Saturday, February 13, 2010

எச்சரிக்கை-காதலர்தின விரோதிகளே!


சும்மா காதலர் தினத்தை நக்கல் பண்ணியே பதிவை ஓட்டாதேய்யா, சமுதாயத்துக்கு உபயோகமா எதையாவது எழுதுன்னு நேத்து கனவுலே வேலன்டைன் வந்து சொன்னதுனாலே, காதலர் தினம் குறித்து தேவையில்லாம பிரச்சினை பண்ணிட்டிருக்கிற சமூக ஆர்வலர்களுக்கு சில நல்ல யோசனைகளைத் தரலாம் என்று யோசித்தேன். அதன் விளைவுதான் இது!

ஐயா, உங்களுக்குக் காதலர் தினம் பிடிக்காம இருக்கலாம். அதை எதிர்ப்பதற்காக நீங்கள் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை? உங்க சங்கத்திலேயும் இளைஞர்கள் இருப்பாங்க, அவங்களும் நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்குவாங்க, நீங்களும் ஆசீர்வாதம் பண்ணப்போவீங்க! மணமேடையிலே உங்க சிஷ்யனும் மணப்பெண்ணும் இருக்கிறதைப் பார்த்தா உங்களுக்குக் கழுதைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சது ஞாபகத்துக்கு வருமா வராதா? இவ்வளவு ஏன், உங்க வீட்டுலேயே உங்க கல்யாண டிவிடியைப் போட்டுப் பார்க்காமலா இருக்கப்போறீங்க? தப்பித்தவறி உங்க தெருவிலே அந்த சமயமாப் பார்த்து ஏதாவது கழுதைங்க வந்துதுன்னு வையிங்க! அதுங்களுக்கெல்லாம் என்ன தோணும்?

"நம்ம கல்யாணத்தை இவங்க பண்ணி வச்சாங்க; இவங்க கல்யாணத்தை யார் பண்ணி வச்சாங்களோ?"ன்னு கைகொட்டி, சே, கால்கொட்டி சிரிக்காதுங்களா? உங்களாலே மனுசங்க மேலே கழுதைங்க வச்சிருக்கிற மரியாதையே போயிடும் போலிருக்கே?

சரி, கழுதைங்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறதுலே உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் கூட இருக்கலாம்; அனாவசியமா உங்க குடும்பப்பிரச்சினையிலே நாங்க தலையிட விரும்பலே! ஆனா, இதென்ன கொடுமை...?

நாய்ங்களுக்கெல்லாம் பெயர் வைச்சு அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணுறீங்களாமே? அதுவும் நல்ல மாடர்ன் பெயராப் பார்த்துப் பார்த்து வைக்கிறீங்களாமே! இன்னிக்கு நாய்க்குப் பேர் வைக்கிற உங்க கிட்டேயே நாளைக்கு உங்க தொண்டருங்க வந்து அவங்க குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்லலாம். அப்போ என்ன பெயர் வைப்பீங்க, "ஜிம்மி," "டாமி" "சீஸர்"னா?

நல்லா காட்டுறீங்கய்யா உங்க எதிர்ப்பை! நாய்க்குப் பெயர்சூட்டி, கழுதைக்குக் கல்யாணம் பண்ணி...விட்டா பூனைக்குப் புண்ணியாகவசனம், கரப்பான் பூச்சிக்குக் காதுகுத்துன்னு சும்மாயிருக்கிற வாயில்லா ஜீவனுக்கும் ஏதாவது விசேஷம் பண்ணுற கலாச்சாரத்தை ஆரம்பிச்சிடாதீங்க! ஏற்கனவே ஊருலே முகூர்த்தநாள் கிடைச்சாலும் மண்டபம் கிடைக்காம நிறைய பேரு ஒரிசா, மேகாலயாவுக்குப் போய்க் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க!

உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க! நம்ம நாட்டுலே, குறிப்பா தமிழ்நாட்டுலே இனிமே வேலன்டைன்ஸ் டே கொண்டாடாம இருக்கிறதுக்கு ஒரு சிம்பிளான வழி சொல்லுறேன் கேட்டுக்குங்க!

இந்த வேலன்டைன் ஒண்ணும் உலகம் நினைச்சிட்டிருக்கிறா மாதிரி ரோமுலே பொறந்தவரில்லே! இங்கே தான் வேலூர் பக்கத்துலே நேரம் கெட்ட நேரத்துலே பொறந்து தொலைச்சிட்டாரு! வேலூருலே அன்-டைமிலே பொறந்ததுனாலே, அவரை எல்லாருமே வேல்+அன்டைமுன்னு அழைச்சு அழைச்சு அதுவே சுருங்கி வேலன்டைன்னாயிருச்சுன்னு ஒரு புரளியைக் கிளப்புங்க, போதும்! "சே, இந்தாளு லோக்கல் ஆளுதானா? இது தெரியாம வருஷா வருஷம் பணத்தையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணிட்டோமே?"ன்னு நம்மாளுங்க நொந்து போயிருவாங்க!

அடுத்து நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு தெரியும்!

"நாங்க அஞ்சாறு வருஷத்துக்குச் சேர்த்து லெட்டர்-பேட் அடிச்சு வச்சிருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க எங்க சங்கத்துலே நாற்பது மாவட்டச்செயலாளர்கள், நானூறு வட்டச் செயலாளர்கள் இதைத் தவிர ஏழு உறுப்பினர்கள் இருக்காங்க! இவங்களுக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டாமா, பேப்பரிலே எங்க போட்டோ வர வேண்டாமா,"ன்னு கேட்கப்போறீங்க! அவ்வளவு தானே!

நீங்க ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச கழுதைங்களுக்கு அவங்களோட திருமண நாளன்னிக்கு ஒவ்வொரு மாவட்டச்செயலாளரும், வட்டச்செயலாளரும் ஒரு கழுதைக்குத் தலா ஒரு லெட்டர்-பேட் வீதம் சாப்பிடக்கொடுத்து அதை போட்டோ புடிச்சுப் பத்திரிகையிலே போட்டீங்கன்னா, உங்க சங்கத்துலே இருக்கிறவங்களோட புகழ் கழுதையோட புகழை விட அதிகமாப் பரவும். எச்சரிக்கை, போட்டோ புடிக்கும்போது உங்க ஆளுங்களை கழுதைக்கு முன்னாடி நிற்கச் சொல்லுங்க! இல்லாட்டி கல்யாணம் பண்ணி வச்சவங்க மேலே இருக்கிற கடுப்பைக் காட்ட கழுதை உதைச்சிருச்சின்னா, பத்திரிகையிலே மறுநாள் வேறே செய்தி கட்டம் கட்டி வந்திரும்.

நாய்ங்களை என்ன பண்ணுறதுன்னு கேட்கறீங்களா? கார்ப்பரேஷன்லே நாய் பிடிக்கப் போகும்போது நீங்களும் கூடவே போனீங்கன்னா, அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இருக்காதா பின்னே, உங்களுக்குத் தான் எல்லா நாயோட பெயர்களும் அத்துப்படியா தெரியுமில்லா...? கூப்பிட்டாலே வண்டியிலே வந்து ஏறிடுமில்லா....?

6 comments:

அகல்விளக்கு said...

சேட்டை.... சேட்டை....

சைவகொத்துப்பரோட்டா said...

நான் காதலர் தின விரோதி இல்லீங்கோ. (ஆமா வேலூர் பொறந்தவரா வேலன்டைன், இந்த சரித்தரம் தெரியாம போச்சே...:))

settaikkaran said...

சேட்டை.... சேட்டை....

// நன்றிண்ணே! //

settaikkaran said...

//ஆமா வேலூர் பொறந்தவரா வேலன்டைன், இந்த சரித்தரம் தெரியாம போச்சே...:))//

ஆமாண்ணே! இப்ப சமீபத்துலே தான் காட்பாடி பக்கத்துலே ஒரு கல்வெட்டுலே அவருக்குப் பிரசவம் பார்த்த கெளவியோட கல்வெட்டைக் கண்டுபிடிச்சிருக்காங்க!

நன்றிண்ணே

அண்ணாமலையான் said...

நடக்கட்டும்

settaikkaran said...

//நடக்கட்டும்//

நன்றிண்ணே