Saturday, March 5, 2011

வில்லுப்பாட்டுக்காரன்

தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட...ஆமா...வில்லினில் பாட...ஆமா
வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே...
தானதந்தத்தோடு ஏழு சந்தங்களும் தாளத்தோடு
ஆனபம்பை உறுமிதக்கை
துந்துமியோடு...ஆமா...துந்துமியோடு...ஆமா...துந்துமியோடு
அத்தனையும் மேளத்தோடு
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே...

நாட்டிலுள்ள நண்பர்களே நல்லமனங்கொண்டவரே
சேட்டையோட முதல்வணக்கம்
நான் சொல்லிப்புட்டேன்...ஆமா..நான் சொல்லிப்புட்டேன்...ஆமா..
நான் சொல்லிப்புட்டேன்...
சொல்லுவதைக் கேட்டுப்போங்க!

சென்னிமலைக்காரர் நம்ம செந்தில்குமார் கேட்டதாலே
சேர்ந்துநானும் வலையுலகில்
இதுவரைக்கும்...ஆமா...இதுவரைக்கும்...ஆமா
இதுவரைக்கும்
செஞ்சதெல்லாம் சொல்லப்போறேன்

மகாஜனங்களே! கடந்த 2010 ஜனவரி 7 தேதியன்று, வலையுலகில் நான் அடியெடுத்து வைத்தேன். எழுத ஆரம்பித்த புதிதில் வாய்க்காங்கரை வாத்து போல தறிகெட்டு ஓடிய எனக்கு வழிகாட்டியவர்கள் யார் யார் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

சிங்கைப்பதிவர் நட்பின்சின்னம் பிரபாகரும் கண்டு
பாங்காய் வலைச்சரத்திலே
என் பேரைச் சொல்ல...ஆமா..என் பேரைச் சொல்ல...ஆமா..
என் பேரைச் சொல்ல...படிக்கவந்தார் பலபேரு!

மஞ்சூரண்ணலென்றுதான் மதிப்புடனே நானழைக்கும்
பஞ்சான மிருதுமனம்
படைச்ச ராசா...ஆமா..படைச்ச ராசா...ஆமா..
படைச்ச ராசா....பதிவுபல படிக்க வைச்சார்!

நல்லபின்னூட்டங்களும் நகைப்பானும் சேர்த்துப்போட்டு
நாளும் உற்சாகமளித்தார்
சிறுமுயற்சி...ஆமா..சிறுமுயற்சி...ஆமா
சிறுமுயற்சி முத்துலட்சுமியும்தானே!

அபுதாபிசகோதரி அநன்யா மஹாதேவனும்
அடியேனுக்கறிவுரைகள்
பலவழங்கி..ஆமா..பலவழங்கி..ஆமா..
பலவழங்கி..ஆதரித்து உதவிசெய்தார்!

எந்தவூரு என்னபேரு என்றுநான் சொல்லாதபோதும்
கந்தவேலு ராஜன் வந்து
முதன்முதலா...ஆமா...முதன்முதலா...ஆமா...
முதன்முதலா கடைதொறந்து கொடுத்தாரே!

மேலே குறிப்பிட்டவர்களின் பார்வை என்மேல் படாமல் போயிருந்தால், இன்றைக்கு சேட்டைக்காரனில் ஒரு லட்சத்துக்கும் மேலான ஹிட்ஸ் வந்திருக்க வாய்ப்பேயில்லை.

அது மட்டுமா? வலைச்சரத்தில் தொடர்ந்து எனது வலைப்பதிவைப்பற்றி ஜெட்லீ தொடங்கி அண்மையில் பிலாஸபி பிரபாகரன் வரைக்கும் எத்தனையோ பிரபல பதிவர்கள் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தினார்கள். இந்தப் பட்டியல் மிகநீளம் என்பதால், அவர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி, கரம்கூப்பி சேட்டைக்காரன் வணங்குகிறேன்.

மகாஜனங்களே! இவர்களோட ராசியான கைகளால் குட்டுப்பெற்றதனால், அடியேனும் நாளொரு இடுகையும் பொழுதொரு ஃபாலோயருமாக ஹார்லிக்ஸ் பேபி போல ஆரோக்கியமாக வளர்ந்துவந்தேன். தவமே செய்யாதவனுக்கு வரம் கிடைப்பதுபோல ஒரு நாள் எனக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு மடல்வந்தது.

என்ன அது?

வலைச்சரத்தில் எனக்கொரு
வாய்ப்பளித்தார் சீனா ஐயா
மலைப்பாகத் தோணுதய்யா
ஒருவாரம் நானும்...ஆமா...ஒருவாரம் நானும்...ஆமா...
ஒருவாரம் நானும் அலப்பறைதான் செய்துமுடித்தேன்!

அன்றுமுதல் இன்றுவரை
ஆதரித்து வந்துசெல்லும்
அன்பரொன்று இரண்டில்லையே
முன்னூறு பேர்கள்...ஆமா..முன்னூறு பேர்கள்...ஆமா..
முன்னூறு பேர்கள் பின்தொடர்ந்து வாறாரே!

அன்பர்களே! பிள்ளையார் பிடிக்கப்போயி குரங்கா முடிஞ்சதா கேள்விப்பட்டிருப்பீங்க! ஆனா, இந்த சேட்டைக்காரன் கதை, குரங்கு பிடிக்கப்போயி பிள்ளையாரா முடிஞ்ச மாதிரி ஆயிருச்சு!

வாழ்க்கையொரு இட்லியென்று
வக்கணையாய் இடுகைபோட்டு
நோக்கமின்றி எழுதிவந்தேன்
நான் முன்னேயெல்லாம்...ஆமா...நான் முன்னேயெல்லாம்...ஆமா
நான் முன்னேயெல்லாம் ஜோக்கர்போலே எழுதிவந்தேன்

ஊக்கமிகத் தந்து நானும்
ஆக்கமாய் இடுகைபோட
தாக்கம்தந்து வளர்த்தவரே
நான் தெண்டனிட்டேன்...ஆமா...நான் தெண்டனிட்டேன்...ஆமா...
நான் தெண்டனிட்டேன்...தொடர்ந்து வழிசொல்வீரே!

ஒவ்வொருத்தர் பேரைச்சொன்னா
ஒருவருசம் போதாதிப்போ
ஒட்டுமொத்தமாகச் சொல்லுறேன்
என் நன்றியைத்தான்...ஆமா...என் நன்றியைத்தான்...ஆமா...
என் நன்றியைத்தான்...ஒங்க கடன் தீராதே!

நான்வணங்கும் காளிகாம்பா
நன்மையெல்லாம் உங்களுக்கு
நல்லபடியா அருளணும்
நான் வேண்டிக்கிறேன்..ஆமா...நான் வேண்டிக்கிறேன்..ஆமா...
நான் வேண்டிக்கிறேன்..நாடும்வீடும் சிறந்திடணும்!

டிஸ்கி.1: வில்லுப்பாட்டு பாணியிலே ஒரு இடுகை போடணும் என்று ரொம்ப நாள் ஆசை. பொறுத்தருள்க!

டிஸ்கி.2: இணையத்துலே சரியான படம் கிடைக்காததால், வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் படங்களையும் நானே வரைந்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் பொறுத்தருள்க!

டிஸ்கி.3: சி.பி.எஸ் தொடர்பதிவு என்பதாலோ என்னவோ, டிஸ்கியும் தானா வந்திருச்சு. இதையும் பொறுத்தருள்க! ( நல்லவேளை, நமீதா படம் போடணுமுன்னு நினைச்சாலும் அவரு காபிரைட் வாங்கியிருக்கிறாரு!)

34 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முன்பெல்லாம் பாடலை பாடியே வலையேத்தி இருப்பீர்கள்.. அதுபோல இந்த பதிவையும் பாடலாக பதிவு செய்திருக்கலாம் :)

வில்லு பாட்டு பாணி, நல்லா வந்திருக்கு பதிவு..

Anonymous said...

ஆஹா அருமையான சூப்பரான கலக்கலான...நகைச்சுவையான முறையில் உங்கள் வளர்ச்சியை தெளிவுபடுத்தி இருக்கீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா .. அண்னே அசத்தல்.. இதுக்கு முன்னால யாராவது பதிவுல வில்லுப்பாட்டு யூஸ் பண்னாங்களா>?ன்னு தெரியல.. ஆனா திரும்பி பார்க்கிறேன் பதிவை யாரும் இவ்வளவு வித்தியாசமா செஞ்சதில்லை... கலக்கல்.


>>>அன்பர்களே! பிள்ளையார் பிடிக்கப்போயி குரங்கா முடிஞ்சதா கேள்விப்பட்டிருப்பீங்க! ஆனா, இந்த சேட்டைக்காரன் கதை, குரங்கு பிடிக்கப்போயி பிள்ளையாரா முடிஞ்ச மாதிரி ஆயிருச்சு!

உண்மைதான்

சி.பி.செந்தில்குமார் said...

கலைஞருக்கும் நல்லாட்சிக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ,அது போல் நமீதா ஸ்டில்லுக்கும் எனக்கும் அவ்வளவு ஏன் நமீதாவுக்கும் ,எனக்கும் கூட எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.. என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணே.. உங்க வில்லுப்பாட்டு ஓக்கே... ஆனா இது ஒரு நன்றி அறிவிப்பு மாதிரிதான் இருக்கு. நான் கேட்ட சரக்கு வேற... உங்க வலை உலக, எழுத்துலக,வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டா எங்களை மாதிரி யூத்துக்கு (அண்டர்லைன் ப்ளீஸ்)யூச் ஆக இருக்கும். எனவே விரைவில் இதன் 2-ம் பாகம் வரும் என எதிர்பார்க்கிறோம்

Yoga.s.FR said...

இந்தப் பொழப்பு வேற எக்ஸ்ட்ராவா?பலே!பலே!!!!!!!!(இன்னா வேண்ணாலும் எ"ளு"தலாம் இல்ல, இன்னா வேண்ணாலுm எ"ழு"தலாம்!)

Sivakumar said...

வித்யாசமான சிந்தனை. ரசிக்கும்வண்ணம் இருந்தது. வாழ்த்துகள்!

பொன் மாலை பொழுது said...

// டிஸ்கி.2: இணையத்துலே சரியான படம் கிடைக்காததால், வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் படங்களையும் நானே வரைந்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் பொறுத்தருள்க!//

பிரமாதமா பண்ணியிருக்கீங்க.
அது சரி , கடம் வாசிப்பவர் ஏன் இப்படி ஆயி போவது போலவா உட்கார்ந்திருப்பார்?
இருந்தாலும் சிரிப்பைத்தான் தந்தது. வரைத்து சேட்டையாயிற்றே!

Speed Master said...

படம் அருமை சார்

பாடல் டாப்டக்கர்

Ram said...

சேட்டைக்கு சேட்டை அதிகமாகுது.. புதுமுயற்சியா இருக்கே.!! நானும் ட்ரை பண்ணலாமா(வேணாம் டா கூர்.. அப்பரம் சிபி அங்கயும் வந்து நமீதாவுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லனு சொல்லுவார்.. இது தேவையா.??)

Unknown said...

வில்லுப் பாட்டுக்காக மிகவும் மெனெக்கெட்டு எழுதிய உழைப்புக்கு பாராட்டுக்கள்...

பாட்டும் பிரமாதம் ..

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் வில்லுப்பாட்டுப் பதிவும் மிக அருமையாக காமெடியாக ரசிக்கும் படியாகவே இருந்த்து. வாழ்த்துக்கள்.

வசந்தா நடேசன் said...

மறந்துவிட்ட சிறுவயது வில்லுப்பாட்டை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.. நல்ல நடை, பகிர்ந்தமைக்கு நன்றி.

பிரபாகர் said...

மெதுவாய் கடைசிவரை பாடி படித்துப்பார்த்தேன்... அற்புதமாய் பொருந்துகிறது நண்பரே!...

உங்கள் எழுத்தின் இன்னுமொரு பரிமாணம் மிக அழகாய் இங்கு.

பிரபாகர்...

vasu balaji said...

சேட்டைக்கு வில்லும் இடுகை..புதுமொழி=)). நல்லாருக்கு.

டக்கால்டி said...

அருமை, படமும் அருமை...கலக்குங்க..

ரிஷபன் said...

வாசிக்கும்போதே அப்படியே பிசிர் தட்டாமல் மனசுக்குள் ராகமாய் ஒலிக்கிறது வில்லுப்பாட்டு. சேட்டைக்குள் எத்தனை ஸ்வரங்கள்.. பிரமிப்பு விலகாமல் நான்.

settaikkaran said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

முன்பெல்லாம் பாடலை பாடியே வலையேத்தி இருப்பீர்கள்.. அதுபோல இந்த பதிவையும் பாடலாக பதிவு செய்திருக்கலாம் :)//

செய்திருக்கலாம் தான். ஆனால், என்னால் காது,மூக்கு,தொண்டை நிபுணர்களுக்கு சுபிட்சம் ஏற்பட்டிருக்குமே? :-)

//வில்லு பாட்டு பாணி, நல்லா வந்திருக்கு பதிவு..//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா அருமையான சூப்பரான கலக்கலான...நகைச்சுவையான முறையில் உங்கள் வளர்ச்சியை தெளிவுபடுத்தி இருக்கீங்க..//

என்னை வளர்த்துவிட்டதே நகைச்சுவையும் நையாண்டி இடுகைகளும் தானே! :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா .. அண்னே அசத்தல்.. இதுக்கு முன்னால யாராவது பதிவுல வில்லுப்பாட்டு யூஸ் பண்னாங்களா>?ன்னு தெரியல.. ஆனா திரும்பி பார்க்கிறேன் பதிவை யாரும் இவ்வளவு வித்தியாசமா செஞ்சதில்லை... கலக்கல்.//

நானும் வில்லுப்பாட்டு-ன்னு கூகிள்லே தேடினேன். வலைப்பதிவுலே யாரும் எழுதியிருக்கிறா மாதிரி தெரியலே தல! அதான் இதையே புடிச்சுக்கிட்டேன்.

//கலைஞருக்கும் நல்லாட்சிக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ,அது போல் நமீதா ஸ்டில்லுக்கும் எனக்கும் அவ்வளவு ஏன் நமீதாவுக்கும் ,எனக்கும் கூட எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.. என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//

ஆனா கலைஞருக்கும் கலைஞர் டிவிக்கும் சம்பந்தமிருக்கு. கலைஞர் டிவிக்கும் நமீதாவுக்கும் சம்பந்தமிருக்கு. ஆகவே உங்களுக்கும் நமீதாவுக்கும் ஏதோ சம்பந்தமிருக்கு-ன்னு நான் சொல்ல மாட்டேனே! :-)

//சேட்டை அண்ணே.. உங்க வில்லுப்பாட்டு ஓக்கே... ஆனா இது ஒரு நன்றி அறிவிப்பு மாதிரிதான் இருக்கு. நான் கேட்ட சரக்கு வேற... உங்க வலை உலக, எழுத்துலக,வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டா எங்களை மாதிரி யூத்துக்கு (அண்டர்லைன் ப்ளீஸ்)யூச் ஆக இருக்கும். எனவே விரைவில் இதன் 2-ம் பாகம் வரும் என எதிர்பார்க்கிறோம்//

வாசிப்பு மிகக்குறைவு! எழுத்துலகத்துலே எதுவுமே இல்லை. வலையுலகத்தில் உங்களைப் போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதற்கு சேட்டைக்காரன் வலைப்பதிவே சாட்சி! இதற்கு மேல் என்ன எழுத தல..? :-)

இருப்பினும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏதேனும் விடுபட்டிருந்தால், அவசியம் எழுத முயல்வேன். மிக்க நன்றி தல...!

settaikkaran said...

//Yoga.s.FR said...

இந்தப் பொழப்பு வேற எக்ஸ்ட்ராவா?பலே!பலே!!!!!!!!(இன்னா வேண்ணாலும் எ"ளு"தலாம் இல்ல, இன்னா வேண்ணாலுm எ"ழு"தலாம்!)//

கைவசம் ஏழெட்டு வித்தை வச்சிருக்கேன். ஒவ்வொண்ணா அவுத்து வுட வேண்டியதுதான். அது "எளுதலாம்" தானுங்க: இது சேட்டைக்காரன் மொழி! :-)

மிக்க நன்றி!!

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

வித்யாசமான சிந்தனை. ரசிக்கும்வண்ணம் இருந்தது. வாழ்த்துகள்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

பிரமாதமா பண்ணியிருக்கீங்க. து சரி , கடம் வாசிப்பவர் ஏன் இப்படி ஆயி போவது போலவா உட்கார்ந்திருப்பார்?//

ஹிஹி! அப்படியா தெரியுது? அட ஆமாம்! வரைஞ்சு ரொம்ப நாளாச்சுது நண்பரே! நெக்ஸ்ட் டைம் இன்னும் நல்லா வரும்னு தோணுது.

//இருந்தாலும் சிரிப்பைத்தான் தந்தது. வரைத்து சேட்டையாயிற்றே!//

மிக்க மகிழ்ச்சி நண்பரே! மிக மிக நன்றி!

settaikkaran said...

//Speed Master said...

படம் அருமை சார் பாடல் டாப்டக்கர்//

மிக்க மகிழ்ச்சி நண்பரே! மிக மிக நன்றி!

settaikkaran said...

//தம்பி கூர்மதியன் said...

சேட்டைக்கு சேட்டை அதிகமாகுது.. புதுமுயற்சியா இருக்கே.!! நானும் ட்ரை பண்ணலாமா(வேணாம் டா கூர்.. அப்பரம் சிபி அங்கயும் வந்து நமீதாவுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லனு சொல்லுவார்.. இது தேவையா.??)//

தாராளமாக நீங்களும் ட்ரை பண்ணுங்க நண்பரே! இது நமது பாரம்பரீயக்கலை. காப்பிரைட் கிடையாது. நிச்சயம் நல்லா வரும். பெஸ்ட் ஆஃப் லக்! மிக்க நன்றி!!

settaikkaran said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

வில்லுப் பாட்டுக்காக மிகவும் மெனெக்கெட்டு எழுதிய உழைப்புக்கு பாராட்டுக்கள்...//

ஆமா நண்பரே! இந்த இடுகைக்கு கொஞ்சம் அதிக உழைப்பு தேவைப்பட்டது என்பது உண்மைதான்.

//பாட்டும் பிரமாதம் ..//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் வில்லுப்பாட்டுப் பதிவும் மிக அருமையாக காமெடியாக ரசிக்கும் படியாகவே இருந்த்து. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஐயா! இது போன்ற உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள் தான் ஒவ்வொரு முறையும் எதையாவது வித்தியாசமாகச் செய்ய என்னை உந்துவிக்கிறது.

settaikkaran said...

//வசந்தா நடேசன் said...

மறந்துவிட்ட சிறுவயது வில்லுப்பாட்டை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.. நல்ல நடை, பகிர்ந்தமைக்கு நன்றி.//

நானும் சிறுவயதில் பார்த்தது / கேட்டதுதான். நேரில் மீண்டும் காணவிரும்புகிறேன். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//பிரபாகர் said...

மெதுவாய் கடைசிவரை பாடி படித்துப்பார்த்தேன்... அற்புதமாய் பொருந்துகிறது நண்பரே!...//

ஆஹா, எனக்கு ஒரு இடத்தில் சந்தம் பிசகியது. இருந்தாலும் சமாளித்திருக்கிறென். :-)

//உங்கள் எழுத்தின் இன்னுமொரு பரிமாணம் மிக அழகாய் இங்கு.//

மிக்க நன்றி நண்பரே! நீங்களெல்லாம் இல்லாமல் இவற்றிற்கு வாய்ப்பேயில்லாமல் போயிருக்கும்.

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

சேட்டைக்கு வில்லும் இடுகை..புதுமொழி=)). நல்லாருக்கு.//

ஆஹா! நறுக்குனு நாலு வார்த்தை மாதிரி ஐயா புதுமொழி-ன்னும் ஒரு இடுகை போடலாம் போலிருக்குதே! :-)

மிக்க நன்றி ஐயா! உங்களது ஆசியும் என்னை வழிநடத்துகிறது.

settaikkaran said...

//டக்கால்டி said...

அருமை, படமும் அருமை...கலக்குங்க..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

வாசிக்கும்போதே அப்படியே பிசிர் தட்டாமல் மனசுக்குள் ராகமாய் ஒலிக்கிறது வில்லுப்பாட்டு. சேட்டைக்குள் எத்தனை ஸ்வரங்கள்.. பிரமிப்பு விலகாமல் நான்.//

நண்பரே! ஆரம்பகாலம் முதலாய் என்னை உற்சாகப்படுத்தி வருபவர்களில் நீங்களும் ஒருவர். உங்களது பின்னூட்டங்கள் என்னைத் தொடர்ந்து மாறுபட்டு யோசிக்க வைக்கின்றன என்பதே உண்மை. மிக்க நன்றி! :-)

வெங்கட் நாகராஜ் said...

வில்லுப் பாட்டும், அதற்கான படமும் மிக அழகாய் வந்திருக்கிறது சேட்டை. நல்ல வில்லுப்பாடல் கேட்ட சுகம்! பகிர்வுக்கு மிக்க நன்றி.

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

வில்லுப் பாட்டும், அதற்கான படமும் மிக அழகாய் வந்திருக்கிறது சேட்டை. நல்ல வில்லுப்பாடல் கேட்ட சுகம்! பகிர்வுக்கு மிக்க நன்றி.//

எனது நெடுநாள் ஆசை இது. எண்ணியபடியே நிறையபேருக்குப் பிடித்திருப்பது நிறைவளிக்கிறது. மிக்க நன்றி! :-)