?" என்று கேட்டபடி நுழைந்தார் டாக்டர்.ஊளம்பாறை உலகப்பன்.

"டாக்டர்!" தமிழ்சினிமாவில் வில்லனிடம் கத்திக்குத்து வாங்கிய கதாநாயகனின் அப்பாவைப் போல இரைத்து இரைத்துப் பேசினார் குஞ்சிதபாதம். "இவர் தான் உங்க பேஷியன்ட் சேட்டைக்காரன்! நான் கிளம்பறேன் டாக்டர்!"

"எங்கே கிளம்பறீங்க டாக்டர் குஞ்சிதபாதம்..?"

"பவுனு பத்து ரூபாய்க்கு விக்குறாங்களாம். போய் ஒரு அரை டன் வாங்கிப் போடணும். ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கினா ரெண்டு கிலோ வெண்டைக்காய் ஃப்ரீயாம்! ரெண்டும் ஒவ்வொரு குவிண்டால் வாங்கி வீட்டுலே கொடுத்துக் கொழம்பு வைச்சா ரிட்டயர் ஆகிற வரைக்கும் வச்சுச் சாப்பிடலாம். இன்னிலேருந்து எனக்கு பத்துவருஷம் கேஷுவல் லீவு டாக்டர்....!"

"டாக்டர் குஞ்சிதபாதம்!...டாக்டர்! .டாக்டர்...!" என்று ஊளம்பாறை உலகப்பன் அழைப்பதைப் பொருட்படுத்தாமல், 'டெர்மினேட்டர்-III' அர்னால்டைப் போல இயந்திரமாக நடந்து வெளியேறினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"டாக்டர் குஞ்சிதபாதத்துக்கு என்ன ஆச்சு டாக்டர்?" என்று அக்கறையோடு கேட்டான் வைத்தி.

வாசலையே கண்ணிமைக்காமல் பார்த்தவாறே, பெருமூச்சுடன் டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் சொன்னார்:

"திஸ் ஸீம்ஸ் டு பீ ய டெர்ரிபிள் கேஸ் ஆஃப் சிவியர் சைக்கோஸோமேட்டிக் டிஸீஸ்!"

17 comments:

Mahi_Granny said...

மெய்யாலுமே சேட்டை பெரிய ஆளு தான் . எப்படி ஒரு பகிர்வு

Starjan (ஸ்டார்ஜன்) said...

அப்புறம் என்னாச்சி..

sathishsangkavi.blogspot.com said...

மீண்டும் சேட்டை...

சூப்பர்....

முகுந்த்; Amma said...

Good one with good message.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் .. இப்பதான் பழைய சேட்டை வருது...

vasu balaji said...

:)).mudiyala saami

பெசொவி said...

அலப்பறை தாங்க முடியலை, வாய் விட்டு சிரிச்சேன், ஆபீஸ்ல எல்லாரும் வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க, கலக்கல்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

Chitra said...

ha,ha,ha,ha,ha.... கலக்கல்...... பின்னிட்டீங்க!

Unknown said...

கலக்கலா இருக்கு பதிவு..

உண்மையிலயே நீங்க சேட்டைக்காரன் தான்..

நேரமிருக்கும் போது எனது பதிவையும் வாசியுங்கள்..
http://abdulkadher.blogspot.com/

அஷீதா said...

கலக்கல்ஸ் சேட்டை :))

Anonymous said...

இப்ப என்ன சொல்றீங்க???
தங்கம் விலை எவ்வளவு தான் விக்கிது??
கத்தரிக்காய் நிலை தான் என்ன??
அப்புறம் அந்த டாக்டர் பேர எத்தன நாளா யோசிச்சீங்க?????

Unknown said...

சேட்டை. சொல்ல வார்த்தையே இல்லை. அருமையா எழுதியிருக்கீங்க.

(நான் வேற ஏதாவது சொன்னா நீங்க சைபர் கிரைமுக்குத்தான் போவீங்க)

Ahamed irshad said...

ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌ அருமை..



தொ.ப‌திவு எழுதியாச்சு ச‌கா..
http://bluehillstree.blogspot.com/2010/08/blog-post_13.html

சிநேகிதன் அக்பர் said...

சேட்டை. இதுவும் டெரிபிள்தான். அசத்துறீங்க.

வெங்கட் நாகராஜ் said...

தங்கம் பத்து ரூபாய்க்குக் கிடைக்குதா, தோ போய் வாங்கிட்டு, அப்புறமா வந்து பார்க்கிறேன். :))))


வெங்கட்.

Thuvarakan said...

உண்மையிலயே நீங்க சேட்டைக்காரன் தான்..

நேரமிருக்கும் போது எனது பதிவையும் வாசியுங்கள்..
http://vtthuvarakan.blogspot.com/