Thursday, September 19, 2013

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!








ஆங்கில ஊடகங்களில் அண்மைக்காலமாக, வெங்காய விலையேற்றத்துக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவதுசச்சின் தெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியை எங்கு விளையாடுவார்? மும்பை வான்கெடே மைதானத்திலா, கொல்கத்தாவிலா அல்லது மும்பை சிவாஜி பார்க்கிலா?-என்பது பற்றித்தான். அக்‌ஷய்குமார் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்று கேட்பதைப் போல, மிகவும் அபத்தமாக இருக்கிறது இந்தக் கேள்வி! அவர் எந்தப் படத்தில் ஐயா நடித்திருக்கிறார்? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? மும்பையோ, கொல்கத்தாவோ எந்த மைதானமாக இருந்தாலும், சச்சின் ‘விளையாடினால் போதாதா என்றுதானே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நொந்து நூடுல்ஸாகியிருக்கும் அவரது ரசிகசிகாமணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

      சச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா என்று கிரிக்கெட் ரசிகர்களுடன், பொருளாதார வல்லுனர்களும், ரிசர்வ் வங்கியும் கவலையுடன் காத்திருப்பதை அறியாமல், சச்சினைப் பற்றித் தேவையற்ற சர்ச்சைகள் தேவைதானா?

      இதில் 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என்று சில விஷமிகள் அவதூறு பரப்புவதைக் கேட்டு, விளம்பரக் கம்பெனிகள் எல்லாம் விளக்கெண்ணை குடித்தது போலக் கட்டணக் கழிப்பறைகளுக்குள் காலவரையின்றிப் போராட்டம் நடத்துவதாகக் கேள்வி. இப்படியெல்லாம் அவசரப்பட்டு சச்சினை ஓய்வுபெறச் சொன்னால், அப்புறம் இந்தியாவுக்குள் எப்படி ஐயா அன்னிய நேரடி முதலீடு வரும்? இந்தியப் பொருளாதாரம் தேறவேண்டும் என்று இம்மியளவாவது உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா?

      மற்ற விஷயத்தில் எப்படியோ, சச்சின் ஓய்வு என்று சொன்னவுடன் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் (பாராளுமன்றத்துறை அமைச்சராம்)  ராஜீவ் சுக்லா, தேசப்பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ‘சச்சின் விரும்புகிறவரை அவர் கிரிக்கெட் ஆடலாம். அவர் எப்போது விரும்பினாலும் ஓய்வு பெறலாம்என்று பேட்டியளித்திருப்பதிலிருந்தே, சச்சின் கிரிக்கெட் தொடர்ந்து ஆடுவது, ஐந்து மாநிலங்களில் நடைபெறப்போகிற சட்டசபைத் தேர்தலை விடவும், பெருகுகிற பணவீக்கத்தை விடவும், ஏறுகிற விலைவாசியை விடவும், நிலக்கரி ஊழலில் காணாமல்போன கோப்புகளைவிடவும் முக்கியம் என்றுகூடவா இந்த அறிவிலிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை! வாட் ய ஷேம்...பப்பி ஷேம்!

      இதே கருத்தைத்தான் சவ்ரவ் கங்குலி, சையத் கிர்மானி, அனில் கும்ப்ளே, கார்ஸன் காவ்ரி போன்ற முன்னாள் வீரர்களும் சொல்லியிருக்கிறார்கள். ‘சச்சின் விரும்புகிறவரைக்கும் அவர் கிரிக்கெட் தொடர்ந்து ஆடலாம்.இந்தியக் கிரிக்கெட் அணியில் யார் ஆடுவது, யார் ஆடக்கூடாது என்பதை அந்தந்த வீரர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பதை மிகுந்த தொல்லைநோக்கோடு, மன்னிக்கவும், தொலை நோக்கோடு இவர்களே சொன்னபிறகு, வீணாக சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று விதண்டாவாதம் செய்பவர்களை, இணையமைச்சர் நாராயணசாமியிடம் பிடித்துக் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சச்சின் அவர் விரும்புகிறவரை விளையாடுவார்; மக்கள் விருப்பத்துக்கெல்லாம் அவர் அசரவோ அஞ்சவோ மாட்டார், அதெல்லாம் ரிக்கி பாண்டிங், இன்ஜமாம்-உல்-ஹக், ஸ்டீவ் வாவ் போன்ற கத்துக்குட்டிகள் செய்கிற வேலை   என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.

      அடுத்த ஆண்டு சச்சின் இங்கிலாந்தில் விளையாடுவார்என்று ரவி சாஸ்திரி சொல்லியிருக்கிறார். ‘அதற்கு அடுத்த ஆண்டு அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவார்என்று நாளை சுனில் காவஸ்கர் சொல்லலாம். எனக்குக்கூட சச்சின் போத்ஸ்வானா, உகாண்டா, கஜாகஸ்தான், உஜெபெகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆடி அங்குள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு விக்கெட் தானம் செய்ய வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. இப்படி முன்னாள் வீரர்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களும்  தலா ஒவ்வொரு வருடம் ஆடச்சொன்னாலே, சச்சின் 2234-ம் ஆண்டு வரை விளையாட வேண்டியிருக்கும் என்னும் சின்னக் கணக்குக் கூடவா சச்சினின் விமர்சகர்களுக்குப் புரியவில்லை? இராமானுஜம், சரோஜாதேவி, மன்னிக்கணும், சகுந்தலா தேவி போன்ற கணிதமேதைகள் பிறந்த இந்தியாவில் ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத சச்சினின் விமர்சகர்களை என்னவென்று சொல்வது? எதற்கும் கடந்த மூன்றாண்டுகளில் சச்சின் அடித்த ஸ்கோர்களை வரிசைப்படி மனப்பாடம் செய்தால், அதற்கும் ஒன்றாம் வாய்ப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதையாவது புரிந்து கொள்வார்கள்.

      நான் விரும்புகிறவரைக்கும் விளையாடுவேன்; ஓய்வு பற்றியெல்லாம் நான் யோசிக்கவேயில்லைஎன்று சச்சினும் எத்தனை தடவை சொல்லுவார். அனாவசியமாக இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிற நேரத்தில் அவர் பாட்டுக்கு  காங்கிரஸுக்காகப் பிரசாரமாவது செய்திருக்க மாட்டாரா? லியாண்டர் பயஸ் நாற்பது வயதில் டென்னிஸ் ஆடி ஜெயிக்கலாம்; சச்சின் நாற்பது வயதில் கிரிக்கெட் விளையாடி சொதப்பக்கூடாதா? என்ன நியாயம் உங்கள் நியாயம்?

      இப்படியெல்லாம் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி, சச்சினையும் அவரது ரசிகப்பெருமக்களையும் நோகடிக்காதீர்கள். அவரே பயந்துபோய், ‘அணியில் வீரர்களைத் தேர்வு செய்யும்போது அந்த வீரரின் தொடர்ச்சியான ஆட்டம் (form) பற்றிக் கவலைப்படக் கூடாது. அந்த வீரர் யார் என்பதைப் பார்த்துத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று சொல்ல நேர்ந்து விட்டது. ‘நான் இரண்டரை வருடங்களாகச் சொதப்பினாலும், என்னை செலக்ட் பண்ணாம விட்டிராதீங்கப்பா. என்னையும் ஆட்டத்துலே சேர்த்துக்கோங்கஎன்று அவர் பகீரங்கமாகவா கேட்க முடியும்? ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. Form இல்லாதவங்களை அணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று மகேந்திரசிங் தோனி கூறியிருப்பது எவ்வளவு பெரிய அடாவடி! இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்த கேப்டன் என்றாலும், உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், திறமைக்குத்தான் மதிப்பு, பழைய பெருங்காய டப்பாக்களை வைத்துக்கொண்டு பொழைப்பு நடத்த முடியாது என்று உண்மையைச் சொல்வதற்கு தோனிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டிருக்காரு அந்த ஆளு!

      சரி, சச்சின் சொல்வதுபோலத்தான், அவர் கேப்டனாக இருந்தபோது, திறமையைப் பற்றிக் கவலைப்படாமல் ஏனோதானோவென்று வீரர்களைப் பொறுக்கி ஆடினார்களா?என்று மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டும் வகையில் கேட்கிறவர்களுக்கு இந்த பதில். ஆமாம்! முன்னாள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஜெய்வந்த் லேலே எழுதியிருக்கிற The Memoirs of a Cricket Administrator’ என்ற புத்தகத்தில் அப்படியொரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான். அதாவது நிலேஷ் குல்கர்னி என்ற மும்பை வேகப்பந்து வீச்சாளர், ஒரு ரஞ்சி சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும், அதனால் அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேப்டன் சச்சின் தெண்டுல்கர் கேட்டது உண்மைதான்; அதற்கு தேர்வுக்குழு தலைவர் ‘யப்பா சச்சின், அவரு 25 விக்கெட் எடுத்தது போன வருசம். இந்த வருசம் அவரு மும்பை ரஞ்சி டீமிலேயே இல்லைப்பாஎன்று சொல்ல, சச்சின் அசடு வழிந்ததும் உண்மைதான். அதற்காக, சச்சினுக்கு அவரது மும்பை ரஞ்சி அணியில் யார் விளையாடுகிறார் என்பதுகூடவா தெரிந்திருக்கவில்லை என்று எடக்காகக் கேட்பது பஞ்சமாபாதகம். அவருக்குக் கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் வேலையா? நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை!

      1998-99 ல் மேற்கு இந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, சரியாக ஆடவில்லை என்ற காரணத்தில் அணியிலிருந்து முகமது அசாருதீன் உட்பட சில வீரர்களை சச்சின் நீக்கச் சொல்லியிருந்தாரே, அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சா என்றெல்லாம் கேட்கப்படாது ஆமாம். அவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக்கும். எப்படி காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும்போது ஒரு மாதிரியும், இல்லாதபோது ஒரு மாதிரியும் பேசுமோ, அதே போல கேப்டனாக இருக்கும்போது ஒருமாதிரியும், இல்லாதபோது வேறு மாதிரியும் சச்சினும் பேசக்கூடாதா? இப்படித்தான் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் எழுந்தபோது, சந்திரசூட் கமிஷனில் ஒரு மாதிரியும், சி.பி.ஐ-யின் மாதவன் குழுவின் முன்னால் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்தார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா!

      சாம்பியன்ஸ் லீக் டி-20 கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வென்றால், அது சச்சினுக்குப் புகழாரம் சூட்டுவதுபோலிருக்கும்என்று அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சொல்லியிருக்கிறார். இதே போல ‘ராகுல் காந்தியைப் பிரதமராக்குவது சச்சினுக்குப் புகழாரம்என்று ஒரு காங்கிரஸ் ஆசாமி கிளம்பலாம். சேனைக்கிழங்கில் அல்வாய் செய்வதில் தொடங்கி, சேட்டைக்காரன் உருப்படியாக எழுதுவது வரைக்கும் சச்சினுக்குப் பெருமை சேர்க்க எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? அதெல்லாம் முடிவதற்கு இன்னும் நூறாண்டுகளானாலும், அதுவரை அவர் ஆடிக்கொண்டிருக்கட்டுமே? இவங்க ஏன் இப்படி லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க? வயித்தெரிச்சல்!

      இப்படியே சச்சின் யுகக்கணக்கில் விளையாடிக்கொண்டே போனால், அப்புறம் சேத்தேஷ்வர் பூஜாரா, ரோஹித் ஷர்மா போன்ற இளம்வீரர்கள் எப்படி அணியில் நிரந்தர இடம்பிடிப்பது, எப்படி புதிய ரத்தத்தைப் பாய்ச்சுவது, எப்படி இந்திய அணியின் வருங்காலத்தை வலுப்படுத்துவது என்றெல்லாம் ரூம்போட்டு யோசித்துக் கேள்வி கேட்கிறார்கள் விமர்சகர்கள். அதெல்லாம் சச்சின் ஆடுவதை விடவா முக்கியம்? மொத்தம் பதினோரு வீரர்களில் ஒருவர், அதுவும் இருப்பதிலேயே மிகவும் வயதானவர் சொதப்பினால், ‘ஏதோ வயசானவர், சொதப்பிட்டுப்போறாருஎன்று அனுமதிக்கிற பெருந்தன்மை கூடவா இல்லை நமக்கு? இந்த நாடு எப்படிப்பட்ட நாடு? எவ்வளவு வயோதிகர்களைப் பிரதமர்களாகவும், முதல்வர்களாகவும், ஒன்றுமில்லாவிட்டாலும் கவர்னர்களாகவும் அமரவைத்து அழகுபார்த்த நாடு! இந்தப் பட்டியலில் இன்னுமொருவர் கிரிக்கெட் ஆடினால், அது நமது பாரம்பரீயத்தின் வெளிப்பாடு என்றல்லவா கருத வேண்டும்? எப்பப் பார்த்தாலும், இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம், இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்களே! இவங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?

      முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப் பாய்காட் கூடப் பொருமியிருக்கிறார். “தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் திடீரென்று சுருக்கி, மேற்கு இந்தியத் தீவை இந்தியாவுக்கு வரவழைத்திருப்பது, சச்சினுக்காகவேஎன்று. (டி.ஆர்.எஸ் தொடங்கி, கிரிக்கெட் தேர்தல் சீர்திருத்தம் வரையிலான பல அதிரடி நடவடிக்கைகள் விசயமாக முன்னாள் ஐ.சி.சியின் தலைவரும் இன்னாள் தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஹரூன் லாகாட்டுக்கும் நம்ம இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கும் இருக்கிற குடுமிப்பிடிச் சண்டை இன்னொரு பக்கம் இருந்தாலும்).

      ஆமாம் சாமி! முன்னை மாதிரி சச்சினால் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. அதுவும் தென் ஆப்பிரிக்கா மாதிரிக் கடினமான ஆடுகளத்தில் டெயில் ஸ்டெயின் போன்றவர்களின் பந்தையெல்லாம் அவரால் ஆட முடியாது என்றுதான் இந்தியாவில் உள்ள மொக்கை ஆடுகளங்களில் அவரை ஆடவைத்து, 200-வது டெஸ்டை நடத்தவிருக்கிறோம் என்று உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே? ஏழாம் கிளாஸ் பாஸ் பெரிசா, எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயிலு பெரிசா?

      வரப்போகிற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு, சுழல்பந்து என்றால் சிம்மசொப்பனம் என்பதால் எப்படியும் தொடரை வென்று விடலாம். அப்படியே சச்சின் ஓய்வு என்று அறிவித்தாலும், ‘நான் விளையாடிய இறுதி டெஸ்ட் தொடரையும் வென்றுவிட்டோம் என்று ஏதோ தன்னால் தொடர் வென்றமாதிரி ஒரு அற்ப சந்தோஷத்தை அவர் அடைந்தால் அடைந்து விட்டுப்போகட்டுமே? அப்படித்தானே, 2011- உலகக்கோப்பை வென்றபோதும், 2013 ஐ.பி.எல்லை மும்பை இந்தியன்ஸ் வென்றபோதிலும் பில்ட்-அப் கொடுத்தார்கள். உயிரைக் கொடுத்து ஆடிய இளம் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘மானே தேனேஎன்று தொடர்ந்து சச்சினையே புகழ்ந்துகொண்டே இருப்பவர்களின் நப்பாசையை ஏன் கெடுக்க வேண்டும்?

      இந்த அணியில் இளைஞர்கள் வரவில்லையென்று யார் அழுதார்கள்? ஏதோ, 80களின் இறுதியில் சில அனுபவசாலி வீரர்கள் ‘ஆட்டமெல்லாம் போதும்; வீட்டுக்குக் கிளம்புவோம்என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாக, அணியின் நன்மை கருதி முடிவெடுத்ததால், சச்சின், மஞ்ச்ரேகர், காம்ப்ளி, ஆம்ரே போன்ற இளம்வீரர்கள் வந்தார்கள். அதற்காக, ‘நமக்கு வாய்ப்புக் கிடைத்த மாதிரி மற்ற இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால், நாமும் நமது வயதுகருதி, அணியின் எதிர்காலம் கருதி, தேசநலன் கருதி,  கவுரவமாக ஒதுங்க வேண்டும்,என்று சச்சினும் பெருந்தன்மையோடு யோசிக்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லையே? இருபது வருடங்களாக, தனது ஆட்டத்திறனால், தான் சம்பாதித்த நற்பெயரை, ஒரு மனிதர் தானே சின்னாபின்னப்படுத்த விருப்பப்பட்டால், அதைத் தடுக்க யாரால் முடியுங்காணே?

      இப்போது சச்சினை ‘பாஜி(அப்பா)என்று அழைக்கிற இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், அவரை ‘தாவ்ஜி(தாத்தா) என்று அழைத்தாலும் சரி, அவர் ஆடாவிட்டாலும், இவர்கள் ஆடி ஜெயித்து, அவரைத் தோளின்மீது உட்காரவைத்து மைதானத்தை வலம்வந்தாலும் சரி, ‘இதைவிட கவுரவமாக விடைபெற முடியாதுஎன்பதைப் புரிந்து கொண்டு அவராக அறிவிக்காதவரையில், அவர்பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருக்கட்டும்! இப்படியே எல்லாரும் நாற்பது வயதுவரைக்கும் ஆடுவேன் என்று அடம்பிடித்து அழுதால், இரானி கோப்பையிலும், ரஞ்சியிலும், கங்கா லீகிலும், டைம்ஸ் ஷீல்டுகளிலும் அடித்து ஆடுகிற துடிப்பான இளைஞர்கள் இந்தியாவுக்காக ஆடுகிற கனவை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு பாவ்-பாஜி சாப்பிடட்டும்!

      முன்னாள் டென்னிஸ் வீரர் இவான் லெண்டல் ஒரு முறைகூட விம்பிள்டனில் ஜெயித்ததில்லை. கிரிக்கெட்டிலேகூட, சுனில் காவஸ்கர் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சர்வதேச சதமும் அடித்ததில்லை. எல்லா வீரர்களும், எத்தனையோ சாதனைகள் செய்தும் விட்டகுறை, தொட்டகுறை நிறையவே இருந்து வந்திருக்கின்றன. அப்படியெல்லாம் எதையும் விட்டுவைத்து விடாமல், எல்லா சாதனைகளையும் செய்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சச்சின் எண்ணுவதில் என்ன தப்பு இருக்கிறது? ஒரு தப்புமில்லை. கிரிக்கெட் வாரியம் உங்களது; இந்தியக் கிரிக்கெட் உங்களது தனிச்சொத்து. நீங்களோ கிரிக்கெட்டின் கடவுள்! கடவுளுக்கு ரிட்டயர்மெண்ட், பென்சன், ஈ.எஸ்.ஐ, க்ராஜுவிட்டி, பி.எஃப் எல்லாம் உண்டா என்ன? ஆகவே, மராட்டிய மார்க்கண்டேயரே, விடாதீங்க! நீங்கபாட்டுக்குத் தொடர்ந்து அவுட் ஆகுங்க, அதாவது, ஆடுங்க ராசா! இவனுக இப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பானுங்க! யூ ப்ளீஸ் கண்டின்யூ!

      மற்ற விசயங்களில் என்னவோ மக்கள் விருப்பத்துக்கு எல்லாரும் மதிப்பளிப்பது மாதிரியும், நல்ல முன்னுதாரணங்களைக் கடைபிடிக்கிற மாதிரியும், கிரிக்கெட்டில் மட்டும், அதுவும் சச்சின் விஷயத்தில் மட்டும் அவர் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

       நல்ல வேளை, ‘என்னை எம்.பியாக்கிய காங்கிரஸ் கட்சி 45 ஆண்டுகள் ஆட்சியே செய்திருக்கிறது. நான் 45 ஆண்டுகள் ஆடினால் என்ன குறைந்து போய் விடும்? என்று அவர் கேட்காதவரை, ‘ஆடப்பிறந்தவரே ஆடிவா!என்று அவரை வாழ்த்துவோம்.

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கட்டுரையை கஷ்டப்பட்டு மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

ஒருவரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்துள்ளீர்கள்.

உங்களின் இத்தகைய சமூக சிந்தனையுடன் கூடிய பதிவுகள் தொடரட்டும்.

வாழ்க. வளர்க.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் செம தாக்குதல்... வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா அருமை

Unknown said...

ஒண்ணும் கவலைப்படாதீங்க 'டென் 'டுல்கர் பெயருக்கேற்ற மாதிரி ஆடி ரன் எடுப்பார் !

YESRAMESH said...

இன்னா ஒரு காண்டு

கும்மாச்சி said...

உலக ரெக்கார்டுகளில் இன்னும் ஒன்று பாக்கியிருக்கியது. அப்பனும் பையனும் ஒரே டீமில் ஆடியது கிடையாது. அந்த ரெகார்டை உருவாக்கும் வரை அவர் விளையாடுவார். அது போர்டு ஆசியுடன் நன்றாகவே நடக்கும்.

பாலவெங்கி said...

உங்களுக்கு உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டேன். அது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆரோக்கியமான மனம் இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சீக்கிரமே ஒரு நல்ல மெண்டல் ஆஸ்பத்திரியில் உங்களை நீங்களே அனுமதித்து சிகிச்சை பெற்றுத் தேறவும்.

ரூபக் ராம் said...

//சச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா// ஹா ஹா ஹா

ரூபக் ராம் said...

//சச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா// ஹா ஹா ஹா

சேலம் தேவா said...

வஞ்சப்புகழ்ச்சிக்கு உதாரணமா இந்த பதிவ பாடமாவே வைக்கலாம். வடிவேலுவின் எதிர்கட்சிக்காரன் ஸ்டைல்ல படிச்சி சிப்பு சிப்பா வந்துச்சு... :)