Thursday, February 11, 2010

பஸ்ஸைப் புடிச்சீங்களா?



நமக்கும் பஸ்ஸுக்கும் ஆகாதுண்ணே! நான் என்னிக்கு பஸ்ஸிலே ஏற வேண்டியிருக்குமோ, அன்னிக்குன்னு பார்த்து என் சட்டைப்பையிலே சில்லறை இருக்காது. இதுவே டிரைனுக்கு லேட்டாயிருச்சுன்னு ஓடுறபோது, பேண்ட்டு,சட்டையிலே இருக்கிற சில்லறையெல்லாம் குலுங்கிக் குலுங்கி, முன்னாடி போறவங்க ஏதாவது மோகினிப்பிசாசு சலங்கை கட்டிட்டு வருதான்னு திரும்பிப்பார்ப்பாங்க! நம்மாளுங்க கேட்பாங்க, "ஏண்டா, எப்பவும் இவ்வளவு சில்லறை வச்சிருக்கியே, நீ கப்பல் கம்பனியிலே வேலை பாக்குறியா? இல்லே, காளிகாம்பாள் கோவில் வாசலிலே துண்டை விரிச்சிட்டு உட்காருவியா?"ன்னு! படிக்கிறவங்க யாரும் என்னை ஏதோ சில்லறைக்கேசுன்னு நினைச்சிடாதீக!

தெனமும் ரூமுக்குத் திரும்புனதும் சட்டை,பேண்டுலே இருக்கிற சில்லறையெல்லாத்தையும் உண்டியல்ஸ்லே போடுவேன். ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய்,அஞ்சு ரூபாய்னு சைஸ்வாரியா உண்டியல்ஸ் வச்சிருக்கேன். இதுக்கெல்லாம் ஒரு ஆழமான அர்த்தமிருக்குண்ணே! பாத்திரமறிந்து பிச்சையிடுங்கிறதை நான் ரொம்ப கடுமையா கடைப்பிடிக்கிறவனுங்க! ஒரு ரூபாய்க்கு மேலே யாருக்கும் பிச்சை போட்டது கிடையாது. சந்தேகமிருந்தா தாம்பரம்-பீச் லைனிலே வர்ற பிச்சைக்காரங்க கிட்டே கேட்டுக்கோங்க! (க்கும்..ரொம்ப முக்கியம்)

ரெண்டு ரூபாய்க் காயின் எதுக்கு தெரியுமா? எப்பவாவது டாப்-அப் பண்ண மறந்திட்டா, காயின் பாக்ஸிலேருந்து போன் பண்ணுறதுக்காக!

அஞ்சு ரூபா காயின் உண்டியல் இருக்கே! மாசக்கடைசியிலே இது தான் நமக்கு உதவும். எனக்கு மட்டுமில்லே; மேன்சனிலே வாழ்க்கை நடத்துறவங்க எல்லாருக்குமே தெரியும், மாசக்கடைசியில் சில்லறையோட மகத்துவம்!

ஆனா, பஸ்ஸிலே போறபோது மட்டும் சில்லறை போதுமான அளவுக்கு இல்லாம கண்டக்டருங்க கிட்டே வாங்கியிருக்கிற வசவுக்குப் பஞ்சமேயில்லை.

இன்னிக்குக் காலையிலே மின்னஞ்சலைத் தொறந்தா புதுசா ஒரு ஸ்க்ரீன்! "நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம் அண்ணாச்சி, சும்மா க்ளிக் பண்ணுங்க,"ன்னு ரொம்ப அன்பாச் சொல்லிச்சேன்னு கிளிக்கிட்டு உள்ளே போனா, வசமா மாட்டிக்கிட்டேனில்லா? புலிவாலைத் தொட்ட கதை மாதிரி, எப்புடி வெளியே வர்றதுன்னு தெரியாம பேஸ்தடிச்சவன் மாதிரி க்ளிக் பண்ணிட்டே போனா, எப்பவோ தனிமடல் எழுதினவங்களோட செய்தியெல்லாம் படிக்க முடிஞ்சுது. நம்மளை மாதிரியே அவங்களும் "காசா பணமா? க்ளிக் பண்ணித்தான் பார்ப்போமே?"ன்னு கூகிள் பஸ்ஸுக்குள்ளே வந்துப்புட்டு "ஐயையோ, யாராவது காப்பாத்துங்களேன்,"ன்னு அலறிட்டு இருக்காங்க!

"என்ன கருமம் இது?"ன்னு நம்ம முசிறி நண்பர் பஞ்சாபகேசன்.

"அறியாமல் சக்கரவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவானேன்,"ன்னு இந்த சோதனையிலும் விடாமல் கவிதை எழுதின இன்னொருத்தர்.

"கூகிளுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?"ன்னு ஒருத்தர் எழுதியிருந்தார்.

"இதெல்லாம் தேவையா எனக்கு?" ன்னு ஒருத்தர் பாவமன்னிப்புக் கேட்டுக்கிட்டிருக்காரு.

எனக்கும் முதல்லே ஒண்ணும் புரியலே! சரி, ஏதாவது எழுதித்தான் பார்ப்போமேன்னு"என்னை மாதிரியே கூகிளும் உட்கார்ந்து யோசிக்கிறாங்க போலிருக்கு! சே!!"ன்னு எழுதினேன். அவ்வளவு தானுங்க! இன்னிக்கு நயா பைசாவுக்கு வேலை பார்க்கலே ஆஃபீஸுலே! நல்ல கூட்டநேரத்துலே "வி சர்வீஸ்" பஸ்ஸிலே ஏறுனது மாதிரி இந்த கூகிள் பஸ்ஸிலே வந்து மாட்டிக்கிட்டேன். மூணு பேர் சேர்ந்து அரை மணிநேரத்துலே ஒரு இழையை 167 வரைக்கும் கொண்டு போயிருக்கோமுன்னா பாருங்களேன்!

கூகிள் சாட்டுலே தனித்தனியா அரட்டையடிக்கலாம்; கூகிள் பஸ்ஸிலே கூட்டம் கூட்டமாச் சேர்ந்து கும்மியடிக்கலாம் போலிருக்கு. நம்ம சென்னை பஸ்ஸுக்கும் கூகிள் பஸ்ஸுக்கும் பெரிய வித்தியாசமில்லீங்க! இங்கேயும் யார் காலை யார் மிதிக்கிறாங்கன்னு புரிய ரொம்ப லேட்டாவுது. இங்கேயும் ரொம்ப உள்ளாற போயிட்டீங்கன்னா, ஸ்டாப்பு வரபோது கீழே இறங்கறது கஷ்டம். கூட்ட நெரிசலிலே ஒத்தைக்காலிலே நின்னுட்டிருக்கிறபோது, செல்போன் வந்தா வருமே ஒரு எரிச்சல், அதே மாதிரி கூகிள் பஸ்ஸிலே மொக்கை போட்டிட்டிருக்கும்போது அந்தப்பக்கம் சாட்டுலே ஒருத்தர் வந்து "ஹலோ, ஹவ் ஆர் யூ?"ன்னு சீரியசாக் கேட்குறாங்க!

கூகிள் பஸ்ஸிலே டிரைவரும் கிடையாது, கண்டக்டரும் கிடையாது. அவ்வளவு தான்னு நினைக்காதீங்கண்ணே! ’பிரேக்’கும் கிடையாது. அப்பப்போ கவனிச்சுக்கோங்க! இல்லாட்டி பிளாட்பாரத்துலே வண்டி ஏறிடுமண்ணே!

இன்னும் ஒரு வாரத்துலே பாருங்க, "ஏன் என் உயிரைப்பிழிந்து உலரப்போடுகிறாய்?"னு காதல் சொட்டச்சொட்ட கவிதை பார்க்கலாம்; "குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்....," என்று மறத்தமிழனின் மாண்பைப் பறைசாற்றுகிற செய்யுள்கள் பார்க்கலாம்; என்னோட வலைப்பதிவுக்கு வாங்கன்னு அழைப்பு பார்க்கலாம்.

இதையெல்லாம் நான் இன்னிக்குப் பார்க்கலேங்குறதுக்காக, இன்னும் வரலேன்னு அர்த்தமில்லே!

மொத்தத்திலே இந்த பஸ்ஸிலே ஏறுறது சுலபம்; இறங்குறது தான் கஷ்டம் போலிருக்கண்ணே! கவனம்..அம்புட்டுத்தேன்!

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் இணைய வேகத்துக்கும் கணினி வேகத்துக்கும் நான் இந்த மாதிரி எந்த அழைப்பையும் பாத்தாலே திகிலாத்தான் ஸ்கிப் செய்வேன்.. நீங்க சொல்றதைப்பாத்தா பஸ்ஸை மிஸ் செய்தது நல்லதாவும் படுது.. அங்க என்னதான்னு பாக்கலாமோன்னும் இருக்கு.. ஆனா கடைசியில் என்ன ஒரு தத்துவம் ஆகா..
\\இதையெல்லாம் நான் இன்னிக்குப் பார்க்கலேங்குறதுக்காக, இன்னும் வரலேன்னு அர்த்தமில்லே! //
இதான் சேட்டை ஸ்டைல் :)

settaikkaran said...

//இதான் சேட்டை ஸ்டைல் :)//

ரொம்ப நன்றி முத்துலட்சுமி அவர்களே! எனக்கும் இந்த சங்கதி அவ்வளவாப் புரியாட்டியும் Buzz-ஐ வச்சு Fuzz பண்ணி வாழ்க்கையை Mess ஆக்க விரும்பலே!

cheena (சீனா) said...

ம்ம் என்னவோ பஸ்ஸிலெ ஏறியாச்சு - ரெண்டு மூணு நாளா ஊர் சுத்தியாச்சு - பாப்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு

settaikkaran said...

//ம்ம் என்னவோ பஸ்ஸிலெ ஏறியாச்சு - ரெண்டு மூணு நாளா ஊர் சுத்தியாச்சு - பாப்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு//

வருக வருக சீனா அவர்களே! உங்களது பெயரைச் சொடுக்கியதும் பிரமித்து விட்டேன். உங்கள் வருகை எனது வலைப்பதிவுக்குக் கிடைத்த பெருமை. மிக்க நன்றி!