Thursday, August 18, 2011

கிருஷ்ணலீலை

பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகம் நைட்-ஷோ முடிந்த டூரிங் கொட்டாயைப் போல வெறிச்சோடிக் கிடந்ததைப் பார்த்து சற்று பயந்தபடியே தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளே நுழைந்தார்.

"வாங்க கிருஷ்ணாஜீ! உட்காருங்க!" என்று கூறிய பிரதமர், "ஒரு முக்கியமான விஷயமாப் பேசலாமுன்னுதான் உங்களைக் கூப்பிட்டேன்," என்று பீடிகை போடவும், கிருஷ்ணாஜீக்கு அடிவயிற்றுக்குள் பிரேக் இல்லாத லாரியொன்று, டிரைவர் இல்லாமல் ஓடுவது போலிருந்தது.

"முக்கியமான விஷயமா? அப்போ நானும் ஆட்டத்துலே இருக்கேனா?" என்று குழப்பத்தோடு கேட்டார். "அதுக்கெல்லாம் எப்பவும் நீங்க சிதம்பரம்ஜீ, கபில் சிபல்ஜீ, அந்தோணிஜி, பிரணாப்ஜீயைத்தானே கூப்பிடுவீங்க?"

"எதுக்குப் பதட்டப்படறீங்க கிருஷ்ணாஜீ? இன்னும் ரெண்டு மூணு நாளுலே நாமல்லாம் பங்களா தேஷுக்குப் போறோமில்லே? அது விஷயமாப் பேசத்தான் கூப்பிட்டேன்," என்று ஆசுவாசப்படுத்திய பிரதமர் மணியை அழுத்தினார். "யாரங்கே? கிருஷ்ணாஜிக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாங்க!"

உள்ளே வந்த சிப்பந்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, "காப்பி கொண்டு வரட்டுங்களா? டீ கொண்டு வரட்டுங்களா?" என்று வினவினார்.

"பால் கொண்டுவாங்க," என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"வெறும்பாலா? மசாலாபாலா?"

"யோவ்!" என்று சீறினார் பிரதமர். "நீ லோக்பால் தவிர எது வேண்டுமானாலும் கொண்டுவாய்யா! சும்மா நொய்நொய்னு அருண் ஜேட்லி மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு.."

சிப்பந்தி போனதும் பிரதமர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"அது போகட்டும், தமிழ்நாட்டுக்காரங்களைத் தப்பாப் பேசின அந்த அதிகாரியைப் பத்தி அமெரிக்காவுக்கு லெட்டர் எழுதச் சொன்னேனே, எழுதிட்டீங்களா?"

"எழுதிட்டேனே! இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது-ன்னு எழுதியிருக்கிறேன்," என்று மலர்ந்த முகத்தோடு சொன்னார்.

"சபாஷ்! இப்படித்தான் மொண்ணையா எழுதணும்," என்று மகிழ்ந்தார் பிரதமர்.

"பொதுவா தமிழங்க விஷயம்னாலே இப்படித்தானே எழுதிட்டிருக்கோம்?" என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"வெரி குட்!" என்றார் பிரதமர். "பங்களாதேஷுக்கு நம்ம கூட சிதம்பரம்ஜீ, பிரணாப்ஜீ, மம்தாஜீ எல்லாரும் வர்றாங்க. அவங்க என்ன ஃபீல் பண்ணுறாங்கன்னா, போறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சின்ன கிளாஸ் எடுக்கணுமாம்!"

"கிளாஸா? எனக்கா? எதுக்கு சார்?" எஸ்.எம்.கிருஷ்ணா பதறினார்.

"என்ன பண்ணறது கிருஷ்ணாஜீ, நீங்க யாராவது எதுனாச்சும் கேட்டா சம்பந்தா சம்பந்தமில்லாத பதிலா சொல்றீங்களே?"

"அதுனாலே தானே சார் இத்தனை வருசமா கட்சியிலே இருக்கேன்? அடிமடியிலேயே கைவைக்கறீங்களே?"

"அதுக்காக இப்படியா? அன்னிக்கு பார்லிமெண்டுலே நம்ம நாட்டுச் சிறையிலே இருக்கிற பாகிஸ்தான் கைதியைப் பத்திக் கேட்டா, நீங்க பாகிஸ்தானிலே இருக்கிற நம்ம நாட்டுக்கைதியைப் பத்திப் பதில் சொல்றீங்க! நடுவுலே நான் புகுந்து கரெக்ட் பண்ண வேண்டியதாகிப்போச்சு!"

"நான் வேணும்னா இனிமே எழுதிவச்சு வாசிக்கிறேன் சார்!" கிருஷ்ணா கெஞ்சினார்.

"அதைக் கூட சரியாப் பண்ண மாட்டேங்கறீங்களே? ஐ.நா.சபையிலே போயி, போர்ச்சுக்கல் அமைச்சர் பேச வேண்டியதைப் பேசியிருக்கீங்களே?"

"எதுக்கு சார் என்னை மட்டும் குத்தம் சொல்றீங்க? காமன்வெல்த் கேம்ஸ்லே..."

"இப்போ எதுக்குய்யா அதை ஞாபகப்படுத்தறீங்க?" என்று எரிந்து விழுந்தார் பிரதமர்.

"முழுசாக் கேளுங்க சார், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியோட துவக்க விழாவுலே என்னாச்சு? சுரேஷ் கல்மாடி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்னு சொல்லுறதுக்குப் பதிலா அப்துல் கலாம் ஆசாத்னு சொன்னாரா இல்லியா?"

"கிருஷ்ணாஜி...!"

"ப்ளீஸ், பேச விடுங்க சார்! அதே சுரேஷ் கல்மாடி பிரின்ஸ் சார்லஸ் வந்தாருன்னு சொல்றதுக்குப் பதிலா, பிரின்சஸ் டயானா வந்தாங்கன்னு சொன்னாரா இல்லையா?"

"கிருஷ்ணாஜி, இப்போ எதுக்கு ஜெயில்லே இருக்கிறவரை ஞாபகப்படுத்தறீங்க?" பிரதமர் எரிச்சலுற்றார்.

"என்னது? பிரின்ஸ் சார்லஸ் ஜெயில்லேயா இருக்காரு? ஏன் சார்?"

"ஐயோ உம்மோட பெரிய ரோதனையா இருக்கு. நான் சொன்னது சுரேஷ் கல்மாடியை! பிரின்ஸ் சார்ல்ஸ் ரொம்ப வருசத்துக்கப்புறம் இப்போத்தான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு! அது போதாதுன்னு ஜெயிலுக்கு வேறே போகணுமா?"

"சார், அவரு உசிரோட இருக்கிறவங்களைப் பத்தி சொல்றதுக்கு பதிலா, செத்தவங்க பேராச் சொன்னாரு. அட் லீஸ்ட், நான் உசிரோட இருக்கிறவங்க பேராத்தானே சொன்னேன்?"

"சொன்னாக் கேளுங்க கிருஷ்ணாஜி! ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது. நீங்க என்ன பண்ணறீங்கன்னா, பங்களா தேஷ் ஜனாதிபதி யாரு, பிரதமர் யாரு, வெளியுறவுத்துறை மந்திரி யாருன்னு ஒரு நாற்பது பக்கம் நோட்டுலே நூறுவாட்டி எழுதிப் பழகிக்கோங்க! அங்கே போய் குழப்பம் வராம இருக்கும்!" என்றார் பிரதமர்.

"என்ன சார் இம்போசிஷன் எழுதச் சொல்றீங்களே?"

"நானாவது இம்போசிஷன் எழுதச் சொல்றேன். மேடம் திரும்பி வந்தா பெஞ்சு மேலே நிக்க வைச்சிருவாங்க! அதுனாலே நான் சொல்றா மாதிரி செய்யுங்க, சரியா?"

"சரி சார்! நான் வேண்ணா திரும்பி வர வரைக்கும் பேசாம இருந்திரட்டுமா?" கிருஷ்ணாஜீ பரிதாபமாகக் கேட்டார்.

"நாமல்லாம் வெளிநாடு போனாத்தான் ஏதோ கொஞ்சம் பேசறோம். அங்கேயும் போய் வாயே திறக்காம இருந்தா எப்படி? அதுவும் நீங்க வெளியுறவுத்துறை அமைச்சர். கண்டிப்பாப் பேசியே ஆகணும்."

"சரி சார்!"

"உங்க வலது பக்கத்துலே பிரணாப்ஜீ இருப்பாரு! இடது பக்கத்துலே நானிருப்பேன்! அவங்க பெங்காலியிலே பேசினா பிரணாப் பதில் சொல்லுவாரு, இந்தியிலே பேசினா நான் பதில் சொல்லுவேன். இங்கிலீஷ்னா சிதம்பரம் பதில் சொல்வாரு!" என்று அடுக்கினார் பிரதமர்.

"நான் பஞ்சாபியிலே பேசட்டுமா சார்?" கிருஷ்ணாஜீ வினவினார்.

"அவங்களுக்குப் பஞ்சாபி தெரியாதே கிருஷ்ணாஜி!"

"எனக்குக்கூடத்தான் தெரியாது!"

"அதெல்லாம் வேண்டாம்! ஒண்ணு செய்யலாம். நான் தாடியைச் சொறிஞ்சா "ஓ.யெஸ்"னு சொல்லுங்க!"

"ரெண்டு நாளுக்குள்ளே எனக்குத் தாடி வளராதே சார்?"

"நான் என் தாடியைச் சொன்னேன் கிருஷ்ணாஜி! தாடியைச் சொரிஞ்சா ’எஸ்". தொடையைக் கிள்ளினா "நோ"ன்னு சொல்லுங்க. என் தொடையை இல்லை; உங்க தொடையை.."

"என்ன சார் இது, கிள்ளறதுன்னா எனக்கு, சொரியறதுன்னா உங்களுக்கா? நம்ம கட்சி திருந்தவே திருந்தாதா சார்?"

"நோ மோர் டிஸ்கஷன்! நீங்க இப்பலேருந்தே இம்போசிஷன் எழுத ஆரம்பிச்சிடுங்க! நாளைக்கு உங்களுக்கு கிளாஸ் இருக்கு! சிலேட்டு, பலப்பமெல்லாம் கொண்டு வந்திருங்க!"

"ஓ.கே.சார்!" என்று சலிப்புடன் சொன்னார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"பீ சியர்ஃபுல் கிருஷ்ணாஜி! கரெக்டா பதில் சொன்னா ராகுல்ஜீ சாக்லெட் கொடுப்பாரு!"

"தேங்க்யூ சார்!" என்று எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சிப்பந்தி பால் கொண்டு வந்தார்.

"லஸ்ஸிலே ஐஸ் போடலே தானே?" என்று கேட்டார் கிருஷ்ணா.

"நீங்க பால்தானே கேட்டீங்க சார்?" சிப்பந்தி குழம்பினார்.

"ஓ ஐ.ஸீ! அதுக்கென்ன பரவாயில்லே! பால் இல்லாட்டி லஸ்ஸி ஏது?" என்று வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"ஐயையோ, இவரை வச்சுக்கிட்டு பங்களாதேஷ்லே என்ன பண்ணப்போறேன்னு தெரியலியே?" என்று அங்கலாய்த்தார் பிரதமர்.

"சார், கிருஷ்ணாஜியோட செக்ரட்டரியேட்டிலிருந்து லெட்டர் வந்திருக்கு சார்!" என்று வைத்து விட்டுக் கிளம்பினார் சிப்பந்தி. பிரதமர் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார்.

"துரதிருஷ்டவசமானது!" பிரதமர் வாசித்தார். "பரவாயில்லை, கிருஷ்ணாஜி தேறிட்டாரு!"

அப்படியே கடிதத்தின் மேல்பகுதியைப் பார்த்தவர் அடுத்த கணமே அதிர்ந்து அலறினார்.

"யாரங்கே? கிருஷ்ணாஜியைக் கூப்பிடுங்கய்யா! அவரு பாட்டுக்கு அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய லெட்டரை பங்களாதேஷுக்கு அனுப்பிட்டாருய்யா! திரும்ப வரச்சொல்லுங்க அவரை! அப்படியே டாக்காவுக்கு லைன் போட்டுக்கொடு!"


19 comments:

நடராஜன் said...

நக்கல் டோஸ் ரொம்ப ஜாஸ்தி! /"லஸ்ஸிலே ஐஸ் போடலே தானே?"/ என்ன சொல்வதென்றே தெரியல! கலக்கல்

கோகுல் said...

"சபாஷ்! இப்படித்தான் மொண்ணையா எழுதணும்," //
யாரைச் சொல்றிங்க?

கோகுல் said...

பதிவு முழுக்க நக்கல் நையாண்டி,பைனல் கிக் கலக்கல்.

வெங்கட் நாகராஜ் said...

கலக்கலான ஒரு பகிர்வு. இவங்களையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் படும் பாடு.... :)

rajamelaiyur said...

Vote podaju

rajamelaiyur said...

Really Kalakkal political masala

நாய் நக்ஸ் said...

Super....super .....sema nakkal

Nagarajan said...

sema nakkal...........kalakkal.......

Speed Master said...

கலக்கல்

சக்தி பிரகாஷ் said...

//"நான் பஞ்சாபியிலே பேசட்டுமா சார்?" கிருஷ்ணாஜீ வினவினார்.

"அவங்களுக்குப் பஞ்சாபி தெரியாதே கிருஷ்ணாஜி!"

"எனக்குக்கூடத்தான் தெரியாது!"///

haa haa super.. kalakkal... :)

sathishsangkavi.blogspot.com said...

சேட்டை... உங்க நக்கல்., கலக்கல்...

Harini Resh said...

//லஸ்ஸிலே ஐஸ் போடலே தானே?" என்று கேட்டார் கிருஷ்ணா.

"நீங்க பால்தானே கேட்டீங்க சார்?" சிப்பந்தி குழம்பினார்.

"ஓ ஐ.ஸீ! அதுக்கென்ன பரவாயில்லே! பால் இல்லாட்டி லஸ்ஸி ஏது?" //

கலக்கல் ....... :)

erodethangadurai said...

கலகலன்னு ஒரு பதிவு படிச்ச திருப்தி ....! வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

அரசியல்னா அப்பீட்டு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அலசல் சூப்பரு

Anonymous said...

நக்கல்... கலக்கல்... அசத்தல்...

Jey said...

ha ha ha ... nice one

Charles said...

வாய்விட்டு சிரித்தேன்... :) தொடர்ந்து கலக்குங்கள்

அச்சு said...

அருமை சேட்டை.. தொடர்ந்து கலக்குங்க.. அதுவும் அந்த கடைசி லட்டர் சூப்பர்..