Friday, January 15, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01

காட்சி.01

சோ.சொ.வ அரசவைக்குள்ளே நுழைகிறார். தளபதி அடங்காவாயர் உடன் வந்து கொண்டிருக்கிறார்.

சோ.சொ.வ: தளபதியே! வழக்கமாக யாம் அரசவைக்கு வருகையில் ஊதினால் உயிர்போகிறவன் போல ஒல்லியாக ஒருவன் கட்டியம் சொல்லுவானே? இன்று அவன் எமது கண்களுக்குத் தென்படாத காரணம் யாதோ?

த.அ.வாயர்: மன்னா! உங்களுக்கு மட்டுமா? என் கண்களுக்கும் தான் தென்படவில்லை. ஆறுமாதங்களாக ஊதியம் கிட்டாததால் அவன் அண்டைநாட்டுக்குச் சென்று தண்டோரா போட்டுப் பிழைப்பதாகக் கேள்வி.

சோ.சொ.வ: என்ன? ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையா? கஜானா அத்தனையும் காலியாகி விட்டதா?

த.அ.வாயர்: திறமைமிக்க நமது நிதியமைச்சர் தில்லாலங்கடியூர் திருவாழத்தான் இருக்கையில் அவ்வாறு நடக்க விடுவாரா?

சோ.சொ.வ: ஹாஹா! அது தானே பார்த்தேன்? இப்போது நமது கருவூலத்தின் மொத்த இருப்பு என்ன?

த.அ.வாயர்: நான்கு சாவிகளும் மூன்று பூட்டுகளும் பத்திரமாக உள்ளன மன்னா!

சோ.சொ.வ: வெட்கம்! ஒரு பூட்டு எண்ணிக்கை குறைகிறதே!

த.அ.வாயர்: ஆம் மன்னா! அனைத்துப் பேரீச்சம்பழங்கக்கடைகளுக்கும் ஒற்றர்களை அனுப்பிக் கண்டுவர உத்தரவிட்டிருக்கிறேன்.

சோ.சொ.வ: அது சரி, இப்போது எவரேனும் ஒருவர் கட்டியம் கூறாமல் யாம் அரசவைக்குள் நுழைவது அரசபரம்பரைக்கே இழுக்காய் அமைந்து விடுமே?

த.அ.வாயர்: ஒரு யோசனை மன்னா! நமது ஆஸ்தான புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞர் சிறிது நாட்களாக எதுவும் செய்யாமல் தண்டச்சம்பளம் மற்றுமே பெற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்த சேவகன் கிடைக்கும்வரை அவரையே கட்டியம் கூறச் செய்தாலென்ன?

சோ.சொ.வ: உமது சமயோசிதம் எமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விரைவில் உம்மைத் தலைமைத்தளபதியாக்கி விடுகிறேன்.

த.அ.வாயர்: அது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் வேந்தே! பல மாதங்களாக நமது படையில் ஒரு வீரர் கூட இல்லாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறேன். ஆத்திர அவசரத்துக்கு அண்டை நாட்டிலிருந்து பத்துப் பன்னிரெண்டு வீரர்களை இரவலாகவாவது வாங்கித் தாருங்களேன்.

சோ.சொ.வ: அவசியம் கவனிக்கிறேன் அடங்காவாயரே! முதலில் கட்டியத்துக்கு ஏற்பாடு செய்யும்.

த.அ.வாயர்: இதோ செய்கிறேன் மன்னா! யோவ் அவியல்!

சோ.சொ.வ: என்னது...?

த.அ.வாயர்: மன்னிக்க வேண்டும் மன்னா! ஒவ்வொரு முறையும் நமது மந்திரிகளின் முழுப்பெயரையும் சொல்லிச் சொல்லி தாவாங்கட்டையில் தாளாத வலி ஏற்படுகிறது. வாங்குகிற ஊதியமெல்லாம் வைத்தியர் விடாக்கண்டருக்கே விரயமாகிவிடுவதால் அனைவரையும் சுருக்கி அழைத்து வருகிறேன்.

(ஆஸ்தான புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞர் ஓடோடி வருகிறார்)

அ.அ.கவிஞர்: வாழ்க மன்னர்! வளர்க வீரம்! ஓங்குக புகழ்! உயர்க உமது எலிக்கொடி!

சோ.சொ.வ: புலவரே! உமது தமிழ்ப்புலமைக்கு எமது நன்றி! அடுத்த புத்தாண்டில் உமக்கு ஓயாவாய்ப்புலவர் என்ற பட்டமளிப்பதாக இருக்கிறேன்.

அ.அ.கவிஞர்: யான் தன்யனானேன்!

த.அ.வாயர்: நீங்கள் தன்யனாகி விட்டீர்கள்! மன்னர் தான் தனியனாகி விட்டார். கட்டியம் கூறவும் ஆளில்லாத நிலை.

சோ.சொ.வ: ஆம் புலவரே! பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கிற உமது கெட்டித்தயிர் போன்ற தமிழால் எமக்கு ஒரு கட்டியம் கூறும். அரசவைக்குள் வந்து விடுகிறேன்.

அ.அ.கவிஞர்: மன்னா! விருத்தமாகப் பாடட்டுமா?

த.அ.வாயர்: நீர் வருத்தமாகப் பாடாமல் இருந்தால் சரி!

சோ.சொ.வ: பொருத்தமாகச் சொன்னீர் தளபதியாரே! புலவரே, இத்தனை ஆண்டுகளாக அரசவைக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறீர்! தினசரி கேட்கும் கட்டியத்தைக் கூடவா சட்டென மறந்தீர்!

அ.அ.கவிஞர்: மன்னிக்க வேண்டும் மன்னா! நீங்கள் அரசவைக்கு வந்து நெடுங்காலமாகிவிட்டதல்லவா? அதனால் மறந்து விட்டேன்.

சோ.சொ.வ: பாதகமில்லை புலவரே! மரியாதையெல்லாம் பார்த்தால் மன்னராக இருத்தல் இயலாது. உமது அழைப்பை ஏற்று நாம் அரசவைக்குள்ளே வருகிறோம். தளபதியாரே வாழ்த்துச் சொல்லும்!

த.அ.வாயர்: தளபதி அடங்காவாயர் வாழ்க! மன்னிக்கவும் மன்னா, சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வாழ்க!

(சோ.சொ.வ அரியணையில் அமர்கிறார்)

சோ.சொ.வ: உம்! அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகட்டும்.

(தொடரும்)

(ஆதாரம்: சொறிகால்வளவனும் சோளக்கொல்லை பொம்மையும் என்ற புலவர்.விடாப்பொய்யர் வீரவநாதனின் ஆராய்ச்சி நூல் மற்றும் ஹிஹிபீடியா வலைத்தளம்.)

4 comments:

bhuvanendar said...

ummdidam thiramai karaipurandu oodukirathu ........pidithu vaikavum...

Paleo God said...

::)) வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள்.:)

settaikkaran said...

உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனேந்தர் அவர்களே

settaikkaran said...

//::)) வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள்.:)//

வாருங்கள் பலாபட்டறை அவர்களே! பத்துமுறை தமிழ்மணம் போனால் ஒன்பதுமுறை உங்கள் பெயரைக் காண்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!