Friday, July 8, 2011

அண்ணாஜிப்பழம்-பாகம்.04

முதல் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

இரண்டாம் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

மூன்றாம் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

(படிக்காவிட்டால் குடியா முழுகிவிடும் என்று கேட்பவர்களுக்காக கீழே ஃபிளாஷ்பேக் தரப்பட்டுள்ளது.)

முன்கதைச் சுருக்கம்

குடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அண்ணாஜிக்கு ’போரடிக்கவே’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்கிறார், கு.மு.கவின் பொருளாளர் நெப்போலியன் நெடுவளவனும், சேட்டையும் கிருஷ்ணசாமியுடன் அண்ணாஜியைப் பற்றி அளவளாவுகிறார்கள். ஒரு வழியாக, பேட்டியை முடித்துக்கொண்டு அண்ணா ஹஜாரே கு.மு.கவுடன் கலந்தாலோசிக்க உள்ளே வருகிறார்.

"நமஸ்தே அண்ணாஜி!" என்று நெப்போலியன் நெடுவளவன் வரவேற்று, கு.மு.கவின் கட்சிப் பொறுப்பாளர்களை அண்ணாஜிக்கு அறிமுகம் செய்தார். அண்ணாஜி சேட்டையை ’யார் இந்த அற்பப்பதர்?’ என்பதுபோல ஏறிட்டுப் பார்க்கவும், நெடுவளவன் புரிந்து கொண்டார்.

"இவரு பேரு சேட்டை! நீங்க ரெண்டு மூணுமாசமா நாட்டுலே இன்னா பண்றீங்களோ அத்தைத்தான் நம்ம சேட்டை பிளாக்-லெ பண்ணிக்கினுகீறாரு! அதாவது மொக்கை போட்டுக்கினுகீறாரு! இப்போ நடந்திச்சே தேர்தல், அதுலே எங்க கட்சிக்கு ஓட்டுப்போட்ட ஒரே ஆள் இவர்தான்!"

"அச்சா!" என்று அமுல்பேபி போல அழகாய்ச் சிரித்தார் அண்ணாஜி. "எங்க ஜன்லோக்பால் சட்டத்துக்கு உங்க கட்சியோட ஆதரவு கேட்டு வந்திருக்கேன். இதுக்காக தொடர்ந்து மூணு நாளும் சாப்பிட்டுக்கிட்டே வந்திருக்கிறேன். அதுக்காகவாச்சும் நீங்க ஆதரவு தரணும்." என்றார் அண்ணா ஹஜாரே.

"ஏன் அண்ணாஜி? உங்க மகாராஷ்டிராவுலே 25 வயசானவங்க மட்டும்தான் தண்ணியடிக்கலாமுன்னு சட்டம் போட்டிருக்காங்களாமே?"

"சேட்டை, என்ன சொல்றே?" என்று பதறினார் கிருஷ்ணசாமி. "இதை முன்கூட்டியே என்கிட்டே சொல்லியிருக்கலாமில்லே?"

"உங்களுக்குத் தெரியாதா? அந்தச் சட்டம் தப்பு. பதினெட்டு வயசானவங்கல்லாம் தாரளமாத் தண்ணியடிக்கலாம்னு சட்டத்தைத் திருத்தச் சொல்லி அமிதாப் பச்சன்லேருந்து யார் யாரோ பேசியிருக்காங்களே? அட நம்ம ஸ்ரேயா கூட இது தனிமனித உரிமையைத் தட்டிப்பறிக்கிற சட்டம்னு சொல்லியிருக்காங்களே?"

"ஐயோ சேட்டை! அண்ணாஜி உண்ணாவிரதத்தை விட்டாலும் நீ ஸ்ரேயாவை விட மாட்டியா? தலீவரே, அந்தச் சட்டம் நம்ம ஊருக்கு இன்னும் வரலே! முதல்லே அண்ணாஜியைப் பைசல் பண்ணி அனுப்பிரலாம்!" என்று எரிச்சலுடன் கூறினார் நெடுவளவன்.

"அண்ணாஜி, கட்சி ஆரம்பிச்சா தமிழ்நாட்டுலே கு.மு.கவோட தானே கூட்டணி?"

"கியா?" அண்ணாஜி மட்டுமல்ல, கிருஷ்ணசாமி, நெடுவளவன், பக்கிரிசாமி மற்றும் களக்காடு கருமுத்து என அனைவரும் அதிர்ந்தனர்.

"க்யா பாத் கர்தா ஹை? எனக்கு கட்சி, தேர்தல், பதவியெல்லாம் அவசியமே கிடையாது," என்று சீறினார் அண்ணாஜி.

"லூசா விடுங்க அண்ணாஜி! ’நானோ என் குடும்பத்தாரோ கட்சியிலே பதவிக்கு வந்தா செருப்பாலே அடிங்க,’ன்னு சொன்னவங்களையெல்லாம் நாங்க பார்த்தாச்சு! அரசியலிலே நீங்களும் வயசுக்கு வந்தாச்சு! அதாவது, உங்களுக்கும் நம்ம நாட்டுலே பிரதமர் ஆகிற வயசுதானே ஆவுது?"

"சேட்டை, இன்னா சொல்றே?" நெடுவளவன் திகைத்தார்.

"இருங்கண்ணே, அண்ணாஜி பதில் சொல்லட்டும்! சொல்லுங்க அண்ணாஜி, கட்சி ஆரம்பிச்சா கு.மு.கவோட கூட்டணி வைப்பீங்களா?"

"டீக் ஹை!" என்று சிரித்தார் அண்ணாஜி. "ஆனா ஒரு கண்டிஷன்! நான் கட்சி ஆரம்பிக்கிற வரைக்கும், ஊழலைப் பத்தி என்னைத் தவிர வேற யாரும் வாயே திறக்கக் கூடாது."

"சேச்சே! இது தமிழ்நாடு! அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவே மாட்டோம்."

"ஊழல் பண்ணுறவங்களைத் தூக்குலே போடுன்னு நான் சொல்லுவேன். வேறே யாரும் சொல்லக் கூடாது! குறிப்பா என் அனுமதி இல்லாம யாரும் டிவிக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது. ஓ.கேயா?"

"டிவி பார்க்கலாமா அண்ணாஜி?"

"பாருங்க! ஆனா, கபில் சிபல், பிரணாப் முகர்ஜீ இவங்கல்லாம் பேசினா, காதுலே பஞ்சை வைச்சு அடைச்சுக்கணும். நான் என்ன பேசினாலும் குத்தம் சொல்லக்கூடாது. சரியா?"

"சரி அண்ணாஜி! ஆனா, இந்தக் கட்சி குடிகாரர்களோட நல்வாழ்வுக்காக ஆரம்பிச்ச கட்சி! உங்க காந்தீயத்துக்கும் எங்க கட்சிக்கும் ஒத்து வருமா?"

"அட இதை விட மோசமான கட்சி கிட்டேயேல்லாம் போய் ஆதரவு கேட்டிட்டிருக்கேனே!"

"அப்போ சரி!"

"என்ன சேட்டை? கட்சித்தலைவரு நான் ஒருத்தன் இருக்கேன்," என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. "என்ன சொல்றே நீ? லோக்பால் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்கச் சொல்றியா?"

"தலைவரே, லோக்பால் சட்டத்துக்கு எதிர்ப்புச் சொன்னா, நீங்க ஊழல்கட்சின்னு ஜனங்க நினைச்சுக்குவாங்க. அதுனாலே, பேசாம லோக்பால் சட்டம் அவசியம் கொண்டுவரணுமுன்னு ஒரு அறிக்கை விட்டிருங்க! அண்ணாஜியோட ஒரு போட்டோ எடுத்து எல்லா பேப்பரிலேயும் போட்டிருங்க! மக்கள் உங்களை ரொம்ப நல்ல புள்ளைன்னு நம்பிருவாங்க! அம்புட்டுத்தேன்!"

"உளறாதே சேட்டை!" இரைந்தார் கிருஷ்ணசாமி. "லோக்பால் சட்டம் வந்தா என்னாகுறது?"

"அது எப்படி வரும்? நம்ம அண்ணாஜி எவ்வளவு சாமர்த்தியமா அவரோட போராட்டத்தை ஆரம்பிச்சிருக்கிறாரு? எப்படியாவது ஒண்ணு ரெண்டு உதிரிக்கட்சி எதிர்த்தாலும் போதும், இந்தச் சட்டத்தைக் கெடப்புலெ போட்டிருவாங்கன்னும் தெரியும். அத்தோட,இவரு உண்ணாவிரதமுன்னு தில்லியிலே அடிச்ச கூத்துலே ஜனங்கல்லாம் என்னமோ அண்ணா ஹஜாரே தான் லோக்பால்-னு ஒரு சட்டத்தையே கண்டுபிடிச்சா மாதிரி பிரமிச்சுப் போயிருக்காங்க! அப்படியே மக்களுக்கு கொஞ்சம் மப்பு குறைஞ்சாலும், உடனே இன்னொரு உண்ணாவிரதம்னு ஆரம்பிச்சு, திரும்பக் கூட்டத்தைக் கூட்டிருவாரு!"

"அட ஆமாம்!" என்று வியந்தார் கிருஷ்ணசாமி. "அப்போ அண்ணாஜிக்கு ஆதரவுன்னு அறிக்கை கொடுத்திரலாமா?"

"தன்யாவாத்..தன்யாவாத்.." என்று கைகுவித்தார் அண்ணா ஹஜாரே.

"என்ன சொல்றாரு அண்ணாஜி?"

"தனியாவாத்து! அதாவது இப்படியொருத்தரு தனியா ஆரம்பிச்ச கூத்துக்கு வாத்துமடையனுங்க மாதிரி தலையாட்டுறிங்க இல்லையா? அதைத்தான் அண்ணாஜி சுருக்கமா ’தனியா வாத்து...தனியா வாத்து,’ன்னு சொல்றாரு!"

மறுநாள்! எல்லா தினசரிகளிலும் ’அண்ணாஜிக்கு கு.மு.க.ஆதரவு’ என்ற செய்தி, அண்ணாஜியும் கிருஷ்ணசாமியும் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் வெளியாகின. எல்லா ஆங்கில தொலைக்காட்சிகளிலும் இருவரும் கைகுலுக்கும் காட்சிகள் ஓளிபரப்பாகின.

"இந்தாளு பெரிய எம்டன்யா! கண்டிப்பா ஊழலை ஒழிச்சிருவாரு பார்த்திட்டேயிருங்க!" என்று கஜேந்திரா டீ ஸ்டாலில் கூடியிருந்த பொதுமக்கள் சிலாகித்துப் பேசிக்கொண்டனர்.

(முற்றும்)

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

"தனியாவாத்து! அதாவது இப்படியொருத்தரு தனியா ஆரம்பிச்ச கூத்துக்கு வாத்துமடையனுங்க மாதிரி தலையாட்டுறிங்க இல்லையா? அதைத்தான் அண்ணாஜி சுருக்கமா ’தனியா வாத்து...தனியா வாத்து,’ன்னு சொல்றாரு!"

Super comedy. Thodarungal.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்....

தனியா வாத்து.... ரசித்தேன் சேட்டை.

தொடரட்டும் உங்கள் சேட்டை....

சேலம் தேவா said...

ஹா..ஹா... சேட்டைக்கு தன்யாவாத்..!! தன்யாவாத்..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹஹஹ்ஹா.... தொடர் முழுதும் அருமை சேட்டை, இன்னும் கொஞ்ச நாள் முன்பு வந்திருந்தால் சூப்பராக இருந்திருக்குமோ?