Friday, September 17, 2010

பேசுங்க, பேசுங்க, பேசிட்டேயிருங்க!

அரசாங்கம் எந்தவொரு நல்ல திட்டம் கொண்டுவந்தாலும், அதில் ஏதாவது ஒரு நொள்ளை சொல்லி, மட்டம் தட்டுவதே பலருக்கு முழுநேர வேலையாகி விட்டது. டி.வி.கொடுத்தால், கேபிள் இணைப்பு யார் கொடுப்பார்கள் என்று கேட்கிறார்கள். மோட்டார் கொடுத்தால் மின்சாரம் யார் கொடுப்பார்கள் என்று கேட்கிறார்கள்! இலவசமாக அடுப்பும், சமையல்வாயுவும் கொடுத்தால் யார் சமைத்துப்போடுவார்கள் என்று கேட்கிறார்கள். நல்ல வேளை, பெண்களுக்கு, திருமண உதவித் திட்டத்தில் பணம் கொடுத்தால் போதுமா, மாப்பிள்ளை யார் கொடுப்பார்கள் என்று கேட்கவில்லை. பாருங்களேன், இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டேயிருக்க இலவசமாக கைபேசி இணைப்புக்கள் தரப்போகிறார்கள் என்றதும், உடனே ஆளாளுக்குக் கிளம்பிட்டாங்க கலாய்க்கிறதுக்கு.....!

கைபேசிகள் காரணமாக, கிராமப்புறத்தில் பெரும் பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவதாக, உலக வங்கியே சொல்லியிருப்பதைப் பாருங்கள் சாமி!

ஆகவே, இந்த இலவச கைபேசி வழங்கும் திட்டத்தை மக்கள் சரிவரப்பயன்படுத்தினால் இது நமது தேசத்தின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை இந்த இடுகையிலுள்ள விபரங்களைப் படித்தாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

வறுமை ஒழிப்பு:

இனிமேல் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கும் அன்றாடம் தனியார் வங்கிகளிலிருந்து தினசரி இடைவிடாத அழைப்புக்கள் வரும். "எக்ஸ்கியூஸ் மீ! உங்களுக்கு உரம் வாங்கக் கடன் வேண்டுமா? விதை வாங்கக் கடன் வேண்டுமா? மாடு வாங்கக் கடன் வேண்டுமா? புண்ணாக்கு, பருத்திக்கொட்டை வாங்கக் கடன் வேண்டுமா?" என்று கேட்டுக்கேட்டு, நச்சரித்துவேண்டாம்,வேண்டாம்என்றாலும், வலுக்கட்டாயமாக எல்லாருக்கும் கடன் அளித்து, கிராம அபிவிருத்திக்கு வழிவகுப்பார்கள்.

(பி.கு: தனியார் வங்கிகள் தேர்தல் நேரத்தில் கடன்களைத் தள்ளுபடி செய்ய மாட்டார்கள். தேவைப்பட்டால் கடன் வாங்கியவர்களையே போட்டுத் தள்ளி விடுவார்கள்!)

ஊழல் ஒழிப்பு:

இனிமேல் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவர்கள் எல்லாரும் அவரவர் கைபேசிகளிலிருந்தே நேரடியாக, அந்தந்தத் தொகுதி சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் உட்பட அனைத்து மாநில அமைச்சர்கள், பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி தேவைப்பட்டால் குடியரசுத்தலைவருடனும் உடனுக்குடன் உரையாடி தங்களது பிரச்சினைகளை எவ்வித இடைத்தரகர்களுமின்றி முடித்துக் கொள்ளலாம் என்பதால் லஞ்சலாவண்யம் முற்றிலும் ஒழிந்தே போய்விடும்.

(பி.கு: வீட்டுக்கு ஆட்டோ/சுமோ வந்தால் பரவாயில்லை என்பவர்கள் மட்டும் இந்த சலுகையைப் பயன்படுத்திப் பலன்பெறலாம்!)

வரதட்சணை ஒழிப்பு:

கைபேசிகள் வந்தபிறகு காதலிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாயிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால், இனிமேல் இந்தியாவின் பட்டிதொட்டிகளிலும் கூட(காதலிப்பதற்கு ஒரே ஒரு கைபேசி போதுமானது என்பதால்) கஞ்சிக்கில்லாதவனும், காதலிக்கத் தொடங்கிவிடுவான். காதல் திருமணங்கள் பெருமளவு நடைபெறும்போது வரதட்சணை என்பது வழக்கொழிந்து போய் விடும். ஆக, மத்திய அரசின் இத்திட்டத்தால், ஒரு பெரிய சமூக சீர்திருத்தமும் நடைபெற வாய்ப்புள்ளது.

(பி.கு: வக்கீல்கள் காட்டில் மழைதான்! இந்தியாவில் விவாகரத்து செய்து கொள்கிறவர்களில் பெரும்பாலானோர் காதல் திருமணம் செய்து கொள்ளுகிறவர்கள் என்பது நினைவிருக்கட்டும்)

இதெல்லாம் நடக்கிற காரியமா?-என்று அவநம்பிக்கையோடு கேட்கிறவர்களுக்கு ஒரு செய்தி.

பொழுதுவிடிந்து பொழுதுபோனால், ’பணவீக்கம் அதிகமாயிருச்சு, விலைவாசி ஏறிறுச்சு, பற்றாக்குறை அதிகமாயிருச்சு,’ன்னு புலம்பிக்கொண்டிருந்த நம்ம மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ படுற கஷ்டத்தைத் தாங்க முடியாம, அவருடையே கைபேசியிலேயே அழைத்து,சார், ரொம்பக் கஷ்டப்படுறீங்க போலிருக்கே, நாங்க வேண்ணா கைமாத்தா கொஞ்சம் கடன் தரட்டுமா?ன்னு கேட்டிருக்காங்க!

இதே மாதிரி விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலுக்கு போன் பண்ணி,’சார், உங்களுக்கு டூ-வீலர் லோன் வேணுமா?ன்னு கேட்டிருக்காங்களாம்.

.சி.சி.தலைவர் ஷரத் பவார் (அவர் கூட ஏதோ ஒரு துறைக்கு அமைச்சர்னு சொன்னாங்க, சட்டுன்னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது!) ஒரு நாளு போனை எடுத்தா, ’சார், ரஞ்சி டிராஃபி மேட்சுக்கு டிக்கெட் வேணுமா?ன்னு கேட்டிருக்காங்க!

இன்னும் நிறைய அரசியல் வி..பிங்களுக்குப் போன் பண்ணி, ’எங்களிடம் சூடு,சொரணை,வெட்கம்,மானம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்,’னு கூட சொல்லியிருப்பாங்க! தன்னடக்கம் காரணமாக சம்பந்தப்பட்டவங்க இந்தத் தகவல்களை வெளியிடாம இருக்காங்க!

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், இனிமேல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் தலைவர், தொண்டர் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லாரும் பேசலாம், பேசலாம், பேசிக்கிட்டே இருக்கலாம். ஆக, இதன் மூலம் நமது நாட்டில் சமதர்ம சமத்துவ சமுதாயம் நிறுவப்படப்போவதை நம்மால் எப்படி மறுக்க முடியும்?

ஆக, இந்த இலவச கைபேசி திட்டம் மிகவும் அற்புதமான திட்டம்! இதை எல்லாரும் வரவேற்று, இப்படியொரு அற்புதமான திட்டத்தைக் கொண்டுவந்த அரசுக்கு அடுத்த தேர்தலிலே ஒரு கள்ள ஓட்டாவது போட்டு வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதெல்லாம் சரி, மின்சாரமே இல்லையே! கைபேசியை எப்படி சார்ஜ் பண்ணுறதுன்னா கேட்கறீங்க? மின்சாரம் இல்லாம இலவச தொலைக்காட்சி பார்க்கிறவங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி!

என்ஜாய்....!

19 comments:

Ponchandar said...

கைப்பேசி கொடுத்தாச்சு...மெமரி கார்டு...அட்லீஸ்ட் 2ஜிபி கொடுக்கணும்...ஆமா...

Anonymous said...

நான் தான் முதல்ல...

Anonymous said...

கைப்பேசி குடுக்குறாங்க சரி..
அதுக்கு பில்லும் கட்டிடுவாங்களா??

மங்குனி அமைச்சர் said...

வரதட்சணை ஒழிப்பு://///
காதலிப்பதற்கு ஒரே ஒரு கைபேசி போதுமானது என்பதால்)/////



ஹி.ஹி.ஹி ........ இந்த உதவி செய்யும் கைபேசி இலவசமாக தரப்படுவதை நான் வன்மையாக ஆதரிக்கிறேன் .

Chitra said...

அதெல்லாம் சரி, மின்சாரமே இல்லையே! கைபேசியை எப்படி சார்ஜ் பண்ணுறதுன்னா கேட்கறீங்க? மின்சாரம் இல்லாம இலவச தொலைக்காட்சி பார்க்கிறவங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி!


.....மின்வெட்டும் இலவசமோ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

என்னது நானு யாரா? said...

செம ரகலை! கலக்ஸ்... ப்ப்ப்ப்... முடியல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி!

Anonymous said...

கல..கல..ன்னு கலாய்ச்சி எடுத்திட்டிங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

பிரபாகர் said...

சேட்டை நண்பா.... சிரிச்சி மாளல... எப்படியப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? இதே செய்திய நாங்களும்தாம் கேட்கிறோம் படிக்கிறோம்...

மிக அருமை.

சரத் பவாரோட துறை..... அவருக்கே மறந்துவிட்டதாம்...


பிரபாகர்...

சகாதேவன் said...

இது சேட்டைதானே?
ஆனாலும் நன்றாக இருக்கிறது.
எழுதுங்க எழுதுங்க
எழுதிக்கிட்டே இருங்க.

சகாதேவன்

vasu balaji said...

நேத்துதானே பாதுகாப்பு கருதி, ஏற்கனவே இருக்கிறவய்ங்களும், இனிமே வாங்குறவைங்களும், திரும்ப ஒருக்கா ஃபோட்டொ, வீட்டு முகவரி சான்று குடுக்கணும்னு அறிக்கை வந்திச்சி. வீதியோரம் இருக்கிறவய்ங்க ஃபோன் பேச வேணாமா? அப்ப முதல்ல இலவச வீடு தரணும்ல. அதுல இருக்கும் கரண்டு சார்ஜ் பண்ண:))

சிநேகிதன் அக்பர் said...

இது ட்ரைலர்தான். இன்னும் என்னவெல்லாம் இலவசமா கொடுப்பாங்க பாருங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... ப்ரீ செல்போனா? என்ன கொடும சார் இது?

Anisha Yunus said...

அதான் 2012ல்ர்ந்து தமிழ்நாட்டில் மின்வெட்டே கிடையாதுன்னு ஆ ராசா...சொல்லிட்டாரில்லே? (எங்கேயோ படித்த ஞாபகம்!!) அதனால சார்ஜ் பண்ண பிரச்சினை இருக்காது பாருங்க. நாளைக்கு உல்டாக்காருங்க(ULTA) யாரும் ப.சிதம்பரத்துக்கு ஃபோன் பண்ணி, சார், ஒரு தலை எக்ஸ்ட்ராவா இருக்கு, வேணுமான்னு கேக்கப் போறானுங! நல்ல காமெடியான விஷயம், சீரியஸான பதிவு !!!

கலக்குங்ணா!!

வெங்கட் நாகராஜ் said...

இலவசம்.... இலவசம்.... ஒண்ணுமே புரியல. இது எங்க போய் முடியுமோ!

Anonymous said...

கலக்கல் சேட்டை.. எப்பவும் போல.

சி.பி.செந்தில்குமார் said...

கடலை போடும் சங்கம் சார்பாக வாழ்த்துகிறேன்

>>> காதலிப்பதற்கு ஒரே ஒரு கைபேசி போதுமானது என்பதால்) கஞ்சிக்கில்லாதவனும், காதலிக்கத் தொடங்கிவிடுவான்.>>>>

அருமை அண்ணே