Thursday, September 23, 2010

லாலக்கு டோல்டப்பி மா

தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மூவரும் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கின்றனர்.

"சே! என்ன வாழ்க்கை இது?" என்று சலித்துக்கொண்டார் ஷீலா தீட்சித். "ஒரு வருசத்துக்கு முன்னாடி நான் தான் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்னு எல்லாரும் சொன்னாங்க! இப்போ என்னடான்னா உலகமே நக்கல் பண்ணிட்டிருக்குது!"

"எல்லாம் இந்த காமன்வெல்த் கேம்ஸாலே வந்த வினை," என்று அலுப்புடன் கூறினார் ஜெய்பால் ரெட்டி. "தினம் புதுசு புதுசா அடிவயித்துலே புளியைக் கரைக்கிற நியூஸா வந்திட்டிருக்கு! இப்பல்லாம் நான் என்ன பண்ணறேன்னு எனக்கே புரிய மாட்டேங்குது! இன்னிக்குப் பாருங்க, காலையிலே படுக்கையிலே உட்கார்ந்திருந்தேன். தூங்கி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கேனா இல்லே இனிமேத்தான் தூங்கப்போறேனான்னு ஒரு நிமிஷம் குழம்பிப்போயிட்டேன்."

"இங்கே மட்டும் என்ன வாழுதாம்?" என்று குறைப்பட்டுக்கொண்டார் ஷீலா தீட்சித். "இன்னிக்கு மாடிப்படியிலே நின்னுக்கிட்டிருந்தேன். மேலே ஏறிப்போயிட்டிருக்கேனா இல்லே கீழே இறங்கி வந்திட்டிருக்கேனான்னு ஒரு நிமிஷம் புரியாம அப்படியே நின்னுட்டேன்."

"பிரச்சினை அதிகமாக ஆக, மனிசனுக்கு மறதியும் அதிகமாயிடும்," என்று பெருமூச்சுடன் சொன்னார் எம்.எஸ்.கில். "பாருங்களேன், நான் கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி உலக மல்யுத்தப் போட்டியிலே ஜெயிச்ச சுஷில்குமாரோட பயிற்சியாளரைப் பார்த்து ’யோவ், தள்ளி நில்லுய்யா,’ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன்."

"அவரை மட்டுமா? சாயினா நெஹ்வாலோட பயிற்சியாளர் கோபிசந்தைப் பார்த்தே ’யார் நீ?’ன்னு கேட்டீங்களே? அதை மறந்திட்டீங்களா?" என்று வேதனையிலும் எம்.எஸ்.கில்லை கலாய்த்தார் ஜெய்பால் ரெட்டி.

"நல்ல வேளை! சாயினா நெஹ்வாலை யாருன்னு கேட்காம விட்டாரே!" என்று ஷீலா தீட்சித்தும், ஒரு கணம் கவலைகளை மறந்து சிரித்தார்.

"அதுல பாருங்க ஷீலாஜீ, நம்ம கில் இருக்காரே, சாயினா, சானியா, சோனியா மாதிரி பேருங்களை மட்டும் மறக்காம ஞாபகம் வச்சிருப்பாரு!" என்று கிண்டலடித்தார் ஜெய்பால் ரெட்டி.

"என் ஞாபகமறதி இருக்கட்டும்! என் வீட்டுக்குள்ளேயே வந்து என்னையே நக்கல் பண்ணுறீங்களே, நீங்க ரெண்டு பேரும் யாரு? யாரைக் கேட்டு என் வீட்டுலே டீ சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க?" என்று கில் எரிச்சலுடன் வினவினார்.

"ஐயையோ, நான் ஜெய்பால் ரெட்டி; இவங்க ஷீலா தீட்சித்! ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு மறதி ஆகாது," என்று எம்.எஸ்.கில்லுக்கு ரெட்டிகாரு நினைவூட்டியதும், எம்.எஸ்.கில் சுயநினைவுக்கு மீண்டார்.

"கில் சாப்! மேரி கோம்கிற பொண்ணு உலகக் குத்துச்சண்டை போட்டியிலே ஜெயிச்சிட்டு வந்திருக்காங்க! அவங்க கோச் பேரு இபோம்சா சிங்! மறந்திடாதீங்க!" என்று நினைவூட்டினார் ஷீலா தீட்சித்.

"இபோம்சாவா? வாயிலேயே நுழைய மாட்டேங்குதே?" என்று சலித்துக்கொண்டார் எம்.எஸ்.கில்.

"வாயிலே நுழையணுமுன்னா இம்போம்சா சிங் பெயரை சமோசா சிங்குன்னு மாத்திக்குங்களேன்," என்று ரெட்டிகாரு யோசனை தெரிவித்தார்.

"சே! இந்த மணிப்பூர் ஆளுங்க எங்க பஞ்சாபிங்களை மாதிரி காலரா, பேதின்னு பேரு வச்சுக்க மாட்டேங்குறாங்களே? ஞாபகம் வச்சிக்கிறது எவ்வளவு ஈஸியா இருக்கும்!" என்று அங்கலாய்த்தார் எம்.எஸ்.கில்.

"பேதின்னதும் ஞாபகத்துக்கு வருது," என்று ரெட்டிகாரு ஏதோ பேச முயன்றார்.

"பாத்ரூம் அந்தப் பக்கமிருக்கு!" என்று கைகாட்டினார் எம்.எஸ்.கில்.

"அதில்லீங்க கில் சாப்! சோதின்னு ஒருத்தர் உலகத் துப்பாக்கி சுடும் போட்டியிலே ஜெயிச்சிட்டு வந்திருக்காரு! ரஞ்சன் சோதி! மறந்திராதீங்க!" என்று முன்னெச்செரிக்கையாகச் சொல்லி வைத்தார் ரெட்டிகாரு.

"என்னவோ போங்கய்யா! இந்த காமன்வெல்த் கேம்ஸ் முடியுறதுக்குள்ளே ஏதாவது common well-க்குள்ளே விழுந்து தொலைக்காம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு!" என்று விரக்தியுடன் கூறினார் எம்.எஸ்.கில். அந்த நேரம் பார்த்துக் கதவு தட்டப்படவே...

"உஸ்! யாரோ வர மாதிரி இருக்கு! முகத்தைக் கொஞ்சம் சிரிக்கிறா மாதிரி வச்சுக்கோங்க!" என்று உஷார்ப்படுத்தினார் ரெட்டிகாரு.

"அந்தர் ஆவோ!" என்று கூவினார் எம்.எஸ்.கில். அதைத் தொடர்ந்து உள்ளே வந்துவிட்டானா இல்லையா என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒல்லிக்குச்சியாக இருந்த அந்த ஆசாமியைப் பார்த்து, "நீங்க யாரு?" என்று கேட்டார்.

"என் பேரு சேட்டைக்காரன்! சென்னையிலே இருந்து வர்றேன்!"

"அப்பாடா, காமன்வெல்த் கேம்ஸை சென்னைக்கு மாத்தலாமுன்னு சொல்லிட்டாங்களா? ரொம்ப சந்தோஷம்!" என்று உற்சாகமிகுதியில் துள்ளினார் ஷீலா தீட்சித்.

"அட அதில்லீங்க! உங்க மூணு பேருக்கும் அழைப்பு கொடுக்க வந்திருக்கேன்!" என்று பவ்யமாக சேட்டைக்காரன் சொல்லவும், எம்.எஸ்.கில்லுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"மிஸ்டர், இங்கே அவனவன் தினம்தினம் செத்துப்பிழைச்சிட்டிருக்கான். இந்த லட்சணத்துலே இன்விடேஷன் கொடுக்க வந்திட்டியா? எனக்கு வர்ற கோபத்துலே உன்னை குதுப்மினார்லேருந்து கீழே தள்ளி விட்டிருவேன்." என்று உறுமினார் எம்.எஸ்.கில்.

"சார் சார்! கோவிச்சுக்காதீங்க சார்! எங்க தஞ்சாவூர்லே சோழச்சக்கரவர்த்தி ராஜராஜசோழன் கட்டின பிரகதீசுவரர் கோவிலிலே ஆயிரமாவது ஆண்டுவிழா கொண்டாடப்போறோம். அதுக்கு உங்களை அழைக்கத் தான் வந்திருக்கேன் சார்!" என்று சேட்டைக்காரன். விளக்கமாகக் கூறவும், மூவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்தார்கள்.

"என்னது? அந்தக் கோவிலைக்கட்டி ஆயிரம் வருசம் ஆகப்போவுதா?" என்று வாய்பிளந்தார் ஷீலா தீட்சித்.

"ஆமாங்க!"

"ஆயிரமுன்னா...ஒண்ணுக்கு அப்புறமா மூணு சைபர் வருமே...அந்த ஆயிரமா?" இது ரெட்டிகாரு.

"எங்க ஊருலே அதைத்தான் ஆயிரமுன்னு சொல்லுவோம். தில்லியைப் பத்தி எனக்குத் தெரியாது!" என்று சேட்டைக்காரன் பணிவோடு சொல்லவும்....

"ரெட்டிகாரு! இந்தாளு என்னமோ தில்லின்னு சொல்லுறாரே, அது எங்கே இருக்கு?" என்று எம்.எஸ்.கில் கேட்கவும், ஷீலா தீட்சித் தலையில் அடித்துக்கொண்டார்.

"கில் சாப், நீங்க வேறே இம்சை பண்ணாதீங்க! ஏம்பா சேட்டைக்காரா! உண்மையிலேயே ஆயிரம் வருசமா அந்தக் கோவில் இருக்கா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் ரெட்டிகாரு.

"என்ன எல்லாரும் இதையே கேட்கறீங்க? உங்க தில்லியிலேயே ஷாஜஹான் கட்டின செங்கோட்டை இருக்குது. குதுப்மினார் இருக்குது. ஜும்மா மஸ்ஜித் இருக்குது. பார்லிமெண்ட் ஹவுஸ் இருக்குது. ராஸ்டிரபதி பவன் இருக்குது. இதெல்லாம் பல நூற்றாண்டுகளா இருக்குதே!" - என்று சேட்டைக்காரன் விளக்கியும் மூவருக்கும் ஆர்வம் குறைந்த மாதிரித் தெரியவில்லை.

"இருந்தாலும்...ஆ...யிரம் வருசமுன்னா..எவ்ளோ பெரிய விசயம்! அந்தக் கோவில் இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்டார் ஷீலா தீட்சித்.

"இன்னும் ஆயிரம் வருசம் தாக்குப்பிடிக்கிறா மாதிரித் தான் இருக்கு. எங்காளுங்க யாருக்காச்சுமாவது உடைச்சு வழி பண்ணுவாங்க. மத்தபடி அது மலைமாதிரி கம்பீரமாத் தான் நின்னிட்டிருக்கு!"

"பார்த்தீங்களா ரெட்டிகாரு? ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி கட்டின கோவிலெல்லாம் அப்படியே இருக்குது. இங்கே ஆறு வாரத்துக்கு முன்னாடி கட்டினதெல்லாம் புட்டுக்கிட்டு விழுது!" என்று வெறுப்போடு சொன்னார் ஷீலா தீட்சித்.

இப்போது எம்.எஸ்.கில் பேசினார்:

"மிஸ்டர் ராஜராஜசோழன்!"

"சார், என் பேர் சேட்டைக்காரன்!"

"அப்போ அந்தக் கோவிலை நீங்க கட்டலியா?"

"இதுக்கு நீங்க பேசாம சும்மாவே இருந்திருக்கலாம்," என்று இடைமறித்த ரெட்டிகாரு," சேட்டைக்காரன், அது எப்படி அந்தக் கோவில் ஆயிரம் வருசமா அப்படியே இருக்கு. அந்தக் காலத்துலே இப்படியொரு தொழில்நுட்பம் எப்படி இருந்தது? உனக்கு ஏதாவது தெரியுமா?"

"எனக்குத் தெரியாது. ஆனா, நான் வேண்ணா ராஜராஜசோழன் கிட்டே கேட்டுச் சொல்றேன்!"

"எப்படி?"

"எனக்கு ஆவிங்களோட பேசத் தெரியும்! இதே இடத்துலே ராஜராஜசோழனோட ஆவியோட பேசி உங்க சந்தேகத்தையெல்லாம் க்ளியர் பண்ணுறேன். ஆனா, அதுக்கு என் கூட சேர்ந்து நீங்களும் ஒரு மந்திரம் மூணு வாட்டி சொல்லணும்!!"

"எங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. ஒருத்தரு சொன்னதையே திரும்பிச் சொல்லுறதுக்கு எங்களை விட்டா ஆள் கிடையாது. என்ன மந்திரம்...?" என்று பெருமையாகக் கூறினார் ரெட்டிகாரு.

"லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா! எங்கே, இந்த மந்திரத்தை மூணுவாட்டி சொல்லுங்க!"

லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா! - என்று ஜெய்பால் ரெட்டியும், ஷீலா தீட்சித்தும் சொல்ல எம்.எஸ்.கில் மட்டும் திரும்பத் திரும்ப தனது இரண்டு கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னாச்சு கில் சார்? நீங்க ஏன் மந்திரம் சொல்லலே?"

"மூணு தடவைன்னா எண்ணணுமே, அதான் மூணாவது விரல் வலதுகையிலே இருக்கா, இடது கையிலே இருக்கான்னு பார்க்கிறேன்!" என்று விரல்களைப் பார்த்தவாறே பதிலளித்தார் எம்.எஸ்.கில்.

"இவரு வேறே உசிரை வாங்கிட்டு! நீங்க எண்ணவே வேண்டாம். இதோ ராஜராஜசோழனே வந்திட்டாரு!"

"எங்கே? எங்கே??"

"அவரு தமிழனுக்கு மட்டும் தான் தெரிவாரு! அவரு பேசுறது தமிழன் காதுலே மட்டும் தான் விழும்! அதுனாலென்ன, அவர் சொல்லுறதை நான் அப்படியே திருப்பிச் சொல்லுறேன். சரியா?"

"சரி! அவர் கட்டின கோவில் ஆயிரம் வருசம் எப்படித் தாக்குப் பிடிச்சதுன்னு கேளு சேட்டை!"

"இதோ!"

ரெட்டிகாரு, ஷீலா தீட்சித், எம்.எஸ்.கில் மூவரும் சேட்டைக்காரனையே கவனித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு...

"ராஜராஜ சோழன் என்ன சொல்லுறாருன்னா, அவரு கோவில் கட்டும்போது அது பின்னாடி வர்ற பல தலைமுறைகள் பார்த்துப்பெருமைப் படுற சொத்தா இருக்கணுமுன்னு நினைச்சு கட்டினாராம். ஆனா, தில்லியிலே அப்படியா நடந்திருக்கு? அவனவன் அகப்பட்டதைச் சுருட்டி, அவன் தலைமுறைக்கு மட்டும் சொத்துச் சேர்த்துக்கிட்டான். அடுத்த தலைமுறையை விடுங்க, உள்ளூர்க்காரனுக்கே இதைப் பார்த்தா ஊழலின் நினைவுச்சின்னமாத்தானே தெரியுதாம்?"

"கரெக்ட் சேட்டை, மேலே என்ன சொல்லுறாரு ராஜராஜ சோழன்ன்னு கேளுங்க?" என்று ஷீலா தீட்சித் கூறினார்.

"கேளுங்க! அதாவது அவர் பெரிய சக்ரவர்த்தியா இருந்தாலும், பெருவுடையார் கோவிலைக் கட்டினதிலே யாருக்காவது ஒரு சின்ன பங்கு இருந்தாலும், அவங்க பெயரைக் கல்வெட்டுலே எழுதி வச்சாராம். அது மட்டுமா, அந்தக் கோவிலுக்காக ஒரு செப்புக்காசு கொடுத்தவங்க பெயரையும், கணக்கையும் கல்வெட்டா கோவில் சுவத்திலேயே வெட்டி வச்சிருக்காராம். ஆனா, இங்கே இப்போ நடக்குறதோ குடியாட்சியா இருந்தாலும் என்ன நடக்குது? எதிர்க்கட்சி பாராளுமன்றத்திலே கேட்டா நம்ம கில் சாப் கோர்ட்டுக்குப் போன்னு எதிர்கட்சிங்க கிட்டே சொல்லுறாரு!"

"கில் சாபா? அது யாரு?"

"நீங்க தான் கில் சாப்! கொஞ்சம் பேசாம இருங்க, சேட்டை சொல்லட்டும்!"

"ராஜராஜசோழன் விழாவுக்குக் கிளம்பிட்டிருக்காராம். அதுனாலே அவரு கடைசியா சொல்லச் சொன்னது, எந்த ஒரு பொதுக்காரியமா இருந்தாலும் ஒரு அர்ப்பணிப்பு, ஒரு கண்காணிப்பு, ஒரு பொறுப்புணர்ச்சி, ஒரு தெளிவு வேணுமாம். அதெல்லாம் இல்லாததுனாலே தான் இந்த காமன்வெல்த் கேம்ஸுங்கிற பேருலே ஊழல்பெருச்சாளிங்களுக்கும், பணமுதலைங்களுக்கும் இடம்கொடுத்து, மக்களோட வரிப்பணத்தை வெட்கமில்லாம சூறையாடித் தின்னு அவனவன் செனைப்பண்ணி மாதிரி கொழுத்துக் கிடக்கானாம். இந்த மாதிரி கேப்மாறிங்க இருக்கிறவரைக்கும் நீங்க கட்டுறது எதுவும் காத்துக்கே நிக்காம இடிஞ்சு விழுந்திடுமாம்."

"அப்படியேவா சொன்னாரு?" என்று சந்தேகத்துடன் கேட்டார் ரெட்டிகாரு.

"ஏறக்குறைய அப்படித்தான் சொன்னாரு!" என்று கூறியபடி சேட்டைக்காரன் மூவருக்கும் அழைப்பிதழைக் கொடுத்து விட்டு நகர்ந்தபோது....

"சேட்டை! இன்னும் கொஞ்ச நேரம் ராஜராஜசோழன் கிட்டே பேசணும்போலிருக்கு. நாங்க வேண்ணா மந்திரம் சொல்லிப் பார்க்கவா...?" என்று கேட்டார் ஷீலா தீட்சித்.

"ஓ! தாராளமா! நீங்க ட்ரை பண்ணுங்க! நான் கிளம்பறேன்," என்று கூறியபடி வெளியேறவும், வாசலில் காத்திருந்த களக்காடு கருமுத்து கேட்டான்.

"ஏன் சேட்டை? நீ ஆவியோடவெல்லாம் பேசுவியா? சொல்லவே இல்லை...?"

"நீ வேறே, நான் உன்னை மாதிரி பாவியோடதான் பேசுவேன். சும்மானாச்சும் ராஜராஜசோழன் பெயரைச் சொல்லி இவங்க நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கேன். வா போகலாம்!"

உள்ளேயிருந்து இப்போது ரெட்டிகாரு, ஷீலா தீட்சித், எம்.எஸ்.கில் மூவரும் மந்திரம் சொல்கிற சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.

"லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!"

17 comments:

காலப் பறவை said...

Super

முகுந்த்; Amma said...

//ராஜராஜசோழன் விழாவுக்குக் கிளம்பிட்டிருக்காராம். அதுனாலே அவரு கடைசியா சொல்லச் சொன்னது, எந்த ஒரு பொதுக்காரியமா இருந்தாலும் ஒரு அர்ப்பணிப்பு, ஒரு கண்காணிப்பு, ஒரு பொறுப்புணர்ச்சி, ஒரு தெளிவு வேணுமாம். அதெல்லாம் இல்லாததுனாலே தான் இந்த காமன்வெல்த் கேம்ஸுங்கிற பேருலே ஊழல்பெருச்சாளிங்களுக்கும், பணமுதலைங்களுக்கும் இடம்கொடுத்து, மக்களோட வரிப்பணத்தை வெட்கமில்லாம சூறையாடித் தின்னு அவனவன் செனைப்பண்ணி மாதிரி கொழுத்துக் கிடக்கானாம். இந்த மாதிரி கேப்மாறிங்க இருக்கிறவரைக்கும் நீங்க கட்டுறது எதுவும் காத்துக்கே நிக்காம இடிஞ்சு விழுந்திடுமாம்.//

சூப்பரா கலக்கீட்டீங்க.

//லாலக்கு டோல்டப்பி மா//

பஞ்ச் டயலாக் super அண்ணாச்சி.

பிரபாகர் said...

நச்...

பிரபாகர்...

எல் கே said...

auto illa flighte varum

என்னது நானு யாரா? said...

அமர்கலம் சேட்டை! ஆனா நீங்க எந்த மாதிரி நாக்கு பிடிங்கிக்கிற மாதிரி கேட்டாலும் அவங்களுக்கு சுத்தமா உரைக்கப்போகிறதில்லை.

எல்லாம் அந்த அளவுக்கு மறத்துப் போன கேஸுங்க சேட்டை.

பொன் மாலை பொழுது said...

சுரேஷ் கல்மாடியை ஏன் அய்யா விட்டுவிட்டீர்கள்?
எல்லாம் சூடு சொரணை மானம் இல்லாத நாய்கள்.
இந்த நாய்களின் பணத்தாசையால் , ஊழலின் நாற்றத்தால் நாட்டின் மானம்
போய் உலகம் சிரித்ததுதான் மிச்சம். தேச துரோக கும்பல்கள் . இவர்களை தூக்கில் இட்டாலும் சரிதான்.

வெங்கட் நாகராஜ் said...

ராஜராஜசோழன் ஆவியை கொஞ்சம் முன்னாடியே - ஒரு வருஷம் முன்னாடியே கூப்பிட்டு இருக்கலாம் சேட்டை - இனிமே என்ன ஆகப்போகுது - பணம் அடித்தவர்களெல்லாம் அடித்து விட்டார்களே.....

திருந்தாத ஜன்மங்கள்....

வெங்கட்.

Unknown said...

:)

ADHI VENKAT said...

சூப்பர் சேட்டை. உங்க நக்கல் நையாண்டிக்கு ஒருத்தரையும் விட்டு வைக்க போவதில்லை.

Anonymous said...

சூப்பரா இருக்கு

Chitra said...

"லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
கண்ணே ராக்கம்மா..... நம்ம சேட்டைக்காரன் நக்கல் போல வருமா?

vasu balaji said...

:)). நல்லாருக்கு லாலாக்கு டோல்டப்பி மா மந்திரம்.

சாந்தி மாரியப்பன் said...

செம நக்கல் சேட்டை :-))

Anonymous said...

அய்யயோ.. யாராவது இத தட்டிக்கேக்க கூடாதா???
இந்த சேட்டை அலும்பு தாங்கலையேப்பா..

suneel krishnan said...

ஊழலின் சின்னம் இல்ல அவமானத்தின் சின்னம் .இருந்தாலும் ஆடாதுல கல்மாடிய விட்டது என்னமோ மாறி இருக்கு .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நெத்தியடி சேட்டை!

சி.பி.செந்தில்குமார் said...

aNNee,சாரி ஃபார் லேட் எண்ட்ரி.இந்திய அரசியலை கரைச்சுக்குடிச்சிருக்கீங்க போல.