Wednesday, August 31, 2011

’சில்க்’ வித்யாபாலன்

வித்யா பாலனை முதலில் பார்த்தது மணிரத்னத்தின் ’குரு’ படத்தில் தான். சற்றே உபரியாக நீண்ட நாசியுடன், பெரும்பாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, குறைவான பாத்திரத்தில் ஏறக்குறைய நிறைவாய் நடித்திருந்தாலும், கத்ரீனாவுடனோ, கரீனாவுடனோ அவசரப்பட்டு ஒப்பிடத் தோன்றவில்லை. அடுத்ததாய், ’பா’திரைப்படத்தில் முழுக்க முழுக்க படுபாந்தமாக புடவையில் வலம்வந்த வித்யாவைப் பார்த்தபோது, ’அட!’ சொல்ல வைத்தார். சமீபத்தில் சோனியில் ’பூல்புலையா(சந்திரமுகி)" பார்த்தபோது, சில காட்சிகளில் "மணிச்சித்ரதாழ்" ஷோபனாவை நினைவூட்டினார். ஆனால், மல்லிகா ஷெராவத் பரிவாரங்களுக்கு மத்தியில்,இந்தி சினிமாவில் மிக அரிதாகக் காணக்கிடைக்கிற அடுத்த வீட்டுப்பெண் தோற்றத்தோடு வித்யா பரிச்சயமாய்க் காணப்படுகிறார் என்பது நிறைய வியப்பு.

அந்த வியப்பு விரைவில் உடையப்போகிறது என்பது, ஒரு வினோதமான ஆர்வத்தையே உண்டாக்கியிருக்கிறது. டிசம்பர் 2, 2011 அன்று வித்யா பாலனை அவரது ’டர்ட்டி பிக்சர்’ இந்திப்படத்தில், இதுவரை கண்டிராத ஒரு பாத்திரப்படைப்பில் பார்க்கவிருக்கிறோம். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிற இந்தப் படத்தில் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தை வித்யா ஏற்று நடிக்கிறார். டிசம்பர் 2 சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளாம்!

அண்மைக்காலமாக சகவாசதோஷத்தால், நிறைய இந்திப்படங்களைப் பார்க்க நேரிடுகிறது. பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறார்கள்; நவீனத் தொழில்நுட்பங்கள் சில படங்களில் மயிர்க்கூச்செரிய வைக்கின்றன. ஆனால், பத்தில் ஒன்பது படங்களில் அடிப்படை சங்கதிகளில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்பதே சலிப்பூட்டுகிறது; அதை விட மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற தமிழ்ப்படங்கள் ஒப்பீட்டில் தேறிவிடுகின்றன. பாலிவுட்டில், நாராசமான வசனங்களும், திணிக்கப்படுகிற அநாவசியமான ஆபாசமும்தான் எதார்த்தமான படமென்று யாரோ மரத்தடியில் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. No one killed Jessica படத்தில் ராணி முகர்ஜீயின் பாத்திரப்படைப்பும், அவர் பேசிய வசனங்களும் (?) அப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி வந்த சுவடு தெரியாமல் சுருண்ட "Not a love story" படமும் எதார்த்தம் என்ற பெயரில் அவலை நினைத்து உரலையிடித்த அவலம்தான்! ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி உண்மைச்சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கிற முரண்டு தொடர்வதையே அறிய முடிகிறது. இதோ, ஷியாம் பெனகலும் பிபாஷா பாசுவை கதாநாயகியாகப் போட்டு, பாலிவுட் நடிகைகளைப் பற்றி ஒரு படம் இயக்கப்போவதாக செய்தியை வாசித்தேன்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் சினிமாக்காரர்களை சுவாரசியப்படுத்துகிற ’rags to riches' கதையிருக்கிறது; சராசரி சினிமாவில் இடைவேளைக்கு முன்பு ஏழையாயிருக்கிற கதாநாயகன், திடீரென்று பணக்காரனாகி, கூலிங் கிளாஸுடன் ஹோண்டா சிட்டியிலிருந்து இறங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆகவே, சில்க் ஸ்மிதாவின் கதை சினிமாக்காரர்களை ஈர்த்திருப்பதில் பெரிய வியப்போ, அது குறித்த சர்ச்சைகளில் விளம்பரயுக்தியோ இல்லை என்று சொல்வதற்கில்லை. எங்கோ ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பள்ளிப்படிப்புக்கும் வசதியின்றி, சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, சினிமாவில் நுழைந்து, அப்போதைய நாயகர்களின் நட்சத்திர மதிப்பை ’பூ’ என்று ஊதித்தள்ளியவர் சில்க் ஸ்மிதா. ’மூன்றாம் பிறை’ போன்று ஏறக்குறைய கவிதையாயிருந்த படத்திலும், கமல்ஹாசனை கற்புக்கரசனாகக் காண்பிக்க ஒரு சில்க் ஸ்மிதா தேவைப்பட்டார். ’நேத்து ராத்திரி யெம்மா...," பாடலைக் கழித்துப் பார்த்தால், ’சகலகலாவல்லவன்,’ படத்தின் வெற்றியிலிருந்து ஒரு இருபத்தைந்து நாட்களை தாராளமாகக் கழிக்க நேரிடும். ’அடுத்த வாரிசு,’ ’பாயும் புலி,’ ’தங்கமகன்,’ போன்ற பல படங்கள் சில்க் ஸ்மிதா இல்லாமல் போயிருந்தால், சத்தியமாக ரஜினியின் வெற்றிப்படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. பச்சடியைப் போல படத்தில் தொட்டுக்கொள்ள மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட சில்க் ஸ்மிதாவை பிரியாணியாக்கி, கதாநாயகி என்ற அந்தஸ்தை அவரது தலையில் சுமத்தியதுதான் அவரது வீழ்ச்சியின் முதல் அறிகுறி என்று அறிய முடிகிறது.

திடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை என்பதற்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இன்னோர் உதாரணம்.

அலுக்க அலுக்க, ஒவ்வொரு படத்திலும் சில்க் ஸ்மிதாவின் நடனத்தைச் சேர்த்து, அமுதமும் நஞ்சாகி ஒரு கட்டத்தில் ஷகீலாவுக்கு முன்னோடியாக மலையாளத்துக்கு துரத்தப்பட்டு, சொந்தப்படம் எடுத்து நஷ்டமடைந்து, மனமுடைந்து ஒரு விபரீத தருணத்தில் தற்கொலை செய்து பரிதாபத்துக்குப் பாத்திரமானார் சில்க் ஸ்மிதா. இப்படி முற்றிலும் எதிர்மறையான முரண்பாடுகள் நிறைந்தவரின் வாழ்க்கை, திரைக்கதாசரியர்களை இவ்வளவு தாமதமாய் ஈர்த்ததில்தான் ஆச்சரியம். உண்மையில், கவர்ச்சிக்காக அறியப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வேடத்தில், வித்யா பாலன் போன்ற நடிகை நடிப்பது வேண்டுமானால், முதலில் கேட்பதற்கு சற்றே வியப்பைத் தரலாம்.

ஆயிரம் நொள்ளை சொன்னாலும், இந்தித் திரைப்படங்களில் இந்த ஒரு அம்சம் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைக்கிறது. திரைப்பட விழாக்களிலும், தூரதர்ஷனிலும் அவ்வப்போது காணக்கிடைக்கும் பல இந்திப்படங்களில் ஸ்மிதா பாட்டீல், ஷபானா ஆஸ்மி போன்ற நடிகைகள் துணிச்சலாக சராசரியான கதாநாயகிகளிடமிருந்து விலகி நடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களைத் தொடர்ந்து தபு, கரீனா கபூர், ஐஷ்வர்யா ராய், ராணி முகர்ஜீ போன்ற நடிகைகள் ’இமேஜ்" என்ற மாயவளையத்திலிருந்து விடுபட்டு கதாபாத்திரங்கள் தருகிற சவாலை மட்டும் ஏற்று சர்ச்சைக்குரிய பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த பல படங்களை உதாரணங்களாக அறிவோம். இவற்றில் சில படங்கள் வியாபாரரீதியாக வெற்றியடையாதபோதிலும், அந்த நடிகைகளின் நடிப்புக்கு ஒரு நல்ல காட்சிப்பொருளாக அமைந்தன என்பது உண்மை. ஆகவே, Dirty Picture வெளிவர முழுதாய் இரண்டு மாதங்கள் இருக்கிறபோதிலும், இப்போதே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது! வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவை உடைவிஷயத்தில் பின்பற்றியிருப்பதைப் பறைசாற்றும் படங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களைப் போல, பார்வையாளர்களின் பச்சாதாபத்தைக் குறிவைத்து மட்டுமே தயாரிக்கப்படுமா அல்லது இயல்பாக அவர்களது முரண்பாடுகளை எவ்வித சப்பைக்கட்டுமின்றி சொல்லுகிற பாசாங்கற்ற முயற்சியாய் இருக்குமா?

டிசம்பரில் தான் விடை தெரியும்!

20 comments:

Philosophy Prabhakaran said...

உங்களோட ஆவல் புரியுது சேட்டை :)

Sivakumar said...

எல்லாரும் மங்கத்தாவில் மூழ்கி இருக்கையில் நீங்கள் தனி ரூட்டை போட்டுள்ளீர்கள். சென்சார் கத்திரியில் இருந்து முழுப்படமும் தப்புமா என்று பார்ப்போம்.

எல் கே said...

எனகென்னவோ சில்க் பாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்றே தோணுது.

நிரூபன் said...

என்ன பாஸ்...நினைவு மீட்டலா?
இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

சகோதரம்,
நடிகையின் வரலாற்றினைக் கூறும் படம் பற்றிய ட்ரெயிலரே அசத்தலாக இருக்கிறது.

படம் வந்தால்...விமர்சனத்தில் தூள் கிளப்புவார் போல இருக்கே.

Prabu Krishna said...

ம்‌ம் பாத்துடுவோம் டிசம்பர்ல

Unknown said...

கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள...என்ன இருந்தாலும் சில்க் போல வர்றது கஷ்டம்தான்னு நெனைக்கறேன்...அந்த வெக்கப்படுற நடிப்பு மற்றும் கிறங்கும் பார்வை எந்த நடிகயாலும் கொண்டு வர முடியல...என்பது என் தாழ்மையான கருத்து பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

நாங்களும் காத்திருக்கிறோம் பாஸ், உங்களின் விமர்சனத்திற்கு. படம் கெடக்குது அப்புறம் பார்த்துக்கலாம்.

ரிஷபன் said...

திடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை என்பதற்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இன்னோர் உதாரணம்.

அவர் வாழ்க்கை பந்தாடப்பட்டு விட்டது.

Anonymous said...

டிசம்பர்க்கு முன்னாடி கனவே வராதா பாஸ்..?

ராஜ நடராஜன் said...

சில்க்-வித்யா பாலன் என்ன சம்பந்தம்?

சில்க் கண்கள்,உடல்வாகு

வித்யா பாலன் டொக்கு

கதை காப்பத்துன்னா மட்டுமே படம் தேறும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டை, ஷ்ரேயாவுக்கு அடுத்த ரேஞ்சை நோக்கி பயணிக்கிறார்......

வெங்கட் நாகராஜ் said...

மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அந்தப் படத்தின் தகவல்/புகைப்படங்கள் வெளியிட்டு....

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

உங்களோட ஆவல் புரியுது சேட்டை :)//

ஹிஹி! புரிஞ்சா சரி! :-)
மிக்க நன்றி!

//! சிவகுமார் ! said...

எல்லாரும் மங்கத்தாவில் மூழ்கி இருக்கையில் நீங்கள் தனி ரூட்டை போட்டுள்ளீர்கள்.//

நான் இன்னும் மங்காத்தா பாக்கலியே! :-)

//சென்சார் கத்திரியில் இருந்து முழுப்படமும் தப்புமா என்று பார்ப்போம்.//

இப்ப வர்ற இந்திப்படங்களைப் பார்க்கும்போது, சென்சாருக்கு கத்திரி இருக்குதான்னே டவுட்டாருக்கு! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//எல் கே said...

எனகென்னவோ சில்க் பாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்றே தோணுது.//

நமக்கு identify பண்ணுறது கஷ்டமாயிருக்கும். ஆனா, அங்கே சில்க் அவ்ளோ பாப்புலர் இல்லியே கார்த்தி!
மிக்க நன்றி!

//நிரூபன் said...

என்ன பாஸ்...நினைவு மீட்டலா? இருங்க படிச்சிட்டு வாரேன்.//

:-)

//நடிகையின் வரலாற்றினைக் கூறும் படம் பற்றிய ட்ரெயிலரே அசத்தலாக இருக்கிறது.//

டிரெயிலர் உண்மையிலேயே அசத்தலாத் தானிருக்கு. பாருங்க சகோ! :-)

//படம் வந்தால்...விமர்சனத்தில் தூள் கிளப்புவார் போல இருக்கே.//

அது படம் எப்படியிருக்கு என்பதைப் பொறுத்து இருக்கும் சகோ!

பார்க்கலாம்! மிக்க நன்றி சகோ!

settaikkaran said...

//Prabu Krishna (பலே பிரபு) said...

ம்‌ம் பாத்துடுவோம் டிசம்பர்ல//

பார்க்காம இருக்க முடியுமா? சில்க் படமாச்சே? :-)
மிக்க நன்றி!

//விக்கியுலகம் said...

கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள...என்ன இருந்தாலும் சில்க் போல வர்றது கஷ்டம்தான்னு நெனைக்கறேன்...அந்த வெக்கப்படுற நடிப்பு மற்றும் கிறங்கும் பார்வை எந்த நடிகயாலும் கொண்டு வர முடியல...என்பது என் தாழ்மையான கருத்து பகிர்வுக்கு நன்றி!//

உண்மைதான். ஒருவேளை தமிழில் எடுத்திருந்தா, சில்க் ஸ்மிதா வேஷத்துலே யாரையும் கற்பனை பண்ண முடியாது. இந்தியில் சில்க் அவ்வளவு பிரபலமாக இருந்ததாகத் தெரியவில்லை. அதனால், அங்கே வித்யா பாலனுக்காக ஏற்றுக்கொள்ளலாம். பார்க்கலாம். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கும்மாச்சி said...

நாங்களும் காத்திருக்கிறோம் பாஸ், உங்களின் விமர்சனத்திற்கு. படம் கெடக்குது அப்புறம் பார்த்துக்கலாம்.//

சினிமா விமர்சனத்துலே நான் படுவீக்! :-) ரொம்ப பாரபட்சமா எழுதுற வாய்ப்பிருக்கு; ஏன்னா, எனக்கு பல விஷயங்கள் இன்னும் தெரியாது.
மிக்க நன்றி!

//ரிஷபன் said...

அவர் வாழ்க்கை பந்தாடப்பட்டு விட்டது.//

உண்மை; அவர் வாழ்க்கை மட்டும் தானா? நேத்து சி.என்.என்-ஐ.பி.என்னில் நடிகை மீனாகுமாரி பற்றிய நிகழ்ச்சி பார்த்தேன். பாவம்...! :-(
மிக்க நன்றி!

settaikkaran said...

//ரெவெரி said...

டிசம்பர்க்கு முன்னாடி கனவே வராதா பாஸ்..?//

வித்யா பாலன் கனவுக்கன்னி என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட மீரா ஜாஸ்மின் மாதிரியான ஒரு ஹோம்லி நடிகை! :-)
மிக்க நன்றி!

//ராஜ நடராஜன் said...

சில்க்-வித்யா பாலன் என்ன சம்பந்தம்? சில்க் கண்கள்,உடல்வாகு வித்யா பாலன் டொக்கு//

சத்தியம்! ஆகாயத்துக்கும் பூமிக்கும் இருக்கிற வித்தியாசம்! ஆனால், வித்யா பாலன் ஒரு நல்ல நடிகை என்பதே எதிர்பார்ப்புக்குக் காரணம்!

//கதை காப்பத்துன்னா மட்டுமே படம் தேறும்.//

அதுதான் பயமாயிருக்கு! இந்தியிலே பில்ட்-அப் பண்ணுறா மாதிரி படங்கள் வர்றது இல்லை. :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டை, ஷ்ரேயாவுக்கு அடுத்த ரேஞ்சை நோக்கி பயணிக்கிறார்......//

ஊஹும்! சேட்டையோட மொக்கை இருக்கிறவரையிலும் ஸ்ரேயாவின் புகழ் தொடரும் பானா ராவன்னா! :-)
மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அந்தப் படத்தின் தகவல்/புகைப்படங்கள் வெளியிட்டு....//

ஆமாம் வெங்கட்ஜீ! அனேகமா இது குறித்த செய்தி வராத இணையதளமே இல்லேன்னு சொல்லலாம்.

மிக்க நன்றி!

முகுந்த்; Amma said...

"Dirty picture” படத்தில் வித்யா பாலன் நடிப்பதை அறிந்தது ரொம்ப சர்ப்ரைஸ்..

//திடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை என்பதற்கு சில்க் ஸ்மிதாவின்
வாழ்க்கை இன்னோர் உதாரணம்.//

சத்தியமான உண்மை..

உங்களைப்போலவே நானும் படம் பார்க்க காத்திருக்கிறேன்.