Friday, May 21, 2010

கடவுளைக் கண்டேன்!

"அஹம் பிரம்மாஸ்மி" இடுகை மூலம் முகிலன் அவர்களும், "நான்/கடவுள்" இடுகை மூலம் பிரபாகர் அவர்களும் கடவுள் குறித்த தங்களது தொடர்பதிவுக்கு என்னை அழைத்திருந்தனர். என்ன செய்யலாம்? ஒன்றே குலம்; ஒருவனே தெய்வம் என்று சொல்லி விடலாமா என்று ஒரு குயுக்தியான யோசனை தோன்றாமல் இல்லை. அப்படிச் சொன்னால், என்னைச் சுற்றியிருப்பவர்களை ஏமாற்றுவதோடு, அவர்களது பரந்த மனப்பான்மையை நானே குறைத்து மதிப்பீடு செய்வதாக ஆகி விடாதோ? இன்னும் ஒருவரது நம்பிக்கையை பெரும்பாலான மற்றவர் மதிக்கிற சமூகத்தில் இருந்து கொண்டு அதைச் சொல்வதா?

எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்று சவுகரியமாக ஒரு பொய் சொல்லித் தப்பித்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு நான் அலுவலகம் செல்லும்போது காளிகாம்பாள் கோவிலுக்குள்ளிருந்து யாரோ கைதட்டி அழைப்பது போல பிரமை ஏற்படலாம். இஷ்ட சித்தி விநாயகர் என்னைப் பார்த்து,'நீயும் அவ்வளவு தானா?’ என்று நக்கலாய்ச் சிரிப்பது போல ஒவ்வொரு நாளும் தம்புச்செட்டித் தெருவைக் கடக்கும்போதும் தோன்றலாம். பிறகு, ஒவ்வொரு முறை ஏதேனும் சஞ்சலம் ஏற்படுகிறபோதெல்லாம் நான் சொன்ன பொய்க்குக் கிடைத்த தண்டனையாய் இருக்குமோ என்று குழம்ப வேண்டியிருக்கும். அதனால், உண்மையைச் சொல்லி விட்டால் போயிற்று! எனக்குக் கடவுள் மீது அபாரமான நம்பிக்கையுண்டு!

எனது கடவுள் நம்பிக்கை, பிள்ளைப்பிராயத்தில் எனக்குக் கடவுள் மீது ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட ஒரு அதீதமான பயத்தின் தொடர்பரிமாணம் என்றும் கூறலாம். சாந்தமாய் புன்னகைக்கும் தெய்வங்களோடு, ஆக்கிரோஷமாக கையில் கொடுவாளுடன், முறுக்கு மீசையுடன் பிரம்மாண்டமாய் அமர்ந்து அச்சுறுத்திய கிராமத்து தெய்வங்களையும் வழிபட்டு வளர்ந்தவன் நான்! ஆனாலும் சிறுவயதிலிருந்தே பிள்ளையாருக்கும் எனக்கும் அடர்த்தியான நட்பு இருந்து வந்திருக்கிறது; இன்னும் அது தொடர்கிறது!

ஒரு விதத்தில் கிராமத்துத் திருவிழாக்கள் அந்த ஒரு சில நாட்களுக்குத் தந்த சுதந்திரம், அளித்த குதூகலம் இவற்றின் காரணமாக கடவுளின் மீது எனக்கு ஒரு அலாதியான சினேகிதமே ஏற்பட்டு விட்டது என்பதே உண்மை.

குறிப்பாக, கோவில் கொடைத்திருவிழாவும் முத்தாரம்மன் கோவில் திருவிழாவும்!

வெயில் கொளுத்துகிற தெருவெங்கும் லாரி லாரியாகக் கொண்டுவந்து குவிக்கப்படுகிற ஆற்றுமணலில் வீடு கட்டி விளையாடுவதிலிருந்து எங்கள் கொண்டாட்டங்கள் தொடங்கும். தென்னங்கீற்றுக்களாலும் மூங்கில்களாலும் தெருவை அடைத்துப் போடப்படும் பந்தலில் சிறார்களின் ராஜாங்கமும், பெரிசுகளின் சீட்டுக்கச்சேரியும் களைகட்டும். விடுமுறை மதியங்களில் அந்தப் பந்தலின் நிழலில் துண்டு விரித்துக் குறட்டை விடுகிறவர்களின் வயிறு உப்பியெழும்பித் தாழ்வதை அருகிலிருந்து சிரித்தவாறு பார்த்த நாட்கள் எத்தனை? அவர்கள் மீது எட்டுக்கால் பூச்சிகளையும் பிள்ளைப்பூச்சிகளையும் ஊர விட்டு ஓடிப்போய்ச் சிரித்த குறும்புக்கணங்களும் கணக்கிலடங்கா!

மாலையானதும் மணலில் நீர் தெளிக்கும் பொறுப்பு சிறுவர்,சிறுமியரிடம் பொதுவாக ஒப்படைக்கப்படும். வாளி வாளியாய் பொதுக்கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு வந்து போட்டி போட்டுக்கொண்டு மணலின் மீது நீர் தெளிப்பதும் எங்களது விளையாட்டுக்களில் ஒன்றாகவே இருந்து வந்தது. அதுவும் கடவுளுக்குச் செய்யும் சேவை என்று அறியாமலே செய்தோம்.

வண்ண வண்ணக் காகிதங்களைத் துண்டு துண்டாக்கி, சணல் கயிற்றில் கோர்த்து ஒட்டி, தெருவெங்கும் தோரணங்கள் கட்டியபோதும் அதுவும் கோவில்பணியென்று அறிந்து செய்ததில்லை. மாலையில் சிலம்பத்தின் இருமுனைகளிலும் துணிசுற்றிக் கொளுத்திய பந்தத்தைச் சுற்றிக்கொண்டு தெருவழியே சென்றபோதும் அது ஒரு வித வழிபாடு என்று அறிந்திருக்கவில்லை.

கொடிக்கால் நட்டு, திருவிழா தொடங்கியதும் ஊரே களைகட்டும். ஜவ்வு மிட்டாய், பலூன், ஓலைக்காற்றாடி, பஞ்சு மிட்டாய், பாயாஸ்கோப் என்று தெருவெங்கும் எங்களது கவனத்தையும் காசையும் கவருகிற விதவிதமான கவர்ச்சிகள்! மாலையில் தெருக்கூத்தும், இரவில் 16 MM திரையில் காண்பிக்கப்படும் பக்திப்படங்களும் ஊரையே குதூகலத்தில் ஆழ்த்தும்!

பட்டுப்பாவாடை,சட்டையணிந்து பால்குடம் ஏந்தி வரும் சிறுமிகளின் முகத்தில் தென்படும் சிரிப்பில் உண்மையிலேயே பால்வடியும்! கோவிலின் முகப்பில் கணக்கற்ற அடுப்புக்கள் ஏற்றப்பட்டு, படையலுக்காய் தயாரிக்கப்பட்ட பொங்கலை பெண்கள் குலவைச்சத்தத்தோடு கும்பிடும்போது, அவர்களின் நாக்குகள் ஆடும் நாட்டியத்தை ஆச்சரியத்துடன் கவனித்ததுண்டு.

திருவிழாவை முன்னிட்டு அகிலாண்டபுரம், கடம்பூர், கப்புலிங்கம்பட்டி, குப்பணாபுரம், தென்னம்பட்டி, வடக்குவந்தனம் என சுற்றுப்பட்ட பட்டிகளிலிருந்து வந்து வீடெங்கும் நிரம்பியிருக்கும் உறவினர்களால் ஒவ்வொரு வீடும் கலகலப்பாய்க் காட்சியளிக்கும். உறவுகளையும் நட்புக்களையும் கடவுள் பக்தி வளர்க்குமா? வளர்க்கும் என்பதே அனுபவரீதியாக நான் கண்ட உண்மை!

ஏனைய நாட்களில் நல்லெண்ணைப் பூச்சும், அழுக்குத் துண்டும் அணிந்திருக்கும் ஐயனாருக்கு திருவிழாவின் போது விதவிதமாய் அலங்காரங்கள்! நேரத்துக்கு ஒரு படையல்! காலை தொடங்கி நண்பகல் வரை தொடரும் அபிஷேகங்கள்! கோவிலின் வாசலில் அண்டாவில் கரைத்து வைத்திருக்கும் சந்தனத்தை அள்ளியள்ளி உடம்பெங்கும் பூசிக்கொண்டு வெயிலில் இதங்கண்ட நாட்கள் அவை!

இரவானால் ஊரே வண்ணவிளக்குகளில் ஜொலித்துக்கொண்டிருக்கும். வரிசையாய்க் கடைகளில் வளையல் தொடங்கி பொம்மைகள் வரை என்னென்னவோ விற்பனையாகிக்கொண்டிருக்கும். குச்சி ஐஸ் வண்டிகளே பத்து நின்றுகொண்டிருக்கும். மாங்காய்க்கீறலில் மிளகாய்த்தூளும், உப்பும் தடவி விற்கும் கடையை ஈ மொய்ப்பது போல நாங்கள் மொய்த்துக்கொண்டிருப்போம். உப்புத்தண்ணீரில் ஊறிய நெல்லிக்காயும், வெள்ளரிப்பிஞ்சும் இப்போது நினைத்தாலும் இனிக்கிறதே!

அதிகாலையில் "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்," என்று சீர்காழியின் வெண்கலக்குரல் ஊரைத் தட்டியெழுப்பும். ஆராதனைகள் முடிந்ததும் ஒரு மணி நேரத்துக்கு கமல்,ரஜினி படப்பாடல்களும் கேட்கலாம். படையல் விநியோகம் முடிந்ததும் ஒலிபெருக்கிகள் ஓயும்; கோவில் தொடங்கி தெருமுனை வரையிலும் எங்கு பார்த்தாலும் ஆளாளுக்கு அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பதைக் காண முடியும். மாலை நான்கு மணிக்கெல்லாம் வீரமணியின் ஐயப்ப பக்திப் பாடல்கள் ஆரம்பித்து விடும். பிறகு, அன்றைய மாலையில் ஏதேனும் நிகழ்ச்சி துவங்கும்வரைக்கும் ஒலிபெருக்கியின் சத்தம் ஓங்காரமாய் இசைத்துக்கொண்டிருக்கும்.

கரகாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம்! இவைகளைப் பற்றி விரிவாக எழுதினால், நிறுத்துவது கடினமாகி விடுமே!

வில்லுப்பாட்டு! ஆஹா, இந்த நகரத்து வாழ்க்கையில் நான் தவற விட்ட பல சின்னச் சின்ன சந்தோஷங்களில் அதுவும் ஒன்று.

"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட...ஆமா...வில்லினில் பாட...ஆமா...வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே....!"

காளியின் சூலம் அசுரர்களைக் கிழித்து வதம் செய்வதைப் பற்றி வில்லுப்பாட்டுக்கலைஞர் வேகமாக, வாத்தியங்கள் முழங்கப்பாடும்போது அம்மாவின் பக்கம் ஒடுங்கி அஞ்சியதுமுண்டு.

ஓங்காரி கையிருந்து புறப்பட்ட சூலமது
ஆங்கார அரக்கனை அழித்ததைப் பாரப்பா...

தேங்காயை உடைப்பது போலத்தான் சிரந்தனை
சுக்கல் சுக்கலெனத்தான் பொடிபட உடைத்தனள்....


ஆத்தா மீது பயம் அதிகரிக்கும்! வெள்ளிக்கண் வைத்துக்கொண்டு பார்த்திருக்கும் அம்மாவைப் பார்க்கும்போதும், அவள் கை சூலத்தையும், கதாயுதத்தையும் பார்க்கையில் அருகிலிருக்கும் அம்மாவே போதும் என்று தோன்றும். அதனினும், ஆடுகளையும் கோழிகளையும் பலியிடுகையில் அச்சம் மென்மேலும் அதிகரித்துக் கண்களை இறுக்கி மூடிக்கொள்ளத்தோன்றும். பரிவட்டம் அணிந்து கொண்டு கொடுவாளுடன் ஆடுகிற பூசாரியைக் கண்டதும் பயந்து போய் கூட்டத்திற்குப் பின்பக்கமாய்ப் ஒண்டிக்கொண்டு இருந்ததுமுண்டு.

அந்த அம்மாவின் கண்களையே இங்கும் மண்ணடியில் காளிகாம்பாளிடம் காணுகிறேன். "சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்!" என்று சூளுரைக்கும் வேல்விழிகள் கொண்ட காளிகாம்பாள்!

ஸர்வே ஜனா சுகினோ பவந்து!

இளம்வயதில் கைம்பெண்ணாகி, குழந்தைகளை வியர்வை சிந்தி வளர்த்து, ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்டாகச் சேர்ந்து இன்று மேலாளராகியிருக்கும் என் சகோதரியைப் போன்ற பெண்மணி சொன்னதை இன்றுவரை கடைபிடித்து வருகிறேன்.

"உனக்காக எதையும் கேட்காதே! ஸர்வே ஜனா சுகினோ பவந்து என்று சொல்! அம்மாவுக்கு எல்லாரும் பிள்ளைகள் தான்; அப்படிக் கேட்டால் தான் அவளுக்குப் பிடிக்கும்!"

ஸர்வே ஜனா சுகினோ பவந்து!

(இந்தத் தொடர் இடுகையைத் தொடர அனைவரையும் அழைக்கிறேன். )

33 comments:

ஜில்தண்ணி said...

சேட்டை உங்களுக்கு வினாயகரின் நட்பும் கைகுடுக்குதா

கிராமத்து திருவிழாவை பளிச்சென்று காட்டிவிட்டீர் நீர்.....நல்லது

suthan said...

அருமை நண்பரே
இந்த நகரத்து வாழ்க்கையில் நான் தவற விட்ட பல சின்னச் சின்ன சந்தோஷங்களில் அதுவும் ஒன்று.
p.suthan
canada.

ஜில்தண்ணி said...

சேட்டை சார் நான் இதை தொடரலாம்னு இருக்கேன்...என்ன சொல்றீங்க

Paleo God said...

வாழ்க வளமுடன்! :))

ஜெய்லானி said...

முகிலனும் பிரபாகரும் உங்கள் இள வயது நினைவுகளை தட்டி எழுப்பி விட்டார் , நினைவுகள் அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை பல தரப்பட்ட எண்ணங்களை ஒருசேர கொண்டுவந்து எழுதி இருக்கிறீர்கள்.. ஒருமுறை புளியங்குடி சென்றபோது வில்லுப்பாட்டு பார்த்தேன்.. சினிமா போடுவதாகிப்போன கிராமத்திருவிழாக்களில் இன்னமும் வில்லுப்பாட்டா என்று ஆச்சரியப்பட்டேன்..

நானும் தாயே பராசக்தி எல்லாரையும் காப்பாத்துமா என்று ஒரு நாளைக்கு பல தடவை சொல்லுவேன்.. :)

vasu balaji said...

எப்பவும் போல் நேர்மை! அருமை!:)

நாடோடி இலக்கியன் said...

அருமையான நினைவுகள்.

சிறப்பான எழுத்து.

//ஒவ்வொரு முறை ஏதேனும் சஞ்சலம் ஏற்படுகிறபோதெல்லாம் நான் சொன்ன பொய்க்குக் கிடைத்த தண்டனையாய் இருக்குமோ என்று குழம்ப வேண்டியிருக்கும். //

மிக ரசித்தேன்.

எதையும் விட்டுவிடக் கூடாதென்ற ஆர்வத்தில் மிக நீண்டுவிட்ட கட்டுரை சிறிது அயற்சியைத் தந்தாலும் நடை படிக்க வைத்துவிட்டது.

இனி தொடருவேன்.

Unknown said...

Arumai.. arumai..

Nalla pakirvu. enakkum enga oor thiruviza ninaivukku vanthuvittathu..

(Sorry for english, no tamil is office)

Chitra said...

எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்று சவுகரியமாக ஒரு பொய் சொல்லித் தப்பித்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு நான் அலுவலகம் செல்லும்போது காளிகாம்பாள் கோவிலுக்குள்ளிருந்து யாரோ கைதட்டி அழைப்பது போல பிரமை ஏற்படலாம். இஷ்ட சித்தி விநாயகர் என்னைப் பார்த்து,'நீயும் அவ்வளவு தானா?’ என்று நக்கலாய்ச் சிரிப்பது போல ஒவ்வொரு நாளும் தம்புச்செட்டித் தெருவைக் கடக்கும்போதும் தோன்றலாம். பிறகு, ஒவ்வொரு முறை ஏதேனும் சஞ்சலம் ஏற்படுகிறபோதெல்லாம் நான் சொன்ன பொய்க்குக் கிடைத்த தண்டனையாய் இருக்குமோ என்று குழம்ப வேண்டியிருக்கும். அதனால், உண்மையைச் சொல்லி விட்டால் போயிற்று! எனக்குக் கடவுள் மீது அபாரமான நம்பிக்கையுண்டு!


..... applause!

தெளிவாக, உங்கள் நம்பிக்கையை உள்ளபடி சொல்லி இருப்பது அழகு. பாராட்டுக்கள்!

Anonymous said...

//குறிப்பாக, கோவில் கொடைத்திருவிழாவும் முத்தாரம்மன் கோவில் திருவிழாவும்//

திருவிழா எல்லாம் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். உங்களையே நன்றாக அலசியுள்ளீர்கள்.

மசக்கவுண்டன் said...

நல்லா இருக்கு.

ஹேமா said...

என்னையும் நிலாக்கால நினைவுக்குள் தள்ளிவிட்டீர்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மூச்சு விடாமா படிச்சேன்..
சேட்டை.. கலக்கல்

ஸ்ரீராம். said...

நல்லா சொல்லி இருக்கீங்க சேட்டை...நேர்மையாகவும், அருமையாகவும். சர்வேஜனோ சுகினோ பவந்து...

துளசி கோபால் said...

ரசித்தேன்.

அருமை.

சிநேகிதன் அக்பர் said...

இறைவனின் ஆசிர்வாதம். என்னமா எழுதுறீங்க.

ஆமா இதை யார் தொடர்வார்கள்.

Philosophy Prabhakaran said...

சேட்டையிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட பதிவு...

அண்ணாமலை..!! said...

சேட்டை.. உங்கள் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கு..
நகைச்சுவையாகவும் எழுதுறீங்க,
கண்கலங்கவும் வைக்கிறீங்க..!
ஜனரஞ்சகமா எழுதுறீங்க!
வாழ்த்துகள்!

பிரேமா மகள் said...

சினிமாவில் வரும் திருவிழா காட்சியை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.. ஆமாம் சேட்டை.. இப்பல்லாம் எங்க இது போல திருவிழா கொண்டாட்டம் இருக்கு? வீட்டுக்கு போன் பண்ணினா, `அம்மா` இன்னிக்கு சாமி சாட்டிருக்கு.. பால் குடம் எடுக்கறோம்பாங்க.. அப்படியான்னு கேட்டிட்டு ஒரு நிமிஷம் கண்ணை மூடுவோம்.. அவ்வளவுதானே நாம்...

pudugaithendral said...

enaku romba pidichiruku intha pathivu

Priya said...

மிக தெளிவாக இருக்கிறது உங்க எண்ணங்கள்.. அது வார்த்தைகளில் அழகா வெளிப்பட்டு இருக்கு.

தாராபுரத்தான் said...

ஒரு திருவிழாற்கே அழைத்து போய் விட்டீர்கள்.

மசக்கவுண்டன் said...

ஜோரா இருக்குங்க

r.v.saravanan said...

சேட்டை சார் கிராமத்து திருவிழாவை பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

பட்டாசு said...

//அந்த அம்மாவின் கண்களையே இங்கும் மண்ணடியில் காளிகாம்பாளிடம் காணுகிறேன். "சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்!" என்று சூளுரைக்கும் வேல்விழிகள் கொண்ட காளிகாம்பாள்!

"உனக்காக எதையும் கேட்காதே! ஸர்வே ஜனா சுகினோ பவந்து என்று சொல்! அம்மாவுக்கு எல்லாரும் பிள்ளைகள் தான்; அப்படிக் கேட்டால் தான் அவளுக்குப் பிடிக்கும்!"

ஸர்வே ஜனா சுகினோ பவந்து//

நானும் தம்பு செட்டி தெருவுல வேல செஞ்சவன் தான், நானும் நிறைய தடவை அம்மனை தரிசித்தவன், ஆனால் இந்த கோணத்தில் தரிசிக்கவில்லை.
மிக நன்றி பழைய நினைவுகளை கிளறியதிர்க்கு.

settaikkaran said...

ஜில்தண்ணி said...

// சேட்டை உங்களுக்கு வினாயகரின் நட்பும் கைகுடுக்குதா//

இல்லாம...? நம்ம தோஸ்த் அவுரு தான்! :-)

//கிராமத்து திருவிழாவை பளிச்சென்று காட்டிவிட்டீர் நீர்.....நல்லது//

பழைய நினைவுகளை அப்படியே கொட்டிட்டேன்!

//சேட்டை சார் நான் இதை தொடரலாம்னு இருக்கேன்...என்ன சொல்றீங்க//

தாராளமா...! கரும்பு தின்னக் கூலியா...? மிக்க நன்றி! :-)

suthan said...

//அருமை நண்பரே இந்த நகரத்து வாழ்க்கையில் நான் தவற விட்ட பல சின்னச் சின்ன சந்தோஷங்களில் அதுவும் ஒன்று.//

ம்! உள்ளுக்குள் எல்லாருக்கும் இந்த ஏக்கங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வருகை புரிக! :-)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

// வாழ்க வளமுடன்! :))//

மிக்க நன்றி அண்ணே! :-)

ஜெய்லானி said...

//முகிலனும் பிரபாகரும் உங்கள் இள வயது நினைவுகளை தட்டி எழுப்பி விட்டார்,நினைவுகள் அருமை//

உண்மைதான். அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்! வந்து கருத்துத் தெரிவித்த உங்களுக்கும் மிக்க நன்றி! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//அருமை பல தரப்பட்ட எண்ணங்களை ஒருசேர கொண்டுவந்து எழுதி இருக்கிறீர்கள்.. ஒருமுறை புளியங்குடி சென்றபோது வில்லுப்பாட்டு பார்த்தேன்.. சினிமா போடுவதாகிப்போன கிராமத்திருவிழாக்களில் இன்னமும் வில்லுப்பாட்டா என்று ஆச்சரியப்பட்டேன்..//

ஆஹா, வில்லுப்பாட்டு குறித்து ஒரு தனி இடுகையே போடணும்கிறது எனது ஆசை! பார்க்கலாம்!

//நானும் தாயே பராசக்தி எல்லாரையும் காப்பாத்துமா என்று ஒரு நாளைக்கு பல தடவை சொல்லுவேன்.. :)//

அதுவே சரி! என்ன இருந்தாலும் பெண் சக்தி ஸ்வரூபம் அல்லவா? அதனால் தான் இயல்பாகவே உங்களுக்கு அமைந்திருக்கிறது! மிக்க நன்றி! :-)

வானம்பாடிகள் said...

// எப்பவும் போல் நேர்மை! அருமை!:)//

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஐயா! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

நாடோடி இலக்கியன் said...

//அருமையான நினைவுகள்.சிறப்பான எழுத்து.//

உங்களைப் போன்ற அனுபவசாலிகளின் பாராட்டைப் பெற்றது பெருமிதமாய் இருக்கிறது!

//மிக ரசித்தேன்.//

மிக்க நன்றி! :-)

//எதையும் விட்டுவிடக் கூடாதென்ற ஆர்வத்தில் மிக நீண்டுவிட்ட கட்டுரை சிறிது அயற்சியைத் தந்தாலும் நடை படிக்க வைத்துவிட்டது. //

ஆமாம், கொஞ்சம் நீளமாகி விட்டது. குறைத்தால் கோர்வை போய் விடுமோ என்று விட்டு விட்டேன்.

//இனி தொடருவேன்.//

நான் பெற்ற பேறு! மிக்க நன்றி! :-))

முகிலன் said...

//Arumai.. arumai.. Nalla pakirvu. enakkum enga oor thiruviza ninaivukku vanthuvittathu..//

சூத்திரதாரியே நீங்கள் தானே? உங்களால் தான் இதை எழுத முடிந்தது. மிக்க நன்றி! :-)

Chitra said...

//..... applause! தெளிவாக, உங்கள் நம்பிக்கையை உள்ளபடி சொல்லி இருப்பது அழகு. பாராட்டுக்கள்!//

நண்பர்கள் அனைவரும் இதைத் தான் விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. மிக்க நன்றி! :-)

சின்ன அம்மிணி said...

//திருவிழா எல்லாம் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். உங்களையே நன்றாக அலசியுள்ளீர்கள்.//

இப்போது நானும் கூட சினிமாவில் தான் பார்க்கிறேன். ஏக்கமாய் இருக்கிறது. கருத்துக்கு மிக்க நன்றி! :-)

மசக்கவுண்டன் said...

//நல்லா இருக்கு.//

மிக்க நன்றி! :-)

ஹேமா said...

//என்னையும் நிலாக்கால நினைவுக்குள் தள்ளிவிட்டீர்கள்.//

நீங்கள் நிலாக்காலத்துக்குச் சென்றால் கவிதைமழையல்லவா பொழியும்? மகிழ்ச்சியாய் இருக்கிறது! மிக்க நன்றி! :-)

பட்டாபட்டி.. said...

//மூச்சு விடாமா படிச்சேன்..சேட்டை.. கலக்கல்//

ஆஹா, அண்ணே, மிக்க நன்றி அண்ணே! :-)

ஸ்ரீராம். said...

//நல்லா சொல்லி இருக்கீங்க சேட்டை...நேர்மையாகவும், அருமையாகவும். சர்வேஜனோ சுகினோ பவந்து...//

எழுதத் தொடங்கி, விடுவிடுவென்று எழுதி முடித்த சில இடுகைகளில் இதுவும் ஒன்று! கருத்துக்கு மிக்க நன்றி! :-)

யாதவன் said...

//வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

துளசி கோபால் said...

//ரசித்தேன். அருமை.//

மிக்க நன்றி! :-)

அக்பர் said...

// இறைவனின் ஆசிர்வாதம். என்னமா எழுதுறீங்க. ஆமா இதை யார் தொடர்வார்கள்.//

அண்ணே, நீங்களும் தொடருங்க! அனுபவம் குறைவா இருக்கிறதுனாலே ஏன் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் அழைக்கணுமுன்னு தான் எல்லாரையும் அழைக்கிறேன். மிக்க நன்றி! :-)

philosophy prabhakaran said...

// சேட்டையிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட பதிவு...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

அண்ணாமலை..!! said...

//சேட்டை.. உங்கள் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கு..நகைச்சுவையாகவும் எழுதுறீங்க, கண்கலங்கவும் வைக்கிறீங்க..! ஜனரஞ்சகமா எழுதுறீங்க! வாழ்த்துகள்!//

சேட்டையும் உங்களை மாதிரி தானே நண்பரே! அவ்வப்போது, மனவோட்டத்துக்கு ஏற்றாற் போல எழுதுகிறேன். அது தான் உங்கள் ஆதரவு இருக்கிறதே! மிக்க நன்றி! :-))

பிரேமா மகள் said...

//சினிமாவில் வரும் திருவிழா காட்சியை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.. ஆமாம் சேட்டை.. இப்பல்லாம் எங்க இது போல திருவிழா கொண்டாட்டம் இருக்கு? வீட்டுக்கு போன் பண்ணினா, `அம்மா` இன்னிக்கு சாமி சாட்டிருக்கு.. பால் குடம் எடுக்கறோம்பாங்க.. அப்படியான்னு கேட்டிட்டு ஒரு நிமிஷம் கண்ணை மூடுவோம்.. அவ்வளவுதானே நாம்...//

இன்னும் நெல்லை, தூத்துக்குடி, ராமனாதபுரம் மாவட்டங்களில் கிராமங்களில் திருவிழாக்கள் விமர்சையாக நடந்து கொண்டு தானிருக்கின்றன. அவை தொடர வேண்டும் என்பதே என் அவா! மிக்க நன்றி! :-)

புதுகைத் தென்றல் said...

// enaku romba pidichiruku intha pathivu//

மிக்க நன்றி! :-)

Priya said...

//மிக தெளிவாக இருக்கிறது உங்க எண்ணங்கள்.. அது வார்த்தைகளில் அழகா வெளிப்பட்டு இருக்கு.//

உண்மை! அதனால் தான் உங்களுக்கும் புரிந்திருக்கிறது; பிடித்திருக்கிறது. மிக்க நன்றி! :-)

தாராபுரத்தான் said...

//ஒரு திருவிழாற்கே அழைத்து போய் விட்டீர்கள்.//

நீங்க எப்போ தாராபுரத்துக்கு அழைச்சிட்டுப் போவீங்க? :-)

மிக்க நன்றி! :-)

மசக்கவுண்டன் said...

//ஜோரா இருக்குங்க//

மிக்க நன்றி கவுண்டரே! :-)

settaikkaran said...

r.v.saravanan said...

//சேட்டை சார் கிராமத்து திருவிழாவை பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

பட்டாசு said...

//நானும் தம்பு செட்டி தெருவுல வேல செஞ்சவன் தான், நானும் நிறைய தடவை அம்மனை தரிசித்தவன், ஆனால் இந்த கோணத்தில் தரிசிக்கவில்லை. மிக நன்றி பழைய நினைவுகளை கிளறியதிர்க்கு.//

ஆஹா, நம்ம ஆளா நீங்க? மண்ணடி சாம்ராஜ்யப் பிரஜைகள் என்றால் எனக்கு உயிர்! மிக்க நன்றி! :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பதிவு நண்பரே. கிராமத்து திருவிழாவை நேரில் பார்த்தது போன்றதொரு உணர்வு.

Madhavan Srinivasagopalan said...

//ஸர்வே ஜனா சுகினோ பவந்து!//

Waav.. fantastic.
நா சாமிகிட்ட இப்படித்தான் வேண்டிப்பேன்..
"எல்லோரையும் நல்ல வைய்யி(Keep - திட்டுத்தல் அல்ல) சாமி.."

அன்புடன் நான் said...

நல்ல நினைவாற்றல்....
பகிர்வு அருமை.